வியாழன், டிசம்பர் 02, 2010

வீட்டைத் துறந்தேன்


வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்பியா?
விசிறிக் காம்பால் காலில் ஒன்று போட்டாள் என்றுமே அடிக்காத என் அம்மா.

அடிபட்ட அவமானம் வலியை விட அதிகமா இருந்தது .

அவன் என்ன பண்ணினான் தெரியுமா? பொங்கும் கோபத்தில் குரல் உயர்த்தி கூவினேன்.
காலில் மேலும் ஒன்று விழுந்தது.

என் நியாயத்தை கேட்க அவள் தயாரில்லை.

அவன் தான் முக்கியம்னா என்னை என் பெத்தே!
உன்னைப்போய் பெத்தேனா? தவிட்டுக்கு வாங்கினேன் போடா!

போன்னு தானே சொன்னே! போய்ட்டேன்னா கேட்கக் கூடாது

கொட்டுமேளத்தோட போ! யாரு வேணாம்னா? வயிறு காஞ்சா தானா வருவே.

அதிர்ந்தேன்.... இப்படி என்றும் நிகழ்ந்தது இல்லை. என் அம்மா இப்படி என்னை நடத்தியதில்லை. பாராட்டுகளிலேயே சுகம் கண்டவனுக்கு இது தாளவில்லை.

எனக்கு அப்போது வயது பத்து. தம்பி சங்கருக்கு வயது எட்டு .
என் ஆளுமையையும் அதிகாரத்தையும் அவன் மீறியவனில்லை. ஏதோ ஒரு எம்ஜியார் சிவாஜி சண்டையில் என்னிடம் அவன் அடிபட்டு, அம்மாவின் பஞ்சாயத்தில் அநியாயத் தீர்ப்பு!

ஒரு வெற்றி புன்னகையுடன் இடம் பெயர்ந்த தம்பி....
வேறு வேலைப் பார்க்க அடுக்களை புகுந்த அம்மா.

சுயஇரக்கம் பிடுங்கித் தின்றது. நான் போனால் நஷ்டம் இல்லையாமே?? நான் போனால் என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் என்ன பதில் சொல்வாள்?
எனக்காய் எல்லோரும் தவிக்க வேண்டும்... என் அருமை உணர வேண்டும். நான் வீட்டைவிட்டு போகத்தான் வேண்டும்..

முடிவு செய்து விட்டேன்.

விறுவிறுவென்று மாடிக்கு சென்றேன்.

தீபாவளிக்கு எடுத்திருந்த புதுசட்டையும், நிக்கரும் அணிந்தேன்.
அம்மா வாங்கித் தந்த நீலக்கல் வைத்த வெள்ளி மோதிரத்தைக் கழற்றி  விளக்கு மாடத்தில் வைத்தேன்.
விபூதி இட்டுக் கொண்டேன். அழுகையின் செருமல் அடங்கி விட்டிருந்தது. நான் சேகரித்து வைத்திருந்த தீப்பெட்டி லேபில்களையும் திருவிளையாடல்,எங்கவீட்டுப் பிள்ளை பிலிம் துண்டுகளையும் கால்சட்டைப் பையில் திணித்துக் கொண்டேன். சரசரவென்று  சாரைப்பாம்பு போல் வீதிக்கு வந்து விட்டேன்.

அது கடலூரின் பிரதான வீதி. கமிட்டி பாய்ஸ்  ஸ்கூல்  கடந்து, கழுத்து மாரியம்மன் கோயில் கடந்து ,பீமவிலாஸ் கடந்து கெடிலம் பாலம் வரை வந்துவிட்டேன்.. ஏதும் இலக்கில்லை. எந்த சொந்தக்காரர் வீட்டுக்கும் போகக் கூடாது. இந்த அம்மாவின் மீதுள்ள கோபத்தை தணியவிடக் கூடாது.. தீர்மானித்து விட்டேன்.

அந்த ஞாயிற்றுக்கிழமையின் கோடைவெய்யில ஏறத்தொடங்கிய  முன்பகல்... .நேராக  மூன்று மைல் தொலைவில் இருந்த திருவஹீந்த்ரபுரம் கோவிலை  அடைந்தேன்.

அது அற்புதமான வைணவத் திருத்தலம். கீழே தேவனாதச்வாமி கோவிலும்,எதிருள்ள குன்றின் மேல் ஹயக்ரீவர் சன்னதியும் அமைந்த மனோரம்மியமான கோயில் அது.
குன்றின் படிகளில் ஏறினேன். அண்ணாந்து  பார்க்க யாரும் கண்ணுக்கெட்டிய வரையில் தென்படவில்லை. பத்தாவது
படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டேன்.

அது வரை பொங்கி வந்த ஆற்றாமை  தணிந்து,மேற்கொண்டு என்ன செய்யலாம் எனும் சிந்தனை எழுந்தது.

ஏய்! யார்ரா அம்பி நீ? இங்க தனியா என்ன பண்ணிண்டிருக்கே?
 கேட்டது உடம்பெங்கும் திருமண் இட்டிருந்தவர். கோவில் அர்ச்சகர்களுள் ஒருவராய் இருக்க வேண்டும்.

தனியா இல்லே மாமா.. சிநேகிதாளோட வந்தேன்.

சரி. அவாளெல்லாம் எங்க?

நம்பர்  டூவுக்கு கெடிலம் போயிருக்கா மாமா.

பெருமாள் சன்னதியில் பொய்.

தலையிலடித்துக் கொண்டார். யாராம்..டா நீ?

ஆடிட்டர் லக்ஷ்மிபதி வீட்டுப்பையன் மாமா.

சித்தப்பா பேரைச் சொன்னேன். என் வீட்டைத்தான் துறந்து விட்டேனே? எதற்கு ருக்மணியின் புருஷன் பேரைச் சொல்ல வேண்டும்?

சரிசரி நேரத்தோட ஆத்துக்கு போங்கோடா. பிள்ளை
பிடிக்கிறவனெல்லாம் வருவன்.

புதுகுண்டை போட்டுவிட்டு கையில் வாழைஇலை சருகில் வைத்திருந்த தோசை பிரசாதத்தை எனக்கு கொடுத்து விட்டு பிரபந்தம் சொல்லிக் கொண்டு நகர்ந்தார்.

அந்த தடிமனான தோசையை பிய்த்து காக்கைகளுக்கு போட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்தேன். அது தீர்ந்தவுடன் காகங்கள் பறந்து விட்டன. அம்மா எனக்காக மாவு அரைத்தவுடன் சப்பென்று வார்த்துக் கொடுக்கும் தோசை நினைவுக்கு வந்தது.
தலையை வேகமாய் ஆட்டிக்கொண்டேன். கூடாது கூடாது. அம்மா என்னை நினைத்து நினைத்து ஏங்க  வேண்டும் . மயிலம் முருகா உனக்கு மாவிளக்கு போடுகிறேன் என்று அம்மா அழத்தான் வேண்டும் . தவிட்டுக்கு என்னை வாங்கினாளாமே?.

அங்கு மேலும் இருந்தால் அந்த பட்டாச்சாரியாருக்கு பதில் சொல்ல வேண்டும். மீண்டும் திருப்பாப்புலியூர் நோக்கி நடந்தேன். பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மாலை நான்கு மணிக்கு மேல் இருக்கும்.. ரோட்டோரம் ஒரு பைப்பில் மடக்மடக் என்று தண்ணீர் குடித்தேன்

என்ன மோகனம்.. இங்க என்ன கண்ணு பண்ணிக்கிட்டு இருக்கே?என்று வினவியவாறு  திருமகள் லாண்டரி மணி சைக்கிளின் இரு பக்கமும் காலூன்றி சிரித்துக் கொண்டே கேட்டார். அவர் லாண்டரி என் வீட்டின் கீழே, வாசல் பார்த்த பெரிய ரூமில் இருந்தது. சன்னக்குரலில் அழகாய்ப் பாடுவார். நாடகங்கள் போடுவார்.... சிவாஜி பக்தர்.

என் கிளாஸ்மேட்டை பாக்க வந்தேன் மணி.

அப்படியா. இருட்டிடுமே ராஜா! . வா சைக்கிள்ள ஏறு. வீட்டுக்கு போலாம்.,

இல்ல மணி நீ போ! நான் புதுப்பாளையம் போய் இன்னொரு பிரெண்ட் கிட்ட நோட்டு ஒண்ணு வாங்கிக்கணும்.

அவ்வளவு தானே! சரி. நான் கெடிலம் பாலத்தாண்ட இறக்கி விட்டுடறேன். எனக்கும் ரெட்டைப் பிள்ளையார் கோவில் கிட்ட   வேலை இருக்கு. ஏறு மோகனம்
கையில் இருந்த தினத்தந்தி பேப்பர் கசக்கலில் இருந்து ஒரு மல்லாட்ட கேக் (கடலை கேக்) எடுத்து தந்தார். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன்.

இவருக்கு தெரிந்தால் விஷயம் விவகாரமாய் விடும்.
சரி மணி என்று பின்பக்கம் கேரியரில் ஏறப் போனேன்.

முன்னாடி பார்ல உக்காரு மோகனம். கேரியல் ஒரு பக்கம் இத்துபோயிருக்கு ராஜா.

பாரில் ஏறி அமர்ந்தேன், கெடிலம் பாலத்து  இறக்கம் வந்து விட்டது. சைக்கிள் வேகம் பிடித்தது..

மணி! நிறுத்து! நான் இங்க இறங்கிக்கணும்!

மணியின் இரு கைகளும் முன்பாரில் அமர்ந்த என்
இரு பக்கலிலும் பாலமாய் இறுக்கியது. குதிக்க வழியில்லை.

மோகனம்.இப்போ நீ எம்ஜியார் கட்சியா... இல்ல... சிவாஜி கட்சியா?

வேணாம் மணி. என் ஜோலிக்கு வராதே!

முரண்டு பிடித்தும் இறங்க வழியில்லை. நிமிடங்களில் என் வீட்டு வாசலில் சைக்கிள் நின்றது.

வாசலில் நின்றிருந்த என் அப்பா புன்னகை மாறாமல் கேட்டார், எங்க துரை போயிட்டு வராரு?

நானும் மோகனமும் திருவேந்திபுரம் போயிட்டு வரோம்யா இது  மணி.

சைக்கிளை விட்டு இறங்கினேன். அப்பா வாஞ்சையுடன் தன்பால் என்னை இழுத்துக் கொண்டார். உள்ளே போய் பொம்மைபிஸ்கட்
சாப்பிடு

ஓ! நடந்த எதுவும் அப்பாவுக்குத் தெரியவில்லை! நான் எப்போதும் ஊர்மேய்ந்து விட்டு வருவது வழக்கமாதலால், வீட்டிலிருந்த மற்றவர்களும் வித்தியாசமாய் உணரவில்லை. யாருக்கும் என் திக்விஜயம் பற்றிய பிரஸ்தாபமே இன்றி,அம்மாவே காதும்காதும் வைத்தாற்போல், மணியை மட்டும் களத்தில் இறக்கி ஒரு ஆப்பரேஷன் ரெஸ்கியூ நடத்தியிருக்கிறாள்.!

பறவைகள், மிருகங்கள் போன்ற வார்ப்பில் இருந்த பொம்மை பிஸ்கட்டுகள் பரப்பிய  தட்டை அம்மா என் கையில் தந்தாள், முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டு....

மறுப்பில்லாமல் மௌனமாய் சாப்பிட்டேன். ஆயாசமாயும், திகிலாயும் உள்ளுக்குள் பரபரத்தது.

மாடிக்கு ஓடினேன். விபூதி சம்புடத்தின் கீழே பரபரப்பாய்த் தேடினேன்.
என்ன மோகி தேடுற? பின்னால் அம்மா.
என் மோதிரம் ஈனஸ்வரத்தில் நான்.

உன் மோதிரம் இதோ மாடத்தில்...

குழப்பத்துடன் ஸ்வாமி உள்ளில் அங்கும் இங்கும் என் பார்வை பரபரத்தது..
உன் லெட்டரை யாரும் பார்க்கல்லை.. போ!

என் நெற்றியில் கீற்றாய் விபூதி இட்டு அணைத்துக் கொண்டாள்.

திமிரவில்லை நான்..

புறப்படுமுன்னர் நான் என் அப்பாவுக்கு எழுதி வைத்த கடிதம் அது. .நான் வீட்டை விட்டுப் போகிறேன்.என்னைத் தேடவேண்டாம்.அடுத்த ஜென்மத்திலும் நீங்களே  எனக்கு அப்பா ஆகவேண்டும். ஆனால் அப்போது வேறு அம்மா வேண்டும் என்று நான் பென்சிலில் கிறுக்கிய கடிதம் ! 

தினமும் அப்பாவின் மேல் கால்போட்டபடி தூங்கும் நான், அன்று அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கினேன்,
பலகாலம் இந்த விவகாரம் யாருக்குமே தெரியாது.

நான் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய் விட்டேன் என்று உணர்ந்தும் ஏன் அம்மா ஊரைக் கூட்டவில்லை?
ஏதும் ரயிலேறி போயிருந்தேனானால் என்ன செய்திருப்பாள்?

அம்மா...
உனக்கு சிலமணி நேரம் பரிதவிப்பைக் கொடுத்ததற்கு என்னை மன்னிப்பாயா? யாருக்கும் சொல்லாமல் இதைக் கையாண்டதற்கு ஏதம்மா உனக்கு தைரியம்.?
உன்னிலிருந்து நான் வந்ததால் தான் எனக்கு வீட்டை துறக்கும் அந்த தைரியம் வந்ததா? சொல்லம்மா!









123 comments:

சிவகுமாரன் சொன்னது…

அருமை அருமை. இதே போல எனக்கும் நடந்திருக்கு. ஆனா இருட்டினவுன்ன ப‌யந்து போயி
நானே திரும்பி வந்துட்டேன்.தம்பி மட்டும் கிண்டலா சிரிச்சான்.

ம.தி.சுதா சொன்னது…

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

Unknown சொன்னது…

nice! :-)

பத்மநாபன் சொன்னது…

சாமீ..... இந்த மாதிரி கதை கிடைக்க இன்னமும் சேர்த்தியே வலைவிடுப்பு கொடுக்கலாம்..
பொல பொல க்க வச்சுட்டிங்களே...
தைரியம் எங்கிருந்து வந்ததுன்னு கேட்டு பதிலையும் சொல்லி மன்னிப்பும் கேட்டிங்களே...முடியல சாமீ

அய்யா சாமீ நாங்கள்ளாம் எதோ ஒரு வீணாப்போன காரணத்துக்காக தாய் நாட்ட விட்டு வெளிய இருக்கோம்ங்கறதயும் மனசுல வச்சு கதை எழுதுங்க....உருக வச்சுட்டிங்க ....

Chitra சொன்னது…

அருமையான எழுத்து நடை. சூப்பர்!

அப்பாதுரை சொன்னது…

படிச்சுப் பத்து நிமிசம் போல ஆச்சு பின்னூட்டம் போடுறதுக்கு. ரொம்ப அசைபோட வச்ச நடையும் கருவும் பிரமாதம். கடைசி வரிகள்ள கவிதை ஒளிஞ்சிருக்கு.

அம்மா ஏன் ஊரைக் கூட்டவில்லை? கூட்டை விட்டுப் பிரியும் குஞ்சுக்கு வந்த நேரமும் பக்குவமும் தெரியுமாம் தாய்க் குருவிக்கு.

(மல்லாட்டை - காரைக்கால் நாட்களின் நினைவு வருகிறது. யுகமாச்சுங்க இந்த வார்த்தையைக் கேட்டு)

பதிவை இன்னும் பல முறை படிப்பேனென்று நினைக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

சிவா! என் தம்பியில்லையா நீ? என் போல் தானே இருந்திருப்பாய்?!

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ம.தி.சுதா!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஜீ!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! என் பத்து வயதில் நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் மீதான பிடிப்பும் பாசமும் அதிகமாயிற்று. மிகுந்த நிதானமும்,சகிப்பும் என் நெறியானது.
தாய்மனம் படைத்த தந்தையும்,மனவலிமைமிக்க தாயும் எனக்கு வாய்த்தார்கள். அம்மாவின் வாழ்க்கை தியாகங்களால் நிறைந்த வாழ்க்கை.
என் தம்பி இந்தப் பதிவை அவளுக்கு படித்துக் காட்டக் கூடும்.அவள் என்னை மன்னிக்கத்தான் செய்வாள்!
//எதோ ஒரு வீணாப்போன காரணத்துக்காக தாய் நாட்ட விட்டு வெளிய இருக்கோம்//
என்ன பத்மநாபன் இது? நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அந்தந்த நேரத்திற்கான மிகச் சிறந்த முடிவாகவே இருக்கிறது. அந்த அவசியத்தின் முறுக்கு சற்று தளர்ந்ததும் சலனப் படுகிறோம்.
வீணாப் போன காரியம்னு எதுவும் இல்லை>
தீபம் நா.பார்த்தசாரதி ஒருமுறை எழுதியது...
"பயனற்ற காரியம் என்று ஏதும் இல்லை. இன்ன காரியம் செய்வதால் இன்ன பயன் இல்லை என்று பயனில்லாததை அறிந்து கொள்ளும் பயன் ஒன்று உண்டு."
பத்து உங்கள் ஆசைப் படி அவசியம் கடல் கடந்தோர் வாழ்க்கையை,வலிகளை,சேர்த்த பொருளை,இழந்த தருணங்களை எழுதுவேன்.

நீங்கள் அங்கு உணரும் வெற்றிடங்களை... தமிழால் நிரப்பிக் கொள்ளுங்கள் என் அன்பு நண்பரே!

மோகன்ஜி சொன்னது…

சித்ரா! ஒருவரி வாழ்த்தில் உற்சாகம் தரும் ஹார்லிக்ஸ் உங்கள் பின்னூட்டம்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! இதைப் பதியும் போது உங்களுக்கு பிடித்துப் போகும் என்று நினைத்தேன்! உங்கள் நடை எனக்கு பழகிவிட்டதாலோ என்னவோ,உங்கள் பின்னூட்ட வரிகளைக் கூட அனுமானிக்க யத்தனிக்கிறேன்.

தென்னார்காடு மாவட்டத்துக்கென்று பிரத்தியேக வார்த்தை பிரயோகங்கள் உண்டு மல்லாட்டை போல.
நீ என்ன கேழ்க்குறது?(கேட்பது)
ரவ்வோண்டு பால் தான் இருக்கு(கொஞ்சம்)
இதுவரை எனக்கு அர்த்தம் புரிபடாத கேட்ட வார்த்தைகளும் நிறைய.(ஸ்வாமி சரணங்க !)

இந்தப் பகுதியை தொண்டை நாடு என்பர்.
"தொண்டை நாடு சான்றோர் உடைத்து"
நீங்க சான்றோரா இருக்கிறதனாலே இந்த பக்கம் பூர்வீகமாய் இருக்கப் போகுது பாருங்க!
மீண்டும் பலமுறை படிப்பேன் என்று நீங்கள் சொன்னதற்கு தன்யனானேன் நண்பரே!

எஸ்.கே சொன்னது…

அற்புதம் அற்புதம்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க எஸ்.கே! கருத்துக்கு நன்றி!

Philosophy Prabhakaran சொன்னது…

மோகன்ஜி... கொஞ்ச நாளைக்கு அப்புறம் இப்போ தான் எழுதுறீங்க போல... ஏன் இந்த கால தாமதம்...

இந்தக் கதையை பற்றி என்ன சொல்வது... இந்த இணைப்பை பிறிதொரு நாளில் எடுத்து படிப்பதற்கு ஏதுவாக சேமித்து வைத்திருக்கிறேன்... கதை அந்த அளவிற்கு அருமை...

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம்
நெல்லிக்குப்பம் சுந்தராம்ம்பாள் மோகன்தாஸின் புதல்வன் நான் ஐயா

திருவஹீந்த்ரபுரம் என்றதும்
என்னில் மீறிய சலசலப்பு
என் உடலில்
நீர் திருவஹீந்த்ரபுரத்திலே
தவமிருன்தீர் அன்னையின்
பாசத்திர்க்காக அவரே
அழைத்தார் அல்லவா
நானும்
தவமிருந்தேன்
கெடிலம் ஆற்றுகரையோரம்
வாமனபுரிஈஸ்வரர்
வீற்றிருக்கும்
திருமாநிக்குழிதனிலே
அவரோடு கோபித்து
மலையடிவாரம்
செல்கையில் அங்கேயும்
அவர் காட்சி
அகத்தியர் லிங்கமாக
என் சொல்வேன் நான்
நான் எங்கு சென்றாலும்
எனை அரவணைக்க
அன்னை அவதரித்தாலோ
என்னை காக்க
ஒன்று மட்டும் புரிகிறது
உன் புகழ் பாடும்வரை
உன்னை பிரியாமல்
பிரிந்திருப்பால்
பெருந்துயரில் அன்னை
அவதாரம் வேண்டாம்
அவளுக்கு அவள் நம்மிலே
நமக்காக நாளெல்லாம்
அவதரிப்பால் அம்மா
என்றழைக்கும் ஒரு
கூக்குரலில் ......

தினேஷ்குமார் சொன்னது…

கரடுமுரடான
பாதையில்
வீட்டை துறந்து
பாதம் பதித்து
காட்டில் நிற்பதுபோல்
ஓர் எண்ணம்
கரடி வருமோ
காட்டாறு
அடித்து செல்லுமோ
நம் எண்ணம்
அத்தினம் நம்மை
காணாமல் காக்கின்றாள்
அல்லவா நம் அன்னை
பிரிவாய் பிரிய
துடிக்கும் சினம்
மறுகணம் மறைந்தது
அவளில் மட்டும்
ஏனோ..........

தினேஷ்குமார் சொன்னது…

பட்டினி போர்
நடத்தினேன்
என்னுள் ஒரு
வேலை பட்டினியால்
அன்னை துடித்தால்
மூன்று வேலை,,,,,,,,,,,

தினேஷ்குமார் சொன்னது…

அன்று முதல்
என்னை பிரிந்து
அன்னை உறங்கியதில்லை
நானும் அவள்
அரவனைபில்லாமல்
உறங்கியதில்லை
இன்றோ சொல்ல
வார்த்தைகள் இல்லை
எனினும் தினமும்
மும்முறை அலைபேசியில்
அன்னையுடன் பேசாவிடின்
உறங்க மறுக்கின்றன
என் உறங்கா விழிகள்.......

ஹேமா சொன்னது…

மோகண்ணா...எங்க அடிக்கடி காணாமப் போயிடறீங்க.இப்ப எங்ககூட கோவிச்சுக்கிட்டுப் போறீங்களோ !

அந்த வயதின் ஒரு வேகம்.அதுவும் ஆண்பிள்ளைகள்களின் ஒரு சாகச விளையாட்டு.
ஆனா அம்மாவுக்குத் தெரியும் போயிடமாட்டான் வந்திடுவான் என்கிற நம்பிக்கை.பாசம் வெல்லும்.
அதுவும் தாய்ப்பாசம் உங்ககூட உணர்வுக்குள்ள பேசியிருக்கும்.

அண்ணா இனி இப்பிடிச் செய்யாதீங்க.
அம்மா பாவம்ல !

அப்பாதுரை சொன்னது…

dineshkumar: உங்கள் தாய்க்கு நீங்கள் மகனா உங்கள் தாய் உங்களுக்கு மகளா? எத்தனை கரிசனம்! தாய்-சேய் உறவு வட்டம் என்பது இதானா?

அப்பாதுரை சொன்னது…

உண்மை மோகன்ஜி. பதிவைப் படிக்க படிக்க சலிக்கவில்லை.

அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியலினா என்னைக் கேளுங்க, எதுக்கு இருக்கேன்? காரைக்கால், திருநள்ளார், நாகூர், பாண்டி வரைக்கும் பாசைப் பழக்கம்... நல்ல தமிழ் கொஞ்சம் துருப்பிடிச்சாலும் பொல்லாத தமிழ்ச் சொல் மட்டும் மறப்பதே இல்லை (கெட்ட வார்த்தையென்று எதுவும் இல்லை :).

அப்பாதுரை சொன்னது…

நெல்லிக்குப்பமா dineshkumar? நிறைய கூத்தடிச்சிருக்கேன். என் ஆதர்ச மாமா அங்கே புஷ் கம்பெனியில் அதிகாரியாக இருந்தார்.

தினேஷ்குமார் சொன்னது…

அப்பாதுரை சொன்னது…
நெல்லிக்குப்பமா dineshkumar? நிறைய கூத்தடிச்சிருக்கேன். என் ஆதர்ச மாமா அங்கே புஷ் கம்பெனியில் அதிகாரியாக இருந்தார்.

சார் புஷ் கம்பெனியா இ.ஐ.டி பாரியா அப்பா அங்குதான் வேலை பார்த்தார்

RVS சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
RVS சொன்னது…

மோகன்ஜி அண்ணா நெஞ்சை பிடிச்சி ஒரு உலுக்கு உலுக்கிட்டீங்க. என்னாமா கோபம் வந்திருக்கு. எங்க வீட்டில் தகராறு வந்த என் அக்காதான் அப்பாவிடம் "என்னை கொண்டு பொய் எங்காவது ஹாச்ட்டேல விட்டுடு"ன்னு சொல்லி அழுவா. நமக்கு நெஞ்சழுத்தம் அதிகம் அப்படின்னு வீட்ல சொல்லிப்பாங்க. திருவஹீந்த்ரம் போகணும். வேளை வாய்க்கவில்லை.

பத்துஜி ஒரு உயர்ந்த காரணத்துக்காக கடல் கடந்து போயிருக்கார். லௌகீக விஷயங்களில் இடுபட்டிருக்கும் கிரஹஸ்த்தாசிரம வாசிகள் இதுபோன்று சம்பாதிக்க வேண்டும் அல்லவா? ;-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அப்பாடி, நம்ம ஊர் பக்கமா நீங்க, நான் நெய்வேலி... பன்ரூட்டி-கடலூர் பாலூர் வழியே பலமுறை சென்று இருக்கிறேன், எங்களது வீட்டு வாடகை வாங்க. மண்ணின் மணம் “மல்லாட்டை”யில் புரிந்தது.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

நல்லாயிருக்கு ..

பெயரில்லா சொன்னது…

ரொம்ப அருமையா இருக்கு மோகன் சார்! கடைசி வரிகளில் ஒளிந்து கிடக்கும் உண்மை அற்புதம் :)

பத்மநாபன் சொன்னது…

// எதோ ஒரு வீணாப்போன காரணத்துக்காக // நான் சொன்னதன் அர்த்தம் .. இந்த மாதிரி அன்பு , பாசம் உறவு போன்ற மனிதனுக்கே உரித்தான உணர்வுகளுக்கு முன் மற்றவை ஒன்றுமில்லாது ஆகிவிடுகிறது ... நா. பா வின் , பயன் ..பயனிலா மேற்கோள் காட்டி மிக பொருந்தி சொன்னீர்கள்
தீப்பட்டி படங்கள் ..பிலிம் துண்டுகள் ....அந்த பருவத்தின் விட முடியா சொத்துக்கள் ...எந்த அவசரத்திலும் விட முடியாது...
ஒவ்வொருவரும் இந்த துறந்தது சேரும் உணர்வை கடந்து வந்து தான் இருப்பார்கள்...அதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்

இக்கதையை (நிகழ்வை )அப்பப்ப படித்து கொண்டிருக்கிறேன்.....

Aathira mullai சொன்னது…

//அம்மா...
உனக்கு சிலமணி நேரம் பரிதவிப்பைக் கொடுத்ததற்கு என்னை மன்னிப்பாயா? யாருக்கும் சொல்லாமல் இதைக் கையாண்டதற்கு ஏதம்மா உனக்கு தைரியம்.?
உன்னிலிருந்து நான் வந்ததால் தான் எனக்கு வீட்டை துறக்கும் அந்த தைரியம் வந்ததா? சொல்லம்மா!//

கருத்தோட்டம் அதைக் கோத்த விதம் விறுவிறுப்பு. நிச்சயமாக கருத்தைக் கவரும் வண்ணமணிச்சரம்.

என்னதான் நடந்தது என்றாலும் பெண்மையின் மனத்தின்மையைத தாங்கள் வரைந்த விதம், பெண்மை பெண்மைக்கு தாங்கள் செய்யும் அலங்காரமாக... மின்னுகிறது.

அதைவிடவும் செய்த தவறை மறைக்கத் தேவையான தைரியமும் துணிச்சலும் கூறும்போதும் தேவைப்படும். அந்தத் துணிவுக்கு வந்தனம்.

அருகாமை காட்டாத் அன்பின், பாசத்தின் அருமையைத் தொலைவு காண்பித்துக் கொடுத்து விடும்.

மொத்தத்தில்.. என்ன கூற... திருவிளையாடல் தந்த நீதியை.... அருமை.. ஜி.

மோகன்ஜி சொன்னது…

வாங்க பிரபாகரன்!அலுவல் சுமை காரணமாய் கொஞ்ச நாள் வலைப்பக்கம் வரவில்லை.இனி இவ்வளவு இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். அன்புக்கு நன்றி பிரபாகரன்.

//இந்த இணைப்பை பிறிதொரு நாளில் எடுத்து படிப்பதற்கு ஏதுவாக சேமித்து வைத்திருக்கிறேன்... கதை அந்த அளவிற்கு அருமை.//
எத்தனை அழகாய் பாராட்டை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அன்புக்கு நன்றி பிரபாகரன்

மோகன்ஜி சொன்னது…

என்னருமை தினேஷ்! அடடா! நெல்லிக்குப்பம் கரும்பா நீ? ஒரு நீள்கவிதையை இட்டு என்னையும், தாயென்னும் தெய்வீகத்தையும் பெருமைப்படுத்தி
விட்டாய்.
கவிதையின் கருத்தை பற்றி என்னசொல்ல? என் அந்தராத்மாவின் குரலாய் அப்பாதுரை சார் தான் அழகாய் சொல்லிவிட்டாரே.
பாரம்பரியமான குடும்பத்தின் செல்வம் சோடை போகுமா என்ன?
பேரன்புக்கு நன்றி தினேஷ்!உன் தாய்க்கு என் வணக்கங்கள்.அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் !

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஹேமா! இனிமே எங்கயும் போகமாட்டேன்.. போகமாட்டேன்..போகமாட்டேன்... சரியா?

/தாய்ப்பாசம் உங்ககூட உணர்வுக்குள்ள பேசியிருக்கும்//
ஆஹா! இது ஏன் எங்களுக்கு தோன்றவில்லை ? அப்பாஜி! பத்மநாபன்!ஆர்.வீ.எஸ்!நோட் பண்ணுங்க!
இப்படி யோசிக்க ஒரு தாயால் தான் முடியும்.

அறிவான தங்கை எனக்கு கிடைத்த வரம் ஹேமா!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! உங்கள் நெல்லிக்குப்பம் வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் கடலூரே! என் பள்ளிப் பருவம் அங்கு தான். பல ஆண்டுகள் கழித்து அங்கேயே நான் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது.மறக்க முடியாத ஊர் கடலூர்.
படிக்க படிக்க சலிக்கவில்லை என்று சொல்லி என்னைப் பெருமைப் படுத்திவிட்டீர்கள் அப்பாஜி!

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! திருவஹீந்திரபுரம் ஒரு முறை சேர்ந்து போகலாமே! உங்களுக்கு இன்னமும் ஆர்வம் தூண்ட திருவஹீந்த்ரபுரம் பற்றி சின்னக் கும்மி! சரியா?

ஆதிசேஷன் தரிசித்த கோவிலாதலால் அவர் பெயரால் இந்த தலம் பெயர் கொண்டது.(அஹிந்திரன் என்பது ஆதிசேஷன்).பெருமாள் பெயர் தேவநாதச்வாமி.தாயார் செங்கமலத்தாயார்.பெருமாள் மும்மூர்த்தி ஸ்வரூபனாய் வடிவுகாட்டும் தலம்.சிவன் போல் மூன்று கண்களும்,சடையும்,பிரம்மன் போல் கையில் பத்மமும்,தன்னுடைய கதாயுதம்,சங்கம்,சக்கரமும் ஏந்தி நிற்பது கண்கொள்ளா காட்சி.வைணவத் தலம் எங்கும் இல்லாதபடி வில்வம் இங்கு தலவ்ருக்ஷம்.
இங்கு தேவநாதச்வாமி வேங்கடாஜலபதிக்கு அண்ணனாய்க் கருதி,திருப்பதியில் செலுத்த வேண்டிய நேர்த்திக் கடன்களை இங்கு செலுத்துவர்.

கோவிலின் எதிரே சின்னமலை உண்டு. இது சஞ்சீவி பர்வதத்தின் சிறு துண்டென புராணம் கூறும்.மருந்துமலை என்று போற்றப் படுகிறது.அங்கு வேதம் காத்த லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னதி உண்டு.ஞானமூர்த்தியான அவர் கல்விச்செல்வம் வழங்குவதாய் ஐதீகம்.

வேதாந்த தேசிகரை பற்றி பேசாமல் இந்த தலம் பற்றிய விவரம் முடிவுறாது. எப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்ந்த பெருமான் அவர். தேசிகர் பற்றி தனிப் பதிவு போடலாம்.

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள வெங்கட் நாகராஜ்! நம்ம ஊர் தாங்க! மல்லாட்டையில் மண்ணின் மணம் புரிந்தது... அழகா சொல்றீங்க. அடிக்கடி வாங்க! நன்றி!

பத்மநாபன் சொன்னது…

/தாய்ப்பாசம் உங்ககூட உணர்வுக்குள்ள பேசியிருக்கும்//
அந்த உணர்வின் தெய்விக மொழியை புரிந்து கொள்ளாமல் வாய்மொழியில் வீம்பு செய்து கொண்டிருக்கிறோம் ...

//இப்படி யோசிக்க ஒரு தாயால் தான் முடியும்//.

அந்த தாய்மை உணர்வு கொண்டவர் கவிதாயினியும் கூட என்றால் அறிவுக்கு கேட்கவா வேண்டும்...

மோகன்ஜி சொன்னது…

அமுதா கிருஷ்ணா! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

மோகன்ஜி சொன்னது…

பாலா! நான் ஸ்வாமி சரணம் !அதனாலதான் உங்க பதிவுகள்ல பின்னூட்டம் போட இயலவில்லை! சேர்த்து வைத்து போட்டுடுவோம் பாலா ..அன்புக்கு நன்றி!

பத்மநாபன் சொன்னது…

திருவஹீந்த்ரபுரம் என்று நிங்கள் சொல்கிறிர்கள்

ஹரித்ரா நதி என்று ஆர்.வி.ஸ் சொல்ல,அங்கு அப்பாஜி கம்பனை நிறுத்த ... இந்த ஊர்களும் நதிகளும் அறியாமலேயே என் தமிழ் நாட்டை கிழக்கு பக்கமே பார்க்காமல் மேற்கோடு எல்லை கட்டி கொண்டேனே.....

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்!உங்களைப் பத்தி நான் என்னன்னு
சொல்வேன்!
"எங்கிருந்தோ வந்தான்.. "வலை"ச்சாதி நானென்றான். ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம செய்துவிட்டேன்"
என் பதிவில் தீப்பெட்டி லேபில்களையும் பிலிம் துண்டுகளையும் கூடவே எடுத்துக் கொண்டு போனது, அடிவாங்கிக் கொடுத்த தம்பி அதை எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்ற ஆங்காரத்தில் தான்! காசு கூட எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு நுட்பமாய்ப்பட்ட இந்தப் பகுதியை கூர்மையாய் உள்வாங்கி அற்புதமாய் விவரித்திருக்கிறீர்கள்.
சொந்த ஊராய் இல்லாத பட்சத்தில் அது அரபு நாடானால் என்ன? ஹைதராபாதானால் என்ன?
எல்லாமே அனுசரிப்புத்தானே?
குடும்பம் கூட இருப்பது எங்கிருந்தாலும் பெரும் பலம்.. குழந்தைகளுக்கு இறக்கை முளைத்து மூலைக்கொன்றாய் பறந்தகாலை,'நீயும் நானுமடி எதிரும் புதிருமடி' என்று நினைவுகளை அசைபோட்டபடி வாழ்க்கை மெள்ள ஊர்ந்து செல்லும்..
ஆனாலும்.. ஆனாலும்.. வாழ்க்கை ரொம்ப இனிமையானது. நல்லிரவு பத்மநாபன்!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! உங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போதே மேலும் இரண்டு பூவை எறிந்திருக்கிறீர்கள்..

நீங்கள் சொல்வதுபோல் ஹேமாவின் கருத்தை ரொம்ப நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.. அவள் என் ஸ்வீகாரத் தங்கை! என் தங்கை கவிதை எழுதாமல் வேறு யார் எழுதுவார்கள்? என்ன நான் சொல்வது?!

நீங்கள் தமிழகத்தின் இந்தப் பகுதிகளை காண வேண்டும் பத்மநாபன்..
ஆன்மீகமும் தமிழும் இந்தப் பகுதிகளில்தான்
அடைகாக்கப் பட்டது.
அவசரமில்லாமல், தோளில் ஒரு ஜோல்னாப் பையுடன், மக்களோடு மக்களாய் புகைவண்டியிலும், பேருந்திலும் பயணப்பட்டு, பொதுவரிசையில் நின்று
தரிசனம் செய்து,ஒவ்வொரு தூணையும் சிற்பத்தையும் வருடிப் பார்த்து, தனைமறந்து தலங்களை தரிசிக்க வேண்டும். ஸஹ்ரிதையர் ஒருவரும் உடன் அமைந்து விட்டால்..ஆனந்தம் தான்! நம்முடன் வாரும் ! பெருமாளே பேர்த்துக் கொண்டு நம்முடன் வந்து விடுவார்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆதிரா! உங்கள் பின்னூட்டத்தை லயிப்புடன் படித்தேன். என் மன ஓட்டத்தை அறிந்தவர் நீங்கள்.
தொலைவும் பிரிவும் பாசத்தை காட்டிக் கொடுக்கும்.
முன்பொரு கவிதையில் இதே கருத்தை எழுதியிருந்தேன்.. வார்த்தைகள் கவனத்துக்கு சரியாய் வரவில்லை,எனினும்..

பிரிவுகளின் கனத்தை பாசங்கள் நிர்ணயிக்கின்றனவா?
அன்றி, பாசத்தின் கதிகளை பிரிவுகள் நிர்ணயிக்கின்றனவா?..

உங்களின் கனமான பின்னூட்டத்துக்கு நன்றி ஆதிரா!

RVS சொன்னது…

நிச்சயம்...போகலாம்.. சாமி நீங்கள் சாமி பற்றி பேச.. இந்த அஞ்ஞான ஆசாமிகள் உங்களை பின்தொடர்ந்து வர மிகவும் ஆசையே.. பார்க்கலாம். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்க காலதேவன் அருள்புரிய வேண்டும். எங்கள் வீட்டு குவாலிஸில் மொத்த குடும்பத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு கோயில் கோயிலாக மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சுற்றியிருக்கிறேன். பலது நால்வர் பாடல் பெற்ற "ஆடல்வல்லான் நம்மை ஆளவல்லான்" திருக்கோவில்கள். சமீப காலங்களாக ஆபிசில் அடிக்கமுடியாமல் ஆணி நிறைய துருத்திக் கொண்டு இருப்பதால் ஷேத்த்ராடனம் போக முடியவில்லை..
அண்ணா ஒரு வருத்தமான செய்தி.. தற்போதைய மழையில் கடலூர் மிதக்கிறது....

"ஞானானந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ரிதம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹ்யக்க்ரீவம் உபாஸ்மஹே...." இதைச் சொல்லி சொல்லி படித்து தேர்வு எழுதி தேறி வந்துவிட்டேன்!!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான எழுத்து நடை. சூப்பர்!

பத்மநாபன் சொன்னது…

//ஞானானந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ரிதம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹ்யக்க்ரீவம் உபாஸ்மஹே./// என் பசங்களோட கணக்கு ட்யுஷன் மாஸ்டர் எல்லா மாணவர்களுக்கும் முதல்ல இந்த மந்திரத்தை சொல்லிக்கொடுத்துட்டு தான் மத்ததுக்கே போவார் ...ஹயகிரிவர் மேல அவ்வளவு நம்பிக்கை...பசங்க மேலேயும் தான் ??? .....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

தாயின் கோபம்..அண்ணன் தம்பி சண்டை..திருவஹிந்திபுரம்..( நான் வந்திருக்கேன்)
அடேங்கப்பா..இப்படியா மனிதர்களை குலுக்குவது?
ஆஃபீஸில் சொல்வார்களே..POWER IMBALANCING..
இது AFFECTION IMBALANCING போலும்..

படித்து முடித்தவுடன் கண்களை ஒரு கணம் மூடிக் கொண்டேன்..
அடப் பாவி மனிதா?
இப்படி கூட ஜீவனுடன் எழுத முடியுமா என்ன?
அது சரி.அம்மா இதை படித்தார்களா?
என்ன சொன்னார்கள் உங்களிடம்?

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மோஹனமே....
உம்முடனும்..ஆர்.விஎஸ் உடனும்..அப்பாதுரை
உடனும்..எனக்கும் அந்த திருவஹிந்தி புரம் செல்ல
ஆவல் ..முடியுமா?

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! என்ன ஸ்லோகம்லாம் சொல்லியாறது?.உம்ம வலையின் பேரை "பொல்லாத விளையாட்டு பிள்ளை"ன்னு மாத்தலாமான்னு யோசிச்சிகிட்டே இருக்கோம்.. சரி தானே அப்பாஜி?

உங்களுடன் தொலைபேசியில் பேசியது மனசுக்கு சந்தோஷமாய் இருக்கு. சமர்த்தாய் இரும்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! எளிமையான ஸ்லோகம் அது. ஏற்ற இறக்கத்துடன் என் இளைய மகன் மழலையில் அதைச் சொன்னது இன்னும் மனதில் இருக்கு.

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்தே!AFFECTION IMBALANCING ... எங்கயோ போயிட்டீங்க தல! அம்மா இன்னும் படித்திருக்க மாட்டாள். இன்று இரவு கேட்கிறேன்..

ஜமா சேர்த்துக் கொண்டு அவசியம் போகலாம்.. கூத்தாட வைக்கும் யோசனை. சற்று முன் ஆர்.வீ.எஸ். தொலைபேசியில் இது பற்றிதான் பேசினார்.கண்டிப்பாய் ஒரு ப்ரோக்ராம்மே போடுவோம்.
பத்துஜி.. பொதுக் குழுவை கூட்டுங்க..

உங்கள் பாராட்டு என்னை நெகிழச் செய்தது ஆர்.ஆர்.ஆர்!

சிவராம்குமார் சொன்னது…

அருமையான நடை! ரொம்ப நாளா ஆளையே காணோம் சார் உங்களை!

மோகன்ஜி சொன்னது…

சிவா! நலம் தானா? ரொம்ப ஆணி புடுங்க வேண்டி இருந்தது சிவா! இப்பத்தான் வந்துட்டோம்ல!

பத்மநாபன் சொன்னது…

முச்சு விடாமல் பேச்சு விடும் ஆர்.வி.எஸ் அவர்களோடு உரையாடிவிட்டீர்களா? குவாலிஸ், அவரது நூலகம், என மிக சுவாரஸ்யமாக கொண்டு போயிருப்பாரே... நிங்க இப்ப சாமிங்கறதால சில விஷயங்களை அடக்கி வாசிச்சு இருப்பாரு ...ஜனவரியில பேசிப்பாருங்க....
பொதுக்கூழு தானே கூட்டிருவோம்... எல்லாம் தானை தல அப்பாஜியோட இந்திய விஜய திட்டத்தை வைத்து அமைத்துக்கொள்வோம்...

balutanjore சொன்னது…

dear mohanji
paditha piraku oru pathu nimidam appadiye
utkarndu vitten.

nenjai thoduvathu endral idhuthano?

vaazhthukkal

balu vellore

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அப்பாதுரை இந்தியா வந்தா சொல்லுங்கப்பா..

RVS சொன்னது…

கடலூர் பார்த்துட்டு.. திருப்பாதிரிப்புலியூர் போயிட்டு.. அப்புறம் சிதம்பரம் போயிட்டு.. நடராஜா, தில்லைக்காளி பார்த்துட்டு... அப்புறம் வைத்தீஸ்வரன் தையல் நாயகி முத்துக்குமார சுவாமி பார்த்துட்டு... அப்படியே திருவெண்காடு போய் அகோரமூர்த்தி.. புத்தி குடு புதன் பகவானேன்னு வேண்டிண்டு... நேரா அமிர்தகடேஸ்வரர்... காலசம்ஹார மூர்த்தி பார்த்துடலாம்.. அப்புறம்.. அப்படியே நேரா கும்பகோணம் போய்டலாம்.. சிவா லாட்ஜ் நம்ம ஆளு.. ரூமை போட்டுட்டுட்டு.. கார்த்தால வேங்கடரமானால டிபன்.. அதுக்கு முன்னாடி குளிச்சுட்டு மடியா நாகேஸ்வரன் பார்த்துடலாம்.. அப்படியே.. காலையில் திருவிடைமருதூர் இடை மருது மகாலிங்கம் பார்க்கலாம்.. வெளிப்ப்ரகாரம் ஒரு சுத்து சுத்தினா அஸ்வமேத யாகம் பண்ணின பலனாம்.. பிரம்மஹத்தி தோஷம் நீங்கறதாம்.. அப்புறம் பக்கத்துல திருபுவனம் கம்பஹரேஸ்வரர் ... அங்கே பெரிய சரபேஸ்வரர் சன்னதி இருக்கு.. வெள்ளிக்கிழமைல வெள்ளிக்காப்பு சார்த்தி.. அடாடா பார்த்துண்டே இருக்கலாம்... சோழர் காலத்து கோயில் எல்லாம்.. கோபுரம் எல்லாம் விண்ணை முட்டிண்டு... நமஸ்காரம் பண்ணினா திரும்ப எழுந்திருக்க மனசே வராது... சிவசிவான்னு இருக்கும்...

இங்க தான் பாலகுமாரன் நிறைய ஹெல்ப் பண்ணுவார்.. மனசு.. விட்டேத்தியா.. அப்படியே சுகானுபவமா.. நம்மை அவன் கிட்ட கொடுத்துட்டு...ஒப்படைச்சுட்டு... இதெல்லாம் பாலகுமாரன் வர்ணனைகள்..

அப்புறம் மத்தியானமா திரும்பவும் வேங்கடரமனால சாப்டுட்டு.. கொஞ்சமா செத்த நேரம் ரூம்ல சிரம பரிகாரம் பண்ணிண்டு... நாலு மணிக்கு தகப்பனுக்கு பிரணவ உபதேசம் பண்ணின.. தகப்பன் சுவாமி அருள்புரியும் சுவாமிமலை.. அதுக்கு முன்னாடி கொட்டையூர் ருத்ர கோடீஸ்வரர் பார்க்கலாம்.. பாடல் பெற்ற ஸ்தலம்.. சுவாமிமலை முடிச்சுண்டு நேரா ஸ்வேதவிநாயகர்.. வெள்ளெருக்கு விநாயகர் அருள் புரியும் திருவலஞ்சுழி..கடல் நுரையில் பண்ணின மூர்த்தம் அப்படின்னு சொல்றா.. இந்திரன் பூஜை பண்ணின விநாயகர்... நல்ல பெரிய கோயில்.. அப்புறம் நேர.. தேனுபுரீஸ்வர் பட்டீஸ்வரம்.. துர்க்கையும் பார்க்கலாம்....பெரிய பைரவர் இருப்பார். அதுக்கு பக்கத்திலேயே சக்தி முற்றம்.. அம்பாள் லிங்கத்தை ஆலிங்கனம் பண்ணிண்டு போஸ் கொடுத்துருப்பா.. பக்கத்துலேயே நாச்சியார் கோயில்.. அப்புறம் திருக்கருகாவூர்.. முல்லைவன நாதர்.. கர்ப்பரட்சாம்பிகை..

அப்படியே.. அப்படியே...

என்ன ஆர்.ஆர்.ஆர். சார். போதுமா... இவ்வளவு கோயில் சுத்த எல்லோருக்கும் பிடிக்குமா? என்ன பத்துஜி? என்ன சொல்றீங்க... மோகன் அண்ணா நாம போற எல்லா இடத்திலையும் உபன்யாசம் செய்வார்... அப்பாஜி வாழ்க்கைக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்புகளை விவரிப்பார்.. நான் நீங்க பேசறதை எல்லாம் வாயைப் பிளந்து "ஆ"ன்னு பார்த்துண்டே வருவேன்... ஓ.கே வா..

மனோ சாமிநாதன் சொன்னது…

சிறு வயது அனுபவங்களை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்! அருமையான எழுத்து நடை!
'தாய்மை'க்கு அன்பென்ற மகுடம் சூட்டும் உங்களைப்போல எல்லா மகன்களும் தாய்மையை ஆராதித்தால் அப்புறம் முதியோர் இல்லங்கள் எல்லாம் ஒன்றுமில்லாதாகி விடும்!

பத்மநாபன் சொன்னது…

படிச்ச எங்களுக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிருச்சே...எழுதன ஆர்.வி.எஸ் க்கு எப்படியோ..
படிச்சதலயே ஒரு பெரிய ரவுண்ட் அடிச்ச திருப்தி...

போகும் போது பரம திருப்தியா இருக்கும் ....

சரி ஆர்.வி.எஸ் நீங்க பேசாம இருக்க போறிங்களா...சூரியன் மேற்குல உதிக்க போகுதா.....

மோகன்ஜி சொன்னது…

ஆம் பத்மநாபன்! ஆர்.வீ.எஸ் பேசறது கூட அவர் ப்ளாகை படபடன்னு படிச்சமாதிரியே இருந்தது. நம்ம ஆர்.வீ.எஸ் ரொம்ப பதவீசா, படிச்ச வாத்தியார் கிட்ட பேசுவோமே, அந்த மாதிரி இல்ல என்கிட்டே பேசினார்?
இந்தக் குழந்தைகிட்ட நீங்க சொல்ற மாதிரி ஜனவரிக்கு போல பேசி பாக்கணும்!

உங்களோடும்,அப்ஸ்சோடும் எப்போ பேச வாய்க்குமோ தெரியவில்லை!

மோகன்ஜி சொன்னது…

பாலுசார் ! உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி! நெஞ்சைத் தொட்டது நானல்ல! நீக்கமற விரவி,நமையாளும் தாய்மை! முதல்முறையாய் வானவில் எறியிருக்கிறீர்கள் ! பாலு தஞ்ஜாவூர்,
பாலு வெல்லூர் என்று இரண்டும் காண்கிறதே. இரண்டு கோட்டையையும் பிடித்து விட்டீர்களா?அடிக்கடி வாருங்கள்

மோகன்ஜி சொன்னது…

ஆர்.ஆர்.ஆர் அப்பாஜியை வரவழைத்து விடுவோம்.. நாமெல்லோரும் சந்திக்கும் ஆவலைத் தூண்டிவிட்டு விட்டீர்கள்! நடக்கும்.

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! அடடா! என்ன அற்புதமான பயணத் திட்டம். டூர் மேனேஜர் நீர் தான்காணும்! என் போர்ட் போலியோ உபன்யாசமா? ஜமாய்ச்சுடுவோம்! ஆனா பத்து சொன்னாற்போல் நீங்க பேசாம வருவேன் என்பதெல்லாம் ரொம்ப,ரொம்ப'டூ மச்சா' தோணலியா?

மோகன்ஜி சொன்னது…

மனோ சுவாமிநாதன் ! வாங்க! உங்கள் முதல்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அடிக்கடி வாருங்கள்!

அப்பாதுரை சொன்னது…

என்னைய வேறே ரூட்டுக்கு மாதிருவிய போலிருக்கே?

ஒண்ணாப் பயணம் போவமா? உசுப்பேத்திட்டியளே?

மோகன்ஜி சொன்னது…

ஒரு வார்த்தைய சொன்னீங்களே முதலாளி "ஒண்ணாப் பயணம்"னு.. அதுக்குதான் ! உங்கள் இந்தியப் பயணம் எப்போது எனச் சொல்லவும்.. 'இல்ல தம்பிகளா எங்க ஊருக்கு வாங்க'ன்னு சொல்லிட்டீங்கன்னாலும் ஒரு டாடா சுமோவுல அருவாவை சுத்திகிட்டு அங்கனயே வந்துடுவோம்ல?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையா இருக்கு அண்ணா.. எழுத்து நடை அருமை...

படிக்கும் பொழுது கூடவே அழைத்து செல்கிறது....

மோகன்ஜி சொன்னது…

நன்றி சகோதரா.நன்றி!

ரிஷபன் சொன்னது…

ஹா.. என்ன செய்து விட்டது.. இந்த எழுத்து.. இததனை உயிரோட்டமாய். ஜீவனுள்ள எழுத்து என்று ஒற்றை வரி ஈடாகாது. இதே அனுபவம் எனக்கும் இருப்பதாலா.. (ஓடிப் போனது).. அல்லது தேர்ந்த எழுத்தின் ரசனையில் ஈடுபாடா.. மறுபடி மறுபடி படிக்கத் தூண்டும் ஜாலம்.. சபாஷ்.. பாண்டியா.. உமது விரல்களுக்கு என் அன்பு ஸ்பரிசம்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு ரிஷபன்! உங்கள் பின்னூட்டத்தை அடக்கத்துடன் க்ரஹித்துக் கொள்கிறேன்.சுழித்தோடும் வாழ்க்கை நதியின் ஆழத்தில் பல சம்பவ முத்துக்கள்..ஓரிரண்டு இங்ஙனம் கரையொதுங்கும் தருணத்தில்... நம் முயற்சி என்ன இருக்கிறது? கையில் எடுத்து தமிழால் துடைப்பது மட்டுமே நம் வசம்.

உம் அன்பு ஸ்பரிசத்தில் என் விரல்கள் திடம கொள்கின்றன.. நன்றி ரிஷபன்!

ADHI VENKAT சொன்னது…

தாமதமாய் கருத்துரை போடுகிறேன். எங்கம்மா கூட என்னை தவிட்டுக்கு வாங்கினேன்னு தான் சொல்லுவாங்க. எழுதியிருக்கும் விதம் அழகா இருக்கு சார்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க கோவை2தில்லி! நீங்க கூட தவிட்டுப்பிள்ளை தானா?! வாழ்த்துக்கு நன்றிங்க!

அப்பாதுரை சொன்னது…

எத்தனை ஆகா போடுறது?
>>கையில் எடுத்து தமிழால் துடைப்பது மட்டுமே..

அப்பாதுரை சொன்னது…

எத்தனை முறை ஆ போடுறது?
>>>ஒரு டாடா சுமோவுல அருவாவை சுத்திகிட்டு...

அப்பாதுரை சொன்னது…

3ஆர் நம்ம முன்னிலையில் ஒரு தமிழ்க்கீர்த்தனம் எழுதுவாரா? அப்ப வந்துருவோம்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! சாகாவரம் பெற்றதமிழ் நமக்குப் பெற்றுத் தரும் ஆஹாவரம்!

'மூவார்'முத்து தமிழ்கீர்த்தனம் கண்டிப்பாய் எழுதுவார்.
அவருக்கு "நின்னொடும் ஐவரானோம்"னு கேட்பாஸ் போட்டு நம்ம கோஷ்டில (அசத்து சங்கம்?!)சேர்த்துடலாமா? பத்துஜி! பொதுக்குழு அஜெண்டாவுல என் இந்தக் கோரிக்கையும் சேத்துக்குங்க சாமி!

பொன் மாலை பொழுது சொன்னது…

அடித்துப்போட்டது போல இருக்கிறது. உங்களின் எழுத்து வன்மை அப்படி. அடிக்கடி காணாமல் போவதால்(நான் அல்ல ) தொடர்ந்து வர முடிவதில்லை. எப்போதாவது எழுதினாலும் இன்னும் ஒரு வருஷம் வரை தாங்கும் அளவுக்கு இருக்கிறது.
வாழ்த்துக்கள் மோகன்ஜி! அது ஏன் உங்க ப்ளாக் கடிகாரம் துபாய் டயம் அல்லவா காட்டுகிறது? ப்ரோபைலில் ஹைதராபாத்?

--

பத்மநாபன் சொன்னது…

மூவார் முத்தார் நம்முடனா...கொடுப்பினையாச்சே...ஆர்.வி.எஸ் அட்டகாசத்துக்கு ஒரு ஸ்டிரிக்ட் மாஸ்டர் வேணும்..

//மூவார்// இந்த பெயர் வைத்ததுக்கு ஆகா போடமாட்டிங்களா அப்பாஜி...

கிரந்தத்தை ரொம்பவே தவிர்க்கிறிங்க..அப்பாசி...

மோகன்ஜி சொன்னது…

வாங்க கக்கு சார்! உண்மை தான் ! இந்தபதிவு கூட நான் காணாமல் போனது பற்றித்தானே? அடிக்கடி காணமல்போய் விடுகிறேன் தான்! இனி ஒழுங்காய் எழுது கின்றேன் தோழரே!இதற்காக எல்லோரும் பிடித்து திருகி என் காதே முறம் போலல்லவா ஆகி விட்டது?
கடிகாரத்தை இப்போதுதான் பார்த்தேங்க!அது பத்மநாபன் பார்ப்பதற்காக என்று வைத்துக் கொள்ளலாம்! சரி பண்ண கொஞ்சம் முயற்சி செய்கிறேன்..
மற்றபடி நான் உடலால் ஹைதராபாதிலும், உணர்வால் தமிழ் கூறும் நல்லுலகிலும் வாசம் செய்கிறேன் கக்கு!வாழ்த்துக்கு நன்றியுடன்..

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! "அப்பாசி" அட்டகாசம்! ஆர்.வீ.எஸ்சை பாவம் ஏன் வம்புக்கு இழுக்குறீங்க? வாயில் விரல் வச்சாகூட கடிக்கத் தெரியாத பச்சமண்ணாச்சே அது!

அப்பாதுரை சொன்னது…

கக்கு-மாணிக்கத்தின் பாராட்டு வரிகள் அருமை. 'அடித்துப் போட்டது மாதிரி இருக்கிறது' - exactly how i felt. எழுத வரலை.. பத்து நிமிசமாச்சுனு ஏதோ ஒப்பேத்தினேன்.

'மூவார்' சொல்தேர்வை இன்னும் ரசிச்சிட்டிருக்கேன் பத்மநாபன்... எனக்கு இது தோணாம போயிருச்சேனு ஒரே பொறாமை..

அதை விடுங்க.. என்னவோ போங்க, இந்த ஜி விசயமே ஒத்துவந்ததில்லை (இந்தியா போனா சாப்பிடுற ஒரு ஜியைத் தவிர, என்ன ஜெய்ய?)

டெல்லியில வேலை பாத்தப்ப சப்ஜிக்கு அர்த்தம் சொன்னான் நண்பன் 'எல்லாருக்கும் மரியாதை - அதான் சப்ஜி'னு.

RVS சொன்னது…

ஆர்.வி.எஸ். எல்லோரின் அன்பிற்கும் அடிமை பத்துஜி. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற குறள் வழி வாழும் ஒரு பச்ச"மண்ணு". எல்லோரும் தமிழ் பேச கேட்டு சுகித்திருக்கும் ஒரு ஜீவன். அவ்வளவே..
அப்பாஜிக்கு ஜி பிடிக்கலையாம்.. இவர் என்ன ஸ்பெக்ட்ரம் ராசாவா? இனிமேல் ஜிக்கு ரெண்டு மாத்திரை கொடுத்து ஒரு அழுத்து அழுத்தி அப்பாஜீ!!!

Ramesh சொன்னது…

பயங்கரமான அனுபவம்.. அதை நீங்க விவரித்திருக்கற விதம் அதை விட அருமை.. நானும் அம்மாகிட்ட பயங்கரமா அடி வாங்கிருக்கேன்.. ஆனா கொஞ்ச நேரத்துலயே அவங்க எங்கன்னு தேடிப்போய் மூஞ்ச மூஞ்ச பார்ப்பேன்..இன்னும் என் மேல் கோவமா இருக்காங்களான்னு... அந்த நினைப்பு வந்திருச்சு... அருமையா எழுதிருக்கீங்க...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

என்ன நம்ம தலை ஏகத்துக்கும் உருளுது போல இருக்கே..அது சரி RVS போட்ட லிஸ்ட்டப் பார்த்தா
தலை சுத்துதே..இப்படி கோவில்..கோவிலா போனா..
ஏகத்துக்கு புண்ணியம்.. திகட்டும்..
கொஞ்சம் கோவில்..கொஞ்சம் பிக்னிக்..போலாமா.என்கிட்ட அருவா இல்ல..சுமோ..க்வாலீஸ் இல்ல..ஏதோ ஏழைக்கேற்ற
எள்ளுருண்டை மாதிரி எஸ்டீம் வைச்சிருக்கேன்..
நம்மூரில ரிஷபன் இருக்காரு..அவரையும் கூட்டிக்கலாம்..
கோவில் தான்னு RVS பிடிவாதமா இருந்தா.. நான்
வேணா கொஞ்சம் பாவம் செஞ்சுட்டு அப்பறமா வரேனே......

இப்படிக்கு,
மூவார் முத்து
(சூப்பர் பெயர்)

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ் ! பச்சமண்ணுன்னா பிறந்தகுழந்தை ! நான் "மண்ணு"ன்னு அடக்கம் காட்டினா விட்டுருவோமா?
அப்பாஜிக்கு ரெண்டு மாத்திரை குடுத்து அப்பா'ஜீ'! நல்லயோசனை !

ஜலஜா மாமி தந்த பஜ்ஜி ,சொஜ்ஜியை லஜ்ஜை இல்லாமல்,கஜ்ஜை வரிந்துகட்டி,மஜாவாய் உள்ளேதள்ளி, பேஜாராகி,ஜீரணம் ஆகாமல் ஜின்ஜர் ஜோடா ஜிவ்வுன்னு உறிஞ்ஜி ஜிங்கர ஜிங்கா ஜீபூம்பா ன்னு ஜாலியாய் பாடிக்கொண்டே ஜித்தன் போல் வந்தான் ஜீவா!

இதை துவக்க வரியாய்க் கொண்டு ஒரு சிறுகதை எழுதி அப்பாஜிக்கு ஜங்கார ஜகரம் ஜாங்கிரி ஜாங்கிரியாய் போட்டு எழுதுங்களேன் ஆர்.வீ.எஸ் !

மோகன்ஜி சொன்னது…

//எங்கன்னு தேடிப்போய் மூஞ்ச மூஞ்ச பார்ப்பேன்..// அந்த சின்ன ரமேஷ் கண்ணுக்குள்ள காட்சியாய் விச்வரூபமாய் விரிகிறான் என் பிரியமுள்ள ரமேஷ்! என்ன யதார்த்தமான வார்த்தைகள்!நன்றி ரமேஷ்!

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்து! முதலில் இந்தப் பெயர் உங்களுக்கு பிடித்துப் போனதற்கு நன்றி!
//கொஞ்சம் பாவம் செஞ்சிட்டு அப்புறம் வரேன்!//

தில்லானா மோகனாம்பாள் படத்துல டி.ஆர்.ராமச்சந்திரன் சார்,பத்மினியின் அம்மாவாய் வந்த சி.கே.சரஸ்வதியிடம் " வாங்கம்மா கோயிலுக்குப் போவோம்"ன்னு கூப்பிடுவார்.
"ஏண்டா..திடீர்னு கோவிலுக்கு?"
"பின்ன? நம்ம கொஞ்சம் பாவமா பண்ணியிருக்கோம்?" என்பார்.
நாங்க பாவம் பண்ணிட்டதால கோவிலுக்கு.. நீங்க கோவிலுக்கு போறதுக்காக பாவம் பண்ணப் போறேன்கிறீர்! அறுபத்தி அஞ்சாவது நாயன்மார் பதவிக்கு 'மூவார் முத்தார் நாயனாரை' பரிந்துரை செய்கிறேன்!
அடடா! ரிஷபன் சாருமா! என்ன அழகான யோசனை.. நீங்க கேட்டா மாதிரி கொஞ்சம் கோவில் கொஞ்சம் பிக்னிக் இல்ல நிறைய பிக்னிக் பிளான் போட ஆர்.வீ.எஸ் க்கு கை சொடுக்குற நேரம் ஆகுமா?
கனவுகளுடன் .. மோகன்ஜி

பத்மநாபன் சொன்னது…

//ஏகத்துக்கு புண்ணியம்.. திகட்டும்..// வாத்தியார் நரகம் தான் தன்னுடய சாய்ஸ் என சொல்லி இப்படி எழுத்தியிருப்பார். ஞாபகம் வந்தது . சொர்க்கம் போர்ப்பா எப்ப பார்த்தாலும் நித்ய அகண்ட பஜனை நடக்கும் இரண்டு நாள் தாங்காது....

பத்மநாபன் சொன்னது…

ஜலஜா.... ஜீவா வரை ஆர்.வி.எஸ் பாணியை அப்படியே கொண்டுவந்துட்டிங்க... ..ஜி யை வெச்சுக்கிறேன் ஆள விடுங்கப்பா ன்னுஅப்பாஜியை சொல்லவச்சாச்சு.

பச்சமண்ணு அவர்கள்..ஆதிராவும் அப்பாஜியும் போட்ட போடுல அடங்கிட்டாரு...இல்லாட்டி டி..ஆரின் ஜிம்பாவே பாட்டை ரீலிஸ் பண்ணிருப்பாரு....

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! சுஜாதா சாய்ஸ் அட்டகாசம்!

அவ்வளவு சுலபமா ஆர்.வீ.எஸ் ஐ எடை போட்டுடாதீங்க! எனக்கு என்னமோ அவர் அகில உலக டீ.ஆர்.ரசிகர் மன்றத் தலைவரா இருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

துவக்கம் சரியாய் இருக்கவேண்டுமென்றோ தற்செயலோ சரியான நேரத்தில் நுழைந்திருக்கிறேன் மோகன்ஜி.ரிஷபனோடு பேசும்போதெல்லாம் சொல்லுவார்.என் தளத்துக்கு ஒரு முறை நீங்கள் வந்தபின்னும் உடனே தொடரமுடியாதபடி நிறைய வேலைகள்.மன்னியுங்கள்.

இந்தப் பதிவை இன்றைக்குப் பேசியவுடன் படித்துவிட்டு இது.

சபாஷ் மோகன்ஜி. தெளிவான மொழியுடன் குழந்தையின் பார்வையுடன் உணர்ச்சிமயமான எழுத்து.

இதேபோல சூழ்நிலையில் நானும் இப்படி ஒருமுறை.தெருமுனையைத் தாண்ட தைர்யமில்லை.திரும்ப வந்து அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுத நாட்கள் கண்களில் திரையிடுகின்றன.

நல்ல எழுத்துக்கள் அருகிவிட்ட காலம்.உங்கள் எழுத்து நிறைவு தருகிறது மோஹன்ஜி.

நிறைவுடன் வாழவும் நிறைய நிறைவாக எழுதவும் வாழ்த்துகிறேன்.

இந்த ருசிக்குப் பழகிவிட்டேன்.

இனி அடிக்கடி வருவேன்.

RVS சொன்னது…

மோகன்ஜி!!
ஜாலிலோ ஜிம்கானோ - தலைப்பு சரி என்றால் ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பித்து விடுகிறேன்.

பத்துஜி!
அ. ஆ என்று இருபாலரும் சேர்ந்து என்னை போட்டதில் எவ்வளவு மகிழ்ச்சி உமக்கு!! வேளை வரும் வரை காத்திருக்கிறேன். அடுத்தவர்களுக்கு சந்தோஷம் தரும் செயல் எனக்கு உவகையே தரும். (எப்படியாவது தப்பிப்போம்... )

மாயவரம், கும்பகோணம் பகுதிகள் மதுரை திருநெல்வேலி ஏரியா போன்று கிடையாது. பிக்னிக் என்றால் எங்களுக்கு கோயிலுக்கு போவதுதான். ரொம்ப அடம்பிடித்தால் தரங்கம்பாடி போகலாம். மூக்கிலிருந்து கையை எடுக்க முடியாது. சொல்லிட்டேன். கோயில் கோயிலா இப்படி கும்பலா பஜனை பண்ணிக்கொண்டு போவதே ஒரு பிக்னிக் தான். அதோடு மட்டுமல்லாமல் அத்துவான ஊர்களில் உள்ள கோயில்கள் இயற்கை எழில் கொஞ்சம் இடங்களாக இருக்கும். ஒரு அல்லிக் குளம், ஒரே ஒரு பிச்சைக்காரன், ரெண்டு ஆட்டுக்குட்டிகள், பெரிய அரசமரம் (மேடையோடு....), "கர்...கர்.." என்று புறாவும், கீ.கீ என்று கிளிகளும் பேசிக்கொண்டிருக்கும் அமைதியான இடங்கள்.

சேர்ந்து கூடி உட்கார்ந்து பேசி, சாப்பிட்டு பொழுதை கழிப்பது கூட பிக்னிக்தானே!!

RVS சொன்னது…

//அவ்வளவு சுலபமா ஆர்.வீ.எஸ் ஐ எடை போட்டுடாதீங்க! எனக்கு என்னமோ அவர் அகில உலக டீ.ஆர்.ரசிகர் மன்றத் தலைவரா இருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு!//
ஏன் இந்த கொலைவெறி?
சர்வ ஜன சுகிநோபவந்து....;-)

சிவகுமாரன் சொன்னது…

தினம் தினம் உஙகள் தளம் வருகிறேன். புதிதாய் ஏதும் கிடைக்காத நிலையில் இந்த பதிவைமீன்டும் படித்துவிட்டு திரும்பி விடுகிறேன். கொஞ்சம் ஏமாற்ற‌த்தோடும், நிறைய திருப்தியோடும்

மோகன்ஜி சொன்னது…

அன்பிற்கினிய சுந்தர்ஜி! உங்கள் வாழ்த்துக்கும், மனம் நெகிழ்த்தும் பாராட்டுக்கும் எப்படி நன்றி சொல்வேன்?
இந்த ருசிக்கு பழகி விட்டேன் என்று நீங்கள் சொல்வது என் பொறுப்பை அதிகமாக்கி விட்டது ஐயா! நல்ல எழுத்து ஒன்றே என் நன்றியாய் அமையட்டும்.

பத்மநாபன் சொன்னது…

சிவா சொன்னது சரி தான்...மிண்டும் மிண்டும் படித்து வருகிறேன் ..
//நீங்களே எனக்கு அப்பா ஆகவேண்டும். ஆனால் அப்போது வேறு அம்மா வேண்டும்”//

அம்மா திட்டும் பொழுது என் பசங்களும் வேறு மாதிரியாக இந்த வசனத்தை சொல்வார்கள்... இதில் துளிகூட போலிப் பெருமை நான் கொள்வதில்லை...அம்மாக்கள் எதையும் குழந்தைகளுக்காக தாங்குவார்கள் என்பது எனக்கும் தெரியும் ..குழந்தைகளுக்கும் தெரியும்...

மோகன்ஜி சொன்னது…

ஜாலிலோ ஜிம்கானா!சரியான தலைப்பு.. டான்ஸ் குமாரி கமலாவா?

மோகன்ஜி சொன்னது…

ஏமாற்ற மாட்டேன்! நாளைக்கு புதுசாய்..
உங்க உள்ளங்கைல ப்ளஸ் போட்டு ,கிள்ளி காட் ப்ராமிஸ்..சரியா. உங்கள் அன்பிற்கு நன்றி சிவா !

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்!
/அம்மாக்கள் எதையும் குழந்தைகளுக்காக தாங்குவார்கள் என்பது எனக்கும் தெரியும் ..குழந்தைகளுக்கும் தெரியும்../ சத்தியமான வரிகள்!
தாங்குவதில் தாய்மார்கள் எல்லோரும் இந்த பூமியைப் போல! ஏர்பூட்டி கீறினாலும் கதிர்கதிராய் நெல்மணிகள் அன்றோ திருப்பித் தருகிறார்கள்?

மேலே ஆர்.வீ.எஸ் ஒரு காட்சி வர்ணனை போட்டிருக்கிறார் பார்த்தீர்களா?

பத்மநாபன் சொன்னது…

இந்த பதிவு நூறு பின்னூட்டங்களுக்கு மேல் செல்வதில் பெருமகிழ்ச்சி...

வலையுலகில் சாதி, மதம் , அரசியல், பதிவருக்குள் வெட்டிபூசல், என தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மத்தியில்...

நிதர்சன தெய்வீகமான, தாய்மை உணர்வுக்கு மதிப்பு கொடுத்து எழுதிய நிகழ்வை படித்து பாராட்டுவதில் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்..

//ஏர்பூட்டி கீறினாலும் கதிர்கதிராய் நெல்மணிகள் அன்றோ திருப்பித் தருகிறார்கள்?//
உணர்வு பூர்வமாய் ரசித்த வரி....

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்! எல்லாக் குழந்தைகளிலும் தன் குழந்தையை தாய் பார்ப்பதுபோல், இங்கு பதித்தவர்கள் பாராட்டை எல்லாம், தத்தம் தாய்க்கு பாராட்டாய் சொன்னதாகவே ஏற்று மகிழ்கிறேன்.

"தீபாராதனை ஆகப்போறது!போய் செவிச்சுக்குங்கோ" என்று கோவில் வாசலில் நின்று கைகாட்டும் அழுக்கு வேட்டி கார்யஸ்தனாய் மட்டுமே என்னை உணர்கிறேன்

RVS சொன்னது…

//"தீபாராதனை ஆகப்போறது!போய் செவிச்சுக்குங்கோ" என்று கோவில் வாசலில் நின்று கைகாட்டும் அழுக்கு வேட்டி கார்யஸ்தனாய் மட்டுமே என்னை உணர்கிறேன் //
என்னவென்று சொல்வதம்மா உங்களின் இந்த வர்ணனைகளை.. அப்படியே நெடுஞ்சான்கடையாக தரையில் விழவேண்டும் போல உள்ளது.. ;-
)

சிவகுமாரன் சொன்னது…

சேவிச்சுக்கிட்டேன் அண்ணா

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! எல்லா நமஸ்காரங்களும் தாய்மைக்கே அல்லவா? நன்றி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க சிவா! இன்னிக்கு பதிவு போடறேன் சொன்னேன் இல்லையா? இப்போ ஆரம்பிக்கிறேன்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Lovely... I guess we all have this episodes in life... moms are always the same I guess... same loving amma

மோகன்ஜி சொன்னது…

நன்றி தங்கமணி மேடம்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இப்ப நினைச்சுப்பார்க்கையில நாமா அவ்ளோ தைரியமா வீட்டைவிட்டு போனோம்ன்னு, நமக்கே சிரிப்பா இருக்கும்.. ஆனா, அந்த நேரத்து மனநிலையும் நிஜம்தானே :-))

Rathnavel Natarajan சொன்னது…

அம்மா...
உனக்கு சிலமணி நேரம் பரிதவிப்பைக் கொடுத்ததற்கு என்னை மன்னிப்பாயா? யாருக்கும் சொல்லாமல் இதைக் கையாண்டதற்கு ஏதம்மா உனக்கு தைரியம்.?
உன்னிலிருந்து நான் வந்ததால் தான் எனக்கு வீட்டை துறக்கும் அந்த தைரியம் வந்ததா? சொல்லம்மா

அருமை. அழ வைத்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

கோமதி அரசு சொன்னது…

அம்மா...
உனக்கு சிலமணி நேரம் பரிதவிப்பைக் கொடுத்ததற்கு என்னை மன்னிப்பாயா? யாருக்கும் சொல்லாமல் இதைக் கையாண்டதற்கு ஏதம்மா உனக்கு தைரியம்.?
உன்னிலிருந்து நான் வந்ததால் தான் எனக்கு வீட்டை துறக்கும் அந்த தைரியம் வந்ததா? சொல்லம்மா!//
அம்மாவிடமிருந்து தான் வந்து இருக்கும்.

அம்மாவிடம் தான் நம் கோபம் காட்ட தோன்றும். ஆனாலும் அவள் காலைதான் கட்டிக் கொண்டு புடவை தலைப்பை சுத்திக் கொண்டு தான் இருக்க தோன்றும்.
வீடூ துறக்கிறது ஏதாவது அந்த பட்டர் சொன்னது போல்( பிள்ளை
பிடிக்கிறவனெல்லாம் வருவன்.” )குழந்தையை யாராவது தூக்கி சென்று இருந்தால் அம்மா எப்படி வேதனையில் துடித்து இருப்பார்கள்? நினைக்கவே பயமாய் இருக்கிறது.
எழுத்து நடை வெகு அருமை.



மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள கோமதி அரசு அவர்களே! பல நாட்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு இப்போது ஒரு பாராட்டு வந்திருப்பது மனசுக்கு மகிழ்ச்சியாய்தான் இருக்கிறது. இந்தப் பதிவை நான் வலையேற்றிய பின் என் அம்மாவுக்கு படித்துக் காட்டினேன். கைகளைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தால் ரொம்ப நேரம்..

இந்தக் காட்சி கண்ணிலேயே இருக்கிறது. இன்றோ என் அம்மா இல்லை. நினைவுகள்.. நினைவுகள் மட்டுமே மீதமிருக்கின்றன..

உங்கள் பாராட்டை அவள் நினைவுக்கே சமர்ப்பிக்கின்றேன்.

நிலாமகள் சொன்னது…

ருக்மணியின் புருஷன் பேரை//
:)))

“உன் லெட்டரை யாரும் பார்க்கல்லை.. போ!

என் நெற்றியில் கீற்றாய் விபூதி இட்டு அணைத்துக் கொண்டாள்.

திமிரவில்லை நான்..//

அம்மான்னா அம்மாதான்!

நிலாமகள் சொன்னது…

தீபாராதனை ஆகப்போறது!போய் செவிச்சுக்குங்கோ" என்று கோவில் வாசலில் நின்று கைகாட்டும் அழுக்கு வேட்டி கார்யஸ்தனாய் மட்டுமே என்னை உணர்கிறேன்//

மோகன் ஜி... மோகன் ஜி...

நிலாமகள் சொன்னது…

அந்த மல்லாட்டை கேக்கையும் அம்மாதான் கொடுத்து அனுப்பியிருப்பாளோ...?!

மோகன்ஜி சொன்னது…

நிலா! இப்போதே பார்த்தேன் உங்கள் பின்னூட்டங்களை... நான் ஓடிப்போன கதையை மற்றவர்களுக்கு என் அம்மா சொல்வதுண்டு.. அவளைப் பற்றிய பிரஸ்தாபம் இல்லாமல்...

அம்மா.. என் அம்மா..

Geetha Sambasivam சொன்னது…

நிதானமாய் வந்து படிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனக்கும் இம்மாதிரி வீராவேசமாகத் தோன்றும். ஆனால் மிஞ்சி மிஞ்சிப் பெரியப்பா வீட்டுக்குப் போவதைத் தவிர வேறே எங்கேயும் போக முடிந்ததில்லை. ஆனால் என் கோபம் அப்பாவிடம் தான் இருக்கும்! அம்மாவிடம் இருக்காது. அம்மா கோபம் கொண்டாள் என்றால் அது எண்ணெய் தேய்த்துக் குளிக்கையில் எல்லாம் நான் அவளைப் படுத்திய போது மட்டுமே! மற்றபடி அம்மா எங்களை யாரையும் கோவித்துக் கொண்டதெல்லாம் இல்லை. அம்மாவின் பழைய புடைவையைப் போர்த்துக் கொண்டு படுத்தால் சுகமாய்த் தூக்கம் வரும். :)

Geetha Sambasivam சொன்னது…

//அம்மா வாங்கித் தந்த நீலக்கல் வைத்த வெள்ளி மோதிரத்தைக்//

ம்ம்ம்ம்ம்ம்???? ஏழரை நாட்டுச் சனி முதல் சுற்றில் இருந்திருப்பார் போல! அதான் நீலக்கல் மோதிரம் வெள்ளியில்னு நினைக்கிறேன். :)

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா!

எப்போதோ எழுதியதிற்கு இப்போது வரும் பின்னூட்டம் மனதிற்கு குதூகுலமே!மிக்க நன்றி!
எழரையின் உதயம் தான் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கான தூண்டுதலா? இருக்கலாம் தான்.

இப்போதே பார்க்கிறேன் இதிலும், இந்தகாலகட்டத்தில் வரிந்து எழுதிய பலரும் வலையுலகை விட்டு நீங்கி விட்டார்கள்.கலகலப்பாக இருந்த இடம்.. என்ன செய்வது?

நிலாமகள் சொன்னது…

ஞானக்கூத்தன் சரடு பிடித்து இங்கு வந்தால் ... முன்பே வந்த இடம் தான்!

இன்றைய மனநிலையில் எங்கம்மாவுக்கும் ஒரு விஸ்தார அஞ்சலியாக இந்தப் பதிவு படித்த நெகிழ்வு. ஆம். முன்பொரு ஆடிப் பெருக்கு அன்று மொத்தமாக விடைபெற்றாங்க தம் வெற்றுடம்போடு. சுழன்றடித்த வேலைப் பளுவில் போட்டோவுக்கு நமஸ்கரிக்கும் போது 'எங்கேம்மா இருக்கே.. எனக்குள்ளேவா' என்று நானே கேள்வியும் நானே பதிலுமாக நொடிப் பொழுது அஞ்சலி. இப்போது உடன்பிறந்தவன் அருகமர்ந்து பேசித் தீர்த்த நிம்மதி.

மோகன்ஜி சொன்னது…

நிலா!
ஒரு தாய் என்றுமே நம்மைப் பிரிவதில்லை. நம்முள்ளே கலந்து விடுகிறாள் . அவள் கலந்ததையே, அவள் நம்முள் கரைந்ததையே அறியமாட்டோம். ஒரு உதட்டுச் சுழிப்பாகவோ, நம் தொடுதலின் மென்மையிலோ அவளாக வெளிப்படுவதை உணரமாட்டோம். நம் சிரிப்பும் தொடுகையுமே அஞ்சலியாகின்றன அவளுக்கு.
நம் தாய்கள் நம் இருவருக்குமே பொதுவாளனவர்கள் ... உங்கள் தாய் உங்களுக்கும் எனக்குமாய்; என் தாயோ எனக்கும் உங்களுக்குமாய்.

நிலாமகள் சொன்னது…

நம் தாய்கள் நம் இருவருக்குமே பொதுவானவர்கள்//

'சீர்' வேண்டாம்... இந்த சொல் போதுமென் சகோதரனே...