ஒரு பெருநகரத்தின் மையத்திலிருக்குது இந்த மேல்தட்டு குடியிருப்பு வளாகம். வந்தேறிகளை விரட்டியும் விலைக்குவாங்கியும் வளைக்கப்பட்ட பெரிய சதுரம்.. வட்டமாய் விட்டுவிட்டு ஆறு பல்லடுக்கு கட்டிடங்கள். நடுவே ஒரு பெரிய புல்தரை. புல்தரையை சுற்றி நடைபாதை.
அந்த நடைபாதை ஒரு பெரிய வட்டத்தை நடுவாந்திரத்தில் குறுக்கியும், கீழ்பக்கத்தைவிடமேற்பகுதி அகன்றும் இருக்குமாறு அமைச்சிருக்கா. மேற்புறமாய் பாதைதாண்டி சிலநீற்றூற்றுகள் வரிசைகட்டி நிக்கிறது. ஆகாசத்திலிருந்து பார்த்தால் பெரிய பாதம்போல் தோணுமாயிருக்கும். கோகுலாஷ்டமி கிருஷ்ணபாதம்..... பெரியபெரிய பதம்வைத்து கண்ணா நீ வாவா! வா! பாதமே இத்தனை பெரிதெனில் உன் மோகவுரு எவ்வளவு பெரிதாய் பரந்திருக்கும்? மலைமுகடுகள் தலையணையாக,உன்மார்பில் பொருதவள் எத்துணை பென்னம்பெரியவள்! விசாலம் சொல்லுவாளே சுந்தரகாண்டம்.....”எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும்ஆடி......’’
மூணுமாசம் கழித்து இன்னைக்குதான் வாக்கிங் வந்துருக்கேன். அண்மையில தான் ஹிருதயத்துக்குள்ளே துருவி ஸ்டென்ட் வச்சிருக்கா.
நெஞ்சைக்கிழித்து பார்த்தீங்களே.... அங்கிருந்த முகங்களை, ஞாபகங்களை, சௌந்தர்யங்களை கண்டீர்களோ? கண்டிருந்தாலும் என்போல அவற்றை சீராட்டத் தெரியுமோ? அந்தக் கமலத்தில்தான் ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு ஜீவனை தேவதையா ஆவாஹனம் பண்ணி, வேளை தப்பாம ஷோடசோபசாரம் பூஜாவசம். அடுத்த தேவதைக்கு வேளைவந்தபின், இருப்பிலுள்ளதை கோஷ்டமூர்த்தமா நினைவு கர்ப்பத்துல ஏற்றி... உங்களுக்கு இதெல்லாம் புரியுமோ. புரிஞ்சாலும் அவசியமோ? வேலையைப் பாருங்கோ.....
இதோ என்னை தாண்டிகிட்டு ஒரு பொண்ணு வேகமா நடந்துபோறா. டக்குடக்குன்னு பொய்க்கால்குதிரை நடை. பூரிக்கு பிசைந்து வச்ச மைதா உருட்டலாட்டம் ஒரு பசுவெண்ணை நிறம். கருப்புல முக்கால்சராயும் வெள்ளைபனியனுமாய் ‘நைக்கி’ அலங்காரம். காலரில்லா பனியனுக்கு கழுத்தைசுற்றி கருப்புல பைப்பிங்தையல். அதே பைப்பிங்ல ஒருகீற்று நேற்கோடாய் முதுகுநெடுக்க இழுத்திருக்கு. ஆளை ரெண்டாப் பிளந்தாப்பல..... குதிரைவால் பின்குச்சம் ரெண்டுதோளுக்குமாய் மாறிமாறி ஜிங்குஜிங்குன்னு ஆடறது. கையில தர்ப்பணதட்டு அகலத்துக்கு ஒரு செல்போன். அதுல வெள்ளை ஒயர் கிளைவிட்டு காதேறிகிடக்கு. 'தாமரைப்பூத்த தடாகமடி'யா கேக்கப் போறா?! ஏதோவொரு ஜிங்கலாலா..... தாண்டி ரொம்பதூரம் போயாச்சு. இப்போ பளிச்சுன்னு காண்றது முக்கால் பேண்டுக்கும் மீந்த அவளோட கெண்டைக்கால்கள்தான்.
'அம்மா! காலைக்காட்டிண்டு புடவையைத்தூக்கி சொருகிக்காதேயேன்... எனக்கு பிடிக்கல்லம்மா....' அதுதான் அம்மாவுக்கு வேலை செய்யத்தோதுன்னு எனக்கென்ன தெரியும்?
'இதப்பாருடீ! உன் புருஷனுக்கு பாதத்துக்குமேல கண்ணுக்குப்படாம பாத்துக்கோ. எட்டு வயசுலேயே சொருகின புடவையை இழுத்துஇழுத்து விட்டுடுவான்'....புது மருமகளுக்கு அம்மோபதேசம்...
ஒற்றைத்தலையணையில் புதுவாசனையோடு கிசுகிசுத்ததோ 'அப்டில்லாம் உனக்கு தடையில்லை. வேணும்னா பாதத்தை மட்ட்டும்ம் மூடிக்கோ'ன்னு...
'ச்சீய்ய்'....
'சீச்சீ'கள் சிதறியபடி சிலகாலம்....
'என்ன சார்? தனிக்கு சிரிச்சபடி நடந்தாறது ?'
"சீச்சீ... அதெல்லாம் ஒண்ணுமில்லே... லைப் சர்டிபிகேட் அனுப்பிட்டேளா?"
"இன்னும் இல்லை."... சிந்தனை வயப்பட்டது கிழ சகபாடி. லைப் சர்டிபிகேட் குறித்து நினைவுறுத்தி டென்ஷன் பண்ணியாச்சு. அதுங்கிட்ட இருந்து இன்னுமொரு பத்துநிமிஷம் பேச்சுமூச்சு இருக்காது. தியாகராஜன் இத்தனைக்கும் என்னைவிட மூணுவயசு சின்னவன். பொறக்கறச்சேயே அவன் கிழவனா பொறந்தாச்சு. கவலைப்பட்டுகிட்டு இருக்கறதுக்குன்னு ஒரு பிறப்பு. இந்த பொழுதுக்கு ஒரு லைப்சர்டிபிகேட்.என்ன செய்ய?
கொஞ்சமேதூரம் சேர்ந்து நடைபோட்ட தியாகராஜன் சொல்லிக்காம பின்வாங்கியாச்சு. உங்க 'எட்டிகெட்டு' இங்கிதமெல்லாம் கிழமார் நாங்க அறியோம். மேலே நடக்குறேன்.
நடைபாதையை சுற்றி மார்உயரத்துக்கு நெருக்கமா வெறும்பச்சையாய் குரோட்டன்ஸ் போல நெடுக்க நட்டுருக்கு. இப்பத்தான் புதுசாக பார்க்கறாப்பல பார்க்கிறேன். மேலிலையெல்லாம் பொன்பச்சையாய் துளிர்த்திருக்க கீழிலைகள் அடர்பச்சையில் முதிர்ந்துகிடக்கு. சீரா வெட்டிவிட்டிருக்கான். ரொம்ப உறுத்து பார்த்தால்தான் அந்தப்பக்கம் கொஞ்சிக்கொண்டிருக்கும் இளஞ்சோடி இடுக்குகளூடே நீரோட்டமாக தெரியும். அவ்வளவு அடர்ந்த பச்சைவளையம். அதுசரி... அந்தப் பக்கம் இருப்பது 'இளஞ்'ஜோடின்னு எப்படி தெரியும்னு கேக்கறேளா? ஒரு நம்பிக்கை தான்... அப்படியே இருக்கட்டுமே!
இது 'சி' பிளாக். இங்குதான் பாதையும் வளையறது. ரெண்டுமாடி உசரத்துக்கு பெரும் கான்கிரீட் தூண்கள்தான். அதுக்கும் மேல்தான் இருப்பிடங்கள். அத்தூண்கள் அடர்ந்த கூடத்தில், பத்துபதினைந்து பெண்டுகள் கையைக்காலை மடக்கிநீட்டி, தலையையும் தோளையும் சுழற்றி முன்னும்பின்னுமாய் ஆடிண்டு இருக்கா. பெரிய கறுப்பு ஸ்பீக்கர்களினின்று இசைவழியறது. ஜங்குசக் ஜங்குசக் ஜங்குஜங்கு ஜங்குசக்....
லுக்மீ லெப்ட் லுக்மீ ரைட்
லுக்மீ லேடி யூ ஆர் ரைட்.
ஜங்குசக் ஜங்குசக்
ஜங்குஜங்கு ஜங்குசக்....
இது பிட்னஸ் எக்ஸர்ஸைசாம்...ஏரோபிக்ஸோ இறங்கோபிக்ஸோ ஏதோ ஒண்ணு.
அந்தப்பாட்டு தாளகதிக்கேத்தபடி நானாத்தான் இட்டுகட்டி சொல்றேன். 'லுக்மீ'ன்னு வருமோ? 'லுக்அட்மீ’'ன்னு தானே சொல்லணும்? பரவாயில்லை... இசையுடைய பாட்டுக்கு இழுக்கு நன்று ! ஆடுங்கோ.. நல்லா ஆடுங்கோ... ஊளைசதை வைக்காம ஊட்டமா இருங்கோ. இதெல்லாம் அப்போ உண்டா? ஆனா போற வரைக்கும் விசாலம் கோயில் சிலையாட்டமாத்தானே இருந்தா?
“ .......உங்களுக்கென்ன? உக்காந்த இடத்துல காப்பி... அம்பாரம் பாத்திரம் துலக்கி கல்லுரல் தேயத்தேய மாவரைச்சு, சமைச்சு,பறுமாரி பம்பரமா நாளெல்லாம் சுழண்டு அக்காடான்னு படுத்தா பின்னோடியே பாதம் சொரண்ட நீங்க... ‘’ தலைய விலுக்குன்னு ஆட்டிக்கிறேன்... நினைப்பு என்னவோ அப்படி ஆட்டினா உதுந்து போயிடும்னு...
அந்த மேடு பார்த்தீங்களா? அங்க ஒரு விசிறிவாழை இருந்தது. விழுந்தது.அதோட சரி. என் தம்பி கிட்டே நாலுமாசம் மங்களூரிலிருந்துவிட்டு திரும்பிவந்து பாக்கிறேன்.... வாழையைக் காணோம். ரெண்டு பாக்குமரம் ஒண்ணுக்கொண்ணு எதிரெதிரா வளைஞ்சு விறைச்சுகிட்டு அங்க நிக்கிறதுகள். வேரடி மட்டும் என்னவோ ஒண்ணு பக்கத்துடன் ஒண்ணாத்தான் நட்டிருக்கு.
இந்த ரெண்டையும் பாக்குமரம்னா சொன்னேன்? ஒரு பாளையுண்டா பாக்குண்டா? இது பாக்குமரம் போல ஏதோ ஒண்ணு. எல்லாமே இங்க ஏதோ ஒண்ணைப்போலதானே? மனுஷனைப் போல மனுஷன்.. உறவைப் போலவே உறவு.....வாழ்க்கை போலவொரு வாழ்க்கை.
இடது 'பாக்குபோல' மரத்துகீத்துகளிலே காய்ஞ்சுபோன கீத்தொண்ணு தொங்கினபடி இருக்கு. எப்பவோ மேலத் தைக்கால்தெரு கரண்ட்கம்பியில செத்துத் தொங்கின கருடனை மாதிரி. கோயில்ல மூன்றாம் நாள் உற்சவம் வேற... ஆவுடையப்பன்தான் துரட்டிக்கோலை ரப்பர்கிளவுஸ் போட்டுகிட்டு அந்த கருடப்பட்சியை கீழே தள்ளினது .குளக்கரையிலே குழிவெட்டி,உப்பு கற்பூரம் நாமகட்டி எல்லாமுமா போட்டு புதைச்சா...
பெரியவால்லாம் தலைமுழுகினா... பாட்டிகளெல்லாம் உபவாசம் இருந்தா... இப்படி வந்து இங்க உயிரைவிடுமோ பெருந்திருவடி?! இப்போ அந்தப் பாட்டிகளில்லே, ஆவுடையப்பனில்லே.. அந்தப் குளத்தை தூர்த்து கட்டடமாக் கூட ஆயிடுத்து. நினைப்புமட்டும் ஊசலாடிகிட்டே இருக்கு, இதோ காய்ஞ்சு தொங்கற கீத்துமாதிரி.
ரெண்டு ரவுண்டு நடந்திருப்பேனா? அதுக்குள்ள கால்முட்டி பாட்டுபாடறது. தைலம் தேச்சுக்கிறதெல்லாம் ஒரு மனசாந்திக்காகத்தானே? மொசைக் பெஞ்சில் உட்கார்ந்துட்டேன். உட்கார்ந்தப்புறம் தான், நாங்கல்லாம் மட்டும் லேசுபட்டவாளான்னு இடுப்பு, தோள்பட்டை, கழுத்து மூணுமா லாவணி பாடறதுகள்.
'சிங்கக்குட்டிக்கு காலுவலிக்குதா?', மடியில் என் கால்களைத்தூக்கிப் போட்டுக்கொண்டு பிடித்துவிட்ட என் தாத்தா நினைப்பு வந்துடுத்து.
'அஸ்மத் பிதாமஹம் கௌண்டின்ய கோத்ரம் கோபாலசாமி சர்மாணாம், ருத்ரரூபம் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி.'
'அஸ்மத் பிதாமஹம் கௌண்டின்ய கோத்ரம் கோபாலசாமி சர்மாணாம், ருத்ரரூபம் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி.'
தாத்தாவோட சரி! அதுக்கப்புறம் யாரும் என்னைக் கொண்டாடினவங்க இல்லை. எனக்கு வாய்ச்சவளோட கண்ணோட்டமே தனி. ஜூரம் வலின்னு சொன்னாப் போறும் ,முகத்துல தனி சிடுசிடுப்பு வந்துடும்.
'கையும்காலும் இரும்பால அடிச்சு வார்ப்படமாவா வார்த்திருக்கு? பூனையாட்டம் உடம்ப நக்கிண்டே இருக்காம ஆறவேலையைப் பாருங்கோ'ம்பா.... மருமகளோ ஒருபடி மேல... இருமினாலே போறும்.. அவளோட வாய்,மூக்கு,கண்ணு,புருவமெல்லாம் சுருங்கி ஒரு நேர்க்கோட்டுக்கு வந்துடும். மகராசிக்கு அவ்வளவு அருவருப்பாம்.....
உனக்கும் என்னைமாதிரி எழுபத்தெட்டு வயசு வரும்... வா... நீ இருமினா உன் மருமகள் உன்னை துப்பாக்கி எடுத்து சுடப்போறா பாரு...
என்னோட பேத்திக்கு ஏழுவயசு. குழந்தைக்கு சுகவீனம் வந்தாக்கூட வீட்டுல மிரட்டலும்உருட்டலும் தான். ஒரு தழுவல்கூட இருக்காது. யாரைச் சொல்றது என்னத்த சொல்றது...
மெல்ல எழப்பார்க்குறேன். கீழ்க்கால் நடுங்குது. பரந்தாமனை ஒரு வாக்கிங் ஸ்டிக் வாங்கித்தரச் சொல்லணும். ஒருவழியா வீட்டுக்குள் வந்தாச்சு. சோபாவில் படுத்தபடி பேத்தி சிணுங்குகிறாள். 'ஸ்கூல்ல ரெண்டு பீரியட் டான்ஸ் ரிகர்ஸல்ம்மா... காலுல்லாம் வலி தாங்கல்லமா' .
பரபரன்னு சோபா ஓரத்தில் சரிந்து உட்கார்ந்தேன். பேத்தியின் கால்களை மடியில் கிடத்தி 'என் சிங்கக்குட்டிக்கு கால்வலிக்குதா?' என்று அந்த மெல்லிய கால்களைத் பிடித்துவிட்டேன். எதிர்பாராமையின் ஆச்சரியம் கலையாமலே 'சூப்பரா இருக்குத் தாத்தா' என்றாள் முகம்பொங்க சிரித்தபடி. விரல்களில் நெட்டிமுறித்து விட்டேன். 'வௌவ்.சூப்பர் தாத்தா' என்றாள் மீண்டும்.
எனக்கு பேத்தி பாக்கியம் மட்டும்தான். 'பிதாமஹம்.... ருத்ர ரூபம்... தர்ப்பயாமி' ஒண்ணும் கிடைக்காது. பரவாயில்லே.....
உனக்கு கைகால் பிடிச்சுவிடற புருஷனும் பிள்ளைகளுமா வாய்க்கட்டும் என் குலக்கொடியே !