ஞாயிறு, மே 29, 2011

நாட்குறிப்பிலிருந்து





நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கிருந்தது.
விடாமல் பல வருடங்கள் எழுதினேன்.
பின்னர் அவ்வப்போது..

காலையில் கண்ணில்பட்ட டைரியிலிருந்து சில பக்கங்கள்..
ஆந்திராவுக்கு மாற்றலாய்ப் போயிருந்த சமயம் எழுதியது


10th செப்டம்பர் 1995

இந்த ஞாயிற்றுக் கிழமை, வெற்று நாளாய் உதித்தது.
இந்த ஊருக்கு வந்து பத்துநாட்கள் ஆகிவிட்டது.
இதம்தரும் மனை நீங்கி, குழந்தைகளை விட்டுவிட்டு 
இதென்ன உத்தியோகம் என்று தோன்றுகிறது.
தோன்றக்கூடாது தான்... ஆனாலும் தோன்றுகிறதே.

ராத்திரி சரியாக தூங்கவில்லை. பிள்ளைகள் நினைவாய்...
இவ்வளவு பெரிய கெஸ்ட்ஹவுசில் தனிஆளாய்..
பெருமூச்சு கூட இங்கே எதிரொலிக்கிறது. 
காலையில் பூத்துக்குச்சென்று தொலைபேசியில் குழந்தைகளுடன் பேசினேன்.
விவேக் எனக்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான்..
அதில் அவனுடைய புது பேட்,பரீட்சை மார்க், காமிக்ஸ், எல்லாமுமாய் இருக்கும்..

அம்மாவுக்கு கடிதம் எழுதினேன்.

ரேடியோவில் ஒரு அழகான பழைய தெலுங்கு சினிமாபாடல்.
மூகமனசுலு (ஊமை நெஞ்சங்கள்) சித்ராலோ....

வரிகள் மனதை ஊடுருவிப் பதிந்து விட்டன. அந்தப் பாடலோடு ரேடியோவை நிறுத்திவிட்டு, மீண்டும்மீண்டும் அதன்  வரிகளை நினைவுபடுத்திக் கொண்டேன்.. நாளெல்லாம் நாவில்பயின்ற பாடலை தமிழ்ப்படுத்தினேன்.. 


பூமாலையில் சிரித்திருக்கும் பூக்களினூடே
         கோர்த்த நாரும் பொதிந்திருக்கும்

பூவாய் மலரும் கண்கள்தாண்டி, இதயமோ
         எதைத்தான் ஒளித்திருக்கும்?

தவிக்கும் மனதோர் ஊமைஎனினும்-அதற்கே
       மொழி ஒன்றும் இருந்திருக்கும்

செவிபடைத்த மனங்களுக்கு மட்டும்
       அதன் பேச்சும் கேட்டிருக்கும்.....

சிரித்திடினும் அழுதிடினும் விழிகளில்
       கண்ணீர் அன்றோ துளிர்த்திருக்கும்?

கண்ணீரின் கதைகள் நீ முயன்றிருந்தால்
        கண்டிப்பாய் புரிந்திருக்கும்......

திரைப்பாடல் போல் இல்லாமல் கொஞ்சம் செய்யுள் போல் இருக்கிறதோ?..
இருந்துவிட்டுப் போகட்டும்.



தெலுங்கில் பாடலாசிரியர்  புரிந்திருக்கும் ஜாலம் இந்தப் பாட்டில் வரவில்லை எனத் தோன்றுகிறது....

மொழிபெயர்ப்பில் நழுவிப்போவது மூலக்கவிதையின்
கவிதானுபவம் அல்லவா?



11th செப்டம்பர் 1995

இன்றிலிருந்து அரைலிட்டர் பால் வாடிக்கையாய் வரும்.
செய்த உப்புமா வாசனையாகத்தான் இருந்தது.
உப்பைத் தான் மறந்து விட்டேன்.

பரபரப்பாக வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.. 
தனிமைக்கு வேலையும், படிப்புமன்றோ மாற்று?
சுற்றி பதினெட்டுபட்டிக்கும் நாளைமுதல் போக ஆரம்பிக்க வேண்டும்.

12th செப்டம்பர் 1995

நிறைய வாடிக்கையாளர்கள்..  தெலுங்கில் புகுந்துவிளையாடிக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் தமிழ்ல எவனாவது பேசுங்களேண்டா?

டிராக்டர் லோன்கேட்டு வந்த ஒருவர் தன் மாமாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயடுவைத் தெரியும் என்று அளந்துவிட்டு என்னைக்  கேட்டார்:

சாரு.. மீ பேரு ஏமி?

சொன்னேன்......நேனு சந்திரபாபு நாயுடு

சகஅலுவலர்கள் சற்று திகைத்து, பின் சிரித்தார்கள்..

லொள்ளு,நையாண்டி, நக்கலுக்கெல்லாம் நம்ம ஊர் நம்ம ஊருதான்.

இன்னும் துணிதுவைக்கிற வேலையொண்ணு பாக்கியிருக்குடா சாமி!

13th செப்டம்பர் 1995

மற்றுமொரு நாள்.
கொண்டு வந்திருக்கும் இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவை மாந்திக் கொண்டிருக்கிறேன்....

அவரு தானே சொன்னார்? விழித்திரு... தனித்திரு... பசித்திரு...

ரொம்ப பசிக்குது ராமலிங்கம்.  

72 comments:

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

நேற்றிலிருந்து என் பின்னூட்ட சன்னல் திறக்கமுடியாமல் வலைப்பூவில் சிக்கல் இருந்தது. தற்போது சரிசெய்துள்ளேன்.

29 மே, 2011 4:14 pm

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ் சொன்னது:

அண்ணா நீங்கள் சலவைக் கணக்கு எழுதினாலும் அற்புதமாக இருக்கும் போலிருக்கிறது. சுந்தரத் தெலுங்கு பாடலை அழகு தமிழ்ப் படுத்தி அசத்தி விட்டீர்கள். பசிக்குது ராமலிங்கம்! சூப்பெர்ப்! உங்களை நெருங்குவதற்கு இன்னும் நிறைய நாள் ஆகும் போலிருக்கிறது.... வழக்கம் போல அசத்தல். ;-))

29 மே, 2011 4:12 pm

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள ஆர்.வீ.எஸ்! காமென்ட் பாக்ஸ் சரியாகிவிட்டது.

சலவைக் கணக்கு.... அது சுஜாதா ஒருவருக்கே பொருந்தும் ஸ்வாமி.

உங்கள் கருத்து உங்கள் அன்பின் வெளிப்பாடே.. மிக்க நன்றி..

அது சரி ஆர்.வீ.எஸ்... பிறத்தியார் டைரியை படிக்கலாமோ?

எல் கே சொன்னது…

ஜி பதிவு டெம்ப்ளேட்ல ஏதாவது கைய வெச்சீங்களா ? சரியா அலைன்மென்ட் இல்லையே ? உங்களுக்கு மட்டுமல்ல , பதிவின் கீழே கமென்ட் போட்டி வைத்திருக்கும் அனைவருக்கும் பிரச்சனைதான்

எல் கே சொன்னது…

//பிறத்தியார் டைரியை படிக்கலாமோ?//

அதான் நான் படிக்கலை

(அடுத்தவங்க டைரிய படிச்சா வெளில சொல்லக் கூடாது )

அப்பாதுரை சொன்னது…

அவனவன் சுவாரசியமா எதாவது டைரில எழுதுவான் பாத்திருக்கேன்.. இவரு தனியாப் போய் டைரி எழுதினா.. ராமலிங்கமா? தீன்ட்லோ டப்பல் மீனிங் உந்தா பாபு?

ரிஷபன் சொன்னது…

நாளெல்லாம் நாவில்பயின்ற பாடலை தமிழ்ப்படுத்தினேன்..
ஆஹா.. கவித.. கவித..
அடுத்தவங்க டைரி சுவாரசியம்தான்

பொன் மாலை பொழுது சொன்னது…

///ரேடியோவில் ஒரு அழகான பழைய தெலுங்கு சினிமாபாடல்.//

பழைய கண்டசாலா பாடல்கள் எல்லாம் இனிமையாக irukkum

பொன் மாலை பொழுது சொன்னது…

நீதானே என்னை நினைத்தது,
நீதானே என்னை அழைத்தது,
நீதானே என் இதயத்திலே நிலைதடுமாறிட உலவியது.

தெலுங்கிலும் இதே பாடல் சுவையுடன் இருக்கும்.
மாயா பஜார்.

மோகன்ஜி சொன்னது…

ஆம் கார்த்திக்.. காமென்ட் விண்டோ வரவில்லை என்று கொஞ்சம் குடைந்தேன். எக்குதப்பாய் மாட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் "ஞே"..
ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டேன்.

மோகன்ஜி சொன்னது…

டைரி எழுதி வீட்டில் மாட்டிகிட்ட அனுபவம் உண்டு கார்த்திக்...
குட்பாயா இருந்தேனோ பொழச்செனோ..

மோகன்ஜி சொன்னது…

வாங்க அப்பாஜி! காதலும்,ஏக்கமும் "நனி சொட்டசொட்ட" யாம் நாட்குறிப்பு எழுதியுள்ளோம்.. அந்த மூட்டையை அவிழ்த்தேனானால் இல்லாள் பொல்லாப்பை ஏற்கும் சிரமநிலைக்கேகுவேன் என்றே பதிவிடா நின்றோம்.

அந்த கண்டசாலாவின் பாடலை செவிமடுப்பீர் என்றே இதை எழுதப் போந்தோம்.. ஐயன்மீர்.. பசியின் வாட்டத்தில் இராமலிங்கத்தை அழைத்தோமேயன்றி உட்குத்து,இரட்டைத் தொனி இன்னபிற சொல்லகில்லேன் ஆசானே ..

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரிஷபன்.. பொதுவாய் டைரிக்காக ஆலாய்ப் பறக்கும் பலரும் அதில் ஏதும் எழுதுவதில்லை.. வீட்டுக் கணக்கு, ஸ்ரீராமஜெயம் எழுதுவோர் சிலர்.

என் பழையக் கவிதை ஒன்று உங்களுக்காய்....

டைரி

புதுக்காகித மணப் பெண்ணின்
கதுப்புக் கன்னத்தில்,
மைமுத்தங்கள்.

ஆசை நாள் அறுபதும்
மோக நாள் முப்பதும்
புரட்டி ஓய்ந்ததும் ......

‘பால் கணக்கு’ பிள்ளைபெறும்
பத்து மாதம் கடந்த பின்னே !

( சென்னை 1978)

மோகன்ஜி சொன்னது…

உண்மை மாணிக்கம் சார்.. என்னிடம் கண்டசாலா-சுசீலா தெலுங்கு பாடல்கள் பல உள்ளன... இசைக்காகவென்றே உருவான மொழி தெலுங்கு என்று தோன்றும்..

பாட்டு போடும் கேட்ஜெட் போட்டுவிட்டு கொஞ்சம் பாடல்கள் பதிவிடுகிறேன்.

//நீதானே என்னை நினைத்தது,
நீதானே என்னை அழைத்தது,//

நூவேனா நானு தலசினதி
நூவேனா நானு பிலிசினதி...

காலத்தால் அழிக்கமுடியா அழகுப் பாடல்கள் மாணிக்கம்..

ஸ்ரீராம். சொன்னது…

/""நனி சொட்டசொட்ட" யாம் நாட்குறிப்பு எழுதியுள்ளோம்.. அந்த மூட்டையை அவிழ்த்தேனானால் இல்லாள் பொல்லாப்பை ஏற்கும் சிரமநிலைக்கேகுவேன் என்றே பதிவிடா நின்றோம்"//
நாட்குறிப்பின் நல்லபல நளபாகங்கள் நீக்கி உப்பில்லாத உப்புமா தந்ததற்கு நன்றி...! ராமலிங்கத்திடம் கேட்ட பசி வயிற்றுப் பசியில்லாமல் கவிதைப் பசியாய் இருந்திருக்கும் போலும்! ஆனாலும் ஞே என்று விழிக்காமல் ஙே என்று விழிக்கவும்!!

மோகன்ஜி சொன்னது…

வருக ஸ்ரீராம்.. உப்புமா வேணாம்.. புல்மீல்ஸ் வேணும் அவ்வளவு தானே...
கண்டிப்பாய் போடுகிறேன்.. கொஞ்ச நாள் கழித்து.. இப்போ இந்த ஆசீர்வாதக் கச்சேரி மட்டும் தான்..

// ஙே என்று விழிக்கவும்!// இன்டிக்கில் ஙே வராமல் ஞே என்று நான் விழிக்கலாயிற்று. இப்போது வெட்டி ஒட்டிவிட்டேன் அல்லவா... நன்றி ஸ்ரீராம்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

டைரிக்குறிப்புகள்… சுவாரசியம் ஜி!

”பசிக்குது ராமலிங்கம்” நல்லா இருந்தது இந்த எண்டிங்.

”விழித்திரு தனித்திரு பசித்திரு” சொன்னாரே தவிர பாவம் எல்லோருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறார் – இன்று வரை தனது வடலூர் ஞான சபையில்….

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அது சரி, எனக்கு BASIC ஆ ஒரு சந்தேகம்..அந்த ‘விழித்திரு,தனித்திரு,பசித்திரு’ சொன்னது வள்ளலாரா, விவேகானந்தரா?
உப்புமாவில் உப்பு இல்லாமல் இருந்தால் என்ன? தங்கள் எழுத்தில் ‘ஸாரம்’ இருக்கிறேதே, எவ்வளவு அழகாய்!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

பண்டிதத் தமிழை பழகுதமிழ் ஆக்கிய பெருமகன்களில் வள்ளலார் முதன்மையானவர்.. தென்னாற்காடு மாவட்டத்தில் அவர் வந்துபோனதாய்ச் சொன்ன இடங்களுக்கு இளவயதில் சமரச சன்மார்க்க அன்பர்களுடன் சென்று வந்ததுண்டு.

அவர் பாடல்களில் தேர்ந்த சிலவற்றைக் குறித்து எழுத ஆவலுண்டு..

அந்த அணையாத அடுப்பு எவ்வளவு பெரிய விருப்பம்... உங்கள் அழகான கருத்துக்கு நன்றி வெ.நா !

29 மே, 2011 9:58 pm

மோகன்ஜி சொன்னது…

விவேகானந்தர் சொன்னது வேறு..
"எழுமின்,விழிமின்,உழைமின்" என்று தமிழில் அழகாய் மொழிபெயர்த்தார்கள்.

உபநிடதங்களில் வரும்
'உத்திஷ்டத, ஜாக்ரத,ஆன்னிவரானி போதத:" எனும் இந்த மஹாவாக்கியத்தை அடிக்கடி மேற்கொள காட்டுவார் ஸ்வாமி விவேகானந்தர்.

வழக்கமாய் நாம் விழித்தபின் தானே எழுவோம்... இங்கோ முதலில் எழுக என்றும் பின் விழிமின் எனவும் கூறப் படுகிறதே.. அந்த முரண்பாட்டின் அழகும் அர்த்தமும் ஒரு பதிவு கொள்ளும்.. விவாதிப்போம் மூவார்ஜி.

உப்பில்லாத உப்புமாவுக்கு அக்காரவடிசலாய் பின்னூட்டங்கள். நன்றி தலைவரே.

அப்பாதுரை சொன்னது…

இல்லாள் பொல்லாப்பு பேலன்ஸ் ஆக, அவங்களையும் டைரி எழுதச் சொல்வதே நண்பரே.. பொல்லாப்புன்ன்ட்டு அதுக்காக தொழிலை விட்டு உப்புமா கிண்டப் போய்விடுவதா? (அப்படிப் போடுங்க ஸ்ரீராம்).

தெலுங்கு பாட்டு கேட்டதில்லை - தமிழில் நீங்க சொல்லியிருக்குறது பிரமாதம். இருபது வருசத்துக்கு முன்னால தெரிஞ்சுட்டிருக்கலாம்னு மானசீக டைரியில் எழுதப்போறேன் :)

குணசேகரன்... சொன்னது…

உப்புமாவிற்கு உப்பு எங்கள் Comments
http://zenguna.blogspot.com

சிவகுமாரன் சொன்னது…

அருமை அண்ணா உங்கள் டைரிக் குறிப்பு. என் பழைய டைரிகளைத் தேடும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள். எனக்கு அப்போதெல்லாம் டைரி கிடைக்காது. எழுதாத பழைய டைரியில் கிழமைகளை அடித்து விட்டு எழுதிய நாட்கள் மறக்க முடியாதவை.
உங்கள் புதிய படம் அழகு. ஒரு முண்டாசைக் கட்டிவிட்டு , மீசையை முறுக்கிவிட்டுப் பார்க்க வேண்டும் போல் உள்ளது.

மோகன்ஜி சொன்னது…

//இல்லாள் பொல்லாப்பு பேலன்ஸ் ஆக, அவங்களையும் டைரி எழுதச் சொல்வதே நண்பரே..//

அவங்க கல்யாணத்துக்கு முன்னம் எழுதின டைரி ஒண்ணை பார்த்தேன்.. என் மேலேயே எனக்குக் காதல் அப்பத்தாங்க வந்தது!

உங்க மானசீக டைரி என்ன மார்கத்துல இருக்கும்னு எனக்கு தெரியும் முதலாளி.. இன்னமும் உங்க நாடக பிரமிப்புல இருக்கேன்.. டபுள் சபாஷ்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க குணா!
//உப்புமாவிற்கு உப்பு எங்கள் Comments//

உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பேன்.

மோகன்ஜி சொன்னது…

வா இளவலே!சிவா! உன் டைரிக்குள் எட்டிப் பார்க்க மனம் பறக்கிறது. என்னென்ன கூத்து இருக்குமோ என ஆவல் வலுக்கக் காத்திருக்கிறோம்.
ஒரு மூணு வருடம் கவிதையாவே எழுதினக் கூத்தும் உண்டு.

என் வலைப்பூவில் ஏதோ சிக்கல். பழைய படம் நழுவி விட்டது.

புதியபடம் மகளிர்த்தினத்தன்று ஒரு பெரிய கூட்டத்தில் சிறப்பு விருந்தினராய்ப் போயிருந்தபோது எடுத்தது. ஒரு பெண்மணி ஆக்ரோஷமாய்ப் பேசிக் கொண்டிருந்ததை,மேடையில் அமர்ந்தபடி மிரண்டுபோய் அண்ணாந்து பார்த்தவண்ணம் இந்த ஆண் அபலன்(அபலைக்கு ஆண்பால் அதுதானே கவிஞரே?)

ஹ ர ணி சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஹ ர ணி சொன்னது…

ரொம்ப சுவையான பதிவு (உப்புமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த சுவைபோலவே பதிவும்) 1995 இல் அருமையாக இருக்கிறது. மொழிபெயர்ப்புப் பற்றிக் கவலைப்படாமல் செய்யவேண்டும் என்கிற உணர்வே முக்கியம். அருமை மோகன்ஜி. எனக்கும் ஆசை டைரிக் குறிப்புகள் எழுதவேண்டும். வருடாவருடம் ஏராளமான டைரிகள் அன்பளிப்பாக வரும். அப்படியே வைத்திருப்பேன். நண்பர்களுக்கு (முக்கிய டைரி எழுதுபவர்களுக்கு) தேடிக் கொடுப்பேன். பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம்பிள்ளையின் டைரிக்குறிப்புகள் சிறந்த வரலாற்றுக் குறிப்புக்களாக இன்றும் உள்ளன. எழுதுங்கள் முக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

ஹ ர ணி சொன்னது…

கணிப்பொறி கோளாறினால் இருமுறை பதிவாகியுள்ளது. ஒன்றை நீக்கிவிடவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

பத்மநாபன் சொன்னது…

டைரி குறிப்பிலும் உங்கள் தமிழ் விளையாட்டு அருமையாக இருக்கிறது ... டைரி மோகம் முதலில் இருந்தது அலுவலகத்திற்கு ஒன்று .. தனிக்குறிப்புகளுக்கு ஒன்று என இரண்டுடைரி கள்.. சொல்லிவைத்தாற்போல் அதிக பட்சம் பத்துநாள் ஓடும் அதற்கப்புறம் நொண்டி அடிக்க ஆரம்பித்து நின்று விடும் ... டைரி குறிப்புகளை பற்றி வாத்தியார் எழுதியது நினைவில் இருக்கிறது .. எழுத ஆரம்பித்த முதல் நாளில் பக்கம் பக்க மாக இருக்கும் ஆரம்பித்த ஒருவாரத்தில் கட்டெறும்பு ஆகிவிடும் .....'' இன்று அடை நன்றாக இருந்தது'' அடுத்த நாளில் '' இன்று பப்பிக்கு காலில் சுளுக்கு '' .

ஏகாந்த நிலையில் படம் அருமையாக இருக்கிறது ...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பழய டைரியை எப்போதாவது புரட்டினால் கண்ணில் படும் சில விஷயங்கள், மிகவும் சுவாரஸ்யமானதாகவும், அந்த நாள் ஞாபகத்தை நெஞ்சிலே வரவழைப்பதாகவுமே அமையும்.

”பசிக்குது ராமலிங்கம்” நல்லா ரசிக்கும்படி இருந்தது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

[எனக்கென்னவோ உங்களின் பழைய போட்டோ தான் ”பாரதியார்” போல கம்பீரமாக இருப்பதாகத் தோன்றுகிறது.]

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மோஹன்ஜி மோஹனானால் போல இருக்கு புதுப்படம். ஆனாலும் நல்லா இருக்கு.

பழைய டைரி பழைய சாதமும் வடுமாங்காயும் போல.

நேற்றைக்கு ஆர்விஎஸ்ஸுடன் பேசும் போது சொன்னேன்.

நம்மால் வாங்கமுடியாத காஸ்ட்லியான விஷயத்து லிஸ்ட்ல கடந்துபோன காலத்தை முதல்ல சேர்க்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தேன்.

அது எத்தனை நிஜம்னு உங்க டைரியைப் படிக்கும்போது தெரியுது மோஹன்ஜி.

ஆனாலும் பேர்லயே உப்புமா இருக்கறதால உப்பு தனியாப் போட வேண்டாம்னு நீங்க நினைச்சிருக்கலாம்.அது தப்பில்ல.

எல் கே சொன்னது…

அதெல்லாம் நடந்தது. கல்லூரி நாட்களில் கவிதை எழுதி, அம்மாக்கிட்ட திட்டு வாங்கினது உண்டு. இப்ப அலுவலக டைரி மட்டும்தான் எழுதறது. வேறெந்த டைரியும் இல்லை

மோகன்ஜி சொன்னது…

ஹரணி சார்! உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் புதுவையில் வாழ்ந்த நாட்களில் ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரி பற்றிய புத்தகத்தையும் சில ஆராய்ச்சி கட்டுரைகளையும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். நினைவூட்டினீர்கள்..

மோகன்ஜி சொன்னது…

அன்பின் பத்மநாபன்.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி பாஸ்! உங்கள் டிடி பற்றின சுஜாதாவின் நினைவுகள் அருமை..

படம் நிஜமாவே நல்லா இருக்கா?
இதைப் பார்த்து எங்க தங்கமணி சொன்னது:
"அங்க இங்க பராக்கு பாக்காம உக்கார்ந்திருக்கக் கூடாது?"

மோகன்ஜி சொன்னது…

உண்மை வை.கோ சார்! புதுமுக வகுப்பில் படித்து கொண்டிருந்த நாட்களில் சமஸ்கிருத பேராசிரியர் எடுத்த ரகுவம்ச காவிய வகுப்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை அன்றைய நாட்குறிப்பாய் எழுதியிருந்திருக்கிறேன்.(ஒன்பது கூடுதல் பக்கங்கள் எழுதி,அந்த நாளுக்கான பக்கத்தில் குண்டூசியால் இணைத்து!)

என் நண்பன் அதைப் பார்த்து சொன்ன காமென்ட் "சரியான லூசுடா நீ!"

மோகன்ஜி சொன்னது…

அன்பு சுந்தர்ஜி!
/மோஹன்ஜி மோஹனானால் போல இருக்கு புதுப்படம்//

மாத்திட சொன்னால் மாத்திடறேன் ஜி. இன்னும் அழகான போட்டால்லாம் வச்சுருக்கேன். ஆனா அதுலல்லாம் நான் இல்லை.
கடந்து போன காலத்தை மீட்க முடியாது. உண்மை.. அவ்வப்போது அங்கு போய் வருவதால் வாழ்க்கையின் சுவை சற்று கூடும்.. கொஞ்ச நாளைக்கு ஒருக்கா ஊறுகாய் ஜாடியை கிளறி மூடுறாப்பல...

மோகன்ஜி சொன்னது…

கார்த்திக்!
//இப்ப அலுவலக டைரி மட்டும்தான் எழுதறது.வேறெந்த டைரியும் இல்லை//

உங்க வலைலதான் வரிஞ்சிகட்டிகிட்டு எழுதுறீங்களே.. தனியா டயரி எதுக்கு?
என் நண்பனொருவன் சிறு படங்கள் இடையிடையே வரைந்து எழுதுவான்.
ன்று டீ.வி வாங்கியிருந்தால் எழுத்தின் ஊடே சிறு டீ.வி படம்.. எதுக்குன்னா படத்தை வச்சு டக்குன்னு தேதியை பிடிச்சிடுவானாம்.. என்னமா யோசிக்கிறாங்க!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உப்புமாவில் உப்பு இல்லாமல் இருந்தால் என்ன?
சுவை கூட்டும் டைரி .. ..பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

மோகன்ஜி

ஐயோ டக்காராய் டெம்ப்ளேட் மாற்றி, உங்கள் புகைப்படத்தை மாற்றி கலக்குகின்றீர்கள். உங்கள் மகன் விவேக் கடிதம் போட்டானா ?

என் இரு மகன்களும் என்னை தேடியபோது நான் அவர்களுக்கு இல்லை. இப்போது எனக்கு அவர்கள் வேணும் எனும்போது அவர்களுக்கு நான் தேவை இல்லை என்ற எண்ணம் அதிகம் தோன்றுகின்றது. நிறைய பணம் மட்டுமே தேடி வாழ்க்கையில் இழந்ததை மனசு அறிகின்றது இருந்தும் இன்னும் பணம் தேடி அலைந்துக்கொண்டு இருக்கின்றது ! என் செய்ய !

- சாய்

PS: Sivakumaran, nice thought and an apt one as well

அன்புடன் மலிக்கா சொன்னது…

உங்க டைரிய நான் படிக்கவேயில்லீங்கோ. மத்தவா ரகசியத்தை தெரிஞ்சாலும் சொல்லுக்கூடாது அதான் நானும் உங்க ரகசியத்தை சொல்லலை..

இருந்தாலும் சொல்லாமல் செல்லமுடியவில்லை அருமையோ அருமை..

அன்புடன் மலிக்கா சொன்னது…

நானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்

நானோர் வானவில் மனிதன். [மேகங்களாய் அலைந்து கொண்டு..அல்லது மேகங்களை அளந்துகொண்டு] ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்.

என வருமோ..

Matangi Mawley சொன்னது…

இது ரொம்ப நல்ல idea! ஒரு முறை- திருச்சி-ல பிரேமா நந்தகுமார் (writer) ஆத்துக்கு போயிருந்தோம். சின்ன வயசிலேர்ந்தே அவங்களோட நல்ல பழக்கம். அப்போ- அவங்க எழுதின ஒரு கதை- 60s ல அவங்க எழுதின diary குறிப்பு ஒண்ணுத்திலேர்ந்து வந்தது-ன்னு சொன்னா! என்னையும் எங்க அப்பா- சின்ன வயசிலேர்ந்து diary எழுது-எழுது-ன்னு சொல்லிண்டே தான் இருப்பார்... நமக்கு வணங்காது... எழுதினாலும்- ரொம்ப சோஹமா இருக்கற நாள்-ல தான் எழுத தோணும்... ஆனா-- அத அம்மா படிச்சு பாத்துட்டு- "இந்தாத்துல உனக்கென்ன கொற வெச்சேன்"-ன்னு dose start பண்ணிட்டா... வம்பே வேணாம்டா சாமி-ன்னு விட்டுட்டேன்!
ரொம்ப interesting பதிவு... Time Capsule ஆட்டமா இருந்துது! அந்த தெலுங்கு பாட்டோட தமிழ் translation ரொம்ப அழகா இருந்துது...!

தினேஷ்குமார் சொன்னது…

வந்தனம் வந்தனம் சாமிக்கே ...
வணக்கம் சொல்லி வந்தேனுங்க சாமியே ...
தமதாமா வந்ததிற்கு மன்னிக்கணும் சாமியே ....

தினேஷ்குமார் சொன்னது…

நாரில் கோர்த்திருக்கும்
நங்கை சூடும் மலரே ...
பூவிழிகள் காணா
மறைத்திருக்கும்
மர்மம் என்ன கூறு ...
தணலாய் தவிக்கும்
கனலாய் அனலடிக்கும்
கார்மேகம் கட்டவிழ்த்த
இளஞ்சாரலாய்
இன்பமும் துன்பமும்
கலந்தே காணா
மறைவிடத்து தனித்தொரு
மொழி பேசும் என்னுளே
அறிவாயோ நீ என்னுயிரே .........

ஐயா தாங்கள் தெலுங்கு பாடலை மொழி பெயர்த்தீர்கள் என்னால் முடிந்த மட்டில் உங்கள் வரிகளை நான் மாற்றி தொடுத்துள்ளேன் தவறிருந்தால் தண்டிக்கவும் ஐயா ....

மோகன்ஜி சொன்னது…

வாங்க இராஜேஸ்வரி! உங்கள் ரசனைக்கு என் வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! நடுவில் வலைப்பூவில் பிரச்னை வந்ததால் அதைஇதைக் குடைந்து ஒருவழியாய் ஒப்பெற்றிவிட்டேன். ஏதோ பேப்பரை எடுத்தோமா... கவிதை கதைன்னு குமுரினோமான்னு இல்லாம வலையில் பதிவது கொஞ்சம் நச்சு வேலையாத்தான் தோணுது..

என் பிள்ளை வரிந்து வரிந்து கடிதம் ஒன்று எழுதினான்.. அது இன்னமும் என்னிடம் இருக்கிறது..

நீங்கள் பொருளீட்டப் பாடுபட்டது எல்லாமே குடும்பத்திற்காகதானே சாய்? எனவே குற்றஉணர்வு ஏதும் தேவையில்லை.. ஆனாலும் பணம் ஒன்றே வாழ்க்கையாகிவிடுவதில்லை. எங்கோ ஒரு தீர்க்க ரேகையை இழுத்துத்தான் ஆக வேண்டும். நெடிய வாழ்க்கை உங்கள்முன்னே விரிந்து கிடக்கிறது.. அள்ளுங்கள் ஆனந்தம் அத்தனையையுமே..

மோகன்ஜி சொன்னது…

அன்புடன் மலிக்கா! உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

//மேகங்களாய் அலைந்து கொண்டு..அல்லது மேகங்களை அளந்துகொண்டுஎன்று வருமோ?//

அளைந்து என்பதற்கு அர்த்தம் கிளறுதல் துழாவுதல் என்ற பொருளில் வரும்.
காதலிக்காய் கடற்கரையில் காத்திருப்பவன் மணலைக் கைகளால் அளைவான்.. வானவில்மேல் அமர்ந்து கொண்டு கவிதைக்காய் காத்திருந்தபடி மேகங்களை நான் அளைந்து கொண்டிருக்கிறேன். வானவில்லை வரிவரியைப் பார்த்ததற்கு என் நன்றி மலிக்கா..

மோகன்ஜி சொன்னது…

மாதங்கி! உங்கள் பாராட்டுக்கு நன்றி! டைரி எழுதுவதை விட்டகதையை சுவையாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் பின்னூட்டம் படிக்கும் போதெல்லாம், என் வீட்டு நிலைப்படியில் சாய்ந்தபடி, நீங்கள் நேரில் பேசுவதுபோல் உணருகிறேன்.. அவ்வளவு பாந்தமான நடை .. நன்றி மாதங்கி

மோகன்ஜி சொன்னது…

அன்பு தினேஷ் வாங்க புதுமாப்பிள்ளை! புது அன்னம் வாழ்க்கையில் வந்தபின் பழைய அண்ணனை விட்டுவிட்டீர்கள் கவிஞரே!

என் மொழியாக்கத்தை மேலும் மெருகேற்றிவிட்டீர்கள். நிறைய எழுதுங்கள். எல்.கே ஒரு கவிதைப்போட்டி வைத்திருக்கிறார் அவர் வலையில். நீங்கள் அவசியம் எழுதவேணும்..
உங்கள் 'அன்ன'த்துக்கு என் அன்பு...

அப்பாதுரை சொன்னது…

சாய்.. பணம் தேடிச் சேர்த்துச் சேர்த்து என்ன செய்வது என்று சலித்திருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும். சலிப்பைப் போர்க்கும் மருந்து என்னிடம் உள்ளது. ரகசியம், பரம ரகசியம். உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். செக் புக் அல்லது ரொக்கத்தோடு வரவும் :)

கீதமஞ்சரி சொன்னது…

அடுத்தவரிடம் பகிரமுடியா உணர்வுகளைத் தாங்கும் நாட்குறிப்பு தன் பழைய நினைவுகளைப் பகிரச்சொல்லி சுகம் காண்கிறதோ?

தெலுங்குப் பாடலின் தமிழாக்கம் அழகு. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று பாரதி ஏன் பாடினார் என்று இப்போது புரிகிறது. சுகமான பகிர்வுகள் மோகன்ஜி.

பாரதசாரி சொன்னது…

டைரியில் கூட நையாண்டியா?;-)

http://paadhasaary.blogspot.com/
என்ன ஒரு ஆச்சரியம் நானும் ஒரு நாட்குறிப்பு க்தையைத்தான் கடைசியாக எழுதியிருக்கிறேன். இன்னுமொரு ஆதிசயம் பின்னூட்டத்தில் எனக்கும் அதே போல் சிக்கல் இருக்க ஒரு டம்மி பிண்ணுட்டமிட்டு அழித்த பின்பு அது சரியாகிவிட்டது நீங்களும் அதே தாண் செய்தீர்களா? Great men think alike என்று உங்களொடு என்னை இணைத்துக்கொண்டால் எனக்கு பெருமை உங்களுக்கு அப்படி இருக்காது :-)

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா , என் மகனின் பெயரும் விவேக் தான். அப்பா வைத்தது. (சுவாமி விவேகானந்தரின் பெயரோடு தனது பெயரான வரதராஜை , சேர்த்து விவேக்ராஜ் என்று பெயரிட்டார்,) நான் நல்ல தமிழ்ப் பெயர் வைக்க நினைத்திருந்தேன். அப்பா ஆசையை தட்ட முடியவில்லை .எப்போதும் மனதுக்குள் சின்ன வருத்தம் இருந்து வந்தது. உங்கள் பையனுக்கும் அதே பெயர் என்று அறிந்ததும், மனிதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.

meenakshi சொன்னது…

உங்கள் தமிழாக்க கவிதை அந்த பாடலை கேட்க தூண்டியது. You Tube- ல் பார்த்தேன். அழகான சோக கீதம். நீங்களும் அருமையாக மொழி பெயர்த்திருகிறீர்கள். பாடலின் கடைசி வரி மனதை கொன்று விட்டது. மனம் பேசுவது எல்லாம் பேத்தல்தான். அதனால் தான் அதை பேதை மனம் என்று சொல்கிறார்களோ! சில நேரம் உண்மை கூட பேத்தலாக தோன்றுகிறது பலருக்கு.
மனதில் இருப்பதை ஒளிக்காமல் அப்படியே எழுத கூட ஒரு துணிவு வேண்டும். உங்களுக்கு என் பாராட்டுக்கள்! என்னுடைய சித்தப்பா மகள் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து இன்றுவரை விடாமல் டைரி எழுதி வருகிறாள். அவளிடம்தான் நான் மனம் விட்டு பேசுவேன். 'ஏய், நான் சொல்றதை எல்லாம் உன் டைரியில் எழுதி வைக்காதே, என்பேன்' அவ்வளவு துணிச்சல் எனக்கு! :)
//அவங்க கல்யாணத்துக்கு முன்னம் எழுதின டைரி ஒண்ணை பார்த்தேன்.. என் மேலேயே எனக்குக் காதல் அப்பத்தாங்க வந்தது!// அழகா சொல்லிட்டீங்க. நேசிப்பது ஒரு சுகம் என்றால், நேசிக்க படுவது அதைவிட சுகம், இல்லையா!

விரைவில் உங்கள் பதிவில் பாடல்களை பதிவிடுங்கள். தெலுங்கு பாடல்களை வார்த்தைகளின் இனிமைக்காகவே நிறைய கேட்டிருக்கிறேன். நேயர் விருப்பம் உண்டென்றால் சொல்லுங்கள், என்னுடைய லிஸ்டையும் அனுப்பி வைக்கிறேன். :)

kashyapan சொன்னது…

மொகன் ஜி அவர்களே! என்னுடைய கணிணி ஒக்கிடுபவனுக்கு மராட்டி தெரியும் .அதுமட்டுமே ! எனக்கு மராட்டி தெரியாது. சைகை மொழியில் வண்டி ஒடுகிறது.உங்கள் இடுகைகள் கலர் கலராக , அழகாக இருப்பது பொறாமையாக இருக்கிறது.நான் என்ன செய்யட்டும் ---kaasyapan

ரிஷபன் சொன்னது…

டைரி கவிதை மனசை கொள்ளை கொண்டது.. நன்றி..
புதுக்காகித மணப் பெண்ணின்
கதுப்புக் கன்னத்தில்,
மைமுத்தங்கள்.
ஆஹா.. நீங்க பரம ரசிகர்..

மோகன்ஜி சொன்னது…

அன்பு அப்பாதுரை!
//சாய்.. பணம் தேடிச் சேர்த்துச் சேர்த்து என்ன செய்வது என்று சலித்திருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்//
நானும் வருவேன் ஆட்டத்தைக் கலைப்பேன்!

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்! நீங்கள் சொல்வது போல் நாட்குறிப்பு ஒரு அந்தரங்கத் தோழி போல... பகிர முடியாததெல்லாம் பகிர, சாய்ந்து குமுற தோள்தரும் ஊமைத் தோழி!

மோகன்ஜி சொன்னது…

பாரதசாரி ! ஒன்னாத்தேன் யோசிக்கறமா! இளைய தலைமுறை இப்படிதானே ஒண்ணா யோசிக்கணும்.. நம்மல்லாம்'யூத்து' இல்லயா தல!

பாரதசாரி சொன்னது…

ஆமாம் ஆமாம் யூத்து தான் யூத்து தான் :-)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இதம்தரும் மனை நீங்கி, குழந்தைகளை விட்டுவிட்டு
இதென்ன உத்தியோகம் என்று தோன்றுகிறது.
தோன்றக்கூடாது தான்... ஆனாலும் தோன்றுகிறதே.//

என்றென்றும் தோன்றும் நினைவுகள்.

ADHI VENKAT சொன்னது…

நாட்குறிப்புகள் பிரமாதம் சார். சாரி உங்க டைரியை படிச்சுட்டேன்…..
ராமலிங்கம் சூப்பர்!

ஹேமா சொன்னது…

மோகண்ணா நாட்குறிப்பை எல்லாரும் வாசிச்சிட்டாங்க.எப்பவோ எழுதினாலும் இப்போ நிலைமைகள் மாறியிருந்தாலும் மனம் ஒருகணம் நின்றுதான் அசையத் தொடங்கியிருக்கும்.உப்புமாவுக்கு எதுக்கு மோகண்ணா உப்பு.இதே வேலையை நானும் செய்திருக்கேனே !

'பரிவை' சே.குமார் சொன்னது…

வழக்கம் போல அசத்தல்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா ! அம்மாவின் உடல்நிலை காரணமாய் சென்னை சென்று வந்ததால் வலைப பக்கம் வரவில்லை.உங்கள் விவேக்குக்கு என் ஆசிகள்.பெயர் வைத்த பிள்ளைகள் நம் பேரைச் சொல்லிக் கொண்டிருக்கும்

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள மீனாக்ஷி மேடம்! தாமதத்துக்கு மன்னிக்கவும்.
/நேசிப்பது ஒரு சுகம் என்றால், நேசிக்க படுவது அதைவிட சுகம், இல்லையா!//
அழகாய்ச் சொன்னீர்கள். உங்கள் விருப்பப் படி விரைவில் பாடல்களும் வெளியிடுகிறேன்.உங்கள் பின்னூட்டத்தை மிக சுவாரஸ்யமாய் எழுதுகிறீர்கள்

மோகன்ஜி சொன்னது…

காச்யபன் சார்! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். வண்ணமும் வனப்பும் சொல்லும் பொருளின் நிறைகுறைகளை ஈடு செய்யும் என்றுதான்.
உம் வலையோ பூக்கடை. அதுக்கு போர்டு தேவையா தோழர் ?

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன் ! ஒரு ரசிகமணியே என்னை ரசிகன் என்று மணியடித்து பாராட்டுகிறதே.

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம்

ஆதி மேடம்

ஹேமா

குமார்

மிக்க நன்றி. என் 'வெளையாட்டு' பதிவையும் பாருங்கள்