வியாழன், செப்டம்பர் 29, 2011

தொழுவத்து மயில்


ஏங்க்கா! பொண்ணு அம்மாம் அளகாமே?”

அத்தையேண்டி மேரி கேக்குறே? போன கிறிஸ்மஸப்போ பிரபாத்ல சிவாஜிபடம் ஒண்ணு பாத்தோமே?”

ஆமாங்க்கா! உயர்ந்தமனிதன்...

ஆங்! அச்சு அசப்பா அதுல வர்ற குட்டிமாதிரியே தான் இருக்கா

வாணிஸ்ரீயாக்கா?”

த.. அது எதுக்கு தொம்ப மாதிரி.? மயிலு கணக்கா கழுத்த சிவுக்சிவுக்குன்னு வெட்டிக்கிட்டு ரெட்டைபின்னல் போட்டுகிட்டு சிவ்க்குமார் கூட ஆடுமேடி? எது என்ன பாட்டு எளவு வாய்க்கு வல்லே

அட அதாக்கா. என் கேள்விக்கு என்னா பதில்ன்னு அயனான பாட்டக்கா. அந்தப் பொண்ணு பாரதி. அய்யோ..அம்சமான பொண்ணுக்கா. என்று வியந்த மேரி சற்று தாழ்ந்த குரலில் தொடர்ந்தாள். பாரதிக்கு கழுத்துக்கு கீழே ஒரு மச்சம் இருக்கும். அதான் அவ்ளோ அதிஷ்டம் அதுக்கு! ஏங்க்கா? உங்கண்ணன் மரிமவளுக்கும் எதுனா அப்படி மச்சம் இருக்கா பாத்தியாக்கா?” என்றாள் பீரிடும் சிரிப்புடன்

 மரிமவளுக்கு மச்சம் இருக்கிறதோ இல்லையோ, அண்ணன்  புள்ளை கிறிஸ்டிராசுக்கு உடம்பு முச்சூடும் மச்சம். அவன் ஈரப் பனை நெறத்துக்கும் மூஞ்சிக்கும் இப்பிடியா ஒரு அபசரஸ்ஸு வந்து மாட்டும்? எத்தனை கொடுப்பினை எங்கண்ணனுக்கு?”

மேற்திண்ணையில், தன் அத்தை தெரேசம்மாளுக்கும், அண்டைவீட்டு மேரிக்கும் நிகழ்ந்த உரையாடலை உள்ளறையில் படுத்திருந்த கிறிஸ்டிராஜும்  கேட்டான். அத்தை குறிப்பிட்ட மச்சக்கார மாப்பிள்ளையும் அவனேதான். தெரேசம்மா சொல்வது உண்மை. கிறிஸ்டிராஜ் நல்ல கருப்பு.. சிறுவயதில் கண்ட வைசூரி உடம்பில் பல அம்மைத்தழும்பு குழிகளை விட்டுச் சென்றிருந்தது.. மூக்கின் மேலேயே மூன்று குழிகள்.. ரெண்டு வருஷமாய் பட்டை ப்ரேமுடன் மூக்குக் கண்ணாடிவேறு.. அம்மாவிடமிருந்து வந்த முகக்களையும்,சிரித்தமுகமும் தான் இதையெல்லாம் நிரவியிருந்தது .

ஆனால் போனவாரம் என்னென்னவெல்லாம் நடந்து விட்டது. ஒரு சொர்க்க வீச்சில், நினைத்தே பார்த்திராத அவன் திருமணமும் முடிந்து, தன் தகுதிக்கு எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு தேவதையை தனக்கு வாழ்க்கைத்துணையாய் வழங்கிவிட்டு போய்விட்டது.

கர்த்தரே! இதென்ன கருணை! என்னுடன் விளையாட திருவுளம் கொண்டீரா?. இந்த அசடனுக்கு ஒரு பொக்கிஷத்தை தந்து சென்றீரே. என்ன உமது உத்தேசம்!  

ஒரு வாரமாய் இதைத்தானே கிறிஸ்டிராஜ் ஆண்டவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்?

போன வெள்ளிக்கிழமை, அப்பா சவரிமுத்து  மற்றும் சில உறவினரோடு, தன் தாய்வழி சொந்தமான அந்தோணிசார் மகள்  வனரோஜாவின் கல்யாணத்திற்காய் திண்டிவனம் சென்றிருந்தார்கள். தூரத்து சொந்தம் தான்.ஆனால் சவரிமுத்துவும் அந்தோணிசாரும் நெருங்கிய நண்பர்கள். அவ்வளவு ஏன்? இப்போது கிறிஸ்டிராஜ் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழாசிரியர் வேலைகூட அந்தோணிசாரின் பரிந்துரையில் கிடைத்தது தானே?

எல்லா உறவினரும் நண்பருமாய்க் கூடியிருந்த நேரம். மாப்பிள்ளை பம்பாயில் வேலைபார்க்கிறாராம். வசதியான குடும்பமாம்.

அந்த அதிகாலை ,திடீரென்று பெரியதோர் சலசலப்பு அந்தோணிசார் வீட்டாரிடம் புறப்பட்டது. மாப்பிள்ளை கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திவிடும்படியும், தான் வேறொரு பெண்ணை விரும்புவதாயும் அவன் வீட்டாரிடம் தகவல் சொல்லி கடைசி நேரத்தில் அங்கு வருவதைத் தவிர்த்துவிட்டான். பையனின் தகப்பனார் நேரில் வந்து அந்தோணிசாரிடம் சொல்லி அழுதுவிட்டு தன்னை மன்னிக்கும்படி பலவாறாய்க் கெஞ்சிவிட்டு கிளம்பிவிட்டார். பிள்ளையை பெற்ற பாவத்திற்கு  வேறு என்ன செய்ய முடியும்?

அந்தோணி உடைந்து போய்விட்டார். விஷயம் கேள்வியுற்று அவரைத் தேற்றவெண்ணி சவரிமுத்து அந்தோணியை  நெருங்கினார்..

கலங்காதே அந்தோணி! ஆண்டவன் ஏதோ பேரிழப்பைத் தடுக்கத்தான் இந்த அளவில் நிறுத்தினார். நம் வனரோஜாவின் அழகுக்கும் குணத்துக்கும் ஆயிரம் மாப்பிள்ளைக் கிடைக்கும். நானே கொண்டுவந்து நிறுத்துகிறேன் பார் ஒரு ராஜகுமாரனை!

என்ன செய்வேன்.. என்ன செய்வேன்! சவரிமுத்து! இந்த திருமணத்திற்கு எவ்வளவு பேர் கூடிவிட்டார்கள் பார் ? இன்னமும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்து கொல்லென்று போய்விடாதா?”

திடீரென உறுதியாய் எழுந்து நின்றார் அந்தோணி. ஒரு.. ஒரு நிமிஷம் இங்கேயே இரேன்.. இதோ வந்துவிட்டேன்.

அவர் வெளியே வர பதினைந்து நிமிடம் ஆயிற்று.

ஓடி வந்து சவரிமுத்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டார் அந்தோணி.

சவரி! நீ சொன்னயே ஒரு ராஜகுமாரனைக் கொண்டு வருவதாய்... உன் வீட்டு ராஜகுமாரனை இப்போதே ஏன் வனரோஜாவுக்கு கட்டிவைத்து என் மானத்தைக் காப்பாற்றுவாயா?”

விக்கித்துப் போனார் சவரிமுத்து. அந்தோணி! என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? வனரோஜா எங்கே?இவன் எங்கே? அவளுக்கு எந்தவகையிலும் கிறிஸ்டி பொருத்தமில்லையே? உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்காதே. உன் பெண் இதற்கு சம்மதிப்பாளா?” படபடவென்று வந்தது சவரிமுத்துவுக்கு.

வனரோஜாவுக்கு சம்மதம். நம்ம கிறிஸ்டிக்கென்ன? என்னப்பா கிறிஸ்டிராஜ்? வனரோஜாவை ஏற்றுக்கொள்ள சம்மதமா? சொல்லுப்பா அந்தோனியின் குரல் உடைந்து கேவலாயிற்று.

ஐயா... நான் போய் உங்களுக்கு... கிறிஸ்டிக்கு வார்த்தைகள் வரவில்லை.

சவரிமுத்துவின் தோள்களை இறுக்க அணைத்தவாறே தனியே அழைத்துச் சென்றார் அந்தோணி. திரும்பிய இருவர் கண்களிலும் கண்ணீர்.

கிறிஸ்டி! வனரோஜாவை மருமகளாய் ஏற்றுக் கொண்டுவிட்டேன். என் நண்பனுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். எங்கள் இருவர் மானமும் உன் ஒரு சொல்லில்.

சரியப்பா தீனமாய்த் தேய்ந்தது கிறிஸ்டியின் குரல் .

அந்த நொடியிலிருந்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் திராணிழந்து சாவிகொடுத்த பொம்மைபோல் ஆனான். யார்யாரோ சொன்னவண்ணம் செய்தான். சொல்லச் சொன்ன வசனங்களைச் சொன்னான். குலுக்கிய கரங்களும், வாழ்த்திய இதழ்களும் அவனை கேலி செய்கிறதா? வனரோஜாவுக்கு நான் கணவனா? மயிலுக்கும்,மாட்டிற்கும் கல்யாணமா? கர்த்தரே!

திருமணம் எதிர்பாராமல் நடந்துவிட்ட படியால் உள்ளூர் நண்பர்களுக்காய் ஞாயிற்றுகிழமை ரிசப்ஷன் போல ஏற்பாடு செய்வதற்காய் சவரிமுத்து வெளியில் போயிருக்கிறார். தலைவலி என்று இவன் உள்ளறையில் படுத்தபடி. இன்னமும் ஏதெதையோ திண்ணையில் அலசிக்கொண்டிருந்தாள் தெரேசம்மாள்.

சவரிமுத்துவின் ஏற்பாட்டின் பேரில், திருமணம் முடிந்தவுடன் வனரோஜா அவள் வீட்டிலேயே அந்தவாரம் இருந்தபின்னர்  நாளை இங்கு அந்தோணி அழைத்து வந்து விடுவார். இந்த தொழுவத்துக்கு கலாபமயிலை இழுத்துவந்து கட்டப் போகிறார்.

......................................................

...........................................................................இப்படித்தானே தன் வனரோஜா தன்னைவந்து சேர்ந்தது? போனமாதம் தானே மணநாள் வெள்ளிவிழா கொண்டாடினோம்.. இத்தனை வருட தாம்பத்தியத்தில் வனரோஜா தன்னை ஒரு சேயாய்,மாணவனாய்நண்பனாய் எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டாள்? எவ்வளவு உற்சாகம் கொப்பளிக்கும் அவள் செயல்பாடுகளில்..

தமிழய்யா கிறிஸ்டிராஜுக்கு தாகம் எடுத்தது.

அவருடைய வனரோஜா ஸௌந்தர்யம் துலங்க கண்முன்னே...

ரோஜா மெல்லக் கூப்பிட்டார். தன் குரல் தனக்கே  கேட்கவில்லை.

தன்முன்னே நீண்ட இரவு இரைவிழுங்கிய மலைப்பாம்பாய் மெல்ல புரண்டபடி இருக்கிறது.

அவர்களிருவரும் வாழ்ந்த கணங்களை அசைபோட்டபடி,அவள் அருகாமையில், முட்டிமோதும் நினைவலைகளை வெறித்தபடி எங்கோ சஞ்சரித்தார். காலம், நிகழ்வு எல்லாம் பனிக்கட்டியாய் உறைந்து ஏதோ ஒரு நினைவுநாடியின் மெல்லிய துடிப்பொன்றே அவரையும்வனரோஜாவையும் ,இந்த உலகத்தையும் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணம்........

(தொடரும்)

47 comments:

RVS சொன்னது…

அண்ணாத்தே! மொத வரிசையில வந்து குந்திக்கிட்டேன்... பட்டய கிளப்புங்க... வனரோஜா.. கிரிஸ்டி... தொடர்கதையா... அடி தூள்.... இத..இத...இதத்தான் ரொம்ப நாளா உங்ககிட்டேயிருந்து எதிர்ப்பார்த்தேன்!!! :-))

பத்மநாபன் சொன்னது…

முதல் வரிசையில இடத்த புடிச்சிக்கிறேன் முதல்ல ... இப்ப படிக்க போறேன்.....

RVS சொன்னது…

பத்துஜி!! நாந்தான் மொதல்ல.... :-)

பத்மநாபன் சொன்னது…

சேர்ந்தே படிப்போம் ஆர்.வி.எஸ் அண்ணாத்தே என்னமா வர்ணிச்சிருக்கார் ரோஜாவை கைபிடித்த கதையும்... காலத்தில் கரைந்த இனிய நினைவுகளை ஆரம்பிச்சிருக்கார் ..

சிகிச்சைக்கு பின் கிடைத்த ஒய்வு நமக்கு வரம்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மன்னை மைனர், பத்துஜி! இவர்களுடன் முதல் வரிசையில் எனக்கும் ஒரு இடம்....

நெடுங்கதை அற்புதமாய் ஆரம்பித்து இருக்கிறது.... முதல் வரிசையில் இடம் பிடித்தாயிற்று.... இனிமே ஒவ்வொரு பகுதிக்கும் காத்திருந்து படிக்கிறேன் மோகன்ஜி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நெடுங்கதை நன்றாகத் துவங்கியுள்ளது. தொடரட்டும். வாழ்த்துக்கள். vgk

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வனரோஜாவைச் சுற்றி வானவில்லின் அற்புதமாய் ஒளிவீசும் கதைக்குப் பாராட்டுக்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

நான் எப்பவும் போல கடைசி வரிசைலையே உக்காந்துக்குறேன்... யூ கண்டின்யூ...

ஸ்ரீராம். சொன்னது…

நிகழ்காலமாகப் படிக்கத் தொடங்கி வரும்போதே 'சட்'டென அது கடந்தகாலமாகி கிறிஸ்டி-வனத்துக்கு வயதாகி விடுவது நல்ல ஆரம்பம். அவ்வப்போது பின்பயணங்களில் பல நெகிழ்வுச் சம்பவங்களை எதிர்பார்க்கலாம். வனரோஜா நினைவுகள் மட்டும் பாக்கியா, அல்லது ஜீவிக்கிறாரா என்று அடுத்த பகுதியில் தெரியும் என்று நினைக்கிறேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

என்ன கதையா இது? கொன்னுட்டேள் போங்கோ..ஆர்.வி.எஸ்..பத்து..வெங்கட்..கொஞ்சம் நகருங்க...அந்த ஓர சீட்டு எனக்காக்கும்?
நம்மாளு கதை ஏதோ தியெட்டரில சினிமா பார்க்கிறாப்பல ஓடுது இல்ல...
மோஹன் ஜி..ஏனோ ’தேவன் வருவாரா?’ ஞாபகம் வருது எனக்கு?
மனுஷங்கள..ரொம்ப எதிபார்க்க வைச்சிட்டீங்க...
ஏமாத்தாம..அடுத்த பதிவை சட்னு கொண்டு போடுங்க...
கொண்டு போன நடை சூப்பர்!!

முழுசாய் ஒரு பெருமூச்சுடன்,
மூவார்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ஆர்.ஆர்.ஆர்.சார் முந்தி முந்தி விநாயகரே மாதிரி என் வழியை மறிச்சு முன்னாடி வந்து இப்படி நான் நினைச்சத படால்னு போட்டு ஒடச்சப்பறம் நான் என்ன சொல்றது மோகன்ஜி.

ஒடம்பெல்லாம் சகஜமாயிடுத்தா இப்ப?

Yaathoramani.blogspot.com சொன்னது…

தொழுவத்தில் மயிலா
இதுவரை கேள்விப்படாத அருமையான
உவமை.கதையும் அப்படித்தான் அருமையாகத்
துவங்குகிறது,தொடர வாழ்த்துக்கள்
( நீங்கள் தொடர் தொடர 100 வது பின்தொடபவர் அருமையான
தொடர் கதை எழுத்தராகவும் அமைந்தது
ஆச்சரியம் )

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வீ.எஸ்! எனக்கெதோ தொடர்கதை வலைப்பதிவுக்கு உகந்ததல்ல எனும் எண்ணம் எனக்குண்டு. அதனாலேயே சில நீண்ட கதைகளை தயவு தாட்சண்யம் இன்றி வெட்டி சுருக்கி வெளியிட்டதுமுண்டு. இந்தக் கதையை நெடுங்கதையாகவே அவசியம் கருதி பதிகிறேன். இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும்

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன்! என்றுமே நீங்கள் முதல் வரிசை தான். பக்கத்துல பார்த்துக்குங்க... கொஞ்சம் வில்லங்கமான ஆள் தலைப்பா கட்டிக்கிட்டு....

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! பாவம் பத்மநாபன்.. பாலைவனத்துலெர்ந்து காமெண்ட் அம்மாந்தொலைவு வரவேணாமா? நீங்கன்னா மடிப்பாக்கத்துலேருந்து உண்டிவில் இழுத்தாமாதிரி போட்டுட்டீங்க.. எதுனா பஞ்சாயத்து வைப்போமா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்! சேர்ந்தே படிப்போம்னு ஜகா வாங்கிட்டீங்களே! ஒரு கை பார்ப்பீங்கன்னு இல்லே நினைச்சேன்?

மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்! இன்னமும் கொஞ்சம் பொறுப்பா இல்லே இப்போ நான் எழுதியாகணும் தலைவரே?

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி வை.கோ சார்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம். தொடந்து படியுங்கள்!

மோகன்ஜி சொன்னது…

பிரபா!கடைசி வரிசையா?மாப்பிள்ளை பெஞ்சா? உன் விசில் சத்தம் எனக்கு சங்கீதம் அல்லவா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஸ்ரீராம்! பின்பயணங்கள் நேற்றை இன்றாக்குகின்றன. காலம் சமைந்து நிற்கும் மோன வேளை அது... தொடர்ந்து படித்து சொல்லுங்கள் ஸ்ரீராம்!

மோகன்ஜி சொன்னது…

என்னடா அது... தவுசண்ட்வாலா வெடிக்கிற சத்தம் கேட்குதேன்னு பார்த்தேன்... மூவார் எண்ட்ரியா? சரிதான்!

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி மூவார்! உங்கள் எதிர்பார்ப்பைக் குலைக்காமல் எழுதுவேன் ஜி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க சுந்தர்ஜி! இப்போது உடல்நிலை தேறி வருகிறது. மூவார் நம்ம எல்லோருக்குமா சேர்ந்தே யோசிக்கிற பார்ட்டி அல்லவா?

மோகன்ஜி சொன்னது…

அன்பு ரமணி சார்! உங்கள் பாராட்டுக்கு நன்றி!நூறாவது முத்து அண்மையில் எழுதின கதையை படித்தீர்களா ரமணி சார்? அருமையான எழுத்து..

ADHI VENKAT சொன்னது…

கதையின் நடை ரொம்ப பிரமாதமா இருக்கு சார். வனரோஜா பெயர் அழகா இருக்கு...

முதல் வரிசையில் இடம் இல்லை......
அதனால் இரண்டாம் வரிசையில் இடம் பிடித்து விட்டேன்.

தொடருங்கள்..நாங்களும் வருகிறோம்.

G.M Balasubramaniam சொன்னது…

நெடுங்கதை எடுத்த எடுப்பிலேயே ஆர்வத்தைத் தூண்டுகிறது. தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

ஆசையாய் படித்துக் கொண்டு வரும்போது ‘தொடரும்’.. போங்க ஸார்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கதை.
தொடருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ஆதி! வனரோஜா எனும் பெயர் உங்களுக்கும் பிடித்திருப்பதற்கு மகிழ்ச்சி. அடுத்து வரும் பதிவுகளையும் பாருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி G.M.B சார்! உடம்பு தேவலையா?

மோகன்ஜி சொன்னது…

அன்பு ரிஷபன் சார்! நன்றி! மீதியையும் படிப்பீர்களாம். நல்லா இருந்தா எனக்கு குச்சி ஐஸ் வாங்கித் தருவீர்களாம்.

மோகன்ஜி சொன்னது…

ரத்தினவேல் சார்! மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு

geetha santhanam சொன்னது…

வனரோஜா, க்ரிஸ்டி கதையை உங்கள் அருமையான நடையில் தொடர்ந்து படிக்க ஆவலோடு இருக்கிறேன். சூப்பரான தொடக்கம்.

கீதமஞ்சரி சொன்னது…

ஆகா... அருமையான தொடக்கம். முற்றிலும் வித்தியாசமான பேச்சுவழக்குடனான எழுத்துநடை பிரமாதம். பாராட்டுக்கள் மோகன் ஜி.
தொடர்ந்து களைகட்டட்டும் தொழுவத்து மயில். (தலைப்பிலேயே புதுமை கவர்ந்திழுக்கிறது ஜி.)


என்னைக் குறிப்பிட்டதற்காக ரமணி சாருக்கும், ஆமோதித்தற்காக மோகன்ஜிக்கும் நன்றி. ஆனாலும் உங்களையெல்லாம் போன்ற ஜாம்பவான்களின் நடுவில் நானொரு கத்துக்குட்டிதான்.

ஆதிரா சொன்னது…

தொழுவத்து மயில், வனரோஜா பெயர்களே மயக்குகின்றன. சுவாரசியமாக படித்துக்கொண்டு வந்தேன் தொடரும் போட்டு விட்டீர்கள். தொடக்கம் முதல் விறு விறு. தொழுவத்து தோகை மயிலின் வண்ணக்காட்சி இருந்து இல்லம் முழுவதும் மின்னும். காண ஆவலுடன்..

மோகன்ஜி சொன்னது…

வாங்க கீதா சந்தானம் மேடம்! இன்று இதன் இரண்டாம் அத்தியாயத்தை பதிவிடுகிறேன். மூன்று நாட்களுக்கு ஒருமுறையாய் இன்னமும் சில அத்தியாயங்கள் வெளியிட உத்தேசம் . திருப்புகழ் , தண்டியலங்காரம் என்று மற்ற பதிவுகளுக்காய் மனசு அரித்துக் கொண்டல்லவா இருக்கிறது?

மோகன்ஜி சொன்னது…

அன்பின் கீதா! உங்கள் பாராட்டுக்கு நன்றி! உங்கள் எதிர்பார்ப்பை என் வனரோஜா பூர்த்தி செய்வாள்.

உங்களைப் பற்றி நாங்கள் இருவரும் சொன்ன அபிப்ராயம் உண்மையானது. ரசனையில் வந்தது.

ஜாம்பவான் எல்லாம் ஜாஸ்திங்க எனக்கு. தென்படும் சின்னசின்ன சலனங்களையும்,கவிதைத் தருணங்களையும் மனம் லயித்து எதிர்நோக்கும் ஒரு சாதாரண வழிப்போக்கன்.

எவ்வளவோ சொல்ல இருந்தும், நேரமின்மையால் சொல்லமுடியாது மறுகும் ஒரு புலம்பல் புத்தன் நான்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொழுத்து மயில் அழகாய் இருக்கிறது...
கதையும் அழகாகப் போகிறது... இன்னும் போகட்டும் தோகை விரித்தாடும் மயிலின் அழகாக....

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ஆதிரா! அழகான தலைப்பு, பெயர்கள் எல்லாம் சரிகை டிசைன்,புட்டா மாதிரி. நெய்த கதையின் தரம் தான் அது காஞ்சீவரமா,சாதாப் பட்டான்னு முடிவு பண்ணும். நல்லாவே நெய்யப் பார்க்குறேன்.(தீபாவளிக்கு என் பாகம்பிரியாளுக்கு பட்டுப் புடவை வாங்கலாம்னு சொன்னாளா... இப்படி பட்டுன்னு சொல்லிட்டேன்! )

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி குமார். நலம் தானே!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஜூப்பரான தொடக்கம்... அருமையான கதைக்களம்.

இப்படிக்கு,
பின் வரிசையில் உக்காந்து கதை கேப்போர் சங்கம் :-)

அப்பாதுரை சொன்னது…

இந்த சிறிசுங்க தொல்லை தாங்க முடியாம போயிருச்சுபா... டக்குனு திண்ணைல எடம் பிடிச்சுர்றாங்கய்யா.

மோகன்ஜி சொன்னது…

அன்பு அமைதிச் சாரல்!

/பின் வரிசையில் உக்காந்து கதை கேப்போர் சங்கம்/

இப்படி ஒரு சங்கம் இருக்கா!அதுலே எனக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போடு தாயீ!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! திண்ணையை பிடிச்சுட்டாங்கன்னு என் கவலைப்படுறீங்க மாமா? அதான் அமைதிச்சாரல் பி.வ.உ.க.கே.சங்கம் வச்சிட்டாங்க இல்லே? சேர்ந்துட வேண்டியது தானே?

இன்னாத்துக்கு போட்டோல ஒரு பக்கமா ஒருக்களிச்சுட்டீங்க?... சிரிப்பு அள்ளுது தொர.....

நிலாமகள் சொன்னது…

ஹைய்யா... நானும் வ‌ந்துட்டேன்.

மோகன்ஜி சொன்னது…

எங்கடா நிலாவக் காணோமேன்னு பார்த்தேன்.. வருக வருக..