சனி, நவம்பர் 03, 2012

வேறென்ன கேட்பேன்?


  
உத்திஉத்தி கம்மங்கட்டு வூட்டப் பிரிச்சி கட்டு
காசுக்கு ரெண்டுகட்டு  கருணைக் கிழங்குடா
தோல உரியடா தொண்டையில வையடா
வையடா வையடா வையடா....

சிவபாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு உத்திஉத்தின்னு இறங்கினாப் போதும்..
நாலு பேரையாவது ஏறக் கட்டிட்டுத் தான் லைனையே தாண்டுவான். சடுகுடு ஆட்டந்தான்னு இல்லை, வாலிபால்,  கோக்கோ எதுவானாலும் அதில் அவன் சூரன் தான் சந்தேகமேயில்லை.
ஆனாலும் அவன் சகவாசம் கூடாது என ரொம்பவே ஆராமுது வீட்டில் கண்டிப்பு காண்பிப்பார்கள் .அவனும் அவன் மூஞ்சியும்..

மேலக் கவரைத் தெருவில் இன்று ஆராமுதுக்கு தெரிந்தவன் அவன் ஒருவன் தான். தெரிந்த மீதி பேரெல்லாம் எங்கெங்கோ.. அந்த விவரமெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தெரியத்தானே போகிறது? சிவபாதத்தையே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

முப்பது வருஷம் தெரிஞ்சுக்காம இருந்தது ரெண்டு மணி நேரத்திலயா குடிமுழுகிப் போகும்.? ஏதோ கண்ணை மூடுமுன் தான் திரிந்த மண்ணை ஒரு தரம் பார்த்துடணும்னு ஒரு வெறி. அதுக்காக அதைப் பார்த்தப்பபின்னே ஆராமுது கண்ணை மூடிடுவான்னு நினைக்க வேண்டாம். கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறுன்னு பங்கஜமே சர்டிபிகேட் இல்லே குடுத்திருக்கா? நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும்.

ஆச்சு அணைக்கரை தாண்டியாச்சு.. பல்லாங்குழியாய் ரோடு. எல்லாபுறமுமாய் பஸ்ஸோ ஆட்டி எடுத்தது.. செய்யறதையெல்லாம் செஞ்சி போட்டு தெகிரியமாய் இந்த ஊருக்கே வரையா படவான்னு உலுக்கிஉலுக்கிப் போட்டது ஆராமுதை..

என்னைப் பார்த்தா யாருக்கும் அடையாளம் தெரியுமா? ஆராமுதுக்கு  வழியெங்கும் இந்தக் கேள்வி  மாளாத யோசனையாய் நீண்டபடி வந்தது. இருபத்தினாலு வயசிருக்குமா அப்போ? தன் வயசுக்காரர்கள் ஆறேழு பேர் இருப்பமா? மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா. அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!

அப்படி யாரும் தன்னை தெரிஞ்சிண்டா தான் என்ன? அவமானப் படும்படி ஏதும் சொன்னாத்தான் என்ன? ஆம்படையாளும்,பிள்ளையும்,சொச்சத்துக்கு மருமகளும் செய்யாத அவமானமா? செத்திருக்கணும் அப்பவே செத்திருக்கணும்.. உசிரில்லே வெல்லக் கட்டி?

பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. புழுதி பறக்க இருந்த பழைய பொட்டவெளியா? கட்டடமும், கடைகளும்,ஏ.டி.எம்முமா எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இல்லையின்னா அந்த இடம் பஸ் ஸ்டாண்டுன்னு  தெரியாம போயிருக்கும். ஆராமுது ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்.

மேலக் கவரைத் தெருவுக்கு விடப்பா”.

ஏற இறங்க பார்த்த ஆட்டோக்காரன். ~அது என்னாதுங்க எனக்கு தெரியாத தெருவு. இந்த வெளங்காத ஊருல?

பண்டாபீஸ் பக்கத்துல.

பண்டாபீஸா. அப்படின்னா?”

அங்கே போய்க் கொண்டிருந்த இன்னொரு பாம்புக் காதுக்கு இந்த சம்பாஷணம் விழுந்தது. நம்ப மந்திரி தெருவத்தான் அப்போ மேலக் கவரைத் தெருன்னு சொல்லுவாங்க. சாரு அங்க யாரைப் பார்க்கணும்?” அருகில் வந்து நெற்றியில் உள்ளங்கையை சார்பாக்கி ஆட்டோவினுள் பார்த்தார்.

இவரண்டை சொல்லலாமா?..  ”சிவபாதம் சிவபாதம்னு

"அவருக்கு நீங்க என்னவாகணும்?..

கிட்டின சொந்தம்

நீங்க பார்த்தா பிராம்மணா போலிருக்கேளே?”

அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”

அது சரி! நீ போப்பா என்றவர் முனகிக்கொண்டே போனார்..நல்ல கொண்டான் கொடுத்தான்

தெருமுக்கிலேயே ஆராமுது இறங்கிக் கொண்டார். எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒன்றைத் தவிர.
ஓட்டு வீடுகள், தாயம்மாவின் குடிசை, தெருவின் ரெண்டு பக்கமும் இருந்த முனிகிபாலிட்டி தண்ணீர் குழாய்கள், வீடுகளை ஒட்டிக் கறுத்து தேங்கி நின்ற சாக்கடைகள் எதையும் காணோம். பிளாட்டுகள் வந்திருந்தன. சோடா பவுண்டன்.. நிலா பியூட்டி பார்லர்...

வந்தாச்சு . ரெண்டு மாடி வீடு . இதுவாய்த்தான் இருக்கணும். சிவபாதம்!

யாருங்க அது.?” அவன் மனைவியாகத்தான் இருக்க வேணும்..

உள்ளே பேச்சுக் குரல்.. மீண்டும் பால்கனிக்கு அவள் வந்தாள். மேல வாங்க. தைரியமா வாங்க.. இது கடிக்காது என்றாள் நாயை வாஞ்சையோடு பார்த்தபடி.

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே என்று நினைத்துக் கொண்டார் ஆராமுது.
படுக்கையில் சாய்ந்திருந்த  சிவபாதம் கண்களை சுருக்கிக் கொண்டார்.

தெரியுதா?”

வா ஆராமுது.. குரல் கம்மி கண்கள் கலங்கின சிவபாதத்துக்கு.

எப்படி இவ்வளவு தூரம்?”

அடடா! இவ்வளவு வருஷத்துக்கப்புறமும் என்னை அடையாளம் தெரிஞ்சுதா?”

தெரியாம பின்னே? ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.. அதுல நீ ஒண்ணு.. நீ வருவே நீ வருவேன்னுதாண்டா அந்தராத்மா அலறிக்கிட்டு கிடந்தது.. இருமலும் இரைப்புமாய் திணறியது சிவபாதத்தின் குரல். இனிமே கவலை இல்லே. இன்னொருவன் தன்னால வந்துடுவான்

இன்னொருத்தானா? யாரது?” இளைத்த அவர் கரம்தொட நீண்டது ஆராமுதின் வலக்கை.

தர்மராஜன்.. யம தர்மராஜன்..”     
                                                         (தொடரும்)


பின் குறிப்பு:

என் இனிய சொந்தங்களே! 
இந்தக் கதையின் அடுத்த பதிவை நம் அன்பிற்குரிய திரு. ரிஷபன் தொடர்கிறார். இப்படியொரு சுழல் தொடர் எழுதுவோமா என்று நான் கேட்டவுடன், ஆர்வமோடு ஏற்றுக் கொண்ட ரிஷபன் சாரின் ஈடுபாடு போற்றுதலுக்குரியது.  அது மட்டுமல்ல ரிஷபனை அடுத்து தொடரப் போவது யார் தெரியுமா ? முத்தமிழ் வித்தகர் மூவார் முத்து என்று நாம் போற்றும் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள். நான் புள்ளிகளை வைத்திருக்கிறேன்.மேற்கொண்டு வனைந்து கோலம் போடும் என் இரு சகோதரர்களுக்கும் நன்றி. இருவருக்கும் நான் சொன்னது ஒருவரி கதையோட்டம் மட்டுமே.  இப்போதைக்கு இது போதுமே!  இதன் அடுத்த தொடர்வு  புதன்கிழமை (07.11.2012) ரிஷபன் சாரின் கைவண்ணத்தில்.. நன்றி!.

50 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா சுழல் தொடரா.... அதுவும், உங்களைத் தொடர்ந்து, ரிஷபன் சார், மூவார் முத்து என்று சிறப்பானவர்கள் எழுதப் போகிறார்கள் என்றால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் தான்.

சுவாரசியமான ஒரு தொடக்கம். அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்.....

நிலாமகள் சொன்னது…

விருந்தின் முத‌ல் ப‌ரிமாற‌லாய் க‌தைத் தொட‌க்க‌ம் விறுவிறுப்பும் சுறுசுறுப்புமாய்... அடுத்த‌ புத‌னுக்கு ஆவ‌லோடு நாங்க‌ள்.

நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும். //

ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!//

உசிரில்லே வெல்லக் கட்டி?//

எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் //

எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒன்றைத் தவிர.//

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே //

ஆராவ‌முது கேர‌க்ட‌ர் செதுக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ரிக‌ள்...

ச‌டுகுடுவில் நான்கு பேரை அடிக்கும் வ‌ரை த‌ம் பிடிக்கும் சிவ‌பாத‌ம் இரும‌லும் இளைப்புமாய் மாறிய‌து கால‌க்கோல‌ம்.

எதிர்பார்த்த‌ இன்னொருத்த‌ன் வ‌ருவ‌த‌ற்குள் என்னென்ன‌ சித்த‌ரிப்புக‌ளோ ஜாம்ப‌வான்க‌ளிட‌மிருந்து!

வைத்த‌ புள்ளிக‌ள் தெளிவாக‌... வ‌ரைய‌ப்ப‌டும் கோடுக‌ளுக்கான‌ எதிர்பார்ப்பை தூண்டிய‌ப‌டி.





raji சொன்னது…

கதைக் களத்திற்கு ஏத்தாப்ல வார்த்தையடல்கள் சுலபமா வந்து விழுந்திருக்கு.எப்படி சார் இப்படி எழுதறீங்க? இதெல்லாம் படிச்சு எனக்கு எழுத்தின் ஒரு சின்ன புள்ளி வந்தா கூட சந்தோஷப் படுவேன்.
சுழல்? அதுவும் அடுத்து ரிஷபன் சார்?
க்ரேட்!!!! அது இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.மூத்த பதிவர் பத்தியோ கேக்கவே வேண்டாம்.மொத்தத்தில் ஒரு அருமையான சுழல் தொடர் படிக்கப் போவதில் மகிழ்ச்சி :-)

ஸ்ரீராம். சொன்னது…

ஆஹா.... இதே போல ஐடியா நானும் யோசித்து வைத்திருந்தேன்! சத்தியமா!

கதையின் ஆரம்பம் அருமை. முடியும் இடத்தின் முடிச்சை அடுத்தவர் அவிழ்க்கிறாரா, இறுக்குகிறாரா என்று பார்க்க வேண்டும்.

ஜீவி சொன்னது…

//இருவருக்கும் நான் சொன்னது ஒருவரி கதையோட்டம் மட்டுமே.//

எழுத்துக்கென்ன வேலி?.. அந்த ஒரு வரி கூடச் சொல்லாமலிருந்தால், வெவ்வேறு வெரைட்டி காட்டும் வர்ண ஜாலமாய் இன்னும் அற்புதமாக இருந்திருக்குமே?..

ADHI VENKAT சொன்னது…

சுழல் தொடரா.... அருமை

ஆரம்பமே ஜோரா இருக்கு....அடுத்து என்னவோ! ரிஷபன் சார் எப்படி கொண்டு போகப் போறாரோ... ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்! உங்கள் ஊக்குவிப்பு எழுத்துக்கு ஒரு டானிக் அல்லவா? நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா! அழகாய் பிரித்து மேய்வீர்களே! ஒரு புது முயற்சி செய்வோமே என்று தான் ஜமா சேர்ந்தோம்.. இன்னமும் தொடருவோம்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய ராஜி! உங்கள் பாராட்டுக்கு என் அன்பும் நன்றியும். நீங்கள் சிறப்பாக எழுதி அல்லவா வருகிறீர்கள் ? என் எழுத்தில் ஒரு புள்ளி உங்களை எழுதத் தூண்டினால் அது எனக்கு வெகுமதி அல்லவா? தொடர்ந்து படியுங்கள்.. கருத்தை சொல்லுங்கள்..

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்! நானும் உங்களைப் போல யோசித்திருக்கிறேன்! அப்போ நானும் சமர்த்து தானே? ரிஷபன் சாருக்கு இதெல்லாம் சுண்டைக்காய்.. அடிக்க போறார் பாருங்க பவுண்டரிக்கு...

மோகன்ஜி சொன்னது…

ஜீ.வி சார் ! வாங்க..
//எழுத்துக்கென்ன வேலி?.. அந்த ஒரு வரி கூடச் சொல்லாமலிருந்தால், வெவ்வேறு வெரைட்டி காட்டும் வர்ண ஜாலமாய் இன்னும் அற்புதமாக இருந்திருக்குமே?..// ஒரு வரிக் கதைன்னா கதை மேலும் வளர நான் பதிவில் கோடிகாட்டியிருந்த இரண்டு மூன்று போக்குகள் பற்றியே.

எழுத்துக்கு இங்கேதும் வேலியில்லை சகோதரா! வர்ணஜாலம் உண்டா இல்லையா என்பது தொடர்ந்த பின் தெரிந்து விடுமே! காத்திருப்போம்.. நன்றி.

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதி.. காத்திருப்போம், கலக்கப் போறாங்க பாருங்க!

sury siva சொன்னது…

கதை முடியப்போவதுபோல இருக்கும்பொழுது தான்
தோன்றியது.
கதை இனிமே தான்
துவங்கப்போகிறது என்று.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்.

கதைகளே மனித வாழ்வின் பரிணாமங்களை
கதைப்பது தானே !!

யம தர்மராஜன் வந்தானா ?
எனக்கு வருவதற்குள்
சொல்லுங்கய்யா சீக்கிரம்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.menakasury.tumblr.com

Matangi Mawley சொன்னது…

Very interesting start... And the "suzhal thodar" idea as well! This is going to blend 3 different styles of writing... The end is going to be worth the wait!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

இது என்ன அக்ரமம் மோகன்ஜி?

சுழல்ல ரிஷபனும், மூவார்முத்தும் எழுதட்டும். அது ஒரு ருசி.

ஆனாலும் நீங்க முழுசா எழ்திமுடிச்சு வைங்க. எல்லாம் முடிஞ்ச பின்னால் தனியா உங்க கதையாவும் வாசிக்கலாம்.
~~~~~~~~~~~~~
நந்தவனத்துல நிலாமகள் பூப்பறிச்சுட்டுப் போனப்புறம் பூக்குடலையோட பொறுமையா வந்தா இந்த கதிதான்.

‘கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறு’

//நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான்.// அப்படியானா உடம்பு த்வஜஸ்தம்பமா இருக்கமுடியுமா குரு?

//மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா.//

//அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”//

//ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.//
~~~~~~~~~~~~~~~~~~~~
ருஜியா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளைல முக்கியமான ஃபோன் வந்து பாதீல எழுந்துபோன மாதிரி இருக்கு இப்ப.

வாங்க ரிஷபன். சுவாரஸ்யமா எழுதிட்டு, உங்க பங்குக்கு முக்கியமான இடத்துல ’தொடரும்’னு போடறதுக்கு.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சூரி சிவா!
/கதைகளே மனித வாழ்வின் பரிணாமங்களை
கதைப்பது தானே !!/

நன்றாய் சொன்னீர்கள். தொடருங்கள்..

மோகன்ஜி சொன்னது…

மாதங்கி! நாம் வலைக் குடும்பம் அழகானது. ஒருவர் இசைப்பதும் ஒருவர் கதைப்பதும் ஒருவர் ரசிப்பதுமாய் கொண்டாடி வருகிறோம்..

ஒரு சேர்ந்திசை முழக்கினால் என்ன என்ற எண்ணம் தான் இது.

பங்கேற்றலே அனைத்தினும் பிரதானம்

மோகன்ஜி சொன்னது…

அன்பு சுந்தரா!

//சுழல்ல ரிஷபனும், மூவார்முத்தும் எழுதட்டும். அது ஒரு ருசி.

ஆனாலும் நீங்க முழுசா எழ்திமுடிச்சு வைங்க. எல்லாம் முடிஞ்ச பின்னால் தனியா உங்க கதையாவும் வாசிக்கலாம்.//

எதுக்கு இந்த கொலைவெறி? அந்த ரெண்டு ஜாம்பவான்களும் எழுதினப்புறம் பூனை மாதிரி நான் மியாவ்னு கத்தணுமா ? என் சாயம் வெளுத்துடாதோ?

ரசிகமணி! உன் ரசனையின் ரசிகன் நான்!

RVS சொன்னது…

அடேங்கப்பான்னு வாய் பிளக்க தான் என்னை மாதிரி சாமானியனுக்கெல்லாம் முடியும். அப்படியே கதைக்குள்ள படிக்கறவங்களைக் கொண்டு வந்து நிறுத்திடறீங்க ஜி!

அடுத்து வர்ற ரெண்டு பேரும் இன்னும் கலக்குவாங்க என்கிற எதிர்பார்ப்புடன்..

அனா ஆவன்னா மட்டும் எழுதத்தெரிந்த அன்பு ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

//அனா ஆவன்னா மட்டும் எழுதத்தெரிந்த அன்பு ஆர்.வி.எஸ்.//

அன்புக்கு அனா, ஆனாவோ ஆர்.வீ.எஸ்சுக்கு. நல்லாத்தான் இருக்கு. இவ்ளோ தன்னடக்கம் ரொம்ப டூ மச். மச்சினரே!

ஆர்.வீ.எஸ்ஸின் பையோக்ராபியை எழுத எனக்கும், அப்பாதுரைக்கும், பத்மநாபனுக்கும் நடுவுல பெரும் போட்டியே நடக்குது தெரியுமா?
நீங்க என்னடான்னா அனா ஆனான்னுக்கிட்டு.

Geetha Sambasivam சொன்னது…

நேத்திக்குத் தான் இந்தச் சுழல் தொடர் குறித்து அறிந்தேன். அருமையான ஆரம்பம். ரிஷபனும் எழுதி இருப்பார். அங்கேயும் போய் வாசிக்கணும். மற்றபடி விமரிசனம் செய்யும் அளவுக்குத் தகுதி எல்லாம் எனக்கு இல்லை. வாழ்த்துகள்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதா சந்தானம் மேடம்! ரிஷபன் வரும் புதனன்று தொடருவார். நீங்களும் தொடருங்கள்...

Geetha Sambasivam சொன்னது…

Hi, I am GEETHA SAMBASIVAM. not GEETHA SANTHANAM :)))))) she did not comment in this post. :)))))

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் காரு!சாரி! சாரி! கொஞ்சம் உளறிட்டேன் மேடம்! நீங்கதான்... நீங்களேதான் நான் குறிப்பிட்டது..

உங்க யானைக்குட்டி ரொம்ப அழகா இருக்கு...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுழல் தொடர்
சுழன்றடிக்கும்
சம்பவங்களால் நிறைந்த சிறப்பான தொடரின் அருமையான ஆரம்பத்திற்குப் பாராட்டுக்கள்..

G.M Balasubramaniam சொன்னது…


சுழல் தொடர் என்னும் ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது. கற்பனையில் என்னென்ன புள்ளிகள் போட்டிருக்கிறீர்களோ பின்னவர்கள் தொடரும்போது கோலம் வேறு புள்ளிகளை மையமாய்க் கொண்டிருக்கலாம். உங்களுடைய ஒரு வரிக் கதை கோலம் என்று மட்டும்தான் கூறியிருக்க முடியும். புள்ளிகள் இடுவதும் இணைப்பதும் மற்றவர்கள கையில் மூவரும் ஆளுக்கொரு ரவுண்ட் மட்டும்தானா , இல்லை நீங்கள் மீண்டும் வருவீர்களா. ரசிக்கக் காத்திருக்கிறேன். ஒரு முறை ஜீவி ஒரு கதையை இப்படித்தொடங்கலாம் என்று கூற அவரே எதிர்பாராத வகையில் நான் ஒரு கதை எழுதியது நினைவுக்கு வந்தது.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ராஜேஸ்வரி மேடம்!உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!தொடர்ந்து படியுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! புள்ளிகளையும் கோலத்தையும் அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

குழந்தைகள் கலைத்த கோலம் கூட அழகாய்த்தான் இருக்கும்..

எழுத்தின் வலிமையே.. படைப்புகளின் ஈர்ப்பே கூட இந்தப் பன்முகத் தன்மை தானே? தொடர்ந்து படியுங்கள்..நன்றி சார்!

sury siva சொன்னது…

இன்னுமா வரலை?

ஒரு வேளை அவரும் ஓபாமாவா, ரோம்னியா என்று ஒரே டென்ஷன்லே இருக்காரோ
என்னவோ ?

அந்த ரிசல்ட் தெரிஞ்சப்பறம் தான் வருவாரோ ?

இல்லைன்னா அவரோட வாகனம் ( எருமை காரு ) இன்னிக்கு ஆஃப் ஆ?

ஸாரே ! எதுக்கும் வந்த உடனே எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க...
நான் வந்து ஒரு ஹலோ சொல்லணும்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.in

மோகன்ஜி சொன்னது…

பெருந்தலைவர் வரும் போது வரட்டும்.. அதுவரை ரங்கா ரங்கான்னு கிடப்போமே!

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்

எற்றி நமன்தமர் பற்றும் போது,

நில்லுமி னென்னு முபாய மில்லை

நேமியும் சங்கமு மேந்தி னானே,

சொல்லலாம் போதேயுன் நாம மெல்லாம்

சொல்லினே னென்னைக் குறிக்கொண் டென்றும்,

அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளி யானே!

கதம்ப உணர்வுகள் சொன்னது…

ஆரம்பமே களைக்கட்டுதே... அந்தக்காலத்துல தொலைக்காட்சி தொல்லை இல்லை... பெண் பிள்ளைகள் அடுப்படி, பூவேலை, தையல் அப்டின்னு இருக்க... ஆண்பிள்ளைகளின் பொழுதெல்லாம் இப்படி விளையாடி விளையாடி தான் தீர்க்கிறது போலும்...எடுத்ததுமே சினிமா டைட்டில் சாங் போல கோதாவில் இறங்குமுன்.... பண்டு பழையப்பாட்டு வரிகள் போல ஆஹா... உத்தி உத்தி கம்மங்கட்டு.... தொடக்கமே ரசிக்கவைத்தது மோகன் ஜீ...

சிவபாதம் தான் நம்ம கதையின் ஹீரோன்னு தெரிஞ்சுப்போச்சு.... ஆனா அடாவடி ஹீரோவாக ஒரு க்ரூப்ல எல்லாருமே ஸ்மார்ட்டா இருக்கமாட்டாங்க.. நம்ம ஆராமது போல பயந்து பயந்து... சிவபாதம் போல தடாலடியா பாய்ந்து எல்லாரையும் களமிறங்கி வதம் செய்துட்டு வெற்றி வாகை சூடிடும் ஏகலைவன் போல? அதனால தான் ஆராமுது வீட்டில் சேரக்கூடாதுன்னு சொல்லி இருப்பாங்களோ? இல்ல அவனும் அவன் மூஞ்சியும் அப்டின்னா??? கோபத்தில் சொல்லி இருப்பாங்க போகட்டும்... ஆனா சிவபாதம் சகவாசமே வேணாம்னு சொல்றது எதனாலயா இருக்கும்??? கண்டிப்பா ரிஸ்கை ரஸ்க் போல சாப்பிடும் கேரக்டர் சிவபாதம்னு முதல் பத்தி படிச்சதுமே தெரிஞ்சுப்போச்சு..

கதம்ப உணர்வுகள் சொன்னது…

கதை என்றோ எத்தனையோ வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை ஆராமுது மூலமாக நமக்கு தெரியக்கொடுக்கிறார்னு தெரிந்துவிட்டது... ம்ம்ம்ம்ம் அடுத்து?? ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா முப்பது வருஷத்துக்கு முன்னாடி ரெண்டும் கெட்டான் வயதில் ஒன்னா விளையாடி களித்த பொழுதுகளை அசை போடறதா இருந்தா அதை அவர் வீட்டிலயே உட்கார்ந்து போட்டுட்டு இருந்திருக்கலாமே ஏகாந்தத்தில் கண்களை மூடிக்கொண்டு... ஆனா என்னவோ மனசுல இருக்கு ஆராமுதுக்கு கண்டிப்பா... அதனால தானோ என்னவோ முப்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை ஆராமுது நினைக்கும்போது கோபமும் இழையோடுவதை அறியமுடிகிறது.... அது சரி... பங்கஜம் தான் ஆராமுதுவோட பெட்டர் ஆஃபாக்கும்.. நல்ல ப்ரஹஸ்பதி புண்ணியவதி புருஷனை என்ன தைரியமா கெழட்டுப்பொணம்னு சொல்றா யப்பா... வயசானாலேயே மரியாதை குறைஞ்சிடுமா என்ன? இல்ல பாரியா பர்த்தாவின் இடையில் மரியாதை தான் எதுக்குன்னு இருக்கிறாளோ என்னவோ...

சாகறதுக்கு முன்னாடி யாருக்குமே இப்படி ஒரு எண்ணம் இல்ல இல்ல ஒரு வெறி இருக்கத்தான் செய்யும். நம் உசிரு நம் மண்லயே போனா தான் என்னவோ டைரக்டா சொர்க்கம் போயிடுவோம்னு நினைப்பதாலா? ஹுஹும் கிடையவே கிடையாது.. நம்ம வீட்டிலயே, நம்ம முற்றத்துலயே, நம் நெருங்கின சொந்தங்கள் நட்புகள் எல்லோரும் அருகே இருக்க எல்லோரையும் பார்த்த திருப்தியில் மனசு ஒரு செகண்ட் மூச்சு விட மறந்து போற நேரத்துல இதான் சாக்குன்னு காத்திருக்கும் யம கிங்கரர்கள் பாசத்தை வீசி உசிரை பிடிச்சுக்கிட்டு கொண்டு போயிடறாங்கப்போல???

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அந்த காலத்து உணவு எப்படி எல்லாம் மனுஷாளை உயிர் போகாம கடைசி நொடில கூட மூச்சை இழுத்தி நிறுத்தி வைக்கிறதே அப்டின்னு நினைச்சா ஹுஹும் தப்பு.. மனசுல இருக்கும் நிறைவேறாத ஆசைகளோ விருப்பமோ அதான் நிறுத்தி வைப்பது.. பங்கஜத்தோட டயலாக் மோகன் ஜி அட்டகாசமா எழுதி இருக்கீங்க.. கெழட்டு பொணத்துக்கு பாம்பு காது அடேங்கப்பா எத்தனை கூர்மை.... பானை வயிறு எவ்ள சாப்பிட்டாலும் போறலை போலிருக்கே.. இந்த வசனம் ரொம்ப ரசித்தேன்பா.. “ நோக்காடெல்லாம் குரங்கு மனசுக்கு தான் உடம்பு துவஜஸ்தம்பம் தான் “ அப்படின்னா மனசு மரத்துக்கு மரம் தாவற குரங்கு போல எண்ணங்களை கயிறு கட்டி இழுக்க முடியாத அளவு தூரம் பயணிக்கிறதோ என்னவோ? அந்த அலுப்பும் அயற்சியும் தான் முனக வைக்கிறதோ? உடம்பு நல்லாதான் இருக்காமே... துவஜஸ்தம்பம் தான் ஆஹா எங்கருந்து இப்படி வார்த்தைகள் தேடி தேடி பிடிக்கிறீங்க மோகன் ஜி? துவஜஸ்தம்பம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப வருஷத்துக்கு முன்னாடி பாட்டி சொல்லக்கேட்டிருக்கேன்.. தூண் தூண் தானே?? அத்தனை உறுதியா உடம்பு இருக்கிறதுனால தான் பாம்பு காதாவும், எதை சாப்பிட்டாலும் ஜீரணிக்கிற பானை வயிறாவும் இருந்திருக்கு ஆராமுதுக்கு....


ஆராமுது 24 வயசா இருந்தப்பவும் ரோடு இந்தகதி தான்... இத்தனை வருஷம் ஆனப்புறமும் ரோடு பல்லாங்குழியா தான் இருந்திருக்குது... ராமா ராமா... இந்த ரோட்டுக்கு மட்டும் இன்னும் அகலிகைக்கு கிடைச்ச மாதிரி சாபவிமோசனம் கிடைக்கலையே.. ஆராமுதை குலுக்கி எடுக்கிறதாக்கும்.... செய்றதை எல்லாம் செஞ்சுட்டு என்ன தைரியம் ஊருக்கு வர அப்டின்னு யாரு கேப்பா?? ஆஹா கதைல நைசா பொடி வெச்சுட்டீங்களே மோகன் ஜி. தலைய பிச்சுக்க வேண்டியது தான் என்னவா இருக்கும் அப்டின்னு....

ஆராமுதுக்கு எப்படி எல்லாம் சந்தேகம் வருது யப்பா. ஆனா அந்த டௌட் நியாயமானது தான் கண்டிப்பா...இத்தனை வயசாகி தொண்டு கிழமாகி நாடி நரம்பெல்லாம் தளர்ந்து மறதி அதிகமானது போல ஆராமுது நண்பர்களுக்கும் இதே நிலை தானே... அதான் இந்த யோசனை.... ஆஹா வயசானதை எப்படி எல்லாம் எழுதி இருக்கீங்கப்பா... இதே வயதுடையவர் இவருடன் இருந்தவர்களில் பலர் அமாவாசையான எள்ளுஜலம் வாங்கிண்டு போட்டோல யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா... ம்ம்ம்ம்ம் அப்புறம்??? பேரப்பிள்ளைகளோட பேருல ஒட்டிண்டு... ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்?? என்னது இது.. செத்தவாளைப்பத்தி தப்பா பேசப்படாதோன்னோ? ஆராமுது ஏன் இத்தனை கோபமா சொல்லிண்டிருக்கார்? ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும். அவர்களால பாதிக்கப்பட்ட வெறியும் வேதனையும் விரக்தியும் எரிச்சலுமா??

கதம்ப உணர்வுகள் சொன்னது…

வயசானப்பின் வரும் சிரமங்கள் எல்லோருக்கும் ரொம்ப அவஸ்தையானவை... முதலில் வீட்டிலேயே மரியாதை குறைவது மகன் மருமகள்ல தொடங்கி பொண்டாட்டி வரை அஃறிணைல அழைப்பது... அது அது அப்டின்னு... வயசானவங்க வீட்டில் இருப்பதை ஒரு துச்சமா நினைத்து தன் இஷ்டப்படி இருப்பது... தடுக்கவோ அறிவுரை செய்யவோ நினைத்தால் என்னவோ பெரிய க்ரஹச்சாரம் அனாச்சாரம்னு காதை பொத்திண்டு இவாளை கொடுமைப்படுத்தி முத்தத்துலயோ இல்ல ஒண்டு சந்துலயோ அவங்களோட ஜாகைய மாத்திடறது... கொடுமைப்பா... ஆராமுது எவ்ளோ சோகமா சொல்லி இருக்கார் பாருங்க... ஆம்படையாக்கிட்ட, புள்ளைக்கிட்ட, மருமகக்கிட்ட எத்தனை அவமானப்பட்டாரோ... உடம்பும் மனசும் பலகீனமானதும் வார்த்தைகளை ஏத்துக்கும் பக்குவத்துக்கு மனசை எருமைமாட்டு தோலாக்கிக்கிறாங்க. ஹூம்.... இல்லன்னா உசிரு கவரிமான் ஜாதியா போயிருந்திருக்குமே.. அப்டி பார்த்தா நாட்டுல 75 பர்செண்ட் முதியோர்கள் முதியோர் இல்லம் போயிருந்திருக்கமாட்டாங்க. உயிரை விட்டிருப்பாங்க.. ஹூம்..

வருஷம் எத்தனை ஆனாலும், என்னென்ன மாறினாலும் நம்ம சுதந்திர ஆண்கள் சுவற்றை பார்த்தால் உடனே சித்திரம் போடுவதை நிறுத்தவும் மாட்டாங்க. திருத்திக்கவும் மாட்டாங்க.. மாத்திக்கவும் மாட்டாங்கன்னு இந்த வரில தெரிஞ்சுட்டுது... இல்லன்னா பஸ் ஸ்டாண்டுனு ஆராமுதுக்கு தெரியாம போயிருந்திருக்குமே..

ஆட்டோக்காரனுக்கு எங்க 30 வருஷ முன்னாடி இருந்த தெரு தெரியப்போறது. வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு போனாலே மாற்றங்கள் எத்தனை வேகமா பயங்கரமா ஆகிட்டு இருக்குன்னு மிரண்டு இருக்கேன் நான்... ஆட்டோக்காரன் டயலாக் செம்ம அசத்தல் மோகன் ஜி... எப்டி எப்டி ?? வெளங்காத ஊரா?

ஆராமுது போலவே இன்னொரு பாம்புகாது ஹாஹா.. அப்டின்னா அவரும் அந்த காலத்து மனுஷா போலிருக்கு. அதான் சட்டுனு அட்ரஸ் சொல்லிட்டு.. க்யூரியாசிட்டி பாருங்க. அங்க யாரை பார்க்கனும்? இவரு அதுக்கு மேலே சொல்லலாமா வேணாமான்னு யோசிச்சதோட நிக்காம கிட்டின சொந்தமாம்ல?

பாம்புகாது சும்மா இருக்குதா பாரேன்..... கிட்டின சொந்தமாஆஆஆஆஆஅ? ஆனா நீங்க பிராம்மணாள் போல இருக்கேளே... நொட்டை சொல்லியே பழக்கப்பட்டு... ஊர்வம்பு பேசியே பொழுதைப்போக்கி.... அடுத்தவீட்டில் என்ன நடக்குதுன்னு காதை முழ நீளத்துக்கு அடுத்த வீட்டில் கொடுத்துட்டு இருக்கும் இது போல பாம்புகாது ஆளுங்களால தான் எத்தனை அவஸ்தை.... கொண்டான் கொடுத்தானாம்? அதென்னப்பா... புது புது வார்த்தைகள் மோகன் ஜி .. இப்ப தான் கேட்கிறேன். இதுக்குமுன்னாடி எங்கயோ ஒரு படத்துல படம் நினைவுக்கு வரமாட்டேங்குதே.. கலைஞரின் பேரன் ஒரு பையன் நடிச்ச படத்துல ஒரு வார்த்தை வருமே.. அந்த படம் பார்த்துட்டு கொஞ்சநாளைக்கு நானும் என் மகனும் இதே வரியை சொல்லி சொல்லி எல்லாரையும் உண்டு இல்லன்னு ஆக்கினோம்பா... நல்ல வசனம்பா அது. இதை படிச்சதும் அது தான் நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு போனதும் பிள்ளையை போன் செய்து கேட்கனும்... என்னமா எழுதுறீங்கப்பா.. இடை இடையே இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் கதைக்கு இடையே சுர்ர்ர்ர்ர்ர்ருனு பச்சைமிளகாய் கடிச்ச ருசி போல் அத்தனை அருமைப்பா.... ரசிக்க வைத்தது...

கதம்ப உணர்வுகள் சொன்னது…

இத்தனை வருஷம் கழிச்சு அவமானம் மட்டும் மாறலைன்னு ஆராமுது சொல்லும்போது “ இந்த கதையின் உயிர்நாடியே இந்த ஒரு வார்த்தையில தான் இருக்கு “ என்னமோ நடந்திருக்கு பெரிதாய் உயிரா மானமான்னு பார்த்து உயிரை விட நாம ஒன்னும் கவரிமான் ஜாதி இல்லையே.. மானத்தை இழந்து சொந்த ஊரை விட்டு ஓடினவரா இருந்திருப்பார் போல....

சிவபாதத்தின் எண்ண அலைகளும் ஆராமுது எண்ண அலைகளும் அடிக்கடி சங்கமித்து மோதிக்குமோ? அந்தராத்மா அலறியதுன்னா?? காத்துட்டு இருந்திருக்காரா... இத்தனை வருஷமாவா? சினிமா பார்ப்பது போல் செம்ம ஃப்ளோ மோகன் ஜி...

இரண்டு பேர்னு சொன்னது மரணத்தையா? இல்ல ஆராமுதுவுக்கு செய்தது போல யாராவது தர்மராஜனுக்கு எதுனா செய்திருப்பாரோன்னு படிக்கிறவங்க குழம்பி போயிடாமல் இருக்க யமதர்மராஜன்னு முடிச்சது நிம்மதி....

செம்ம கதைக்களம் மோகன் ஜி... பரந்த இந்த மேடை உன்னுடையது.. இந்த நாள் உன்னுடையது... ஆடு.... ஆடு.... சதிர் கட்டி ஆடி தீர்த்திட்டீங்கப்பா... இனி ரிஷபன் அடுத்து என்ன எழுதப்போறார்னு படிக்க போகிறேன்பா...

அருமையான விஷயம் சுழல் தொடர்ச்சி.... ஜாம்பவான்கள் மூணு பேரு.... ஆட்டத்தை ஆரம்பிச்சு வெச்சிட்டீங்க... இதோ அடுத்து ரிஷபன்...எளிமையா திடுக் திடுக்னு ஒருவரி கொடுத்து திக்குமுக்காட வைப்பார்.... அடுத்து ராமமூர்த்தி சார்.. நையாண்டியான எழுத்துகள் ரசிக்க வைக்கும்..

பாசந்தி ருசிக்க அடுத்து அடுத்தடுத்து கொடுத்தால் சுவைக்க கசக்குமா என்ன? ரசிப்போம்பா.. முப்பெரும் தேவருக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்...

மாதேவி சொன்னது…

தொடக்கம் அசத்தலாக இருக்கின்றது.

மோகன்ஜி சொன்னது…



அடாடாடா! யாராவது மஞ்சுபாஷிணிக்கு சுத்திப் போடுங்களேன்! என் கதையா விட இந்த பின்னூட்ட சங்கிலி தான் சுவையாக இருக்கு..

you are a Writer's delight madam!

மோகன்ஜி சொன்னது…

மாதேவி! இப்போதான் முதல் தடவையா வானவில்லுக்கு வரீங்களோ? தொடர்ந்து படிங்க.. நன்றி!

Aathira mullai சொன்னது…

முன் போல மீண்டும் கச்சேரி களை கட்ட ஆரம்பித்து விட்டது.

கலாட்டா தொடரட்டும்..

இந்தப் பதிவை போட்ட அன்றே படித்து விட்டேன். பின்னூட்டம் இட நேரமின்றி சென்று விட்டேன்..
மழை நாள் மாலையில் மொட்டை மாடியில் நின்று ஒரு கப் தேநீர் அருந்தும் விறு விறு

சிவகுமாரன் சொன்னது…

மோகன் அண்ணா....தாமதத்திற்கு மன்னிக்கவும்.
கபடி ஆட்டம் ஆடிய காலத்திற்கு அழைத்து செல்லும் கால இயந்திரமாய் சீறிப் பாய்கிறது கதை.
|||அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!///
\\\\உசிரில்லே வெல்லக் கட்டி?/////
வரிகளில் சொக்கிப் போனேன்

(ஏங்க மஞ்சு மேடம் ....நாங்கெல்லாம் பின்னூட்டம் இடறதா வேண்டாமா? இப்படி பொளந்து கட்டுறீங்க ? )

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதிரா! பின்ன கச்சேரில வாசிக்கறது சிக்கல் ஷண்முகசுந்தரமும்,கோடையிடி தவிலூமாயிற்றே. (ஒத்து நானாக்கும்)

மோகன்ஜி சொன்னது…

சிவா!
//மோகன் அண்ணா....தாமதத்திற்கு மன்னிக்கவும். //

அண்ணனுக்கு ஏத்த தம்ப்ரி!

//ஏங்க மஞ்சு மேடம் ....நாங்கெல்லாம் பின்னூட்டம் இடறதா வேண்டாமா? இப்படி பொளந்து கட்டுறீங்க ? //

அழகா மனசார எழுதுராங்க.... படிக்க சந்தோஷமா இருக்கு... இன்று போல் என்றும் வாழ்க மஞ்சு மேடம்..

ஹூம்... அந்த காலத்துல என் மச்சினர் ஆர்.வீ.எஸ் இப்படித்தான் வரிஞ்சு கட்டிக்கிட்டு பின்னூட்டம் போடுவாரு. பத்மநாபனோ அவரைக் கிளறி விடுவாரு.

இப்பல்லாம் ஆர்.வீ.எஸ்ஸின் பின்னூட்டமெல்லாம் டயபடீஸ்காரன் மூச்சா போறாப்புல கொஞ்சமாதான் போராரு.. சாரி! போடுராரு.

பத்துவோ ஆளையே காணோம்.. நீயானா லேட்டா வாரே! தம்பிகளா... என் தம்பிகளா!

நிலாமகள் சொன்னது…

பின்ன‌ழ‌கை... ச்சே... பின்னூட்ட‌ அழ‌கை ரசிக்க‌ வ‌ந்தேங்ண்ணா! 'ப‌டி'த்தேன், விய‌ந்தேன்(ம‌ஞ்சு), ர‌சித்'தேன்' (உங்க‌ ம‌றுமொழிக‌ளை)

மோகன்ஜி சொன்னது…

நிலா!

சாண்டில்யன் தான் பின்னூட்டம் போட்டுட்டாரோன்னு நினைச்சேன்..

நல்லா ரசிச்சீங்க போங்க...

அப்பிடியே 'ஷாக்காயிட்டேன் '

கதம்ப உணர்வுகள் சொன்னது…

//மோகன்ஜி சொன்னது…


அடாடாடா! யாராவது மஞ்சுபாஷிணிக்கு சுத்திப் போடுங்களேன்! என் கதையா விட இந்த பின்னூட்ட சங்கிலி தான் சுவையாக இருக்கு..

you are a Writer's delight madam!//

மனம் நிறைந்த அன்புநன்றிகள் மோகன் ஜி... நீங்களானா இப்படி சொல்றீங்க.. அங்க என் தங்கையும் என் பிள்ளையும் என்னை துவம்சம் பண்றாங்கப்பா...ஒரே கிண்டல் மயம் இன்னைக்கு போன் செய்து என்னை...

கதம்ப உணர்வுகள் சொன்னது…

//சிவகுமாரன் சொன்னது…
மோகன் அண்ணா....தாமதத்திற்கு மன்னிக்கவும்.
கபடி ஆட்டம் ஆடிய காலத்திற்கு அழைத்து செல்லும் கால இயந்திரமாய் சீறிப் பாய்கிறது கதை.
|||அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!///
\\\\உசிரில்லே வெல்லக் கட்டி?/////
வரிகளில் சொக்கிப் போனேன்

(ஏங்க மஞ்சு மேடம் ....நாங்கெல்லாம் பின்னூட்டம் இடறதா வேண்டாமா? இப்படி பொளந்து கட்டுறீங்க ? )//


காதல் கிளிகள் நான் கொஞ்சம் லேட்டா வந்து படிச்சா அங்க ஜுகல்பந்தி நீங்க எல்லாரும் நடத்தினதை அன்புடன் நினைத்து பார்க்கிறேன்பா சிவகுமாரன்... என்ன அருமையான பின்னூட்ட வரிகள் ஒவ்வொருவரும் சளைக்காமல் இட்டது எல்லாம் அசத்தல் தெரியுமோப்பா?

கதம்ப உணர்வுகள் சொன்னது…

// மோகன்ஜி கூறியது...


//ஏங்க மஞ்சு மேடம் ....நாங்கெல்லாம் பின்னூட்டம் இடறதா வேண்டாமா? இப்படி பொளந்து கட்டுறீங்க ? //

அழகா மனசார எழுதுராங்க.... படிக்க சந்தோஷமா இருக்கு... இன்று போல் என்றும் வாழ்க மஞ்சு மேடம்..//

மனம் நிறைந்த அன்புநன்றிகள் மோகன் ஜி...

காதல் கிளிகள் படிச்சு கருத்திட வந்தப்ப எனக்கு அழுகையே வந்துட்டுது... வர கொஞ்சம் தாமதம் ஆனால் எல்லாரும் இப்படி அசத்தலா போட்டு தாக்குறாங்க.... நான் மட்டும் லேட் கமர் என்று.... இதுலயும் லேட் கமர் தான் நான்...

கதம்ப உணர்வுகள் சொன்னது…

//நிலாமகள் சொன்னது…
பின்ன‌ழ‌கை... ச்சே... பின்னூட்ட‌ அழ‌கை ரசிக்க‌ வ‌ந்தேங்ண்ணா! 'ப‌டி'த்தேன், விய‌ந்தேன்(ம‌ஞ்சு), ர‌சித்'தேன்' (உங்க‌ ம‌றுமொழிக‌ளை)//

அச்சச்சோ.... யூ டூ நிலா? :-)

ஓகே ஓகே.... ஒரு ஃப்ளோல சொல்லிட்டீங்களாக்கும்...

மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா நிலா...

மோகன்ஜி சொன்னது…

பின்னூட்டத்துக்கு பின்னூட்டமிடும் பேரழகே!(மஞ்சு மேடம் ! நிலா வைரஸ் என்னையும் தாக்கிடிச்சு! ஒரு ஃப்லோல எப்பிடில்லாம் வருது பாருங்க?!)

உங்கள் ஸ்வாரஸ்யமான கருத்துக்களை நம் பதிவர் நண்பர்கள் எப்படி எதிர்பார்க்கிறோம் தெரியுமா? நீங்கள் ஏதும் பதிவு போடவே தேவையில்லை.. உங்கள் விஸ்தாரமான கருத்துக்களே பல வலைப் பூக்களில் சாஸ்வதமாய் உங்கள் இருப்பைத் தெரியப் படுத்திக் கொண்டேயிருக்கும்.. உங்கள் சேவையைத் தொடருங்கள்..

என் சில நண்பர்கள் எனக்கு சொல்வது என்ன தெரியுமா? 'உனக்கு சொல்ல எவ்வளவோ இருக்கும் போது உன் சொற்ப நேரத்தினையும் பின்னூட்டங்களில் செலவழிக்கிறாய்' எனும் குற்றச் சாட்டே? இருப்பினும் பின்னூட்ட பரிமாற்றங்கள் தவிர்ப்பதை என்னால் யோசிக்கவே முடியவில்லை..

பதிவுகள் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு..
கருத்து பரிமாற்றங்களோ.. ரசனையின் பகிர்தல். அவை உறவுகளை,படைப்பின் நேர்த்தியை,ரசனையை இன்னமும் மேம்படுத்துகின்றன மஞ்சு பாஷிணி!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.!

கதம்ப உணர்வுகள் சொன்னது…

ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க மோகன் ஜி.. ஆமாம்... படைப்புகள் பதிவதை விட கருத்துகள் எழுதுவது இஷ்டம்....

மனம் நிறைந்த அன்பு தீபாவளி நல்வாழ்த்துகள் மோகன் ஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா....