வெள்ளி, மார்ச் 23, 2012

ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்

என் அன்பு சொந்தங்களுக்கு,
தாயை இழந்து நான் தவித்த நேரம்
ஆறுதல் சொன்ன அத்தனை அன்புக்கும்....
நன்றி ஒரு சிறு வார்த்தை.

இன்று மனதில் அலையடித்துக் கொண்டிருக்கும் ஆதிசங்கரரின் ‘மாத்ரு பஞ்சகம்’ எனும் ஐந்து  சுலோகங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள என் நொந்த மனம் துடிக்கின்றது. பற்றி அழ, வேறு தோள்களை எங்கே தேடுவேன்?
என் தமிழாக்கம் இப்போதைய மன நிலை காரணமாய் ஒரு மாற்று குறைந்திருந்தால் மன்னிக்கவும். மீண்டும் செப்பனிடுவேன்.

இப்போது பகிர்தல் ஒன்றே அவசரம்.....

தேவையெனின் பின்னூட்டங்களில் சில விளக்கங்கள் தர முயல்வேன்.
  
ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்


என் தாயே!
நான் இவ்வுலகில் ஜனித்த நேரம்,
பிரசவ காலப் பெருவலியை
பல்லைக் கடித்துப் பொறுத்தாய்.

சுளிப்புதர  நான் அசுத்தம் செய்த படுக்கையை
களிப்புடன் பரிவாகவே நீ பகிர்ந்தாய்.

மணிவயிற்றில் எனை நீ சுமந்த காலம்
மேனியிளைத்து வலியும் ஏற்றாய்.

இதற்கெல்லாம் ஈடாக
ஏதும் செய்தல் இயலுமோ?
எத்தனை நான் உயர்ந்தாலும்,
என்னருமைத் தாயே?
****

குருகுலத்தினில் நானிருந்து பயின்றகாலை,
துவராடை நான் தரித்து துறவு பூண்டதாய்
கனவுகண்டு அரற்றினாய்.

கடுகி வந்து கலங்கினாய்.
தடவி, தழுவியென் தலைகோதினாய்.

அருகிருந்த ஆசான்களும் மாணாக்கரும்
உருகியுன் நிலை உணர்ந்தார்கள்.
பேதையுன் பேரன்பை மறப்பேனோ?
பாதம் பற்றி பரவுதலன்றி
ஏதும் செய்தலறியேன் தாயே!

******

“அம்மையே! அப்பனே!
சிவனே! கண்ணனே!
குவலயம் காக்கும் கோவிந்தா!
ஓ ஹரி! ஓ முகுந்தா!”

என்னவெல்லாம் சொல்லிக் கதறினாய்
எனைப் பிரசவித்த வேளை?

இதற்கெல்லாம் ஈடாக
என்னருமைத்தாயே!
பணிந்துன்னை வணங்குதலன்றி
என்செய்கேன் அம்மா?

********

மரணத்தின் வாயிலில் நீ இருந்த நேரம்
அருகில் நான் இருந்தேனில்லை.

மடியேந்தி உன் தொண்டை நனைய,
குடிக்க நீரும் வார்த்தேனில்லை.

அந்திம  யாத்திரைக்காய் உனக்கேதும்
மந்திர சடங்குகள் செய்தேனில்லை.

செவிப்புலன் அடங்கும் சிறுவேளை காதருகே
தவிப்போடு ராமநாமம் உரைத்தேனில்லை.

காலம் தாழ்ந்தே  வந்து
கடமை தவறிய மைந்தனென் பிழை 
கருணையுடன் பொறுப்பாயம்மா.

*******

“ என் முத்து மணிச்சரமே!
 என் கண்மணியே!
 என் சின்ன ராஜாவே!
என் உயிரின் உயிரே!”

என்றெல்லாம் என்னைச்
சீராட்டி மகிழ்ந்தவளே!

இத்தனை அன்புக்கும்  ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிசி
என் கடைசி நன்றியாய்
என்னருமைத் தாயே.




23 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நெஞ்சம் கனக்க வைக்கும் மாத்ரு பஞ்சகம்..

முன்பெல்லாம் தேம்பி அழவைக்கும்..

தாய்க்கு கடவுளும் நிகராக மாட்டார்களே

துக்கத்தில் அனைவரும் பங்கேற்கிறோம்

காலம் மனத்துயரை ஆற்றி, தாய்க்கு ஆத்மசாந்தி அருள பிரார்த்திக்கிறோம்..

G.M Balasubramaniam சொன்னது…

ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆறுதல் என்பது காலம்தான் தரமுடியும். அன்னையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

ADHI VENKAT சொன்னது…

நெஞ்சை கனக்க வைத்தது அண்ணா.....

அம்மாவின் ஆத்மா சந்தியடைய கடவுளை பிராத்திப்போம்.

ADHI VENKAT சொன்னது…

தவறாகி விட்டது.

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மாத்ரு பஞ்சகம் பற்றி இதை விட வேறெப்போது இத்தனை உணர்ச்சியுடன் எழுதிவிடமுடியும் மோகன்ஜி? தருணமே உங்களின் மொழியைத் தேர்வு செய்துகொண்டது. அற்புதமான ஈரம் சொட்டும் வரிகள்.

அம்மா விட்டுச் சென்றவைதான் இனி பாடாய்ப்படுத்தும் சில காலம். அதையும் கடந்து செல்வோம்.

ஹேமா சொன்னது…

மோகண்ணா....கொஞ்சம் அமைதியாய் இருங்க.வேற சொல்லத் தெரிலண்ணா !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கொடியறு உறவாய்ப் பிறந்துப் பின்
மடியமர் மகனாய் வளர்ந்து - அவ்
வடி மரம் வேரோடு சாய்ந்தால், அது
இடியெனப் பாய்தலதனினும் கொடுமை!

ஸ்ரீராம். சொன்னது…

தமிழும், வலைச் சொந்தங்களும் உங்களுக்கு ஆறுதலளிக்கட்டும். தாயின் மறைவு வாழ்வின் அர்த்தத்தை அசைத்துப் பார்ப்பதாய் நான் உணர்ந்தேன் என் தாய் மறைந்த போது.
இதனாலேயே
//இத்தனை அன்புக்கும் ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிசி
என் கடைசி நன்றியாய்
என்னருமைத் தாயே//.

இது போன்ற வரிகள் கண்களை நனைக்கின்றன. தேற்றிக் கொள்ளுங்கள். காலம் வருத்தங்களின் வீர்யத்தைக் குறைக்கும்.

அப்பாதுரை சொன்னது…

... இன்னும் இரண்டு முறை அழவைத்தது.

சிவகுமாரன் சொன்னது…

அழுகையுடன் பிரார்த்திக்கிறேன் அண்ணா

ரிஷபன் சொன்னது…

காலம் தாழ்ந்தே வந்து
கடமை தவறிய மைந்தனென் பிழை
கருணையுடன் பொறுப்பாயம்மா.


நெஞ்சை கனக்க வைத்தது .

சாந்தி மாரியப்பன் சொன்னது…

என்ன சொல்றதுன்னே தெரியலை.. மனசை ஆற்றுப்படுத்திக்கோங்க அண்ணா..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நெஞ்சம் கனத்தது.....

மனம் தளர விடாதீர்கள் அண்ணா.....

RVS சொன்னது…

நான்கு தெய்வங்களின் வரிசையில் முதல் தெய்வத்தை இழந்து வாடும் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். :-(

vasan சொன்னது…

சுந்த‌ர்ஜி ப‌திவிலிருந்து துய‌ர‌ச் செய்தியை அறிந்தேன்.

ஹ‌ரிஓம் செல்லித் த‌ந்த‌வர், யாரிட‌மும்
சொல்லாது அவ‌ர்க‌ளிட‌ம் சேர்ந்து விட்டார்.
தாய் இழ‌ப்பை தாங்க‌ எந்த‌ வ‌யதும் முதிர்ந்த‌ல்ல தான்‌.

எங்க‌ளின் அஞ்ச‌லி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வருந்துகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.
மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

எல் கே சொன்னது…

உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள். கடந்து வந்தாக வேண்டும் ஜி

கௌதமன் சொன்னது…

உங்கள் அம்மா ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

நிலாமகள் சொன்னது…

அதிர்வும் வேத‌னையும் ஏற்ப‌டுகிற‌து ஜி. ஆதிச‌ங்க‌ர‌ருக்கும் அப்பிராணி ம‌னித‌னுக்கும் அம்மாவின் இழ‌ப்பு ஒரே போன்ற‌ ம‌ன‌த்துய‌ரை ஏற்ப‌டுத்துவ‌தாய். விதி வ‌லிது ம‌ட்டும‌ல்ல‌ ... சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் கொடிதும்.கால‌ம்தான் அரும‌ருந்து. நீங்க‌ சுவாசிக்கும் காற்றிலும் ப‌ருகும் நீரிலும் ப‌க‌ல‌வ‌ன் ஒளியிலும் எங்கிருந்தோ காதுக‌ளை அடையும் கோயில் ம‌ணியின் ஓம்கார‌ ஒலியிலும் பாதையெங்கும் மிதிப‌டும் ம‌ண்ணிலும் நீக்க‌ம‌ற‌ நிறைந்து விட்டார் அம்மா. அருவுருவாய் உங்க‌ள் அடிம‌ன‌சில் அம‌ர்ந்திருக்கும் அம்மாவே துய‌ர்தாங்கும் தெம்பைய‌ளிக்க‌ட்டும்.

KG சொன்னது…

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get the Vote Button

தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

தீபிகா(Theepika) சொன்னது…

ஆற்றுப்படுத்த முடியா பெருந்துயரிது. ஆனாலும் வார்த்தைகளின் வழி தாங்கித் தானே ஆக ஆகவேண்டும்.

கோமதி அரசு சொன்னது…

இத்தனை அன்புக்கும் ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிசி
என் கடைசி நன்றியாய்
என்னருமைத் தாயே.//

என் அம்மாவை நினைத்துக் கொண்டேன் அவர்கள் உடம்பு வந்து படுத்து இருந்த போது கடவுள பாடல்களை பாடச்சொல்லி கேட்பார்கள். அவர்கள் கொஞ்சம் நன்றாக இருக்கிறார்கள் என் என் வீட்டுக்கு வந்தேன் இறந்து விட்டார்கள் எத்தனை வயது ஆனாலும் அம்மாவின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாது. முற்றும் துறந்த முனிவர் ஆனாலும் அம்மாவின் பாசத்தை துறக்க முடியாது அதை தான் இந்த பாடல் சொல்கிறது.
பட்டினத்தாரும் தன் தாயின் இறப்புக்கு வந்து விறகு கட்டையால் எரித்தால் மேனி நோகும் என்று வாழைமட்டையால் எரிக்கிறார்.
தாய் பாசம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.