திங்கள், அக்டோபர் 27, 2014

திருலோக சீதாராம்- சில நினைவுகள்


         
'எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றான் பாரதி. பாரதிக்கொரு ஞானவாரிசு வந்தார். அவரோ, 'எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்' என்று கவிதைக்காவலனாய் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள்.

 ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய், கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட மேதையாய்த் திகழ்ந்தவர்  திருலோகசீதாராம். 

சீதாராம் அவர்களின் தந்தை பெயர் திருவையாறு லோகநாத சாஸ்திரி. ஊரின் பெயரான திருவையாற்றிலிருந்து "திரு'வையும்தகப்பனார் பெயரில் உள்ள "லோக'த்தையும் சேர்த்துக் கொண்டு புதுமையாய் திருலோக சீதாராம்’ என்று பெயர் கொண்டார்.


(திருலோக சீதாராம் அவர் மனைவியுடன்)
                 
தான் ஞானத் தந்தையாக வரித்துக் கொண்ட மஹாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு வருடம் தவறாமல் நீர்க்கடன் செலுத்தி வந்தவர்.

பாரதியாருக்குப் பின்னர் அவர் குடும்பத்தை கண்இமைப்போல் காத்துவந்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாள்பாரதியின் இறுதிநாட்களில் நோயுற்றிருந்தபோது ஒருமகனாய் உடனிருந்து உதவியவர். தன் மடியிலேயே இறுதி மூச்சைவிட்ட செல்லம்மாள் பாரதிக்காக அந்திமக்கிரியை செய்து துக்கம் மேற்கொண்டவர்.  



                         

திருலோகசீதாராம் திருச்சியில் நடத்திவந்த சிவாஜி பத்திரிகையில் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கமளித்தவர்.

எழுத்தாளர் சுஜாதாவை அடையாளம் கண்டு அவரின் முதல்படைப்பை சிவாஜியில் வெளியிட்டு அவருக்கு ஒரு ராஜபாட்டை அமைத்தவர்.        

அவர் காலத்திய அத்தனை பெரிய எழுத்தாளர்களையும் மிக நெருங்கிய நண்பர்களாய்ப் பெற்றவர். திருச்சி வரும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் இவரை சந்திக்காமல் திரும்ப மாட்டார்கள். இவரின் விருந்தோம்பல் மிகப் பிரசித்தம். 

பாவேந்தர் பாரதிதாசனுடனும் ,புதுமைப்பித்தனுடனும்  நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

திரு G.D.நாயுடு, எழுத்தாளர்கள் கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், கு.பா.ரா மற்றும் பல ஜாம்பவான்கள் அவரின் பேச்சாற்றலையும் கவித்திறனையும் வியந்து அவரோடு நீண்ட நட்பு கொண்டிருந்தனர். 

‘மந்தஹாசன்’ என்றும்,’படிக்காசுப் புலவர்’ என்றும் இலக்கிய நண்பர்கள் இவரை அழைத்து வந்தனர்.

இவர் பயணங்களில் பெருவிருப்பு கொண்டவர். சுத்தானந்த பாரதியார் இவரை ‘திரிலோக சஞ்சாரி' என்று குறிப்பிடுவாராம். 

 வாலி பல சமயங்களில் எழுத்திலும் பேட்டிகளிலும் இவரைப் பற்றி நினைவு கூர்ந்தபடி இருந்தார்.

தேவசபை' எனும் குழுமத்தை ஏற்படுத்தி, இலக்கிய சர்ச்சைகளை காவிரியின் கரையில், தேர்ந்த ஆர்வலர்களுடன் நிகழ்த்தினார்.

 சீதாராம் அவர்கள் கவிதைகளை ஏற்ற இறக்கங்களுடன் கம்பீரமாக சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது. அபாரமான நினைவாற்றல் கொண்டவர். பல இலக்கியப் பாடல்களை அவர் குறிப்புகள் ஏதுமின்றி மடை திறந்த வெள்ளம்போல் பொழிவதை பலரும் நினைவுகூர்வார்கள்.

'ஆற்காடு தூதன்' எனும் இதழோடு இவர் இலக்கிய பயணம் தொடங்கியது.

நாற்பதுகளின் ஆரம்பத்தில் ‘கிராம ஊழியன்’ எனும் அரசியல் பத்திரிகை இலக்கிய ஏடாக மீண்டும் உயிர்பெற்றது. திருச்சிக்கு அப்பால் உள்ள துறையூரில் மறுமலர்ச்சி இலக்கிய ஏடாக வளர்ந்து வந்தது. திருலோக சீதாராம் அவர்களை ஆசிரியராயும், கு.ப.ரா. அவர்களை கௌரவ ஆசிரியராயும் கொண்டு வெளிவந்து, பல நல்ல ஆக்கங்களை வெளியிட்டது. 1944இல் கு.ப.ரா. இறந்தபோது, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனுக்கு வந்தார். அந்த ஆண்டே திருலோகசீதாராம் 'சிவாஜி ' இதழைத் தொடங்க, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனின் ஆசிரியராய் பொறுப்பேற்றார். 

சற்றொப்ப 37 ஆண்டுகாலம் அவர் சிவாஜி இதழை வெளியிட்டுவந்தார்.. ‘கவிஞர் அச்சகம்’ எனும் பதிப்பகத்தையும் நடத்தினார். அதில் அவர் எழுதிய ஆக்கங்களில் சில நூல்களாயின. ‘இலக்கியப் படகு’ எனும் நூல் அதிக கவனம் பெற்ற ஒன்று. விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள் ‘புதுயுகக் கவிஞர் ‘ என்ற நூலாய் வெளியிடப்பட்டது. மேலும் சில நூல்களும் வெளியாயின.

ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய 'சித்தார்த்தா'எனும் நூலை இவர்  மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது. பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

கவிஞரின் 'கந்தர்வகானம்' எனும் படைப்பிற்கு, சாஹித்திய அகாதமி விருது கிடைப்பதாக  இருந்தது என்றும்,ஏனோ கடைசி நிமிடத்தில் நழுவிவிட்டது என்றும் ஒரு பேச்சுண்டு. 'கந்தர்வ கானம்' ஏற்படுத்திய தாக்கத்தில் தொழிற்சங்கவாதியும்,படைப்பாளியுமான திரு நாகலிங்கம் தன் பெயரை 'கந்தர்வன்' என மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி கம்பன் கழகத்திலும், இலக்கிய  மாநாடுகளிலும் கவிஞரின் காந்தக்குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. கு.ப.ரா, வல்லிக்கண்ணன்,கவிஞர் சுரதா என அவர் ஆதரவு பெற்றோரின் எண்ணிக்கை அதிகம். எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத எளிமை உடைவராகவே திகழ்ந்தார். மரபுக்கவிதையிலும் வேகமும் செறிவுமாய், புதுபாடுபொருள்களை கொண்டு நெஞ்சையள்ளும் கவிமாரி பொழிந்தார்.

கவிஞர் தேர்தலிலும் போட்டியிட்டார். வீதிவீதியாய் பாரதியின் பாடல்களை கணீரென பாடியவாறே வாக்கு சேகரித்தாராம். 

56 வயதுவரை மட்டுமே வாழ்ந்த கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத் தேடி இவ்வுலகை நீத்தார். நல்ல இலக்கிய படைப்புகளையும் ஒரு அன்புமயமான குடும்பத்தையும் விட்டுச் சென்றார். 
திருலோகசீதாராம்
 

 








திருலோக சீதாராம் அவர்களின் சீடரும் நெடுநாள் நண்பருமான பன்மொழி வித்தகர் TNR என்று அறியப்படும் சேக்கிழார் அடிப்பொடிதிரு டி.என்.ராமச்சந்திரன் அவர்கள் திருலோக சீதாராமின் பல சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அண்மைக்காலத்தில் வெளிவந்த மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைநூல் ஆகும். 

இது .கவிஞரின் நயமிக்க படைப்புகளான ‘கந்தர்வ கானம்’, ’உடையவர்’, ’புகழ்க்கவிகை’ குருவிக்கூடு'' போன்ற நெடுங்கவிதைகள் உட்பட 55 ஆக்கங்களை  சுவைகுன்றாமல் மொழிபெயர்த்துள்ளார். 


சேக்கிழார் அடிப்பொடி
T.N.ராமச்சந்திரன் அவர்கள் 
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தஞ்சையில் நடந்த விமரிசையான விழாவில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. ஹைதராபாதிலிருந்து இவ்விழாவுக்கென தஞ்சை சென்றிருந்தேன்.

இங்கு நான் நெஞ்சுநிமிர்த்தி சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. திருலோக சீதாராம் அவர்கள் எனக்கு சொந்தக்காரர். என் தந்தைக்கு மாமன்முறை. கடலூர்,பாண்டிச்சேரி வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்துக்கு அவர் வருவதுண்டு. என் இளமைப்பிராய நினைவுகளில்,அவரின் சற்றே குள்ளமான உருவமும், கணீர்க்குரலும், என் பதின்மவயதின் கவிதை முயற்சிகளை அவர் ஊக்குவித்ததும் நிழலாடுகின்றன. அவர் வெற்றிலை செல்லத்தில்தான் அவர் கவித்துவம் இருப்பதாய் என் தந்தை கேலியாய் சொல்வதுண்டு.

 அவருடைய நான்கு புதல்வர்களும், மூன்று மகள்களும் குடும்பத்துடன்  இந்த விழாவுக்காய் தஞ்சை வந்திருந்தனர். குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவனாய் நின்று, ஒரு மாமேதையை இரண்டு நாட்கள் சிந்தித்திருந்தது, என் மனதிற்கு நிறைவாய் இருந்தது. நாளெல்லாம் கவிஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அசைபோட்டபடி இருந்தோம்.

 திருலோக சீதாராம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்று விரிவாக எழுதும் முயற்சியில் இருக்கிறேன். புத்தகவெளியீட்டு விழா சமயத்தில் நண்பர் திரு ரவிசுப்ரமண்யம் கவிஞர் பற்றிய ஆவணப் படத்தையும் தொடங்கினார்.

அண்மையில் திரு ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இந்த விழா பற்றி குறிப்பிட்டிருந்தேன். தற்செயலாக முந்தையதினம் தன் நண்பர்களிடம் திருலோகசீதாராம் பற்றி பேசியதாகவும், அவர்  பாரதிக்கு நீர்க்கடன் செய்து வந்ததைப் பற்றி, மகாபாரதத்தில் விதவிதமான மகன்களைப் பற்றி வருவதன் தொடர்ச்சியாக......” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிக மனநெகிழ்வாய் இருந்தது. காலத்தை வென்று நிற்க ஒரு கவிஞனுக்கு, தன் உயர்ந்த படைப்புகள் மட்டுமின்றி , உன்னதமான வாழ்க்கைமுறை கூட தேவை என்று எண்ணிக்கொண்டேன்.


திருலோகசீதாராம் அவர்களின் சில வாழ்க்கைக் குறிப்புகளை இந்தப் பதிவில் தந்திருக்கிறேன். கவிஞரின் வைரவரிகளை இன்னொரு பதிவில் பேசுவோம். கவிஞரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் யாத்த கவிதை ஒன்றின் சிலவரிகளை சிந்தித்து இந்தப் பதிவினை நிறைவு செய்வோம்.

இவனுயர்ந்தான்   அவன்   தாழ்ந்தான்
என்னும்  இன   வேற்றுமை   ஓர்  அணுவும்  இல்லான்
எவன்   பொதுவுக்கு   இடர்   சூழ்ந்தான்
அவன்   தாழ்ந்தான்   அஃதில்லான்
உயர்ந்தான்  என்று
நுவல்வதிலே   திருலோகன்  அஞ்சாநெஞ்சன்
தக்க  நூற்கள்   ஆய்ந்தோன்



படங்களுக்கு நன்றி: முதல் படம்- திருமதி இந்திரா, தஞ்சை(கவிஞரின் மகள்).
ஏனைய படங்களுக்கு GOOGLEக்கு நன்றி) 




வியாழன், அக்டோபர் 23, 2014

காதல் கோட்டை






நானும் மோதிமோதித்தான் பார்க்கின்றேன்,
ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து
உன்னை உண்டுவிடத் துடிக்கின்றேன்.

தெறிக்கும் நீர்த்திவிலைகள் தளர்ந்து
கசிகின்றன உன் மேனிவழி.
காலம் உதிர்ததுவிட்ட கல்லிடுக்குகளினூடே
துப்புரவாய் நீரையெல்லாம் துப்பிவிடுகிறாய்

நிராகரிப்பின் வன்மத்தில்
ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.
சற்றும் அசைந்து கொடுப்பதில்லை நீ.

பின்வாங்கித் தளர்கிறேன் கண்ணீர்நுரைக்க.
காலம்காலமாய் கண்ணீர் சிந்தி,
உப்பாய்க் கரிக்கின்றேன்.

எனக்கு வேறுவழியில்லை.
உனக்கும் கூடத்தான்.

என்றோ ஒருநாள் உனை உதிர்த்துவிடுவேன்,
கல்லுகல்லாய்....

வாரி உருட்டி யுன்னை
பொத்தி வைப்பேன்
என் கர்ப்பத்துள்...




வெள்ளி, அக்டோபர் 17, 2014

சட்டைக் கவிதைகள்

மஞ்சள்

நேர்காணலுக்காய் உள்ளே அழைக்கப்பட
ஐந்துநிமிடம் இருந்த போதே
அதைப் பார்த்தேன்.
வெள்ளைசட்டையின் மூன்றாம்பட்டன் அருகே
உளுந்து அளவுக்கு ஓர் மஞ்சள்கறை.
கொண்டைக்கடலை அளவுகூட இருக்கலாம்.

காலை இட்லிசாம்பாரின் சிந்தலாய் இருக்கக்கூடும்.
அதை சாந்தி ஊற்றியபோது சிந்தியிருந்தால்
அப்போதே அவளை கத்தியாவது இருக்கலாம்.

அந்த மஞ்சள்பொட்டை விரலால் மூடிக்கொண்டு
அறைக்குள் நுழைந்தேன்.

அரக்குமஞ்சளில் புடவையணிந்த ஒரு அம்மாளும்,
சந்தணகுங்குமதாரியாய் ஒரு கண்ணாடிக்காரரும்,
மஞ்சள்பல் தெரிய அமரச்சொன்ன அதிகாரியும்
கண்களால் எனைக் கவ்வினார்கள்.

கேட்கப்பட்ட பத்து மஞ்சள்கேள்விகளில்
ஒன்பது மஞ்சள்பதில்கள் சரியானவை.
வாழ்த்துக்கள் என்று சொன்னபின்னரே
கறையை மறைத்த விரல்களை எடுத்தேன்.
கறை நல்லது.

வாழ்த்து சொன்ன சாந்தியிடம் கறையைக் காட்டினேன்.
காலையில் கேட்டைமூடி நான் சென்றபோதே
அதை அவள் பார்த்ததாய்ச் சொன்னாள்.


அளவுகள் 

நாற்பதென்றால் நாற்பது தான்.
முப்பத்தெட்டும் கூடாது,
நாற்பத்திரண்டும் உதவாது.

எல் எக்ஸெல் டபுளெக்ஸெல் எல்லாம்
 வேலைக்காகாது.
ஸ்லிம்பிட்,ஸ்டிச்லெஸ் சங்கதி
நமக்கும் புரியாது.

கௌஸ்பாய் தையல்கடையை
மூடிய பின்னே,
முகம் தெரியாதவன் தைத்ததை
முனகாமல் போட்டுக்கொள்கிறேன்,
காலர்நுனியில் குங்குமம் தீற்றி.

இல்லாத மாடல்

'என்னமாதிரி தைக்க'என்றான்.

'ஆனந்த ஜோதி எம்.ஜி.ஆர் போட்டமாதிரி,
டீசர்ட்டாட்டம் ;ஆனா சட்டைத்துணியிலே'என்றேன்.
இல்லையென்றே தலையசைப்பில் மிரண்டு சொன்னான்.

'சிவாஜி போட்ட சிலுக்கு சட்டை போல'என்றேன்.
'ஆவாது ஓல்டு பேஷன் சாரே' என்றான்.

அப்போ காமராஜர் மாடல் வேண்டுமென்றேன்.
முக்கால்கை சட்டை இப்போ முடியாதென்றான்.

'மோடி மாடல்சட்டை தான் தையேன்' என்றேன்.
அது சட்டையே இல்லையென்று அனுப்பிவிட்டான்.


புதுசு

சீ... என்ன இது?
மனுஷனை இப்படியா இறுக்குவது?
இனிமேலும்
எனக்குத் தாங்காது.
புதுசு தான்!
அதற்காக இப்படியா?

பொத்தான்களை ஒவ்வொன்றாக 
கழற்றினேன்

கலைந்த படுக்கையில்
படர்ந்தது
நான் எறிந்த இறுக்கமான புதுச்சட்டை.



பாம்புச் சட்டை

சட்டென்று கனவில் வந்தது
கிராமத்துவீட்டு வேலியில் தொங்கிய
பாம்புச்சட்டை.
இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும்
அன்று பார்த்தபடியே.

பாட்டனும் ராசய்யாவும் கோல்கொண்டு
எங்கும் துழாவியதையும்,
ஆடுதீண்டாப்பாளை செடிகளை
வேலியோரம் அம்மா நட்டதையும்,
'நல்லது' வந்திருந்தால் அப்பளம் சுடும் வாடைவரும்
என்று அப்பா சொன்னதையும்,
சுப்ரமண்யபுஜங்கம் படித்தபடி
பாட்டி இருந்ததையும்,
சன்னல் வழியே பார்த்தபடி பயந்ததையும்
நான் மறந்துவிட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஃபப்பிள்பேக் பாலிதீன் கிழிசல்போல
கனவில் வந்த பாம்புச்சட்டை
இன்னமும்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.