இன்று இரவு தொலைக்காட்சியைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது, தூர்தர்ஷன் பாரதியில்
AKC நடராசன் அவர்களின் கிளாரினட் இசை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ‘பஹுதாரி’
ராகம். சுகமான வாசிப்பு. என் நினைவுகளோ பின்னோக்கி விரைந்தன.
கடலூரில் கெடிலநதிக் கரையில் ஒரு பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலொன்று
உண்டு. அக்கோவிலில் இலட்சதீபம் வருடாவருடம் ஏற்றப்பட்டு விமரிசையாக நடக்கும்.
சிறுவனாய் நான் அப்பாவுடன் அங்கு போவதுண்டு.
ஒரு வருடம் லட்சதீபத்தின்போது AKC நடராஜன் அவர்களின் நிகழ்ச்சி இருந்தது. பிராபல்யத்தின் உச்சத்தில் அவர் இருந்த
நாட்கள் அவை. என் அப்பாவின் சங்கீதரசனையில் AKCயின் கிளாரினட்டுக்கு தனிஇடம் உண்டு.
மேடையின் மிக அருகிலிருந்தபடியால், அவர் கால்பாதத்தால் தாளம்போட்டபடி வாசித்ததும்,
அந்த கால்தாளம் பற்றி அப்பாவைக் கேட்டதுவும், பின்னாளில் தில்லானா மோகனாம்பாளில்
சிவாஜி நாயனம் வாசிக்கும்போது காலால் தாளம்போடுவதை கவனித்து சிலாகித்ததும்
நினைவுக்கு வந்தது. இன்று அதே கால்தாளத்தை AKC போடுவதை தொலைக்காட்சியில் பார்த்தபோது
அப்பா வாசனை என்னை சுற்றிப்படர்ந்தது.
சில வருடங்களுக்குமுன், நான் திருச்சியில் பணியாற்றிய நாட்களில் AKCநடராசன்
அவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்தது. அப்பாவைப் பற்றியும் அந்த
இலட்சதீபம் பற்றியும் அவரிடம் பிரஸ்தாபித்ததுண்டு. பழகுவதற்கு இனிமையான கலைஞர் அவர்.
கிளாரினட் பதினேழாம் நூற்றாண்டு இறுதியில் உருவானது.பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும் பல்வகை இசைகளிலும் வாசிக்கப் பட்டது. இதில் சில வகைகளும் உண்டு.
இது நம் நாதஸ்வரத்தின் தங்கை என சொல்லலாம்.
கிளாரினட் பதினேழாம் நூற்றாண்டு இறுதியில் உருவானது.பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும் பல்வகை இசைகளிலும் வாசிக்கப் பட்டது. இதில் சில வகைகளும் உண்டு.
இது நம் நாதஸ்வரத்தின் தங்கை என சொல்லலாம்.
தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டபோதுதான் கிளாரினட் சதிர் கச்சேரிகளுக்கு இங்கு முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தேவார ஓதலுக்கும் கிளாரினட்டை பின்னிசையாக உபயோகப்படுத்தினார்கள்.
அதற்கு நாதஸ்வரம் போல் ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி, கர்னாடக இசையுலகிற்கு கொண்டு
சேர்த்ததில் பெரும்பங்கு AKC ஐயா அவர்களுக்கு உண்டு. இவருடைய வளர்ச்சியிலும்
வாசிப்பின் நுணுக்கங்களுக்கும் அவருடைய குருநாதர் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளைக்கு
பெரும்பங்கு உண்டு. இவர் ஏறாத மேடைஇல்லை, வாசிக்காத கோவில்இல்லை எனும்படி இவருடைய
மேதைமை கொண்டாடப்பட்டது. பல நாடுகளுக்கு சென்று தன் இசைக்கொடியை நாட்டி வந்தவர்
AKC ஐயா அவர்கள்.
பக்கவாத்யமாய் தவில் மட்டுமின்றி, மிருதங்கத்தை சேர்த்துக் கொண்டும்,
ஜுகல்பந்தி முறையில் பிற வாத்யங்களோடு கூட்டிசை முயற்சிகளையும் மேற்கொண்டவர்.
இசையே தானாக மாறிப்போனவர். அவர் எதைப்பற்றி பேசினாலும் அது இசையைப் பற்றியே முடியும்.
கிளாரினெட் எளிதாக வாசித்துவிடக்கூடிய வாத்தியம் அல்ல. நாதஸ்வரம்
போலல்லாமல், ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு ‘கீ’ இருக்கும். அவற்றில் விரல் பதித்து
வாசிக்கும் போது விட்டுவிட்டு கேட்காமல் நாதஸ்வரம்போல் நாதத்தின் குழைவைக் கொண்டுவருவதற்கு
அசுரசாதகம் வேண்டும். AKC அவர்களின் நாதஸ்வர அப்யாசமும், வாய்ப்பாட்டு படாந்தரமுமே
அவரை இந்த இசைக்கருவியின் முடிசூடா மன்னனாக நிறுத்தியது.
இன்று கிளாரினட் வாத்யம் எந்த சபாவில் தனிக்கச்சேரியாக ஒலிக்கிறது? இல்லை
என்பதே வேதனையான பதில். அவ்வளவு ஏன்? நாதஸ்வரம் திருமணமண்டபங்களிலும் கோவில்களிலும்
மங்களஇசை என்ற அளவிலேயே வாசிக்கப்படுகிறது. அந்நாள் போல் முழுநேரக் கச்சேரிக்கு
ஏற்பாடுகளும் அருகிவிட்டன. கேட்பார்கூட குறைந்துதான் போய் விட்டார்களோ? இந்தக்
குறுக்கத்தினால் இந்த இசையை கற்பவர்கள் கூட சொற்ப அளவிலேயே இருக்கிறார்கள்.
இந்த இன்டர்நெட் யுகத்தில், சினிமா சங்கீதம், தொலைக்காட்சி இசைப்
போட்டிகளுக்கு பழகிப்போனக் காதுகள், பாரம்பரிய இசையை கேட்காது என்பது சரியான வாதமல்ல.
இந்த இசைக்கிளர்ச்சிகளையையும் மீறி, இந்த அசுரகதியில் இயங்கும் வாழ்க்கையின் அயர்ந்துஓயும் தருணங்களில், நம் பாரம்பரிய இசையே ஒரு மயிலிறகு வருடலாய் ஆதூரம் தரும்.
சம்பந்தப் பட்டவர்கள் ஆலோசித்து இவற்றை மீண்டும் செழிக்கவிடல் வேண்டும். இந்த
பாரம்பரிய இசையில் நம் கிராமிய வாத்யங்களும்
அடங்கும். அடுத்த தலைமுறை இவைபற்றி கூகுளில் தேடித்படித்து தெரிந்துகொள்ளாமல், கேட்டும் இன்புற
வேண்டும் அல்லவா?