புதன், அக்டோபர் 12, 2011

தொழுவத்து மயில் 5


இதுவரை 1  2  3  4 

சுகிர்தத்தை வனரோஜாவுக்கு துணையாய் வைத்து விட்டு மேற்கொண்டு வைத்தியம் செய்வது பற்றி தீர்மானிக்க டாக்டர் நந்தகுமாரைப் பார்த்தார் கிருஸ்டி. வரதுவும் உடனிருந்தார்.

கிருஸ்டி சார்! நான் சொல்வதை உணர்ச்சிவசப்படாமல் கேளுங்கள் என்று பீடிகையுடன் டாக்டர் துவங்கினார்.

உணவுக் குழலுக்கு ஸ்டென்ட் வைத்து திரவ உணவாவது வயிற்றுக்குப் போகும் என்று தான் முயற்சி செய்தோம். ஆனால் புற்று மூர்க்கமாய் இரைப்பைக்கெல்லாம் கூட பரவி விட்டது சார். இனி...... மன்னியுங்கள். நான் நாட்கணக்கில் கூட உத்தரவாதம் தர இயலாது. மேலும் சிகிச்சை என்று அக்காவை அலைகழிக்காமல் அமைதியாய் அடங்க விடுவது தான் முறை. என்னை மன்னியுங்கள் சார்!

வரது குறுக்கிட்டார். டாக்டர்! எப்பாடேனும் பட்டு..

அவர் முடிப்பதற்குள் டாக்டர் மறுத்து தலையாட்டினார். சார்! நாம் முயற்சிகளெல்லாம் கடந்த நிலையில் இப்போ இருக்கிறோம்.. அக்காவுக்கு நினைவும் உயிரும் இருக்கும் வரை அவர்களுக்கு பழைய நல்ல தருணங்களை நினைவூட்டி அமைதியாய் வழியனுப்புவோம் கிருஸ்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

உங்க ஸ்டூடண்ட்டா அக்காவை எனக்குத் தெரியும். ஒரு டாக்டராக நெஞ்சுரமும் சகிப்பும் நிறைந்த நோயாளியாயும் இப்போது தெரிஞ்சுகிட்டேன். அவர்கள் முடிவை நானும் எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியல்லை சார்! ஆனாலும் நிதர்சனம் அதுதான் சார். ஐ ஆம் சாரி! வேணும்னா இங்கே திரும்பவும் அட்மிட் செய்துடுங்க. அக்கா இரண்டே நாட்கள் வீட்டுக்கு போகணும்னு மன்றாடின போது,அவர்கள் ஆசையை நிறைவேற்றவே அனுப்பி வைத்தேன். அக்கா இருக்கிறவரை இங்கிருந்தால் உங்களுக்கு தைரியமாய் இருக்குமென்றால். திரும்பவும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க ........

கிருஸ்டிக்கு ஏதும் சொல்லத் தோன்றவில்லை. அதீதமான அதிர்ச்சியும், ஒரு கணத்தில் அனைத்தும் இழந்த கையறுநிலையும் அவர் மனத்தை மரத்துப்போக அடித்திருந்தன. கண்களுக்குள் நிரந்தரமாய் தங்கிவிட்ட வனரோஜாவின் மதிவதனம் கூட ஜடமான அவர் மனதை தேற்றவியலாது அவர் உலகம் ஸ்தம்பித்துப் போனது. மௌனமாய் வீடு திரும்பினார்கள்.

வரது கிருஸ்டியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார். கிருஸ்டி! இந்த டாக்டர் கிடக்குறார்.. நம்ம ரோஜாவை இப்போதே சென்னைக்கு கூட்டிக்கிட்டு போகலாம். நடப்பது நடக்கட்டும். நம்ம முயற்சியை விட வேண்டாமடா!
கிருஸ்டி வெறுமே தலையை ஆட்டினார்.

அவர்களின் ஆட்டோ வீட்டு திரும்பும் போது இருட்டிவிட்டது. இருவரும் வீட்டில் நுழைவதற்கும், சுகிர்தம் பதட்டத்துடன் வெளியே ஓடிவருவதற்கும் சரியாய் இருந்தது.

என்னம்மா ஆச்சு?

அத்தை சமையல்கட்டுல மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க!

அய்யய்யோ! கிருஸ்டி ஒரு நிமிஷம் டாக்ஸி கூட்டிக்கிட்டு வந்துடறேன். வரது ஓடினார்.

சமையலறை வாசலில் கால்கள் மடிந்தநிலையில்  வனரோஜா விழுந்து கிடந்தாள். அவளை ஒரு பூமாலையைப் போல் கையில் ஏந்தி வந்தார் கிருஸ்டி.

மாமா! அத்தை என்னை கேரட்டை இந்த சீவியில் துருவிக் கொடுக்க சொன்னாங்க. காஸ்அடுப்பு  வரைக்கும் என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிக்கிட்டு போகச் சொன்னாங்க. பால் சீனியெல்லாம் நான் தான் ஒவ்வொண்ணா எடுத்துத் தந்தேன். அம்மாவை வேணும்னா கூப்புடறேன்னு சொன்னேன் மாமா. வேண்டாம்னுட்டாங்க. சமையல் மேடையிலேயே சாய்ஞ்சு கிட்டு கிண்டுனாங்க. ஆனா சிரிச்சுக்கிட்டே வாசனவருதாடி.. வாசன வருதாடின்னு கேட்டுகிட்டே இருந்தாங்க. கேஸை அணைச்சுட்டு கட்டிலுக்கு கூட்டிக்கிட்டு வந்தெனா? அப்படியே மூர்ச்சையா விழுந்துட்டாங்க. நானு எங்கம்மாவை கூப்பிட ஓடியாறேன்.. நீங்களும் வந்துட்டீங்க மூச்சுவிடாமல் படபடத்தாள் சுகிர்தம்.

சரியம்மா! நீ போ! ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போறேன்.

பயமா இருக்கு மாமா!

பயப்படாத கண்ணு. கர்த்தர் பாத்துக்குவாரம்மா.

மீண்டும் மருத்துவ மனையில் டாக்டரின் முயற்சிகள் வீணாயின. 

வனரோஜாவின் உடல் இல்லம் வந்து சேர்ந்தபோது இரவு மணி பதினொன்று. அவள் உடலை இன்னுமிரு உடல்கள் தாங்கி வந்தன. அமைதியாய் வனரோஜாவை வீட்டுக் கூடத்தில் கிடத்தினர்.

வாசலைப் பார்த்து கிளம்பிய வரதுவை கிருஸ்டி தடுத்தார். எங்கடா?

அக்கம்பக்கத்துல சொல்லிடுறேன்

வரதா! யாரையும் இந்த ராத்திரி வேளையில் தொந்தரவு செய்யாதே. நீ கூட வீட்டுக்கு கிளம்பிப் போ! எல்லாவற்றையும் காலையில் பார்த்துக்
கொள்ளலாம்.

நானும் போவதா? உன்னை தனியா விட்டுட்டா? என்னடா கிருஸ்டி இது?

தனியா விட்டா ஏதும் பண்ணிக்கிட்டு நானும் போயிடுவேன்னு பயப்படறயா? நான் ஏதும் செய்துக்க மாட்டேன். இன்னும் நான் இருபத்தி ஐஞ்சு வருஷமாவது உயிரோட இருக்கணுமடா. உயிரோட... என் ரோஜாவோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிஎண்ணி ஜீவிச்சிருக்கணும். கண்டிப்பா இருப்பேன். கவலைப் படாதே!

வேண்டாம்டா கிருஷ்டி.. உன்னைத் தனியே விடமாட்டேன்.. ப்ளீஸ்.. வரதுவின் கைகள் கிருஸ்டியை கும்பிட்டன.

முட்டாள்! நானும் போயிட மாட்டேன்... வரதா. என்னை நம்பு. எனக்கு நிறைய வேலை இன்னும் இருக்கு. ரோஜா நட்டு வைத்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடணும். சாய்ஞ்சு சாய்ஞ்சு ஓடும் அவள் கையெழுத்து இந்த நோட்டு,டைரிகள் பூராவும் இருக்கு... அந்த வரிகளையெல்லாம் வருடி வருடி படிக்கணும்.. நெறைய வேலை இருக்குடா.. நெறைய...

வரதுவை கிருஸ்டி அணைத்துக் கொண்டார். குலுங்கி குலுங்கி குமைந்து குமைந்து தன் பாரத்தை நண்பன் தோளில் இறக்கியபடி நிமிர்ந்தார். 

போ! போ!! காலையில் ஆறுமணிக்கு வா!

 என்ன கிருஸ்டி இது! நட்பின் பதற்றம் மெலிந்து ஓய்ந்தது.

வரது ஏதும் சொல்லவில்லை. வனரோஜாவை பார்த்தபடி
அழுதார்.. "என்னை அண்ணா அண்ணான்னு வாயார கூப்பிடுவியே.. என் கல்மனசு இன்னமும் வெடிக்கலியே என்னப் பெத்த தாயாரே..
   
வரதா! போ அழாதே. இது எங்கள் கடைசி ராத்திரி. தைரியமாய் இருப்பேன். என் ரோஜாவுடன் இருக்க எனக்கென்னடா பயம்? எந்த இடையூறும் இல்லாமல், அவளுடைய குறுக்கீடு கூட இல்லாமல் இந்த இரவு அவள் முகத்தைப் பார்த்தபடி இருக்க விடு வரதா.... இந்த டைரியில் எல்லோர் விலாசம் போன் நம்பரெல்லாம் இருக்கு. வெளியூர் சொந்தங்களுக்கு தந்தி ஏதும் கொடு.. எல்லோரையும் உனக்குத் தெரியுமே. உள்ளூர் நண்பர்களுக்கு காலையில் சொல்லு. பிலிப்பை சர்ச்சுலையும் சொல்லிவிட ஏற்பாடு பண்ணு. இனி ஒவ்வொரு நிமிடமும் என் சொத்து. வரதா!"

தலை குனிந்தபடி வரது வெளியேறினார்.

வரதுவை அனுப்பி வைத்து விட்டு கிருஸ்டி வாசற்கதவை தாழிட்டார்.
கூடத்தின் மறுகோடியிலிருந்த விளக்கை விட்டுவிட்டு மற்ற விளக்குகளை அணைத்தார். வனரோஜாவின் அருகே அமர்ந்தார். மூக்கருகே கைவைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தார்.

ரோஜா! என் ஆசையைப் பார்த்தாயா? உன் மூச்சு நின்றதாய் நான் ஏன் ஒப்புக் கொள்கிறேன்? எங்கும் வீசும் காற்றெல்லாம்  உன் மூச்சு தானே ரோஜா! இப்போது உன் முகம் பழைய சிரிப்போடு இருக்கிறது. இந்த சிரிப்பை மட்டும் தான் எனக்கு மிச்சம் வைத்து விட்டு போகிறாயா ரோஜா?”

வனரோஜாவை முதலில் பார்த்ததிலிருந்து தொடங்கி அலையலையாக நினைவுகள் தம்மைதாமே ஒழுங்கு படுத்திக் கொண்டு வரிசையாய் நெஞ்சில் குமிழிட்டன . அவர் கண்கள் வனரோஜாவின் முகத்தை விட்டு அகலவில்லை. 'இந்த இரவு... எண்ணப் புற்றுகளை எனைச் சுற்றி எழுப்பும் இரவு...'

காலத்துக்கு கிருஸ்டியைப்பற்றி என்ன கவலை? 
வழக்கம் போல் விடிந்தது.

ஒருவரொருவராய் சுற்றமும் நட்பும் அலறிக் கொண்டு வந்தனர். கிருஸ்டியின் கையைத் தொட்டார்கள்..  தோளை அணைத்தார்கள்..பாக்கியம் செய்த பூக்கள் மாலையாகி வனரோஜாவின் சரீரத்தை அலங்கரித்தன. கண்கள் ரோஜாவின் மீது நிலைத்திருக்க, ஏதும் பேசாமல் சமைந்து நின்றார் கிருஸ்டி.

வரதுவுக்கு கிருஷ்டியின் கல்யாணம் ஆன நாள் நினைவுக்கு வந்தது. அன்றும் இப்படித்தானே ஏதும் செய்வதறியாமல் உறைந்து நின்றான்..? கடவுளே!

பாதிரியார் வந்தார்.. பெட்டியொன்று வந்தது. திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் கிருஸ்டி சமயலறைக்கு ஓடினார். உள்ளிருந்து முதல்நாள் வனரோஜா செய்துவைத்த கேரட் அல்வாவை வாணலியோடு எடுத்து வந்து அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அள்ளிஅள்ளித் தின்றார்.

பாவி! பொணத்தை வச்சுக்கிட்டு தின்கிறியே கிருஸ்டி என்று வாணலியைப் பிடுங்க வந்த தெரேசாம்மாளை அடிபட்ட புலிபோல் பார்த்தார் கிருஸ்டி. என்றுமே அதிராத அவர்  குரல் அதிர்ந்தது.

"பொணம்னு சொல்லாதே அத்தே ! அவள் என் ரோஜா! எனக்காக இதை செய்து இருக்கா.. எனக்காக மட்டும்....

சட்டென அங்கே ஒரு நிசப்தம் கவிந்தது.

நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் ஆனபடி இருந்தது. கிருஸ்டியின் அருகில் அவரை கைலாகு கொடுத்து எழுப்பவந்த வரதுவுக்கு  அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்த தேம்பாவணி வரிகள் சன்னமாய்க் காதில் விழுந்தன. கிருஸ்டியின் முகத்தில் துக்கமில்லை. அவர் கண்களில் வேதனையோ ஈரமோ இல்லை.. எல்லாவற்றையும் பார்த்து ஓய்ந்து விட்ட கண்கள். பார்வை எங்கோ உள்ளூர திரும்பி, மேலுக்கு வெறும் கண்ணாடிசில்லுகளாய் மங்கி உறைந்த கண்கள்...

கிருஸ்டியின் உதடுகள் மட்டும் துடித்து முனகிக் கொண்டிருந்தது..

மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!

வரதுவுக்கு அந்தப் பாடல் இனி ஓயுமென்று தோன்றவில்லை.

(முற்றும்)
  



ஞாயிறு, அக்டோபர் 09, 2011

தொழுவத்து மயில் 4



இதுவரை 1 2 3 

வாழ்க்கைநதி அவ்வப்போது பிரவாகமாய், சன்னமான நீர்க்கீற்றாய், வெறும் கானல் அலையும் மணல்வெளியாய், எப்படி எப்படியெல்லாம் உருமாறி நகர்கிறது? எங்கோ துவங்கி, கடலடைந்து கரிப்பை இயல்பாக்கிக்கொண்டு தன் சுயமிழந்து…..... இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இயற்கையின் விளையாட்டா? இல்லை... அர்த்தம் இருக்கிறது... வரும் வழிதோறும் புல்லுக்குக்கூட பொசிந்து, தாகம் தணித்து....

கிறிஸ்மசுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. வனரோஜாவுக்கோ இரண்டு வாரமாய் கடும் ஜுரமடித்து இந்த இரண்டுநாட்களாய்த் தான் நடமாடுகிறாள். மெலிந்தும் போயிருந்தாள். சற்று உடம்பு சரியானவுடன் பரபரவென்று வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டாள். இதற்காக கிருஸ்டி அவளை கடிந்து கொள்ள வேண்டியதாயிற்று. பதிலுக்கு அவள் உதட்டை சுழித்து சிரித்த சிரிப்பு இருக்கிறதே....

கிருஸ்மஸ் முடிந்த கையோடு வடநாடு மற்றும் இமயமலை வரையில்  இருபது நாட்கள் சுற்றுலா செல்வதற்கு கிருஸ்டியும்,அவருடன் வேலைசெய்யும்  நண்பர்களும் முன்பே திட்டமிட்டிருந்தனர். இந்தமுறை ஆண்கள் மட்டுமே போய் வருவதென்றும், அடுத்தமுறை குடும்பத்துடன் செல்லலாம் என்றும் முடிவு செய்திருந்தனர். கிருஸ்டிக்கு ஏதும் சொல்ல இயலவில்லை. வனரோஜாவை விட்டு இருபது நாள் இருப்பதாவது?... ஆனாலும் வனரோஜா அவர் சென்று வரத்தான் வேண்டும் என்று தீர்மானமாய் சொல்லி விட்டாள். இந்த பத்துநாட்களில் தன் உடம்பு பூரண குணமாகிவிடும் என்றும், உதவிக்கு மேரியக்கா இருக்கவே இருக்கிறாள் என்றும் அவனை சமாதானம் செய்தாள்.

அன்று மாலை, பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கூடத்தில் கிருஸ்மஸ் கரோல் பாடல்களை பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். வனரோஜா நிமிர்ந்து அமர்ந்து சொல்லிக் கொடுப்பதைப் பார்த்த கிருஸ்டிக்கு சந்தோஷமாய் இருந்தது.

வனரோஜா உச்சஸ்தாயியில் ஒரு வரியைப் பாடத் துவங்கியபோது, பாதியில் அவள் குரல் தடுமாறி, ஒரு சீழ்க்கை சப்தமாக, ஒரு கன்றின் அலறலாக நடுங்கித் தடுமாறியது. தொண்டையை இருகைகளாலும் அழுந்த பிடிந்தபடி சாய்ந்து விட்டாள். கிருஸ்டி அவளை உடனே காது,மூக்கு,தொண்டை மருத்துவரிடம் அழைத்து சென்றார். பரிசோதனைகளுக்குப் பின்குரலை அதன் சக்தியை மீறி வருத்தியதால் ஏற்பட்ட அழற்சியென்றும்,ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்றும் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.
   
வனரோஜாவுக்கு பேசமுடியவில்லை. விழுங்குவதற்கு கஷ்டப் பட்டாள். டாக்டரோ ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும் பயப்பட ஒன்றுமில்லை என்று கிருஸ்டிக்கு சொன்னார். கிருஸ்மஸ் சமயத்தில் தான் அவளுடைய பழைய குரல் கேட்கத் தொடங்கியது. இன்னமும் சாப்பிடத்தான் சிரமப் பட்டாள். விழுங்குவதற்கு திரவ உணவு பரவாயில்லை என்று இருந்தது அவளுக்கு.

கிருஸ்டி அடுத்த நாள் சுற்றுலாவுக்கு புறப்படவேண்டும். தான் போகப் போவதில்லை என்று கிருஸ்டி சொன்னதை வனரோஜா ஏற்கவில்லை. தனக்கு குரல் சரியாகிவிட்டதாயும் அன்று காலை கூட மூன்று இட்டிலி சாப்பிட்டதாயும் சொன்னாள்.

அன்று மாலையே அவனுக்கு வேண்டிய பிரயாண ஏற்பாடுகள் செய்து விட்டாள் வனரோஜா. எதெது பெட்டியில் எங்கே இருக்கிறது என்றும் மூன்று முறை சொல்லியாகிவிட்டது. பார்க்கும் ஒவ்வொரு இடத்தையும் பற்றி தேதிவாரியாக எழுதி எடுத்து வர வேண்டும் என்று கிருஸ்டிக்கு கட்டளையும் இட்டாள். போட்டோ பிலிம் போட்ட கேமராவையும் எடுத்து வைத்தாள்.

இரவு கிருஸ்டிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அருகில் மெலிதாய் மூச்சுவிட்டு தூங்கும் வனரோஜாவையே கண்கொட்டாமல் பார்த்தபடி சாய்ந்திருந்தார் கிருஸ்டி. அவருடைய மார்பின் மேல் போட்டிருந்த அவளுடைய வலது கரம் ஒருமுறை அசைந்தது. தன் உடம்பின் சிறு அசைவுகூட அவளை எழுப்பிவிடலாகாது என்று மெலிதாக மூச்சுவிட்டபடி இருந்த கிருஸ்டி தூங்க முயன்ற போது பொழுது விடிந்து விட்டிருந்தது.

 அந்த இருபது நாட்கள்... முடிவில்லாது நீண்டு கொண்டே செல்வதாய் இருந்தது கிருஸ்டிக்கு. அவளுக்கு மூன்று பெரிய கடிதங்கள் எழுதியிருந்தார். தான் பார்த்த இடங்கள், தங்கள் பிரிவு என்று விரிந்தன அந்தக் கடிதங்கள்.

ஒருவாறு ஊருக்கு வந்து சேர்ந்த கிருஸ்டிக்கு வனரோஜாவைப் பார்த்தவுடன் இதயமே பிரண்டு வாய்க்கு வந்தாற்போல் ஆகியது.  முன்னைவிட இன்னமும் இளைத்துக் காணப்பட்டாள்.

மேரி புலம்பினாள். என்னத்தை அண்ணே சொல்லுறது. கொஞ்சம் சாப்பிட்டாலும் ரோஜாவுக்கு வாயிலெடுக்குது. பத்து நாள் காப்பியை மட்டும் மூணு வேளைக்கும்  குடிச்சது. அப்புறமா அதையும் நிப்பாட்டிட்டு இந்த கலரை தம்ளர்ல ஊத்தி சொட்டுசொட்டா குடிக்குது என்று அருகிருந்த டொரீனோ குளிர்பான பாட்டிலைக் காட்டினாள்.

என்ன ரோஜா இது. டாக்டர் கிட்ட போனியா இல்லையாம்மா?” கிருஸ்டிக்கு குரல் நடுங்கியது.

நம்ம பார்த்த டாக்டரை இரண்டு தரம் பார்த்தேன். விழுங்க முடியல்லென்னு சொன்னேன். அவரும் பார்த்துட்டு, வேற மருந்து எழுதிக் கொடுத்தார் என்றாள்.

இன்னொரு மருத்துவரின் அறிவுரைபடி வரதுவும் கிருஸ்டியுமாய் வனரோஜாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்கள்.

அவளை முற்றும் பரிசோதித்த டாக்டர்கள் வாய்வழியே குழாய் செலுத்தி எண்டோஸ்கோப்பி பரிசோதனையும்.பயாப்ஸியும் செய்தார்கள்.  கிருஸ்‌டியையும் வரதுவையும் உள்ளே அழைத்த மூத்த டாக்டர் சொன்னார்.

எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்? உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை கண்டுகொள்ளாமல் தொண்டைக்கு வைத்தியம் பார்த்திருக்கிறீர்கள். சாரி. அவர்களுக்கு உணவுக்குழாயில் கேன்சர் பரவியிருக்கிறது. ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்திருக்கும். ஏறக்குறைய முற்றிலுமாய் அடைபட்டுவிட்டது. இன்னமும் ரேடியம், கீமோதெரபி போன்றவற்றை மேற்கொண்டாலும் அவர்கள் பிழைப்பது கடினம்.

அய்யோ! என்ன சொல்கிறீர்கள் டாக்டர்?” கிருஸ்டி தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

சாரி! மிஸ்டர் கிருஸ்டிராஜ்.  இட் ஈஸ் டூ லேட். அதிகபட்சமாய் அவர்கள் இன்னமும் இரண்டு மாதங்கள் தான் உயிருடன் இருப்பார்கள். நான் சொன்ன வைத்தியங்கள் செய்து அவர்களை மொத்தமாய் உருக்குலைத்து  அவர்கள் உயிரை இன்னமும் ஓரிரு மாதங்கள் நீட்டிக்கலாம். உடனடியாய் ஸ்டென்ட் ஒன்றை பொறுத்தலாம் என்று நினைக்கிறேன்.

ஸ்டென்ட்டுன்னா என்ன டாக்டர்?” என்று வரது வினவ,

அது ஒரு ஜவ்வால் மூடிய ஸ்பிரிங் போல இருக்கும். அதை உணவுக் குழாயில் பொறுத்தினால் அடைப்பை விலக்கி ஆகாரம் வயிற்றுக்கு செல்ல வழியேற்படும். முயற்சிக்கலாம்
.
ஏதும் செய்யுங்கள் டாக்டர்.. கிருஸ்டி கையெடுத்து கும்பிட்டார்.

உங்கள் ஊருக்கு பக்கத்து டவுனிலேயே டாக்டர் நந்தகுமார் புற்றுநோய்ப் பிரிவில் மருத்துவம் பார்க்கிறார். உங்களுக்கு இவ்வளவு தொலைவில் தங்கி மருத்துவம் பார்ப்பது சிரமமென்றால் அவரிடம் காட்டுங்கள் . அவர் என் சிறந்த மாணவர்களில் ஒருவர்

சரி டாக்டர். மீண்டும் ஊருக்கு திரும்பினார்கள். சென்னை மருத்துவர் குறிப்பிட்ட டாக்டர் நந்தகுமாரை சந்தித்து சிகிச்சை ஆரம்பமாயிற்று. வனரோஜாவிடம் தொண்டைக்கான வைத்தியம் தான் என்று சொல்லப் பட்டது.

டாக்டர் நந்தகுமார் கிருஸ்டியிடம் படித்த பழைய மாணவராய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கிருஸ்டியிடம் இலவசமாய் டியூஷன் படித்ததாய் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

வனரோஜாவுக்கு ஸ்டென்ட்டும் பொருத்தப்பட்டது. வனரோஜாவுக்கு கான்சர் பற்றி சொல்லவேண்டாம் என்றும் டாக்டரைக் கேட்டுக் கொண்டனர். அக்காவை முடிந்த வரையில் ஏமாற்றப் பார்க்கிறேன் என்று வேதனையுடன் சொல்லிப் போனார் டாக்டர்.

வனரோஜா கொஞ்சமாய் இட்லி சாப்பிட்டாள். ஆசை ஆசையாய் தண்ணீர் குடித்தாள்.

அடுத்த இரண்டு நாட்களும்  கொஞ்சம் ஆகாரம் சாப்பிட்டாள். வாய்வழியே மருந்தும் கொடுக்கப்பட்டது.

முகம் தெளிவாய் இருந்தது. அருகில் இருந்த கிருஷ்டியைக் கேட்டாள், ஏதாவது சாப்பிட்டீங்களா?”

ஏன்? இங்கேயே சமைச்சு போடப் போறியா?”

மாட்டேனா? என்ன வேணும் என் ராஜாவுக்கு?”

எனக்கா?  கேரட் அல்வா பண்ணிக் குடேன்....

சிரித்தார்.. ஆனாலும் கண்கள் காட்டிக் கொடுத்தன.

பண்ண மாட்டேனா என்ன?” என்னங்க இது குழந்தை மாதிரி....

மூன்றாம் நாள் படுக்கையில் சாய்ந்தபடி இருந்த வனரோஜாவை டாக்டர் நந்தகுமார் பரிசோதிக்க வந்தார்.

அக்கா! எப்படி இருக்கீங்க?”

நல்லா இருக்கேன் தம்பி! ஒரு விஷயம்.. எனக்கு கேன்சர்ன்னு உங்க சாருக்கு தெரியுமா?

உங்களுக்கு கேன்சர்ன்னு யாருக்கா சொன்னது. அதெல்லாம் ஒண்ணுமில்லை

எனக்கு எல்லாம் தெரியும். ஒரு மூணு நாள் என் வீட்டுலே இருக்கணும். அதுக்கு ஒரு வழி செய்யேன். இந்த அக்காவுக்காக.ப்ளீஸ்

அதெப்பிடிக்கா? உங்க உடம்பு இருக்குற நெலமைல...

இங்க படுத்திருக்கிறதை வீட்டுல படுத்திருக்க மாட்டேனா? இல்லே, இங்கே படுத்திருந்தா என்னை காப்பாத்திடுவீங்களா?”

நந்தகுமாருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. வாயடைத்துப் போனது அவருக்கு .

சரியக்கா. ஏற்பாடு பண்றேன்.

அன்று மாலையே கிருஷ்டியிடம் வனரோஜாவை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொன்னார். அக்காவுக்கு ஒரு இடமாறுதல் தேவை. மூன்று நாட்கள் வீட்டில் இருக்கட்டும். காலையும் மாலையும் நானே வந்து பார்க்கிறேன் சார்     

 கிருஸ்டிக்கும் வரதுவுக்கும் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. 

வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள். ரோஜா! ஏதும் பயமில்லை.. நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் வந்து விடுவேன். அமைதியாய் கொஞ்சம் தூங்கு. பக்கத்து வீட்டு சுகிர்தம் இங்கயே இருக்கும் . ஏதும் தேவைன்னா அதைக் கேளு. வரதனைப் பார்த்துவிட்டு ஓடிவந்து விடுகிறேன். சரியாம்மா. குனிந்து வனரோஜாவின் நெற்றியில் கிருஸ்டி முத்தமிட்டார். நிமிர்ந்தபோது கிருஸ்டியின் சட்டையை இறுகப் பற்றியிருந்தாள்.

என்னம்மா?

வனரோஜாவின் வேதனை நெருக்கிய முகத்திலும் சின்னப்புன்னகை  விரிந்தது.  என் கூடவே இருங்க.

உன் கூடவே இல்லாமே வேறெங்கம்மா இருப்பேன். ஒரே ஒரு மணி நேரம் தான் .. என் ராணியில்லையா நீ?

போடா கருப்பா!

அலுப்பு, ஆயாசம், இயலாமை, நேசம் எல்லாமுமாய் ஒலித்த வனரோஜாவின் தீனக்குரல்.....

வெகு நாளாயிற்று இந்த வார்த்தைகளைக் கேட்டு.. ஒரு நொடியில் அவள் கண்களில் ஜொலித்ததே அந்த பழைய மின்னல்...

கிருஷ்டிராஜுக்கு நம்பிக்கைத் துளிர்விட்டது.

என் நம்பிக்கை எல்லாமே நீதானே ரோஜா. நோயும் நொடியும் உன் முககாந்தியை ஏதும் செய்ய இயலவில்லையே ரோஜா ! வெப்பம் உருக்க முடிந்தது மெழுகுவர்த்தியைத் தானே? சுடரின் தெளிவும், ஜோதியின் அமைதியும் சாந்தி நல்கியபடிதானே இருக்கிறது.

வரது உன்னைக் கேட்டானே...இத்தனைவலியிலும் எப்படி உனக்கு சிரிக்க முடிகிறது என்று.... வயிற்றின் மேல் கைவைத்தபடி நீ என்ன சொன்னாய்? வலி இங்கதானே அண்ணா. என் வாயிலும் உதட்டிலும் இல்லையே என்றாயே... உனக்கு எப்படி சொல்லத் தோன்றிற்று ரோஜா... என் ரோஜா...   

செவ்வாய், அக்டோபர் 04, 2011

தொழுவத்து மயில் 3


இதுவரை (1)   (2)

வனரோஜா அந்த காலனியிலேயே முக்கியத்துவம் வாய்ந்த மனுஷியாய்   
மாறிபோனாள்.  கல்யாண ஜவுளி எடுக்கவும், நகை டிசைன் தேர்வு செய்யவும் வனரோஜாதான் உடன் செல்ல வேண்டும். ஐயப்ப பூஜைக்கு கோலம் இடவும், கிருஸ்‌மஸ் கோரோல் பயிற்றுவிக்கவும், வனரோஜா தான் முன் நின்றாள். அவ்வளவு ஏன்? கீரைக்காரி முதலில் வனரோஜா கைதொட்டு கீரை வாங்கிய பின் தான் 'கீர..கீரெய்' என்று குரலெடுத்து விற்கத் தொடங்குவாள்.

வனரோஜாவை தெருப்பிள்ளைகள் அக்கா அக்கா என்று சுற்றிவந்தன. அவர்களுக்கு கதைகள் சொல்வது, பாட்டுபோட்டி பேச்சுபோட்டிகளுக்கு அவர்களைத் தயார் செய்வது என்று அவளுக்கு நிறைய வேலை இருந்தது. ஊர்க் குழந்தைகளெல்லாம் தன் குழந்தைகளாய் ஆகிப் போனதாலோ என்னவோ, அவளுடைய தாய்மை அத்துடன் திருப்திபட்டு விட்டது. கிருஸ்டி வனரோஜா திருமணமாகி நாலு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்பது ஒரு குறையாய் அவர்களுடைய சுற்றத்துக்கு தோன்றத் தான் செய்தது. வனரோஜாவுக்கு இந்தக் கேள்வி வேதனை தந்தது.

துரை! நமக்கு பிள்ளை இல்லையே என்று உங்களுக்கு வருத்தம் உண்டு தானே?” ஒருநாள் இரவு தலையணை உறையை மாற்றியபடியே வனரோஜா கேட்டாள்.

சின்னத் தயக்கத்திற்கு பின் கிருஸ்டி சொன்னான்,  ரோஜா! நம்மிருவரின் அன்பையும் பாசத்தையும் இன்னொரு ஜீவனோடு பங்கு வைக்க வேண்டாம் என்பது கர்த்தரின் சித்தம் போல் இருக்கிறது. நானுக்கு, நீயெனக்கு. விடு அந்தப் பேச்சை.

வனரோஜா அவனை அணைத்துக் கொண்டாள். கருப்பா!

சரி! படும்மா! ஏனோ கிருஸ்டியின் குரலில் சொல்லவியலாத வேதனை தொனித்தது. இந்த வேதனையை என் வனரோஜா வாழ்நாள் முழுதும் தாங்கவியலுமா? போனமுறை அவளுக்கு குழந்தை பெற வாய்பில்லை என்று சென்னையில் பரிசோதித்த டாக்டரம்மா சொன்னாளே! அதை அவளிடம் 'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று மறைத்தல்லவா நம்பிக்கை வார்த்தைகளை விதைத்தோம்?'

ஏய் கருப்பா! என்ன யோசனை ? கொஞ்சம் சிரிக்கக் கூடாதா ! இன்னைக்கு எங்கயோ ஒரு நாட்டுப்பாடல் வரி ரெண்டு பார்த்தேன். சொல்லவா?” அவனை திசை திருப்ப ஏதோ நாடகம்...

எதைப்பத்தி ரோஜா?”

எல்லாம் உங்க அழகான கலரு பத்தித்தான்!

சரி! சொல்லு

நாவப் பழத்தினிலே,
நல்காயாம் பூவினிலே
காக றெக்கையிலே
நல்கருப்பு எங்க மச்சான்.

உன்னை என்ன செய்யிறேன் பாரு! சிரித்தபடி அவளை அவன் துரத்த.... இரவு வெட்கப்படக் காத்திருந்தது.

அதற்கு பிறகு எப்போதும் பிள்ளையில்லையே என்று ஒருபோதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. மற்றவர்கள் பேசும்போதும் ஒரு பெரும் தோரணையோடு சிரிப்பொன்றையே வனரோஜா பதிலாய்த் தந்தாள். மீண்டும் குறும்பும் பாட்டும் அவளிடத்தில் குடிபுகுந்தன..

ஹஹ்...'நல்கருப்பு எங்க மச்சான்'....  கிருஸ்டிராஜுக்கு சிரிப்பு பொங்கிவந்தது. எவ்வளவு குறும்பு?!. நாட்டுப்பாடல்களிலே தான் எத்தனை ஆர்வம் உனக்கு?. எவ்வளவு பாடல்கள்? எவ்வளவு விடுகதைகள்? என் ரோஜா! உனக்கு இன்று நாற்பத்தெட்டு வயது என்று யாரும் சொல்ல முடியுமா?
ஒரு குழந்தை போல் தானே உன் பேச்சும் உருவமும்... 
'கருப்பு' பற்றி இன்னொரு பாடல் கூட ஒருமுறை சொன்னாயே ரோஜா!
சட்டென வரிகள் மறந்துவிட்டதே? ரோஜா.. அம்மாடி ரோஜா!
அந்தக் கருப்பன் பாட்டு.... வேண்டாம்...இப்போது எழுப்ப வேண்டாம்...  காலை பார்த்துக் கொள்ளலாம்.


அன்றும் இன்றும் கிருஸ்டிக்கு ஒரே ஒரு நண்பன் வரதராஜன் தான். கிருஸ்டி மாதிரி வரதுவும் அதிகம் பேசமாட்டார்.  வரதுவின் மனைவி பத்மா வனரோஜாவுக்கு நல்லதோழியும் கூட. அன்று கிருஸ்டியின் பிறந்த நாள். கிருஸ்டிக்கு மிகவும் பிடித்த கேரட் அல்வா செய்திருந்தாள். வாழ்த்த வந்த வரதுவுக்கு அல்வாவின் ருசி தேவாம்ருதமாய் இருந்தது. வனரோஜாவின் சமையலுக்கு பரம ரசிகன் வரது.

அதெப்பிடி உனக்கு மட்டும் இப்படி ஒரு கைமணம் வனரோஜா?”

கைமணம் என்னண்ணா? மனசும் கண்ணும் சமைக்கிற வாணலியிலேயே இருந்தா தானா அல்வா ருசிக்குமண்ணா!

பத்மா இடைமறித்தாள். போ ரோஜா! நானும்தான் இதெல்லாம் செய்யுறேன், ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மாதிரி!.... என்னங்க.! ஒண்ணும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று வரதுவின் தோளில் தட்டினாள் பத்மா.

எதையாவது சொல்லி, எப்போதோ கிடைக்கிற அல்வாவுக்காக தினமும் கிடைக்கிற மோர்சாதத்தை கெடுத்துக்குவானேன்! என்று கிருஸ்டி சொன்னபோது அனைவரும் சிரித்தார்கள்.

நல்ல நட்பு, நல்ல மனைவி, நல்ல ரசனை, நல்ல மனசு...... வேறென்ன வேண்டும்?

என் ப்ரிய ரோஜா! நீ என் வயிற்றுக்காய் சமைத்தாயா இல்லை என் ஆன்மாவை பசியாற்றுவதற்காகவா? எத்தனை நறுவீசு உன் செயல் அனைத்திலும்?... அரிசியை களைவதாகட்டும், வீடு பெருக்குவதாகட்டும்.... வீணையை லயித்து மீட்டும் ஒரு உன்னதக் கலைஞனின் கைவண்ணம் போலல்லவா இருக்கும்? எதிலும் ஒரு ஆர்வம், எதிலும் ஒரு ஈடுபாடு, எதிலும் ஒரு அர்ப்பணிப்பு உனக்கு!

உனக்கு நினைவிருக்கிறதா ரோஜா? முதன்முதலாய் இந்த வீட்டுக்கு மருமகளாய் நீ வந்த அன்று இதே கேரட் அல்வாவைத் தானே செய்தாய்? அப்பா எவ்வளவு ரசித்து உன்னைக் கொண்டாடினார்?

போன வாரம் உன்னை சும்மா விளையாட்டாகத்தானே அதை செய்து கொடு என்று கேட்டேன் ? அதை நினைவில் வைத்து இன்று கூட அதே கேரட் அல்வாவைத்தானே செய்து வைத்திருக்கிறாய்? ஒரு வாயாவது அதை நீ சாப்பிட்டுப் பார்த்தாயா ரோஜா? நன்றாகத்தானே இன்றும் செய்திருக்கிறாய் இல்லையா ?  

 (தொடரும்)

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

தொழுவத்து மயில் 2




ரோஜா! ஒண்ணுகேட்டா கோவிப்பியாம்மா ?”

சொல்லுங்க துரை!

வனரோஜா கிருஸ்டியை துரை என்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

"ரோஜா! என்னையும் என் நிறத்தையும் சகிச்சிகிட்டு உன் அப்பாவின் சொல்லுக்காகத்தானே என்னுடன் வாழுறே இல்லையா ?"

வனரோஜாவின் முகம் வாடியது. நீங்க ஏன் இப்படியெல்லாம் நினைக்கணும்? இந்த அழகும் நிறமும் அப்படியேவா இருக்கும்? உங்களை கர்த்தரெனக்குத் தந்த ஆசீர்வாதமாய் எண்ணி இருக்கேன். இனி எப்போதும் இப்படிக் கேட்டு என்னை வேதனைப்படுத்த வேண்டாம்.

இல்லை ரோஜா! எனக்கெப்போதும் இந்த தாழ்வு மனப்பான்மை இருப்பதுதான். இனிமேல் கேட்கமாட்டேன்"

தலையைக் குனிந்து கொண்டான் கிருஸ்‌டி. 

ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோல் அவனைப் பார்த்தாள் வனரோஜா.
'இதென்ன கிறுக்கடா என் அத்தானே! காதல் அலைமோதும் உன் பார்வைக்கு முன், யாரும் வேதனைப்படலாகாது என தன்னை பிறற்காக்கி வாழும் உன் நெறியின் முன்.. மங்கும் நிறம் எதற்கடா? 
உன் சுயஇரக்கத்துக்கு மருந்து என்னிடம் இருக்கிறதடா ! என் அத்தானே!' 

மெல்ல அவன் பின்புறம் வந்து அவனை இறுக அணைத்தபடி காதருகே கிசுகிசுத்தாள்.. 
டேய்! கருப்பா!

ஒரு சின்ன அதிர்ச்சி! ஒரு பெரிய மூர்க்கம்!! வெட்கப்பட்ட இரவோ விடியத் துணியவில்லை.

எப்போதாவது கண்கள் பளிச்சிட கிருஸ்டியை அவள் கருப்பா என்றழைப்பதுண்டு.

எப்போது கடைசியாய் அப்படி அழைத்தாள்? ஆம்.! இருபத்தியைந்தாம் மணநாளுக்கு வெள்ளைநிற புது ஜிப்பா அணிந்தபோது..... கருப்பா! கருப்பா!

வனரோஜாவை கிருஸ்டியின் வீட்டில்விட முதன்முதலாய் அழைத்துவந்த அந்தோணி சார் சொன்னார்.

சவரிமுத்து ! ஒரு விஷயம்.. நம்ம வனரோஜா அவளுடைய பள்ளிக்கூட நாட்களிலேயே மரக்கறி உணவு இயக்கத்தில் ஏற்பட்ட ஈர்ப்பில் முழு வெஜிட்டேரியனாகவே மாறிப்போனாள்."

"அப்படியா?"

"ஆமாம் சவரிமுத்து அவளின் பிடிவாதத்தால் அசைவம் எங்கள் வீட்டுக்கே அன்னியமாயிடுச்சி."

"அதனாலே?"

"வனரோஜா சைவம் மட்டும் தான் சமைக்கும் சாப்பிடும். அது கவுச்சி எடுக்காது. கருவாடு வாசனை பட்டாலே குமட்டும் அதுக்கு.
சாப்பாட்டு விஷயத்தில் அவள் போக்கிலேயே விட்டுவிடு சவரி! .

இதென்ன அக்கிரமமா இருக்கு? அதெப்பிடி ஒரே வீட்டில் சைவம் அசைவம்னு ரெண்டு சமையல் முடியும் அந்தோணி?”

சவரிமுத்து கொஞ்சம் சத்தமாய்ப் பேசத் தலைப்பட்டார்.

சவரி! நான் சொல்லவந்தது...

நாளையிலிருந்து நம்மவீட்டுலையும் கீரைத்தண்டு, பருப்புப்பொடி, வத்தக்குழம்பு, மோர்சாதம், நெல்லிக்கா ஊறுகாதான். எங்களுக்கு மட்டும் இனி கருவாடு கொமட்டாதா அந்தோணி?”

அந்தோணிக்கு கண்கள் கலங்கின. உள்ளிருந்து ஓடிவந்த வனரோஜா சவரிமுத்துவின் கால்களைக் கட்டிக்கொண்டாள். கண்ணீர் உகுத்தாள்.

சேசுவே சேசுவே என்று மனத்துள் அரற்றினார் சவரிமுத்து.

எல்லாம் நேற்றுபோல் இருக்கிறது. பக்கவாதம் வந்து சவரிமுத்து படுக்கையில் விழுந்த போது வனரோஜா அவருக்கு தாயாய் மாறிப் போனாள். ஒரு அருவருப்பு, ஒரு முகச்சுளிப்பு உண்டா? அவருக்கு தினமணி வாசிப்பதிலிருந்து, ஏதேதோ கதைகள் பேசி, சவரிமுத்து தனிமையை உணராமலிருக்கச் செய்தாள். வீட்டின் கூடத்தில் நடக்கும் ஜெபத்தை, சவரிமுத்து படுத்திருந்த அறைக்கு மாற்றினாள். அவள் ஜெபத்தை மேற்கொள்ளும் முறைகள் ஒரு தெய்வீகமான சூழலை ஏற்ப்படுத்தின. நாளும் ஏதோ ஒரு பாடலோ பிரசங்கத்தையோ கூடுதலாய்ப் படிப்பாள்.

அன்று ஈஸ்டர். அன்றைய ஜெபத்தில் வனரோஜாவின் குரல் தேவமாதாவையே அழைத்து வந்தது.

மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!
தெருள்தரு கலையுருவே! செயிரறு மனுவுருவே!
பொருள்தரு மணியுருவே! பொழிமண அடிதொழுதேன்.

உரையில கலைநிலையே! உயர்அற மடையுரையே!
கரையில படற்கடலே! கதியுயிர் பெறுகரையே!
வரையில சுகநிலையே! வளர்தவ மடவரையே!
புரையில மனுமகனே! பொதிமல ரடிதொழுதேன்!

மருமலி மலர்நிழலே! மறைமலி யுயர்பயனே!
திருமலி கரமுகிலே! சிவமலி தனிமுதலே!
இருமலி யுலகுளரே! இணரொடு தொழும் அடியே!
குருமலி யரநெறியே! கொழுமலர் அடிதொழுதேன்!

ஏதோ ராகத்தில் வார்த்தைகள் மலர்களாய் விகசித்தன.
சவரிமுத்துவின் கண்களில் நீர் வழிந்தது. இப்படியொரு குழைவும்,தெய்வீகமும் மிளிரும் பாடலை அவர் இதற்குமுன் கேட்டதில்லை. 

'என்ன பாடலிது' என்பதாய் தலையசைத்தபடி கண்களால் அவர் வினவ, வனரோஜா தேம்பாவணி என்றாள்.

இரண்டுமூன்று நிமிட மௌனம்.

'எங்கும் நிறைந்திலங்கும் ஏகப் பரம்பொருளே! உமக்கான தோத்திரங்களை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட அயல்நாட்டவரைக் கொண்டு எழுதுவித்து, அதை என் இல்லம் துலங்கவந்த தேவதையின் வாக்கினிலே வெளிப்படுத்தினீர். அதை இந்த எளியவனின் இதயங்குளிர கேட்கச்செய்தீர்.. இதுபோதும் எனக்கு...சேசுவே! சேசுவே!!'

கண்களை மூடிய சவரிமுத்து கொழுமலரடியோடு இரண்டறக் கலந்து விட்டார். 

அவரின் மறைவுக்காய் வனரோஜா வேதனைப்பட்டது மிக அதிகம்..

கிறிஸ்டிராஜுக்கு வனரோஜாவின் அந்த தேம்பாவணி பாடல் வரிகள் காதில் இப்போது ரீங்கரித்தன. 
என் செல்வமே!
எனக்காய் இப்போது, ஒரே ஒருதரம் மட்டும் அந்தப் பாடலைப் பாடுவாயா?

வேண்டாம். இப்போது வேண்டாம்.  அயர்ந்திருக்கிறாய்..... 

நீ பாடினால் தானா? 

இந்த இரவு என்னைச் சுற்றி எண்ணப் புற்றுகளை எழுப்பிவிடும்...... அதனுள்ளே உன் பேச்சும் பாட்டும் ரீங்கரிக்கும்.
என் மயிர்க்கால்களெல்லாம் காதுகளாய் மாறி அதையெல்லாம் உள்வாங்கும்.
அந்த மோனத்தை, தவ அதிர்வை உனது இருப்பு கூட கலைத்து விடுமோ.. என் செல்வமே... 
எதற்கு இருவராய்ப் பிறந்தோம்? நாம் எதற்கு இருவராய்ப் பிறந்தோம்??

( தொடரும் )

வியாழன், செப்டம்பர் 29, 2011

தொழுவத்து மயில்


ஏங்க்கா! பொண்ணு அம்மாம் அளகாமே?”

அத்தையேண்டி மேரி கேக்குறே? போன கிறிஸ்மஸப்போ பிரபாத்ல சிவாஜிபடம் ஒண்ணு பாத்தோமே?”

ஆமாங்க்கா! உயர்ந்தமனிதன்...

ஆங்! அச்சு அசப்பா அதுல வர்ற குட்டிமாதிரியே தான் இருக்கா

வாணிஸ்ரீயாக்கா?”

த.. அது எதுக்கு தொம்ப மாதிரி.? மயிலு கணக்கா கழுத்த சிவுக்சிவுக்குன்னு வெட்டிக்கிட்டு ரெட்டைபின்னல் போட்டுகிட்டு சிவ்க்குமார் கூட ஆடுமேடி? எது என்ன பாட்டு எளவு வாய்க்கு வல்லே

அட அதாக்கா. என் கேள்விக்கு என்னா பதில்ன்னு அயனான பாட்டக்கா. அந்தப் பொண்ணு பாரதி. அய்யோ..அம்சமான பொண்ணுக்கா. என்று வியந்த மேரி சற்று தாழ்ந்த குரலில் தொடர்ந்தாள். பாரதிக்கு கழுத்துக்கு கீழே ஒரு மச்சம் இருக்கும். அதான் அவ்ளோ அதிஷ்டம் அதுக்கு! ஏங்க்கா? உங்கண்ணன் மரிமவளுக்கும் எதுனா அப்படி மச்சம் இருக்கா பாத்தியாக்கா?” என்றாள் பீரிடும் சிரிப்புடன்

 மரிமவளுக்கு மச்சம் இருக்கிறதோ இல்லையோ, அண்ணன்  புள்ளை கிறிஸ்டிராசுக்கு உடம்பு முச்சூடும் மச்சம். அவன் ஈரப் பனை நெறத்துக்கும் மூஞ்சிக்கும் இப்பிடியா ஒரு அபசரஸ்ஸு வந்து மாட்டும்? எத்தனை கொடுப்பினை எங்கண்ணனுக்கு?”

மேற்திண்ணையில், தன் அத்தை தெரேசம்மாளுக்கும், அண்டைவீட்டு மேரிக்கும் நிகழ்ந்த உரையாடலை உள்ளறையில் படுத்திருந்த கிறிஸ்டிராஜும்  கேட்டான். அத்தை குறிப்பிட்ட மச்சக்கார மாப்பிள்ளையும் அவனேதான். தெரேசம்மா சொல்வது உண்மை. கிறிஸ்டிராஜ் நல்ல கருப்பு.. சிறுவயதில் கண்ட வைசூரி உடம்பில் பல அம்மைத்தழும்பு குழிகளை விட்டுச் சென்றிருந்தது.. மூக்கின் மேலேயே மூன்று குழிகள்.. ரெண்டு வருஷமாய் பட்டை ப்ரேமுடன் மூக்குக் கண்ணாடிவேறு.. அம்மாவிடமிருந்து வந்த முகக்களையும்,சிரித்தமுகமும் தான் இதையெல்லாம் நிரவியிருந்தது .

ஆனால் போனவாரம் என்னென்னவெல்லாம் நடந்து விட்டது. ஒரு சொர்க்க வீச்சில், நினைத்தே பார்த்திராத அவன் திருமணமும் முடிந்து, தன் தகுதிக்கு எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு தேவதையை தனக்கு வாழ்க்கைத்துணையாய் வழங்கிவிட்டு போய்விட்டது.

கர்த்தரே! இதென்ன கருணை! என்னுடன் விளையாட திருவுளம் கொண்டீரா?. இந்த அசடனுக்கு ஒரு பொக்கிஷத்தை தந்து சென்றீரே. என்ன உமது உத்தேசம்!  

ஒரு வாரமாய் இதைத்தானே கிறிஸ்டிராஜ் ஆண்டவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்?

போன வெள்ளிக்கிழமை, அப்பா சவரிமுத்து  மற்றும் சில உறவினரோடு, தன் தாய்வழி சொந்தமான அந்தோணிசார் மகள்  வனரோஜாவின் கல்யாணத்திற்காய் திண்டிவனம் சென்றிருந்தார்கள். தூரத்து சொந்தம் தான்.ஆனால் சவரிமுத்துவும் அந்தோணிசாரும் நெருங்கிய நண்பர்கள். அவ்வளவு ஏன்? இப்போது கிறிஸ்டிராஜ் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழாசிரியர் வேலைகூட அந்தோணிசாரின் பரிந்துரையில் கிடைத்தது தானே?

எல்லா உறவினரும் நண்பருமாய்க் கூடியிருந்த நேரம். மாப்பிள்ளை பம்பாயில் வேலைபார்க்கிறாராம். வசதியான குடும்பமாம்.

அந்த அதிகாலை ,திடீரென்று பெரியதோர் சலசலப்பு அந்தோணிசார் வீட்டாரிடம் புறப்பட்டது. மாப்பிள்ளை கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திவிடும்படியும், தான் வேறொரு பெண்ணை விரும்புவதாயும் அவன் வீட்டாரிடம் தகவல் சொல்லி கடைசி நேரத்தில் அங்கு வருவதைத் தவிர்த்துவிட்டான். பையனின் தகப்பனார் நேரில் வந்து அந்தோணிசாரிடம் சொல்லி அழுதுவிட்டு தன்னை மன்னிக்கும்படி பலவாறாய்க் கெஞ்சிவிட்டு கிளம்பிவிட்டார். பிள்ளையை பெற்ற பாவத்திற்கு  வேறு என்ன செய்ய முடியும்?

அந்தோணி உடைந்து போய்விட்டார். விஷயம் கேள்வியுற்று அவரைத் தேற்றவெண்ணி சவரிமுத்து அந்தோணியை  நெருங்கினார்..

கலங்காதே அந்தோணி! ஆண்டவன் ஏதோ பேரிழப்பைத் தடுக்கத்தான் இந்த அளவில் நிறுத்தினார். நம் வனரோஜாவின் அழகுக்கும் குணத்துக்கும் ஆயிரம் மாப்பிள்ளைக் கிடைக்கும். நானே கொண்டுவந்து நிறுத்துகிறேன் பார் ஒரு ராஜகுமாரனை!

என்ன செய்வேன்.. என்ன செய்வேன்! சவரிமுத்து! இந்த திருமணத்திற்கு எவ்வளவு பேர் கூடிவிட்டார்கள் பார் ? இன்னமும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்து கொல்லென்று போய்விடாதா?”

திடீரென உறுதியாய் எழுந்து நின்றார் அந்தோணி. ஒரு.. ஒரு நிமிஷம் இங்கேயே இரேன்.. இதோ வந்துவிட்டேன்.

அவர் வெளியே வர பதினைந்து நிமிடம் ஆயிற்று.

ஓடி வந்து சவரிமுத்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டார் அந்தோணி.

சவரி! நீ சொன்னயே ஒரு ராஜகுமாரனைக் கொண்டு வருவதாய்... உன் வீட்டு ராஜகுமாரனை இப்போதே ஏன் வனரோஜாவுக்கு கட்டிவைத்து என் மானத்தைக் காப்பாற்றுவாயா?”

விக்கித்துப் போனார் சவரிமுத்து. அந்தோணி! என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? வனரோஜா எங்கே?இவன் எங்கே? அவளுக்கு எந்தவகையிலும் கிறிஸ்டி பொருத்தமில்லையே? உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்காதே. உன் பெண் இதற்கு சம்மதிப்பாளா?” படபடவென்று வந்தது சவரிமுத்துவுக்கு.

வனரோஜாவுக்கு சம்மதம். நம்ம கிறிஸ்டிக்கென்ன? என்னப்பா கிறிஸ்டிராஜ்? வனரோஜாவை ஏற்றுக்கொள்ள சம்மதமா? சொல்லுப்பா அந்தோனியின் குரல் உடைந்து கேவலாயிற்று.

ஐயா... நான் போய் உங்களுக்கு... கிறிஸ்டிக்கு வார்த்தைகள் வரவில்லை.

சவரிமுத்துவின் தோள்களை இறுக்க அணைத்தவாறே தனியே அழைத்துச் சென்றார் அந்தோணி. திரும்பிய இருவர் கண்களிலும் கண்ணீர்.

கிறிஸ்டி! வனரோஜாவை மருமகளாய் ஏற்றுக் கொண்டுவிட்டேன். என் நண்பனுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். எங்கள் இருவர் மானமும் உன் ஒரு சொல்லில்.

சரியப்பா தீனமாய்த் தேய்ந்தது கிறிஸ்டியின் குரல் .

அந்த நொடியிலிருந்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் திராணிழந்து சாவிகொடுத்த பொம்மைபோல் ஆனான். யார்யாரோ சொன்னவண்ணம் செய்தான். சொல்லச் சொன்ன வசனங்களைச் சொன்னான். குலுக்கிய கரங்களும், வாழ்த்திய இதழ்களும் அவனை கேலி செய்கிறதா? வனரோஜாவுக்கு நான் கணவனா? மயிலுக்கும்,மாட்டிற்கும் கல்யாணமா? கர்த்தரே!

திருமணம் எதிர்பாராமல் நடந்துவிட்ட படியால் உள்ளூர் நண்பர்களுக்காய் ஞாயிற்றுகிழமை ரிசப்ஷன் போல ஏற்பாடு செய்வதற்காய் சவரிமுத்து வெளியில் போயிருக்கிறார். தலைவலி என்று இவன் உள்ளறையில் படுத்தபடி. இன்னமும் ஏதெதையோ திண்ணையில் அலசிக்கொண்டிருந்தாள் தெரேசம்மாள்.

சவரிமுத்துவின் ஏற்பாட்டின் பேரில், திருமணம் முடிந்தவுடன் வனரோஜா அவள் வீட்டிலேயே அந்தவாரம் இருந்தபின்னர்  நாளை இங்கு அந்தோணி அழைத்து வந்து விடுவார். இந்த தொழுவத்துக்கு கலாபமயிலை இழுத்துவந்து கட்டப் போகிறார்.

......................................................

...........................................................................இப்படித்தானே தன் வனரோஜா தன்னைவந்து சேர்ந்தது? போனமாதம் தானே மணநாள் வெள்ளிவிழா கொண்டாடினோம்.. இத்தனை வருட தாம்பத்தியத்தில் வனரோஜா தன்னை ஒரு சேயாய்,மாணவனாய்நண்பனாய் எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டாள்? எவ்வளவு உற்சாகம் கொப்பளிக்கும் அவள் செயல்பாடுகளில்..

தமிழய்யா கிறிஸ்டிராஜுக்கு தாகம் எடுத்தது.

அவருடைய வனரோஜா ஸௌந்தர்யம் துலங்க கண்முன்னே...

ரோஜா மெல்லக் கூப்பிட்டார். தன் குரல் தனக்கே  கேட்கவில்லை.

தன்முன்னே நீண்ட இரவு இரைவிழுங்கிய மலைப்பாம்பாய் மெல்ல புரண்டபடி இருக்கிறது.

அவர்களிருவரும் வாழ்ந்த கணங்களை அசைபோட்டபடி,அவள் அருகாமையில், முட்டிமோதும் நினைவலைகளை வெறித்தபடி எங்கோ சஞ்சரித்தார். காலம், நிகழ்வு எல்லாம் பனிக்கட்டியாய் உறைந்து ஏதோ ஒரு நினைவுநாடியின் மெல்லிய துடிப்பொன்றே அவரையும்வனரோஜாவையும் ,இந்த உலகத்தையும் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணம்........

(தொடரும்)

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

ஒரு சிகிச்சையின் ராகம்


அண்மையில் அறுவை சிகிச்சைக்காய் மருத்துவமனையில் நானிருந்தபோதுவலைப்பூவிலும்,மின்னஞ்சலிலும்,அலைபேசியிலும் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...

நலந்தானா?’ என்று உலகத்து சோகமெல்லாம் முகத்தில் தாங்கி துடிக்கும் பத்மினியைப் பார்த்து, உதடுகள் துடிக்க கண்கள்கசிய உணர்ச்சிக்குவியலாவாரே நடிகர் திலகம் சிவாஜி.......
நானும் அவர் போலானேன்.

எனக்கு அறுவைசிகிச்சையான உடற்பகுதி அப்படி ஒன்றும் பெருமையாய் சொல்லிக் கொள்ளக் கூடிய இடம் இல்லை.

பிராஸ்டேட் என்லார்ஜ்மெண்டுக்காக அறுவைசிகிச்சை நடந்தது. கடந்த சிலமாதங்களாகவே மூச்சா போவது பெரிய வேதனையாக இருந்தது. போனாமோவந்தோமா  என்றில்லாமல், கொஞ்சம்கொஞ்சமாக மீண்டும்மீண்டும் போகவேண்டியிருக்கும்.

அண்மைக்காலமாய், அதிகாரிகளுக்கு ஒரு செஷன் ஒன்றரை மணி நேரம் எடுத்தபின்  பரபரப்பாய் டாய்லெட்டுக்கு ஓடுவேன். வகுப்பு முடிந்தவுடன் வழக்கமாய் சந்தேகம் கேட்கவோ, சிலாகிக்கவோ சூழ்ந்து கொள்ளும் அதிகாரிகளைப் பார்த்து முட்டிக்கிச்சுடா, நான் வழியவிடுமுன்னர் வழியைவிடு என்று கத்தவேண்டும் போலிருக்கும்.

டாக்டர் அறிவுரையின்படி,ஹைதராபாதில் அறுவைசிகிச்சை செய்து கொண்டேன். ஆபரேஷன் ஆனவுடன் தனியறையில் விட்டார்கள்.இரண்டு நாள் டிரிப்ஸ் மட்டும்தான். வலி பின்னியெடுத்தது.... இப்போதும் பின்னுகிறது.. இன்னமும் ஒரு வாரம் பின்னுமாம்.. பின்னட்டும்...

என் தங்கமணியோ ஆடிப்போய்விட்டாள்.. இரண்டாம் நாள் சாப்பிடலாம் என்றார்கள். பூமாதிரி இட்டிலியை ஊட்டிவிட்டாள். எனக்கோ வெட்கமும், காதலும் ஒரேநேரம் முட்டிக் கொண்டது. சீச்சீ.. இதுவுமா முட்டிக்கணும்...

சின்னதாய்க் கண்ணடித்தவாறே,”எப்போ எனக்கு கடைசீயாய் ஊட்டிவிட்டே சொல்லேன்!

சாப்பிடும் போது பேசினா புரையேறும் என்று பதிலாய் அவள் சொன்னாலும், அவள் பார்வையோ வாயிலேயே ஒண்ணு போட்டேன்னா என்பது போலிருந்தது. அதற்குப்பின் பானிபூரிக்காரன் முதலில் கொடுத்ததை விழுங்குமுன்பே அடுத்தபூரியை கையில் திணிப்பானே அந்த மாதிரியில்லே மீதி இட்லியை வேகமாய்த் வாயில் திணித்தாள்?

என்னுடைய நெருங்கிய நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு.

இப்போ எப்படி இருக்கே?”

ரொம்ப வலிக்குதுடா!

சிரித்தான்... காலேஜில இன்பவலின்னு ஒரு கவிதை எழுதினே   தெரியுமா?”

நானே மறந்து போனதையெல்லாம் இன்னுமாடா ஞாபகம் வச்சிருக்கே?”

மீண்டும் சிரித்தான்.. பிராஸ்டேட் பிரச்னை அறுபது வயசுக்கு மேல தானே வரும்? சரிசரி.. நீ பிஞ்சிலேயே பழுத்தவன் இல்லையா? அது இப்ப வந்ததும் ரைட்டுத்தான்!

உதைபடுவே! அது என்ன வலி கவிதை?”

படுவம் வந்த விரலுக்கு எலுமிச்சம்பழம் சொருக போறப்போ, நீயிட்ட மருதாணியை மறைக்கும்னு பழத்தை வேணாம்னு உருட்டிவிடுவே..

நினைப்புக்கு வரல்லையே?”

வரவேணாம்... இப்போ வந்தா ரத்தக்களரியாயிடும்.

சரி!அப்புறமா பேசுடா..

,கே! சிநேகம் காட்டும் செவிலிப்புறாவேன்னு நர்ஸைப் பார்த்து கவிதை எழுதாம பொத்திக்கிட்டு படு....

சரிடா! சிரிக்க முடியலே! பை !!

எவ்வளவு வருஷமானால் என்ன? நட்பு மனத்தை லேசாக்கி விடுகிறது..

இன்பவலி கவிதை நினைவுக்கு வரவேயில்லை.

மாறாக தூக்கம் வராமல் இன்பவலி பின்னத் தொடங்கியது.

என்னப்பா? வலிக்குதா?" அருகிருந்த மகனின் கரிசனம்..

நீ தூங்கு...” ஹெட்போனை மாட்டிக் கொண்டு படுத்தான்.

வலி, மயக்க மருந்து, வலி மாத்திரையால் வந்த மப்பு..

கண்கள் சொருகத் தொடங்கின....

டி.எம்.எஸ் ,சுசீலாம்மா இருவரும் என் படுக்கைக்கு அருகில் வந்தார்கள்..

செல்லத்துக்கு தூக்கம் வரல்லியா?”

இல்லேம்மா.... ரொம்ப வலியா இருக்கு..

சரி.. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பாடுவோமாம்.
சமர்த்தா தூங்கிடுவியாம்

ரொம்ப தேங்க்ஸ்ம்மா

இன்னமும் கொழந்தையாவே இருக்காம் பாரு...
இது டி.எம்.எஸ்,வாஞ்சையாக என் தலையைத் தடவியபடி.....

சரி. சுசீலா ஆரம்பிங்க..

விழியே விழியே உனக்கென்ன வேலை. விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை...... பாடல் எங்கும் நிறைகிறது.

வலிக்குதும்மா

சரி இதைக் கேளு... ஞாயிறு என்பது பெண்ணாக...

 நாலுநிமிட நந்தவன உலா இருவரின் கைகளையும் கோர்த்தபடி..

போறுமா?”

ஹூஹூம்

பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா?

உம்ம்ம்ம்....... இன்னொரு பாட்டு பிளீஸ்

பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வரவேண்டும்

இன்னம் ஒண்ணே ஒண்ணு பாட்டு.. குழறும் குரலில்...

நீலநிறம்,வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்......

இன்னம் கூட ஒண்ணு.....

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்

அந்த அத்தைமக பாட்டு டி.எம்.எஸ்..

ஒத்தையடிபாதையிலே அத்தமக போகையிலே காலடியோ மண்மேலே.. அம்மாடி அவ கண்ணடியோ என் மேலே

சூப்பர். ஒண்ணே ஒண்ணு இன்னும்.

டேய்.இதுதான் கடைசி.. இனமே கேட்டா அடிதான் இது டி.எம்.எஸ்

சரி..

மனம் என்னும் மேடை மேலே,முகம் ஒன்று ஆடுது

கானமழை பொழிந்து... சிறுதூறலாய் அதன் ரீங்காரம் இன்னும்...

டி.எம்.எஸ் ! ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா இது என்ன ராகம்? ஆபோகியா? மத்யமாவதியா?”

யோசிக்கும் டி.எம்.எஸ்

பாடுங்க! ராகத்தைப் பிடிப்போம்?”என்றேன்.

டி.எம்.எஸ் துவங்க சுசீலாம்மா தொங்கா! என்றபடி உடன்பாடி முடித்தார்கள்.

எங்கோ அமிழ்ந்தபடி நான் மெல்லமெல்ல...


இன்பவலி....
    செவிலிப்புறா....
        நீயிட்ட மருதாணி...
               எலுமிச்சம்பழம்.....
                    கதீட்டர்.... ஐ.வீ ப்ளூயிட்
                             சுசீலாம்மா .....
                                      டி.எம்.எஸ்... டி.எம்.எஸ்