செவ்வாய், பிப்ரவரி 01, 2011

சபரிமலையும் சனீஸ்வரனும்



புருஷன் பொண்டாட்டியை பிரித்து வைப்பேன் கொக்கரித்தார் சனீஸ்வரன்.

காந்தகிரியில் சனீஸ்வரனுடன் உரையாடிக் கொண்டிருந்தார்
ஸ்வாமி ஐயப்பன். தன் பக்தர்களை சனிபகவான் பீடிக்காதிருக்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார்.

மானுடர்களுக்கு என்ன கஷ்டமெல்லாம் கொடுக்க முடியும் என்ற ஐயப்பனின் கேள்விக்குத்தான் மேற்கண்ட பதிலிறுத்தார் சனிபகவான்.

சனீஸ்வரா! எனக்காய் விரதமிருக்கும் சமயம், என் பக்தர்கள் மனைவியரிடமிருந்து பிரிந்தே வாழுகிறார்கள்

பஞ்சணையில் புரள்பவரை கட்டாந்தரையில் உருட்டி விடுவேன் 

ஐயப்பன் சிரித்தார். என் பக்தர்கள் வெறும்தரையில் தான் படுக்கிறார்கள் சனீஸ்வரா!

வாசனாதி திரவியங்கள் சேர்த்து பன்னிரிலும் வெந்நீரிலும் குளிப்பவனை பச்சைத் தண்ணீரில் பரிதவிக்க விடுவேன் சனீஸ்வரன் குரல் உயர்ந்தது.

நடுக்கும் குளிரிலும் அவர்கள் குளிர்ந்த நீரிலேயே குளிக்கிறார்கள். மந்தனே!

முடிதிருத்தி முகம்மழித்து சௌந்தர்யமாய் இருப்பவனை காட்டுமிராண்டிபோல் ஆக்கிவிடுவேன் ஸ்வாமி!

நல்லது. விரதம் இருக்கும் என் பக்தர்கள் முகம் மழிக்காமல் முடி திருத்தாமல் தீட்சையுடனேயே திரிகிறார்கள். புறஅழகை அவர்கள் பொருட்படுத்துவதில்லை சனீஸ்வரா!.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லோரையும் ஒன்றாய் உழலவிட்டு கலங்க வைப்பேன்

ஐயப்பன் குலுங்கிகுலுங்கி சிரித்தார். சனீஸ்வரா! அல்லது என்று நினைத்து நல்லதைத்தானே செய்கிறாய்? என் பக்தர்களுக்கு
மேலோன் கீழோன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஜாதி மதம் என்று  பேதமில்லை.. எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்பது ஐயப்ப மார்க்கம்.

சனீஸ்வரனுக்கு சலிப்பு தட்டியது.பெருமானே! நான் பீடித்திருப்பவனை கல்லிலும் முள்ளிலும்,காட்டிலும் மேட்டிலும் திரிய விடுவேன்.

ஐயனின் குரல் கம்மியது. சனீஸ்வரா! என்னை நாடி வரும் பக்தர்கள் காலில் செருப்பின்றி கல்லிலும் முள்ளிலும் கடும் பயணம் மேற்கொண்டு காடுமலைகள் தாண்டியல்லவா வருகிறார்கள். அவர்களின் தாரக மந்திரமே கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை அல்லவா?

மேற்கொண்டு சொல்வதற்கு சனிபகவானுக்கு ஒன்றும் தோன்றாமல் மௌனம் காத்தார்.

பார்த்தாயா சனீஸ்வரா! நீ என்னவெல்லாம் கஷ்டங்கள் தர முடியுமோ அவை அத்தனையையுமே என் அன்பர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே மீண்டும் அவர்களுக்கு கஷ்டம் தராமல்,உன் பார்வையை அவர்கள் பக்கம் திருப்பாமலிரு. அதற்கு பிரதியாக, உனக்குப் பிடித்த கருப்பு வண்ணத்திலேயே அவர்கள் ஆடை அணிவார்கள். சரிதானே?
பேட்டி முடிந்து விட்டது என்பதை சனீஸ்வரன் உணர்ந்தார்.

கால் தாங்கியபடி மெல்ல வெளிவந்தார்.

கஷ்டத்தை விரும்பி ஏற்கும் பக்தர்கள் ! சுகம் வேண்டாத பக்தர்கள்!! விந்தை விந்தை.! தனக்குள் சொல்லிக் கொண்டே காக ஊர்தியை நெருங்கினார்.

தற்போதைய கதை தெரியுமா?

சனீஸ்வரனின் பார்வையின் ஒரு கலை சபரிமலைக் கோவிலின் நிர்வாகத்தின் பொறுப்பிலிருப்பவர்களாய் உருவெடுத்தது.
கோடிகோடியாய் நிதி குவிந்தாலும், கடும்பயணம் மேற்கொண்டு வரும் பக்தர்களுக்கு பெரிதாய் வசதிகள் செய்து தருவதில்லை. வருடாவருடம் குவியும் மக்களின் எண்ணிக்கையோ பெருகிக் கொண்டே போகிறது. கேரளே கேளி விக்ரஹமாயிருந்த
ஐயப்பனைக் காண இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூட வருகிறார்கள். ஆனாலும் என்ன?
ஐயப்ப பக்தர்கள் தான் கஷ்டத்தை விரும்பி ஏற்றுக் கொள்பவர்கள் ஆயிற்றே? சனீஸ்வரனின் கலைக்கு இது புரிந்ததால்தான், அங்குமிங்குமாய் ஒப்புக்கு சில ஏற்பாடுகள் மட்டும்... யானையின் கோரப் பசிக்கு பப்பிள் கம்..

சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் தமிழகத்திலிருந்தும் ஆந்திராவிலிருந்துமே வருகிறார்கள்.
இந்த வருடம் ஜனவரி 14 ல் பலியான 132 பேரின் மரணம் கொடுமையானது. தவிர்த்திருக்கப் படவேண்டியது. இங்கு யாருக்கும் பொறுப்பில்லை. யாருக்கும் வெட்கமும் இல்லை.
எவன் செத்தால் எனக்கென்ன என்னும் மனோபாவமா?
இந்த பலியாவது இவர்கள் கண்களைத் திறக்குமா?

நாள்தோறும் லட்சக் கணக்கானோர் கூடும் திருப்பதியில் எத்தனை வசதிகளைக் கூட்டிக்கொண்டு போகிறார்கள்?
சபரிமலைக்கு வரும் பாண்டிபரதேசிகளை கொல்லாமலாவது  கேரளம் காத்தருளுமா?

மற்றும் ஒன்று. ஆந்திர ஊடகங்களில் பெரிய அளவில் இந்த சம்பவம் அலசப்பட்டு வருகிறது. தமிழகத்திலோ இது பத்தோடு பதினொன்று. அவர்களும் தான் பாவம் யாருக்காக அழுவார்கள்?
இருமுடிகட்டு கட்டிக்  கொண்டுபோய் செத்த சாமிகளுக்காய்
விசனப்படுவார்களா? இல்லை, மீன்பிடிக்கப் போய் வானேகிப் போன மீனவனுக்காய் புலம்புவார்களா?

எனக்கொரு நண்பன். இரும்பு மனிதன் .. சொன்னானே பார்க்கணும். ஏன் அங்கல்லாம் போய் உயிரை விடுறீங்க? அரசாங்கமா அங்க போக சொல்லுச்சி?

நாவலர் நெடுஞ்செழியன் தான் என்று நினைக்கிறேன். ஒரு முறை தமிழன் குறித்து அங்கலாய்த்தார்.நம்மாளு ஒண்ணு கோவிந்தா கோவிந்தான்னு போய் ஆந்திராவுல பணத்தை கொட்டுவான். இல்லேன்னா சாமியோவ் சாமியோவ்ன்னு கேரளாவுல போய் கொட்டுவான். உள்ளூர் சாமியில்லாம் உதவாதா

ஒண்ணும் புரியல போங்க!

தெரிந்தும் தெரிந்தும், அறிந்தும் அறிந்தும் நாங்கள் செய்த சகல பிழைகளையும் பொறுத்தருள்வாய் ஐயப்பா!    


  




    

60 comments:

பத்மநாபன் சொன்னது…

முதல்ல வணக்கம் சாமி...பதிவ படிச்சுட்டு வர்றேன் சீக்கிரம்..

பாரதசாரி சொன்னது…

//நம்மாளு ஒண்ணு கோவிந்தா கோவிந்தான்னு போய் ஆந்திராவுல பணத்தை கொட்டுவான். இல்லேன்னா சாமியோவ் சாமியோவ்ன்னு கேரளாவுல போய் கொட்டுவான். உள்ளூர் சாமியில்லாம் உதவாதா”
//
சரியாத்தான் சொல்லியிருக்கார் :-)

பத்மநாபன் சொன்னது…

சனீஸ்வரனின் கோட்பாட்டையும்..ஐயப்பனின் கோட்பாட்டையும் கலந்து நிகழ்ந்த விபத்தையும் சேர்த்து பதித்துள்ளீர்கள்...

உருவமே இல்லை என்று இறையை வணங்குபவர்களுக்கும்.. உருவமும் ஒளியுமானவர் என்று இறையை வணங்குபவர்களுக்கும் பொதுவாகவே கட்டுக்கடங்கா கூட்டம் கூடும் இடங்களிலெல்லாம் இம்மாதிரி விபத்துகள் நடக்கிறது...

தன்னை வருத்தி இறையை அறியும் ஆர்வ உச்சத்தில் தன்னிலை இழக்கிறான் உணர்ச்சி நிலைக்கு செல்கிறான் சுயபாதுகாப்பை மறக்கிறான்.. இங்கு ஆண்டவன் ஆளுபவன் மூலமாக ஒழுங்கை நிலைநாட்ட பணிக்கிறான்...ஆள்பவனின் மெத்தனம் பக்திக்கே இழுக்காகிறது.... இம்மாதிரி கூட்டத்தை சீர்படுத்த ஆளுபவர்கள் இனியாவது விழித்துக்கொள்ளவேண்டும் ...

ஆண்டவனின் ஆட்சி நொடிக்கு நொடி பிறளாமல் பிரபஞ்சம் மூழுவதும் நன்றாகவே இருக்கிறது.. மனிதனின் ஆட்சிதான் சீராக வேண்டும்....

மோகன்ஜி சொன்னது…

அன்பு பத்மநாபன்! சரியாகச் சொன்னீர்கள். GOD'S OWN COUNTRY என்று பெருமிதப் பட்டுக் கொள்ளும் கேரளம் மனிதர்களை OWN செய்வதில்லை. பலமணிநேரங்கள் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு ஒதுங்க வசதியோ,குடிக்க நீரோ கூட ஏற்பாடு செய்ய முடியாத நிர்வாகம் எதற்கு? நாட்டிலே செய்யக் கூடிய வசதிகளை காட்டில் செய்ய முடியாது தான். எனினும் அடிப்படையான சிலவற்றை செய்யக்கூட மனமோ,முனைப்போ இல்லாத அலட்சியப் போக்கையே கடைபிடிக்கிறார்கள். ஓரிரு தொண்டு அமைப்புகள்,சேவா சங்கம் தான் தன்னால் இயன்றதை செய்கிறது. தேசீய இழப்பாய் அறிவித்த மத்திய அரசு இனியாவது இந்த மெத்தனத்தை கண்டு கொள்ளுமா? பல கேள்விகள். ஆயாசமாய் இருக்கிறது நாட்டு நடப்பைப் பார்க்கையில் பத்மநாபன்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க பாரதசாரி!ஆழ்ந்து யோசித்தால் சரின்னுதான் படுது இல்லையா?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஐயப்பனையும், சனீஸ்வரனையும் சந்த்திக்க வைத்த தங்கள் பேட்டி கற்பனையேயானாலும், அருமையாக, உண்மையைக் கூறுவதாக, நகைச்சுவையாக, ரசித்துப் படிக்கும்படியாக இருந்தது.

ஒரு சிலரின் அலட்சியத்தால் தகுந்த பாதுகாப்பின்றி ஏற்பட்டுள்ள விபத்து நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாகவே தெரிகிறது.

சபரிமலைக் கோவிலின் ஆண்டு வருமானம் ரூபாய் 3000 கோடிகள் என்றும், வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க செலவு செய்வது வெறும் 98 லட்சங்கள் (ஒரு கோடி கூட இல்லை) மட்டுமே என்றும், சமீபத்திய கேரள செய்தித்தாளில் வந்த செய்தியினை, நண்பர் ஒருவர் e-mail மூலம் அனுப்பியிருந்தார்.

எது உண்மையோ அந்த ஐயப்பனுக்கே, மகர ஜோதிக்கே வெளிச்சம்.

வரும் காலங்களிலாவது இது போன்ற விபத்துக்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ஏதாவது சிறந்த பாதுகாப்பு வழிகள் திட்டமிட்டு செய்தால் நல்லது.

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! யாரேனும் சற்று முனைந்து துருவினால் அவ்விடே கூட ஏதும் வில்லங்கம் இருக்கலாம். நீங்கள் சொன்னது போல் அய்யப்பனுக்கே வெளிச்சம்.

Chitra சொன்னது…

Present, Sir!

அப்பாதுரை சொன்னது…

'என்னவோ போங்க!' என்பது சரிதான்.

விபத்து நடந்தால் மனித ஆட்சியின் குறை; விபத்து ஏற்படாவிட்டால் தேவ ஆட்சியின் நிறை.

விவரங்களோ உந்துதலோ தெரியாது என்றாலும் இத்தகைய கோரங்களின் பின்னணியில் சில மீறல்கள் எப்பொழுதுமே காணப்படுகின்றன. மலையேறினாலும் சரி, மீன் பிடித்தாலும் சரி. 'உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா?' என்ற கேள்வியும் அறிவும் அவரவருக்குத் தோன்ற வேண்டும்.

இத்தனை பணம் கோவில்களுக்குப் போகிறதா? தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி இன்னொரு கோவிலுக்குப் போகிறவர்களிடம் வரி வசூலிக்கலாம் போலிருக்கிறதே? :)

சாய்ராம் கோபாலன் சொன்னது…

ஐயப்பனையும், சனீஸ்வரனையும் சந்த்திக்க வைத்த தங்கள் பேட்டி நகைச்சுவையாக இருந்தது.

Welcome back Mohanji.

//இத்தனை பணம் கோவில்களுக்குப் போகிறதா? தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி இன்னொரு கோவிலுக்குப் போகிறவர்களிடம் வரி வசூலிக்கலாம் போலிருக்கிறதே? :) //

Durai, you should have been tax collector for the world man. Brilliant idea.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

திருப்பதியில் கூட்டம்... ஸ்ரீரங்கத்தில் நெரிசல்..ப்ரதோஷ காலத்தில் கட்டுக்கு அடங்காத குமபல்..சபரிமலையில் நெரிசல்..ஏன் ஸ்வாமி இதெல்லாம்..
மனுஷனுக்கு ஆசை ஜாஸ்தியாகி விட்டது..அதனால் ப்ராபளமும் ஜாஸ்தி..எப்படி SOLVE
பண்ணுகிற விதமும் தெரிவதில்லை..மந்தை..மந்தையாய் கோவிலுக்குப் போய் தேடுகிறான்..ஊ ஹூம்...IN ORDER TO ESCAPE FROM A PROBLEM THERE IS NO OTHER GO BUT TO SOLVE IT என்கிற ரொம்ப சாதாரண விஷயம் அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் ஏன் கோவிலுக்குப்
போகிறான்?
மற்றபடி சனீஸ்வர, சபரிசிரீச பேட்டியும்,அந்த ‘ யானைப் பசிக்கு பபுள் கம்’ என்ற
வார்த்தை சொல்லாடலும் சூப்பர்!

Philosophy Prabhakaran சொன்னது…

நீண்ட நாட்களுக்குப்பின்னர் பதிவெழுதுவது போல இருக்கிறதே... என்ன காரணம்...? யார் செய்த தாமதம்...?

பெயரில்லா சொன்னது…

வாங்க மோகன் சார்! ப்ரசண்ட் பொட்டுட்டு போய்டுறேன்! கருத்து சொல்ற அளவுக்கு இன்னும் வளரலயே! ;)

மோகன்ஜி சொன்னது…

WELCOME சித்ரா!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

உள்ளேயும் அருகேயும் இருப்பவற்றை தொலைவில் தேடும் போது செலவும் அதிகம்.கிடைப்பதும் கடினம்.
தேடியதும் கிடைத்ததும் எதுவென்று புரியும்போது தான் யாரென்பதும் இறைவன் இருக்குமிடமும் புரியும்.

இழந்திருந்தோம் அன்பு நிறைந்த சொற்களை.

நலம்தானே மோகன்ஜி?

சிவகுமாரன் சொன்னது…

விபத்து பற்றிக் கேள்விப்பட்டதும் நாவலர் சொன்னது போல் தான் நானும் நினைத்துக் கொண்டேன்.தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்பா சேவா சங்கங்கள் ஒன்றிணைந்து இது பற்றி விவாதிக்க வேண்டும். கேரளா அரசுடன் அல்லது தேவசம் போர்டுடன் பேச வேண்டும். இதில் ஆட்சியாளர்கள் தலையிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். வசதிகள் செய்து தராவிட்டால் தமிழகத்தில் இருந்து வருவது நிறுத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும்.மகேசனைக் காட்டிலும் மதிப்பு மிக்கதல்லவா மனிதம்.

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய அப்பாஜி! ஆயிரம் பேர் கூடும் அரசியல் கட்சி கூட்டத்துக்கு ஐம்பது போலீசை அனுப்பும் நிர்வாகம்,லட்சகணக்கான ஜனங்கள் கூடும் அந்த சமபவ இடத்தில் சில போலீஸ்காரர்களே இருந்திருக்கிறார்கள். CROWD CONTROL MANAGEMENT இன்னபிற ஏதும் இல்லை. இந்த மனப் போக்கு தான் உறுத்தலாய் இருக்கிறது. மனித உயிருக்கு மதிப்பே இல்லை இங்கு.

மீனவர் பிரச்னையில் கூட, எல்லைத் தாண்டியவனை கைது செய்வதோ,எச்சரிப்பதோ செய்யாமல் சிங்கள பாவிகள் ஈவு இரக்கமின்றி கொல்வதா?
ஜென்மப் பகை பாராட்டும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூட எல்லை மீறும் மீனவர்களை கொன்றதில்லையே?

தமிழன் இரத்தம் இந்த ஓநாய்களுக்குப் பிடிக்கிறது.
அது பாரம்பரியம் மிக்க இரத்தம்.விருந்தோம்பி விருந்தோம்பி சுவைகூடிய இரத்தம்.. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பக்குவப் பட்ட இரத்தம்..
இனம் அழியும் போதும் சூடேறாத இரத்தம்...

மோகன்ஜி சொன்னது…

வாங்க சாய்! நலம் தானே! சபரிமலை போய்வந்த ஆனந்தம் எல்லாம் இந்த சம்பவத்தின் தாக்கத்தில் வடிந்துபோய் விட்டது சாய்!

வலைக்கு சற்று நீண்ட விடுப்பு கொடுத்து விட்டேன். பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போய் விட்டு,மாதங்கள் கழித்து மாமியார் வீட்டுக்குதிரும்பி வந்த மருமகள் போல் உணர்கிறேன் இப்போது!

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்தே! நலம் தானே? என்ன எளிமையாக சொல்லி விட்டீர்கள். பிரச்னைகள் தீர கடவுளை மொய்க்கும் மனிதர்கள். ஆன்மீகத்தின் பால பாடம். வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டே வருகிறது.. சராசரி மனிதனுக்கு கடவுள் ஆறுதல் என்றால், கடவுள் சார்ந்த நிர்வாகம் அவனுக்கு வசதிகள் செய்யக் கடமைப் பட்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் ,சுகாதார ஏற்பாடுகள் இவற்றை தருவது கட்டாயம். எனக்கென்னவோ இது நிர்வாகத்தை மீறிய பாரம்பரிய துவேஷத்தின் வெளிப்பாடா? என்று அச்சம் ஏற்படுகிறது.

மோகன்ஜி சொன்னது…

ஆம் பிரபாகரன்.. நெடிய விடுப்புத்தான் எடுத்து விட்டேன். சேர்த்து பதித்து விடுவோம். இன்று படிக்க விட்ட பதிவுகளை எல்லாம் பார்த்து விடுவேன்

மோகன்ஜி சொன்னது…

அன்பு பாலா! இந்த மாதம் உன் மாதம் அல்லவா? கலக்கு தம்பி!

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய சுந்தர்ஜி! வணக்கம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம். நான் ஆண்டவனைக் குறிப்பிடவில்லை.அன்பையும் மனித நேயத்தையும் குறிப்பிடுகிறேன். அவை இல்லாதவர்களுக்கு அவற்றை வலியுறுத்த ஆதங்கமாய் இருக்கிறது.

உங்கள் கருத்துக்கள் உற்சாகம் தரும் அமுதம்.

மோகன்ஜி சொன்னது…

வித்தியாசமான கருத்து சிவா! யோசிக்க வேண்டிய விஷயம்.
//மகேசனைக் காட்டிலும் மதிப்பு மிக்கதல்லவா மனிதம்.// அற்புதம். இந்த உந்துதலாலேயே எதை எழுதலுற்றேன்.

என் பிறந்த நாளுக்கான உன் கவிதையை மனப் பெட்டகத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறேன். உனக்கேன் நன்றி சொல்ல வேண்டும் என் சிவா?

suneel krishnan சொன்னது…

மோகன் ஜி
நல்ல பகிர்வு ,பக்தி இப்பொழுது பெருகி விட்டது ,காரணம் -அநீதி பெருகி விட்டது ,கொலையா செஞ்சுட்டு நே அபிசேகம் செஞ்சா ஐயப்பன் காப்பாத்துவார்னு நம்புராங்கா .மக்கள் மனங்களில் அச்சம் கூடுகிறது -பக்தி கூடுகிறது .

வேற என்னத்த சொல்ல !!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மோகன்ஜி! நான் சொல்லவந்ததின் முதல் பகுதி அது.

ஆனாலும் இவ்வளவு மனிதர்கள் கூடுகையில் கோடிகளில் வருமானமீட்டும் ஒரு அரசுக்குள்ள அக்கறை அது மெக்காவோ ஜெருசலமோ சபரிமலையோ மக்களுக்கான தேவைகள் குறித்து வெளிப்படுவதில்லை.

இது ஒரு புறமிருக்க மேல்மருவத்தூரோ வேலூரோ வேறொரு புது வழிபாட்டுத்தலமோ வருமானம் குவிகிறது.அரசுக்கு வருவாய் இப்போதெல்லாம் கள்சாராயத்துக்குச் சமமாய் கல்வியிலும் ஆன்மீகத்திலும் கிடைக்கிறது.

அரசியல்வியாதிகளின் கவனம் தனக்கு ஆதாயமிருக்கும் வரை அங்கு குவிந்திருக்கிறது.அதன்பின் வருமானவரித்துறையின் கவனத்துக்கு அது திரும்புகிறது.

எது எப்படியாயினும் எத்தனை இடர்கள் இருப்பினும் பக்தனின் கடவுளைத் தேடும் பயணம் மிகுந்த பொருள் விரயத்துடன் தொடர்கிறது.

இதன் பொருள்தான் என் முந்தைய பின்னுட்டத்தில் சுருங்கியிருக்கிறது.அதற்கான மறு பின்னூட்டம்தான் இது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தேவசம் அதிகாரிகளுக்கும், கேரள அரசாங்கத்திற்கும் இந்த அய்யப்ப பக்தர்கள் கொண்டு வரும் பண வரவின் மீதே அதிக விருப்பம்! அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுத்து அவர்களை மகிழ்விக்க அவர்கள் விரும்புவதில்லை. மாறாக அவர்களிடமிருந்து எத்தனை பறிக்க முடியும் என்றே நினைக்கிறார்கள். சிறு வயதிலேயே என்னைப் பாதித்த ஒரு விஷயம் - கேரளத்தின் பல இடங்களில் இருக்கும் பெயர்ப்பலகைகள் எல்லாமே மலையாளத்தில் இருக்க, “கள்ளுக்கடை” என்பது மட்டுமே தமிழில் எழுதி இருக்கும் :( ஏதோ இதற்காகவே தான் தமிழர்கள் அலைகிறார்கள் என்பது போல்! மனித உயிருக்கு விலை இல்லாது போய்விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கற்பனையான சனீஸ்வரன்-ஐயப்பன் பேட்டி அருமை.
பணம் கொழிக்கும் இடத்தில் மனித மனங்களுக்கு மரியாதை இல்லாமல் இருப்பது ஐயப்பன் செயல் அல்ல கேரள அரசின் செயல்தான்...

ADHI VENKAT சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை காண்கிறேன். சபரிமலை விபத்து பற்றி ஒருபுறம் விவாதங்களும், மறுபுறம் கோயில் நிர்வாக கூட்டமும் ஆலோசித்தாலும் சென்ற உயிர்களுக்கு என்ன சொல்வது. மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லையா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க டாக்டர் சுனில்! நடுத்தர வர்க்கத்தின்,ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையே பெரும் பிரச்சனையாகும் போது ஆண்டவனை விட்டால் நாதிஏது என்று பக்தி செய்கிறார்கள்.எத்திப் பிழைப்போர்க்கு ஆண்டவனோடு பார்ட்னர்ஷிப் டீல்.
எல்லாரையும் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் பரம்பொருள்...

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி!யோசிக்க வைக்கும் நேர்மையான கருத்துக்கள். கோவில் மன அமைதிக்கும் பிரார்த்தனைக்கும் ஆன இடம். அதை பராமரிக்கவும் பக்தர்களுக்கு வசதி செய்யவுமே காணிக்கை செலுத்துதல் வழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும். அந்த நிதி பெருகும்போது அதை பராமரிக்கவும்,முதலீடு செய்யவும்,உகந்த முறையில் செலவிடவும் பொறுப்பானவர்களாய் ,இறை நம்பிக்கை உள்ளவர்களாய் கைசுத்தமானவர்களாய் வாய்க்க அந்த ஸ்வாமி கூட புண்ணியம் பண்ணியிருக்க வேண்டுமோ என்னவோ?

மோகன்ஜி சொன்னது…

வெங்கட் நாகராஜ்! இரண்டாம் தர குடிமகனாய் தமிழனை நடத்துவது கண்கூடு. உங்கள் பின்னூட்டம் இந்த முடிவை உறுதிபடுத்துகிறது.

மோகன்ஜி சொன்னது…

குமார்!ஆண்டவன் அனைத்தையுமே பார்த்துக் கொண்டு இருக்கிறான். அனைவருக்கும் பரந்த மனம் வாய்க்க அவனே வழிசெய்ய வேண்டும்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதிமேடம்! இனிமே அடிக்கடி பதிவேன் மேடம்.
நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை. இந்த சம்பவமாவது சம்பந்தப் பட்டவர்கள் கண்களையும் இதயத்தையும் திறக்கட்டும்.

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் ஐயா
நெடுநாள் நோன்பு ஒரு நாள் நிறைவினில் கடுந்தவக்காட்டினுள் கால்கள் பதிந்த கனம் சொர்கம் கண்களுக்கெட்டா இறை மனகண்களுக் கெட்டும்
அமைதி ....... மறைந்ததேனோ மானுடம் சிதைந்ததாலோ?

Aathira mullai சொன்னது…

கடவுளுக்கு நன்றி. மனிதம் ஆராதிக்கப்படும் நாள் எந்நாளோ?? பிறகு வருகிறேன் மோகன் ஜி.

RVS சொன்னது…

சனி பேட்டி அருமை.. அசல் மோகன்ஜி பஞ்ச்.
மக்கள் கூடும் இடங்களில் வசதி செய்யும் அளவிற்கு இந்திய கஜானாவில் பணம் இல்லை. அது அரசியல்வாதிகளின் கஜானாவில் இருக்கிறது.
GODS OWN COUNTRY ஒரு GHOST OWN COUNTRY ஆன கதை..

மோகன்ஜி சொன்னது…

மேகம் இருண்டுவர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உனதடியேன் கலங்குவது காணீரோ?
தேகம் மிகத் தளர்ந்தேன் அய்யனே தென்குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே!

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆதிரா! நேயம் வேள்வியாய் வளர்க்கும் வித்தையை அனைவருமே கைக்கொள்ளவேண்டும்.
அன்புதனில் செழித்திடும் வையம்.

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி ஆர்.வீ.எஸ்! ஐயப்பன் எல்லோர்க்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும்.

அப்பாதுரை சொன்னது…

வெங்கட் நாகராஜ் கமென்ட் யோசிக்க வைக்கிறது

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//வலைக்கு சற்று நீண்ட விடுப்பு கொடுத்து விட்டேன். பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போய் விட்டு,மாதங்கள் கழித்து மாமியார் வீட்டுக்குதிரும்பி வந்த மருமகள் போல் உணர்கிறேன் இப்போது! //

மிரண்டு போய் எழுதாம விட்டுராதீங்க ?

முதலில் மாமியாரை பார்த்து பயப்படும் மணமகளை காப்பாத்திய புருஷன் பிற்க்காலத்தில் அதைவிட அசிங்கமாக மனைவியிடம் கெட்டபெயர் வாங்கும் நிலை தான் இப்போது.

kashyapan சொன்னது…

1957ம் ஆண்டு இ.எம்.எஸ் ஆட்சிக்கு வந்தார்.உலகத்தில் முதன் முதலாக தெர்தல் மூலம் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தது அப்பொதுதான். அந்த ஆன்டு மகர‌ விள‌க்கு தெரியவில்ல. நாத்திகர்கள் வந்ததால் வந்த நாசம் என்றார்கள். அடுத்த ஆன்டு வாலிபர்கள் சென்று பார்த்தனர். தேவஸ்வம் ஆட்கள் விளக்கு எற்றுவதைப் பார்த்தனர். கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்க கொடிகணக்கில் அமெரிக்காவால் இந்திரா அம்மையாருக்கு பணம் கொடுக்கப் பட்டது. நேருவின் எதிர்ப்பையும் மீறி ஆட்சி கலைக்கப்பட்டது. இந்து,கிறிஸ்தவ அமைப்புகள் "சமரம்" நடத்தினர் கம்யுணிஸ்டுகளுக்கு எதிராக. இப்பொது ராணுவ அமைச்சராக இருக்கும் அந்தோணியும்,மற்றோரு அமைச்சரான ரவியும் பொராட்டத்தை முன்னின்று ந‌டத்தினர். மக்கள் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்காக முதல்வர் அச்சுதனந்தன் மகர விளக்கு நம்பிக்கை சார்ந்த‌ விஷ‌யம் என்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.தேவஸ்வம் விளக்கை நஙகள் தான் ஏற்றுகிறோம் என்று அறிவித்துள்ளது.மெலே நான் குறிப்பிட்டிருப்பவை வரலாறும் உண்மைச் செய்திகளும்.‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍காஸ்யபன்.

ரிஷபன் சொன்னது…

ரொம்ப நாளா அடங்கியிருந்தது இப்ப சீறிக் கிளம்பின மாதிரி..
நடந்தது இனி நடக்காமலிருக்க மனித முயற்சிகளும் ஒத்துழைப்பும் தேவை..
உங்கள் பதிவு தார்மீகக் கோபத்தைக் கூட அழகாக பதிந்திருந்தது.

மோகன்ஜி சொன்னது…

உண்மை அப்பாஜி! வெங்கட் நாகராஜின் கருத்து ஆழமானது.

மோகன்ஜி சொன்னது…

ஆஹா சாய்! அப்பிடி போடுங்க! இப்போ இதுல புருஷன் யார் பொண்டாட்டி யார்ன்னு புரியலியே தல !தாம்பத்ய வித்தகர் ஆர்.வீ.எஸ் தான் மேற்கொண்டு விளக்கணும்!

மோகன்ஜி சொன்னது…

காஷ்யபன் சார்! அரசியல் நிகழ்வுகளை கோர்வையாய் நினைவுகூர உங்களால் மட்டுமே முடியும். மகர விளக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பது சமத்காரமான பதில். திருவண்ணாமலை தீபம் போல,வடலூர் வள்ளலாரின் தைப்பூச தீபம் போல மக்கள் ஏற்றிவழிபடும் தீபமே மகர தீபம் என்பது பெரும்பாலான மக்கள் அறிந்ததே.மகர விளக்கு என்று சொல்வது அந்த மகர சங்கிரம விழாவை. மகர ஜோதி என்பது அந்நேரம் வானில் தோன்றும் மகர நட்சத்திரம். இந்த தீபத்தை அந்நாட்களில் பொன்னம்பலமேட்டில் வசித்து வந்த ஆதிவாசிகள் ஏற்றி வழிபட்டதாய் பெரியவர்கள் சொல்வார்கள். யார் ஏற்றினாலும் சரி. அந்த தீபத்துக்கு மகிமையே லட்சோபலட்ச மக்களின் பார்வையின் தீட்சண்யம் ஒரே நேரத்தில் அங்கு குவிவதாலும், சில நிமிடங்கள் அந்த சஹ்யாத்திரி மலைத் தொடரே சரணம் ஐயப்பா என்று அவர்களின் கோஷத்தில் அதிர்வதினாலும் தான்.
என் பதினான்காம் பிராயம் முதல் நான் அந்த சமயம் மலையில் இருப்பேன். என்னை அங்கே ஈர்க்கும் முக்கிய அம்சம் அங்கு குவியும் மானுடத்தைக் கண்டு பிரமிப்பதும்,பத்துநாட்கள் அனைத்தும் துறந்து பலதரப்பட்டோருடன் நேரமழியப் பேசிக் களிப்பதும் தான். அங்கே பக்தியுண்டு,பாட்டுண்டு,
பொறாமையுண்டு,தன்முனைப்புண்டு,
கேலியுண்டு,தமிழுண்டு,சினேஹமுண்டு.. மானுடம் விஸ்வரூபம் எடுத்து நம்பிக்கையினால் பகவானை அளக்கும் விந்தையுண்டு...

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரிஷபன்! ஆளும் வர்க்கங்கள்,அதிகார வர்க்கங்கள் இடிப்பாரில்லா ஏமராமன்னர்களாய் இருக்கும் போது பாவப்பட்ட மக்கள் எங்கே போவது? இறந்தோர் குடும்பங்களை நினைக்கையில் உள்ளம் பதறுகிறது. உங்கள் கனிவுக்கு நன்றி ரிஷபன் சார்!

Matangi Mawley சொன்னது…

i don't understand... 'religion' nu vartha entha logical discussion-la vanthaalum, politicians ethukkaaka ivvalavu kashtapadaraanga, pathil solla-nnu!
ivvalavu jananga have a certain belief. they are free to believe what they want to believe. varushaa varusham ivvalavu per varaanga-nnu theriyum. ennanna provisions avangalukku venum-nu theriyum. ethileyum corruption-aa? $500 billion swiss bank-la irukku-nnu mattum news varuthu.

2012 la ulagam azhiya poguthaame?

ஹேமா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஹேமா சொன்னது…

அண்ணா....வந்தீங்களா சுகம்தானே !

அண்ணா போனவாரத்தில்”நடந்தது என்ன“என்று ஒரு நிகழ்வு பார்த்தேன்.மகரஜோதி பார்க்கத்தானே அங்கே போகிறார்கள்.அதுவே பொய் என்கிறமாதிரி அந்த நிகழ்வு இருந்தது !

http://www.thiraimovie.com/video/nadanthathu-enna-26-01-2011/

சாய்ராம் கோபாலன் சொன்னது…

அன்புள்ள மோகன்ஜி

உங்கள் கும்பலுடன் ஒரு முறை வர வேண்டும் போலிருக்கே ? நான் பெரிய பாதை போனதில்லை. போக ஆசை இந்த வருடத்தில் வந்தது. நான் கொஞ்சம் சுத்தம் சுகாதாரம் என்று போராடும் கிறுக்கன். அதான் கொஞ்சம் டென்ஷன் !!

சாகும் முன் ஒருதடவை பார்த்து விடுவேன். நம்பிக்கை இருக்கு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வாங்க.. ரொம்ப நாள் கழித்து வந்து.. மனதை தொடும் ஒரு விஷயம் பற்றிய பதிவு எழுதிருக்கீங்க...

மக்களின் அதீத பக்தியில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப் படுவதை உணராது இருக்காங்க..

அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசாங்கமும் மனது வைத்தால் ஒழிய.. எதுவும் மாறப் போவதில்லை..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசாங்கமும் மனது வைத்தால் ஒழிய.. எதுவும் மாறப் போவதில்லை.. //

அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. சென்னை பாண்டிபாஜரில் அத்தனை கடை இருந்தும் கார்களுக்கு என்று பார்கிங் place கட்ட கடைக்காரர்கள் முன் வருவதில்லை ? ஏன் அவசரத்திற்கு நல்ல வசதி கொண்ட கழிப்பறை உண்டா ? அந்நியன் படம் பார்த்து விசில் அடிப்பதுடன் நம் கடமை முடிந்து விடும். கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து முடிந்தவுடன் "ச்சு" கொட்டி முடிந்துவிடும். அதேபோல் ஐயப்ப மலை சம்பவம்.

ஆனால் தங்கமாளிகையில் தங்கம் வாங்கி குவிப்போம் ? அதே அரசியல்வாதி சனியன்களை பதவியில் உட்கார வைப்போம். ஏனென்றால் நமக்கு அந்த சாக்கடையில் இறங்கி தூர் வார கஷ்டம் ??

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்று இப்போது தான் நாம் பாடவேண்டும் ? நம் மதிகெட்ட மக்களையும் / நெறிகெட்ட அரசியல்வாதிகளையும் / அரசாங்கத்தையும் நினைத்து !

மோகன்ஜி சொன்னது…

வாங்க மாதங்கி! ஆங்கிலமும் தமிழுமாய், பிட்சாவுக்கு வத்தக் குழம்பு தொட்டுகிட்ட மாதிரி வித்தியாசமான பின்னூட்டம். நல்லாத்தான் இருக்கு!
//2012 la ulagam azhiya poguthaame?//
2012 ல கருப்பு பண உலகம் அழியும்.
அப்பாவி மீனவனைச் சுடும் சிங்கள ஓநாய்களின் திமிர் அழியும்..
ஊழல் உலகம் அழியும்.
மக்களின் அறியாமை,நமக்கென்ன எனும் பேதைமை ஒழியும்.
இப்படித்தான் நடக்கணும்... இப்படித்தான் நாம் நம்பணும்.... இப்படி நடக்க பிரார்த்திக்கணும்...நம்மால் முடிந்ததை செய்யணும்.

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! நான் நலமே! மகர ஜோதி மனிதர்களால் தான் ஏற்றப் படுகிறது என்பது சரியே! அதை அமானுஷ்யமான நிகழ்வு எனும் வகையில் சம்பந்தப் பட்டவர்களும்,பக்தியில் அற்புதங்களையும், இயல்பை மீறின வெளிப்பாடுகளையே நாடும் மனப்பாங்குடைய சராசரி பக்தனுமே மகர ஜோதியை மாயாஜோதியாய் மாற்றிவிட்டனர். அது ஆதிவாசிகள் நடத்திய ஓர் உன்னதமான வழிபாடு. விபரமறிந்த ஐயப்ப பக்தர்கள் இவ்வண்ணமே அதைக் காண்கின்றனர். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மகர ஜோதி உண்மையா எனும் சர்ச்சை எழும். இந்தமுறை, உயிரிழப்புகளின் பிரச்சினையை திசை திருப்பவே ஜோதி மீண்டும் கைகொள்ளப் பட்டிருக்கிறது.
ஜோதி உண்மையோ இல்லையோ ..ஒளி சத்தியமானது. நம்பிக்கை நித்தியமானது.

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய சாய்! பெரிய பாதையும் அனுபவங்களும் அற்புதமானவை.சுத்தம் சுகாதாரம் என்பவை கூட ஐயப்ப சேவை சங்கம் பல வருட முயற்சியில் பரவாயில்லை.
//சாகும் முன் ஒருதடவை பார்த்து விடுவேன். நம்பிக்கை இருக்கு//

சாய்! உரக்க சொல்லாதீர்கள்!'சாகடிக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோமே.. கவலைப் படாதீர்கள்' என்று யாரோ சொல்வது எனக்குக் கேட்கிறது..

jokes apart.. வாரும் சேர்ந்து செல்வோம்.

மோகன்ஜி சொன்னது…

ஆனந்தி நலமா? நீகள் சொல்வது உண்மை. எல்லோர் முயற்சியும் இதில் தேவை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

யானையின் கோரப் பசிக்கு பப்பிள் கம்..
very TRUE!!

மோகன்ஜி சொன்னது…

வாங்க மேடம்! கருத்துக்கு நன்றி