ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

கிளிக் காதல்


இதென்னடி சிறுக்கி உனக்கு மனித வெட்கம்?
இப்படியா சிறகுள் முகம் புதைப்பாய்?

கூண்டடைந்து நெல்மணிக்காய் சோசியமா?
மீண்டுவந்தேன் கண்மணியே    நீ சுகமா?
சிறகடிக்க ஏங்கியுள்ளம் சோர வந்தேன்.
இறகுதிர யுனைத்தேடி கண்டு கொண்டேன்

அஞ்சுகமே   கீசுகீசெனும்  ஆகாத்தியம் மறந்தாயா?
அஞ்சிநிதம்  எனையெண்ணி ஆசைமுற்றி தகித்தாயா?
கொஞ்சுவதும் பேடுன்னை காலமழிய சிலிர்த்தே
மிஞ்சுவதும்   ஏதிங்கினி  நம்மிருவர் தவிர்த்தே?

கோதை கைக்கொண்ட முப்பாட்டக்கிளி
காதில்  சொன்னவுயர்  காமமெல்லாம்,
பேதை உரைத்தனளோ  அரங்கனிடம் !
காதல்  உறைந்ததென்  பெருவம்சமடி!


கிளிக்காதல் அலுக்காத களிக்காதல்
ஒளிக்காத நேசமிகும் கிளைக்காதல்.
சலிக்காத மூக்குரசல்  சுகமாதல்
ஒலிக்காத சங்குடலே  நீயாதல்.

இதென்னடி சிறுக்கி உனக்கு மனித வெட்கம்?
இப்படியா சிறகுள் முகம் புதைப்பாய்?


நிழற்பட உதவி : ஹரிஹரன் சங்கர்