சனி, நவம்பர் 17, 2012

வேறென்ன கேட்பேன்? – 4


(கதையின்  இந்தப் பகுதியைத் தொடர்வது அடியேன் )

சரிடா! நான் மதியம் கிளம்பறேன்.. கலியபெருமாள் கோயிலுக்கு  போயிட்டு அப்படியே ஊருக்குத் திரும்பணும்... சாவகாசமா இன்னொரு முறை வறேன்.. சரிதானே?” என்றார் ஆராமுது.

சிவபாதம் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டார். துருத்தியின் உறுமலாய் பெருமூச்சு வாங்கியது.. ஆராவமுதன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்... கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது..

‘”ஆராமுது.. என்னை நாலு அறை அறைய மாட்டியா? தோளில் போட்டிருக்கும் சவுக்கத்தால் என் கழுத்தை இறுக்கி கொன்னு போடுடா.. இங்கே நீ வந்தது முதல் எதுவுமே கேட்டுக்காம எதுக்கு வதைக்கிறே?”

ஆராமுது எழுந்து வந்து சிவபாதத்தின் கைகளைப் பற்றிக் கொண்டார். 

வேண்டாம்டா. எதுவுமே நீ சொல்ல வேண்டாம். சொல்லி என்ன ஆகப் போகிறது.. எதை மாற்ற முடியும்.?. வேறென்னடா கேட்பேன்? நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம் இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள் இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு.. உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு போறேன்.. கலங்காம இருடா.

பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில் அவர்களின்   சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,வேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..

நீ.. ரொம்ப பெரியவண்டா.. உனக்கு நல்லது செய்வதாய்த்தான் அதையெல்லாம் செய்ய சட்டென்று சிவபாதத்தின் வாயைப் பொத்தினார் ஆராமுது..
போறும்.. இப்பத்தானே சொன்னேன்.. விடுன்னா விட்டுடணும்.. பொழச்சிக் கிடந்தா இன்னொரு சமயம் பேசிக்கலாம்.. எல்லாத்தையும் மறந்துட்டு பழைய சிவபாதமா மீசைய முறுக்கிக்கிட்டு முண்டாவைத் தட்டிக்கிட்டு நில்லுடா.. நீ நிப்பே.. உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ எட்டூருக்கு நிப்பே.. ஒரு வார்த்தை பேசாதே

அம்மாடி.! சமயல்கட்டைப் பார்த்து கூவினார் ஆராமுது.உன் சம்சாரம் பேரு என்ன.?”

கற்பகம்

அம்மாடி கற்பகம்! சமையல் ஆயிடுச்சுன்னா இலைய போடு தாயி.. எனக்கு கிளம்ப நாழி ஆச்சு.

கற்பகத்துக்கு தூக்கிவாரிப் போட்டது.. தன் பெயரை சொல்லி கூப்பிட்ட ஆராமுதன் குரலில் இருந்த வாத்ஸல்யம் அவளை உருக்கியது.. அவள் ஏதோ ஒரு பழைய கணக்கு நண்பர்கள் இடையில் சரிசெய்யப் படுவதாய் உணர்ந்தாள். என்ன கணக்கானால் என்ன? இந்த சந்திப்பில் தன் புருஷனுக்கு பல சுமைகள் இறங்கிப் போகும் என உணர்ந்தாள். தன்னை பேர் சொல்லி அழைப்பவன் எனக்கு பந்தப் பட்டவன்..அவயாம்பிகை அனுப்பின தேவதூதன்

இதோ.. பத்து நிமிஷத்துல ஆயிடும் அண்ணா!

என்னை.. என்னை அண்ணாங்குறாடா! ஆராமுது நெகிழ்ந்தார்.

உன்னை குலசாமின்னு சொல்லணும்டா வெறும் அண்ணாங்குறா போக்கத்தவ!

மேலே ஏதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

ஆராமுது ரசித்து சாப்பிட்டார். கற்பகம் ! தெளிவா ரெண்டு கரண்டி ரசத்தை கையில விடும்மா

இரண்டுகை ரசம் ஆறு ஏழு என நீண்டது.

கற்பகத்துக்கு கண்ணீர் தளும்பியது. மெல்ல குடிங்கண்ணா. புரையேறப் போகுது..

என்னை யாரும்மா நினைச்சுப்பா? புரையேறுறதுக்கு?”

இனி நான் நினைப்பேனண்ணா கற்பகத்தின் மனசு அலறியது..பிள்ளை சுமக்காமல் பாழாய்க் கிடந்த அவள் வயிற்றில் தாய்மை சுருண்டது.

சரிடா.. கிளம்பறேன். இன்னைக்கு ரொம்ப உடம்பை அலட்டிக்கிட்டே.. படுத்துக்கோ 

எப்படா திரும்ப வருவே?

எப்ப வேணும்னாலும்

அண்ணா! இது உங்க வீடு.

ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார் ஆராமுது..எனக்கொரு நமஸ்காரம் பண்ணேன் கற்பகம்

ஓடிவந்து ஆராமுதன் காலில் விழுந்தாள்..சட்டைப் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவள் கையில் திணித்தார்.

தீர்க்காயுசா இரும்மா. இந்த கிருக்கனை நல்லா பார்த்துக்கோ

சரிண்ணா. சீக்கிரமா திரும்பி வாங்க.

உன் ரசத்துக்காகவாவது திரும்ப வருவேன். வாசலை நோக்கி நடந்தார் ஆராமுது. விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு கையில் ஒரு ரெக்ஸின் பையுடன் சிவபாதத்தின் கண்முன்னே போனபடி......

நீ ரொம்ப பெரியவண்டா... அவர் கைகள் தானாய்க் குவிந்தன.  போவது தன் பழைய அப்பாவி ஆராமுது இல்லை.  புத்தனிவன்.. ஏசுப்பிரபு..

மெல்ல கட்டிலில் சரிந்தார். கற்பகம் தலையணைகளை சரி செய்தபடி  சிவபாதத்திடம் சொன்னாள், மனசுக்கு ஆறுதலா இருக்குங்க.. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. இவர் நம்மகூட நாலு நாள் இருந்தா நீங்க எழுந்து ஒடுவீங்க.” என்று எழுந்தாள்.

எழுந்து ஓடுவேனா?”

அவனை ஊரைவிட்டு ஓட வைடா.. இல்ல உலகத்தை விட்டே ஓட வைப்பேன்.. அப்பாவின் இரைச்சல் சிவபாதம் காதில் ஒலித்தது. சிவபாதத்தின் ஒரே தங்கை ஜமுனா ஆராமுதுக்கு தன் காதலைத் தெரிவித்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி எழுதின கடிதம் அவன் அப்பாவின் கையில் சிக்க ருத்ர தாண்டவம் ஆடினார்.

ஜாதி கெட்டநாயி! உன் சினேகிதன்னு வீட்டுக்குள்ள வளைய வரவிட்டது எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியாடா?’

இல்லப்பா. அவன் அப்படி இல்லை. இந்த சிறுக்கிய வெட்டுங்க,, ஆராமுதுவை ஏதும் சொல்லாதீங்க..  இப்பத்தான் அடுத்தடுத்து அப்பாவும் அம்மாவும் செத்துப் போயி ஆளில்லாத அனாதையா நிக்கிறான்பா

அவன் இல்லேன்னா செத்துபொய்யிடுவேங்கிறாளே கடுதாசில.. அவனை இருக்க விட்டாத்தானே?’

அப்பாவும் பிள்ளையும் ஆலோசித்தார்கள். அப்பாவின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த அந்த அலுவலகத்தில் ஆராமுதன் பொறுப்பிலிருந்த பணம் இருபதாயிரம் மாயமானது. பொறுப்பாளர் போலீசுக்கு போவதாயும், எழட்டு வருடம் சிறைவாசம் உறுதியென்றும் மிரட்டவைக்கப் பட்டார். கலங்கி நின்ற ஆராமுதனை ஊரைவிட்டே கண்காணாமல் போய்விடும்படி தன் பங்கு வசனத்தை சிவபாதம் சொல்லி கொஞ்சம் பணமும் கொடுத்தனுப்பினான்

.மறந்தும் இந்தப் பக்கம் வந்து விடாதே. எந்தக் கடிதமும் போட்டுவிடாதே. வடக்கே எங்காவது போய் பொழச்சிக்கோ. இங்க உனக்கும்தான் யாரிருக்கா? கொஞ்ச வருஷம் போனபிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதும் வண்டி பிடிச்சி மதராஸ் போய் வடக்கே போற ரயிலைப் பிடிச்சியானா
தப்பிச்சிக்கலாம். இங்கே மேற்கொண்டு நான் ஏதும் சமாளித்துக் கொள்கிறேன்.”

ஆராவமுதன் விலகியவுடன் ஆபீஸ்கணக்கு சரி செய்யப்பட்டது. ஆராவமுதனின் இந்த கதிக்கு காரணமான ஜமுனாவுக்கு நடந்த நாடகம் அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொண்டபோது தெரியவந்தது. வீட்டின் கிணற்றின் ஆழத்தில் நியாயம்தேடி தஞ்சம் புகுந்தாள். எதற்குமே அர்த்தமில்லாமல் போய்விட்டது.

அப்பா! என்ன சாதித்தீர்கள்.? உனக்கேன் பாழும்காதல் வந்தது ஜமுனா? உயிரான சினேகிதத்திற்கு துரோகம் செய்தேன்.. அது உன்னைக் காக்கவென என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன் ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும். தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று  ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன். அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.. மாடிவிட்டு கீழே இறங்கினார்..

மெல்ல மெல்ல கற்பகம் கைலாகு கொடுத்தபடி உடன்வந்தாள்

என்ன அண்ணனையே நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?”

அண்ணன்!முனகிக் கொண்டே தோட்டத்தில் தரையைப் பார்த்தார் சிவபாதம்.

தரையோடு ஒட்ட வெட்டபட்ட முருங்கை மரத்தின் வேர்த்தட்டில் பொன்பசுமையில் சிறிதாய் துளிர்விட்டிருந்தது.  

                                                 (முற்றும்)
   

சனி, நவம்பர் 10, 2012

வேறென்ன கேட்பேன்-3

இந்தக் கதையின் மூன்றாம் பகுதியை இங்கே தொடர்பவர் திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள்..



ஒடினார்.. ஓடிக் கொண்டே இருந்தார்..காலில் வலு இருக்கும் வரை ஓடினார்.


ஒடுகாலி என்று பெயர் கிடைத்தது..அது மட்டுமா? அத்துடன்….

அதை எப்படி சொல்வது?

முப்பது வருடம் ரணம் முள்கிரீடமாய் இவரை அழுத்த..

ஆராமுது என்றாலே………..

…………………………………………………………………………..



ஆகி விட்டது..எல்லாமே போச்சு…யாரிடம் போய் என்ன கேட்பது? அப்படிக் கேட்டாலும் அந்த ஞானஸ்னானம் இவர் மீது

முப்பது வருடங்களாகப் படிந்த அந்த கறையை போக்கி விடுமா?

இங்கு வரவேண்டும் என்ற ஆவல் மனிதனை சுனாமியாக அலைக் கழித்தது..வந்தார்…இப்போது அதே மனமே ஏன் வந்தாய் என்று அவரைக் கேட்கிறது..

மேலும் பழைய புண்ணைக் கிளறிப் பார்ப்பதால் என்ன பயன் வந்து விடப் போகிறது? காலம் தான் காயத்தை ஆற்றும் என்று சொல்வது பொய் தானா?..

இல்லாவிட்டால் சீழ் பிடித்தது ரணமாகி இப்படி ஆகியிருக்குமா என்ன?

“ என்னப்பா... கனவா ?” 

“ஒன்றுமில்லை” – இயலாமை ஒரு வெற்று சிரிப்பாய் வெளிப்பட்டது.

யார் பண்ணின தப்புக்கோ யாரோ ஒருவர் சிலுவை சுமப்பது இன்று நேற்றா நடக்கிறது?

எதற்காக இங்கு வந்தோம்?

ஏன் வந்தோம்?

ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும் என்கிற ஆவலுடன் வந்தவருக்கு, வாய் ஏன் இப்படி மெளடீகம் பூண்டது?

ஒரு குற்றம் தெரிந்தோ தெரியாமலோ நடந்து விட்டது..



குற்றம் நடந்தது முப்பது வருடங்கள் முன்பு…குற்றம் செய்தவரும், செய்யாத குற்றத்தை சூழ்நிலையால் ஏற்றுக் கொண்டவருமே இந்த முப்பது வருட முடிவின் எச்சம்!

தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட நீதி யன்றோ?

நான் தான் குற்றம் செய்தேன் என்று யாரிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வீண் பழியாய் என் மீது குற்றம் சுமத்தப் பட்டது என்று யாரிடம் நிரூபிக்க வேண்டும்?

இந்த முப்பது வருடங்கள் எல்லாவற்றையுமே முழுங்கி விட்டது..

எல்லாவற்றையுமே! 

சிவபாதத்துடன் பேச வேண்டும் போல இருந்தது.

ஒன்றை கவனித்தார் ஆராமுதன்..சிவபாதத்திடம் பேசும் போது அவர் கண்கள் கொஞ்சம் குறுகிப் போய் தாழ்ந்திருந்தன.. இவர் கண்களை நேருக்கு நேராய் பார்க்க ஒரு கூச்சம்! அச்சம்!!

கட்டிலிலிருந்து எழுந்தார்.

“என்னப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்..”

“அதுக்கா அவ்ளவ் தூரத்திலிருந்து வந்தேன்..”

“அப்ப பேசு..” – சிவபாதம் எழுந்து உட்கார்ந்தார்..

“ பால்ய சினேகிதரைப் பார்த்ததும் இப்ப தாங்க எழுந்து உட்கார ஆரம்பித்திருக்கார்..” – சிவபாதம் மனைவி.

“அப்படியா “ – புன்னகைத்தார் ஆராமுதன். 

அந்த அம்மையார் முகத்திலும் முதலில் இருந்த கடுமை மறைந்து இதழ்க்கடையோரம் லேசாக புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

.” அந்த காலத்துல தமிழ் சொல்லித் தந்தாங்களே அந்த டீச்சர் பேர் என்ன?”

”துளசி டீச்சர்”

” இருக்காங்களா இன்னும்?”

“ உனக்கு ரொம்பவும் பேராசைப்பா..அவங்க நம்ம ஒண்ணாப்பு டீச்சர்..இன்னமும் உசிரோட இருப்பாங்களா என்ன?

நாமளே எப்படா போவோம்னு இருக்கோம்..அவங்க நம்மள விட இருபது வயசு ஜாஸ்தி..”

“ அந்த இங்க்லீஷ் வாத்தியார்..”

“ அடேங்கப்பா இன்னமும் ஞாபகம் இருக்கா உனக்கு?”

”இருக்காதா..அவரு சொன்னது இன்னமும் பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சிகிட்டு இல்ல இருக்கு..க்ளாஸ் ரூம்ல பசங்கள க்ரூப்பா பிரிச்சி..”

“பிரிச்சி?”

“ஒருத்தன் சொல்லணும் RAMU IS A GOOD BOY னு. உடனே அடுத்தவன் ராமு NOUN ங்கணும்..உடனே டீச்சர் நெக்ஸ்ட் என்று சொல்ல அடுத்தவன் IS VERB என்று சொல்லணும்.அவன் முழிச்சா உடனே அடுத்தவன் அதை சொல்லணும்..அப்புறம் முழிச்சவன் சுவற்றோட சுவரா நாற்காலி மாதிரி நிற்க, சரியா சொன்னவன் அவன் தொடையில உட்காரணும்..ஒரு தடவை நீ தப்பா சொல்ல, நான் கூட உன் தொடைல உட்கார்ந்திருக்கேன்”

“அப்பவுமா?” – தன்னை மீறி வந்து விட்டது வார்த்தை  ஆராமுதனுக்கு.

கனத்த மெளனம்.

வார்த்தைகள் வீச்சரிவாளாகக் கிளம்பி இதயத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும்.

சிவபாதத்திற்கு முகம் செத்து விட்டது ஒரு கணம்.

ஒரு கணம் தான்..

அடுத்த கணம் ஆராமுதன் சூழ் நிலையை மாற்றி விட்டார்..

“ அத்த வுடுப்பா…அந்த ஜோக் ஞாபகம் இருக்கா..பாத்ரூம் போன ஹெச்.எம் ஐ ரூமைப் பூட்டி நாம ’கேரா’ பண்ணினோமே .

அன்னிக்கு கூடஸ்கூல் லீவ் விட்டாங்களே…”

சின்னஞ்சிறு குழந்தை போல விழுந்து,விழுந்து சிரிக்க ஆரம்பித்தார், சிவபாதம்.

சிரிப்பலைகள் பெருகி, சூழ் நிலை மிகமிக லேசாக, இப்போது ஆராமுதனும் விழுந்து, விழுந்து சிரிக்க…

”….இப்ப தாங்க இவரு முகத்துல முப்பது வருஷத்துக்குப்பறமா இப்படி ஒரு சிரிப்பு பார்க்கறேன்.. ”

கண்களில் நன்றியுடன் சிவபாதம் மனைவி..

அதற்கும் சிரித்தார் ஆராமுதன்…

தொடர்ந்து சிரித்தார் சிவபாதம்..

அந்த சிரிப்பு, கடந்த முப்பது வருடங்களாக அரித்துக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சியையும், அதற்கு பரிகாரம் தேட வந்தவரின் குற்றமற்ற உணர்ச்சியையும் ஒரு கணம் அந்த ஒரே கணத்தில் கரைத்து விட,

“ ஐயா, அடிக்கடி வாங்க… நீங்க வந்தா இவரு இன்னும் கொஞ்ச நா உயிரோட இருப்பாரு..’

கையெடுத்துக் கும்பிட்டார், சிவபாதம் மனைவி..

“ அட நீங்க வேற.. நாங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் இருப்போமாக்கும்…அதுவும் ஆரோக்யமா…”

சொல்லும் போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது ஆராமுதனுக்கு…அதன் தொடர்ச்சியாய் சிவபாதத்திற்கும் ஒட்டிக் கொள்ள…இப்போது சிரிப்பு என்ற ஒன்றை இத்தனை நாளும் மறந்திருந்த அவர் மனைவியும் லேசாய் சிரிக்க ஆரம்பிக்க..

நெடுங்காலமாய் நெஞ்சிலே கர்ப்பத்தை சுமந்தவர்களின்

அவஸ்தை நீங்கி, ஒரே நேர்க் கோட்டுப் பாதையில் இருவர் கண்களும் நேருக்கு நேராய் பாசத்துடன் பார்க்க ஆரம்பித்தன, அப்போது! 

                                                                                                                       (தொடரும்)  

பின் குறிப்பு :  அப்பிடி போகுதா கதை?! இதன் அடுத்த பகுதியை தொடரப்போவது  அடியேன் தான்.. தீபாவளியை எல்லாம் முடித்துவிட்டு வாங்க! காத்திருக்கும் கதை.. 

என் இனிய வலைச் சொந்தங்களுக்கு என் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.. 

புதன், நவம்பர் 07, 2012

வேறென்ன கேட்பேன்?- 2


இந்த கதையின் இந்தப் பதிவு திரு ரிஷபனின் கைவண்ணத்தில்...

ஆராமுதின் பக்கம் வந்து சிவபாதம் உட்கார்ந்ததை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
'எழுந்துப்பாரான்னு கிடந்த மனுசனா இவுரு..'

அப்படி ஒன்றும் உடம்பு சொல் பேச்சு கேட்கவில்லைதான். கால் ஒரு பக்கம் இழுக்க கை ஒரு பக்கம் இழுத்தது. பிடிவாதம் ஜெயித்தது. பால்ய நண்பனைப் பார்த்த வேகமோ.. அல்லது மனதின் குதியாட்டமோ. பதறிப் போய் பற்றிக் கொள்ள வந்தால் உதறியதில் வீம்பு தெரிந்தது. ஆராமுது பிடித்துக் கொண்ட போது உடன்பட்டதில் லேசாய் பொறாமையும் கோபமும் வந்தது.

"தட்டு போதும்டா"

ஆராமுது சொன்னதைக் கேட்காமல் வாழை இலை. புது எவர்சில்வர் டம்ளர். சுடச் சுட இட்லி. சட்னி.

ஆராமுதுக்கு உள்ளே ஏதோ தளும்பியது. அவமானம் பின்னுக்குப் போய் ஆதி நாட்களின் பிரியம் மேலோங்கியது. எது கிடைத்தாலும் பகிர்ந்து கொண்ட நட்பு.

"ரொம்ப காரமா.. எண்ணை ஊத்துடி.. " சிவபாதம் இரைந்ததில் குரலில் கணீர்.
"அதெல்லாம் இல்லை.."
"இன்னும் ரெண்டு வைக்கட்டுமா"

அம்மா.. அம்மாவின் ஞாபகம் வந்தது. கேட்கக் கூட மாட்டாள். போட்டு விட்டு போவாள். வயிற்றைப் பார்க்காமல் மனசைப் பார்த்து ஊட்டிய காலம்.

சுடச் சுட காப்பி. சிவபாதம் மீண்டும் கட்டிலுக்கு வர.. பக்கத்தில் ஆராமுது. வயிறு நிறைந்து, மனம் மட்டும் குமுறிக் கொண்டு. எங்கிருந்து ஆரம்பிப்பது.. சுவர் காலண்டர் பின்னோக்கி போன பிரமை.

மகன், மருமகள், மனைவி பற்றிய விசாரிப்புகளுக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மனம் ஒட்டவில்லை. அதை சிவபாதமும் புரிந்து கொண்டதாலோ என்னவோ டக்கென்று பேச்சை நிறுத்தி ஏதோ கேட்டார்.

"ஆராமுது.. டேய் ஆராமுது"
"ஆங்க்.. என்ன"
"உன் கவனம் இங்கே இல்லைதானே"

ஆராமுது அவனையே வெறிக்கப் பார்த்தார். மனசுக்குள் ஒரு உக்கிரம் கிளம்பிவிட்டது. உன்னால் தானே.. உன்னால் தானே..

"என்னடா.. ஏதாச்சும் பண்ணுதா.. கொஞ்சம் படுக்கறியா.. பிரயாணம் ஒத்துக்கலியா"
சிவபாதம் குரலில் அக்கறை பீரிட்டது.

ஆராமுது தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். உன் பேச்சைத் தானே இத்தனை நாள் கேட்டேன்.
"வெளியே போயிட்டு வரேன்.."
"ஏண்டா.. இப்பதானே வந்த.. இரு.. அப்புறமா போகலாம்.." சிவபாதம் கெஞ்சிய குரலில் சொன்னார்.

ஆராமுது அதற்குள் எழுந்து விட்டார். சிவபாதம் முகத்தைப் பார்க்கவில்லை. கோபம் தெரிந்து விடும்.
"பத்து நிமிஷம்.. வந்துருவேன்"

படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டார்.
"அவன் போறான்டி.. கூப்பிடேன்"
சிவபாதம் மனைவியிடம் சொல்லியது கேட்டது.

"பச்சைப்புள்ளையா அவரு.. போயிட்டு வந்துருவாரு.."
ஆராமுது சிவபாதம் அருகில் அந்த நிமிஷம் இருக்கப் பிடிக்காமல் இறங்கி வந்து விட்டாரே ஒழிய.. தெருவுக்கு வந்ததும் எங்கே போவதென்று புரியவில்லை. தன்னிச்சையாய் கால்கள் நடந்தன. பண்டாபீஸ் இங்கேதானே.. எங்கே காணோம்.. முப்பது வருஷத்துக்குப் பிறகு தேடுவதில் ஒரு அபத்தம் புரிந்தது மனசுக்கு. தெருவின் முகம் மாறிப் போயிருந்தது. யாரோ கூப்பிடுவது போல.. இல்லை.. விரட்டுவது போல.. காலகள் வேகமாய் நடக்க பின்னாலேயே வந்து கையைப் பிடித்து இழுத்தார் ஒருத்தர்.

"அது நான் இல்லை.. நான் இல்லை" அலறினார் ஆராமுது.
"ஸார்.. பர்ஸை கீழே போட்டு போறீங்க.."
பர்ஸ். முகத்துக்கு எதிரே காட்டினார். ஆமாம். என் பர்ஸ். என் பணம்.

"தொலைச்சவுங்களுக்குத் தான் அந்த அருமை தெரியும் ஸார்..பிடிங்க.. பத்திரமா வைங்க"
தொலைச்சவங்க.. எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் வார்த்தைகள் உயிரோடு நின்று மிரட்டுகின்றன.

 'பாவி.. வெளங்குவியாடா நீ.. நல்லா இருப்பியா..'
'நான் இல்ல.. நான் இல்ல'
ஆராமுது வாய் விட்டு அலறி இருக்க வேண்டும். எதிரே இரண்டு மூன்று பேர் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

'புத்தி சரியில்லையா'

ஆராமுது திரும்பி நடக்க ஆரம்பித்தார். வேணாம், சிவபாதம்கிட்ட போயிரலாம்.. படியேறியபோது மீண்டும் நாயின் குரைப்பு.

"வந்துட்டாரு உங்க நண்பர்"
சிவபாதம் உடம்பு நடுங்கியது இவரைப் பார்த்து.

"நீ திரும்பப் போயிடுவியோன்னு பயந்துட்டேன்.."
"இல்ல" முனகினார் ஆராமுது.

"உன் கிட்ட பேசணும்டா"
"ம்ம்.."
"அவர் கொஞ்சம் படுக்கட்டுமே.."
"ஓய்வு எடுக்கறியாடா"
"ம்ம்"

பூக்குழி மிதித்த மாதிரி உடம்பு எங்கும் அனலடித்தது. தலைக்கு உசர கட்டை வைத்து மின் விசிறியின் அடியில் படுத்தார்.
இறந்த காலம் உயிர் பெற்று எழுந்து இரைச்சல்கள் கேட்டன.

"டேய்.. ஆராமுது.. நல்லா இருப்பியாடா.. '

'அவனை என்ன கேள்வி.. பிடிங்கடா'

'இரு கொஞ்சம் விசாரிக்கலாம்..'

'விசாரிக்க என்ன இருக்கு.. கையும் களவுமா பிடிச்சாச்சு'

'சிவபாதம் நீ இதுல தலையிடாதே..'

சிவபாதம் சட்டென்று ஒதுங்கியதைப் பார்த்து ஆராமுது அரண்டு போனார்.

டேய் சிவபாதம்..”
கூட்டம் மெல்ல மெல்ல முன்னேறியது. சிவபாதம் நகர்ந்து கொண்டே பின்னுக்கு போவது தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த மிரட்சி.. கெஞ்சல்.. பயம்..

ஆராமுதுவுக்கு இன்னது செய்வதென்ற நிதானம் தொலைந்தது.



                                                                                                       (தொடரும்)

இதன் அடுத்தப் பகுதியை வரும் சனிக்கிழமை(10.11.2012)தொடரப் போவது மூவார் முத்து திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள்



சனி, நவம்பர் 03, 2012

வேறென்ன கேட்பேன்?


  
உத்திஉத்தி கம்மங்கட்டு வூட்டப் பிரிச்சி கட்டு
காசுக்கு ரெண்டுகட்டு  கருணைக் கிழங்குடா
தோல உரியடா தொண்டையில வையடா
வையடா வையடா வையடா....

சிவபாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு உத்திஉத்தின்னு இறங்கினாப் போதும்..
நாலு பேரையாவது ஏறக் கட்டிட்டுத் தான் லைனையே தாண்டுவான். சடுகுடு ஆட்டந்தான்னு இல்லை, வாலிபால்,  கோக்கோ எதுவானாலும் அதில் அவன் சூரன் தான் சந்தேகமேயில்லை.
ஆனாலும் அவன் சகவாசம் கூடாது என ரொம்பவே ஆராமுது வீட்டில் கண்டிப்பு காண்பிப்பார்கள் .அவனும் அவன் மூஞ்சியும்..

மேலக் கவரைத் தெருவில் இன்று ஆராமுதுக்கு தெரிந்தவன் அவன் ஒருவன் தான். தெரிந்த மீதி பேரெல்லாம் எங்கெங்கோ.. அந்த விவரமெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தெரியத்தானே போகிறது? சிவபாதத்தையே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

முப்பது வருஷம் தெரிஞ்சுக்காம இருந்தது ரெண்டு மணி நேரத்திலயா குடிமுழுகிப் போகும்.? ஏதோ கண்ணை மூடுமுன் தான் திரிந்த மண்ணை ஒரு தரம் பார்த்துடணும்னு ஒரு வெறி. அதுக்காக அதைப் பார்த்தப்பபின்னே ஆராமுது கண்ணை மூடிடுவான்னு நினைக்க வேண்டாம். கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறுன்னு பங்கஜமே சர்டிபிகேட் இல்லே குடுத்திருக்கா? நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும்.

ஆச்சு அணைக்கரை தாண்டியாச்சு.. பல்லாங்குழியாய் ரோடு. எல்லாபுறமுமாய் பஸ்ஸோ ஆட்டி எடுத்தது.. செய்யறதையெல்லாம் செஞ்சி போட்டு தெகிரியமாய் இந்த ஊருக்கே வரையா படவான்னு உலுக்கிஉலுக்கிப் போட்டது ஆராமுதை..

என்னைப் பார்த்தா யாருக்கும் அடையாளம் தெரியுமா? ஆராமுதுக்கு  வழியெங்கும் இந்தக் கேள்வி  மாளாத யோசனையாய் நீண்டபடி வந்தது. இருபத்தினாலு வயசிருக்குமா அப்போ? தன் வயசுக்காரர்கள் ஆறேழு பேர் இருப்பமா? மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா. அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!

அப்படி யாரும் தன்னை தெரிஞ்சிண்டா தான் என்ன? அவமானப் படும்படி ஏதும் சொன்னாத்தான் என்ன? ஆம்படையாளும்,பிள்ளையும்,சொச்சத்துக்கு மருமகளும் செய்யாத அவமானமா? செத்திருக்கணும் அப்பவே செத்திருக்கணும்.. உசிரில்லே வெல்லக் கட்டி?

பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. புழுதி பறக்க இருந்த பழைய பொட்டவெளியா? கட்டடமும், கடைகளும்,ஏ.டி.எம்முமா எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இல்லையின்னா அந்த இடம் பஸ் ஸ்டாண்டுன்னு  தெரியாம போயிருக்கும். ஆராமுது ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்.

மேலக் கவரைத் தெருவுக்கு விடப்பா”.

ஏற இறங்க பார்த்த ஆட்டோக்காரன். ~அது என்னாதுங்க எனக்கு தெரியாத தெருவு. இந்த வெளங்காத ஊருல?

பண்டாபீஸ் பக்கத்துல.

பண்டாபீஸா. அப்படின்னா?”

அங்கே போய்க் கொண்டிருந்த இன்னொரு பாம்புக் காதுக்கு இந்த சம்பாஷணம் விழுந்தது. நம்ப மந்திரி தெருவத்தான் அப்போ மேலக் கவரைத் தெருன்னு சொல்லுவாங்க. சாரு அங்க யாரைப் பார்க்கணும்?” அருகில் வந்து நெற்றியில் உள்ளங்கையை சார்பாக்கி ஆட்டோவினுள் பார்த்தார்.

இவரண்டை சொல்லலாமா?..  ”சிவபாதம் சிவபாதம்னு

"அவருக்கு நீங்க என்னவாகணும்?..

கிட்டின சொந்தம்

நீங்க பார்த்தா பிராம்மணா போலிருக்கேளே?”

அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”

அது சரி! நீ போப்பா என்றவர் முனகிக்கொண்டே போனார்..நல்ல கொண்டான் கொடுத்தான்

தெருமுக்கிலேயே ஆராமுது இறங்கிக் கொண்டார். எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒன்றைத் தவிர.
ஓட்டு வீடுகள், தாயம்மாவின் குடிசை, தெருவின் ரெண்டு பக்கமும் இருந்த முனிகிபாலிட்டி தண்ணீர் குழாய்கள், வீடுகளை ஒட்டிக் கறுத்து தேங்கி நின்ற சாக்கடைகள் எதையும் காணோம். பிளாட்டுகள் வந்திருந்தன. சோடா பவுண்டன்.. நிலா பியூட்டி பார்லர்...

வந்தாச்சு . ரெண்டு மாடி வீடு . இதுவாய்த்தான் இருக்கணும். சிவபாதம்!

யாருங்க அது.?” அவன் மனைவியாகத்தான் இருக்க வேணும்..

உள்ளே பேச்சுக் குரல்.. மீண்டும் பால்கனிக்கு அவள் வந்தாள். மேல வாங்க. தைரியமா வாங்க.. இது கடிக்காது என்றாள் நாயை வாஞ்சையோடு பார்த்தபடி.

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே என்று நினைத்துக் கொண்டார் ஆராமுது.
படுக்கையில் சாய்ந்திருந்த  சிவபாதம் கண்களை சுருக்கிக் கொண்டார்.

தெரியுதா?”

வா ஆராமுது.. குரல் கம்மி கண்கள் கலங்கின சிவபாதத்துக்கு.

எப்படி இவ்வளவு தூரம்?”

அடடா! இவ்வளவு வருஷத்துக்கப்புறமும் என்னை அடையாளம் தெரிஞ்சுதா?”

தெரியாம பின்னே? ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.. அதுல நீ ஒண்ணு.. நீ வருவே நீ வருவேன்னுதாண்டா அந்தராத்மா அலறிக்கிட்டு கிடந்தது.. இருமலும் இரைப்புமாய் திணறியது சிவபாதத்தின் குரல். இனிமே கவலை இல்லே. இன்னொருவன் தன்னால வந்துடுவான்

இன்னொருத்தானா? யாரது?” இளைத்த அவர் கரம்தொட நீண்டது ஆராமுதின் வலக்கை.

தர்மராஜன்.. யம தர்மராஜன்..”     
                                                         (தொடரும்)


பின் குறிப்பு:

என் இனிய சொந்தங்களே! 
இந்தக் கதையின் அடுத்த பதிவை நம் அன்பிற்குரிய திரு. ரிஷபன் தொடர்கிறார். இப்படியொரு சுழல் தொடர் எழுதுவோமா என்று நான் கேட்டவுடன், ஆர்வமோடு ஏற்றுக் கொண்ட ரிஷபன் சாரின் ஈடுபாடு போற்றுதலுக்குரியது.  அது மட்டுமல்ல ரிஷபனை அடுத்து தொடரப் போவது யார் தெரியுமா ? முத்தமிழ் வித்தகர் மூவார் முத்து என்று நாம் போற்றும் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள். நான் புள்ளிகளை வைத்திருக்கிறேன்.மேற்கொண்டு வனைந்து கோலம் போடும் என் இரு சகோதரர்களுக்கும் நன்றி. இருவருக்கும் நான் சொன்னது ஒருவரி கதையோட்டம் மட்டுமே.  இப்போதைக்கு இது போதுமே!  இதன் அடுத்த தொடர்வு  புதன்கிழமை (07.11.2012) ரிஷபன் சாரின் கைவண்ணத்தில்.. நன்றி!.