“நான் பஞ்சகுட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன். இன்றைக்கு அவகாசம் இருந்தால் ஒரு முறை ஸ்டேஷனுக்கு வந்து விட்டு போக முடியுமா?" தெலுங்கில் வந்த தொலைப்பேசி அழைப்பு..
“ஏதும் தகவல் தெரிஞ்சுதா இன்ஸ்பெக்டர்?”
“முயற்சி பண்ணிகிட்டிருக்கிறோம் கோர்ட்க்கு ஒரு பாரம் கொடுக்கணும்.”
“சரிங்க..”
நடந்தது இது தான்...
ஹைதராபாதில் நான் வசித்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்களும், முதல் மாடியில் வீட்டு ஓனருமாய் இருந்தோம் .
சில மாதங்களுக்கு முன், வீட்டைப் பூட்டிக் கொண்டு மும்பை சென்றிருந்தோம். அங்கு போன இரண்டாம் நாளே,
என் வீட்டு ஓனரின் அலைபேசி அழைப்பு.
“மோகன்காரு! ஒரு சின்ன ப்ராப்ளம் ! இன்று காலை வாக்கிங் செல்ல கீழே வந்தபோது உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு, வீட்டினுள்ளே அனைத்தும் அலங்கோலமாய் இரைந்து கிடப்பதைப் பார்த்து போலீசில் புகார் செய்தேன். இப்போது வீடெங்கும் பவுடர் அடித்து தடயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வந்தால் தான் என்னென்ன திருட்டுப் போனது என்று கணக்கிட முடியும். வரும் விவரம் சொல்லுங்கள். ஐ’யாம் ஸாரி!!”
என்ன சொல்வது என்று தெரியவில்லை. “நான் திரும்பவும் உங்களைக் கூப்பிடுகிறேன்”.
மனைவிக்கு விஷயத்தை சொன்னவுடனே பதறினாள்..
“நகைகள் லாக்கரில் தான் இருக்குங்க! ,சின்னச் சின்ன உருப்படிகளே அலமாரியில் இருக்கு , வெள்ளிப் பாத்திரங்கள் பூஜை அறையில் வெளியிலேயே இருக்குங்க. அதெல்லாம் போயிருக்கும்.கடவுளே !” .
“சரி. பதட்டப் படாதே! பார்ப்போம்”அவளை மும்பையிலேயே விட்டு விட்டு விமானத்தில் ஹைதராபாத் விரைந்தேன்.
வீட்டுக்குள் நுழைந்த போது, ஏதோ சுனாமி தாக்கிய சென்னை கடற்கரை போல அது இருந்தது. காட்ரெஜ் அலமாரிகள் நெம்பித் திறக்கப் பட்டு அதிலிருந்த சாமான்களும், மேலே லாப்ட்டில் இருந்த பெட்டிகள் எல்லாம்
பிரித்தெறியப் பட்டு, துணிமணிகளும் புத்தகங்களும் வீடெங்கும் சிதறிக் கிடக்க, மெத்தைகள் கிழிக்கப் பட்டு... கலைந்த கூடாய் என் வீடு.....
தலை சுற்றியது.
வெள்ளி பூஜைப் பாத்திரங்கள், ஐ பாட் , கேமரா,சின்ன தங்க உருப்படிகள், சில புடவைகள்.. இத்யாதிகள் திருடப் பட்டிருந்தன. ரூபாய் எண்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை அவற்றின் மதிப்பு இருக்கலாம்.
இரவெல்லாம் வீட்டுக்குள்ளிருந்தே 20-20 மேட்ச் ஆடியிருக்கிறார்கள். திருடர்கள் மூவராய் இருக்கலாம் என்று போலீசில் சொன்னார்கள். மனைவிக்கு நிலவரம் சொல்லி,போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் F.I.R
எழுதி , பட்டியல் கொடுத்து...
மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த போது,வீடேஅன்னியமாய்ப் பட்டது.
புடவைகள், பெட்டிகளின் நடுவே நகைகளை வைத்து இருக்கலாம் என்று தான் அவற்றை உதறித் தேடியிருக்கிறான் திருடன்.
இரைந்து கிடந்த புத்தகங்களிலும் துணிமணிகளிலும் போலீசின் பூட்ஸ் தடங்கள்.... போகட்டும்.
களவு போன வீடு எங்கோ ஊர்கோடியில் இல்லை... நகரின் பரபரப்பான பகுதியில், நெருக்கமான குடியிருப்புகளுக்கிடையே இருந்தது. போலீஸ் ஸ்டேஷனிலேருந்து ‘மோகி’ன்னு கூப்பிட்டால் ‘உள்ளேன் ஐயா’ என்று என் பதில் கேட்கும் அருகாமை.
இந்த எதிர்பாராத நிகழ்வில் புன்னகை,வேதனை, சந்தோஷம், படிப்பினைகள் எனக்கு வாய்த்தன.....
புன்னகை ஒன்று...
பூஜை அறையில் சாளக்கிராமங்களுக்கு நடுவே இரண்டு பெரிய லக்ஷ்மி டாலர் வெள்ளியில் இருந்தது . அவற்றையும் எடுத்துக் கொண்ட களவாணி., இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை பதிலுக்கு வைத்து விட்டு
போயிருந்தான். உம்மாச்சிக்கு பயந்தவன் போலும்.!!
வேதனை இரண்டு.
-என் குருசாமி எனக்களித்த வெள்ளிக் காசு போனது.
-‘ஐ பாட்’ வந்தபுதிதில், யாரிடமோ அதைக் கண்டு நான் ரசித்ததும், அதை அரைமணி நேரத்தில், தன் சேமிப்பிலிருந்து என் மகன் வாங்கி வந்து எனக்கு பரிசளித்த ஐ பாட் களவு போனது.. அத்துடன்,என் பிரியமான ‘காற்றினிலே வரும் கீத’மும் ,’முத்துக்களோ கண்கள்’ பாடலும்......
சந்தோஷம் மூன்று..
-பல நாளாய் நான் தேடிக் கொண்டிருந்த என் மகனின் குழந்தை போட்டோ, புத்தகக் குவியலின் நடுவே கிடைத்தது.
-என் மனைவி அவ்வப்போது அணியும், எனக்குப் பிடிக்காத, துணுக்கு ஜிமிக்கியை திருடன் எடுத்துப் போனது.
-தொலைந்தே போய் விட்டது என்று நான் எண்ணிக கொண்டிருந்த இன்னொரு புகைப்படம் புதையல் போல் கிடைத்தது.- .
மறைந்த நடிகர் நாகேஷுடன் நானிருக்கும் போட்டோ : ஒரு நாடக விழாவில் எடுக்கப் பட்டது.... ஒரு பழைய மீனாக்ஷி அம்மாள் சமையல் கலைப் புத்தகத்தினுள் வாசம் பிடித்துக் கொண்டிருந்து. மூக்கை வெளியே
நீட்டியிருந்தது...
படிப்பினை
கலைந்து கிடந்த என் மனைவியின் புடவைகளை ஒன்று விடாமல், நீவி,மடித்து,பீரோவில் நான் அடுக்கி வைக்க,
வீட்டு ஓனர் மனைவி, சன்னலின் வழியே அதைக் கண்ணுற்று அவருக்கு கன்னத்தில் இடியாம்!...”நீங்களும் இருக்கீங்களே!”
அடுத்த நாள் மும்பையிலிருந்து திரும்பிய என் மனைவி, அடுக்கப் பட்ட புடவைகளைக் கண்டு, குரல் கம்ம, காதலுடன்,”நீங்களா இத்தனையும் மடித்து வைத்தீர்கள்?’’ என்று நெகிழ்ந்த வேளை, சின்ன சிரிப்போடு அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.. விதி யாரை விட்டது?
உன்கிட்ட இவ்ளோ புடவையா இருக்கு என நான் ஆச்சரியப் பட்டு,
அவள் அதற்கு கோபப் பட்டு...
மீண்டும் நான் வாங்க நேர்ந்தது ஒரு பிரிண்டட் பட்டு...
கொஞ்ச நாள் போலீஸ் ஸ்டேஷன் நடந்து பார்த்தேன்.
பல்லைக் குத்திக் கொண்டு ‘ஒன்றும் கிடைக்கவில்லை’ என்று அவர்கள் திருப்பிவிட..
நாகேஷ் மாதிரி அலுத்துக் கொண்டு விட்டுவிட்டேன்...
“போங்கோடா.”