“ஏங்க்கா! பொண்ணு அம்மாம் அளகாமே?”
“அத்தையேண்டி மேரி கேக்குறே? போன கிறிஸ்மஸப்போ பிரபாத்ல சிவாஜிபடம் ஒண்ணு பாத்தோமே?”
“ஆமாங்க்கா! உயர்ந்தமனிதன்...”
“ஆங்! அச்சு அசப்பா அதுல வர்ற குட்டிமாதிரியே
தான் இருக்கா”
“வாணிஸ்ரீயாக்கா?”
“த.. அது எதுக்கு தொம்ப மாதிரி.? மயிலு கணக்கா கழுத்த சிவுக்சிவுக்குன்னு வெட்டிக்கிட்டு ரெட்டைபின்னல்
போட்டுகிட்டு சிவ்க்குமார் கூட ஆடுமேடி? எது என்ன பாட்டு
எளவு வாய்க்கு வல்லே”
“அட அதாக்கா. ‘என்
கேள்விக்கு என்னா பதில்’ன்னு அயனான பாட்டக்கா. அந்தப் பொண்ணு
‘பாரதி’. அய்யோ..அம்சமான பொண்ணுக்கா.” என்று வியந்த மேரி சற்று தாழ்ந்த குரலில் தொடர்ந்தாள். “பாரதிக்கு கழுத்துக்கு கீழே ஒரு மச்சம் இருக்கும். அதான் அவ்ளோ அதிஷ்டம்
அதுக்கு! ஏங்க்கா? உங்கண்ணன் மரிமவளுக்கும் எதுனா அப்படி
மச்சம் இருக்கா பாத்தியாக்கா?” என்றாள் பீரிடும் சிரிப்புடன்
மேற்திண்ணையில், தன் அத்தை
தெரேசம்மாளுக்கும், அண்டைவீட்டு மேரிக்கும் நிகழ்ந்த
உரையாடலை உள்ளறையில் படுத்திருந்த கிறிஸ்டிராஜும்
கேட்டான். அத்தை குறிப்பிட்ட மச்சக்கார மாப்பிள்ளையும் அவனேதான். தெரேசம்மா
சொல்வது உண்மை. கிறிஸ்டிராஜ் நல்ல கருப்பு.. சிறுவயதில் கண்ட வைசூரி உடம்பில் பல
அம்மைத்தழும்பு குழிகளை விட்டுச் சென்றிருந்தது.. மூக்கின் மேலேயே மூன்று
குழிகள்.. ரெண்டு வருஷமாய் பட்டை ப்ரேமுடன் மூக்குக் கண்ணாடிவேறு.. அம்மாவிடமிருந்து
வந்த முகக்களையும்,சிரித்தமுகமும் தான் இதையெல்லாம் நிரவியிருந்தது
.
ஆனால் போனவாரம் என்னென்னவெல்லாம் நடந்து விட்டது. ஒரு
சொர்க்க வீச்சில், நினைத்தே பார்த்திராத அவன்
திருமணமும் முடிந்து, தன் தகுதிக்கு எந்த வகையிலும்
எதிர்பார்க்க முடியாத ஒரு தேவதையை தனக்கு வாழ்க்கைத்துணையாய் வழங்கிவிட்டு
போய்விட்டது.
“கர்த்தரே! இதென்ன கருணை! என்னுடன் விளையாட
திருவுளம் கொண்டீரா?. இந்த அசடனுக்கு ஒரு பொக்கிஷத்தை தந்து
சென்றீரே. என்ன உமது உத்தேசம்!”
ஒரு வாரமாய் இதைத்தானே கிறிஸ்டிராஜ் ஆண்டவரிடம்
கேட்டுக் கொண்டிருக்கிறான்?
போன வெள்ளிக்கிழமை, அப்பா
சவரிமுத்து மற்றும் சில உறவினரோடு, தன் தாய்வழி சொந்தமான அந்தோணிசார் மகள்
வனரோஜாவின் கல்யாணத்திற்காய் திண்டிவனம் சென்றிருந்தார்கள். தூரத்து
சொந்தம் தான்.ஆனால் சவரிமுத்துவும் அந்தோணிசாரும் நெருங்கிய நண்பர்கள். அவ்வளவு
ஏன்? இப்போது கிறிஸ்டிராஜ் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழாசிரியர்
வேலைகூட அந்தோணிசாரின் பரிந்துரையில் கிடைத்தது தானே?
எல்லா உறவினரும் நண்பருமாய்க் கூடியிருந்த நேரம்.
மாப்பிள்ளை பம்பாயில் வேலைபார்க்கிறாராம். வசதியான குடும்பமாம்.
அந்த அதிகாலை ,திடீரென்று
பெரியதோர் சலசலப்பு அந்தோணிசார் வீட்டாரிடம் புறப்பட்டது. மாப்பிள்ளை கடைசி
நேரத்தில் திருமணத்தை நிறுத்திவிடும்படியும், தான் வேறொரு
பெண்ணை விரும்புவதாயும் அவன் வீட்டாரிடம் தகவல் சொல்லி கடைசி நேரத்தில் அங்கு வருவதைத் தவிர்த்துவிட்டான்.
பையனின் தகப்பனார் நேரில் வந்து அந்தோணிசாரிடம் சொல்லி அழுதுவிட்டு தன்னை
மன்னிக்கும்படி பலவாறாய்க் கெஞ்சிவிட்டு கிளம்பிவிட்டார். பிள்ளையை பெற்ற
பாவத்திற்கு வேறு என்ன செய்ய முடியும்?
அந்தோணி உடைந்து போய்விட்டார். விஷயம் கேள்வியுற்று
அவரைத் தேற்றவெண்ணி சவரிமுத்து அந்தோணியை
நெருங்கினார்..
“கலங்காதே அந்தோணி! ஆண்டவன் ஏதோ பேரிழப்பைத்
தடுக்கத்தான் இந்த அளவில் நிறுத்தினார். நம் வனரோஜாவின் அழகுக்கும் குணத்துக்கும்
ஆயிரம் மாப்பிள்ளைக் கிடைக்கும். நானே கொண்டுவந்து நிறுத்துகிறேன் பார் ஒரு
ராஜகுமாரனை!”
“என்ன செய்வேன்.. என்ன செய்வேன்! சவரிமுத்து!
இந்த திருமணத்திற்கு எவ்வளவு பேர் கூடிவிட்டார்கள் பார் ?
இன்னமும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்து ‘கொல்’லென்று போய்விடாதா?”
திடீரென உறுதியாய் எழுந்து நின்றார் அந்தோணி. “ஒரு.. ஒரு நிமிஷம் இங்கேயே இரேன்.. இதோ வந்துவிட்டேன்”.
அவர் வெளியே வர பதினைந்து நிமிடம் ஆயிற்று.
ஓடி வந்து சவரிமுத்துவின் கைகளைப் பிடித்துக்
கொண்டார் அந்தோணி.
“சவரி! நீ சொன்னயே ஒரு ராஜகுமாரனைக் கொண்டு
வருவதாய்... உன் வீட்டு ராஜகுமாரனை இப்போதே ஏன் வனரோஜாவுக்கு கட்டிவைத்து என்
மானத்தைக் காப்பாற்றுவாயா?”
விக்கித்துப் போனார் சவரிமுத்து. “அந்தோணி! என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? வனரோஜா எங்கே?இவன் எங்கே?
அவளுக்கு எந்தவகையிலும் கிறிஸ்டி பொருத்தமில்லையே?
உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்காதே. உன் பெண் இதற்கு சம்மதிப்பாளா?” படபடவென்று வந்தது சவரிமுத்துவுக்கு.
“வனரோஜாவுக்கு சம்மதம். நம்ம கிறிஸ்டிக்கென்ன? என்னப்பா கிறிஸ்டிராஜ்? வனரோஜாவை ஏற்றுக்கொள்ள
சம்மதமா? சொல்லுப்பா” அந்தோனியின்
குரல் உடைந்து கேவலாயிற்று.
“ஐயா... நான் போய் உங்களுக்கு...” கிறிஸ்டிக்கு வார்த்தைகள் வரவில்லை.
சவரிமுத்துவின் தோள்களை இறுக்க அணைத்தவாறே தனியே
அழைத்துச் சென்றார் அந்தோணி. திரும்பிய இருவர் கண்களிலும் கண்ணீர்.
“கிறிஸ்டி! வனரோஜாவை மருமகளாய் ஏற்றுக்
கொண்டுவிட்டேன். என் நண்பனுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். எங்கள் இருவர்
மானமும் உன் ஒரு சொல்லில்”.
“சரியப்பா” தீனமாய்த்
தேய்ந்தது கிறிஸ்டியின் குரல் .
அந்த நொடியிலிருந்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது
என்பதை அறியும் திராணிழந்து சாவிகொடுத்த பொம்மைபோல் ஆனான். யார்யாரோ சொன்னவண்ணம்
செய்தான். சொல்லச் சொன்ன வசனங்களைச் சொன்னான். குலுக்கிய கரங்களும், வாழ்த்திய இதழ்களும் அவனை கேலி செய்கிறதா?
வனரோஜாவுக்கு நான் கணவனா? மயிலுக்கும்,மாட்டிற்கும்
கல்யாணமா? கர்த்தரே!
திருமணம் எதிர்பாராமல் நடந்துவிட்ட படியால் உள்ளூர்
நண்பர்களுக்காய் ஞாயிற்றுகிழமை ரிசப்ஷன் போல ஏற்பாடு செய்வதற்காய் சவரிமுத்து
வெளியில் போயிருக்கிறார். தலைவலி என்று இவன் உள்ளறையில் படுத்தபடி. இன்னமும் ஏதெதையோ திண்ணையில் அலசிக்கொண்டிருந்தாள் தெரேசம்மாள்.
சவரிமுத்துவின் ஏற்பாட்டின் பேரில், திருமணம் முடிந்தவுடன் வனரோஜா அவள் வீட்டிலேயே அந்தவாரம்
இருந்தபின்னர் நாளை இங்கு அந்தோணி அழைத்து
வந்து விடுவார். இந்த தொழுவத்துக்கு கலாபமயிலை இழுத்துவந்து கட்டப் போகிறார்.
......................................................
...........................................................................இப்படித்தானே
தன் வனரோஜா தன்னைவந்து சேர்ந்தது? போனமாதம் தானே
மணநாள் வெள்ளிவிழா கொண்டாடினோம்.. இத்தனை வருட தாம்பத்தியத்தில் வனரோஜா தன்னை ஒரு
சேயாய்,மாணவனாய், நண்பனாய் எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டாள்? எவ்வளவு உற்சாகம் கொப்பளிக்கும் அவள் செயல்பாடுகளில்..
தமிழய்யா கிறிஸ்டிராஜுக்கு தாகம் எடுத்தது.
அவருடைய வனரோஜா ஸௌந்தர்யம் துலங்க கண்முன்னே...
“ரோஜா” மெல்லக்
கூப்பிட்டார். தன் குரல் தனக்கே
கேட்கவில்லை.
தன்முன்னே நீண்ட இரவு இரைவிழுங்கிய மலைப்பாம்பாய்
மெல்ல புரண்டபடி இருக்கிறது.
அவர்களிருவரும் வாழ்ந்த கணங்களை அசைபோட்டபடி,அவள் அருகாமையில், முட்டிமோதும் நினைவலைகளை
வெறித்தபடி எங்கோ சஞ்சரித்தார். காலம், நிகழ்வு எல்லாம் பனிக்கட்டியாய் உறைந்து ஏதோ ஒரு நினைவுநாடியின் மெல்லிய
துடிப்பொன்றே அவரையும், வனரோஜாவையும் ,இந்த
உலகத்தையும் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணம்........
(தொடரும்)