புதன், மே 11, 2011

வடு



இந்த டிரிப் தான் கடைசி.... ஒரு தரம் துப்புரவாய்ப் பார்த்துடுங்க குருராஜன்

எல்லாம் ஏறக்கட்டியாச்சு சார்.. ஏதும் பாக்கியில்லை.. நான் பாத்துக்கறேன். நீங்க எதுக்கு சார் இங்க வீணா? வீட்டுக்கு கிளம்புங்க..

எதுக்கும் இண்டுஇடுக்கு விடாம ஒருமுறை கோதிட்டீங்கன்னா நல்லது பாருங்க

நம்பி சார் எப்பொழுதும் இப்படித்தான். சொன்னதையே சொல்லியபடி எல்லாவற்றையும் நூத்துநூத்து பாக்குற ஆசாமி.

சரிசார்!

நம்பி சார் கிளம்பிவிட்டார்.. இந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்காய் காத்திருந்தமாதிரி குருவுக்குப் பட்டது.

ஒத்தாசைக்கு உடன் இருந்த பியூன் முருகேசன் அருகிருந்து செருமினான். சார்.. தம்பி வீடு வரை போயிட்டு வந்துடறேன் சார். ஒரு பணப்பிரச்னை.. எப்படியும் போன லாரி திரும்பி வரதுக்குள்ள திரும்பிடுவேன் சார்.

குருவுக்குக் கூட தனியாய் சற்றுநேரம் இருக்கத் தோன்றியது. போயிட்டு வா முருகேசா. ஏதும் பணம் வேணுமா?

அதெல்லாம் வேணாம் சார் சிட்டாய்ப் பறந்து விட்டான்.


குரு வேலைப்பார்க்கும் அலுவலகம் நகரின் மையப் பகுதியிலிருந்து  இன்னும் விஸ்தாரமான சொந்த கட்டிடத்துக்கு மாறுகிறது.. நான்கு நாட்களாய் அலமாரிகள், கணனிகள்,மேஜை நாற்காலிகள், கோப்புகள் என லாரிகளில் ஏற்றப்பட்டு புதுவளாகத்திற்கு போனபடி இருக்கிறது.

ஆயிற்று... மிச்சமிருக்கும் இந்த இரண்டு அலமாரிகளும், ஐந்து அட்டைப்பெட்டிகளும் லாரியில் ஏறிவிட்டால் இந்தக் கட்டிடத்தோடு உறவு முற்றிலுமாய் அற்றுவிடும். குருவுக்கு தொண்டையை அடைத்தது.

ஒருநாளா?இரண்டு நாளா? இருபது வருஷம்... இதே ஆபீஸ். சில  வருடங்களாய் இதே சன்னலோர இருக்கை. இந்த சன்னலின் கதவுகளை சீண்டியபடி அசைந்துஅசைந்து கண்சிமிட்டும் வாதுமை மரத்து இலைகள். இந்த இலைகள் பழுத்து,உதிர்ந்து, மீண்டும் துளிர்த்து ,மென்அரக்கு மினுமினுப்பில் உள்ளங்கையகலம் விரிந்து கரும்பச்சை முதிர்வில் மொடமொடத்து....

இத்தனை வருடங்களில் எத்தனை சகஊழியர்கள்,அதிகாரிகள் வந்துபோய் விட்டார்கள்?.. தான்மட்டும் இங்கே நங்கூரமாய்  நிலைகொண்டு..

குடும்பசூழல், தங்கைகள் திருமணம், அடுக்களையில் பாதிநாள் படுக்கையில் மீதிநாள் என உழலும் அம்மா... இவர்கள் தேவைக்கென்றே உத்தியோக உயர்வுகளைப் புறக்கணித்து,கனவுகளைப் புறந்த்தள்ளி ஓர் இயந்திரமாய் குருராஜன் மாறி பலகாலம் ஆயிற்று.

பழகிய இடம், புழங்கிய இடம் விட்டு மாறிப்போவது குருவுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது..

இதோ.. இது வெங்கடராமன் சார் சீட் இருந்த இடம். மனசில் வெண்ணையும் நாக்கில் சுண்ணாம்பும் கொண்ட வெள்ளை மனிதர். அவர் குருவிடம் மட்டும் காட்டிய அனுதாபமும் அரவணைப்பும் மனதில் நிழலாடியது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பிரிவுபசாரக் கூட்டத்தில்கூட அவரால் தேள் கொட்டினார்போலத்தான் பேச முடிந்தது.


இங்கு அன்பழகன் மேஜை இருந்தது. கையை அழுக்காக்கிக் கொள்ளாமல் பேர்வாங்கும் வித்தை தெரிந்தவன்.. என்னைத்தேடவேண்டாம் என அவன்மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, யாருடனோ போன மூன்றாம் நாளே,.ஏதும் நடக்காததுமாதிரி எப்போதும்போல் சிரித்துக் கொண்டே அல்லவா வந்தான்?.. கடற்கரையில் குருவின் கைகளைப் பிடித்தபடி மெல்ல விஷயத்தை சொன்னானே.. ஆறுதல் தேடியா?

இங்கு மைத்ரேயி .. பக்கத்து சீட்டில் வித்யா என்ற வித்யாதரன். பின்னால் ராதா, செபஸ்டியன், கார்மேகம் சார்..
குருவின் கண்கள் நிலைகொள்ளாமல் இங்குமங்குமாய் அலைந்தது. காலியான அந்தக்கட்டிடம் ஹோவென்று நின்றது..
தரையெங்கும் கூளமும் தூசியுமாய் விரவிக்கிடந்தது. மெல்ல நடந்தான் குரு. இடப்பக்கம் சின்னதாய்க் கேண்டீன்.
பக்கத்தில் லஞ்ச் ரூம். அங்கு கைகழுவும் இடத்தில் உள்ள கண்ணாடியில் கொஞ்சம் ரசம்போன பகுதி ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்குபோல் அவனுக்குத் தோன்றும்.

இந்த ஹாலின் வாயிலைக் கடந்தால் பழைய கோப்புகள் வைக்கப்பட்ட ஸ்டோர் ரூம். முன்பெல்லாம் இந்த அறை ஸ்டோர் ரூமாக இல்லை.  கணனிகள் வராத நாட்கள் அவை . டைப்ரைட்டர்களின் சங்கீதம் தனித்தும், பலசமயம் கோரஸாயும் எதிரொலித்த நாட்கள். அந்த பெரிய அறையின் ஒருபகுதி மரத்தடுப்புகளால் உருவான மேலாளரின் கேபின் இருந்தது.   அந்தக்காலியான அறையில் நுழைந்த போதே அவன் விரல்கள் மெல்ல நடுங்கின.. அந்த கேபினை ஒட்டியபடி ஸ்டெனோ வரலட்சுமி டைப்ரைட்டர் சகிதம் அந்நாளில் அமர்ந்திருந்த கோலம் குருவினுள்ளே விஸ்வரூபம் எடுத்தது.

வரா.. வரா.. என்று குருவின் நாடிநரம்பெல்லாம் ஒலித்த அந்த பெயர்... அவன் வாழ்க்கைக்குள் வராமலேயே அல்லவா போய் விட்டது?                 

மெல்ல அவர்களுள் முகிழ்த்த காதல்... திடமாய் இருந்த குருவின் அப்பாவின் திடீர் மறைவு.. ஒரு பகலில் குருவின் தலையில் சுமத்தப்பட்ட குடும்பபாரம். அவனுக்காய் காத்திருக்க இயலாத மத்தியதர வர்க்கத்து நெருக்கடியில் அவள்.

எல்லாமே முடிந்து விட்டது. குருவுக்கு மனம் மெல்ல மரத்துப் போனது. நாற்பதைத் தாண்டியாயிற்று.. தனிமரமாய் நின்று பழகிவிட்டது...

தன்னையறியாமல் வரலட்சுமியின் மேஜை  இருந்த மூலையில் வந்து நின்றான்.

அட இது.. இது... இன்னுமிங்கே... இதுநாள் வரை அலமாரிகளால் மறைக்கப் பட்ட ஒரு அன்பின் வடு இன்னமும் அங்கே...

அந்த மரத்தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த விநாயகர் படம்.
இலைகளையே விநாயகரின் அங்கங்களாய் வரைந்த ஒரு வாழ்த்து அட்டை... புசுபுசுவென்று நினைவும் பரபரப்பும் குருவின் நெஞ்சிலிருந்து கிளர்ந்தன. அந்த வாழ்த்துஅட்டையை அவன் தான் அங்கு ஓட்டினான். மேல்பக்க ஓரம்  மட்டும் ஒட்டப்பட்ட,  நிறம் மங்கிப்போன விநாயகர்...


வரா! பத்துநாள் ஆபீஸ் வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்.? ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளே என்னால் உன்னை  பார்க்காமல் இருக்கமுடியல்ல.. நீ ஒண்ணும் மதுரைக்கு போக வேண்டாம்.

வராவுக்கு அவன் தவிப்பு பிடித்திருந்தது. எனக்கு மட்டும் போகணும்னு ஆசையா குரு? குடும்பத்தோடு போக அப்பா ஏற்பாடு பண்ணிட்டாங்க. என் ராஜா இல்ல.. பத்தே நாள்.... ஓடி வந்திடுவேன். சரியா.?

அதுவரைக்கும் நான் என்ன பண்ண?

இரு..  வரா தன் நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை  எடுத்தாள். அவள் மேஜையின் பக்கலில் இருந்த மரத்தடுப்பில் ஒட்டினாள். ஒட்டப்பட்ட பொட்டினைச் சுற்றி நீலப்பேனாவால் அழுத்தமாய் வட்டம் இட்டாள்..

குரு! இந்த பத்து நாளும் இந்த ஸ்டிக்கர் தான் உன் வரா! பாத்துகிட்டே இரு.

கையில் டிபன் பாக்சை எடுத்துக் கொண்டு விடுவிடுவென நகர்ந்தாள்
.
அடுத்த பத்துநாளும் அந்தப் பொட்டில் குரு புதைந்து போனான். யாருமற்ற ஒரு பின்மாலையில், அந்தப் பொட்டை பாதுகாக்க வேண்டி அதன் மேற்புறம் விநாயகர் படத்தை  ஓட்டினான்.


குரு நினைவின் பிரவாகத்தில் அடித்து செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். மெல்ல அந்த வாழ்த்துஅட்டையை மேல்நோக்கி வளைத்து ஸ்டிக்கர்பொட்டைத் தேடினான். வராவின் பொட்டு  இன்னமும் அங்கே பத்திரமாய் இருந்தது. அதன் சின்ன வெல்வெட்பரப்பு சற்று மங்கியும் சுருக்கம் கண்டும் இருந்தது..

மெல்ல விரலால் அதைத் தொட்டான்.

அந்த தொடுகைக்காக மட்டுமே இதுநாள்வரைக்  காத்திருந்த்தது போல் அந்தப் பொட்டு உதிர்ந்தது.

குருவின் வயிற்றிலிருந்து அலையலையாய் விம்மிஎழுந்த ஒரு கேவல் வெடிக்க அழுதான். அன்றும் இன்றும் சாட்சியாய் மட்டுமே இருந்த அந்த அறையின் சுவர்களில் அவன் விசும்பல் மோதி வெறுமையில் மெல்லக் கரைந்தபடி இருந்தது.

சார்! லாரி வந்தாச்சு என்றபடி உள்ளே வந்த முருகேசன், தலையை இருகைகளாலும் பிடித்தபடி புழுதித்தரையில் அமர்ந்திருந்த குருவை நோக்கி பதறியபடி ஓடிவந்தான்.   

86 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
வாழ்க்கையில் பல முக்கிய நிகழ்வுகள்
சில சிறிய பொருட்களோடு தன்னை
இணைத்துக் கொண்டு நம்முள்
வடுவாகிப் போனவைகளை
மீண்டும் நினைவூட்டி ரணமாக்கி ரசிப்பதை
மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்
சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

சின்னசின்ன கணங்களும் சின்னசின்ன நிகழ்வுகளும் சரமாய்க் கோர்க்கப்பட்டது தானே இந்த வாழ்க்கை !
சில நினைவுகளுக்குள் கண்ணீரின் ஈரம் உலராமல் இருப்பதாலன்றோ உறவுகளின் மேன்மை அறியப்படுகிறது ரமணி சார்! வாழ்த்துக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஒரு மிகச்சிறிய ஸ்டிக்கர் பொட்டென்று நினைக்கவே முடியாது. குருவைப்பொருத்தவரை அது அவனின் காதல் சின்னம். மலரும் நினைவுகள். முடியாத ஒரு தொடரின் முக்கிய காட்சியும் சாட்சியுமாகும்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் இதுபோல, பொட்டில் அடித்ததுபோல, எவ்வளவோ மிகச்சிறிய விஷயங்கள். ஆனாலும் சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.

குருவின் வலி என்னால் நன்கு உணர முடிகிறது. நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். அன்புடன் vgk

எல் கே சொன்னது…

கைகூடாத காதல் , முறிந்த நட்பு ஒரு சில தடையங்களை விட்டு செல்லும். என்றோ ஒரு நாள் நாம் அதைப் பார்க்க , நம் மனம் பழைய சிந்தனைகளில் ஆழ்ந்து , அந்த எண்ண ஓட்டங்களில் அமிழும் .

கிளாஸ் மோகன்சி

ஹேமா சொன்னது…

தடங்களற்ற பெருமூச்சுச் சொல்லும் ஆயிரம் நினைவுகளை.கனவுகளைப் புதுப்பிக்கும் சில தடையங்கள்.

வயதின் சுருக்கங்ளைக்கூட புதுப்பிக்கும் அவ்வப்போது வரும் கோடைமழையாய் இளமை நினைவுகள் !

மோகண்ணா...கதை நினைவுகளைப் புரட்டுகிறது !

Chitra சொன்னது…

பொட்டுக்குள், எத்தனை - நினைவலைகள் - உணர்வுகள்!!! அருமையான கதாசிரியர் என்பதை நிரூபித்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

பத்மநாபன் சொன்னது…

முதல் பகுதியில் அலுவலகமும் அதை சுற்றிய வாழ்க்கையையும் சொன்ன விதம் உயிர்ப்பாக இருந்தது.. குருவின் மனதில் ஒட்டிய வராவின் ஸ்டிக்கர் பொட்டு என்றும் இருக்கும் . பொட்டு அதை சுற்றிய நீல வட்டம் .. அதற்கு மேல் ஒட்டிய விநாயகர் படம். நினைவலைகளை ஓட்டிய விதம் திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது.. நாம் கடந்த பள்ளி/ அலுவலகங்களையும், அதில் நடந்த காதல்களையும் ( முறிந்த / சேர்ந்த ) நினைவு படுத்துகிறது...

பெயரில்லா சொன்னது…

உணர்வுகளை மொத்தமாக கோர்த்து அடக்கி ஒரு ஸ்டிக்கர் பொட்டில் ஒட்டிவிட்டீர்கள் மோகன் அண்ணா. கிளாஸ்! :)

அப்பாதுரை சொன்னது…

காதலித்தவர்கள் நிச்சயம் லயிக்கும் கதை. பிரமாதம். நிறைய நினைவுகளைக் கொண்டு வந்த இலக்கியத்தரமான கதை.

மெல்ல சொன்னான், மெல்ல நடந்தான் - மெல்ல, மெள்ள.. எது சரி? தமிழின் குழப்ப சொற்களில் இதை ரொம்ப நாளாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைப்பு..

சிவகுமாரன் சொன்னது…

கதை சொல்லும் பாணி கண் முன் படமாய் விரிகிறது. ஒவ்வொரு கேரக்டரும், எனக்கு சில தெரிந்த முகங்களை நினைவுபடுத்துகிறது.
காதல் கைகூடாமல் போகலாம். முறிந்து போவதில்லை என்பதற்கு இந்தக் காதல் ஒரு உதாரணம்.
- மனதை மயிலிறகால் வருடிவிட்டு போகிறீர்கள் அண்ணா ஒவ்வொரு முறையும்.

சிவகுமாரன் சொன்னது…

மெல்ல தான் சரி அப்பாஜி. மெள்ள என்றொரு சொல் உண்மையில் இல்லை. அள்ள என்பதை சிலர் மெள்ள என்று சொல்கிறார்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சில நினைவுகளுக்குள் கண்ணீரின் ஈரம் உலராமல் இருப்பதாலன்றோ உறவுகளின் மேன்மை அறியப்படுகிறது //
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். ..

பத்மநாபன் சொன்னது…

மெல்ல என்பதே சரி..உங்களுக்கு தெரியாதது இல்லை அப்பாதுரை..எல்லாம் உச்சரிப்பின் பால் பட்ட்து... .எனக்கும் ல,ள, ர, ற தகராறு உண்டு.. சந்தேகமாக அடித்து விட்டு கூகிள் மேல் பழிபோடும் வெட்டி ஈகோ வும் உண்டு... அதே சமயத்தில் வேண்டுமென்றே தவறு விடுபவர்கள் மீது எரிச்சல் வரத்தான் செய்கிறது.... கொம்பு மாற்றுபவர்கள்.. தேவையில்லாமல் கால் போடுபவர்கள்... தேவைப்பட்ட இடத்தில் போடாமல் விடுபவர்கள்..சுழி மாற்றம் செய்பவர்கள்... இப்படி செய்பவர்கள் கருத்து எவ்வளவு பெரிதாக இருந்தாலும் எடுபடுவதில்லை... கூகிள் ட்ரான்சில்லேட்டரை விட என்.எச்.எம் ரைட்டர் இந்த விசயத்தில் நல்ல ஒத்துழைப்பு தருகிறது

ரிஷபன் சொன்னது…

அழுத்தமாய் உணர்வுகளைச் சொன்ன கதை.
பிரிவு குருவுக்கு நேரும்போது இரண்டு விதங்களிலும் சூழ்நிலை விவரிப்பு ரொம்ப இயல்பு. அப்படியே கதையுடன் ஒன்றிப் போக முடிந்தது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மோகன் அண்ணா!கசியவைத்தது கதை.

உறவின் குதூகலத்தைவிட பிரிவின் பளு தாங்கமுடியாதது.

பதட்டமில்லாத கதை சொல்லும் பாணி ஆழமாய் மனதை உழுது செல்கிறது.

இடைவெளி விடுவதும் அதை நிரப்புவதும் உங்களுக்கு இயல்பாய் கைவரப் பெற்றிருக்கிறது.

இதோ எழுதிமுடித்து உதறிக்கொண்டு கிளம்பிவிட்டீர்கள்.இந்தக் கதையின் மையத்திலேயே அடுத்த இடுகை வரும்வரைக்கும் நாங்கள்.

geetha santhanam சொன்னது…

மோகன்ஜி, உயிரற்ற பொருட்களிடமே இத்தனை பிடிப்போடு இருக்கும் குரு வராவின் மீது எத்தனை பிடிப்போடு இருந்திருப்பார்! மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கிறது நீங்கள் சொல்லியிருக்கும் விதம்.
கோதுதல், நூத்து நூத்து பார்த்தல் - இது எந்த வட்டார மொழி?
வாதுமை மரம் - கேள்விப்பட்டதில்லையே? வேறு பெயர் இருக்கா?

G.M Balasubramaniam சொன்னது…

வர லட்சுமி வராத லட்சுமியானாலும் நினைவுகளை தாங்கி நின்ற ஸ்டிக்கர் பொட்டும் கீழே விழுந்தது,ஏக்கங்களின் தாக்கத்தை அதிகமாக வெளிப்படுத்த ,கதையும் முடிந்தது.கதை சொல்லும் பாங்கு அழகு. பாராட்டுகள்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய அப்பாதுரை சார்!
உங்களுக்கு இந்தக்கதைப் பிடித்துப் போனதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

//மெல்ல சொன்னான், மெல்ல நடந்தான் - மெல்ல, மெள்ள.. எது சரி? தமிழின் குழப்ப சொற்களில்
இதை ரொம்ப நாளாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைப்பு//

சிவா மற்றும் பத்மநாபன் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.தமிழில் மெல்ல, மற்றும் மெள்ள .
எனும் இரண்டு வார்த்தைகளும் புழக்கத்தில் இருந்தே வந்திருக்கின்றன. ஒன்றுக்கு பதில் ஒன்றாய்க் கையாளப்பட்டாலும் சிறு வித்தியாசம் உண்டு.

மெள்ள வந்தான் எனும் போது தாமதித்து அல்லது மெதுவாய் என்ற கால அளவையான பொருளிலும்,
மெல்ல என்பதை சன்னமாய்... பலமற்ற எனும் பொருளிலும் வழங்கலாம்.

மெல்ல வரும்காற்று... சொல்லித்தரும் பாட்டு
கண்ணென்ற மொழிபார்த்து பெண்ணென்ற சுருதிசேர்த்து என்று டீ.எம்.எஸ்ஸும்

மெல்ல மெல்லமெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல "ன்னு
சுசீலாவும் பாடினாளோல்லியோ, அங்க 'மெல்ல'....

அடுத்து,' மெள்ள'ன்னு வார்த்தை உண்டு என்பதற்கு இலக்கிய சான்று.

திருப்பாவையில் எங்கக்கா ஆண்டாள் கொஞ்சுவதைப் பாரும்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

திருக்குறுந்தொகை எனும் அப்பர் அளித்த அமுதம். ஏதோ ஒரு பதிவில் நம்ம ஆர்.வீ.எஸ்ஸுக்கு
எழுதினதாய் எனக்கு ஞாபகம்

உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று
மெள்ள உள்க வினைகளும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள் இருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே

இன்னும் பாரதி பாரதி தாசனைத் தேடியும் சொல்கிறேனே!

உங்களுக்கு சந்தேகம் வந்தா எல்லாரையும்
வெரட்டுவீங்களே!

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி. .
உங்கள் வடக்கு நாதரை இன்னமொருமுறை படிப்பேன்

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!உங்கள் பாராட்டுக்கு நன்றி!

கோதுதல் என்பது தலைமுடியை விரல்களால் சிக்கெடுத்தல்,ஆற்றுதல் முதலிய இடங்களிலும், துப்புரவாய் பரிசோதித்தல் என்ற வகையிலும் உபயோகப்படுத்தப் படும் வார்த்தை.

அதீத ஜாக்கிரதை உணர்வோடு, அனைத்தையும் தேவைக்குமேல் கண்காணித்து செயல்படுதலை நூத்து நூத்து பார்ப்பது என்பார்கள்.இவை தென்னார்க்காடு மாவட்டத்தில் புழங்கும் சொற்கள் பெரும்பாலும்.

வாதுமை என்பது பாதாம் பருப்பு. இந்த மரத்தின் கனிகளின் உள்விதையே பாதாம் பருப்பு.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்!
//வர லட்சுமி வராத லட்சுமியானாலும்//

ரசித்தேன் சார்!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

kashyapan சொன்னது…

மொகன் ஜி அவர்களே! Life is a compromise. சமரசத்தில் தான் வழ்க்கையே இருக்கிறது.குருவின்,வரலட்சுமியின்,முருகேசனின் சமரசங்கள் "வடு'வாகி மலர்ந்துள்ளது.வாழ்த்துக்கள்---காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

காஷ்யபன் சார்! பலருக்கும் சமரசம் ஒன்றே அல்லவா வாழ்க்கையாய் மாறி விட்டது. இது விதிஎன்பதா? இல்லை மனிதனிடத்தில் தான் கோளாறா?

அப்பாதுரை சொன்னது…

//சில நினைவுகளுக்குள் கண்ணீரின் ஈரம் உலராமல் இருப்பதாலன்றோ உறவுகளின் மேன்மை அறியப்படுகிறது //

beautiful!

ADHI VENKAT சொன்னது…

சின்ன சின்ன பொருட்களின் மேலும் நிகழ்வுகளின் மேலும் நமக்குள்ள தொடர்பை அழகா வெளிக்கொண்டு வந்திருக்கீங்க. எழுத்து நடை அற்புதமா இருந்தது சார்.

கீதமஞ்சரி சொன்னது…

இடங்களுடன் நம் தொடர்பு எப்படியும் இறுக்கம் பெற்றுவிடுகிறது. அதற்கு சம்பவங்களே சாட்சிகள். சொல்லமுடியா மென்மன உணர்வை அழகாகப் படம்பிடித்த கதை. இறுதியில் மனம் பிசைந்த சோகம். ரொம்ப நல்லாயிருக்கு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

nice expression.

kashyapan சொன்னது…

மோகன் ஜி !Life itself is a compromise. வாழ்க்கை என்பது சமரசங்களின் அடுக்கு.குரு,வரா,அன்பழகன்,முருகேசன் ஆகியொரின் சமரசங்கள் தான் "வடு"வாக மலர்ந்துள்ளது .வாழ்த்துக்கள். ---காஸ்யபன்.
பி.கு. இரண்டு நாள் முன்பே பின்னுட்டம் அனுப்பியிருந்தேன். நான் ஒரு கணீணீ மூடன். எந்த பட்டனை தட்டினேனோ தெரியவில்லை.Blogger unavailable என்று வந்துவிட்டது. இப்போது சரியாகி விட்டது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ப்ளாக்கரின் குளறுபடியால் என் பின்னூட்டமும் அழிந்தே போனதோ?

உறவின் குதூகலத்தை விட பிரிவின் பளு தாங்கமுடியாதது.

கசிய வைத்த தருணங்களை ச்ருஷ்டிப்பதில் மன்னன் நீங்கள். வடுவின் மையத்திலேயே இனி மனசு சுற்றிவரும் கொஞ்ச நாளுக்கு.

ஆச்சா!இனிமே பெரியவரை ஒருமாசம் தேடவேண்டியதுதான்.இடைவெளி கொடுப்பதிலும் இடைவெளியை நிரப்புவதிலும் அசகாய சூரன் நீங்கள்.

பத்மநாபன் சொன்னது…

பிளாக்கர் பின்னூட்டங்களை சாப்பிட்டுவிட்டது... குரு , வரா இனிய காதல் நினைவுகளை மீண்டும் மீண்டும் அசைபோட வைத்த எழுத்துக்காக பல பின்னூட்டங்களை இடலாம்....

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா என்னாச்சு நான் இட்ட பின்னூட்டம் ? என் பதிவிலும் தங்களின் பின்னூட்டம் காணாமல் போய்விட்டது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

என் வாழ்விலும் ஒரு ஸ்டிக்கர் பொட்டு குறுக்கிட்டது. அப்போது ஆந்திராவில் ஒரு பப்ளிக் செக்டர் ஆஃபீஸில் இருந்தேன். க்வார்ட்டர்ஸ் நெம்பர் கூட ஞாபகம் B.329F
பாத்ரூமைத் திறந்தால் ஐந்தாறூ ஸ்டிக்கர் பொட்டுக்கள்..அடுத்த நாள் ஆஃபீஸில் இதை சொல்ல, அத்தனை பேறும் அனாவஸ்யமாய் என் மேல் பொறாமை பட்டார்கள்..அது..அந்த ஆஃபீஸ் கனவுக் கன்னி மல்லேஸ்வரி இருந்த வீடாம்..அவள் யாரையோ கல்யாண ம் செய்து கொண்டு வேலையை ரிஸைன் பண்ணி விட்டுப் போய் விட, அந்த ஸ்டிக்கர் பொட்டுகள் அவள் ஞாபகமாய் அங்கு இருக்கிறதாம்..ஆனால், நான் குரு போல் சலனப் படவில்லை...காரணம்..
(1) எனக்கு அப்போது தான் திருமணம் ஆகி, ஈரம் கூட காயாத நிலையில் ஆந்திராவில் அஞ்ஞாத வாசம்!
(2) பக்கா ஹோம் ஸிக் எனக்கு! எப்படா ஊருக்குப் போகப் போகிறோம் என்றிருந்ததால், மல்லேஸ்வரியின் ஸ்டிக்க்ர் பொட்டுகள் மனதினை சலனப் படுத்தவில்லை...

அன்புடன்,
அன்பன்,
ஆர்.ஆர்.ஆர்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி அப்பாதுரை,காஷ்யபன்,சுந்தர்ஜி,பத்மநாபன்,சிவா, சார்! என்னவோ ப்ளாகரில் தொல்லை என நினைக்கிறேன். பெரும்பாலான பின்னூட்டங்களும்,இன்டிலி வோட்டுகளும் மறைந்து விட்டன. மின்னஞ்சலில் அழிக்கப்படாமல இருக்கும் சில பின்னூட்டங்களையும் என் பதில்களையும் மீண்டும் இதில் பதிய முயற்சிப்பேன்.

மோகன்ஜி சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன்
ஒரு மிகச்சிறிய ஸ்டிக்கர் பொட்டென்று நினைக்கவே முடியாது. குருவைப்பொருத்தவரை அது அவனின் காதல் சின்னம். மலரும் நினைவுகள். முடியாத ஒரு தொடரின் முக்கிய காட்சியும் சாட்சியுமாகும்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் இதுபோல, பொட்டில் அடித்ததுபோல, எவ்வளவோ மிகச்சிறிய விஷயங்கள். ஆனாலும் சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.

குருவின் வலி என்னால் நன்கு உணர முடிகிறது. நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். அன்புடன் vgk

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! காதல்வயப்பட்டோர் தன் இணையின் சம்பந்தப்பட்ட பொருட்களில் தம் காதலையே ஆவாஹனம் செய்து காதல் பேணுகிறார்கள்.
காலமோ, காதலர்களைவிட அந்தக் காதல் சின்னங்களையே தாங்கி நிற்கிறது. அந்த சின்னம் தாஜ்மஹலானால் என்ன? ஸ்டிக்கர் பொட்டானால் என்ன?

மோகன்ஜி சொன்னது…

எல்.கே சொன்னது
கைகூடாத காதல் , முறிந்த நட்பு ஒரு சில தடையங்களை விட்டு செல்லும். என்றோ ஒரு நாள் நாம் அதைப் பார்க்க , நம் மனம் பழைய சிந்தனைகளில் ஆழ்ந்து , அந்த எண்ண ஓட்டங்களில் அமிழும் .

கிளாஸ் மோகன்ஜி

மோகன்ஜி சொன்னது…

கார்த்திக்! அழகாகச் சொன்னீர்கள்... காதலும் நட்பும் விட்டுச்செல்லும் தடங்கள் கனன்று கொண்டே தான் இருக்கும். வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்.

மோகன்ஜி சொன்னது…

பாலாஜி சரவணன் சொன்னது
உணர்வுகளை மொத்தமாக கோர்த்து அடக்கி ஒரு ஸ்டிக்கர் பொட்டில் ஒட்டிவிட்டீர்கள் மோகன் அண்ணா. கிளாஸ்! :)

மோகன்ஜி சொன்னது…

அன்பு பாலா ! ஸ்டிக்கர் பொட்டில் ஓட்டிய உணர்வுகள்...
நீ சொல்வது நன்றாக இருக்கிறது பாலா வாழ்த்துக்கு நன்றி !

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சொன்னது

காதலித்தவர்கள் நிச்சயம் லயிக்கும் கதை. பிரமாதம். நிறைய நினைவுகளைக் கொண்டு வந்த இலக்கியத்தரமான கதை.

மெல்ல சொன்னான், மெல்ல நடந்தான் - மெல்ல, மெள்ள.. எது சரி? தமிழின் குழப்ப சொற்களில் இதை ரொம்ப நாளாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைப்பு..

மோகன்ஜி சொன்னது…

சிவகுமாரன் சொன்னது
கதை சொல்லும் பாணி கண் முன் படமாய் விரிகிறது. ஒவ்வொரு கேரக்டரும், எனக்கு சில தெரிந்த முகங்களை நினைவுபடுத்துகிறது.
காதல் கைகூடாமல் போகலாம். முறிந்து போவதில்லை என்பதற்கு இந்தக் காதல் ஒரு உதாரணம்.
- மனதை மயிலிறகால் வருடிவிட்டு போகிறீர்கள் அண்ணா ஒவ்வொரு முறையும்

மோகன்ஜி சொன்னது…

சிவகுமாரன் சொன்னது

மெல்ல தான் சரி அப்பாஜி. மெள்ள என்றொரு சொல் உண்மையில் இல்லை. அள்ள என்பதை சிலர் மெள்ள என்று சொல்கிறார்கள்

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் சொன்னது

முதல் பகுதியில் அலுவலகமும் அதை சுற்றிய வாழ்க்கையையும் சொன்ன விதம் உயிர்ப்பாக இருந்தது.. குருவின் மனதில் ஒட்டிய வராவின் ஸ்டிக்கர் பொட்டு என்றும் இருக்கும் . பொட்டு அதை சுற்றிய நீல வட்டம் .. அதற்கு மேல் ஒட்டிய விநாயகர் படம். நினைவலைகளை ஓட்டிய விதம் திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது.. நாம் கடந்த பள்ளி/ அலுவலகங்களையும், அதில் நடந்த காதல்களையும் ( முறிந்த / சேர்ந்த ) நினைவு படுத்துகிறது...

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் சொன்னது

மெல்ல என்பதே சரி..உங்களுக்கு தெரியாதது இல்லை அப்பாதுரை..எல்லாம் உச்சரிப்பின் பால் பட்ட்து... .எனக்கும் ல,ள, ர, ற தகராறு உண்டு.. சந்தேகமாக அடித்து விட்டு கூகிள் மேல் பழிபோடும் வெட்டி ஈகோ வும் உண்டு... அதே சமயத்தில் வேண்டுமென்றே தவறு விடுபவர்கள் மீது எரிச்சல் வரத்தான் செய்கிறது.... கொம்பு மாற்றுபவர்கள்.. தேவையில்லாமல் கால் போடுபவர்கள்... தேவைப்பட்ட இடத்தில் போடாமல் விடுபவர்கள்..சுழி மாற்றம் செய்பவர்கள்... இப்படி செய்பவர்கள் கருத்து எவ்வளவு பெரிதாக இருந்தாலும் எடுபடுவதில்லை... கூகிள் ட்ரான்சில்லேட்டரை விட என்.எச்.எம் ரைட்டர் இந்த விசயத்தில் நல்ல ஒத்துழைப்பு தருகிறது

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய அப்பாதுரை சார்!
உங்களுக்கு இந்தக்கதைப் பிடித்துப் போனதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

//மெல்ல சொன்னான், மெல்ல நடந்தான் - மெல்ல, மெள்ள.. எது சரி? தமிழின் குழப்ப சொற்களில்
இதை ரொம்ப நாளாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைப்பு//

சிவா மற்றும் பத்மநாபன் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.தமிழில் மெல்ல, மற்றும் மெள்ள .
எனும் இரண்டு வார்த்தைகளும் புழக்கத்தில் இருந்தே வந்திருக்கின்றன. ஒன்றுக்கு பதில் ஒன்றாய்க் கையாளப்பட்டாலும் சிறு வித்தியாசம் உண்டு.

மெள்ள வந்தான் எனும் போது தாமதித்து அல்லது மெதுவாய் என்ற கால அளவையான பொருளிலும்,
மெல்ல என்பதை சன்னமாய்... பலமற்ற எனும் பொருளிலும் வழங்கலாம்.

மெல்ல வரும்காற்று... சொல்லித்தரும் பாட்டு
கண்ணென்ற மொழிபார்த்து பெண்ணென்ற சுருதிசேர்த்து என்று டீ.எம்.எஸ்ஸும்

மெல்ல மெல்லமெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல "ன்னு
சுசீலாவும் பாடினாளோல்லியோ, அங்க 'மெல்ல'....

அடுத்து,' மெள்ள'ன்னு வார்த்தை உண்டு என்பதற்கு இலக்கிய சான்று.

திருப்பாவையில் எங்கக்கா ஆண்டாள் கொஞ்சுவதைப் பாரும்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

திருக்குறுந்தொகை எனும் அப்பர் அளித்த அமுதம். ஏதோ ஒரு பதிவில் நம்ம ஆர்.வீ.எஸ்ஸுக்கு
எழுதினதாய் எனக்கு ஞாபகம்

உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று
மெள்ள உள்க வினைகளும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள் இருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே

இன்னும் பாரதி பாரதி தாசனைத் தேடியும் சொல்கிறேனே!

உங்களுக்கு சந்தேகம் வந்தா எல்லாரையும்
வெரட்டுவீங்களே!

மோகன்ஜி சொன்னது…

வாங்க பத்மநாபன்! இந்தக் கதையை இரண்டு பாகமான ஒரு கு.றுநாவலாய் வடித்திருந்தேன்.
குரு-வரா காதலை விவரமாய் தந்தபடி. ஏதோ ஒரு மூடில் வெட்டி ஒட்டி சிறுகதையாய் சுருக்கிவிட்டேன்.
இப்போது காதல் செய்யவே நேரம் இல்லையாம்.. .
காதல் குறுநாவல் படிக்க மட்டும் நேரம் இருக்குமா என்று தான்

//கொம்பு மாற்றுபவர்கள்.. தேவையில்லாமல் கால் போடுபவர்கள்...
தேவைப்பட்ட இடத்தில் போடாமல் விடுபவர்கள்..சுழி மாற்றம் செய்பவர்கள்... //
பத்மநாபன். இன்னமும் மன்னார்குடி மச்சினர் வரவில்லை.
இது அவர் கண்ணில் பட்டால் என்னென்ன சொல்வாரோ?!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா!
//காதல் கைகூடாமல் போகலாம். முறிந்து போவதில்லை //
உண்மைதான்! காதல் தோற்பதில்லை.. திருமணம் தோற்கலாம்..

அனைத்துலக காதலர்கள் சார்பில் உனக்கு ஏதாவது பட்டம் தந்தே ஆகவேண்டும்..
மக்கா! யோசிச்சு சிவாவுக்கு ஒரு நல்ல பட்டமா சொல்லுங்க!

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி சொன்னது

மோகன் அண்ணா!கசியவைத்தது கதை.

உறவின் குதூகலத்தைவிட பிரிவின் பளு தாங்கமுடியாதது.

பதட்டமில்லாத கதை சொல்லும் பாணி ஆழமாய் மனதை உழுது செல்கிறது.

இடைவெளி விடுவதும் அதை நிரப்புவதும் உங்களுக்கு இயல்பாய் கைவரப் பெற்றிருக்கிறது.

இதோ எழுதிமுடித்து உதறிக்கொண்டு கிளம்பிவிட்டீர்கள்.இந்தக் கதையின் மையத்திலேயே அடுத்த இடுகை வரும்வரைக்கும் நாங்கள்.

மோகன்ஜி சொன்னது…

பிரிய சுந்தர்ஜி ! உங்கள் அன்பில் நனைவது எனக்குப் பிடித்த விஷயம். .
மேலான உங்கள் ரசனைக்கு நன்றி. அவ்வப்போது நான் ஒளியும் இடைவெளிக்காக,வலிக்காமல் குட்டு வைத்திருக்கிறீர்கள். இனி சமர்த்தாய் எழுதுகிறேன்.
இனி அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த பதிவை வெளியிடுகிறேன். நன்றி ஜி!

மோகன்ஜி சொன்னது…

ஹேமா சொன்னது

தடங்களற்ற பெருமூச்சுச் சொல்லும் ஆயிரம் நினைவுகளை.கனவுகளைப் புதுப்பிக்கும் சில தடையங்கள்.

வயதின் சுருக்கங்ளைக்கூட புதுப்பிக்கும் அவ்வப்போது வரும் கோடைமழையாய் இளமை நினைவுகள் !

மோகண்ணா...கதை நினைவுகளைப் புரட்டுகிறது !

மோகன்ஜி சொன்னது…

//தடங்களற்ற பெருமூச்சுச் சொல்லும் ஆயிரம் நினைவுகளை.கனவுகளைப்
புதுப்பிக்கும் சில தடையங்கள்//
அழகாய்ச் சொல்கிறாய் ஹேமா!
உனக்கு அண்ணனாய் இருப்பதால் தானோ என்னவோ எனக்கும் சுமாராய் எழுத வருகிறது

மோகன்ஜி சொன்னது…

சித்ரா சொன்னது

பொட்டுக்குள், எத்தனை - நினைவலைகள் - உணர்வுகள்!!! அருமையான கதாசிரியர் என்பதை நிரூபித்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

மோகன்ஜி சொன்னது…

சித்ரா மேடம்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ! நம் நினைவுகளும் உறவுகளும் சின்ன பொருட்களில் பொதிந்து அவ்வப்போது வெளிப்பட்டு வாழ்க்கையின் உண்மையை உரைக்கின்றன அல்லவா?

மோகன்ஜி சொன்னது…

ராஜேஸ்வரி சொன்னது

//சில நினைவுகளுக்குள் கண்ணீரின் ஈரம் உலராமல் இருப்பதாலன்றோ உறவுகளின் மேன்மை அறியப்படுகிறது //
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். ..

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி. .
உங்கள் வடக்கு நாதரை இன்னமொருமுறை படிப்பேன்

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சொன்னது

அழுத்தமாய் உணர்வுகளைச் சொன்ன கதை.
பிரிவு குருவுக்கு நேரும்போது இரண்டு விதங்களிலும் சூழ்நிலை விவரிப்பு ரொம்ப இயல்பு. அப்படியே கதையுடன் ஒன்றிப் போக முடிந்தது.

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்! உங்கள் பின்னூட்டம் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. முதலில் இதை இரண்டு பாகமாய் ஒரு குறுநாவலாய்த்தான் எழுதினேன். அதை சுருக்கி ஒட்டுவேலை செய்து சிறுகதையாக்கினேன்.உங்களிடம் மாட்டிக் கொண்டேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

கீதா சந்தானம் சொன்னது

மோகன்ஜி, உயிரற்ற பொருட்களிடமே இத்தனை பிடிப்போடு இருக்கும் குரு வராவின் மீது எத்தனை பிடிப்போடு இருந்திருப்பார்! மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கிறது நீங்கள் சொல்லியிருக்கும் விதம்.
கோதுதல், நூத்து நூத்து பார்த்தல் - இது எந்த வட்டார மொழி?
வாதுமை மரம் - கேள்விப்பட்டதில்லையே? வேறு பெயர் இருக்கா?

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!உங்கள் பாராட்டுக்கு நன்றி!

கோதுதல் என்பது தலைமுடியை விரல்களால் சிக்கெடுத்தல்,ஆற்றுதல் முதலிய இடங்களிலும், துப்புரவாய் பரிசோதித்தல் என்ற வகையிலும் உபயோகப்படுத்தப் படும் வார்த்தை.

அதீத ஜாக்கிரதை உணர்வோடு, அனைத்தையும் தேவைக்குமேல் கண்காணித்து செயல்படுதலை நூத்து நூத்து பார்ப்பது என்பார்கள்.இவை தென்னார்க்காடு மாவட்டத்தில் புழங்கும் சொற்கள் பெரும்பாலும்.

வாதுமை என்பது பாதாம் பருப்பு. இந்த மரத்தின் கனிகளின் உள்விதையே பாதாம் பருப்பு.

மோகன்ஜி சொன்னது…

ஜி.எம்.பாலசுப்ரமணியம் சொன்னது

வர லட்சுமி வராத லட்சுமியானாலும் நினைவுகளை தாங்கி நின்ற ஸ்டிக்கர் பொட்டும் கீழே விழுந்தது,ஏக்கங்களின் தாக்கத்தை அதிகமாக வெளிப்படுத்த ,கதையும் முடிந்தது.கதை சொல்லும் பாங்கு அழகு. பாராட்டுகள்.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்!
//வர லட்சுமி வராத லட்சுமியானாலும்//

ரசித்தேன் சார்!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சொந்தங்களே! அள்ள முடிந்தவரை மாயமாகிப் போன பின்னூட்டங்களை மின்னஞ்சலில் இருந்தவரையில்
வெட்டிஒட்டி இங்கு சேர்த்து விட்டேன். இன்றைய தேதியிலேயே இவை இங்கு வந்து விட்டன. உங்கள் பின்னூட்டமும் மோகன்ஜி சொன்னது என்றே!

வலையின் தவறுக்கு இந்த வாலிபன் மன்னிப்புக் கோருகிறேன்! சரிதானே?

மோகன்ஜி சொன்னது…

ஆதி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி.தலைவர் நலமா?

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்! உங்கள் பாராட்டை மிக அழகாய்ச் சொல்கிறீர்கள். நன்றி.. மிக்க நன்றி!

மோகன்ஜி சொன்னது…

காச்யபன் சார்! உங்கள் பின்னூட்டம் மட்டும் அல்ல... நிறைய பின்னூட்டங்கள் "காக்கா ஓச்!" ஆகி விட்டது.
கிடைத்தவரை மேலே வெட்டிஒட்டியுள்ளேன்..

உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழர்!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்ஜி ! உங்கள் அன்புக்கு நன்றி.. அதென்னவோ தெரியவில்லை.. சில கதைகள் கொஞ்சம் அழுகாச்சியாக எழுதி வருகிறேன்! எனவே அடுத்தது கொஞ்சம் ஜாலியாக ஒரு கொசுவத்தி! விரைவில்..

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம்! மீண்டும் நன்றி!

மோகன்ஜி சொன்னது…

//ஆச்சா!இனிமே பெரியவரை ஒருமாசம் தேடவேண்டியதுதான்.இடைவெளி கொடுப்பதிலும் இடைவெளியை நிரப்புவதிலும் அசகாய சூரன் நீங்கள்.//

சுந்தர்ஜி! அதுதான் இல்லை. இப்பவே எழுத உட்காரப் போகிறேன்..
தலைப்பு வந்து... சரி பிடிங்க... "கல்யாணியைக் கடித்த கதை "

மோகன்ஜி சொன்னது…

சிவா உன் பின்னூட்டம் மேலே... கொன்னூட்டே தம்பி !

மோகன்ஜி சொன்னது…

ஆர்.ஆர்.ஆர்! உங்கள் ஸ்டிக்கர் விஷயம் ரொம்ப நேரம் சிரிக்க வைத்தது. மிக ரசித்தேன் ஈரம் காயாத புது மாப்பிள்ளையை ! அதுவும் எங்க ஊரில் வந்து பொட்டை ரசிக்காத மாதிரி ரசித்திருக்கிறீர்கள்.. பொல்லாத ரசிகனைய்யா நீர்!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அண்ணா. "மெள்ள" தெளிவுபடுத்தியதற்கு. முந்திரிக்கொட்டைத்தனமாய் உளறியதற்கு அப்பாஜியிடமும் , அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

பொட்டில் இத்தனை பிட்டா ?

காதலிக்கும் காலத்தில் கண்டதில் மனம் லயிக்கும்.

திரு.வி. கா. கார்பரேஷன் மேல் நிலைப்பள்ளியில் (சென்னை ஷெனாய் நகர்) பத்தாம் வகுப்பு படிக்கும்போது படாபட் ஜெயலக்ஷ்மி போல் ஒரு பெண் எங்கள் இதயங்களை அள்ளி சென்றவள். சனி ஞாயிறு பள்ளிக்கூடம் லீவில் அவளை பார்க்காமல் மனது பதறும். திங்கள் கிழமை சீக்கிரமே ஓடி ஜொள்ளு விடும் ஆசையில் அவள் அன்றும் பள்ளிக்கு வராமல் போனால் - நைசாக சென்று அவள் பெஞ்சில் உட்கார்ந்து போனக்காலாங்களும் உண்டு - நானும் என் நண்பனும் !

RVS சொன்னது…

நாலு நாள் ஊரில் இல்லை...
வடு ஆறாத வடுவாய் நெஞ்சை சுடுகிறது. என்னை மாதிரி கோக்குமாக்குகளே தொடர் எழுதும்போது நீங்கள் ஒரு காதல் தொடர் மாதிரி இதை எழுதியிருக்கலாம் அண்ணா. நாங்களும் ஒரு வாரம் காதலித்திருப்போம். நினைவுகளின் பிரவாகம்!! சூப்பெர்ப். ;-))

RVS சொன்னது…

//வலையின் தவறுக்கு இந்த வாலிபன் மன்னிப்புக் கோருகிறேன்! சரிதானே?//
வால்ல்லிப்ப வயஸு? ம்..ம்.. நடக்கட்டும்.. ;-))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்பது தான் நினைவுக்கு வருகிறது மோகன்ஜி! ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டில் கூட இத்தனை வலியும், வடுவும் ஒளிந்து இருப்பதை அழகாய் கதை வடிக்க உங்களால் தான் முடியும்.

ஸ்டிக்கர் பொட்டு பற்றிய என்னுடைய நினைவுகள் வேறு மாதிரி! முடிந்தால் தனியே பகிர்கிறேன். :)

”தலைவர் நலமா?” மே :) ஆனால் நமக்கு இந்த தலைவர் பதவி மேலெல்லாம் ஆசையில்லை என அன்றே சொல்லி விட்டேனே ஜி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! மன்னிப்பெல்லாம் மானுடர் கேட்பது! நீயும் நானும் கின்னர கிம்புருடர்கள்.. நமக்கேன் அவை தம்பி?

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாயி!
/அவள் பெஞ்சில் உட்கார்ந்து போனக்காலாங்களும் உண்டு - நானும் என் நண்பனும் !//

ரசிக மணியே! அடுத்த பதிவில் கல்யாணியைக் கடித்திருக்கிறேன்.. வந்து பாரும்!

மோகன்ஜி சொன்னது…

பிரிய ஆர்.வீ.எஸ்! ஒரு சரித்திரக் காதலை சின்ன தொடராய் எழுதும் எண்ணம் உண்டு!

கல்யாணியைக் கடிச்சிருக்கேனே! பாக்க வல்லியா?

மோகன்ஜி சொன்னது…

வே.நா! உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு என் பணிவான நன்றி நண்பரே!
அடடா! உங்க மனசிலயும் ஒரு போட்டு ஒட்டியிருக்கா?

அவசியம் பதியுங்க!

நீங்க ஆசைப் படலேன்னாலும் நாங்க இல்லே ஆசைபடுறோம். தலைவரோட முதல் தகுதியே தலைமைப் பதவியை மறுதலிப்பது தானே?

பத்மநாபன் சொன்னது…

மெல்ல..மெள்ள ...அருமையான் விளக்கத்திற்கு நன்றி (சங்கத்தமிழிலிருந்து எடுத்து போடுவீர்கள் என்று தெரிந்தால் நானும் சிவாவும் இந்த விளையாட்டுக்கே வந்திருக்க மாட்டோம் )...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

“பாத்ரூம் பைப்பே…. பக்கத்து சுவரே….
படிதாண்டா என் பத்தினிக் கதவே...
படுதா அணிந்த ஜன்னலே…

ஸ்டிக்கர் பொட்டு பற்றிய என் நினைவுகள் பதிந்து இருக்கிறேன். பாருங்கள் மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன் ! 'மெள்ள' வரும் ஒரு பாரதி பாட்டிற்காக நானும் ஒரு வாரமாய் மூளையைக் கசக்கிக்கொண்டிருக்கிறேன்

மோகன்ஜி சொன்னது…

வ.நா! இதோ உங்கப் பதிவைப் படிக்க போய்கிட்டே இருக்கேன் தலைவரே!

குணசேகரன்... சொன்னது…

ப்ளாக் Background & font color கண்ணுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.மாற்றினால் படிக்க இன்னும் வசதியாக இருக்கும்
http://zenguna.blogspot.com

மோகன்ஜி சொன்னது…

அன்பு குணசேகரன் ! இதுவரை யாரும் குறிப்பிடாத மாற்றத்தை செய்யச் சொல்லியிருக்கிறீர்கள். செய்ய முயல்வேன்.