வியாழன், மே 31, 2012

நிழல் யுத்தம்





நீ வேலைக்கு வீ.ஆர்.எஸ் குடுத்துட்டு கும்பகோணத்துல எப்படித்தான் மூணு மாசமா இருக்கியோ?நீ வேகவேகமா வயசாளியாக ஆசை படறாப்பல தோணுதுப்பா.

என்னுடைய பேச்சு என் அம்மாவின் மொழி.. தீர்மானமான முடிபுகள் தொக்கி நிற்கும் வார்த்தைகள் என் அம்மா எனக்களித்த சீதனம்.

ஊரிலிருந்து மும்பைக்கு வந்திருக்கும் அப்பாவுடன் காலை வாக்கிங் இந்த மூன்று நாட்களாய் மனசுக்கு குதுகுலம்.

அப்படி இல்லே அஜிதா. மனசுக்கு ஏத்த வேலையா செய்யாம வயத்துப் பாட்டுக்கென ஒரு உத்தியோகத்தை முப்பது வருஷம் செஞ்சுட்டேன். வேலைத் தேடின நாட்கள்ள என்ன மாதிரி பி.காம் படிச்சவனுக்கு பெரிசா சாய்ஸும் இல்லப்பா. அடிமை சாசனமா என்னையே எழுதிக் குடுத்துட்டு வேலை, பிரமோஷன்னு குதிரை ஓட்டம் ஓடினேன். ஜுரம் வந்து ரெண்டு நாள் படுத்திருந்த போது சட்டுன்னு தோணுச்சு. நாம என்ன பண்ணிட்டிருக்கோம்னு. எனக்குன்னு நான் எப்பவுமே இல்லாம ... இன்னமும் நாம வாழவே ஆரம்பிக்கல்லியேன்னு ஒரு திகில் வந்தது. இனியும் பணம்கிறது ஒரு பொருட்டா வேணாம்னு தோணிடிச்சு. நீயும் பெரியவனும் தான் தலையெடுத்தாச்சே? லீவுமுடிஞ்சு ஆபீஸ் சேர்ந்த ஐஞ்சாவது நிமிஷம் விருப்ப ஓய்வுன்னு கடுதாசி கொடுத்துட்டேன்.

வேலையை விடுறதைப் பற்றி அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்பா நீ!

அப்படி சொல்லியிருந்தா வேலையை விட சம்மதிச்சிருக்க மாட்டா. அவளை கேட்டுட்டா இந்த உத்யோகத்துல சேர்ந்தேன்? அவங்கப்பா என் உத்தியோகத்துக்குத் தானே அவளை எனக்கு கட்டி வச்சார்?”

என்னத்தையாவது சொல்லாதப்பா! நீ வேலை மாற்றல்ன்னு ஊர் ஊரா மூணு வருசத்துக்கு ஒருக்கா கிளம்புறப்போல்லாம் அம்மா தானே மூட்டமுடிச்சை கட்டியிழுத்துகிட்டு உன்னோட வந்தா. ஒரு லைப் பார்ட்னரை மதிக்க தோணுச்சா உனக்கு?”

அம்மாடியோவ்... இதுல இவ்வளவு உள்வயணம் இருக்கா? சரிதான்.

இதுதான் எனக்கு பதிலாப்பா?”

அஜீ! இருடா.. அவளை மாதிரியே குதிக்காதே. இப்ப நீ சொன்னியே லைப் பார்ட்னரை மதிக்கணும்.. அது இதுன்னு.. என் தலைமுறை ஒரு ரெண்டாம் கெட்டான். எங்கம்மா என்னைக்கும் அப்பா மனசுக்கு மாறா ஒரு முடிவும் எடுத்ததில்லே. ஏன்? அவள் எந்த முடிவுமே எடுத்ததில்லே. ஆனாலும் சந்தோஷமா தான் இருந்தா. முடிவெடுக்காம இருக்கிறதே அவளோட சுதந்திரம் போல தோணும். என் கூட்டு புருஷன் பொண்டாட்டி கதையே வேற. தானும் முடிவு எடுக்க மாட்டோம்.. தன் துணையையும் முடிவெடுக்க விட மாட்டோம்.

இர்ரெஸ்ப்பான்சிபல் எவேசிவ் ஆன்சர்

நிஜம் அதுதான். நேத்து நீ சொன்னியே, அவங்கவங்க தன் வாழ்க்கையை யோசிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல சேர்ந்து போறது தான் இன்னைய பேமிலின்னு? இந்த வழி கூட பரவாயில்லை. எப்படி இருக்கிறதுன்னு தெரியாம ஒருத்தருக்கு இன்னொருத்தர் கழுத்தில் கட்டிவிட்ட பாறாங்கல்லாய் தான் நிறைய பேர் வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு.

நான் மேற்கொண்டு பேசவில்லை. என்னாச்சு அப்பாவுக்கு? கடுமையான வேலைக்குப் பிறகு எவ்வளவு நேரம்கழித்து வீட்டுக்கு வந்தாலும் சற்றும் கடுகடுப்போ அலுப்போ இன்றி எங்களுடன் சிரிக்க சிரிக்க பேசின அப்பாவா? என் நண்பர்களுக்கெல்லாம் தானும் ஒரு நண்பனாய் அவர்கள் பொறாமைப்படும் விதத்தில் தலைமுறை தாண்டி நின்ற அப்பாவா? என்னாச்சு இவருக்கு?

அப்பா! ஆர் யு ஆல்ரைட்?”

பதிலாய் அப்பாவின் வசீகரமான ஒரு தோள் குலுக்கல்..
.
அஜிதா!”. அப்பாவின் குரல் இளகி மென்மையாய் ஒலித்தது. அதுவே என்னை மெல்ல தழுவிக் கொண்டது போல் இருந்தது .

அம்மாவோட ஏதும் சண்டையாப்பா?”

அடிபட்டது போலஅப்பாவின் பார்வை. இப்போ பெரியவனாகி விட்டதாலேயே இப்படி கேக்க தோணுச்சா என்பதாய் ஒரு கேள்வி அந்த பார்வையில் இருந்தது.

ஏன்? அப்படி ஏதும் உன்கிட்ட அம்மா சொன்னாளா?”

இல்லப்பா. நானாத்தான் கேட்டேன்.

எப்பவுமே நம்ம வீட்டில் நடக்கிறது தான். சண்டைன்னு ஒண்ணும் இல்லடா. சொல்லாம நான் வேலையை விட்டது அவளுக்கு ரொம்ப வருத்தம். அதனால நிறைய வாக்குவாதம். கோவம். ஒரு கூரைக்கு கீழயே திசைக்கொருத்தாரா பார்த்தபடி கொஞ்ச நாளாய்  

எனக்குத் தெரியும்.. அம்மாவுக்கு அப்பா மேல் கோபம் வந்தால் அவரை முதன்முதலாய் பார்த்த நாள்தொட்டு அவளுக்குள் மண்டின அத்தனை கசப்பையும் ஒன்று விடாமல் பட்டியலிடுவாள். அந்தந்த சமயத்து பிரச்னை தொட்டு அந்தக் குற்றப் பட்டியல் மாறுபடும். எந்த சமாதானமும், தன்னிலை விளக்கமும் அப்பாவை காப்பாற்றியதில்லை. வாங்கிக் கட்டிக் கொண்டு கக்கி முடிச்சாச்சா?’ என்று சிரித்தபடி ஏதோ ஒரு புத்தகத்துக்குள் தன்னை புதைத்துக் கொள்வார். பாவம் அப்பா.. அவருக்குத்தான் எத்தனைக் கனவுகள் இருந்தன? ஒரு நல்ல சினிமா எடுக்கணும்.. இரண்டு நாவல் எழுதணும்... ஊர் ஊராய்ப் போகணும்.. இடுப்புல காசை முடிஞ்சுக்காம இமயமலையில் திரியணும். அள்ளி அள்ளி பசிச்சவங்களுக்கு பரிமாறணும். .இன்னும் என்னென்னவோ/
.
விடுப்பா. இனி உனக்கு பிடிச்சதை உன் மனம் போனபடி செய். பணம் ஒரு பிரச்சினை இல்லை.நானும் அண்ணாவும் இருக்கோம். சந்தோஷமா இருப்பா.. ரொம்ப சந்தோஷமா......எனக்கேதோ தொண்டையை அடைத்தது

வாயேன்பா. இந்த இரானி ஹோட்டல் டீ சூப்பரா இருக்கும்.

அப்பாவை பேசவிட்டுக் கேட்போம் என்று எனக்கு தோன்றியது.
அப்பாவுடனான சம்பாஷணை என்றுமே அழகு தான். ஒரு நல்ல சினிமா துவங்குமுன் தியேட்டரில் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன் .

மேஜையில் வைக்கப்பட்ட பிஸ்கட்டுகள் பரப்பியிருந்த தட்டைப்பார்த்தபடி அப்பா சிரித்தார்.

என்னப்பா சிரிக்கிற?”

நான் முதல்முறையா மெட்றாசைப் பார்த்தது பி.யூ.சி படிக்க அங்கு போன போது தான். எங்க அண்ணா புகாரி ஹோட்டலுக்கு கூட்டிக்கிட்டு போனார். இப்படித்தான் ஒரு தட்டு பூரா பிஸ்கட்டை வகைக்கு ரெண்டாய் கொண்டு வச்சான். நானும் திணறத்திணற வாய்க்குள் அடைச்சுக்கிட்டேன். உன் பெரியப்பா அவ்வளவு பசியா உனக்குன்னு கேட்க, குடுத்த காசு வீணாக்க மனசில்லாமத்தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன்னு சொன்னேன்... சாப்பிட்ட பிஸ்கட்டுக்கு மட்டும் தான் பி‌ல் போடுவான் என்று தெரியாமல்.

சிரித்தேன்.. அப்பாவுக்கு எந்த சூழலிலும் சொல்லவொரு நிகழ்ச்சி இருக்கும். ஜோடனையோடு அவர் சொல்லும் அழகே தனி. அப்பா இதையே அம்மாவுக்கு சொல்லியிருந்தால் பட்டிக்காடுன்னு சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அவரைக் குறுக்கியிருப்பாள். இல்லையெனில் இந்தக் கதையைக் கேட்டு கேட்டு காது புளிச்சிபோச்சு என்று வெட்டியிருப்பாள்.. அப்பா! தோழமையே இல்லாமலா நீ இருந்திருக்கிறாய் ?

டீ ரொம்ப நல்லா இருக்குடா செல்லம்.

அடுத்தமுறை இந்த ஹோட்டலுக்கு வந்தால் நீ அமர்ந்திருக்கும் இந்த நாற்காலியில் தான் அமர்வேன் அப்பா...

அடுத்து என்னப்பா பண்ண போறே?”

வேலையை விட்ட முதல் மாதம் ஆபீசிலிருந்து வர வேண்டிய பணம் வாங்க வேண்டி அலைஞ்சேன். நங்கநல்லூரில் உன் அண்ணன் வீடு கட்டி முடிக்கிற அலைச்சலில் ரெண்டு மாசம் ஓடிப் போச்சு. இப்போ நாலு நாளா மும்பைல உன்னோட டேரா. இனிமேதான் என்ன செய்யிறதுன்னு யோசிக்கணும் அஜீ

உனக்கு சமையல் தான் சூப்பரா வருமில்ல?”

ஆமா ஜோரா சமைப்பேனே! ஏன் கண்ணு கேக்குற?”

கும்பகோணத்துக்கு போனப்புறம் கொஞ்ச நாள் நீ தனியா தான் இருக்கணும்

ஏண்டா?”

கொஞ்ச நாள் அம்மா என்னோட இருக்கட்டும்பா. ஹோட்டல் சாப்பாடு போரடிக்குது.

உடனே அப்பா ஒன்றும் சொல்ல வில்லை. அம்மா கிட்ட பேசினியா?”

கேட்டேன். இருந்துட்டா போச்சுன்னா. எதுக்கும் உன் கிட்டயும் பேசச் சொன்னா.

சரி. அவ கொஞ்ச நாள் உன்னோட தான் இருக்கட்டுமே.

வீடு வந்து சேர்ந்தோம். வேகும் வெஞ்சனம் வீடெல்லாம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமையல். அடிச்சிக்க முடியாது. நோ சான்ஸ் !

அப்பாவும் பிள்ளையும் நடந்தே கும்மாணத்துக்கு போயிட்டீங்களோன்னு பார்த்தேன் அம்மா தொடர்ந்தாள்...அப்பாவுக்கு நேத்தெல்லாம் முழங்கால் வலின்னு கால் முட்டில கஞ்சீரா இல்லே வாசிச்சிகிட்டிருந்தார்?”.

அம்மாவுக்கு அப்பா மேல் உள்ள கரிசனமா இல்லை நையாண்டி செய்கிறாளா என்று எனக்கு புரியவில்லை.

கால் முட்டில கஞ்சீரா! உங்கம்மா தஞ்சாவூர் இல்லே?!. கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும் தோள்பட்டை தோடி ராகம் வாசிக்கும்

அவுட் ஆப் காண்டெக்ஸ்ட் அப்பா. கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும்கறதுக்கு தோள்பட்டை ஏதாவது வாத்தியம் வாசிச்சா தான் சரியா வரும்.. தோடி ராகம் பொருத்தமா இல்லை.

தோள்பட்டை தோவுக்கு தோடின்னு அடுத்தாப்புல போட்டேன். நீ தான் வேற சொல்லேன்.

நமக்கு வராதுப்பா
.
என்ன தஞ்சாவூர் பார்ட்டி வாயை திறக்கக் காணோம்? சரக்கு இல்லையா ? தீர்ந்து போச்சா?” என்று குழந்தையாய் சிரித்தார் அப்பா

பெரிய கம்ப சூத்திரம்! கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும். தோள்பட்டை துந்தனா வாசிக்கும்.... இவரு நாவல் வேற எழுதப் போறாராம்! கழுத்து நொடிப்பில் காதுத்தோடு ஒருமுறை மின்னி ஓய்ந்தது.

சபாஷ்மா

அப்பா மௌனமாய் என்னைப் பார்த்தார். சின்ன அசட்டு சிரிப்பு தேயாது இதழ்களில் தொங்கிக் கொண்டிருந்தது.

உம் பிள்ளை உன்னை இங்க இருக்க சொல்றான் கேட்டியா?”.

யாருக்கு நான் தேவையோ அங்க இருக்கிறது தானே சரி.

ஏன் வம்புக்கிழுக்கிறே? நீ கும்பகோணத்துல தேவையில்லைன்னு நான் சொன்னேனா?”

சொன்னால் தானா? வேலைவாணாம்னு ஒதுங்கியாச்சு. ஆம்படையாளும் வேணாம்னு ஒதுக்கிட்டா கும்பகோணத்துல வானப்பிரஸ்தம் அனுபவிக்கலாமே.

லூசு. வானப்ரஸ்தத்துக்கு பொண்டாட்டியையும் கூட்டிண்டு தான் போவா. சன்யாசத்துக்குத்தான் ஓதறிட்டுப் போறது.... மேதாவி.

பேச்சுல கூட சேர்ந்திருப்போம்னு வர்றதா? விட்டுட்டு ஓடற மனசுக்கு வேறெப்படி பேச வரும்?”

ஏன். நீ கூட அஜிதனுக்கு சொல்லியிருக்கலாமே.. அப்பாவும் கொஞ்ச நாள் இங்கயே இருக்கட்டுமேன்னு?”

நான் சொல்லி எடுபடுமா? நீங்க தான் உங்க பிள்ளை மனசுலே எதெதையோ சொல்லி நைச்சியமா இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருப்பேள். தனியா சந்தோஷமா இருங்கோளேன். இதெல்லாம் புதுசா எனக்கு ? இவனை பிள்ளையாண்டிருந்த போது, இந்த சமயத்துல அம்மா துணை அவசியம்னு அரிச்சு புக்காத்துக்கு என்னை அனுப்பிட்டு, எதுத்தாத்து கோமளாங்கி கௌசல்யாகிட்ட புரை குத்த மோர் இருக்கான்னு வழிஞ்ச ஆளு தானே நீங்க.

அம்மா ப்ளீஸ். இப்பிடி எதுக்கு மேல மேல பேசறே. உன்னை இங்க இருக்கச் சொல்லி ஒரு ஆசையில் கேட்டேன். சண்டை போடாதயேன்

அம்மா அப்பாவுடன் போவதாய் சொல்லிவிட்டாள்.

மும்பை ரயில் நிலையத்தில் அம்மாவை ரயில் பெட்டியில் அமர வைத்துவிட்டு, போகும் வழிக்கு பழங்களும் மினரல் வாட்டரும் வாங்க இறங்கினேன். கூடவே அப்பாவும் இறங்கி வந்தார்,

அம்மா கிளம்பிட்டாளேன்னு நீ வருத்தப் படாதே. அவ ஒரு டைப்பு. கொஞ்ச நாள் கழிச்சு நான் அனுப்பி வைக்கிறேன்.இவ்ளோ சொல்றாளே.. நான் தனியா இருப்பேன்கிற தவிப்பு தான் அவளுக்கு அப்பாவின் சமாதானம் தொடர்ந்தது.

அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. அப்பா கையை பிடித்துக் கொண்டேன். பெட்டிக்கு திரும்பினோம்.
இன்னும் ஐந்து நிமிஷத்தில் வண்டி புறப்பட்டு விடும்.

இறங்கி ஜன்னலண்டை வந்துடு என்றாள் அம்மா.

பிளாட்பாரம் இறங்கிவந்து ஜன்னல் கம்பியை பிடித்தபடி அப்பாவைப் பார்த்த வண்ணம் நின்றேன்.

அஜிதன் நீ இருப்பேன்னு ஆசையா கேட்டான். மாட்டேன்னு திரும்பரதுல மனசு கஷ்டம் பாரு அவனுக்கு.

அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா

அப்பா! நீ கொஞ்ச நாளாவது தனியா,முழுசா இருக்கணும் புழுக்கம் இல்லாம.. அமைதியா உன்னை நீயே மீட்டெடுக்க, உன் சந்தோஷ தருணங்களை ஏதும் தடையின்றி நீயே உருவாக்கிக்கொள்ள அல்லவா அம்மாவை இங்கேயே இருத்திக் கொள்ள நினைத்தேன்? நினைத்தது நடக்கிறதா? அல்லது இந்த நினைப்பே சரியா?

என்னடா ஒண்ணும் பேசாமல் யோசனைல இருக்கே?” என்ற அம்மாவின் குரல் சிந்தனையை அறுத்து என்னை மீட்டு வந்தது.

அஜீ! அம்மா போறேனேன்னு தப்பா எடுத்துக்காதே! உங்கப்பாவுக்கு பசி தாங்காது. ஷூகர் வேற படுத்துது. நான் இல்லைன்னா சாப்பிடாம கொள்ளாம ஏதும் புஸ்தகம் வாசிச்சின்டேயிறுப்பார். குழந்தை திருட்டுத் தனமா மண்ணு தின்கிற மாதிரி தானே காபி வச்சு சக்கரைய அள்ளி போட்டுப்பார். நான் இருக்கிற வரையில பார்த்துப்பேன். போயிட்டா அவர்பாடு உன்பாடு.. ஊர் போய் சேர்ந்தப்புறம் முதல் வேலை உனக்குப்பொண்ணு பாக்குறதுதான். இந்த மாசி வந்தா உனக்கு இருபத்தியாறு வயசு முடிஞ்சுடும்.

ஆரம்பிச்சுட்டியாம்மா. கல்யாணம்னாலே எனக்கு கால்முட்டி கஞ்சீரா வாசிக்கிறது, தோள்பட்டை துந்தனா வாசிக்கிறது என்றேன்.

அம்மா பெரிதாக சிரித்தாள். நகர ஆரம்பித்து விட்ட ரயிலின் ஜன்னலூடே அப்பாவின் முகம் மங்கலாய்த் தெரிந்தது. அப்பாவுக்கும் கண்கள் கசிந்து நான்கூட மங்கலாய்த் தான் தெரிந்திருப்பேன்.
     



    




.

66 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

எனக்கு நீர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தைதான் உமக்கும்.

ராக்ஷஸன்.

பள்ளத்தை ஸ்வாதீனமா இட்டு நிரப்பி அதுல ஒரு பூச்செடிய நட்டு வைக்கிற வித்தைய கத்துக்கணும் உம்மகிட்ட.

மாமி பாத்துண்டு நிக்கட்டுமே அதுனாலென்ன பயமா எனக்கு? வாயைக் காட்டும் ஒரு கைப்பிடி சக்கரைக்கு.

பத்மநாபன் சொன்னது…

ஜீ...தொடர்ந்து இரண்டு தடவை படிச்சிட்டேன்.. வரிகள் சுத்திட்டே இருக்கு.... எல்லார் வாழ்க்கையையும் ஏக்கத்தையும் தொட்டுட்டிங்க.. உரைநடை சுவாரசியம் திருப்பி திருப்பி படிக்க வைக்குது இனியும் எவ்வளவு தடவை படிப்பேன்னு எனக்கே தெரியல.....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//
எனக்குத் தெரியும்.. அம்மாவுக்கு அப்பா மேல் கோபம் வந்தால் அவரை முதன்முதலாய் பார்த்த நாள்தொட்டு அவளுக்குள் மண்டின அத்தனை கசப்பையும் ஒன்று விடாமல் பட்டியலிடுவாள். அந்தந்த சமயத்து பிரச்னை தொட்டு அந்தக் குற்றப் பட்டியல் மாறுபடும். எந்த சமாதானமும், தன்னிலை விளக்கமும் அப்பாவை காப்பாற்றியதில்லை. வாங்கிக் கட்டிக் கொண்டு ‘கக்கி முடிச்சாச்சா?’ என்று சிரித்தபடி ஏதோ ஒரு புத்தகத்துக்குள் தன்னை புதைத்துக் கொள்வார். பாவம் அப்பா.. அவருக்குத்தான் எத்தனைக் கனவுகள் இருந்தன?//

நிழல் யுத்தம் நன்கு ரஸிக்கும் படியாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

ரிஷபன் சொன்னது…

கதை என்று சொல்ல முடியாதபடி ஒரு ஸ்வாதீனம்.. ஜிலுஜிலுன்னு அப்பா.. அம்மா.. அஜிதனுடன் இருந்த உணர்வு. சபாஷ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஒரு நல்ல சினிமா துவங்குமுன் தியேட்டரில் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன்
SIR...SUPER!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கால்முட்டி கஞ்சீரா வாசிக்கிறது, தோள்பட்டை துந்தனா வாசிக்கிறது”

தஞ்சாவூர் வாத்தியக்கச்சேரி அருமை..

குடும்பக் கச்சேரி என்றும் நிறைவுறாத மங்களம் பாடி முடிக்கமுடியாத
சுகமான ராகங்கள்..

பாராட்டுக்கள் ..

vasan சொன்னது…

அப்பா, பிள்ளை அண்ட‌ர்ஸ்டான்டிங், அஹா, அஹா
கும்ப‌கோணம் டிகிரி காபிதான் போங்கோ!

'அந்த‌'க‌ச‌ப்பும், ச‌க்க‌ரையும், க‌ர‌ந்த‌ பாலும்,
அம்மா, அப்பா, பிள்ளையாய். ப்ப்..பிர‌மாத‌ம், மோக‌ன்ஜி

ஸ்ரீராம். சொன்னது…

"அப்படியில்லை அஜிதா..." என்று தொடங்கும் பாராவில் உள்ள மனநிலையில் என்னையும் சேர்த்து எத்தனை பேர்?

"முடிவெடுக்காம இருக்கறதே அவளோட சுதந்திரம் போலத் தோணும்..." அழகு.

"அவரை முதல் முதலாய்ப் பார்த்த நாள்தொட்டு மண்டின கசப்பை எல்லாம்..." எல்லா இடத்தும் இதே வழக்கமோ...!

அப்பாக்களையும் அம்மாக்களையும் புரிந்து கொள்ள மகன்களுக்கு அனுபவம் குறைவுதான்! இன்னொரு பக்கம்னு ஒண்ணு இருக்கே....ஆமாம், அது என்ன பேர் அஜிதன்!

Matangi Mawley சொன்னது…

vivid narration! as though happening in front of me... "கழுத்து நொடிப்பில் காதுத்தோடு ஒருமுறை மின்னி ஓய்ந்தது. "-- something that I liked the best! brilliant!

RVS சொன்னது…

Wow! What a come back!!!!

ஜி!! கண்ணு கசியறது.

வானப்பிரஸ்தம் சன்யாசம் இரண்டையும் உள்ள கொண்டு வந்த இடம் அற்புதம்.

முழுவதும் உரையாடல்களிலேயே கதை நகர்ந்தவிதம் அதி அற்புதம்.

பாலைவன பாபாவிற்கு இப்போது நம்முடைய முகவரியெல்லாம் சொன்னால்தான் தெரிகிறது. நீங்கள் இல்லாத தைரியம் என்று நினைக்கிறேன். :-))))

RVS சொன்னது…

//நீ வேலைக்கு வீ.ஆர்.எஸ்// மொதல் தடவை இந்த இடத்தை ஆர்.வீ.எஸ்ஸுன்னு படிச்சுட்டேன். :-)

ஸ்ரீராம். சொன்னது…

RVS கூறியது...

//நீ வேலைக்கு வீ.ஆர்.எஸ்// மொதல் தடவை இந்த இடத்தை ஆர்.வீ.எஸ்ஸுன்னு படிச்சுட்டேன். :-)//


:)))))))))))))))))))

மோகன்ஜி சொன்னது…

என் ப்ரிய சுந்தர்ஜி! மகாபலியோட குருநாதன் சுக்ராச்சாரியாகத்தானே இருக்க வேண்டும். ரெண்டு பெரும் ராக்ஷசர்களாகவே இருப்போம். நாம் இன்றி வாமனனுக்கு பெருமை ஏது?

பள்ளம் நிரப்பி பூச்செடி நடுதல்.. சபரிமலையில், என் கைவிரல் சொடுக்கியபடி எட்டுவயது சிறுவனாய் கதைகள் கேட்ட சுந்தர்ஜியை தலைகோதி பாசுரம் ஆயிரம் சொல்ல ஆவல்.
இந்த முறை மலையாத்திரையும் இருக்காதே என்ற எண்ணம் வேதனை செய்கிறது. எனக்கு அழுகை வராது. கதையாய் வேணுமென்றால் உகுப்பேன் என் சுந்தரா!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! நலம்தானா? வாழ்க்கை நம்மை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. உறவுகளின் பரிதவிப்பு, கோபதாபங்கள், உரிமை,ஆளுமை, உள்ளோட்டமாய் ஓடும் பாசம்.... ஏதும் தவிர்ப்பதற்கில்லை. தவிர்த்தல் தேவையுமில்லை. பந்தங்களின் கூச்சல் அந்தமில்லா சங்கீதம். மூச்சுமூட்டும் உறவெல்லாம் உன்னதமான ஸ்வாஸமுறை. மூச்சடக்கி முத்தெடுக்கலாம் வருக சகோதரா!

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! உங்கள் பாராட்டுக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு ரிஷபன்! இந்தக் கதைப் படித்த அடுத்த நிமிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நெக்குருகிய உங்கள் அன்பை விடவா இந்த புனைவு அழகு? வாழ்க்கையில் இருந்து வரும் படைப்புகள் வாழ்க்கையை மிஞ்சவா முடியும். உங்கள் நட்புக்கு என் சலாம்.

மோகன்ஜி சொன்னது…

மூவார்! இன்று காலை அடுத்த அழைப்பு உங்கள் அலைபேசியிலிருந்து... உங்கள் விமரிசனம் என் பாக்கியம் அன்பரே!

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம்!
/குடும்பக் கச்சேரி என்றும் நிறைவுறாத மங்களம் பாடி முடிக்கமுடியாத
சுகமான ராகங்கள்.. /
அழகான பாராட்டு.!

மோகன்ஜி சொன்னது…

அன்பு வாசன் சார்!
கும்ப‌கோணம் டிகிரி காபிதான் போங்கோ!
சுவையான உவமை.. ஆர்.வீ.எஸ் வீட்டு காபி போல

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஸ்ரீராம்!
/அப்பாக்களையும் அம்மாக்களையும் புரிந்து கொள்ள மகன்களுக்கு அனுபவம் குறைவுதான்! இன்னொரு பக்கம்னு ஒண்ணு இருக்கே..../
என்னமாய் சொல்கிறீர்கள்? இன்னொரு பக்கத்தின் பெயர் தான் தாம்பத்தியமா?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மாதங்கி! தோடு தான் புடிச்சதாக்கும்? நானெல்லாம் ஜிமிக்கி கட்சிப்பா!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ் ! சுகமா? உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் வலைப் பக்கம் வரல்லேன்னா என்ன நேரா திட்ட வேண்டியது தானே? பாலைவன பாபாவை திட்டுறா மாதிரி என்ன வைய்தாறது. இப்போ எனக்கு கொஞ்சம் ஆணி கொறஞ்சாப்புல இருக்கு. கும்மிக்கு தயாராயிடுங்கோ மைனர்வாள். ( பாபா இனிமே வருவார்.அதுக்கு நான் கேரண்டி!

மோகன்ஜி சொன்னது…

//நீ வேலைக்கு வீ.ஆர்.எஸ்// மொதல் தடவை இந்த இடத்தை ஆர்.வீ.எஸ்ஸுன்னு படிச்சுட்டேன். :-)
யாரங்கே? புஸ்தகத்துக்கு தலைப்பு கிடைச்சாச்சு.
‘ஆர்.வீ.எஸ்ஸின் வீ.ஆர்.எஸ்’ அல்லது ‘மேஜரான மைனர்’

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்! இந்த மச்சானை என்ன பண்ணலாம் சொல்லுங்க?

ஸ்ரீராம். சொன்னது…

//ஸ்ரீராம்! இந்த மச்சானை என்ன பண்ணலாம் சொல்லுங்க?//

நமீதாவைத்தான் கேட்கணும்.... அவங்கதான் மச்சான்ஸ் என்று தமிழ் ரசிகர்களை அன்பாகக் கூப்பிடுவார்! :))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கொஞ்ச நாளா விளையாடாம இருந்த வீரர், களத்தில் இறங்கி சிக்ஸர் சிக்ஸரா அடிச்சு, டபுள் செஞ்சுரி போட்ட மாதிரி இருக்கு உங்க பதிவு ஜி!

இரண்டு-மூன்று முறை வார்த்தைகளுக்காகவும், அவை சொல்லும் விஷயங்களுக்காகவும் படித்தேன். ஆணி குறைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. அடிக்கடி உங்களை, உங்கள் பதிவுகள் மூலம் காண முடிந்தால் மகிழ்ச்சிதானே......

இந்த திங்களன்றே தில்லி திரும்பினேன். சென்னையில் இருந்த போது மன்னை மைனர் வீட்டில் காபி அருந்தியபடியே உங்களைப் பற்றியும் பேசினோம்.....

பத்மநாபன் சொன்னது…

மைனருக்கு எப்பவுமே ஒரு மாங்காய் அடிச்சு பழக்கமே இல்லை... உங்கள சொல்ற மாதிரி என்னை ..என்னை சொல்ற மாதிரி உங்களை... இப்ப மைனர் முகப் புத்தக கதாநாயகன்.. டக் டக்குனு ஸ்டேட்டஸ் விடறாரு...

நிஜாம் சொல்லிட்டிங்க.. உங்க கேரண்டிக்கு நான் வாரன்டி......

Aathira mullai சொன்னது…

ஜி, நலமா நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வலைக்கு வருகிறேன். வண்ணம் வலைப்பூ வடிவம் எல்லாம் மிளிர்கிறது.

கதை மாதிரியும் இல்லை. நிஜம் மாதிரியும் இல்லை. அது மாதிரியும் இல்லை. இது மாதிரியும் இல்லை. எது மாதியும் இல்லை. புது மாதிரி.. அருமை.. வழக்கம் போல விறு விறு...

மோகன்ஜி சொன்னது…

நமீதாவா? அந்தம்மா ரசிகர் மன்றத் தலைவரே ஆர்.வீ.எஸ் தானே? என்னவொரு கோ இன்ஸிடென்ஸ் பார்த்தீங்களா?

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி வெங்கட்! இவ்வளவு ஈடுபாட்டுடன் நீங்கள் இயங்கிக் கொண்டிருப்பது மனதுக்கு இதம். உங்கள் பதிவுகள் மெருகேறியிருக்கின்றன. இனி அடிக்கடி சந்திப்போம்.

மோகன்ஜி சொன்னது…

உண்மை பத்மநாபன்! பேஸ் புக்ல கலக்கிக்கிட்டு இருக்காரு. நமக்கு வலைக்கே மூச்சடைக்குது. பேசாம ஆர்.வீ.எஸ் பதியறது எல்லாத்தையும் தெலுங்குல மொழிபெயர்த்து ஹைதராபாதுல கல்லா கட்டலாம்னு பாக்குறேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதிரா! நலம் தானே? கதையை ரசித்ததற்கு நன்றி. அடிக்கடி வாங்க!

kashyapan சொன்னது…

மோகன் ஜி! எனக்கு 77. என் மனைவிக்கு 71. என்னை பிரியமாட்டாள்---.நானும்.---சண்டை,மனஸ்தாபம்,அழுகை எல்லாம் இருக்கும். அதன் ஊடே மெல்லிய பிணப்பு இருக்கும். அஜிதனின் அப்ப,அம்மா போல.அனுபவித்து கண்களும் மனதும் கசிய அனுபவித்தேனுங்கள் கதையை---காஸ்யபன்..

சத்ரியன் சொன்னது…

மோகன் ஜி,

வசிஸ்டர் நீங்க. இந்த மாணவன் புதிதாய் என்ன சொல்லிவிட முடியும்?!

(நலமா இருக்கீங்களா? நெடுநாளாச்சு, அதான்.)

RVS சொன்னது…

அப்படிப் போடு கும்மிய! வாத்தியார் வந்தாதான் கலகலக்குது கச்சேரி!

சுந்தர்ஜி மோகன்ஜின்னு ரெண்டு கதா ராக்ஷசர்கள் கிட்டே மாட்டிக்கிட்டோமோ?

பாஸு.. ஃபேஸ்புக்ல பாப்கார்ன் மாதிரி சும்மா கொரிச்சுக்கிட்டு இருக்கேன். நீங்கெல்லாம் கொடுக்கிற விருந்துக்கு ஈடாகுமா என் வலையின் இளைஞனே!!

பாலைவனபாபாவை ”பாவா”ன்னு பாக்கியராஜ் பட சிலுக்கு மாதிரி ஆசையாக் கூப்பிட்டு படிக்கச்சொன்னேன். தல... வல...ன்னு தப்பிக்கலாம்னு பார்த்தாரு. நாம வுட்ருவோமா... அப்டிக்கா நம்ம பக்கமா வலிச்சுட்டேன்.

எப்படித்தான் கதைங்கிற பேர்ல இதயத்தை உருக்கிற வேலை பார்க்கறீங்களோ!!

RVS சொன்னது…

//யாரங்கே? புஸ்தகத்துக்கு தலைப்பு கிடைச்சாச்சு.
‘ஆர்.வீ.எஸ்ஸின் வீ.ஆர்.எஸ்’ அல்லது ‘மேஜரான மைனர்’//
இந்த லிஸ்ட்ல மொத புஸ்தக தலைப்பைப் பார்த்து “பேஜாரான மைனர்”ன்னு அடுத்த தலைப்பை மாத்திடலாம் குருவே!!! :-)))))

பாபாவுக்கு என்ன ஐடியாவோ? திருவாய் மலர்வாரா? :-)))))

கீதமஞ்சரி சொன்னது…

நேற்றே படித்தும் பின்னூட்டமிட இயலவில்லை. என்னவோ தெரியவில்லை உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு. அவரவர்க்கு உண்டான வாழ்க்கையை அவரவர் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை காலமும் உருவாக்குவதில்லை. உருவாக்கப்படும் காலத்தை உணர்ந்து உபயோகப்படுத்தவும் முடிவதில்லை.

குடும்ப வாழ்க்கையின் குறைநிறைகளைப் பூர்த்தி செய்யும் வித்தை அனைவருக்கும் கைவராநிலையில் அஜீதனால் மட்டும் எப்படி முடியும்? தேர்ந்த மனவியல் உணர்வுகளை வெளிப்படுத்தி மனம் நெகிழ்த்திவிட்டீர்கள். பாராட்டுகள் மோகன்ஜி.

மறுபடியும் 'உங்களைக்' காண்பதில் மிகவும் மகிழ்ச்சி.

அப்பாதுரை சொன்னது…

பல முறை படித்துத் துன்புற்றேன்.
இப்படி ஒரு படைப்புடன் திரும்புவதானால் அடிக்கடி ஓய்வெடுங்கள் என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறதே மோகன்ஜி..?

அப்பாதுரை சொன்னது…

ஹ்ம்ம்ம் நமீதாவை ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை..

அப்பாதுரை சொன்னது…

ஆர்வீஎஸ், நீங்க தான் டிஆர் ரசிகர் மன்றத்தலைவரா இருக்கீங்களே? நமீதாவை எங்களுக்கு விட்டுருங்க.

அப்பாதுரை சொன்னது…

//பள்ளத்தை ஸ்வாதீனமா இட்டு நிரப்பி அதுல ஒரு பூச்செடிய நட்டு வைக்கிற வித்தை

ஆகா!

அப்பாதுரை சொன்னது…

அப்பாக்களையும் அம்மாக்களையும் பிள்ளைகள் எதற்காகப் புரிந்து கொள்ளணும் ஸ்ரீராம்?

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! கதைகளின் சரடை சன்னமாய் உருவி இனம் காட்டும் உங்கள் அனுபவத்தை ஒரு பிரமிப்போடு ரசிப்பது என் வழக்கம்.

உங்கள் கண்ணும் மனசும் கசிய வீட்ட இந்தக் கதை பெரும் பேறுற்றது

மோகன்ஜி சொன்னது…

அன்பு சத்ரியன்! சுக்ராச்சாரி ஆயாச்சு. இப்போ வசிஷ்டரா? சரிதான்.
நான் நலம் தான் ! அப்பப்ப வந்து இந்த இளைஞனுக்கு ஊக்கம் தரக் கூடாதா?

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வீ.எஸ்.
/நீங்கெல்லாம் கொடுக்கிற விருந்துக்கு ஈடாகுமா என் வலையின் இளைஞனே!!/
கொஞ்சம் சத்தமா சொல்லுங்க ! சத்ரியன் காதுல விழராப்பல.
ஒரு யானைப் பதிவு போடறேன்.. ஊர்கோலம் விட வேண்டியது உங்க வேலை..
“பேஜாரான மைனர்” ஆர்.வீ.எஸ் டச்.

மோகன்ஜி சொன்னது…

கீதமஞ்சரி! வாங்க! இங்கு பிரச்சினையே ஒவ்வொருவரும் மற்றவர் வாழ்க்கையை வாழ்ந்தபடி இருப்பது தான். அதற்கு வேற வேற பெயர் வச்சு ‘ஆல் ஈஸ் வெல்’லுன்னு பாட்டுபாடிக்கிட்டிருக்கிறோமோ? அவரவர்க்கான
சுயவெளியை புரிந்து கொண்டு பிறரை அனுசரித்து அன்பொன்றாலேயே உறவுப் பிணைப்புகளை உருவாக்குவோமாயின் அனைத்தும் நலமே ஆகுமன்றோ?

மோகன்ஜி சொன்னது…

அன்பு அப்பாதுரை! வந்துட்டீங்களா?
/பல முறை படித்துத் துன்புற்றேன்./
வேற யார் இப்படி சொல்ல முடியும்.?

//ஒரு தடவை கூடப் பார்த்ததில்லை..//
பார்க்காம எதுக்குங்காணும் மனுசனா திரியறீர்?

//எங்களுக்கு விட்டுருங்க.// ‘எங்களுக்கு’ என்பதை ராயல் சிங்குலராய்ப் புரிந்து கொள்கிறேன்.

//அப்பாக்களையும் அம்மாக்களையும் பிள்ளைகள் எதற்காகப் புரிந்து கொள்ளணும் ஸ்ரீராம்? //
அப்பாவை அம்மாவும் அம்மாவை அப்பாவும் என் புரிந்து கொள்ளணும்னு
கேட்டிருந்தீங்கன்னா ‘அட சமர்த்தே’ன்னு கொஞ்சியிருப்பேன். உங்க கேள்விக்கு ஸ்ரீராமே பதில் சொல்லுவார்.

RVS சொன்னது…

நான் டி.ஆர் ரசிகர் மன்றத்தை கலைச்சு வெகுநாளாச்சு.

நமீதாவை விட்டுக்கொடுத்துட்டேன். அப்பாதுரை மாதிரி மச்சானை மலைவாழைத் தோப்புக்குள்ள சந்திக்கிறதுக்கு தயாரா இருக்காங்களாம்!! பீ ரெடி!! :-)

வானவில்மனிதரும் கூட இருந்தால் அந்த மயில் தோகை விரித்து ஆடுமாம்!! :-)

அப்புறம்... அப்பாக்களையும் அம்மாக்களையும் புரிந்து கொள்ளவில்லையெனினும் போர் புரிந்து கொல்லாமல் இருந்தால் சரி.... ஸ்ரீராம் கொஸ்டினுக்கு அதிகப்பிரசங்கித்தனமா நான் ஆன்ஸர் பண்ணிட்டேன்.

அப்பாதுரை சொன்னது…

போர் புரியறாங்கங்கனு ஏன் அப்பா அம்மா புரிஞ்சுக்கணும் ஆர்வீஎஸ் ? (உலகக் கேள்விகள் தினம்)

அப்பாதுரை சொன்னது…

//மச்சானை மலைவாழைத் தோப்புக்குள்ள சந்திக்கிறதுக்கு தயாரா இருக்காங்க

soft pornography rvs.. well said.

அப்பாதுரை சொன்னது…

//வானவில்மனிதரும் கூட இருந்தால்

ரொம்ப முற்போக்கா இருக்கே?

RVS சொன்னது…

அப்பாஜி! தள்ளாமைதான்.. வயசாயிடிச்சு.... எதாவது சொன்னால் நம்பளைத்தான் இப்படி சொல்றாங்களோன்னு... இப்ப யாருக்கும் உபயோகம் இல்லாம ஆயிட்டோம் அதனால உதாசீனப்படுத்தறாங்களோன்னு நினைச்சுக்கிறாங்க.. அதனாலத்தான் போர் புரியறாங்கன்னு புரிஞ்சுக்கிறாங்க..

வெகு சிலர்தான் உடம்புக்கு முடியலைன்னாக் கூட தைரியமா தனியா இருக்கேன் விட்டுடுன்னு தனிக்குடித்தனம் வந்துடறாங்க... பெரும்பாலான பேருக்குப் பயம். டாய்லெட்ல வழுக்கி விழுந்துட்டா யார் வந்து எழுப்பி விடுவா.. அதனால பசங்க கூடவே இருக்காங்க.. பசங்களும் அப்பா அம்மாதானேன்னு ஏதாவது சொன்ன சகிச்சுக்கலாம். சகிச்சுக்கணும்.

ஏதேதோ தோணிச்சு. சொல்லிட்டேன். :-)

அப்பாதுரை சொன்னது…

நீங்க சொல்றது சரிதான் rvs.

எனக்குத் தெரிஞ்ச வரைக்கும்... வயசானா ரொம்ப அல்பமா நடந்துக்குறோம், தேவையில்லாத விஷயங்கள்ள தலையிட்டு.

நம்ம வாழ்க்கை டயத்துல ஒண்ணும் புடுங்காம பசங்க வாழ்க்கைல பெரிசா அட்வைஸ் பண்ற வழக்கம் மாறினாத்தான் நல்லது. அட்வைஸ் கேட்டா குடுப்போங்கற பக்குவம் வரணும். பெத்துட்டோங்கற ஒரே காரணத்துக்காக நாம பிள்ளைங்களை stress பண்றோமே தவிர not the other way around. இந்தத் தலைமுறையிலயாவது முதியவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி தனியாக இருக்கப் பழகிக் கொள்வது நல்லது.

Matangi has written a great post, டயம் கிடைச்சா படியுங்க. 'twenty something'ன் சிந்திக்கும் திறன் ரொம்ப நிறைவா இருக்கு.

மோகன்ஜி சொன்னது…

முதியவர்கள் மனநிலையை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள். அறுபதின் நிலை பற்றி கண்ணதாசன் 'உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா' எனும் திரைப்பாடலில் கூர்மையாய் சொல்லியிருப்பார்.
Moral of the story: Aging with grace

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! நானும் மாதங்கியின் பதிவைத்தான் இப்போது நினைத்துக் கொண்டேன்.

ஒரே மாதிரி நினைக்கிறோமே... எனக்கும் அப்போ வயசாகுதோ?

நிலாமகள் சொன்னது…

அஜிதா என்ற‌ தொட‌க்க‌ விளிப்பு விளிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் பெண்ணென‌ தோன்ற‌ வைத்த‌து, சின்ன‌ ட்விஸ்ட். அஜித‌ன் ஆக‌ புரிந்த‌ போது.//தீர்மானமான முடிபுகள் தொக்கி நிற்கும் வார்த்தைகள் என் அம்மா எனக்களித்த சீதனம்//

அம்மாவைப்ப‌ற்றிய‌தொரு பிம்ப‌ம் உருவாக‌த் தொட‌ங்கிவிட்ட‌து.

//மனசுக்கு ஏத்த வேலையா செய்யாம வயத்துப் பாட்டுக்கென ஒரு உத்தியோகத்தை முப்பது வருஷம் செஞ்சுட்டேன். வேலைத் தேடின நாட்கள்ள என்ன மாதிரி பி.காம் படிச்சவனுக்கு பெரிசா சாய்ஸும் இல்லப்பா. அடிமை சாசனமா என்னையே எழுதிக் குடுத்துட்டு வேலை, பிரமோஷன்னு குதிரை ஓட்டம் ஓடினேன். ஜுரம் வந்து ரெண்டு நாள் படுத்திருந்த போது சட்டுன்னு தோணுச்சு. நாம என்ன பண்ணிட்டிருக்கோம்னு. எனக்குன்னு நான் எப்பவுமே இல்லாம ... இன்னமும் நாம வாழவே ஆரம்பிக்கல்லியேன்னு ஒரு திகில் வந்தது. இனியும் பணம்கிறது ஒரு பொருட்டா வேணாம்னு தோணிடிச்சு. நீயும் பெரியவனும் தான் தலையெடுத்தாச்சே?//

வீ.ஆர்.எஸ்.க்கு ச‌ரியான‌ லாஜிக்தான்.
// ஒரு லைப் பார்ட்னரை மதிக்க தோணுச்சா உனக்கு?”
இதுல இவ்வளவு உள்வயணம் இருக்கா? சரிதான்.//

எங்கம்மா என்னைக்கும் அப்பா மனசுக்கு மாறா ஒரு முடிவும் எடுத்ததில்லே. ஏன்? அவள் எந்த முடிவுமே எடுத்ததில்லே. ஆனாலும் சந்தோஷமா தான் இருந்தா. முடிவெடுக்காம இருக்கிறதே அவளோட சுதந்திரம் போல தோணும். என் கூட்டு புருஷன் பொண்டாட்டி கதையே வேற. தானும் முடிவு எடுக்க மாட்டோம்.. தன் துணையையும் முடிவெடுக்க விட மாட்டோம்.//

நேத்து நீ சொன்னியே, அவங்கவங்க தன் வாழ்க்கையை யோசிச்சு ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல சேர்ந்து போறது தான் இன்னைய பேமிலின்னு? இந்த வழி கூட பரவாயில்லை. எப்படி இருக்கிறதுன்னு தெரியாம ஒருத்தருக்கு இன்னொருத்தர் கழுத்தில் கட்டிவிட்ட பாறாங்கல்லாய் தான் நிறைய பேர் வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு”.//

மூணு த‌லைமுறை ப‌ற்றிய‌ ஆராய்ச்சி ந‌ன்றாக‌வே போகிற‌து.

இத‌ற்க‌ப்புற‌மான‌ க‌தையோட்ட‌ம் அஜித‌ன் அப்பாவை ந‌ன்றாக‌வே அவ‌தானித்து வ‌ந்திருக்கிறானென்றே என‌க்குப் ப‌ட்ட‌து.
//அடுத்தமுறை இந்த ஹோட்டலுக்கு வந்தால் நீ அமர்ந்திருக்கும் இந்த நாற்காலியில் தான் அமர்வேன் அப்பா... //
பிள்ளைம‌ன‌சின் அப்பா மீதான‌ பிரிய‌மும் ம‌திப்பும் க‌ன‌ம் கூட்டிய‌து.

கால் முட்டி கஞ்சீரா வாசிக்கும். தோள்பட்டை துந்தனா வாசிக்கும்.... இவரு நாவல் வேற எழுதப் போறாராம்!” // எள்ள‌ல் ந‌ம‌ட்டு சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்தாலும், க‌டைசியில்

ஆரம்பிச்சுட்டியாம்மா. கல்யாணம்னாலே எனக்கு கால்முட்டி கஞ்சீரா வாசிக்கிறது, தோள்பட்டை துந்தனா வாசிக்கிறது” என்றேன்.//

வ‌ரிக‌ள் ப‌ளீர் சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து. இட‌ம் மாறிய‌தால் பொருள் மாறிய‌ விந்தை!

கழுத்து நொடிப்பில் காதுத்தோடு ஒருமுறை மின்னி ஓய்ந்தது.//

எத‌ற்கெடுத்தாலும் நொட்டை சொல்லும் ம‌ன‌சுக்கு ப‌ட்டை தீட்டிய‌ வைர‌ம் உட‌ம்பெங்கும் மின்னித் தான் என்ன‌?!

அப்பா! நீ கொஞ்ச நாளாவது தனியா,முழுசா இருக்கணும் புழுக்கம் இல்லாம.. அமைதியா உன்னை நீயே மீட்டெடுக்க, உன் சந்தோஷ தருணங்களை ஏதும் தடையின்றி நீயே உருவாக்கிக்கொள்ள அல்லவா அம்மாவை இங்கேயே இருத்திக் கொள்ள நினைத்தேன்? நினைத்தது நடக்கிறதா? //

ம‌றுப‌டியும் அஜித‌னின் பிள்ளைம‌ன‌சு வெளிப்ப‌டுகிற‌து.

அப்பாவுக்கும் கண்கள் கசிந்து நான்கூட மங்கலாய்த் தான் தெரிந்திருப்பேன்.//

அம்மாவின் சூட்டுக்கோல் காய‌ங்க‌ளுக்கெல்லாம் அஜித‌னின் பாச‌ம்தான் ஒத்த‌ட‌ம்... இல்லையா ஜி...! நிழ‌ல் யுத்த‌த்தில் அப்பா நிராயுத‌பாணியாக‌வே த‌வித்திருக்கிறார்.போரிட‌த் த‌யாராகாத‌ போதோ, போரிட‌ விரும்பாத‌ போதோ ஆயுத‌ங்க‌ளைப் பிர‌யோகிப்ப‌து யுத்த‌ த‌ர்ம‌மா ஜி? அம்மா ஏன் இப்ப‌டி?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா! அசத்தலான அலசல்! நன்றி!

தாம்பத்தியம் என்பது புரிந்து கொள்வது மட்டுமல்ல.. பொறுத்துக் கொள்வதும் கூடத் தான்.

நொட்டை சொல்லும் அம்மாதான் அப்பாவின் சர்க்கரை நோயையும் தனிமையையும் பற்றிக் கடைசியில் அங்கலாய்க்கிறாள். அவள் அணுகுமுறை,தன் கணவனை தன்னிஷ்டத்துக்காய் வளைக்கும் மனப்பாங்கு அல்லது நீண்ட காலம் பழகிய தடத்திலேயே உறவாடும் நிலை ஏதோவொன்றாய் இருக்கலாம். ஒருவேளை அவள் அன்பை இந்த நொட்டை ஒன்றாலேயே வெளிபடுத்த பழகிப்போயிருக்கலாம். இந்த உளவியல் குழப்பங்கள் நிறைந்த ஒருத்தியாய் அம்மாவைப் பார்க்கிறேன்.

///நிழ‌ல் யுத்த‌த்தில் அப்பா நிராயுத‌பாணியாக‌வே த‌வித்திருக்கிறார்.போரிட‌த் த‌யாராகாத‌ போதோ, போரிட‌ விரும்பாத‌ போதோ ஆயுத‌ங்க‌ளைப் பிர‌யோகிப்ப‌து யுத்த‌ த‌ர்ம‌மா ஜி?//

இந்த யுத்தத்தில் சகிப்பையோ,உதாசீனத்தையோ,அவள் அப்படித்தான் எனும் சகஜ முடிபையோ அந்த அப்பா ஆயுதமாய் பயன்படுத்துவதாய் உங்களுக்கு தோன்ற வில்லையா?

அஜிதனின் பார்வையில் அப்பா அம்மா உறவில் தோன்றும் இந்த மடு மிகப் பெரியதாய்,கவலைக்குரியதாய் தோன்றி, தான் பெரிதும் மதிக்கும் தந்தைக்கு ஏதும் செய்து உதவிட நினைக்கிறான்.

முக்கோணச் சிக்கல்....

மனித மனம் ஆழம் அறிய முடியாதது.. உறவுகளின் உள்ளடக்கமோ உணர வாய்க்காதது...

அற்புதமான அலசலுக்கு நன்றி நிலா!

ஹேமா சொன்னது…

மோகண்ணா....முதல்ல சுகமான்னு சொல்லுங்க.சுகம்தானே !

’’கால்முட்டி கஞ்சீரா வாசிக்கிறது, தோள்பட்டை துந்தனா வாசிக்கிறது”
’’

அன்பால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்த நிறைவு அண்ணா உங்களுக்கு.இப்படியான கலகலப்பை இன்றைய தலைமுறையினருக்குள் பார்க்கவே முடிவதில்லை.அவசரம் அவசரமாய் ஏனோதானோ என்று வாழ்வதாய்த்தானே தெரிகிறது !

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஹேமா! நான் நலமாகத்தான் இருக்கிறேன். நீங்களனைவரும் சுகம் தானே.

குடும்பம் ஒரு நவதானியக் கலவை. அன்பு,கோபம்,பாராமுகம்,சமாதானம், அனுசரிப்பு எல்லாமும் கலந்த கலவை தானே?

சிவகுமாரன் சொன்னது…

\\அப்பாவுக்கும் கண்கள் கசிந்து நான்கூட மங்கலாய்த் தான் தெரிந்திருப்பேன்//

எனக்கும் கண்கள் கசிந்து எழுத்துக்கள் மங்கலாய்த் தான் தெரிகின்றன.
மூன்றே பாத்திரங்கள் - எத்தனை குணாதிசயங்கள். எவ்வளவு விவரணைகள்.
செல்லச் சண்டையில் இழையோடும் பாசம். பிள்ளைக்காக தந்தையும் , தந்தைக்காக பிள்ளையும் போடும் திட்டங்கள் .
அப்பப்பா... சுந்தர்ஜி சொல்வது போல் ராட்சஷன் தான் நீங்கள் அண்ணா

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சிவா! உன் அழகான பாராட்டுக்கு என் நன்றியும் அன்பும்..

//அப்பப்பா... சுந்தர்ஜி சொல்வது போல் ராட்சஷன் தான் நீங்கள் அண்ணா//

இந்த சுந்தர்ஜியை என்ன பண்ணலாம்? தம்பி சிவா !என் துச்சாதனா! அவரை சபைக்கு இழுத்து வா....
எந்தக் கிருஷ்ணன் வந்து அவருக்கு வேட்டி மேல் வேட்டியாக மேலேருந்து விடுறார் பார்ப்பாம்! ஹ.. ஹாஹா!

சிவகுமாரன் சொன்னது…

அய்யய்யோ
"பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்" என்ற சபதம் கேட்கிறதே அண்ணா

நிலாமகள் சொன்னது…

உங்க‌ க‌ருத்துக்க‌ளின் இத‌மும் இழையோடும் உறுதியும்... மேலும் மேலும் க‌தைக்கு வ‌லுவூட்டுகிற‌து ச‌கோ... க‌தைபோலும் வாழ்வின் நித‌ர்ச‌ன‌ங்க‌ளை உண‌ர‌ வைக்கிற‌ பாங்கு ... போற்றுகிறேன், வ‌ண‌ங்குகிறேன்.

மோகன்ஜி சொன்னது…

அப்படியோர் பாடல் நம் மேல் பாரதி பாடுவானேயானால் எந்த இழிபிறவியும் எடுக்கலாமே சிவா!

மோகன்ஜி சொன்னது…

உங்கள் உணர்ச்சி பூர்வமான வாழ்த்துக்கு நன்றி நிலா!