‘சம்பேஸ்த்தா!’ என்ற கடுமையான குரல் கேட்டு நின்றுவிட்டேன்.
இரவு எட்டரை மணி இருக்கும். மனைவியுடன் காலாற நடக்கலாமென்று என் வீட்டிலிருந்து அமீர்பெட் மார்க்கெட் போய்க்கொண்டிருந்த போதுதான் இந்த ‘சம்பேஸ்த்தா!’
நான் ஒருத்தன்...... மொட்டையா சொன்னா உங்களுக்கு எப்படி புரியும்?
நான் ஹைதராபாதில் தானே குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன்? என் இல்லம் இருக்கும் ஏரியா சென்னையின் தி.நகர் போன்று நகரின் மையப்பகுதி. இங்கே பலவீடுகளில் பத்துபதினைந்து பெண்களுக்கான லேடீஸ்ஹாஸ்டல் ஏற்பாடுகள். இந்நகரத்தில் தனியாகத் தங்கி சிறிதும் பெரிதுமாய் வேலைகளைப் பார்க்கும் இளம் பெண்களுக்காய்..
கரெக்டு! நீங்க நினைச்சது தான்!. இரவு ஏழுமணிக்குமேல் இந்தக் குமரிகளில் சிலர்..ஏன்... பலர்... தத்தம் மனங்கவர்ந்த தொத்தல்,வத்தல்,குண்டு,குட்டை வாலிபர்களுடன்
தெருவோரங்களில்,நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் இடுக்கில், இருட்டில் நின்றபடி தன்னை மறந்து சுந்தரத் தெலுங்கினில் ‘வேர்சனிகாய்’(அதாங்க .. தெலுங்கில் ‘கடலை’)போட்டுக் கொண்டு இருப்பார்கள்.
என் சகதர்மினியுடன் சேர்ந்து போகும் போதெல்லாம் இந்த ஜோடிகளைக் கண்டு எரிச்சலை நான் வெளிபடுத்துவதும், ‘அவங்களை நீங்க ஏன் பாக்குறீங்க?’ என்று என்னையவள் மட்டுறுத்துவதும் அவ்வப்போது நடக்கும் விஷயம் தான்.
இன்று அந்த ‘சம்பேஸ்த்தா’வை உதிர்த்தவன் ஒரு உதிரிஜோடியின் ஒற்றைநாடிக் காதலன்.
‘சம்பேஸ்த்தா, என்றால் கொன்னுடுவேன்.. கொன்டே புடுவேன்னு அர்த்தம்.
அந்தக் குரலில் இருந்த கடுமை என்னை கட்டிநிறுத்தியது .அந்த மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பெண் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.
நான் நின்றுவிட்டதை உணராமல், தான் விவரித்துக் கொண்டு வந்த தெலுங்கானா பந்த பற்றிய அப்டேட்டை சொல்லிய வண்ணம் கடந்த என் மனைவி திரும்பி வந்தாள் .
“வாங்க!” அழுத்தமானக் கீழ்த்தொண்டைக் கட்டளையில் இழுத்தபடி முன்னேறினாள்.
“அக்கிரமம் பாரு. அந்தப் பொண்ணை தொரத்தி தொரத்தி காதலித்து விட்டு இப்போ கைவிடரதுக்கு மிரட்டுறான்.”
”ஆமாம். அவங்க விவகாரம் உங்களுக்கு ரொம்பத் தெரியும், உங்க வேலையைப் பார்க்காமல் எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்குறதை எப்பத்தான் நிறுத்தப் போறீங்களோ?”
“கைப்புண்ணுக்கு கண்ணாடி வேணுமா? அந்தப் பொண்ணைப் பாரு. எப்படி அழுறா?.. கம்மனாட்டி! ஜோலியயெல்லாம் முடிச்சிட்டு வெட்டிவிடறான் பாரு.”
“வில் யூ மைன்ட் யுவர் லாங்குவேஜ்?” என்மனைவி ஆங்கிலத்துக்கு மாறினால், என்னை ரெண்டில் ஒன்று பார்க்க தயாராகிட்டாள்னு அர்த்தம்.
“இந்த சின்னப்பெண்கள் தான் யோசிக்கிறாங்களா? எத்தையாவது சினிமா பாக்க வேண்டியது.. தான் தமன்னா... தனக்கு ஜோடியா ஒரு அஜித் வேணும்.. ரொம்ப முடையா..”
“இவ்வளவு இலக்கியம் பேசுறீங்க.. அலமாரி.. பொட்டி...எதைத் தொட்டாலும் கவிதை கொட்டுது. நீங்க இதே வேலையாத்தானே அந்த நாள்ல...”
“கொச்சைப்படுத்தாதே.. நானெல்லாம் இப்படியா இருந்தேன்? இப்படியா நடுரோட்டுல..”
“உங்களுக்கு திருவாங்கூர் மகாராஜா பார்க் இருந்தது..” சாதாரணமாய் சொல்வதுபோல் எப்படி பெண்களால் ஊசியேற்ற முடிகிறது ?
பாரீஸ்கார்னரின் அண்ணாமலை மன்றத்துக்கு எதிரே இருந்த பார்க்.. பத்தே நிமிஷம்... இவளுடன் மகாராஜா சிலையின் கீழே அமர்ந்து பேசிவிட்டு, போர்ட்ஸ்டேஷனில் இவளை விட்டுவிட்டு கவிதை யோசித்தபடி நடந்தக் காதல் மோகன் ..
இப்போ இதுவா முக்கியம். அந்தப் பரிதாபத்துக்குரிய பொண்ணை பத்தியில்ல சொல்லிகிட்டிருந்தேன்?
“என் பேச்சு இப்ப எதுக்கு? நம்மக் காதல் முடிஞ்சதும்தான் மகாராஜா மனசொடிஞ்சுபோய் பார்க்கை காலி பண்ணிட்டு எங்கயோ இல்லை போயிட்டாரு.(அந்த பூங்கா இப்போது அங்கில்லை)
“இப்படி ஒரு ஜோடியப்பார்த்த கண்ணால வேற காதலர்களைக் பார்க்கவேணாம்னுதான் போய்ட்டாரோ என்னமோ?”
“ரொம்பதான் நீ புத்திசாலி..போ! இப்போஎன்ன அவங்க பண்றது தப்பிலைன்னு சொல்ல வரியா?”
“இல்லீங்க.. அது தப்பு ரைட்டுன்னு சொல்ல நம்ம யாருங்க..”
“என்னத்த சொல்றே? பல நாட்கள் லோவ்வோ லவ்வுன்னு சுத்திட்டு அந்த ராஸ்கல் இப்படி அவளை பிழியப்பிழிய இல்லே அழவிடுறான். நீ வேணா நாளைக்குப் பாரு. காதல் தோல்வியினால் பெண் அமீர்பெட்டில் தற்கொலை.கைவிட்ட வாலிபன் தலைமறைவுன்னு பேப்பர்ல வரப் போகுது பாரு..”
”அந்த திருவாங்கூர் ராஜா பார்க் அங்கிருந்தா யாருக்கு அசௌகரியம்? அதப் போய் மூடிட்டாங்களே?”
“உம்....நாளைக்கு கலைஞரைக் கேட்டு சொல்றேன்.
அந்தப் பையனை நாலு மொத்துமொத்தணும் போல இருக்கு. அயோக்கியன்.. அந்தப் பொண்ணு இனிமே அவ்ளோ தான்!”
குமைந்து கொண்டே நடந்தேன்.
போனவழியே திரும்பி வந்தோம். அந்த ஜோடி நின்றிருந்த இடத்தைப் பார்த்தேன்..அவர்கள் இல்லை. பக்கென்றிருந்தது.
“அவங்களைக் காணோம்” என்றேன் ஈனஸ்வரமாய்.
“இன்னும் அவங்களை விடல்லையா?”
மௌனமானேன். யார் பெற்ற பெண்ணோ?
அட என்ன அது?
இடப்பக்கம் இருந்த ஐஸ் கிரீம் பார்லரில் அதே ஜோடி.
ரோடு பார்த்தக் கண்ணாடிசுவர் அருகே நெருக்கமாய் அமர்ந்த படி.. அந்த தெலுங்கு தனுஷுக்கு அவள் ஐஸ்கிரீம் ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வாயெல்லாம் பல்லாக இளித்தபடி...
இவளிடம் அந்தக் காட்சியை காட்டவேண்டி திரும்பினேன்.
தனக்குள் சிரித்தபடி பின்னால் வந்து கொண்டிருந்தாள் . திருவாங்கூர் மகாராஜா மேட்டராய்த்தான் இருக்க வேண்டும். அவளைக் கலைக்க மனசில்லை.
வேண்டாம். என்னை முட்டாளாய் அடித்த இவர்களை அவள் பார்க்க வேண்டாம்.
இத்தனை நேரம் நான் செய்த அமளிதுமளிக்கு, இந்த சல்லாபத்தை மட்டும் இவள் பார்த்தால்,என்னைக் கொன்டேயில்லே போட்டுடுவா ?