கண்ணனுடைய லீலா விநோதங்கள் தான் எத்தனை எத்தனை? வெண்ணெய்த் திருடி, வேய்ங்குழலூதி ஆய்ச்சியர் உள்ளம் கவர்ந்து, மாயம் பல புரிந்து நம் உள்ளத்துக்குள்ளேயேயும் அல்லவா ஸ்வாதீனமாய் ஆக்கிரமிப்பு செய்து குடியும் புகுந்து விட்டான்?!
கண்ணனின் தீராத விளையாட்டுக் கதைகளில், அதிகம் அறியப் படாமல் உள்ள,நான் கேட்ட, ஒரு சின்னக் கதையை உங்கள் கருத்திற்கும், கண்ணனின் கழலடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
கோகுலத்தில் கண்ணனும் அவனுடைய சகாக்களும் அடிக்கும் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. யசோதைக்கு வெண்ணெயைக் காப்பாற்றுவது பெரும்பாடாய் ஆயிற்று. அகப்பட்டுக் கொள்ளாமல் திருடுவதில் அதி சமர்த்தனாக வேறு ஆகிக் கொண்டிருந்தான் கண்ணன். அவனைக் கையும் களவுமாய்ப் பிடிக்க, திட்டத்துக்கு மேல் திட்டம் போட்டும், தப்பித்துக் கொண்டேயிருந்தான்.
யசோதை கடைசியில் ஒரு நல்ல உபாயம் கண்டுபிடித்தாள். இன்று வங்கிகளில் திருட எத்தனித்தால் அடிக்கிறதே அபாய மணி( burglar alarm) அதன் முதல் மாதிரியைக் கண்டுபிடித்தவளே யசோதை தான்!
வெண்ணைக் கலயங்கள் வைக்கும் உறியிலிருந்து ஒரு மணிக் கயிற்றைக் கட்டி,அந்தக் கயிற்றின் மறுமுனையை , அவள் படுத்திருக்கும் அடுத்த அறை வரை நீட்டி, அதன் முனையில் ஒரு வெள்ளி மணியைக் கட்டினாள். யாராவது உறியைத் தொட்டால், உறி அசைய,அதில் கட்டிய கயிறும் அசைந்து, உள்ளறையில் கட்டப் பட்ட மணியின் நாவை அசைத்து, மணி ஒலிக்க ஆரம்பிக்கும் .உடனே அந்தக் கள்ளனைப் பிடித்துவிடலாம் என்று சரியானதோர் ஏற்பாட்டை செய்து முடித்தாள்.
மாயக் கண்ணனுக்கா இது தெரியாமல் போகும்? திருடவும் வேண்டும்...மாட்டிக் கொள்ளவும் கூடாது...யோசித்தான். நேராக உள்ளறையில் கட்டிவைத்த வெள்ளிமணியின் அருகில் சென்றான். அதனோடு பேச ஆரம்பித்தான்.
“மணியே! உன்னை எதற்கு இங்கே கட்டியிருக்கிறது தெரியுமா?”
“தெரியும் அய்யனே!. பக்கத்து அறையில் உள்ள உறி அசைந்தால்,அதிலிருந்து வரும் இந்தக் கயிறு அசையும் போது, நான் கணகண என அடிக்கத் தொடங்கவேண்டும்.”
“எதற்கு நீ அடிக்கவேண்டும் தெரியுமா?”
“தெரியும் பிரபு. வெண்ணைத் திருடுபவனைப் பிடிக்க..... ஆய்ச்சியரிடம் யசோதை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்”
“அந்தத் திருடன் யார் எனத் தெரியுமா?”
“தெரியாது கண்ணா”
“தெரிந்து கொள் ! அது நான் தான். நீ எனக்கொரு உதவி செய்ய வேண்டும்.. நான் வெண்ணெய்த் திருடும் போது நீ அடித்து, காட்டிக் கொடுக்கக் கூடாது. எனக்கு சத்தியம் செய்து தருவாயா?”
வெள்ளிமணி திணறிப் போயிற்று. தெய்வம் என்னிடம் உதவி கேட்கிறதா ? எனக்கு இத்தனைப் பாக்கியமா?
“என்ன பேசாமல் இருக்கிறாய்? எனக்கு சத்தியம் செய்து தருவாயா? இல்லையா?”
“என் பாக்கியம் பிரபு. நீங்கள் வெண்ணெய்த் திருடும் போது சத்தியமாய் நான் அடித்து ஒலி எழுப்ப மாட்டேன்”.
“நல்லது. நினைவிருக்கட்டும்” கண்ணன் வெளியே ஓடிவிட்டான்.
நண்பகல். வேலையெல்லாம் முடித்து, யசோதை சற்று கண்ணயரும் நேரம்... கண்ணன் உறி இருக்கும் அறைக்குள் தன நண்பர்களுடன் நுழைந்தான்.
“கண்ணா! வேண்டாமடா! கண்டிப்பாய் மாட்டிக் கொள்வோம்.”
நண்பர்கள் பயந்தார்கள், யசோதையின் கச்சிதமான ஏற்பாடுகளைப் பார்த்து...
“கவலைப் படாதீர்கள். தயாராகுங்கள்”. ஒருவன் மண்டியிட,மற்றவனைப் பிடித்துக் கொண்டு, குனிந்தவன் முதுகின் மேலேறி, கலயத்தை எடுத்தான். உறி ஊசலாடியது. கயிறும் வேகமாய் அசைந்தது... நண்பர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டார்கள். ஆச்சரியம்!! மணி அடிக்க வில்லை. நண்பர்கள் கிசுகிசுத்தார்கள்..”பெரிய ஆளடா நீ!”
“சரி சரி வாருங்கள்” என்று அனைவருக்கும் வெண்ணையை அள்ளி அள்ளித் தந்தான்.
தானும் ஒரு கை வெண்ணை எடுத்தான்.
உண்ண வாயருகே கொண்டு போனான். பவழ உதடுகள் பொதிய , வெண்ணையை உண்ணத் தலைப்பட்டான்..
இத்தனை நேரம் அமைதி காத்த மணி “கண கண” என ஒலிக்கத் தொடங்கியது.. ஓடிவந்த யசோதையின் கைகளில் கண்ணன் பிடிபட்டான்.. கையும் வெண்ணையுமாய்.... விக்கித்துப் போனான்.
சற்று சுதாரித்துக் கொண்டு, “சற்று இரும்மா. நீ தரும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு முன், நீ கட்டிய மணியை ஒருதரம் பார்க்கிறேனே அம்மா...எங்கும் ஓடி விட மாட்டேன்”
அவன் பேசுகையிலேயே கண்ணனின் காலை ஒரு கயிற்றால் பிணைத்தாள். மறுமுனையைக் கையில் பிடித்துக் கொண்டு,”சரி .உள்ளே போய் மணியைப் பார்”என்று அனுமதித்தாள்.
மணியைக் கோபமாகப் பார்த்த கண்ணன் கேட்டான்..”மணியே! சொன்ன வார்த்தை மீறலாமா?”
“பிரபு... நான் சொன்ன வாக்கை மீறவில்லையே?
“என்ன? செய்வதையும் செய்து விட்டு... நீ மீற வில்லையா??
“பிரபு,நான் என்ன வாக்கு கொடுத்தேன்?
“நான் திருடும் போது அடிக்க மாட்டேன் என்று”
“பிரபு! நீங்கள் உறியைத் தொட்ட போது அடித்தேனா?
“இல்லை”
“உறி ஆடியதே ...அப்போது அடித்தேனா?”
“இல்லை”
“சரி கலயத்தை திருடிக் கையில் எடுத்தீர்களே! அப்போதாவது அடித்தேனா?”
“இல்லை.. இல்லை... ஆனால் வெண்ணையை உண்ணும் போது அடித்துக் காட்டிக் கொடுத்து விட்டாயே?”
“கண்ணா நான் என் கடமையை மட்டுமே அப்போது செய்தேன்..
உனக்கு நெய்வேத்யம் ஆகும் போது அடிப்பதே என் பிறவிப் பயன்.. பிரபு... என் பிரபு...” மணி விசும்பத் தொடங்கியது.
கண்ணனைக் கட்டி இழுத்துக் கொண்டு யசோதையும் உரலை நோக்கிப் போனாள்.....