புதன், நவம்பர் 05, 2014

அமிர்த மந்தனம்




இவனுமொரு நீலகண்டன்.


அமிர்தம் கடைகிறார்கள் எனக்
                                               கேள்வியுற்று,
ஓடு நிறைய அமிர்தம் எனும் ஆவலோடு,
பாற்கடல் கரையதிர ஓடி வந்தவன்.


கடைந்தார்கள்.
கடைந்தார்கள்.
கட்சிகட்டிக் கொண்டு கடைந்தார்கள்.

வெளிவந்த ஐராவதமும் உச்சஸ்ரவைஸும் 
                                    இவனுக்கு லட்சியமில்லை
கௌஸ்துபமும் கற்பகத்தருவும் 
                                     ஒரு பட்சமுமில்லை.
ஓர் ஓடளவுக்கு அமிர்தம் போதும்.

சிலுப்பிசிலுப்பி கடல் நுரைத்தது.
ஆர்ப்பரித்து அலைபுரண்டு கடல் வரண்டது.

கருமைசூழ்ந்து ஓலமெங்கும் அதிர்ந்தவேளை,
அமிர்தம் கிடைக்காதென்று தெரிந்து போனது
ஆலாலம் திரண்டெழுந்து கையில் விழுந்நது.
விரக்தியிலே நஞ்சையவன் உண்ணலானது.

கண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.
ஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்.
அண்டம் போற்ற தேவர்முனி என்றா ரும் அறியார்.
ஓடொன்றே அறியும் தியாகேசன் உள்ளக் கிடக்கை.

உச்சியிலே என்றுமிங்கே மீளாத்தனிமை.
வரம்தந்து வரம்தந்து சலித்த பெருமை.
ஈடேறா விருப்பங்களே ஈசன்நிலைமை.
கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை.










(பட உதவி: கூகிள் )








திங்கள், நவம்பர் 03, 2014

மீள்பயணம்




இரண்டாம் யௌவனமும் கடந்து

                                        கொண்டே இருக்கிறது.

ஓய்வூதியம் என்றோர் அவமானம்.

இதே வாழ்க்கையை மீண்டும் வாழ்வாயா

                                                  எனக் கேட்காதே.

சலிப்பாய் இருக்கிறது.

நானிருக்கிறேனே என நீ சொன்னால்,

                                அது உனக்கு கரிசனம்;

எனக்கோ அதுவே உதாசீனம்.


பொய்யைக் காட்டுகிறது கண்ணாடி

என் பிம்பம் எனக்குள்ளே.


கரையும் மேகங்களில் தொங்கிச்சென்ற பயணம்.

மிஞ்சி இருப்பதோ ஒரே ஆசை.....


எல்லாவற்றையும் கலைத்துவிட்டு

மீண்டுமொரு பயணம்......

புதிய முகங்கள்

புதிய கரங்கள்

புதிய காதல்

புதிய பார்வை

              இவற்றோடு எனது,

பழைய நட்புகளும்

பழைய கனவுகளும் கூடி


புறப்பட்ட இடம் நோக்கியே

மீள்பயணம் .

*****************
                காக்கைக் காதல்



காக்கைகளுக்கு காதலுண்டா?

சரஸமோ சாகசமோ தெரியாத

முட்டாள் பட்சி !


காக்கைகள் புணர்ந்து

பார்த்ததுண்டா ?


காதலே தெரியாத காக்கைக்கு,

குயில்முட்டையா தெரியப்போகிறது?



கருப்பாயிருந்தாலென்ன?

அவநம்பிக்கையில் ஒரு பக்கமாய்

வெறிப்பதை விடுத்து,

கண்ணுக்குள் கண் வைத்து

காலமழியப் பாரேன்....


இலக்கியத்துக் காதலெல்லாம்

இளகிவழிந்தே ஊரை நனைக்காதோ??

                                     ********************
                      மிச்சம்


விடிந்தபின்னும் எரியும் விளக்கு.

முடிந்தபின்னும் அசைபோடும் மனசு.

தாரத்திடம் தேடிய தாயின் சாயல்.

விருந்தில் வீசும் பசியின் வாசம்.

கனவில் தொலைந்த தூக்கம்.

நனவில் கனவின் ஏக்கம்.

காமத்தின் மிச்சம் கண்ணோடு.

காலத்தின் மிச்சம் மண்ணோடு.