பக்கங்கள்

வெள்ளி, மே 13, 2016

ராஜா ரவிவர்மா



ரவிவர்மன் எழுதாத கலையோ?' என்று ஜேசுதாஸ் நேற்று ராத்திரி ஐபோனில் கொஞ்சிக் கொண்டிருக்க, நானறிந்த ரவிவர்மா சித்திரங்களை நினைவின் ஆழங்களில்தேடி துழாவியபடியே தூங்கிப்போனேன். விடிந்தும் கூட, ஜேசுதாஸின் சிணுங்கலும் ரவிவர்மாவின் நினைவும் விடவில்லை.

                                                   


ராஜா ரவி வர்மாவின் சித்திரங்கள் எனக்கு மழலை தெளியுமுன்னே பரிச்சயமாகி இருந்தது. தாத்தாவின் பூஜையறையில் கணபதிக்கு இடமும் வலமுமாக இருந்த லட்சுமியும ஸரஸ்வதியும் ரவிவர்மனின் கைவண்ணம். யாகுந்தேந்து என்று இன்றும்கூட கைதொழும்போது அந்த மலையாளத்திச்சி தான் வாணியாக மனதில் நிழலாடுவாள். பெரியகூடம் நெடுகிலும் வரிசைகட்டியிருந்த படங்களில் பலவும் ரவிவர்மன் எழுதின கலைதான்.
                               
                                      
மயிலமர்ந்த ஆறுமுக சுப்ரமணியரின் இருபுறமும், அவர் தொடைகளில் அபத்திரமாய் உட்கார்ந்திருந்த வள்ளிதேவானையர் விழுந்து விடுவார்களோ என்று விசனப்பட்டிருக்கிறேன். ஆகாயத்திலிருந்து விழும் கங்கையை தலையில் ஏற்கத் தயாராக,இடுப்பில் இருகையூன்றி புலித்தோலுடுத்து, தலைச்சடை விரித்தபடி, மேலே பார்க்கும் சிவன் ஞாபகம் வருகிறது. அவருடைய நான்கு கரங்களில் இருகரங்களால் தன் சூலாயுதத்தை தனக்குபின்னால் பிடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு ரிஷி சிவனை பார்த்தபடி இருப்பார். சிவனுடைய காளையின் முதுகில் கையூன்றியபடி சிவப்பு சேலையில் பார்வதி. என் பள்ளித்தோழன் கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஜாடையுடன் மார்த்துவ மாமிபோல் விசனத்துடன் பார்த்திருப்பாள். நிறம் பழுத்த படம். சமையற்கட்டு வாசலுக்குமுன் முண்டக்கட்டையாய் குழந்தை கிருஷ்ணன் யசோதைமுன் நின்றிருப்பார். பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு வரும். இப்படியா டிங்காவைக் காட்டிக் கொண்டு நிற்பான் இந்தக் கிருஷ்ண படவா?!

நினைவு தான் எவ்வளவு தெளிவாக இருக்கிறது? மீண்டும் மனசெல்லாம் நாங்கள் குடியிருந்த அந்த நாயுடு வீட்டுக்கூடம்தனில் படர்ந்திருக்கிறது. அந்தப்படங்களின் வரிசை, நடுவேயிருந்த இரண்டு முக்கோண மாடங்கள். ஒன்றில் மகாபெரியவர் படம்.ஒன்றில் சந்திரப்பிரபை போன்ற விபூதி சம்புடம்.... அதை 'விபூதி போட்' என்று அழைக்கும் தம்பி.... அடடா ! பதிவு ரவிவர்மா பற்றி அல்லவா?

ஓவியத்தில் ரசனை ஏற்பட்டு பின்னாளில் தேடித்தேடி சித்திரங்களில் மூழ்கிக் கிடந்த நாட்கள்.ஐரோப்பிய ஓவியங்களின் பரிச்சயம் ; சில ஓவியப் பித்தர்களின் நட்பு இவையெல்லாம் சித்திரங்களை பார்க்கும் கண்ணோட்டத்தையே மாற்றி அமைத்தன. வண்ணங்களின் கலவை, சித்தரிக்கப்படும் உடலின் பரிமாணங்கள், ஆகியவை ஒரு ஓவியத்தின் கலைநயத்தை தீர்மானிக்கின்றன. இந்திய ஓவியர்களில், மேனாட்டு சைத்தரீக முறைமையை,நம் கலாச்சார பண்டாட்டிற்கொப்ப பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ராஜாரவிவர்மா. வரைந்த காட்சியும் உருவங்களும் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் தோன்றும் நமது ஓவிய மரபில், அவரது முப்பரிமாண ஐரோப்பிய பாணி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளரின் உருவங்களையும் புராணக் காட்சிகளையும் வரைந்து தள்ளினார். அவற்றின் வணிக சாத்தியம் உணர்ந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்யும் ஏற்பாடுகள் வெற்றி கண்டன. கடந்த நூற்றாண்டு ஹிந்துக் குடும்பங்களில்,ரவிவர்மாவின் அச்சிடப்பட்ட கடவுளர் படங்கள் இல்லாத வீடே இருக்காது என்று ஆனது.

ராஜாரவிவர்மா 1848ல் கிளிமானூர் அரசகுடும்பத்தில் பிறந்தார். திருவனந்தபுரம் அரசவம்சத்துடன் தொடர்புள்ள குடும்பம் அவருடையது. கோயில் தம்புரான் என்றழைக்கப்பட்ட அவர்கள் திருவிதாங்கூர் ராஜவம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்றது. 'மறுமக்கத்தாயம்' எனும் தாய்வழி மரபுப்படி மாமன் ராஜராஜவர்மனின் ராஜா பட்டம் இவரை அடைந்தது. திருவனந்தபுரம் அரண்மனையில் ஓவியம் கற்றார். தஞ்சை ஓவியப்பாணியையும் முறையாகக் கற்றார். டச்சு ஓவிய அறிமுகமும், தைல ஓவியமுறையும்(oil painting) இவருக்கு அறிமுகமாகின. ரவிவர்மாவின் இளைய சகோதரர் ராஜராஜவர்மாவும் அவருடன் ஓவியக்கலையில் ஈடுபட்டார். ராஜா தீன்தயாள் என்ற புகழ்பெற்ற ஹைதராபாத் புகைப்படக்கலைஞருடைய நட்பும் பல காலம் நீடித்தது.

திருவனந்தபுரம் மஹாராஜா ஆயில்யம் திருநாள் ஆதரவுடன் இவரது ஓவியக்கலை பெயர்பெற்றது. பல சர்வதேச கண்காட்சிகளில் அவரது ஓவியங்கள் பங்குபெற்றன. பதக்கங்களை அள்ளின. விவேகானந்தர் பங்கேற்ற உலக மதங்களின் மகாசபையில் காட்சிப்படுத்த இவரின் சில ஓவியங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. . பல ராஜ வம்சத்தினர் மற்றும் பிரபுக்களை சித்திரமாய் தீட்டி பாராட்டுகள் பெற்றார்.

மைசூர் அரண்மனை,ஹைதராபாத் சலார் ஜங்க் மியூசியம் ,மும்பை ஆர்ட் சொஸைட்டி,சென்னை எழும்பூர் மியூசியம் ,புதுக்கோட்டை மியூசியம் ,பதேசிங்க் மஹாராஜா மியூசியம் பரோடா,கல்கத்தா விக்டோரியா மெமோரியல் ,தில்லி ரயில்வே மியூசியம், திருவனந்தபுரம் சித்ரா ஆர்ட் கேலரி மற்றும் பல தனியார் சேகரிப்புகளில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. இணையப் படங்களிலும், யூடியூப் தொகுப்புப் படங்களிலும் ரவிவர்மா நீக்கமற நிறைந்திருக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு நிராசையாகவே போயிற்று. கடல்தாண்டி பயணம் மேற்கொண்டால் அந்த நாட்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய சமூக நிராகரிப்புகளும், பயணம் போய் திரும்பிய பின்,கோவில்களுக்குள் நுழைய விதிக்கப்படும் தடைகளும் அவரைப் பின்வாங்கச் செய்தது.

பாரதத்தின் பல பிரதேசங்களுக்கும் பயணம் செய்தபடி இருந்தார். அந்நாளைய சமஸ்தானங்களுக்கு சென்று மன்னர்களையும் ராணிகளையும் பட்டத்து இளவல்களையும், மற்றும் ஆங்கிலேய பிரபுக்களையுமே வரைந்து தள்ளியிருக்கிறார். மிக சொற்ப நேர அளவே ஓவியம் தீட்ட எடுத்துக் கொள்வாராம்.



ஏறத்தாழ இரண்டாயிரம் ஓவியங்கள் வரை அவர் வரைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.மகாபாரதம், இராமயணக் காட்சிகள் , மற்றும் புராணகதைமாந்தர்கள் அவருடைய ஓவியங்களின் பரிமளித்தன. சாகுந்தலம் பற்றிய சில ஓவியங்கள், தூரிகை வனைந்த கவிதைகளாயின. அவர் வரைந்த பெண்களின் கண்களிலேயே சொல்ல வந்த உணர்ச்சியை விதைத்து வைத்தார். கடவுளரின் தனி ஓவியங்கள் அல்லாது, ரவிவர்மாவின் பிரபலமான ஓவியங்களில் சில:
ஶ்ரீகிருஷ்ணன் ராயபாரம்(தூது);
மதுக்குடுவை ஏந்திச் செல்லும் திரௌபதி;
காலில் குத்திய முள்ளை நீக்கும் சகுந்தலை; சந்தனுவும் மத்ச்யகந்தியும்
ருக்மாங்கதனும் மோகினியும்;
ஜூடித்;ஶ்ரீராமர் வருணபகவானை மிரட்டும் காட்சி ;
அன்னப்பறவை தூது;
விஸ்வாமித்திர்ர் மேனகையை ஏற்கமறுத்தல்;
நிலவொளியில் நங்கை;ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டும் காட்சி;
ஊஞ்சலாடும் மோகினி;
தந்தைக்கு இந்திரஜித்தின் காணிக்கை முதலியன.

எனினும் ஸ்வாமி விவேகானந்தருக்கு ரவிவர்மாவின் ஓவியங்களை பற்றி ஏதும் நல்ல அபிப்ராயம் இல்லை . அந்த ஓவியங்கள், இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடற்றவை என்ற கருத்தை ஸ்வாமிஜி சொல்லியிருந்தார். விநோதமாக, மகான் அரவிந்தரும் அதே போல மாறுபட்ட கருத்தைத்தான் ரவிவர்மாவின் கலைமீது வெளிப்படுத்தினார்.இந்திய ரசனையையும்,அதன் கலைப்பண்பாட்டையும் தரம்தாழ்த்தியவர் என்று குற்றம் சுமத்தினார்.

மனிதர்களை வரைந்த சித்திரங்களில், அந்த இடத்தின் சூழல், அணிந்த நகைகள், ஆடைகள், தரை,சுவர் என எல்லாவற்றிலும் விசேஷ கவனம் செலுத்தி நுணுக்கமாய் வரைந்தார். வரையப் பட்ட மனிதரின் முகம் மற்றும் உருவ அமைப்பிலும் தென்படக்கூடிய மாறுபாடுகளை சமன்செய்யும் உத்திபோலும்.

ஜனவரி 1905ல் சகோதரர் ராஜராஜ வர்மாவின் மறைவு ரவிவர்மாவை மிகவும் பாதித்தது . தன்னுடைய கலையிலும் பயணங்களிலும் உற்றதுணையாக நின்ற தம்பியின் மரணம் அவரை நிலைகுலையச் செய்துவிட்டது.

ரவிவர்மா சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். அந்தகாலத்தில் மதுமேகத்திற்கு சரியான மருத்துவ தீர்வுகள் இல்லாததாலும், இடைவிடாத பயணங்களாலும் சரியான உணவுமுறைகளை அவர் கைகொள்ளவில்லை. குற்றாலம் அருவியின் மூலிகை நீரும் காற்றும் அவர் நோயைத் தீர்க்கும் என நம்பினார். தமது கடைசிகாலத்தை அங்கேயே கழிக்க எண்ணி, குற்றாலத்துக்கு அருகேயுள்ள இலஞ்சியில் நிலமும் வாங்கினார். சர்க்கரை நோய் முற்றி அவர் முதுகில் ராஜப் பிளவை எனும் பல்வாய்ப்பிளவை உண்டாகி அல்லலுற்றார். அக்டாபர் 1906ல் அவர்தூரிகை ஓய்ந்தது.

எந்தக் கலைஞனுக்கும், அவன் மேற்கொள்ளும் கலைவடிவத்திற்கும், நோக்கத்திற்கும் ஒப்ப, போற்றுதலும் எதிர்மறை விமர்சனமும் உண்டாகும். ரவிவர்மாவும் கடும் விமரிசனத்திக்கு ஆளானவர். மேற்கத்திய பாணியைக் கைக்கொண்டு நமது பாரம்பரிய சித்திரக்கலையை சிதைத்துவிட்டார் என்றும், அரண்மனைக் கலைஞன் என்றும், சராசரிகளின் ஓவியன் என்றும் விமரிசனத்திற்கு உள்ளானார். எனினும் ஓவியக்கலையை சாதாரண மக்களும் ரசிக்கும் விதத்தில் அதை வெகுஜனக் கலையாக பரப்பினார் என்பதில் ஐயமில்லை. கடந்த நூறாண்டுகளில் வந்த தலைமுறைகள், இரவிவர்மாவின் ஓவியங்களை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது. சித்திரக்கலை ரசனையின் பாலபாடம் ரவிவர்மாவிலிருந்தே தொடங்குவதாய்க் கொள்ளலாம்.

                                                            
                                                                         (படங்கள்: நன்றியுடன் கூகிள், விக்கி)



94 கருத்துகள்:

  1. அவர் வரைந்த ஓவியங்களையே இன்றளவும் நாம் வணங்கி வருகிறோம். எவ்வளவு பெறிய பேறு அது. இறைவனின் ஆசி இல்லையேல் அது சாத்தியம் இல்லை. போற்றுதற்குரிய கலைஞன் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க...பெரிய...
      ......
      பெரிய..வுக்கு சின்ன "ர"வும் சிறிய..வுக்கு பெரிய "ற" வும்
      ...அழகிய முரண்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அவரின் கற்பனை மூலமே நாம் இறைவனின் உருவத்தைப்பார்க்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  4. போற்றுதலுக்கு உரிய கலைஞர்

    பதிலளிநீக்கு
  5. சிவா,
    அன்றைய வர்த்தக விளம்பரத்தில் காலண்டர்களின் பங்கு அளப்பரியது. கம்பெனியின் வசதிக்கேற்ப, அச்சிடப்படும் தாளின் தரமும் மாறுபடும். மிகப் பெரிய அளவிலான கேலண்டர்களும் வரும்.
    ரவிவர்மாவின் கடவுளர்கள் தவிர, சாகுந்தலக் காட்சிகள்,நிலவொளியில் பெண், ராணாபிரதாப் சிங்,சிவாஜி மகாராஜா ஓவியங்கள் அச்சிடப்பட்டன. அவருக்கு சொந்தமான லித்தோபிரஸ் மும்பை பூனாசாலையில் இருந்தது.

    ரவிவர்மா தவிர,ராஜுவின் ஓவியங்கள் இருந்தன. காந்தி, நேரு,பாரதி படங்களும், இயற்கைக் காட்சிகளும், அனைத்து தெய்வங்களும் பொதிந்த காமதேனுப் பசுவும், பல நிலைகளில் குழந்தைகளும், தாஜ்மகால்,செங்கோட்டை, மதுரை கோவில் கோபுரம் போன்றவைகளும், அழகிய பெண்கள் கண்ணாடி பார்த்துக் கொண்டோ கோலம் போட்டுக் கொண்டோ, குழந்தையைக் கொஞ்சிக் கொண்டோ காலண்டர்களில் காட்சியளித்தனர். மீராபாய் பல முகங்களுடனும் பல வண்ணங்களில் உடைகளுடனும் சலிக்கச்சலிக்க அச்சிடப்பட்டார். கருணாநிதி எம்ஜிஆர் வந்தனர்.நடிகையர் சிலரும் வந்தனர்.

    சுவரே தெரியாமல் காலண்டர் அடித்து மாட்டிய வீடுகளைக் கண்டிருக்கிறேன். எந்தக் கடைக்குப் போனாலும், காலண்டர் கேட்டு வாங்கி வருவது ஒரு தமிழ்ப்பண்பாடாகவே இருந்தது. ரசனையெல்லாம் அப்பால் தான்.
    காலண்டர்கள் புத்தக அட்டைப்படத்தில் உதவும். பீரோ,அலமாரிகளின் தட்டுகளில் விரிக்க உதவும். எங்கள் பாட்டி சிலமுறை தம்பிப்பிள்ளை பாப்பாவோட..... வேண்டாம்!

    பதிலளிநீக்கு
  6. சிவா,
    அழகிய முரண் தான் சமயங்களில் அழகு சேர்க்கிறது !

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் தனிமரம். நன்றி !

    பதிலளிநீக்கு
  8. நன்றி கரந்தையாரே !

    பதிலளிநீக்கு
  9. //ஸ்வாமி விவேகானந்தருக்கு ரவிவர்மாவின் ஓவியங்களை பற்றி ஏதும் நல்ல அபிப்ராயம் இல்லை . அந்த ஓவியங்கள், இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடற்றவை என்ற கருத்தை ஸ்வாமிஜி சொல்லியிருந்தார். விநோதமாக, மகான் அரவிந்தரும் அதே போல மாறுபட்ட கருத்தைத்தான் ரவிவர்மாவின் கலைமீது வெளிப்படுத்தினார்.இந்திய ரசனையையும்,அதன் கலைப்பண்பாட்டையும் தரம்தாழ்த்தியவர் என்று குற்றம் சுமத்தினார்.//


    அரவிந்தரும் விவேகானந்தரும் அப்படிச் சொல்லியா இருக்கிரார்கள் !!

    பரவா இல்லை.

    ஸ ஏகஹ விப்ரா பகுதா வதந்தி
    (He is One. Learned define him in many ways)

    எந்த பரப்ரும்மம் ஒன்றாய் பலவாய் உணரப்படுகிறதோ உருவாய் அருவாய் உள்வாங்கிக்கொள்ள ப்படுகிறதோ,

    எந்த பிரும்மன் எல்லாவற்றிலும் பரந்து இருக்கிறாரோ எவர் இல்லாமல் எதுவும் இல்லயோ,
    அந்த பிரும்மனை நாம் நமது வணங்குதுவற்கேப்ப ஒரு உருவத்தில், அது படமோ, மண்ணோ, உலோகமோ செய்து அதில் ஆவாஹனம் செய்து வழிபடுகிறோம்.

    பரம்பொருளாகிய பிரும்மன் மாயா ரஹிதம்.
    அவனே மாயா சஹிதம் ஆகும்போது ஈச்வரன் ஆகிறான்.

    அந்த ஈச்வரனை வினயகனாகவோ, கந்தனாகவோ, சிவனாகவோ, எந்த உருவத்திலும் வழி படலாம். நமக்கு எந்த உரு, எந்த குண அலங்காரம், சரி என்று படுகிறதோ அதைச் செய்யலாம் . வழி பட்டு முடிந்த உடன், அவனை யதாஸ்தானம் ஆவாஹயாமி என்று சொல்லி, எங்கு இருந்து வந்தாயோ அங்கேயே செல்ல சொல்கிறோம்.

    நம்மை ஈர்க்கும் எந்த உருவிலும் வர்ணத்திலும் ஆண்டவன் வருவான். மண்ணில் பிடித்து வைத்து சிவனை வழிபடலாம். மஞ்சளைப் பிடித்து வைத்து விநாயகனை வேண்டலாம்.

    ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம், சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி.

    எந்த பகவான் ,
    நீ எப்படி எந்த தெய்வத்தை வணங்கினாலும் அது என்னையே வந்தடைகிறது என்று தீர்மானமாக கண்ணனே கண்டிப்பா சொன்ன பிறகு,

    முகம் இப்படித்தான் இருக்கணும், நாலு கை லே இது அது இருக்கணும் என்று சொல்வது சாஸ்திர சம்மதம் இல்லை.

    மேலும் ரவி வர்மா ஒவியங்களை பார்க்கையிலே ஒரு ஓவியனின் கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.
    நீங்கள் குறிப்பிட்ட யாகுந்தேந்து துஷார ஹால தவளா
    எல்லோருக்கும் அருளாசி வழங்கிக்கொண்டு தானே இருக்கிறாள்.

    ஸ்லோகத்தை முழுசா எழுதி உங்கள் நடையிலே அர்த்தம் சொல்லுங்களேன்.


    இருந்தாலும், ஹாவிங் செட் தட்,
    விவேகானந்தா இஸ் கிரேட்.
    அரவிந்த் இஸ் ஈக்வலி ஸோ .

    சு தா.




    பதிலளிநீக்கு
  10. எத்தனை அழகாய் ஓவியங்கள். நம்மில் பலரது வீடுகளில் இருந்த இறைவன்/இறைவியர் படங்கள் அவரது ஓவியங்கள் தானே.....

    பல புதிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் குறிப்பிட்டுள்ள பல இடங்களில் ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். உயிர்ப்பான ஓவியங்களைப் படைத்த ஓர் அரிய கலைஞன்.

    பதிலளிநீக்கு
  12. இன்னா விஷயம் இருக்கு இந்த ரவி வர்மா படத்துலே !
    அரவிந்தரும் விவேகானந்தரும் ராங்கா சொல்றார்ங்க
    அப்படின்னு
    நானும் எல்லா படத்தையும் once more விலா வாரியா பார்த்தேன்.

    ஒண்ணு ரண்டு படத்துலே லேசா "சாண்டில்யன்" உள்ளே வரார்.
    ஒன்னு ரண்டுலே "சுஜாதா" "ஜெமோ" மனசு தெரியத்தான் செய்யுது.

    மோனா லிசா வே பின்னுக்கு போகும்படியா ஆஹா


    குட்டி கிருஷ்ணன் ஒரு படத்துலே... சீ..சீ..சீக்கிரம் மூடிக்கோ..என்று சத்தமாக சொல்லிவிட்டேன்.

    இன்னாங்க...அப்படின்னு ஒரு சவுண்ட் கேட்டது பாருங்க.

    வூட்டுக்காரி வர்றதுக்கு முன்னாடி டப் நு அந்த பக்கத்தை மூடிட்டேன்.
    ராம பட்டாபிஷேகப் படத்தை த தொறந்து வச்சுட்டு,

    ராமாய ராம பத்ராய ராமசந்த்ராய வேதசே

    அப்படின்னேன்.

    அது சரி. அந்த விஸ்வாமித்ரர் மேனகை ....!!

    இதெல்லாம் தப்பில்லையோ ....!!

    அப்பாதுரை சார் வாய்க்கு அவுல் கிடைச்ச மாதிரி னா இருக்கு !!

    சு தா.

    பதிலளிநீக்கு
  13. அழகான பெண்களை ரவிவர்மா ஓவியம் போல் என்று தான் சொல்வது வழக்கம் அந்தக் காலத்தில்.

    எங்கள் வீட்டிலும் ரவிவர்மா ஓவியங்கள் இருந்தன. சரஸ்வதி, கன்ணன் பாமா, ருக்மணியுடன் இருக்கும் காட்சி படங்கள் எல்லாம் இருந்தன. என் அத்தை வீட்டில் ராமன், லட்சுமணன் சீதையுடன் கானகத்தில் நடக்கும் காட்சி படம் அழகாய் இருந்தது.

    ரவிவர்மா கடைசி காலத்தைப்பற்றி அறிந்து கொண்டேன். நோயோடு போராடி இருப்பது அறிந்து வருத்தம் .

    பதிலளிநீக்கு
  14. சு.தா!
    //அரவிந்தரும் விவேகானந்தரும் அப்படிச் சொல்லியா இருக்கிரார்கள் !!//
    1892ல் சுவாமி விவேகானந்தர் ராஜா ரவிவர்மாவை பரோடாவில் சந்திக்கிறார். அவருடைய ஓவியங்களைப் பார்த்து அதில் சில குறைகளை சுட்டிக் காட்டுகிறார் ஸ்வாமிஜி. வியந்து போன ரவிவர்மா,”இதுவரை யாருமே சுட்டிக்காட்டாத குறைகளை சுட்டியிருக்கிறீர்கள்.இவ்வளவு நுட்பமான பார்வை கொண்ட நீங்கள் எப்போதேனும் ஓவியராக இருந்தீர்களா என்ன?” என்று கேட்கிறார்.
    “எனது குருவின் கிருபையால், சரஸ்வதி தேவி எனக்கு சற்று தாராளமாக அருளை வழங்கி விட்டாள்’’ என்று ஸ்வாமிஜி சிரித்தாராம் அவருடைய East and West எனும் நூலில்கூட ஸ்வாமிஜி ரவிவர்மாவின் சித்திரப் பாணியை விமரிசனம் செய்திருக்கிறார்.
    “ஒரு சித்திரத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது சொல்லவந்த அழகு,எங்கு பொதிந்திருக்கிறது என்று சொல்லிவிட இயலாது. சித்திரம் ரசிக்க பயிற்சி இல்லாத கண்கள், அதன் நுணுக்கமான தீற்றல்களையோ,கலவைகளின் நுட்பங்களையோ,ஓவியனின் மேதைமையையோ மெச்சி ரசிக்க இயலாது” என்கிறார் வேறொரு தருணத்தில்.
    ஐரோப்பியர்களை நகலெடுத்து சித்திரக்கலை வளர்த்தெடுத்தால் ஓரிரு ரவிவர்மாக்கள் தோன்றலாம்.ஆனால் அத்தகு கலைஞர்களைவிட வங்காளத்து ‘சால்’சித்திர ஓவியர்கள் மேலானவர்கள். ரவிவர்மா போன்ற ஓவியர்களின் கலை, நம் முகத்தை வெட்கி மறைத்துக்கொள்ள வைக்கிறது என்று சாடுகிறார்..
    விவேகானந்தரின் கலை பற்றிய முடிபுகள் ஆணித்தரமானவை. சித்திரங்கள் குறித்த அவர்தர்ப்பு எண்ணங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தினார்.
    அரவிந்தரோ கலைகள் தாத்பர்யம் சார்ந்தவை என்கிறார். அவை உள்ளொளியின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும் என்கிறார். மேற்கத்திய கலையுணர்வை சாடி இந்திய கலைப் பாரம்பரியத்தினை மேலாக சொல்கிறார். மரத்தை மரமாகவும் மனிதனை மனிதனாகவும் குதிரையை குதிரையாகவும் வரையாமல், ,உருக்குலைவு செய்து இயற்கையை நகலேடுக்காதவை இந்திய பாணி என்கிறார். வெளியில் காணும் புறத்தோற்றத்தை விடுத்து அக மெய்ம்மையை வெளிப்படுத்தும் இந்திய கலைபாணி என்று உயர்த்திப் பிடிக்கிறார்.

    பதிலளிநீக்கு
  15. சு.தா!

    உங்களுடைய 'ஒருவன் ஒருவன் முதலாளி!' கருத்தும் பிறவும் பொருத்தமானவை. நன்கு சொன்னீர்கள்.!

    //ஸ்லோகத்தை முழுசா எழுதி உங்கள் நடையிலே அர்த்தம் சொல்லுங்களேன். //
    சுலோகம் என்ன? அடுத்த பதிவாய் சரஸ்வதியைப் பற்றி எனக்குத் தெரிந்த கதையை சொல்கிறேன்.அப்போது ஸ்லோகங்களையும் விவாதிப்போம்.

    'ஆன்மீக வலைப்பூ' ஒண்ணு தொடங்கலாமா எனக் கேட்டேன். யாராவது 'தொடங்கு செல்லம்'னு சொன்னீங்களா?

    பதிலளிநீக்கு
  16. நன்றி வெங்கட் நாகராஜ் !

    பதிலளிநீக்கு
  17. முனைவர் ஜம்புலிங்கம் சார்!
    //உயிர்ப்பான ஓவியங்களைப் படைத்த ஓர் அரிய கலைஞன்//
    அழகாய் சொன்னீர்கள்!

    பதிலளிநீக்கு
  18. சு.தா!

    சாண்டில்யன் வராரா? ரவிவர்மா ஓவியங்களின் சிறப்பு கண்களின் வெளிப்பாடு. மேலும் அணிகலன்கள், விதானகள், தரை,விரிப்புகள், முதலியவற்றில் கூர்ந்த கவனம் செளுத்தியிருப்பார். அவருடைய ஸ்பெஷாலிடி பெண்கள் அணிந்திருக்கும் புடவைகள்.அவற்றின் வண்ணங்களும், கொசுவங்களும்,மடிப்புகளும் நுணுக்கமான சித்தரிப்புகள்.
    சாண்டில்யன் கதைகளுக்கு 'லதா' எனும் ஓவியரின் படங்கள் வரும்.கலையோருமையும் அழகும் இல்லாதவை அவை என்பதே என் கணிப்பு. வினு,மணியம், மணியம் செல்வன் ஆகியோரின் சித்திரங்களில் உள்ள மெருகும் நளினமும் இல்லாதவை. கனபரிமாணங்கள் மட்டும் போதுமா என்ன?

    பதிலளிநீக்கு
  19. கோமதி அரசுமேடம்,
    ரவிவர்மாவின் அந்திமக் காலம் வேதனை மிகுந்தது.

    பதிலளிநீக்கு


  20. //கலையோருமை//

    கலையோருமை//

    இன்னாயா சொல்றீக ?

    கலையோ எருமை ??

    கலை ஓர் உமை ??

    ஊஹும்...புரிய இல்லா.
    இன்னா அர்த்தம் ?

    தமிழ் இலக்கிய உலகில்
    புதுசு புதுசா வார்த்தைகள் கண்டுபிடிப்பதில்,
    நீர் ஒரு
    கொலம்பஸ்

    அது கிடக்கட்டும்
    //சித்தரிப்புகள்.
    சாண்டில்யன் கதைகளுக்கு 'லதா' எனும் ஓவியரின் படங்கள் வரும்.கலையோருமையும் அழகும் இல்லாதவை அவை என்பதே என் கணிப்பு. வினு,மணியம், மணியம் செல்வன் ஆகியோரின் சித்திரங்களில் உள்ள மெருகும் நளினமும் இல்லாதவை. //

    கனபரிமாணங்கள் மட்டும் போதுமா என்ன?.//

    சாண்டில்யன் வர்றாரு அப்படின்னு சொன்னா, நீங்க சாண்டில்யன் கதைகளுக்கு லதா என்னும் ஓவியரின் படங்கள் பற்றி சொல்றீங்க.

    நான் சொல்ல வந்தது:

    சாண்டில்யன் மனசுலே அழகு அப்படின்னா என்ன அப்படின்னு ஒரு கான்செப்ட் இருக்குதுல்ல !

    அது ரா. ர. வ. சித்திரத்திலே சிதறிக்கிடக்குதய்யா......

    நான் சில படங்களை இங்கே போடட்டுமா ?

    பதிலளிநீக்கு
  21. சு.தா!
    'கலையொருமை' என்பது தட்டச்சும்போது தவறாய்ப் போனது. சரியா?
    நீங்கள் சாண்டில்யன் வருவதாய் சொன்னது புரிந்தது தான். அதில் சொல்ல ஏதுமில்லை.
    ஓவியம் சார்ந்த பதிவாகையால் அவர் கதைகளுக்கு வரைந்த 'லதா' வரைந்ததை சொன்னேன்.
    படங்களை வெளியிடுவதில் காப்புரிமை சிக்கல்கள் ஏதும் எழலாம் என்பதால், போட வேண்டாம் சு.தா !

    பதிலளிநீக்கு
  22. கலையொருமை//

    கலையொருமை ??


    ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்

    அந்த ஒருமையா ?

    மனசு வேறு எங்கும் செல்லாமல் இருப்பது
    என்பது என நினைக்கிறேன்.

    கலை ஒருமை என்றால்
    கலைக் கண் கொண்டு மட்டும் பார்ப்பது என்று பொருளோ ??

    யூரேகா...யூரேகா....

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  23. ரவிவர்மா வரையாத கலையோ?' என்று மாற்றிப் பாடிப் பார்த்தேன்.

    'எழுதாத'க்கு 'வரையா'த இன்னும் கொஞ்சம் கூடுதல் அர்த்தத்தைக் கொடுத்தது உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  24. //மயிலமர்ந்த ஆறுமுக சுப்ரமணியரின் இருபுறமும், அவர் தொடைகளில் அபத்திரமாய் உட்கார்ந்திருந்த வள்ளிதேவானையர் விழுந்து விடுவார்களோ என்று விசனப்பட்டிருக்கிறேன். //

    அந்த அபத்திரத்தை அந்தச் சித்திரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நானும் உண்ர்ந்ததுண்டு.

    மயில், பாம்பு, தேவியர் இருவர், தாங்கும் நிலம்--நீர், காற்று, அண்டசராசரங்கள் அத்தனையுமே அந்த முருகனின் அம்சம் தானே என்று தேற்றிக் கொண்டு அபத்திர அஞ்ஞானத்தை விட்டொழிப்பேன். 'காக்க, காக்க க்திர்வேல் காக்க' என்று கந்தனின் வேலிருக்க, பயமேன்?.. அபயம்! அபத்திரம், அபயத்தில் அடங்கி இரு எதிர்மறை ஓர் நேர்மறையாகும் அதிசய அங்கே நடக்கும்!

    பதிலளிநீக்கு
  25. என் பாட்டி வீட்டில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சீதனமாக ரவிவர்மாவின் படங்கள் கொடுக்கப்பட்டன. அந்த வகையில் அம்மாவிடமும் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகனுடன் ரிஷபத்தில் அமர்ந்திருக்கும் படமும், லக்ஷ்மி, சரஸ்வதி படங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. நான் கல்யாணம் ஆகி வரச்சே அதைத் தான் முக்கியமாக் கேட்டேன். அப்பா கொடுக்க மறுத்துட்டார். இப்போ அந்தப் படங்கள் என்ன ஆயிற்றென்றே தெரியலை! ரவிவர்மா ஒரிஜினல் அந்தக்காலத்துப் பணக்காரங்க வீடுகளில் பார்க்கலாம். அப்படி நிறையப் பார்த்திருக்கேன். என்றாலும் கொண்டைய ராஜூ கவர்ந்த மாதிரி ரவிவர்மா கவர்ந்ததில்லை! :)

    பதிலளிநீக்கு
  26. //இப்படியா டிங்காவைக் காட்டிக் கொண்டு நிற்பான் இந்தக் கிருஷ்ண படவா?!//

    அருமையான வர்ணனை! இந்த ஜெமோ வகையறாகளுக்கு இப்படி மறைத்து எழுதும் சாகசங்கள் தெரியவில்லையே! மறைத்து எழுதியதால் ஒன்றும் சொல்ல வந்தது, தெரியாமல் போய் விடவில்லை! இருந்தும் அதென்ன சிவப்பாய் மறைத்து எழுதுவது, பச்சையாய் நேரிடையாய் எழுதுவதில் இருக்கும் 'கிக்' மறைத்து எழுதுவதில் இல்லை என்று நினைக்கிறார்களோ?.. இல்லை, மறைத்து எழுதுவதையே நிஜத்தை தரிசிப்பதற்கு ஒரு மாத்திரை குறைச்சல் என்று நினைக்கிறார்களோ?

    என்ன இருந்தாலும் நேரிடையாய் சொல்வதில் இல்லாத ஒரு அழகு மறைப்பதில் இருக்கத்தான் இருக்கிறது என்பதால் அதற்கே என் ஓட்டு!

    ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்: 'நகில்' என்ற சொல்லில் மறைத்தலை களைந்து அது என்ன என்று அர்த்தம் தேடிப் பார்க்கிற சுவாரஸ்யமும் ஒரு கூடுதல் த்ரில், இல்லையா?.. என்ன சொல்கிறீர்கள்?..

    பதிலளிநீக்கு
  27. சு.தா!
    மனதின் அழகு கொண்டு புத்தி பலசமயங்களில் அர்த்தம் தேடிக் கொள்கிறது. நீங்கள் கொள்ளும் அர்த்தங்களும் அழகாகவே இருக்கிறது. அப்படியே இருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  28. இப்படியா டிங்காவைக் காட்டிக் கொண்டு நிற்பான் இந்தக் கிருஷ்ண படவா?///

    அதுவும் அம்மாவுக்கு முன்னாடி.

    ஏண்டா படவா நீயே அப்படி நின்னு இருக்கியே ! எனக்கு உபதேசம் பண்ண வந்துட்டியே...முதல்லே நீ என்ன செஞ்சே எப்படி நின்னே.அதை நியாபகப் படுத்திக்கொள் என்று

    அன்னிக்கு துரியோதனன் கண்ணன் கிட்ட சொல்லி இருந்தார் நா
    மகா பாரதம் வேற ரூட் லே போயிருக்குமோ ?

    எந்த இடத்துலே துரியோதனன் கிட்ட கிருஷ்ணன் சொன்னார் அப்படிங்கறது எல்லாம் கீதா அம்மாவுக்கு கரெக்டா தெரியும். நான் சொல்லணும் அப்படிச்ங்கறது இல்ல.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  29. ரவிவர்மா -- கெண்டய ராஜூ... ஒரு ஒப்பாயவு?..

    இரண்டு பேருமே அசகாய சூரர்கள் தாம்!

    இருந்தாலும் கேரள மழமழப்பு கூடிய நிஜ மாதர் முகங்களை, அங்க லாவண்ய இலட்சணங்களை தத்ரூபமாய் வண்ணத்த்தில் குழைத்துத் தந்தவர் ரவிவர்மா! தெய்வத்தில் மனிதரைப் பார்த்தவர். அத்வைத சிந்தனை?...

    பின்னவரோ, தெய்வ சொரூபங்களை தெய்வ ரூப இலக்கண இலட்சணங்களீலேயே பார்த்தவரி. மனிதன் வேறு-- தெய்வம் வேறு என்று விலக்கிப் பார்த்தவர். துவைதப் பார்வை?..

    பதிலளிநீக்கு
  30. //ரவிவர்மாவின் இளைய சகோதரர் ராஜராஜவர்மாவும் அவருடன் ஓவியக்கலையில் ஈடுபட்டார்..//

    தெரிந்திராத செய்தி.. அப்போ, பதிவின் தலைப்பு?..

    பதிலளிநீக்கு
  31. //தெரிந்திராத செய்தி.. அப்போ, பதிவின் தலைப்பு?..//

    ஒகோ.. இளைய சகோதரர் ராஜ் ராஜ ... ரெண்டு ராஜ! புரிந்தது..

    பதிலளிநீக்கு
  32. உண்மை தான்! சித்ர சகோதர்கள் மறக்கவே முடியாதவர்கள் தாம்!

    இரண்டு பேரின் சித்திரங்களும் சந்தைக்கு வந்தனவா?..

    இரண்டு பேர்களின் ஓவியங்களில் வித்தியாசப்படுத்திப் பார்க்கிற மாத்ரி ஏதாவது சின்ன மாற்றம் இருந்ததா?

    அல்லது ஓவியத்தின் கீழே வரைந்தவரின் பெயர் பார்த்துத் தான் இன்னார் வரைந்ததுஇ என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

    கொண்டைய ராஜூ... ஆங்கிலத்தில் தான் கையொப்பம் இட்டிருப்பார்.

    இவர்?..

    பதிலளிநீக்கு
  33. ஜீவி சார்!

    தமிழில் வரைதல், எழுதுதல்,தீட்டுதல் போன்ற பதங்களை ஒன்றிற்கொன்று மாற்றாக பயன்படுத்துவதுண்டல்லவா?

    'மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்' என்று ஆண்டாள் தீட்டுதலை எழுதல் என்றாள்.

    'செம்பாற் செய்தாற் றொத்த செவ்விய சுவர்களை சித்திரம் எழுதி'என்று நச்சினார்கினியர் மாங்குடி மருதனாரின் பாண்டியன் சித்திரமாட விவரிப்புக்கு உரை சொல்கிறார்.

    'எழுபுவனம் கடந்து நின்ற ஒருவன் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே' என்று உமையைப் பாடும் குமரகுருபரர் உயிரோவியத்தை எழுதிதான் பார்த்திருக்கிறார்.

    மாத்தியோசிப்பது தானே கவிஞர் தொழில் ஜீவி சார்?!

    பதிலளிநீக்கு
  34. ஜீவி சார்!
    //இரு எதிர்மறை ஓர் நேர்மறையாகும் அதிசய அங்கே நடக்கும்//
    மிக ரசித்து சொல்லியிருக்கிறீர்கள். கெளமாரத்தின் தத்துவ விளக்கம்தான் என்ன ஆழ்ந்ததோர் அதிசயம்!

    பதிலளிநீக்கு
  35. கீதா அக்கா!
    ஒரு தலைமுறை தனது ரசிப்பில் சேகரித்து வைத்தது அடுத்த தலைமுறைக்கு பொருளிழந்து போகிறது. வீடுகள் மாறும் போதோ, கழித்துக்கட்டும் போதோ அப்படிப்பட்ட சேகரிப்புகள் ஒதுக்கப் படுகின்றன. பழைய புத்தகங்கள், படங்கள் இப்படி மறைந்து போவது சோகம்.

    கொண்டைய ராஜுவின் ஓவியங்களை சரியாக நினைவு கூர்ந்தீர்கள் . சிவகாசியில் அச்சான காலண்டர்களில் கொண்டைய ராஜு, மீனாட்சி சுந்தரம்,சுப்பையா முதலியோரின் தென்னக தெய்வங்கள் இடம் பெற்றனர்.மீனாட்சி திருக்கல்யாணமும், முருகனும் கொ.ராஜுவின் பெயர் சொல்லிக்கொண்டிருக்கும்

    பதிலளிநீக்கு
  36. //தெய்வத்தில் மனிதரைப் பார்த்தவர். அத்வைத சிந்தனை?...//

    மனிதருள் தெய்வத்தைப் பார்த்தவர்.என்று இருக்கணுமோ ?

    அது சரி.

    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

    பல வீடுகளில் பல மாமியார்கள் அந்தக் காலத்துலேந்து இந்தக் காலம் வரைக்கும் புதுசா மருமகள் வீட்டுக்குள்ளே கால் எடுத்து வைக்கும்போது,

    அப்படியே ரவி வர்மா வோட மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கா என் மாட்டுப்பொண்ணு அப்படின்னு சொல்லிக் கேட்டதில்லையா என்ன ?

    ஆனா, போகப்போகத் தான்,

    மஹாலக்ஷ்மி மாகாளியாகி, பின்னே பிரத்யங்கரா தேவி ஆயிடரா..
    காளியை வர்மா வரைஞ்சுருக்காரா அப்படின்னு பார்க்கணும்.

    சுதா.

    பதிலளிநீக்கு
  37. அத்வைத வேதாந்தங்களுக்கு சங்கரர் பாஷ்யம் எழுதினாப்போல, மோகன் ஜி சாரோட எழுத்துக்கேல்ல்லாம் ஜீவி சார் பாஷ்யம் எழுதினப்பின்னே தான் புரியறது.

    சுப்பு தாத்தா இண்டீட் ஒரு ம. ம.

    பதிலளிநீக்கு
  38. அண்மையில் நாம் படைத்த கடவுள்கள் என்னும் பதிவு ஒன்று எழுதி இருந்தேன் அதில் ஒரு பின்னூட்டம் கடவுளரின் உருவங்களுக்கு ரவி வர்மா முன்னோடியோ என்னும் கருத்தில் இருந்தது பாமா ருக்மிணியுடன் கிருஷ்ணனை ரவிவர்மா ஓவியப்படி நான் தஞ்சாவூர் ஓவியமாகத் தீட்டி இருந்தேன் நண்பர் ஒருவருக்குக் கொடுத்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  39. ஜீவி சார்!
    //என்ன இருந்தாலும் நேரிடையாய் சொல்வதில் இல்லாத ஒரு அழகு மறைப்பதில் இருக்கத்தான் இருக்கிறது //

    உண்மைதான். மறைத்து வைத்ததில் என் தேடலும்,யூகமும்,கேட்டிக்காரத்தனத்திற்கும் இடம் இருக்கிறது. என் கற்பனைக்கு அங்கே வானம் விரிகிறது. சமயத்தில், மறைபொருளுடைய அழகைவிடவும் பேரழகை கண்டுணரும் சாத்தியம் இருக்கிறது.

    இடக்கரடக்கல் பயன்பாட்டில்கூட கற்பனையின்வளத்தை கூட்ட வைக்கிறதே!

    'நகில்'....
    ரசனக்கார ஜீவி சார்! திருச்செந்தூர் திருப்புகழை நினைவு படுத்தி விட்டீர்கள்.

    சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
    சிந்து பயமயிலு மயில்வீரா!

    அப்பாதுரை வந்தா.... எனக்கு இருக்கு மண்டகப்படி!

    பதிலளிநீக்கு
  40. //இப்படியா டிங்காவைக் காட்டிக் கொண்டு நிற்பான் இந்தக் கிருஷ்ண படவா?//

    இந்த எளிமையான நம்ம வீட்டுப் பேரனைச் சொல்வது போன்ற வரி என்னையும் கவர்ந்தது. அதைச் சொல்ல விட்டுப் போயிருக்கு. ஜீவி சார் சொன்னாப்போல் ரவிவர்மாவின் ஓவியங்கள் யாரோ, எங்கேயோ வாழும் பெண்ணும், ஆணும் என்னும் உணர்ச்சி தோன்றத் தான் செய்யும். கொண்டையராஜுவின் சுவாமி படங்களைப் பார்த்தால் மனதில் பக்தி தலை தூக்கும். ரவிவர்மாவின் சகுந்தலையின் முக ஜாடையே அவரோட சீதைக்கும் இருக்கும்! ஆனாலும் ஜடாயுவும் ராவணனும் சண்டை போடும் அந்தக் குறிப்பிட்ட ஓவியம் அருமை தான்! நேரிலே பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. மற்றபடி உங்களைப் போல் மற்ற வெளிநாட்டு ஓவியங்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியாது! என்றாலும் விவேகானந்தர் சொல்லி இருப்பது சரிதான் என்றும் நினைக்கிறேன். உங்கள் ஆழமான படிப்பறிவு குறித்து ஆச்சரியமாவும் இருக்கு. இப்போ எனக்குப் படிக்கிறதே குறைந்து கொண்டு வருகிறது! :( அதனாலோ என்னமோ சொல்லத் தெரியாததொரு சோர்வு! :)

    பதிலளிநீக்கு
  41. //எந்த இடத்துலே துரியோதனன் கிட்ட கிருஷ்ணன் சொன்னார் அப்படிங்கறது எல்லாம் கீதா அம்மாவுக்கு கரெக்டா தெரியும். நான் சொல்லணும் அப்படிச்ங்கறது இல்ல//

    சு.தா. எல்லோருக்குமே தெரிஞ்சது தானே அது! நான் வந்து சொல்லணுமா என்ன? :)

    பதிலளிநீக்கு
  42. சு.தா!
    //ஏண்டா படவா நீயே அப்படி நின்னு இருக்கியே !//

    ஒருமுறை கண்கள் இழந்த சுர்தாசரை கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.எந்நேரமும் கிருஷ்ண தரிசனத்திலே அவர் ஆழ்ந்திருப்பது உண்மைதானா என்று சோதிக்க, அவரை கிருஷ்ண விக்ரகம் முன்பு நிறுத்தினர். பகவானின் ஆடையணிகளை முற்றும் விளக்கி விட்டனர்.
    பிறகு சுர்தாசரை, 'இன்று கிருஷ்ணனுக்கு என்ன அலங்காரம் சொல்லும்?' என வினவ,
    அவரும் 'இன்று அவன் பிறந்த மேனி பெம்மான்' என்றாராம்!

    கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்.
    கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்.

    பதிலளிநீக்கு
  43. ஜீவி சார்!
    //ரவிவர்மா -- கொண்டய ராஜூ... ஒரு ஒப்பாயவு?..//
    நன்றாகச் சொன்னீர்கள்!

    ரவி வர்மா பல மாநிலத்து அழகிகளையும் மாடல்களாக்கி வரைந்திருக்கிறார். அந்த வித்தியாசங்கள் நன்கு புலப்படும். தேவிகளை அவர் வரைந்தபோது மலையாள,குறிப்பாக நாயர் குல நாரீமணிகளின் ஜாடை இருப்பதுபோல் எனக்குப் படும். பல ஆளையே அசத்தும் ஓவியங்கள்.
    கொண்டைய ராஜு லயிப்பை ஏற்ப்படுத்தும் கச்சிதத்தின் வெளிப்பாடு.
    இன்னும் எப்படிச் சொல்ல?? ரவிவர்மா நந்தினி: கொண்டைய ராஜு குந்தவை!

    பதிலளிநீக்கு
  44. ஜீ.வி சார்!

    // இளைய சகோதரர் ராஜராஜவர்மாவும் அவருடன் ஓவியக்கலையில் ஈடுபட்டார்..//

    ராமனுக்கு லட்சுமணன் போலே தான் தம்பி இருந்திருக்கிறார். பல ஓவியங்களிலும் முதலில் அவருடைய பெயர் இல்லாமல் ரவிவர்மா பெயரோடு மட்டும் தான் ஓவியங்கள் வந்தன. பின்னாட்களில் தான் இருவர் பெயரும் சேர்ந்து வந்தன.

    எங்களூர் ஹுசைன் சாகர் ராஜராஜ வர்மாவின் கைவண்ணம்.

    ரவிவர்மா பெயரின்முன் உள்ள 'ராஜா'அவருடைய ராஜவம்ச அடையாளம். மாமன் வழி வந்தது.

    பதிலளிநீக்கு
  45. அண்மையில் நாம் படைத்த கடவுள்கள் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதில் வந்த பின்னூட்டம் ஒன்றில் கடவுளர்களின் உருவங்களுக்கு ரவிவர்மா முன்னோடியோ என்னும் கருத்தில் இருந்தது
    பாமா ருக்மிணியுடனான கிருஷ்ணர் படத்தை ரவிவர்மா பாணியில் ஒரு தஞ்சாவூர் ஓவியம் தீட்டி இருந்தேன் அதை என் வீட்டுக்கு விஜயம் செய்த வலை நண்பர் ஒருவருக்குக் கொடுத்தேன்

    பதிலளிநீக்கு
  46. ஜி.வி சார்!

    ரவி வர்மா சகோதரர்களின் விவரப்கள் முழுவதும் ராஜராஜ வர்மா எழுதிய டயரி குறிப்புகளில் இருந்துத்தான்.உண்மையில் இருவரையும் பிரித்து சொல்ல இயலாதபடி இணைந்தே பணியாற்றி இருக்கிறார்கள்.

    கிளி ஏந்திய நங்கை,மார்வாரி பெண்,மட்டும் சில சமஸ்த்தான ராஜ குடும்ப ஓவியங்கள் அவர் பெயரில் இருக்கிறது.

    தம்பியுடையான் தூரிகைக்கஞ்சான்!

    பதிலளிநீக்கு
  47. கேட்டபடி கண்ணன் வந்தான்.//

    புரியறது.புரியறது !!!

    கண்ணனோட திருமேனி யை சூர்தாஸ் நினைச்சாரா ?
    He could have only thought about Him.
    எப்படி பாடினாரோ !!

    नेननमें लागि रहै गोपाळ नेननमें ॥ध्रु०॥
    मैं जमुना जल भरन जात रही भर लाई जंजाल ॥ने०॥१॥
    रुनक झुनक पग नेपुर बाजे चाल चलत गजराज ॥ने०॥२॥
    जमुनाके नीर तीर धेनु चरावे संग लखो लिये ग्वाल ॥ने०॥३॥
    बिन देखे मोही कल न परत है निसदिन रहत बिहाल ॥ने०॥४॥
    लोक लाज कुलकी मरजादा निपट भ्रमका जाल ॥ने०॥५॥
    वृंदाबनमें रास रचो है सहस्त्र गोपि एक लाल ॥ने०॥६॥
    मोर मुगुट पितांबर सोभे गले वैजयंती माल ॥ने०॥७॥
    शंख चक्र गदा पद्म विराजे वांके नयन बिसाल ॥ने०॥८॥
    सुरदास हरिको रूप निहारे चिरंजीव रहो नंद लाल ॥ने०॥९


    மோகன்ஜி சுவாமிகளே !!
    சும்மா சொல்லக்கூடாது.
    சூர்தாஸ் சொன்னதை அப்படியே அப்படியே
    வரைஞ்சு இருக்கார் வர்மா சார்.

    அந்த பொல்லாத கண்ணனை பார்க்கவே வேணாமாம்.சூர்தாசூக்கு.
    அவன் தான் என் கண்ணுக்குள்ளே இருக்கானே என்கிறார்.

    இதுன்னா கவிதை.!!
    இதுன்னா காவியம் !!

    சுதா.

    பதிலளிநீக்கு
  48. சு.தா!
    //மஹாலக்ஷ்மி மாகாளியாகி...//

    அப்பிடி போடுங்க...

    மகாலட்சுமியை சாந்தமாக வரைந்திருப்பார். தாயாருடைய முகம் கொஞ்சம் மலையாள ஜாடை இருந்தாலும், அவளின் சிவப்பு புடவை கட்டியிருக்கும் விதமும் அதன் முந்தானை சரிவும்,'எங்க பக்கத்துக் கட்டு' என்று எல்லா மாநிலமும் உரிமை கொண்டாடும் விதமாய் பொதுத்தன்மை வாய்ந்தது. மகாகாளியை நீலநிறத்தில் மண்டையோட்டு மாலையோடு வரைந்தும் இருக்கிறார். எங்காத்து மகாலட்சுமி காளியாவதற்கு முன்னேமே பரிகார பூஜையெல்லாம் பண்ணி விடுவேன்.

    பதிலளிநீக்கு
  49. சுதா!
    //மோகன் ஜி சாரோட எழுத்துக்கேல்ல்லாம் ஜீவி சார் பாஷ்யம் எழுதினப்பின்னே தான் புரியறது//

    வாரிவிட்டுட்டீன்களே! ஜீவி பரிமேலழகன் உரைக்கு குரல் எழுதுற திருவள்ளுவர்!

    அது சரி! சுப்பு தாத்தா ம.ம.ன்னா என்ன அர்த்தம் மகாயோகி மண்டனமிஸ்ரரா?!

    பதிலளிநீக்கு
  50. GMB சார்! ஓவியம் கவிதை, கதை,சமையல் என சகலத்திலும் விளையாடுகிறீர்களே?! உங்கள் தஞ்சை ஓவியங்களை பதிவிட்டிருக்கிறீர்களா? இருந்தால் சுட்டி கொடுங்களேன்? ரசிப்போமே!

    பதிலளிநீக்கு
  51. கீதாக்கா!

    ரவிவர்மா பிரம்மாண்டம்! அவருடைய வரைஓவியங்களை பதிவில் குறிப்பிட்ட மியூசியங்களில் காணும்போது, பல ஓவியங்கள் அசரடிக்கும் கலை படைப்புகளே. கொ.ராஜு பெரும்பாலும் காலண்டர் கடவுளரை வரைந்தவர். ஜீவி சார் அழகாக சொல்லியிருந்தார். ஜீவகளை ததும்பும் முகங்கள் ராஜுவின் கடவுளருக்கு.

    என் அப்பாவைப் பெற்ற அம்மா (பாட்டி), வீட்டில்கூட பட்டுதான் கட்டுவார். நறுவீசாக காரியங்கள் செய்வார். அவருக்கு உள்ளங்கை ஈரம் பண்ணிக் கொள்ளாத யோகமிருந்தது . என் அம்மா ஊர்பட்ட வேலைகளை செய்துகொண்டு சிரித்துக்கொண்டே நெற்றிவேர்வையை புறங்கையால் துடைத்துக் கொள்வாள். பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும் முகம் அம்மாவுக்கு. 'ரவிவர்மா பாட்டி. ராஜு அம்மா' என்று தோணுதுக்கா !

    பதிலளிநீக்கு
  52. சுதா!

    ஆஹா! சூர்தாஸ் வரிகளுக்கு நன்றி!
    கிழக்கைப் பார்த்து நில்லும்! நமஸ்காரம் பண்ணிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  53. /என்ன அர்த்தம் மகாயோகி மண்டனமிஸ்ரரா?!//

    ஒரு மகா மடையனை மண்டன மிச்ரன் என்று சொன்னால்
    சிரிப்புத்தான் வருகுதைய்யா !!

    இருந்தாலும் ஒன்னு சொல்லணும்.
    அன்னிக்கு, மண்டன மிஸ்ரர் விவாதத்துலே சங்கரர் கிட்டே தோற்று ப்போகல்லே அப்படின்னா,

    அம்ருகம் என்ற அற்புதமான காமக் கலைநூலை அமருகன் சரீரத்தில் இருந்து சங்கரர் எழுதி இருக்க முடியாது. திரும்பவும் தன்னோட உடல்லே திரும்பி வந்து சரசவாணி (அதுதான் மிசர்ஸ் மண்டன மிஸ்ரர்) கிட்ட வந்து வாதத்தை தொடங்கி ஜெயிச்சு இருக்கமுடியாது.
    காதலுக்கு முன் காமம் பொருள் இல்லை என (சூளுரைக்கும் நூல் அம்ருகம் ஆகும்.

    தர்ம அர்த்த காமம் தாண்டி, மோக்ஷ மார்க்கத்தை செல்லும்போது சங்கரர் கூட ம ம . வரார். சரஸ்வதியும் கூடவே பின்னாடி வருகையிலே சரஸ்வதி தேவியை தன மந்திர சக்தியால் கட்டி வணதுர்க்கையாக
    நிறுத்தினார் சங்கரர்.அந்த சங்கரருக்கு இந்திரனையும் பணியச் செய்த பெருமை வந்தது சரஸ்வதி தேவையை வென்று. அதனால் தான், அவர் ஸ்தாபித்த மடம் காம கோடி மடம் எனவும் பெயர் பெற்றது.
    இன்னொரு விஷயமும் இருக்கு. சிவாம்சம் சங்கரர். அவர் இந்திரன் கர்வத்தை அடக்கவே இந்த விவாதம் மண்டன மிச்ரரோட என்றும் சொல்லுவா. மண்டன என்றால் புகழ். மிஸ்ரா என்றால் கலந்த என்றும் பொருள்.
    தலைக்குள் புகழ் கலந்து இருக்கிறது என்றால், கொஞ்சம் ஹெட் வைட் . அதுனாலே சங்கரர் காலா காலத்துலே வந்து அவர் தலைலே ஒரு குட்டு குட்டினார். A whack on his Head !

    நானும் அப்பப்ப குட்டு வாங்கிக்கறேன் அப்படிங்கறது .
    வாஸ்தவம். ஆனால் நான் ம.ம. ஆக முடியுமோ ?

    சுதா.

    மண்டன மிஸ்ரர் பற்றி இன்னும் இருக்கு.



    பதிலளிநீக்கு
  54. சு.தா!
    ஆஹாஹா!!

    நமஸ்காரம் எண் 2

    ம.ம. வைப் பற்றி தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  55. //இன்னும் எப்படிச் சொல்ல?? ரவிவர்மா நந்தினி: கொண்டைய ராஜு குந்தவை!//

    ஆஹா.. அற்புதமாக உங்கள் உள் உணர்வு செயல்பட்ட தருணம்!

    நம் எல்லோருக்கும் உணர்வாகிப் போன ஒன்றை வைத்து இன்னொன்றை விளக்குவது... இப்பொழுதெல்லாம் இவ்வாறான கலந்துரையாடல்கள் மனசுக்கு மிகவும் இதமாக இருக்கின்றன. உங்கள் கலை சார்ந்த ரசனைகளுக்கு ஒரு ஜே!

    மாதவி-- கண்ணகி?.. வேண்டாம், அதை விட நந்தினி--குந்தவை தான் அட்டகாசம்!..

    மாதவி ரசிகர்களைப் போலவே நந்தினி ரசிகர்களும் இருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?..

    மணியம் நந்தினிக்குப் போட்ட பிரிமணை சுத்தின மாதிரியான அந்த கொண்டை அழகும், வட்ட முகமும் போதுமே!.. ( வதனமே, சந்திர பிம்பமோ?..!தியாகராஜ பாகவதர் வேறே நடுவில் குறுக்கிடுகிறார்! சுதாவுக்கு ஒரு இழை கொடுத்தாச்சு!) குந்தவைக்குத் தான் கோபுர உச்சி மாதிரி உயரத் தூக்கி முடிந்து விட்டிருந்தார்!

    பதிலளிநீக்கு
  56. //என் அம்மா ஊர்பட்ட வேலைகளை செய்துகொண்டு சிரித்துக்கொண்டே நெற்றிவேர்வையை புறங்கையால் துடைத்துக் கொள்வாள்.//

    நெற்றி வேர்வையைத் துடைத்துக் கொண்டே படிச்சேன்! குந்தவை, நந்தினி ஒப்பீடு பிரமாதம் தான். நந்தினியையும் மறக்க முடியாது. குந்தவையையும் மறக்க முடியாது. நம்மோட ஐக்கியம் ஆயிட்டாங்களே! ஆனால் நந்தினி, குந்தவை இருவருமே மணியம் வரைஞ்ச நந்தினியும், குந்தவையும் தான் எடுத்துக்கணும். செரியா? அப்புறமா வரைஞ்ச வினு, பத்மவாசன் எல்லாம் கிடையாது! பூங்குழலியும், வானதியும் கூட வைச்சுக்கலாம். காட்டில் பூத்திருக்கும் மலர் போன்ற பூங்குழலியும் வீட்டுத் தோட்டத்தில் பந்தலில் பூத்த மல்லிகை போன்ற வானதியும்னு கூடச் சொல்லலாம். :)

    பதிலளிநீக்கு
  57. ரவிவர்மாவிலிருந்து மண்டனமிஸ்ரர்,சூர்தாஸ், நந்தினி, குந்தவைனு எங்கேயெல்லாமோ போயாச்சு!

    பதிலளிநீக்கு
  58. //ஒன்றை வைத்து இன்னொன்றை விளக்குவது//

    //வதனமே, சந்திர பிம்பமோ?..!//

    இது என்ன மூஞ்சியை சந்திர பிம்பம் என்று எல்லாம் இதிகாசத் தனமா ஒரு உபமானம் உபமேயம் ???

    போர்....இங்க்லீஷ் போர்.

    என்னிக்கு மும்தாஜ் சினிமாவுக்கு பை பை சொல்லிட்டு பொனாகளோ அன்னிலேந்து எந்த மூஞ்சியையுமே சந்திர வதனம் அப்படின்னு சொல்ல மனசு வருமா மோகன்ஜி , மனச்சாட்சி படி சொல்லுங்கோ.

    அதனாலே,
    அதனாலே,

    சந்திர பிம்பம் என்று சொன்னாலே எனக்கு
    உபமா காளிதாசஸ்ய என்ற வசனம் தான் நியாபகம் வரும்.

    பசி, பசி அப்படின்னு இரண்டு இளங்கவிகள் துடிச்சுப்போய்,
    போஜ மகாராஜா தர்பாருக்கு போனாங்க.
    என்ன வேணும் சொல்லுங்க என்ற ராஜாவிடம்,
    பொன்னும் மண்ணும் வேண்டாம். அன்னம் வேணும்
    கண்ணீர் விடாத குறையா கதர்றாங்க.

    போஜ மகாராஜா சொல்றார். .
    சரி. ஆனா ஒரு கவிதை சொல்லுங்க. சோறு போடச் சொல்றேன்.

    என்ன தான் கவி என்றாலும் பசி காதை அடைக்குது . புரியாதபடி இந்த ராஜா முதல்லே கவிதை படி அப்படின்னு சொல்றாரே.

    என்ன பண்றது அப்படின்னு யோசிச்சு,
    இரண்டு வரி எழுதராங்க
    .

    भोजनं देहि राजेन्द्र

    घृतसूपसमन्वितं

    என்னதான் யோசிச்சாலும் அடுத்த 2 வரி வர மாட்டேங்குது.
    அவங்க அதிருஷ்டம் அங்கே மோகன்ஜி யும் பக்கத்திலே இல்லை.

    சுத்தி சுத்தி வராங்க.
    அடடே !!
    திடீர்னு பார்த்தா கவி காளிதாசர்
    கண்ணுக்கு முன்னாடி .
    அய்யா...அப்படின்னு
    அம்மா கால் லே இப்ப எல்லாம் விழறார்போல
    காளிதாசர் கால் லே விழுந்து
    ஐயா நீங்க தான் அடுத்த 2 வரி தரனும்.

    அடுத்த நிமிஷம் அவரு சொல்றார் பாருங்கோ..

    माहिषं च शरच्चन्द्र-

    चन्द्रिकाधवलं दधि //

    ராஜா போஜனம் தாரும்.
    பருப்பு நெய் சாதம். போதும்.
    சரத் கால வெண்ணிலவோ என
    மயங்க வைக்கும் தயிரும் போடும்.

    upama kalidaasasya .

    மேகதூதத்திலே ஸ்ருங்கார ரச உபமானம்
    ஒன்னு சொல்லட்டுமா ?

    ஒரு ரிஸ்க் இருக்கு.
    என்ன வா ?
    சீ ..சீ ..என்று
    சீரங்கத்து மாமி இனி இங்கே வரமாட்டா.
    So No.
    சுதா.

    பதிலளிநீக்கு
  59. சுதா காரு,

    ஆதி சங்கர பகவத் பாதலுவாரி திவ்ய சரித்ரமு தெலிய சேசினதானிகி வந்தனமு.

    பதிலளிநீக்கு
  60. ஜீவி சார்!

    //இப்பொழுதெல்லாம் இவ்வாறான கலந்துரையாடல்கள் மனசுக்கு மிகவும் இதமாக இருக்கின்றன. உங்கள் கலை சார்ந்த ரசனைகளுக்கு ஒரு ஜே!//


    தன்யனானேன்.
    ஆரோக்யமான,விரசமும் வெறுப்பும் இல்லாத கருத்து பரிமாற்றங்கள் யாவர்க்குமே நலம் சேர்க்கும்.
    இலக்கிய உரையாடலோ, வெறும் நலவிசாரிப்போ....எதுவாயினும் அது மானுடத்தை மேம்படுத்தவே என்று நம்புகிறேன்.
    இங்கு கருத்தாடும் அத்தனை ஸஹ்ருதயர்களும் அந்த கருத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.

    எல்லா வாசகர்களுக்கும், ஏதோ ஒரு கட்டத்தில், நந்தினியும் குந்தவையும் நெருக்கமாகிறார்கள்.
    எதிர்மறை கதாபாத்திரங்களை நாம் மேலதிகமான கவனத்துடன் அணுகுகிறோம்.
    அவர்களை பாதை தவறவைத்த வாழ்வின் நிர்ப்பந்தங்களும்,சூழலும் அறியவரும் போது ,ஆழ்மனதில் அவர்கள் மேல்
    இரக்கம் கொள்கிறோம்.
    ஒரு வகையில் எல்லோருக்குள்ளும் ஒரு கந்தமாறனும்,பார்த்திபேந்திர பல்லவனும் இருக்கிறார்கள். நந்தினி எதிர்படும்போது, அவளை கண்மூடித்தனமாய் ஆராதிக்கிறார்கள்.
    கல்கியின் மேல் பல விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் அவரின் கற்பனை கதாபாத்திரமான நந்தினியை அவர் செதுக்கியமைத்தது புதின
    உலகில் ஒரு சாதனை.
    குந்தவைகள் எல்லோராலும் பொதுவாக மதிக்கப் படுகிறார்கள்.
    நந்தினிகளோ, சிலரால் உபாசிக்கப்படுகிறார்கள் திவீரமாகவும்,கேள்விகள் இல்லாமலும்!

    பதிலளிநீக்கு
  61. கீதாக்கா !

    ஜீவி சாரும் நீங்களும் சொன்னது போல, ஓவியர்கள் இரு பெண்மணிகளையும் நமக்கு மிக அருகில் கொண்டுவந்து சேர்த்தார்கள்.
    குந்தவையின் சிற்பமும் தஞ்சைக்கோயில் ஓவியங்களும் அவர் உருவத்தை வரைய உதவின. ஆனால் ,கல்கியின் விவரிப்பை உள்வாங்கி, உயிரோவியமாய்த் தீட்டி உலவவிட்ட ஓவியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

    ஓவியர் பத்மவாசன் எனக்கு நண்பரான போது, கல்கியில் மீண்டும் வந்து கொண்டிருந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார். ஒரு ஞாயிறன்று நந்தினி வரையப்படும் போது, அவர் வீட்டில் அவர்ருகே அமர்ந்து பார்த்தபடி இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  62. சுதா!

    மும்முவை இன்னும் மறக்கலையா ஸ்வாமி?!

    பொன்னியின் செல்வனில் ஒரு அத்யாயத்தில் நந்தினியும் குந்தவையும் சந்தித்துக் கொள்வார்கள்.
    அந்த அத்யாயத்திற்கு கல்கி 'இரு பூரணசந்திரர்கள்' என்று பேர் வைத்திருப்பார்.

    உம்ம மனசு விசாலமா இருந்தால் இரண்டென்ன... மூன்று,நான்கு என்று சந்திரர்களை 'அல்லாட், செய்யலாமே?!
    காளிதாசன் கதை அருமை.
    மேகதூதம் வேண்டாம். தர்ம அடியல்லவா விழும்?!

    பதிலளிநீக்கு
  63. //ஒரு கந்தமாறனும்,பார்த்திபேந்திர பல்லவனும் இருக்கிறார்கள். நந்தினி எதிர்படும்போது, அவளை கண்மூடித்தனமாய் ஆராதிக்கிறார்கள்.//

    அடியே !! இங்க வாயேன்...

    "எதுக்கு ஏழு ஆத்துக்கு கேட்கும்படி கத்தறேள் ?"

    :நீ தானே கல்கி லே எக்ஸ்பர்ட், பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு எல்லாம் நொற்று பண்ணி இருக்கே."

    "ஆமா. அதுக்கு இப்ப என்ன?

    "கந்தமாறன் ,பார்த்திபேந்திர பல்லவன்" இவர்கள் எல்லாம் எதுலே வரா?

    "ஏன் உங்களுக்குத் தெரியாதா ?"

    "எனக்கு முரசொலி மாறன், கலாநிதி , தயாநிதி மாறன் தான் தெரியும்"

    "சுத்தம். ஞான சூன்யம்."

    "பட்டம் எல்லாம் போதும் டி. யாருன்னு சொல்லு."

    சுப்பு தாத்தா மீனாச்சி பாட்டி சம்வாதம்.

    பதிலளிநீக்கு
  64. “இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
    கனிகுலவும் மரநிழலில்
    கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!

    புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
    கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!

    கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
    காதலுடன் கட்டி முத்தம்
    ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”

    ஆஹா..? என்ன கவிதை ? என்ன கவிதை? பொன்னியின் செல்வனிலே .....

    என்ன ஆஹா ஊஹூ ? இருபத்து ஐந்தில் பாடவேண்டியதை எழுபத்தி ஐந்தில் பாடறீங்க...?

    அன்னிக்குத்தான் பாட முடியல்ல. இன்னிக்காவது ....

    சரி, சரி, பாட்டோட நிறுத்திக்கங்க...

    சுப்பு தாத்தா. மீனாக்ஷி பாட்டி சம்வாதம்.
    நேரம் : இரவு: 12.48 மணி.


    பதிலளிநீக்கு
  65. பொன்னியின் செல்வன் நாலாம் பாகத்திலே கடைசியிலே மணிமேகலை பாடற பாட்டுத்தானே இது? அருமையா இருக்கும், அந்தக் காட்சியைக் கற்பனை பண்ணிப் பார்த்து அதோட ஒன்றிப் போனதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  66. சு.தா!
    பொன்னியின் செல்வனை முதன்முதலாக படித்த போது என் வயது பதினொன்று. அதன் பிறகு முழுபரிட்சை லீவில் ஒருமுறையும், அரைபரிட்சை லீவில் ஒருமுறையும் ரிவிஷன். வினு வரைந்த தொகுப்பு,மணியம் வரைந்த தொகுப்பு என மாறி மாறி படித்தேன்.

    தமிழக சரித்திரத்தை ஊன்றி படித்த பின், கல்கி அவர்கள்,ராஜராஜன் சரித்திரத்தை பட்டும் படாமலும் மேலோட்டமாக மயிலறகால் தடவிப்பார்த்தே எழுதியிருப்பதை உண்ர்ந்தேன். அந்த காலத்தின் அரசியல், மற்றும் சூழ்ச்சிகளை தொடாமல், தன் கற்பனையின் பலத்தாலேயே ரம்மியமான மலர்பந்தல் அமைத்திருக்கிறார். சரித்திரம் அதில் பந்தலுக்கான மூங்கில் கழிகளாகவே நடப்பட்டருக்கிறது. காதலையும்,சாகசத்தையும் கொடியாக படரவிட்டிருக்கிறார். வாசம் வீசுகிறது தான்....சந்தேகமேயில்லை.

    மூங்கில் வனமாக இருந்திருக்கவேண்டியது.

    பதிலளிநீக்கு
  67. சுதா!
    கல்கியின் பல நல்ல பாடல்கள் பொ.செ வில் எழுதியிருக்கிறார்.
    எனக்கு அதில் பூங்குழலி பாடும் ' அலைகடல்தான் ஓய்ந்திருக்க, அகக்கடல்தான் பொங்குவதேன்?' எனும் வரிகள் பிடித்தவை.

    உங்கள் ரசனை கூட பிரமாதம்.
    மாமி ரியாக்‌ஷன் அறிய ஆவல் !

    பதிலளிநீக்கு
  68. கீதாக்கா !
    மணிமேகலை பாடுவது தான். நல்ல கேரக்டர் அல்லவா?

    பதிலளிநீக்கு
  69. இந்த 'புன்னை மரச் சோலையிலே' தொடர் பாடல்களை பாடகர் டி.கே. கலா அந்நாட்களில் தூர்தர்ஷன் சேனலில் பாடிக் கேட்டிருக்கிறேன். அற்புதமான குரல் வளத்துடன் அனுபவித்துப் பாடுவார்கள்.

    அதே மாதிரி 'அலைகடலும் ஓய்ந்திருக்க...' அவர் குரலில் கேட்க வேண்டும்.

    அந்நாட்களீல் D.D. சேனலில் அடிக்கடி கல்கியின் இந்தப் பாடல்களை ஒலி+ஒளி பரப்புவார்கள்...

    நீங்கள் கேட்டிருக்கிறீர்களா, மோகன்ஜி?..

    பதிலளிநீக்கு
  70. சுதா சார்!

    இப்பொழுது புரிகிறது. நீங்கள் பாடியதைக் கேட்டதும் தான் புரிகிறது.

    பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே'--யில் 'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி' யின் இன்ஸ்பிரேஷன் தான் கல்கிக்கு 'சொப்பனந்தானோடி, அந்த அற்புதம் பொய்யோடி'...

    டி.கே. கலா வேறு மெட்டைத் தேர்ந்தெடுத்தெடுத்திருந்தார்கள். யூட்யூபில் கிடைக்குமா பார்க்கிறேன்.

    உங்கள் வேகம் பிரமிப்பேற்படுத்துகிறது. சொன்னவுடன் பாடி, ரெடி பண்ணி, யூட்யூபிலும் பதிவேற்றி.. அடேயப்பா!

    பாட்டியை சுத்திப்போடச் சொல்லுங்கோ!..

    பதிலளிநீக்கு
  71. உங்கள் வேகம் பிரமிப்பேற்படுத்துகிறது//

    வேகம் இருக்கிற அள்வுக்கு விவேகம் இல்லயே என்கிறாள்
    பாட்டி.

    சரிதானா மோகன்ஜீவி .??

    அது சரி.

    என்னோட பாட்டிலே போட்டு இருக்கிற மணிமேகலை படம் யார் வரைஞ்சது ?

    லதாவா ?

    அந்த படம் பொ .செ .புத்தகத்தில் தான் இருக்கிறது.

    அழகு
    அசத்தலாக இருக்கிறது.

    அந்தக் காலத்துலே எல்லாம் படத்தைப் பார்த்து அசந்து போயி
    கதை படிச்சதும் உண்டு.

    சுதா.

    பதிலளிநீக்கு
  72. ஜீவி சார்!
    டி.கே.கலா பாடி கேட்டிருக்கிறேன் .
    நம்ம கலா ரத்னம் சு. தா பாடி கேட்டீங்களோ?

    பதிலளிநீக்கு
  73. சு. தா !
    நல்ல முயற்சி! ரசித்தேன் .

    மாமி கொடுத்துவைத்தவர் தான்.

    பதிலளிநீக்கு
  74. ஜீவி சார்! சரியாக சொன்னீர்கள்!
    காவடி சிந்தில் பாடியதோ?

    பதிலளிநீக்கு
  75. விவேகமில்லைன்னா சொன்னாங்க?
    ஒருவேளை அவர்களுக்காக மட்டுமே பாடியிருக்க வேண்டும் என்று கோபமாயிருக்குமோ?

    படம் போட்டது 'பத்மவாசன்'(ருமானி மாம்பழ முகம் அவர் ஸ்பெஷாலிட்டி!)

    படம் பார்த்து கதைகள் படித்தீர்களா?! Never judge a story by its padam

    பதிலளிநீக்கு
  76. படம் பார்த்து கதைகள் படித்தீர்களா?! Never judge a story by its padam//

    எல்லோருமே ஒரு மூஞ்சியைப் பார்த்து அது புடிச்சிருக்கு அப்படின்னு தானே மேற்கொண்டு லௌகீகம் அது இது அப்படின்னு கதையை ஆரம்பிக்கிறார்கள்.

    எல்ல்ராருமே காட்ற படம் ஒண்ணு . அந்த படத்திற்குப் பின்னாடி இருக்கும் கதை வேறு.


    படத்தைப் பார்த்து, போஃட்டோ வைப் பார்த்து பின்னே
    மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் பின்னாடி என்பது அவரவர் பூர்வ ஜன்ம பலன். அஞ்சாம் இடம் நன்னா இருந்தா , அஞ்சுலேந்து ஏழு நன்னா இருந்து கிருஹங்கள் பார்வை இருந்தா ஓஹோ தான் .


    அதெல்லாம் போகட்டும்.

    ரா.ரா.வர்மா மாதிரி ஒரு கலைஞன் உருவாக, அவனோட ஜாதகத்திலே சந்திரனும் சுக்கிரனும் சம்பந்தப்பட்டு லக்னாதிபதிக்கும் வேண்டப்பட்டவனா இருக்கணும்.

    எல்லாமே சரியா இருக்கு, ஆனா சந்திரனுக்கு ராகு பார்வை இருந்தது அப்படின்னா, ஓவியம் வரையறா ஆனா கார்டூனிஸ்டா
    க்ரிடிகல் லுக் விடுபவர்களா போய் விடுகின்றனர்.லக்ஷ்மன், கேசவ் இந்த கேடிகரி .

    ரா.ரா.வ.மாதிரி இருப்பவர்கள் கூட சமயத்துலே கிறுக்கு தனமா ஒரு ஜில் னு படம் போட்டு பாபுலர் ஆவதையும் பார்த்திருக்கிறோம்.

    என்னது? படத்தைப் பார்க்கணுமா ?

    மூச்.

    சுப்பு தாத்தா.


    பதிலளிநீக்கு
  77. //லக்ஷ்மன், கேசவ் இந்த கேடிகரி .//

    su.tha. கேஷவோட Krishna for today சித்திரங்களைப் பார்த்தால் உங்க கருத்தை மாத்திப்பீங்க! :) என்ன அழகு, என்ன அழகு, வாத்சல்யம், அந்தக் கருமையை அப்படியே கொண்டு வந்திருப்பார் பாருங்க. சாட்சாத் அந்தக் கிருஷ்ணனே எதிரே வந்து நின்னு அவருக்கு மாடலா இருக்கானோனு தோணுது!

    பதிலளிநீக்கு
  78. Krishna for today சித்திரங்களைப் பார்த்தால் உங்க கருத்தை மாத்திப்பீங்க! ://

    Agreed Madam. Nevertheless, he is basically a cartoonist, prone to look at things around him with a difference. It is possible that he did draw some very traditional pictures too, no doubt.

    It is true of writers also who are normally superb but on and off introduce a word or two in their works allowing traditionalists to turn their faces the other way.

    What u say of keshav is also true for Lakshman.

    thank U Madam.

    su dha.

    பதிலளிநீக்கு
  79. @Geetha Sambasivam Madam.

    Just to agree totally with what you said, i give a link.
    www.mahaperiyavaa.wordpress.com/2012/09/16/the-hindu-cartoonist-shri-keshavs-paintings-of-him/shri-keshavs-drawing/

    sudha.

    பதிலளிநீக்கு
  80. கட்டங்களில் கிரகங்கள் சடுகுடு ஆடியபடி இருக்க, அதுக்கேற்றாற் போல நம்ம டப்பாவும் டான்ஸ் ஆடும் என்கிறீர்கள்.
    யாரை விடும் தலைமேல். அயன் கையெழுத்தே!

    பதிலளிநீக்கு
  81. கீதாக்கா!
    லக்ஷ்மணும் கேசவும் மறக்க முடியாத கார்ட்டூன் கலைஞர்கள். கார்ட்டூனிஸ்டுக்கு, ஓவியனைவிட பொதுபுத்தியும் அறிவுக் கூர்மையும் தேவை. நீங்கள் சுட்டிய சித்திரங்கள் அபாரமானது!

    பதிலளிநீக்கு
  82. சுதா!
    சுட்டிக்கு நன்றி!
    உமக்கு நமஸ்காரம் எண் 3

    பதிலளிநீக்கு
  83. sage of kanchi daily visit undu su.tha. thanks for sharing.

    பதிலளிநீக்கு

  84. அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

    நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

    காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!

    வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே

    வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க

    மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

    வாரிதியும் டங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்

    காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"



    இங்கேயும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பாடலை கேட்கலாம்.


    su tha

    பதிலளிநீக்கு
  85. கடவுளின் படங்களை மட்டும் வரைந்தவர் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஆனால், சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் ஹைதராபாத் சலர் ஜங் அருங்காட்சியகத்திலும் இருந்த ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்தபோது அசந்துபோய் நின்றுவிட்டேன். என்னவொரு உயிரோட்டம்..! ஆங்கிலேயே ஆட்சியாளர்களை 15 அடி உயரத்தில் சித்திரமாக வரைந்திருப்பதை கோட்டை அருங்காட்சியகத்தில் கண்டபின் அங்கிருந்து நகரமுடியாமல் அருங்காட்சியகம் மூடும் வரை அந்த ஓவியங்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தேன். மிகப் பெரிய கலைஞன். பாராட்ட வார்த்தைகள் இல்லை.
    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  86. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  87. வாய்ப்பிருந்தால் மைசூர்,கல்கத்தா விக்டோரியா மெமோரியல், பரோடா பேலஸ் ஓவியங்களைப் பாருங்கள். பிரமாதமானவை அவை செந்தில் !

    பதிலளிநீக்கு

கருத்துரை இட்டுச் செல்லுங்களேன்..