புதன், பிப்ரவரி 11, 2015

கிளாரினட்


இன்று இரவு தொலைக்காட்சியைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது, தூர்தர்ஷன் பாரதியில் AKC நடராசன் அவர்களின் கிளாரினட் இசை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ‘பஹுதாரி’ ராகம். சுகமான வாசிப்பு. என் நினைவுகளோ பின்னோக்கி விரைந்தன.

கடலூரில் கெடிலநதிக் கரையில் ஒரு பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலொன்று உண்டு. அக்கோவிலில் இலட்சதீபம் வருடாவருடம் ஏற்றப்பட்டு விமரிசையாக நடக்கும். சிறுவனாய் நான் அப்பாவுடன் அங்கு போவதுண்டு.

ஒரு வருடம் லட்சதீபத்தின்போது AKC நடராஜன் அவர்களின் நிகழ்ச்சி இருந்தது. பிராபல்யத்தின் உச்சத்தில் அவர் இருந்த நாட்கள் அவை. என் அப்பாவின் சங்கீதரசனையில் AKCயின் கிளாரினட்டுக்கு தனிஇடம் உண்டு. மேடையின் மிக அருகிலிருந்தபடியால், அவர் கால்பாதத்தால் தாளம்போட்டபடி வாசித்ததும், அந்த கால்தாளம் பற்றி அப்பாவைக் கேட்டதுவும், பின்னாளில் தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி நாயனம் வாசிக்கும்போது காலால் தாளம்போடுவதை கவனித்து சிலாகித்ததும் நினைவுக்கு வந்தது. இன்று அதே கால்தாளத்தை AKC போடுவதை தொலைக்காட்சியில் பார்த்தபோது அப்பா வாசனை என்னை சுற்றிப்படர்ந்தது.

சில வருடங்களுக்குமுன், நான் திருச்சியில் பணியாற்றிய நாட்களில் AKCநடராசன் அவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்தது. அப்பாவைப் பற்றியும் அந்த இலட்சதீபம் பற்றியும் அவரிடம் பிரஸ்தாபித்ததுண்டு. பழகுவதற்கு இனிமையான கலைஞர் அவர்.

கிளாரினட் பதினேழாம் நூற்றாண்டு இறுதியில் உருவானது.பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும்  பல்வகை இசைகளிலும் வாசிக்கப் பட்டது. இதில் சில வகைகளும் உண்டு.
இது  நம் நாதஸ்வரத்தின் தங்கை என சொல்லலாம். 

தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டபோதுதான் கிளாரினட் சதிர் கச்சேரிகளுக்கு இங்கு முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தேவார ஓதலுக்கும் கிளாரினட்டை பின்னிசையாக உபயோகப்படுத்தினார்கள். அதற்கு நாதஸ்வரம் போல் ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி, கர்னாடக இசையுலகிற்கு கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு AKC ஐயா அவர்களுக்கு உண்டு. இவருடைய வளர்ச்சியிலும் வாசிப்பின் நுணுக்கங்களுக்கும் அவருடைய குருநாதர் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளைக்கு பெரும்பங்கு உண்டு. இவர் ஏறாத மேடைஇல்லை, வாசிக்காத கோவில்இல்லை எனும்படி இவருடைய மேதைமை கொண்டாடப்பட்டது. பல நாடுகளுக்கு சென்று தன் இசைக்கொடியை நாட்டி வந்தவர் AKC ஐயா அவர்கள்.

பக்கவாத்யமாய் தவில் மட்டுமின்றி, மிருதங்கத்தை சேர்த்துக் கொண்டும், ஜுகல்பந்தி முறையில் பிற வாத்யங்களோடு கூட்டிசை முயற்சிகளையும் மேற்கொண்டவர். இசையே தானாக மாறிப்போனவர். அவர்  எதைப்பற்றி பேசினாலும் அது இசையைப் பற்றியே முடியும்.

கிளாரினெட் எளிதாக வாசித்துவிடக்கூடிய வாத்தியம் அல்ல. நாதஸ்வரம் போலல்லாமல், ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு ‘கீ’ இருக்கும். அவற்றில் விரல் பதித்து வாசிக்கும் போது விட்டுவிட்டு கேட்காமல் நாதஸ்வரம்போல் நாதத்தின் குழைவைக் கொண்டுவருவதற்கு அசுரசாதகம் வேண்டும். AKC அவர்களின் நாதஸ்வர அப்யாசமும், வாய்ப்பாட்டு படாந்தரமுமே அவரை இந்த இசைக்கருவியின் முடிசூடா மன்னனாக நிறுத்தியது.

இன்று கிளாரினட் வாத்யம் எந்த சபாவில் தனிக்கச்சேரியாக ஒலிக்கிறது? இல்லை என்பதே வேதனையான பதில். அவ்வளவு ஏன்? நாதஸ்வரம் திருமணமண்டபங்களிலும் கோவில்களிலும் மங்களஇசை என்ற அளவிலேயே வாசிக்கப்படுகிறது. அந்நாள் போல் முழுநேரக் கச்சேரிக்கு ஏற்பாடுகளும் அருகிவிட்டன. கேட்பார்கூட குறைந்துதான் போய் விட்டார்களோ? இந்தக் குறுக்கத்தினால் இந்த இசையை கற்பவர்கள் கூட சொற்ப அளவிலேயே இருக்கிறார்கள்.

இந்த இன்டர்நெட் யுகத்தில், சினிமா சங்கீதம், தொலைக்காட்சி இசைப் போட்டிகளுக்கு பழகிப்போனக் காதுகள், பாரம்பரிய இசையை கேட்காது என்பது சரியான வாதமல்ல. இந்த இசைக்கிளர்ச்சிகளையையும் மீறி, இந்த அசுரகதியில் இயங்கும் வாழ்க்கையின் அயர்ந்துஓயும் தருணங்களில், நம் பாரம்பரிய இசையே ஒரு மயிலிறகு வருடலாய் ஆதூரம் தரும். சம்பந்தப் பட்டவர்கள் ஆலோசித்து இவற்றை மீண்டும் செழிக்கவிடல் வேண்டும். இந்த பாரம்பரிய இசையில்  நம் கிராமிய வாத்யங்களும் அடங்கும். அடுத்த தலைமுறை இவைபற்றி கூகுளில் தேடித்படித்து தெரிந்துகொள்ளாமல், கேட்டும் இன்புற வேண்டும் அல்லவா?



( AKC அவர்களின் புகைப்படம் GOOGLEக்கு  நன்றியுடன்) 






24 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடிவில் சொன்னது நடக்குமா என்று தெரியவில்லை...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

இசைக் கருவிகளை இயக்குபவர்கள் கைகளால் தாளம் போட முடியாது..
அதனால், வலது காலால் தான் தாளம் போடுவார்கள்!
நான் கூட ப்ளூட் வாசிக்கும் போது, வலது காலால் தாளம் போட்டிருக்கிறேன்...
தப்பு தப்பாக!

ஸ்ரீராம். சொன்னது…

கிளாரினெட், சாக்ஸபோன் போன்ற வாத்தியங்கள் அவ்வளவாகக் கேட்பதில்லை. அவ்வளவாக என்ன, கேட்பதே இல்லை. மாண்டலின் சுகம்.

கோமதி அரசு சொன்னது…

AKCநடராசன் அவர்கள் திருவெண்காடு தெப்ப உற்சவத்திற்கு வந்து வாசித்து இருக்கிறார். நேரில் கேட்டு இருக்கிறேன்.
பாரம்பரிய இசை வளரும் நாளும் வரும்.

msuzhi சொன்னது…

இது போன்ற மே இசைக்கருவிகளில் கர்நாடக இசை இனிப்பதில்லை. akc விதிவிலக்கு. கதிரியின் ரம்பம் இவரிடம் இல்லை.

msuzhi சொன்னது…

ஒரு வேளை saxophoneஐ விட க்லேரினெட் கர்நாடக இசைக்கு அண்மையோ? நடுவில் யாரோ கிடாரில் கர்நாடக இசை வாசிப்பதாகப் படித்தேன்.. நல்ல வேளை கேட்கும் அவசியம் நேரவில்லை. வயலினில் குழலிசை தர முயன்ற குன்னக்குடி போல யாராவது சர்க்கஸ் புரியக் கிளம்பியபடி இருக்கிறார்கள். சில நேரம் அற்புதமாக அமைந்து விடுகிறது... மேன்டலின் sriநிவாசன் எனும் அத்திப்பூ போல.

msuzhi சொன்னது…

பாரம்பரிய இசையா? சரிதான்.

ரிஷபன் சொன்னது…

நாம் தொலைத்து வருகிற விஷயங்களில் இதுவும் ஒன்று

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஒரு சில கிராமத்துக் கல்யாணங்களில் நாதஸ்வரத்திற்கு பதிலாக க்ளாரினெட் இசைப்பது பார்த்திருக்கிறேன்.....

பல இசைக்கருவிகளையும் அவற்றை திறம்பட கையாளுபவர்களையும் இழந்து வருகிறோம் என்பது வருத்தம் தரும் விஷயம்....

மோகன்ஜி சொன்னது…

டிடி சார்! நடக்கும் என்றே நம்புவோம்

மோகன்ஜி சொன்னது…

வாங்க மூவார்!
//நான் கூட ப்ளூட் வாசிக்கும் போது, வலது காலால் தாளம் போட்டிருக்கிறேன்...
தப்பு தப்பாக!//

உங்க கால்ல தானே பாஸ்?

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்!

சாக்ஸ்.. அசுர வாத்யம்... கிளாரினெட்
நாதஸ்வர கம்பீரம் இல்லைன்னாலும் சங்கதி தெளிவா பேசுங்க... AKCயை ஒரு தரம் கேட்டுப் பாருங்க..

மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம்,
//பாரம்பரிய இசை வளரும் நாளும் வரும்// அப்பிடி சொல்லுங்க...

மோகன்ஜி சொன்னது…

துரை சார்!

நீங்க சொல்வது எனக்கு உடன்பாடே!

மோகன்ஜி சொன்னது…

துரை சார்! பல்வேறு இசைக்கருவிகளில் தத்தம் மரபிசையை பரிட்சித்துப் பார்ப்பதும் சிலசமயம் அந்த வாத்தியத்தின் அமைப்பையே கூட தன் சௌகர்யத்திற்கு மாற்றிக் கொள்வதும் நடை முறை தானே?

போன தலைமுறையில் தானே வயலின் ஃபிடிலாகி கர்நாடக இசை மேடையை ஆக்கிரமித்தது?



மோகன்ஜி சொன்னது…

உண்மை தான் ரிஷபன் சார்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க நாகராஜ்! அந்த ஆதங்கத்துல தான் இதை எழுதலாச்சு

சிவகுமாரன் சொன்னது…

எனக்கு கத்ரி கோபல்நாத்தை தெரியும். அதுவும் ஏஆர் ரகுமான் மூலமாக...
இந்த மேதைகளை எல்லாம் தெரியாது என்று சொல்வதில் கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கிறது அண்ணா

Geetha Sambasivam சொன்னது…

பாரம்பரிய இசை னு இல்லை. பொதுவாகவே எந்த இசையையும் கேட்டுத் தான் பழக்கம். மற்றபடி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கெல்லாம் ஞானம் கிடையாது. ஆகவே ராகங்கள் குறித்தோ மற்ற விஷயங்கள் குறித்தோ சொல்லத் தெரியாது. ஆனால் நாதஸ்வர இசை இப்போது அருகிக் கொண்டு வருகிறது என்பது உண்மைதான். ஏகேசிக்குப் பின்னர் கிளாரினெட் வாசிக்க யார்? என்பது போன்ற கேள்விகளும் உண்டு. இதற்கான காரணமும் ஒரு முறை சில நாதஸ்வர வித்வான்களை என் கணவர் ரயிலில் பயணம் செய்கையில் சந்தித்துப் பேசுகையில் கேட்டறிந்தார். கிராமங்கள் வேகமாய்க் காலி ஆகிக் கொண்டு வருவதும், திருவிழாக்கள் எல்லாம் பாரம்பரியத்தைத் தொலைத்து வருவதும் முக்கியமான சில காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. முக்கியமாய்ப் பெரும்பாலான கிராமங்களில் பிராமணர்கள் இல்லாததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆதரிப்பவர்கள் குறைந்து விட்டதாக நாதஸ்வர வித்வான்கள் சொல்கின்றனர். சமீபத்தில் பொதிகையில் "நாதபேதம்" நிகழ்ச்சியில் வாசுதேவன் என்னும் இளைஞன் நாதஸ்வரம் வாசித்தான். அருமையாக இருந்தது. இந்த வாலிபரைப் போல் இளைய தலைமுறையினர் சிலராவது கற்றுக் கொண்டால் இந்த வாத்தியங்கள் மறையாது. :((((

Geetha Sambasivam சொன்னது…

மெலட்டூர் பாகவதமேளா இன்னமும் அந்த ஊர்க்காரர்களால் உயிர்ப்புடன் இயங்கி வருவதைப் போல் வெளிநாடுகள் சென்றாலும், வெளிமாநிலங்கள் சென்றாலும், வெளியூர்களில் வசித்தாலும் சொந்த ஊரையும் அதன் விசேஷங்களையும் மறக்காமல் குடும்பத்தோடு கலந்து கொண்டால் இத்தகைய கலைகளும் வளர வாய்ப்பு இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!
உங்கள் விரிவான அலசலுக்கு நன்றி! இந்த நிலை மக்களின் மனப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாகத்தான்.
இசை மனதை அமைதிப்படுத்தி சாந்தியை நல்குவதை இளம் தலைமுறை புரிந்துகொள்ள முயல்வதில்லை.

மாறாக சாந்தமாகி இருப்பது இவர்களுக்கு ஒரு குற்ற உணர்வையே ஏற்ப்படுத்துகிறது. பரபரப்பாக இருப்பதையே நடைமுறையைக் கொள்கிறார்கள். எப்போதும் ஒரு பதட்டமான மனநிலையிலேயே இருக்கிறார்கள். நவீனப் பெரிசுகள் கூட பாரம்பரிய இசை கேட்பதைப் பற்றி யோசிப்பதேயில்லை. அண்மையில் திரை இசையமைப்பாளர் திரு பரத்வாஜுடன் பேசிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் யாரும் இசையைப் பார்க்கிறார்களே தவிர கேட்பதேயில்லை என்றார்.

இரண்டாவது கருத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு சமூகப் பிரக்ஞை இருந்தால் மட்டுமே பாரமபரிய இசை வழக்கொழிந்து போகாது. அருமையாகச் சொன்னீர்கள்.

கீதமஞ்சரி சொன்னது…

ஏகேசி அவர்களின் கிளாரினெட் வாத்திய இசையைக் கேட்டுக்கொண்டே இப்பின்னூட்டத்தை இடுகிறேன். இப்படியொரு அற்புதமான இசையைக் கேட்கும் வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கு அன்பான நன்றி மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! என் தம்பிக்கு கிளாரினட் பற்றித் தெரிந்திருக்க வேண்டாம்..கிளாரினெட்டுக்குத்தான் உன் கவிதை பற்றித் தெரிந்திருக்க வேண்டும் போ !

மோகன்ஜி சொன்னது…

கீதமஞ்சரி! A.K.C அவர்களின் இசைகேட்டபடி கருத்திடும் உங்கள் தேடலுக்கு ஒரு ஜே ! இன்றெல்லாம் M.S அவர்களின் இசையில் மூழ்கிக் கிடந்தேன். இந்தத் தருணம் அந்த சுகானுபவத்தை ஏட்டில் வடிக்கத் தோன்றுகிறது .