சுகிர்தத்தை வனரோஜாவுக்கு துணையாய் வைத்து விட்டு மேற்கொண்டு வைத்தியம் செய்வது பற்றி தீர்மானிக்க
டாக்டர் நந்தகுமாரைப் பார்த்தார் கிருஸ்டி. வரதுவும் உடனிருந்தார்.
“கிருஸ்டி சார்! நான் சொல்வதை
உணர்ச்சிவசப்படாமல் கேளுங்கள்” என்று பீடிகையுடன் டாக்டர்
துவங்கினார்.
“உணவுக் குழலுக்கு ஸ்டென்ட் வைத்து திரவ
உணவாவது வயிற்றுக்குப் போகும் என்று தான் முயற்சி செய்தோம். ஆனால் புற்று
மூர்க்கமாய் இரைப்பைக்கெல்லாம் கூட பரவி விட்டது சார். இனி...... மன்னியுங்கள். நான்
நாட்கணக்கில் கூட உத்தரவாதம் தர இயலாது. மேலும் சிகிச்சை என்று அக்காவை
அலைகழிக்காமல் அமைதியாய் அடங்க விடுவது தான் முறை. என்னை மன்னியுங்கள் சார்!”
வரது குறுக்கிட்டார். “டாக்டர்!
எப்பாடேனும் பட்டு..”
அவர் முடிப்பதற்குள் டாக்டர் மறுத்து தலையாட்டினார். “சார்! நாம் முயற்சிகளெல்லாம் கடந்த நிலையில் இப்போ இருக்கிறோம்.. அக்காவுக்கு
நினைவும் உயிரும் இருக்கும் வரை அவர்களுக்கு பழைய நல்ல தருணங்களை நினைவூட்டி
அமைதியாய் வழியனுப்புவோம்” கிருஸ்டியின் கைகளைப் பிடித்துக்
கொண்டார்.
“உங்க ஸ்டூடண்ட்டா அக்காவை எனக்குத் தெரியும்.
ஒரு டாக்டராக நெஞ்சுரமும் சகிப்பும் நிறைந்த நோயாளியாயும் இப்போது தெரிஞ்சுகிட்டேன்.
அவர்கள் முடிவை நானும் எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியல்லை சார்! ஆனாலும்
நிதர்சனம் அதுதான் சார். ஐ ஆம் சாரி! வேணும்னா இங்கே திரும்பவும் அட்மிட்
செய்துடுங்க. அக்கா இரண்டே நாட்கள் வீட்டுக்கு போகணும்னு மன்றாடின போது,அவர்கள் ஆசையை நிறைவேற்றவே அனுப்பி வைத்தேன்.
அக்கா இருக்கிறவரை இங்கிருந்தால் உங்களுக்கு தைரியமாய் இருக்குமென்றால். திரும்பவும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க ........”
கிருஸ்டிக்கு ஏதும் சொல்லத் தோன்றவில்லை. அதீதமான
அதிர்ச்சியும், ஒரு கணத்தில் அனைத்தும் இழந்த கையறுநிலையும் அவர் மனத்தை மரத்துப்போக
அடித்திருந்தன. கண்களுக்குள் நிரந்தரமாய் தங்கிவிட்ட வனரோஜாவின் மதிவதனம் கூட
ஜடமான அவர் மனதை தேற்றவியலாது அவர் உலகம் ஸ்தம்பித்துப் போனது. மௌனமாய் வீடு திரும்பினார்கள்.
வரது கிருஸ்டியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார்.
“கிருஸ்டி! இந்த டாக்டர் கிடக்குறார்.. நம்ம ரோஜாவை இப்போதே
சென்னைக்கு கூட்டிக்கிட்டு போகலாம். நடப்பது நடக்கட்டும். நம்ம முயற்சியை விட
வேண்டாமடா!”
கிருஸ்டி வெறுமே தலையை ஆட்டினார்.
அவர்களின் ஆட்டோ வீட்டு திரும்பும் போது
இருட்டிவிட்டது. இருவரும் வீட்டில் நுழைவதற்கும், சுகிர்தம் பதட்டத்துடன் வெளியே
ஓடிவருவதற்கும் சரியாய் இருந்தது.
“என்னம்மா ஆச்சு?”
“அத்தை சமையல்கட்டுல மயக்கம் போட்டு
விழுந்துட்டாங்க!”
“அய்யய்யோ! கிருஸ்டி ஒரு நிமிஷம் டாக்ஸி கூட்டிக்கிட்டு
வந்துடறேன்.” வரது ஓடினார்.
சமையலறை வாசலில் கால்கள் மடிந்தநிலையில் வனரோஜா விழுந்து கிடந்தாள். அவளை ஒரு பூமாலையைப்
போல் கையில் ஏந்தி வந்தார் கிருஸ்டி.
“மாமா! அத்தை என்னை கேரட்டை இந்த சீவியில்
துருவிக் கொடுக்க சொன்னாங்க. காஸ்அடுப்பு வரைக்கும் என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிக்கிட்டு
போகச் சொன்னாங்க. பால் சீனியெல்லாம் நான் தான் ஒவ்வொண்ணா எடுத்துத் தந்தேன்.
அம்மாவை வேணும்னா கூப்புடறேன்னு சொன்னேன் மாமா. வேண்டாம்னுட்டாங்க. சமையல்
மேடையிலேயே சாய்ஞ்சு கிட்டு கிண்டுனாங்க. ஆனா சிரிச்சுக்கிட்டே வாசனவருதாடி.. வாசன
வருதாடின்னு கேட்டுகிட்டே இருந்தாங்க. கேஸை அணைச்சுட்டு கட்டிலுக்கு
கூட்டிக்கிட்டு வந்தெனா? அப்படியே மூர்ச்சையா விழுந்துட்டாங்க. நானு எங்கம்மாவை
கூப்பிட ஓடியாறேன்.. நீங்களும் வந்துட்டீங்க” மூச்சுவிடாமல் படபடத்தாள்
சுகிர்தம்.
“சரியம்மா! நீ போ! ஆஸ்பத்திரிக்கு
கூட்டிக்கிட்டு போறேன்.”
“பயமா இருக்கு மாமா!”
“பயப்படாத கண்ணு. கர்த்தர் பாத்துக்குவாரம்மா”.
மீண்டும் மருத்துவ மனையில் டாக்டரின் முயற்சிகள் வீணாயின.
வனரோஜாவின் உடல் இல்லம் வந்து சேர்ந்தபோது இரவு மணி
பதினொன்று. அவள் உடலை இன்னுமிரு உடல்கள் தாங்கி வந்தன. அமைதியாய் வனரோஜாவை
வீட்டுக் கூடத்தில் கிடத்தினர்.
வாசலைப் பார்த்து கிளம்பிய வரதுவை கிருஸ்டி
தடுத்தார். “எங்கடா?”
“அக்கம்பக்கத்துல சொல்லிடுறேன்”
“வரதா! யாரையும் இந்த ராத்திரி வேளையில் தொந்தரவு செய்யாதே.
நீ கூட வீட்டுக்கு கிளம்பிப் போ! எல்லாவற்றையும் காலையில் பார்த்துக்
கொள்ளலாம்.”
“நானும் போவதா? உன்னை தனியா விட்டுட்டா? என்னடா
கிருஸ்டி இது?”
“தனியா விட்டா ஏதும் பண்ணிக்கிட்டு நானும் போயிடுவேன்னு
பயப்படறயா? நான் ஏதும் செய்துக்க மாட்டேன். இன்னும் நான் இருபத்தி ஐஞ்சு வருஷமாவது
உயிரோட இருக்கணுமடா. உயிரோட... என் ரோஜாவோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும்
எண்ணிஎண்ணி ஜீவிச்சிருக்கணும். கண்டிப்பா இருப்பேன். கவலைப் படாதே!”
“வேண்டாம்டா கிருஷ்டி.. உன்னைத் தனியே
விடமாட்டேன்.. ப்ளீஸ்..” வரதுவின் கைகள் கிருஸ்டியை
கும்பிட்டன.
“முட்டாள்! நானும் போயிட மாட்டேன்... வரதா.
என்னை நம்பு. எனக்கு நிறைய வேலை இன்னும் இருக்கு. ரோஜா நட்டு வைத்த செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் விடணும். சாய்ஞ்சு சாய்ஞ்சு ஓடும் அவள் கையெழுத்து இந்த நோட்டு,டைரிகள் பூராவும் இருக்கு... அந்த வரிகளையெல்லாம் வருடி வருடி
படிக்கணும்.. நெறைய வேலை இருக்குடா.. நெறைய...”
வரதுவை கிருஸ்டி அணைத்துக் கொண்டார். குலுங்கி
குலுங்கி குமைந்து குமைந்து தன் பாரத்தை நண்பன் தோளில் இறக்கியபடி நிமிர்ந்தார்.
“போ! போ!! காலையில் ஆறுமணிக்கு வா!”
“என்ன கிருஸ்டி இது!” நட்பின் பதற்றம் மெலிந்து ஓய்ந்தது.
வரது ஏதும் சொல்லவில்லை. வனரோஜாவை பார்த்தபடி
அழுதார்.. "என்னை அண்ணா அண்ணான்னு வாயார கூப்பிடுவியே..
என் கல்மனசு இன்னமும் வெடிக்கலியே என்னப் பெத்த தாயாரே..”
“வரதா! போ அழாதே. இது எங்கள் கடைசி ராத்திரி.
தைரியமாய் இருப்பேன். என் ரோஜாவுடன் இருக்க எனக்கென்னடா பயம்? எந்த இடையூறும்
இல்லாமல், அவளுடைய குறுக்கீடு கூட இல்லாமல் இந்த இரவு அவள்
முகத்தைப் பார்த்தபடி இருக்க விடு வரதா.... இந்த டைரியில் எல்லோர் விலாசம் போன் நம்பரெல்லாம் இருக்கு. வெளியூர் சொந்தங்களுக்கு தந்தி ஏதும் கொடு.. எல்லோரையும் உனக்குத்
தெரியுமே. உள்ளூர் நண்பர்களுக்கு காலையில் சொல்லு. பிலிப்பை சர்ச்சுலையும்
சொல்லிவிட ஏற்பாடு பண்ணு. இனி ஒவ்வொரு நிமிடமும் என் சொத்து. வரதா!"
தலை குனிந்தபடி வரது வெளியேறினார்.
வரதுவை அனுப்பி வைத்து விட்டு கிருஸ்டி வாசற்கதவை
தாழிட்டார்.
கூடத்தின் மறுகோடியிலிருந்த விளக்கை விட்டுவிட்டு
மற்ற விளக்குகளை அணைத்தார். வனரோஜாவின் அருகே அமர்ந்தார். மூக்கருகே கைவைத்து
மூச்சு வருகிறதா என்று பார்த்தார்.
“ரோஜா! என் ஆசையைப் பார்த்தாயா? உன் மூச்சு நின்றதாய் நான் ஏன் ஒப்புக் கொள்கிறேன்?
எங்கும் வீசும் காற்றெல்லாம் உன் மூச்சு
தானே ரோஜா! இப்போது உன் முகம் பழைய சிரிப்போடு இருக்கிறது. இந்த சிரிப்பை மட்டும்
தான் எனக்கு மிச்சம் வைத்து விட்டு போகிறாயா ரோஜா?”
வனரோஜாவை முதலில் பார்த்ததிலிருந்து தொடங்கி அலையலையாக
நினைவுகள் தம்மைதாமே ஒழுங்கு படுத்திக் கொண்டு வரிசையாய் நெஞ்சில் குமிழிட்டன . அவர்
கண்கள் வனரோஜாவின் முகத்தை விட்டு அகலவில்லை. 'இந்த இரவு... எண்ணப் புற்றுகளை எனைச் சுற்றி எழுப்பும் இரவு...'
காலத்துக்கு கிருஸ்டியைப்பற்றி என்ன கவலை?
வழக்கம் போல் விடிந்தது.
ஒருவரொருவராய் சுற்றமும் நட்பும் அலறிக் கொண்டு வந்தனர்.
கிருஸ்டியின் கையைத் தொட்டார்கள்.. தோளை அணைத்தார்கள்..பாக்கியம் செய்த பூக்கள் மாலையாகி வனரோஜாவின் சரீரத்தை அலங்கரித்தன. கண்கள் ரோஜாவின் மீது
நிலைத்திருக்க, ஏதும் பேசாமல் சமைந்து நின்றார் கிருஸ்டி.
வரதுவுக்கு கிருஷ்டியின் கல்யாணம் ஆன நாள் நினைவுக்கு
வந்தது. அன்றும் இப்படித்தானே ஏதும் செய்வதறியாமல் உறைந்து நின்றான்..? கடவுளே!”
பாதிரியார் வந்தார்.. பெட்டியொன்று வந்தது.
திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் கிருஸ்டி சமயலறைக்கு ஓடினார். உள்ளிருந்து முதல்நாள் வனரோஜா செய்துவைத்த கேரட் அல்வாவை வாணலியோடு எடுத்து வந்து அவள் தலைமாட்டில்
அமர்ந்து கொண்டு அள்ளிஅள்ளித் தின்றார்.
“பாவி! பொணத்தை வச்சுக்கிட்டு தின்கிறியே கிருஸ்டி” என்று வாணலியைப் பிடுங்க வந்த தெரேசாம்மாளை அடிபட்ட புலிபோல் பார்த்தார் கிருஸ்டி.
என்றுமே அதிராத அவர் குரல் அதிர்ந்தது.
"பொணம்னு சொல்லாதே அத்தே ! அவள் என் ரோஜா! எனக்காக இதை செய்து இருக்கா.. எனக்காக மட்டும்....”
சட்டென அங்கே ஒரு நிசப்தம் கவிந்தது.
நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் ஆனபடி இருந்தது. கிருஸ்டியின்
அருகில் அவரை கைலாகு கொடுத்து எழுப்பவந்த வரதுவுக்கு அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்த தேம்பாவணி
வரிகள் சன்னமாய்க் காதில் விழுந்தன. கிருஸ்டியின் முகத்தில் துக்கமில்லை. அவர்
கண்களில் வேதனையோ ஈரமோ இல்லை.. எல்லாவற்றையும் பார்த்து ஓய்ந்து விட்ட கண்கள். பார்வை எங்கோ உள்ளூர திரும்பி, மேலுக்கு வெறும் கண்ணாடிசில்லுகளாய் மங்கி உறைந்த கண்கள்...
கிருஸ்டியின் உதடுகள் மட்டும் துடித்து முனகிக் கொண்டிருந்தது..
“மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!”
வரதுவுக்கு அந்தப் பாடல் இனி ஓயுமென்று தோன்றவில்லை.
(முற்றும்)