புதன், டிசம்பர் 30, 2015

புது வருட உறுதிப்'பாடு'

ஆச்சு!  இன்னுமொரு ஆண்டு கடந்தபடி இருக்கிறது.. வயது ஆகஆக புதுவருடங்கள் சின்ன தடுமாற்றத்தோடு கலந்த எதிர்பார்ப்பைத்தான் தருமோ?
வழக்கம்போலே இந்த வருடப்பிறப்பு சமயத்திலும் சபரிமலைக்கு விரதம் இருந்தபடி இருக்கிறேன்! ஆண்டவன்மேல் பாரம் போட்டுவிடுவது வசதியாகத் தான் இருக்கிறது!
2015முடியுமுன் நான்கு புத்தக வெளியீடுகளை செய்துவிட வேண்டுமென்று மஞ்சள்துணியில் நாலணா முடித்து வைத்திருந்தேன்.. வெள்ளத்தின்மேல் பழியைப் போட்டுவிட்டு வரும் வருடத்தில் வெளியிட்டுவிட உத்தேசம்.
ஆங்கிலவருடப் பிறப்புதொறும் ஏதேனும் சிலஉறுதிகளை எடுத்துக்கொண்டு அவற்றில் பெரும்பாலும் நிறைவேற்றிவிடுவது என் வாடிக்கை.

 2016க்கான என் உறுதிகள் :
1.ஆன்மிகம் சம்பந்தமான பதிவுகளை இடுவதற்கு  ஒரு புதிய வலைப்பூ
   தொடங்க வேண்டும்.
2. கம்பராமாயணம் முழு ரிவிஷன் செய்ய வேண்டும்
3. ஹிமாலய யாத்திரை
4. சிறு குறிப்புகளாக உள்ள பல சிறுகதைகளையும் பதிவேற்ற வேண்டும்.
5. பாதியில் நிற்கும் நாவலை முடிக்க ஆசை.
6. புதியதாய் வாங்கி இன்னமும் படிக்காத 14 புத்தகங்கள், உறையை விட்டு
  எடுக்காத ஒலிஒளிவட்டுக்கள் முடியும்வரை புதியவை வாங்குவதில்லை.
 7. அடுத்த பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
8. இன்னமும் மூன்று விருப்பங்கள் கொஞ்சம் பெர்சனல். என் கதை எதிலாவது
  தலைகாட்டினால் பார்த்துக் கொள்ளுங்கள்.

என் பதிவுலக சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே விளைக!

போனசாக, முகநூலில் இன்று இட்டிருந்த சிறுபதிவொன்றை கீழே தந்திருக்கிறேன். புதுவருடத்தில் இவற்றில் சிலவற்றை நாம் கைகொள்ள இயலாதா என்ன?? அன்பு....


மனப்பக்குவம் என்பது....
1.. பிறரை மாற்றும் முயற்சிகளைக் கைவிட்டு, தன்னை
      சூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்.....

2.  பிறரை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளுதல்.....

3.
அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து
  கொள்ளுதல்......

4.
நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....

5 .
உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை 
   அளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....

6. நாம் எதைச் செய்தாலும் அதை நம் திருப்திக்காகவே செய்தல்....

7.
நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ
  முயல்வதை விடுத்தல்....
8.
பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை
  நிறுத்தல்....
9.
நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்
  இருக்க முற்படுதல்.....

10.
நம் சந்தோஷத்தை பொருட்களுடன்பொருத்திக்
  கொள்ளுவதை அறவே நீக்குதல் ...

11.
தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை
   உணர்ந்து விருப்பங்களின் மேல் பற்றை ஒழித்தல்.,

(புத்த லாமா)
Top of Form


வெள்ளி, டிசம்பர் 25, 2015

கல்



(சில நாட்களுக்கு முன்,ஏதோவோர் தெலுங்கு தொலைக்காட்சியைக் கடந்தபோது ,பாதியிலேஒரு கவிதைகேட்டேன். எழுதிய தெலுங்கு கவிஞன் யார் என அறியமுடியவில்லை. நினைவில் தொகுத்து தமிழாக்கித் தந்திருக்கிறேன். அந்தக் கேள்வியின் உக்கிரம் சற்று நேரம் தகித்தபடி இருந்தது.)

ஏதோ ஓர் ஊரிலிருந்து ஒரு மஹா சிற்பி வந்தான்.
வேறேதோ ஊரிலிருந்து பெரிய கல்லைத் தருவித்தான்.

ஆறடி அளந்து கல்லை அறுத்துக் கொண்டான்.
மிகுந்து விட்ட மூன்றடிக்கல்லை ஒதுக்கி விட்டான்.

ஆறடிக் கல்லோ விக்கிரகமாய் கோவில்கொண்டது.
மூன்றடிக் கல்லோ வண்ணான்துறை சேர்ந்தது.

நாற்றமெடுத்த மனங்களெல்லாம்
 தெய்வத்தின் முன்னே நின்றன....
நாற்றமெடுத்த துணிகளெல்லாம், அந்த
துவைக்கும் கல்லை சூழ்ந்தன.

வேண்டிவேண்டி உலர்ந்த தொண்டைகள்
தீர்த்தம் பட்டு நனைந்தன.
அழுக்குக்கறை கொண்ட துணிகளோ
தண்ணீரினில் முங்கின.

அர்த்தம் புரியா தோத்திரங்களில் 
பூஜாரியின் பக்திக்குரலோசை.
துவைக்கும் வண்ணான் குரலெழுப்பும் 
இஸ்ஸுஇஸ்ஸெனும் தப்பலொலி.

சடகோபம் பவித்திரமாய்
தலைகளை வருடியது.
பவித்திரம் வேண்டி துணிகளோ
படிக்கல்லை மோதின.

ஆயிற்று....

கோவில்விட்டு நீங்கிய மனங்கள் 
தத்தம் அழுக்கை 
             மீண்டும் வாரிச் சென்றன.
துவைக்கப்பட்ட துணிகளோ 
தூய்மை கொண்டு திரும்பின.

கோவில்கொண்ட தெய்வமா?துவைக்க சென்ற கல்லா?
யார் தெய்வம்? யாரே கல்??


திங்கள், டிசம்பர் 07, 2015

பெண்ணையின் வெள்ளம்


வெண்ணை உருகுமுன் பெருகிவிட்ட பெண்ணை நதி
எண்ணற்ற செடிமரமென அள்ளிக்கொண்டு போகின்றது.
புயலும் மழையும் கடலூருக்குப் புதிதா என்ன ??

புரட்டிபோடப்பட்ட வாழ்க்கையை கக்கத்தில் ஏற்றியபடி,
உயிரும் உறவும் இருப்பதை தலைக்கணக்கு எண்ணி 
புதிய தொடக்கத்துடன் போகும் என் மக்கள்.

கண்ணீரில் எங்களூர் ‘மல்லாட்டை’யை விதைப்போம்.
அதன் உவர்ப்பில்  இனிக்கும் எங்கள் கரும்பு.
நிவாரணம் என்றொரு நீர்க்கடன் சடங்கு
நிராதரவாய் உயிர்மீண்ட சடலங்களுக்கும் உண்டு.

பெண்ணைநதி சீறும்தோறும் மீண்டுவரும் அவன்முகம்.
ராமதாசு... என் பள்ளி சிநேகிதன்........

ஒரு புயலின்போது,
ஊரினிரு எல்லைகளாய் கோடிட்ட
கெடிலமும் பெண்ணையும் தழுவிக் கொண்டன.
தெப்பமாய் மிதந்த ஊர் சோகத்தில் தவிக்க,
பள்ளிவிடுமுறையைக் கொண்டாடித்திரிந்த பாலியம்.
கர்ணத்தோட்டம் சூழ்ந்த இடுப்பளவு நீரில் விளையாட
காற்றில்சரிந்த வாழைகளால் கட்டுமரம்
ராமதாசு தான் கட்டினான்.  
பழக்கமில்லாத பனங்கிழங்கை சாப்பிடத் தந்தான்.

பெண்ணை பாலத்தின் அக்கரையின் அருகிருந்த  மடுவைக்
காட்டித்தந்தவனும் அவன்தான்.
‘அதன் சுழலில் விழுந்தால்,
பிச்சாவரத்தில் தான் பொணம் கிடைக்கும்’ என்று அவன் சொன்னதை நம்பியிருந்தேன் மறு கேள்வியின்றி.

ஓரிரு மாதங்களில் அந்த மடுவிலேயே அவன் மாண்டுபோனான்.
பள்ளிப் பிரார்த்தனையில்
பீட்டர் சாமியார் மௌனஅஞ்சலி செய்யச்சொன்ன கணம்'
சத்தமாய் அழுதேன்..
நொண்டிசார் விரல் அசைப்பில் வாய்பொத்திய அன்று மதியம் ஏதும் சாப்பிடவில்லை நாங்கள்.

மனதில் உறைந்த துக்கம்.
படியாத அவன் முன்தலை முடி ,
அவன் சொல்லித் தந்த கெட்டவார்த்தைகள்.
‘அய்யிரே’ என்ற அழைப்பு.
பனங்கிழங்கின் மணம்.
மனசோரம் சிரித்தபடி தான் இருக்கிறான்.

பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடந்த போதெல்லாம்
மனக்கரங்கள் நீளும் அந்த மடுவைத் துழாவியபடி.
நினைவின் பாரம் தாங்கவொட்டாமல்
மீண்டும் அவனை மடுவிலேயே எறிகின்றேன்.

இன்றும் கடலூரை வெள்ளம் பதம் பார்க்கிறது.
மாநிலத்து நேய உள்ளங்கள் 
உதவிக்கென்று விரைகின்றன
உணவுடனும் உடையுடனும்.

இதை யாரேனும் படிக்கக் கூடும்.

அந்தப் பாலம் கடப்பீராயின்
அந்த மடுவருகில்  
ஒரு உணவுப் பொட்டலத்தைப் போடுங்கள்.
அங்கு தான் என் ராமதாசு இருக்கிறான்.
உணவு முடியாதெனில்...
ஒரு பனங்கிழங்கையேனும்.  
      
 


ஞாயிறு, நவம்பர் 29, 2015

புத்தினி


நடுநிசியில் நீங்கிச் சென்றான் சித்தார்த்தன்.  
சடுதியில் பிரிந்தே  யசோதரை இதயத்தை,
சுக்கலாய்ப் பொடித்து சுயம்தேட அகன்றான்.
பக்கலில் நல்மகவை பார்த்தபடி தவித்தாள்.

ஓரிரவில் குலைந்ததோர் வாழ்வுதனை  ஒதுக்காமல்,.
ஈரைந்து திங்கள்சுமந்த  மகவெண்ணி உயிர்தரித்தாள்.
உருவழிந்து ஊண்குறைத்து உறக்கம் துறந்தாள்.
கருபுகுந்தாள் தான்வகுத்த கூடொன்றின் கர்பத்துளே.

ஆசிகொண்ட நாளொன்றில் புத்தனும் மீண்டான்.
தூசிமூடிய பாதத்தையவள்  கண்டு உறைந்தாள்
ஞானம்கண்டு  சுக்கான தேகமதோ தகதகக்க,
மோனத்திலே சருகாய் ஆனவளோ கேட்டனளே!

‘உம்மையே  புத்தன்என்பரோ? புத்தனெனில் யாதாதல்?’
“இம்மையிலே ஞானம்கொண்டான்’’ என்றனனே ததாகதன்.
பல்லக்கு ஏறாதான் பாதம்பார்த்திருந்த அபலையவள்,
மெல்லவோர் மென்முறுவல் சிந்தியே மௌனமானாள்.

‘இருவருமே ஞானம் கண்டடைந்தோம்  ஐயன்மீர் !
இவ்வுலகை உமது மெய்யறிவோ உய்விக்கும் - ஆயின்
நானடைந்த ஞானமதோ பந்திக்கு வாராதே !
கானகத்து நிலவெனவே வீசியே ஓய்ந்திடுமே’

அளந்துமனம் சொல்லியே சூனியத்தில் லயித்தனள் !  
‘விளக்கும்படி’ புத்தனவன் வினவவும் முடித்தனளே :
“பெண்மையது முழுமைகாண வெளித்தேடல் வேண்டாவே.
திண்ணமாய் தன்னுள்ளே  பூரணம்தான் கொள்வாளே”


படம்: நன்றி கூகிள்


  


செவ்வாய், நவம்பர் 17, 2015

முகநூல் கவிதைகள்

கனவில் வந்த சீடன்
காலையில் வந்த கனவில்
என் காலருகே அமர்ந்திருந்ததோ
சுந்தர்ஜி....

'உப்புமாவுக்கு கடுகைவிடுத்து
எள்ளைத் தாளித்திருக்கிறாய்'என்று
.திருகிக் கொண்டிருக்கிறேன் அவன் காதை.


திரிகடுகம் செய்யுள் சொல்லவா? என்கிறான்.
ஐம்பதாச்சு...தாளிக்கத் துப்பிருக்கா? எனத் திருகலைக் கூட்ட,
'நீங்கள் தானே நான்' எனக் கள்ளம் தொனிக்கா பதில்...
திருகின காது வலிக்காதோ... சிரிப்பைப் பொசுக்க....

தொலைக்காட்சி உயிர்பெறுகிறது.
'சிறந்தவர் குருமார்களா? சீடர்களா?' எனப் பட்டிமன்றம்.
பாரதிபாஸ்கர் என் கட்சியைப் பேசுமுன்னேயே கைதட்டுகிறர்கள்.
'சிறந்தவர் சீடர்களே' என 
சுந்தர்ஜியைப் பார்த்து சிரிக்கும் சாலமன் பாப்பையா.

சேனல் மாற்றிப் போட்டால் அங்கே தலைப்போ 
'தாளிக்க உகந்தது கடுகா எள்ளா?'
கெட்டவார்த்தை சொல்வதுபோன்ற வாயசைப்பில் திண்டுக்கல் லியோனி...
'கடுகா இருந்தா என்ன, எள்ளா இருந்தா என்ன,
போட்டதத் தின்னுட்டு பொழப்பப் பாருங்க' என்கிறார்.

புவ்வாக்கு அர்ப்பணம்னா கடுகு,
அவ்வாக்கு தர்ப்பணம்னா எள்ளு
என்றார் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி;
'காதை விட்டால் யூடியூப் கேட்பேன் குருஜி' எனும் சுந்தர்ஜி ;
சீடர் செவிகளை விடாதீர் என்றார் பரமார்த்தகுரு;
இதையே கவிதையாக முகநூலில் போடச் சொன்னார் ரிஷபன்;

'பன்னிரண்டு லைக்குக்கு இந்தப்பாடா?'என்றபடி என் காது திருகப்பட்டது.
பின்னே கோபமாய் மீசைதுடிக்க நின்றிருந்தான் 
முண்டாசுக்காரன்....

.



முதுமை
பாடமுயன்றால் தொண்டை வலிக்கிறது.
தூக்க முயன்றால் கை(வலது) வலிக்கிறது.
அதேபோல்,
குனியமுயன்றால் இடுப்பும்,
குதிக்கமுயன்றால் காலும்,
திருப்பும் போதெல்லாம் கழுத்தும்,
வலிக்கின்றன.
எதையும் முயலாமலே,
வலித்துக் கொண்டேயிருக்கும் .....
மனசு மட்டும்.

வியாழன், நவம்பர் 12, 2015

வைஜெயந்தி மாலா


கலைக்கும் காலத்திற்கும் ஏதும் உறவோ பகையோ உண்டா என்ன? தன் காலத்தில் கொடிகட்டிப்பறந்த கலைஞர்களும், படைப்பாளிகளும் தன் காலத்திலேயே பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுவதும், அல்லது, அதிக பட்சம்  அடுத்த தலைமுறைமட்டும்  நினைவுகூறப் படுவதும்தான் அதிகம்.
அன்றி, அந்தக்கலையின் பெயர் உச்சரிக்கப்படும்தோறும் நினைவிலாடும் மேதாவிலாசம் மிக்கவர்களை காலம் தன் மடியிலேயே கிடத்தியிருக்குமோ ? தான்வாழும் காலத்திலேயே, தான் போஷித்த  கலைதழைக்க, அடுத்த தலைமுறையை உருவாக்கியும்: நரையும்திரையும் அற்பமானிடர்க்கே தானன்றி தனக்கல்ல என்றே, தன் கலையே தானாகி வளைய வரும் மேதைகளும் இன்றும் உண்டல்லவா?

கவிஞர் திருலோகசீதாராம் பேத்தியின் திருமணத்துக்காய் இந்தமுறை மும்பை வந்திருக்கிறேன். நேற்று ஷன்முகானந்தா ஹாலில் திருமதி வைஜெயந்திமாலாபாலி அவர்கள் நிகழ்த்திய ராமாயண காட்சிகள் நாட்டியம் காணும் வாய்ப்பு அமைந்தது. வைஜெயந்திமாலா அவர்களின் தற்போதைய வயது 79. அவர் கௌசல்யையாக வந்து, அட்சதை போட்டுவிட்டு சிஷ்யமார்களை வைத்து ஒப்பேற்றி விடுவார்கள் என நிகழ்ச்சியைத் தவிர்க்க இருந்தேன். எதற்கும் என் சித்தப்பாவின் கனவுக்கன்னியை பார்த்துவிட்டு வருவோமென்றே போனேன். ஆச்சரியமான ஏமாற்றம் எனக்கு.

மேடையில் அபிநயம் பிடித்தது வைஜெயந்திமாலா அவர்கள் மட்டும்தான். வேறு ஒரு ஜீவனும் சதங்கை கட்டவில்லை. சில ராமாயணக் காட்சிகள். ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் ‘நவ விதி பக்தி’ எனப்படும் ஒன்பது பக்தி முறைகளுக்குள் இராமாயண கதாபாத்திரங்களைப் பொருத்தி வழங்கப் பட்ட ஒரு கலைஅர்ப்பணமாய் நிகழ்ச்சி அமைந்தது.முறையாக நாட்டியம் பயின்ற என் மருமகள் மதுமிதா உடன்இருந்து அசைவுகளின் நுட்பங்களை விளக்கிய வண்ணம் இருக்க,வியப்பின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.    

வார்த்தைகள் உணர்த்த இயலாத உணர்வுகளை இசை உணர்த்தி விடும், இசையாலும் உணர்த்த இயலாதவற்றை நிருத்தியம் உணர்த்திவிடும் என்று சொல்வார்கள். 

கம்பனால் புரிந்தவை, தியாகையரால் தெளிந்தவை யாவுமே இந்த அபிநய ஜாலத்தில் வேறு கோணத்தைக் காட்டின. வைஜெயந்திமாலா காலத்தோடு போட்டிபோடவில்லை. உணர்வுகளின் உள்ளார்ந்த நுட்பங்களுடன் போட்டியிட்டார்.
ராமனுக்காய் பழம் பறிக்கும் தள்ளாத சபரியின் வைராக்கியம் புரிந்தது: மரணத் தருவாயில் இறகுகள் இழந்து, சீதையை ராவணன் கையிலிருந்து காப்பாற்ற முடியாமல் போன ஜடாயுவின் இயலாமையின் அவலம் புரிந்தது. பரதன், இலக்குவன், விபீஷணன், சீதை, அனுமன் ,சுக்ரீவன் என அனைவரின் பக்திபாவமும் விரல் அசைவுகளில், விழியிமைப்பில், நடைநடத்திய நாடகத்தில் பொங்கிவந்தன. அபாரம்.

நடனத்தின் போக்கில் பலமுறை மண்டியிட்டு அமர்ந்தார். எழுந்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டியத் தாரகையின் அசைவுகளில், கரணங்களில் முதிர்ச்சியும் அனுபவமும் மட்டுமே தெரிந்தது. மூப்பும் முடியாமையின் சிறு பிசிறுகூடத் தெரியவில்லை. பரதம் இவரை ஆட்கொண்டு விட்டது கண்கூடு. நாட்டிய நிகழ்ச்சி முடிந்து பேசியபோது, எனக்கு கணக்கு வைப்பது என்பதே மறந்துவிட்டது. வயதும் அந்த மறதியியோடு போயவிட்டது என்றார். அந்த வயதுகூட இவரை மறந்து போகட்டும்.

வைஜெயந்திமாலா நடிகையென நினைவுகொள்ளப் படுவதைவிட நாட்டிய கலைஞர் என்றே அறியப்பட விரும்புவார் எனத் தோன்றுகிறது. அவருடைய  சமகாலத்து நடிகைகள் கேரளாவிலிருந்தும், ஆந்திராவில் இருந்தும் வந்து, தமிழ்த் திரையுலகை தன் வசப்படுத்தியிருந்த போதும், தமிழகத்தை சேர்ந்த தமிழச்சியான வைஜெயந்திமாலா ஏனோ இங்கு அதிகம் படங்களில் நடிக்கவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, வாழ்க்கை, பெண், பார்த்திபன் கனவு , பாக்தாத் திருடன், தேன் நிலவு போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் ஹிந்தி திரையுலகில் பெரிய தாரகையாக உருவானார்.


நாகின், லட்கி, தேவதாஸ், மதுமதி, தேவதாஸ், சூரஜ், கங்காஜமுனா, சங்கம், அம்ரபாலி, சூரஜ், ஜூவல்தீப் என்று பல வெற்றிப்படங்களில் நடித்தார். பலமுறை பிலிம்பேர் அவார்ட் இவரைத் தேர்ந்தேடுத்தது.


கதாநாயகியாய் மட்டுமே 63 படங்களில் நடித்த அவர் வயதுஏற நடிப்புக்கு முழுக்குப் போட்டார். என்றுமே உடன் இருந்த நாட்டியத்தை இன்றுவரைத் தொடர்கிறார். நடுவில் அரசியலிலும் தடம்பதித்தார். விலகவும் செய்தார். அவர் வாழ்க்கை சரிதமாய் ‘பாண்டிங்’ (BONDING) எனும் புத்தகம் வெளியிட்டார்.

நான் முதன்முதலில் பொன்னியின் செல்வன் படித்தபோது ஏனோ, 'நந்தினி'யாய் என் மனதில் பதிந்த உருவம் வைஜெயந்திமாலா தான். அவ்வாறே,கடல்புறாவின் 'மஞ்சளழகி'யாய் இவரையே நினைவில் பதித்திருந்தேன். சற்றே சோகமும் திமிரும் கலந்த பார்வை. அசரடிக்கும் அழகு. பார்த்திபன் கனவு திரைப்படத்தில் மிக நளினமாய் அவரை காமெரா காட்டியது. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை எப்படி மறக்க இயலும்? ஹீராலால் மாஸ்டரின் உழைப்பு அதில் தெரியும். பத்மினியின் தாயாரும் வை.மாலாவின் தாயாரும் கொடுத்த நெருக்கடியில், நடனப் போட்டி வெற்றிதோல்வியின்றி சடுதியில் முடித்துவைக்கப் பட்டதாம்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் பற்றி சொல்லும்போது ஒரு இணைய விவாதத்தில் அ முத்துலிங்கம் சார் குறிப்பிட்டதாய் ஒரு சம்பவம்பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் போட்டிநடனம் ஆடும் போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம், ஒரு முறை பத்மினியின் நிழல் வைஜெயந்திமாலாவின் மேல் விழுந்ததாம்.  பத்மினி வருத்ததுடன் படபிடிப்பை நிறுத்தி 'என்னுடைய நிழல் உங்கள்மேலே விழுகிறது ' என்றார். உடனேயே வைஜயந்திமாலா குதர்க்கமாக ஆங்கிலத்தில் 'It's only a passing shadow’ என்றாராம் அந்த வார்த்தைகளின் கடுமையில் பத்மினி நெடுநேரம் அழுதபடி இருந்தாராம். ஆனாலும் இந்தம்மாவுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்திதான்  என்று ஒருகாலத்தில் பத்மினியின் பரம விசிறியான நான் கூட ரொம்பவே வருத்தப் பட்டேன்.

வைஜெயந்தி மாலா சிறுமியாக இருந்தபோதே போப்பாண்டவர் முன் நடனமாடியவர். 1959ல் ஐக்கிய நாடுகள் சபையில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண்மணி. அவர் நடனத்தில் மட்டுமல்ல, பில்லியர்ட்ஸ் விளையாட்டிலும் கைதேர்ந்தவர். கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர்.அதுவும், ராஜம் ஐயர், டி.கெ.பட்டம்மாள், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், கெ.வே.நாராயணசுவாமி போன்ற சங்கீத கலாநிதிகளிடம் கற்றவர்.

 
கலைஞர்களின் தனிப்பட்ட ஆசாபாசங்கள், கோபதாபங்கள், உணர்வுச்சிக்கல்களையும் மீறி மேலெழுவது அவர்களின் உன்னதக் கலையொன்றே. அதற்கான அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவர்களை நம் போற்றுதலுக்குரியவர்களாய் ஆக்குகின்றன. வைஜெயந்திமாலா அவர்கள் சந்தேகத்திற்க்கிடமில்லாமல் அத்தகு போற்றுதலுக்குரியவர் தான். 


சில காணொளிகள் கீழே:
1. பழகும் தமிழே (படம்:பார்த்திபன் கனவு)




2.தில் தடப் தடப் கெ...( படம்: மதுமதி... ஹிந்தி )

3.கண்ணும் கண்ணும் கலந்து (படம்:வஞ்சிக் கோட்டை வாலிபன்)



நன்றி:
படங்கள்: கூகிள்
காணொளிகள்: யூ டியூப்






புதன், அக்டோபர் 28, 2015

காதல் விலங்கு

    


நான் ரசிக்க வேண்டிய பாடல்களை
நீயே தெரிவு செய்கிறாய்

நான் உடுக்கவேண்டியிருப்பது,
நீ சுட்டும் ஆடைகளைத் தான்.

என் உணவும் உற்சாகமும் கூட
நீ கைகாட்டியவை தான்.

நீ உள்ளிழுக்கும் சுவாசத்தை
நான் வெளிவிடவேண்டும் என எதிர்பார்க்கிறாய்

என்னையன்றி வேறோர் நினைப்பில்லை உனக்கு.
காதல்காதல் என்றே என்னைக் கட்டிப்போடுகிறாய்.

உணரச் சொன்னால் உணர்வதும்
புணரச் சொன்னால் புணர்வதுமாய்
போய்க் கொண்டிருக்கிறது என் காலம்.

என் கனவிலும் கவிதைகளிலும்,
உன் சாயம் ஒட்டிவிடாதிருக்க
மெனக்கெடுகிறேன்.

ஆபரணம் என்றுதான் உன்னை அணிந்தேன்.
தளையானாய் என்றிடத் தயக்கமாய் இருக்கிறது.

இதைச் சொன்னேன் என்றே விதிர்த்து,
என்னைக் கையொதுக்கி விடாதே.

தோளில் வளர்த்த கிளி தூரப் பறப்பதெங்கனம்?
பட்டியைப் பிரித்த கண்,
பார்வைக் கூச்சம் கொள்ளாதோ?

இருந்துபோவோம் இப்படியே..
எல்லாமே காதலினால் தானே?



நவம்பர் 1990
(என் பரணிலிருந்து பரல்கள்)

திங்கள், அக்டோபர் 26, 2015

கவிக்கோ அப்துல் ரஹ்மான்


தமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல.
அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். 
எளிமை அதன் சாரம்.
குறியீடுகளால் கூவிக் குவித்தது கவிதைகளை. 

அந்தக்குயில் அப்துல் ரஹமான். ‘கவிக்கோ’ என்ற பட்டத்திற்கு சந்தேகமற உரியவர். புதுக்கவிதைகள் கோலோச்ச எழுந்தபோது மரபின் வாசிப்பனுபவத்தை, வார்த்தைகளின் வார்ப்புருவை உள்வாங்கி தனிப் பாணியிலே சொல்லப் பட்டவை இவர் கவிதைகள்

எழுபதுளின் ஆரம்பத்தில் புதுக்கவிதை இலக்கிய முறையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது என்றே சொல்லலாம். மரபுக் கவிதைகளின் தாக்கத்தை சற்றே பின்தள்ளி புதுக்கவிதை புழக்கத்தில் வந்தது. 
பல முயற்சிகள் முன்வைக்கப் பட்டன. சொல்லவந்ததை கவிதைகள் உரத்துச் சொல்லின. மரபின் வேலிகளை பிய்த்தெரிந்து பாய்ச்சல் காட்டின.
வாசகனின் உணர்வை நோக்கியே பேசின. 
மு.மேத்தா நா.காமராசன், தமிழன்பன்,சிற்பி,மீரா, பிரமிள்,ஞானக்கூத்தன் முதலானோர் நல்ல பங்களிப்பை செய்தனர். இன்றுவரை அவர்கள் கவிதைகள் ‘புது’க்கவிதையாகவே இருக்கிறது. 
காலம் அவற்றை களிம்பேற்றவில்லை .

வானம்பாடிக் கவிஞர்கள் இயக்கமாய் உருவானபோது அப்துல் ரஹ்மானின் கவிதைகள் அடையாளம் காணப் பட்டது. மரபை நன்கு உணர்ந்த கவிஞன் அப்துல் ரஹமான். மரபின் சொற்கட்டும் அடுக்கும் இயல்பாகவே இவர் கவிதைகளில் மிளிர்ந்தன. சொல்லவந்ததை உணர்த்தியபின்னும் இவரின் வரிகள் மனதில் ரீங்காரமிடும். கவிதையின் படிமங்களில் லயித்து வாசகன் உணர்வுகள் சுகம் காணும்.

பிறமொழி இலக்கிய வகைகள் சிலவற்றை தம் கவிதைகளில் முனைந்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் உண்டு. 
ஹைக்கூ, கஜல் கவிதைகள் பலவும் எழுதினர். ஆய்வு கட்டுரைகள், நூல்கள்,சொற்பொழிவுகள் கவியரங்கக் கவிதைகள் ஆகிய பல தளங்களிலும் ஈடுபட்டார். 
தாகூர்,ஷெல்லி, கலீல் கிப்ரான்,குன்ட்டர் கிராஸ், இக்பால், மிர்ஸா காலீப் போன்ற கவிஞர்களின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டவர்

அரபி, உருது, ஹிந்தி ஆங்கிலம் என பல மொழிகளிலும் தேர்ச்சியுள்ள கவிக்கோவின் கவியுள்ளம், ஒரு தேனியைப் போன்றே அந்த மொழிவனங்களின் இலக்கியப்பூக்களில் தேன்மாந்தின.

பகுத்தறிவுவாதியாய் தன்னை முன்னிறுத்தியவராய் இருந்தபோதும், கவிக்கோ ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர். தத்துவக் கவிதைகள் பல எழுதியிருக்கிறார்.

                           (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் கவிதைநூல் வெளியீட்டு விழா- மாவட்ட
                    ஆட்சியாளர் திரு பிராபகர ராவ் , அடுத்து திரு.இறையன்பு, உரையாற்றும்
                    கவிக்கோ மற்றும் அடியேன் (கருப்பு சட்டையுடன்)

வருடம் 1991 என நினைக்கிறேன். என் அன்பு நண்பர் வெ. இறையன்பு அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட நண்பர்கள் ஏற்பாடு செய்தோம். அந்தக் கவிதைநூலை வெளியிட கவிக்கோ அவர்களை அழைத்திருந்தோம். ஒரு மாலைநேரம் விழா இருந்தது. அதற்காக கடலூருக்கு வந்த அவருடன், ஒரு பகல்முழுதும் கவிதை இலக்கியம் பற்றி தனியே விடுதியறையில் பேசிக்கொண்டிருந்தது, எனக்கு வாய்த்த மேன்மையான தருணங்களில் ஒன்று. அந்த சமயம் மிகுந்த உற்சாகத்திலிருந்தார். என் சில கவிதைகளை சிலாகித்தது பரவசமளித்தது. சிலேடையான சொல்லாடலும், மதுரைக்கே உரிய மெல்லிய நையாண்டியும் அவர் பேச்சில் கண்டேன். கவிதைகளின் சொற்சிக்கனம் பற்றிய அவரின் வார்த்தைகளை இதயத்தின் ஓரத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். சூஃபி இலக்கியம் பற்றி ஒரு தெளிவையும் ஆர்வத்தையும் ஏற்ப்படுத்தினார். விழா முடிந்து ஊர் திரும்பியவர் நன்றிபாராட்டி எனக்கு கடிதமும் எழுதியிருந்த அவரின் பண்பு நெகிழச் செய்தது.

கவிஞர் அரசியல் சார்புநிலை எடுத்தவர். தி.மு.க ஆதரவாளர். தனக்கு வாய்ப்பளிக்கப் பட்ட பல பதவிகளை ஒத்துக் கொள்ளாதவர். எனினும் கடந்த ஆட்சியில் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் பொறுப்பை வகித்தார். அதை தன் இனம்சார்ந்த மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக ஏற்றார்.

பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்,ரகசிய பூ, பறவையின் பாதை, சொந்தச் சிறைகள்,சுட்டுவிரல்,விதைபோல் விழுந்தவன்,பாலை நிலா போன்ற பல கவிதை நூல்கள என நாற்பதுக்கும் மேற்ப்பட்டவை வெளியாயிருக்கின்றன.

தமிழன்னை விருது, கலைமாமணி விருது, ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக1999ல் சாகித்ய அகாடமி விருது போன்ற பல விருதுகள் இவரை வந்தடைந்தன.

‘அம்மிக் கொத்த சிற்பி எதற்கு?’ என்று கவிக்கோ திரைப்பாடல்கள் எழுதும் வாய்ப்பை மறுதலித்ததும் , ‘சிற்பிக்கு அம்மிகொத்தக் கூட தெரிந்திருக்க வேண்டும்’ என  கவிஞர் வைரமுத்து ஆற்றியதாய்க் கூறப்படும் எதிர்வினையும் அந்நாள் இலக்கிய வம்புகளில் ஒன்று!

நான் மிகவும் ரசிக்கும் அவரின் ஒரு வரிக் கவிதை ஒன்று உண்டு .

தலைப்பு : திருக்குறள்
கவிதைவரி : மும்முலைத் தாய்.

கவிக்கோவின் கவிதை வரிகள் சில:

ஆன்மாவின் விபச்சாரம்
.....................
அரும்பிய துருவ மீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும்............
===========

சிலப்பதிகாரம்
பால்நகையாள் வெண்முத்துப்
பல்நகையாள் கண்ணகிதன்
கால்ககையால் வாய்நகைபோய்\
கழுத்துநகை இழந்தகதை.

காமத்துப் பால் 

கடைப்பால் என்றாலே
கலப்புப் பால்தான்

முதுமை

முதுமை
நிமிஷக் கரையான்
அரித்த ஏடு

இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு

ஞாபகங்களின்
குப்பைக் கூடை

வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்.......
..................
உயிர்களுள் நான்
ஆய்தம் எனக்காட்ட
நடக்கும் பாதையெல்லாம்
காலோடு கோல்சுவடு.

மறுப்பதுபோல் தலையாட்டம்
வாழ்வையா?
மரணத்தையா?.........
............................

முதுமை
போதிமர நிழல்தான்
ஆனால்
சிலர்தான் இங்கே
புத்தர்களாகிறார்கள்
பலர்
உறங்கிவிடுகிறார்கள்......

----------------- இன்னொரு கவிதையில்,

பிருந்தாவனமெங்கும்
செவிகள் பூக்க
சுவாசத்தை ராகமாக்கி
ராதை உன்னில்
புல்லாங்குழலாகி இருக்கிறாள்.”

                                               என்று பால்வீதியில் பரவசம் காட்டுகிறார்.

“வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டு விட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?
                                            என்ற அவரின் ஆதங்கத்தைப் பாருங்கள்.



இன்று அவருடைய பவளவிழா சென்னையில் விமரிசையாக நடந்து வருகிறது.

ஒரு உன்னதக் கவிஞனின் சில கவிதைகளைத் தேடித் படியுங்கள். அவர் இன்னமும் பலகாலம் வாழ்ந்து கவிதைகளை அள்ளித்தர ஆசீர்வதிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.