புதன், நவம்பர் 05, 2014

அமிர்த மந்தனம்




இவனுமொரு நீலகண்டன்.


அமிர்தம் கடைகிறார்கள் எனக்
                                               கேள்வியுற்று,
ஓடு நிறைய அமிர்தம் எனும் ஆவலோடு,
பாற்கடல் கரையதிர ஓடி வந்தவன்.


கடைந்தார்கள்.
கடைந்தார்கள்.
கட்சிகட்டிக் கொண்டு கடைந்தார்கள்.

வெளிவந்த ஐராவதமும் உச்சஸ்ரவைஸும் 
                                    இவனுக்கு லட்சியமில்லை
கௌஸ்துபமும் கற்பகத்தருவும் 
                                     ஒரு பட்சமுமில்லை.
ஓர் ஓடளவுக்கு அமிர்தம் போதும்.

சிலுப்பிசிலுப்பி கடல் நுரைத்தது.
ஆர்ப்பரித்து அலைபுரண்டு கடல் வரண்டது.

கருமைசூழ்ந்து ஓலமெங்கும் அதிர்ந்தவேளை,
அமிர்தம் கிடைக்காதென்று தெரிந்து போனது
ஆலாலம் திரண்டெழுந்து கையில் விழுந்நது.
விரக்தியிலே நஞ்சையவன் உண்ணலானது.

கண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.
ஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்.
அண்டம் போற்ற தேவர்முனி என்றா ரும் அறியார்.
ஓடொன்றே அறியும் தியாகேசன் உள்ளக் கிடக்கை.

உச்சியிலே என்றுமிங்கே மீளாத்தனிமை.
வரம்தந்து வரம்தந்து சலித்த பெருமை.
ஈடேறா விருப்பங்களே ஈசன்நிலைமை.
கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை.










(பட உதவி: கூகிள் )








52 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஓடொன்றே அறியும்
தியாகேசன் உள்ளக் கிடக்கை.

தியாகேசனின் பெருமை
அமிழ்தினும் இனிது அன்றோ..!

மோகன்ஜி சொன்னது…

இறைவனை மனிதனாக்கிப் பார்த்த சிந்தனை இது. நன்றி இராஜேஸ்வரி மேடம்.

ஹேமா சொன்னது…

அமிர்தம் கிடைக்காதென்று தெரிந்து போனது
ஆலாலம் திரண்டெழுந்து கையில் விழுந்தது....வித்தியாசமான சிவன் சிந்தனை.அற்புதம் மோகண்ணா !

கோமதி அரசு சொன்னது…

உச்சியிலே என்றுமிங்கே மீளாத்தனிமை.
வரம்தந்து வரம்தந்து சலித்த பெருமை.
ஈடேறா விருப்பங்களே ஈசன்நிலைமை.
கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை.//

இறைவனை மனிதனாக்கி பார்த்த கவிதை நன்று.


இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்! அவன் மனிதன் படும் துன்பம் எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று கண்ணதாசன் பாடல் போல் உள்ளது.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம், தெய்வம் என்பவன் மனிதன் ஆகலாம். நல்ல கற்பனை.

மோகன்ஜி சொன்னது…

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹேமா! யாவும் நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

நன்றி கோமதி மேடம். அழகான கண்ணதாசன் பாடலை நினைவுறுத்தினிர்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

ஈடேறா விருப்பங்களே ஈசன்நிலைமை
கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை....

உன்னதமான ஈசன் நிலையை எனக்கு உணரவைத்த பெருமை தங்களுக்கு தான் ஐயா ...

நிலையெதுவும் இல்லை நில்லென கூறுவாரில்லை கடந்தது மறந்து நடந்தே சென்றது தேடலின் தேடலே எங்கும் எவரிடத்தும் நிறைந்து கிடக்க ஈடேறா விருப்பங்களே அங்குமிங்கும் அலைமோதும் கடலே ஆர்ப்பரிப்பின் ஆதங்கம் அறிய வழிச் செய்தாய்

ஸ்ரீராம். சொன்னது…

இறைவனுக்கு விரக்தியா? ஹா...ஹா.. மனைவிகள் வாழவும் விடுவதில்லை, சாகவும் விடுவதில்லை போல! :))))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…


அகமுடையாளுக்கு ஆலகால விடமே மேல் என்றிருந்தவனை.....

ஐயகோ! என்ன கொடுமை இது!

தனிமரம் சொன்னது…

ஆசையின் துன்பத்தை ஈசன் கடையச்சொல்லிய விதம் ஆலகால விசமே!

மோகன்ஜி சொன்னது…

தினேஷா! தமிழைச் சிலுப்பி கொட்டுவாய் சந்தமும் அந்தமுமாக.....

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம் ! அஹஹா..... என்னமா போட்டீக ஒரு போடு... ரொம்ப நாளாச்சுங்க இப்படி கேட்டு...

மோகன்ஜி சொன்னது…

இப்பத்தேன் ஶ்ரீராம் ஒரு ஜெர்க் கொடுத்துட்டு போரார்... பின்னுக்கா நீங்க..... சபாஷ் மூவார்... எனக்கு டின்னுகட்டப் போராங்க டோய்...

மோகன்ஜி சொன்னது…

தனிமரம் ஜீ! இது ஒரு புதிய பார்வைங்க... நன்றி !

Aathira mullai சொன்னது…


மோகன் ஜி. நலமா? அந்தக் காலம் போல இல்லை இந்த முகநூல் காலம். ஆனால் நான் பலமுறை உங்க வீட்டுக்கு வந்தேன். வா என்று அழைக்க யாரும் இல்லாது பூட்டியே கிடந்தது. அதனால் மிகுந்த வருத்தத்தோடு திரும்பச் சென்றேன். அப்படியே தான் ஆர்.வி.எஸ். வீட்டுக்கும். சரி அதை விடுங்க. நலமா? உங்க எழுத்தையெல்லாம் படிக்காமல் ரசனையில்லாத வாழ்க்கைதான்.


//கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை//
மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அழகு கவிதை.

பெயரில்லா சொன்னது…

''..கண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.
ஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்...''

முதலில் படம்!
இப்படியே மலேசியா விமான நிலையத்தில்
உள்ள சொரூபம் நினைவு வந்தது. சிலையாகச்
செய்து வைத்துள்ளனர் இக்காட்சியை.
அடுத்து கவிதை....என்ன ஒரு பாணி.!
மிக வித்தியாச ரசனையாக வரையப் பட்டிருந்தது.
இரசித்தேன். இனிய வாழ்த்து.
அம்மாடி!... என்னாலே இப்படி எழுத முடியாதப்பா!....
வேதா. இலங்காதிலகம்.

பெயரில்லா சொன்னது…

''..கண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.
ஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்...''

முதலில் படம்!
இப்படியே மலேசியா விமான நிலையத்தில்
உள்ள சொரூபம் நினைவு வந்தது. சிலையாகச்
செய்து வைத்துள்ளனர் இக்காட்சியை.
அடுத்து கவிதை....என்ன ஒரு பாணி.!
மிக வித்தியாச ரசனையாக வரையப் பட்டிருந்தது.
இரசித்தேன். இனிய வாழ்த்து.
அம்மாடி!... என்னாலே இப்படி எழுத முடியாதப்பா!....
வேதா. இலங்காதிலகம்.

சிவகுமாரன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனையில் உதித்த கவிதை.
அருமை அண்ணா.
இச்சை கொண்ட தேவரெல்லாம்
இன்னமுதம் அள்ளித்தின்ன
நச்சை மட்டும் தானே உண்ட சாமி - இட்ட
பிச்சையிலே வாழுதிந்த பூமி.

msuzhi சொன்னது…

ஏதாவது புரிந்தால் தான் பிரச்சினை.

மோகன்ஜி சொன்னது…

ஆதிரா! ஒரு வருடத்திற்கு மேலாக வலைப்பூ பக்கமே வர இயலவில்லை. கொஞ்சம் புத்தகம் எழுதுவோமேன்னு வீ்ஆர்்எஸ் எடுத்தபடி நேரம்
ஏற்படுத்திக் கொண்டேன்.

வானவில் மனிதன் மீண்டும் களைகட்டும். உங்களைப்போல் இதில் வந்துவந்து பார்த்து சலித்து மறந்த அத்தனை பேரையும் மீண்டும் மீட்பது பெரிய வேலைதான்.

நானோ உங்களை எல்லாம் மறக்கவியலுமா? வலைக்கு வரும்போதே உங்களை வம்புக்கிழுத்தபடி தான் வந்தேன். அப்பாதுரை சாரின் மூன்றாம் சுழியைப் பாருங்கள் ஆதிரா!

G.M Balasubramaniam சொன்னது…


" பார்” என்னும் இந்தக் கடலில் இனம் மொழி சாதி ஏழை பணக்காரன் எனும் “வாசுகி” மத்தை கொண்டு கடைந்தால் அமிர்தம் எங்கிருந்து வரும். துவேஷம் வெறுப்பு பகைமை ஏற்ற தாழ்வு இவைதானே வரும். கண்டம் பற்றித் தடுக்க தினம் ஒரு காந்தி அவதரித்தாலும் அவனையும் அதில் மூழ்கடிப்பார்கள்.

மோகன்ஜி சொன்னது…

வேதா! வாங்க வாங்க !! வந்திறங்கும் வாழ்த்துக்கும் நன்றி ! மலேசியா போனதில்லை... தமிழ்கூறும் நல்லுலகம் பரந்தது. நிறைய எழுதுங்கள் வேதா!

மோகன்ஜி சொன்னது…

சிவா!

//இச்சை கொண்ட தேவரெல்லாம்
இன்னமுதம் அள்ளித்தின்ன
நச்சை மட்டும் தானே உண்ட சாமி - இட்ட
பிச்சையிலே வாழுதிந்த பூமி//

முத்தாய்ப்பாக முத்தாரம்... நேற்று ஒரு கூட்டத்தில் பேசவாய்த்தது. திருக்குறள் குறித்து பேசும்போது உன்னைப்பற்றியும் உன் குறளையும் மேற்கோள் தந்தேன் உவகையுடன்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார் !
//ஏதாவது புரிந்தால் தான் பிரச்சினை.//

உலகமகா நடிப்புடா சாமி !

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

G.M.Bசார் !
//." பார்” என்னும் இந்தக் கடலில் இனம் மொழி சாதி ஏழை பணக்காரன் எனும் “வாசுகி” மத்தை கொண்டு கடைந்தால் அமிர்தம் எங்கிருந்து வரும். துவேஷம் வெறுப்பு பகைமை ஏற்ற தாழ்வு இவைதானே வரும். கண்டம் பற்றித் தடுக்க தினம் ஒரு காந்தி அவதரித்தாலும் அவனையும் அதில் மூழ்கடிப்பார்கள்.//

உரத்த சிந்தனை.... உண்மை ஐயா ! உங்கள் புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.. என் எண்ணத்தைச் சொல்வேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை அண்ணா...

மோகன்ஜி சொன்னது…


மிக்க நன்றி குமார்.நலம் தானே?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//ஓடொன்றே அறியும் தியாகேசன் உள்ளக் கிடக்கை.//

அமிர்தம் கிடைக்கவில்லையெனிலும் விடமாவது கிடைத்ததென்று உள்விழுங்க அதையும் தடுத்தாள் உமை!

கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லை! இல்லை வயிற்றுக்குக் கிடைக்கவில்லை எனச் சொல்லவேண்டுமோ!

நிலாமகள் சொன்னது…

மூன்று நாளுக்கொரு விருந்து!

'ஆஹா' என்று சுவைத்து மகிழும் போதே நம் சுந்தர்ஜி என் நினைவில் வருகிறார். எப்படியிருந்தவர்... நட்புகளை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்து விடும் தன்னம்பிக்கை உங்களிடமிருந்து அவருக்கும் வரட்டும். அவரும் வரட்டும் முகநூலில் இருந்து.

அகமுடையாள் பற்றி ஆனமட்டும் கலாய்த்துக் கொண்டிருந்தாலும் கண்டத்தில் நிறுத்திய அவள் பெருமை உங்கள் எல்லோர் மனசிலும் மறைவில் உண்டு என்பதறிவோம். 'என்னைத் தவிர வேறு யாரும் எதுவும் சாகடிக்க விடுவேனோ' என்பதாகக் கூட கதை கட்டலாம்:))

ரசிக்கும்படியான உங்க பதிவுகள் தொடர்ந்து வரும் அளவு சேகரம் செய்ய உதவிய 'விருப்ப ஓய்வு' வாழ்க!

நிலாமகள் சொன்னது…

@சிவகுமாரன்...

சபாஷ் தம்பி!

@ அப்பாஜி...

இத... இதத்தான் உங்ககிட்ட நாங்க எதிர்பார்க்கிறது:))

நிலாமகள் சொன்னது…

'தனிமரம்' நாடிச் செல்லும்படி ஈர்க்கிறது.

மோகன்ஜி சொன்னது…

வெங்கட் ! புதிய பார்வை.
ஈசனுக்கு நஞ்சென்ன அமுதமென்ன?

மோகன்ஜி சொன்னது…

நிலா! சுந்தர்ஜி வலையுலகம் எனக்குத் தந்த சீதனம். தன் கருத்துகளில் உறுதியாகவும் உண்மையாகவும் உள்ளவர். நேற்று மாலை எதற்காகவோ கண்ணியில் தேடிக்கொண்டிருந்தேன். சுந்தர்ஜி என்னைப்பற்றி சொன்ன கருத்து கண்ணில் பட்டது. இருவரும் பத்துநாட்கள் சபரிமலையில் சேர்ந்திருந்தோம். திரும்பி வந்தபின் இப்படி எழுதுகிறார் :

"மோகன்ஜியின் அருகாமை ஒரு பெரிய புதையல். எத்தனை ஒருமிப்பு அவருக்கும் எனக்கும் எனப் பல இடங்களில் தோன்றியது. நல்ல பொசுக்கும் மணலில் காலில் செருப்பின்றி நடந்துவிட்டு ஒற்றைப் பனைநிழலில் ஓடிவந்து நின்று ஒரு பாதத்தின் மீது மறுபாதம் பதித்து சூடு தணித்துக் கொள்வதாய் இருந்த்து அவரின் அனுபவ நிழல்.. அவரின் கடந்த காலமாய் நானிருப்பதாகவும் என் எதிர்காலமாய் அவர் இருப்பதாகவும் நான் உணர்ந்தேன். என் மனதில் வரைந்து கொண்டிருந்த பல சித்திரங்களின் பொருத்தமான வண்ணங்களில் மிகச் சரியாக பல நேரங்களில் அவரின் தூரிகை தோய்ந்திருந்தது."

நான் சிறியவனாகவும் என் சீடன் விஸ்வரூபத்திற்கு அடங்கியவனாயும் உணர்ந்த தருணம் அது. சுந்தர்ஜியிடம் பேசுவேன் வலை மீளல் குறித்து.

ஆர்.வீ்எஸ் ஐயும் நான் அழைக்கிறேன். மீண்டும் ஜமா சேர்த்து விட்டுதான் மறுவேலை !

மோகன்ஜி சொன்னது…

இன்று சுந்தர்ஜியின் பிறந்த நாள்.

தமிழ் போல் என்றும் வாழ்க !

ரிஷபன் சொன்னது…

உங்கள் கற்பனை ரசமானதுதான். ஆனாலும் அவனே அமிர்தம்.. இல்லையா ?!

சிவகுமாரன் சொன்னது…

\\திருக்குறள் குறித்து பேசும்போது உன்னைப்பற்றியும் உன் குறளையும் மேற்கோள் தந்தேன் உவகையுடன்.///

மிக்க நன்றி அண்ணா.

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார் !

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. அமுதம் அவனே... விஷம் கூட அவனே ! யாதுமாகி நின்றார்...

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துகளும் ஆசிகளும் சிவா !

நிலாமகள் சொன்னது…

"மோகன்ஜியின் அருகாமை ஒரு பெரிய புதையல். எத்தனை ஒருமிப்பு அவருக்கும் எனக்கும் எனப் பல இடங்களில் தோன்றியது. நல்ல பொசுக்கும் மணலில் காலில் செருப்பின்றி நடந்துவிட்டு ஒற்றைப் பனைநிழலில் ஓடிவந்து நின்று ஒரு பாதத்தின் மீது மறுபாதம் பதித்து சூடு தணித்துக் கொள்வதாய் இருந்த்து அவரின் அனுபவ நிழல்.. அவரின் கடந்த காலமாய் நானிருப்பதாகவும் என் எதிர்காலமாய் அவர் இருப்பதாகவும் நான் உணர்ந்தேன். என் மனதில் வரைந்து கொண்டிருந்த பல சித்திரங்களின் பொருத்தமான வண்ணங்களில் மிகச் சரியாக பல நேரங்களில் அவரின் தூரிகை தோய்ந்திருந்தது."//

வாழ்வின் ஓட்டத்தில் உடன் பயணிக்கும் மனிதர்கள் பெரும்பாலும் நம்மை விட மேலானவர்களாகவோ கீழானவர்களாகவோ இருந்துவிட, அபூர்வமாகவே நமக்கு சமமானவர்களாக இருந்து விடும் அதிசயம் நிகழ்ந்து விடுகிறது!!

கீதமஞ்சரி சொன்னது…


சிவனாக இருப்பதாலேயே
சிவனே என்றிருக்கவியலா நிலை.
அழிக்கும் கடவுளேயானாலும்
தனையழிக்கும் உரிமை தனக்கிலை.
தலையிலும் உடலிலுமாய் தாரங்கள்
தனிமைக்கும் வைக்கப்பட்டுவிட்டது உலை.
திருவோடுரைத்த திரைமறைசெய்தியும்
உலகோர் அறியும்படி உடனேறிவிட்டது வலை.
சிவ..சிவா!

கீதமஞ்சரி சொன்னது…

\\வாழ்வின் ஓட்டத்தில் உடன் பயணிக்கும் மனிதர்கள் பெரும்பாலும் நம்மை விட மேலானவர்களாகவோ கீழானவர்களாகவோ இருந்துவிட, அபூர்வமாகவே நமக்கு சமமானவர்களாக இருந்து விடும் அதிசயம் நிகழ்ந்து விடுகிறது!!\\ அன்பு நிலா, ஏனோ இவ்வரிகள் பார்த்து சட்டென்று உள்ளம் உடைப்பெடுத்து வழிகிறது.

மோகன்ஜி சொன்னது…

நிலா! சுந்தர்ஜியின் அகவெழுச்சியும் அழகும் நிறைந்த வரிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல உங்கள் உண்மை நிறைந்த வரிகள். பூங்காற்று மல்லிகையின் மணத்தை உடன்அழைத்து வருகிறது.

சுந்தர்ஜி எனக்கு பிரச்னை இல்லை. நான் சமானமான தளத்துக்கு வர போராடுவதெல்லாம் உங்களைப் போன்ற கூர்புத்தி ரசனைவல்லியுடன் தான் !

மோகன்ஜி சொன்னது…

கீதா! இன்னுமொரு ரசனைவல்லியா? சரிதான்!

இப்படி அழகான வரிகளுக்கெல்லாம் உள்ளம் உடைப்பெடுத்து வழிந்துதான் இலக்கிய ஓடத்தை விட்டு இறங்காமலேயே இருக்கிறேன். வாங்க! வந்து ஏறிக்குங்க கீதமஞ்சரி !

நிலாமகள் சொன்னது…

@ கீத மஞ்சரி...

பொங்கிப் பிரவகிக்கிறதே பின் ஊட்டத்திலும் சிவப்பிரேமை...!

@ மோகன் ஜி ...

உங்களைப் போன்ற கூர்புத்தி ரசனைவல்லியுடன் தான் !//

உங்களுக்கும் சுந்தர் ஜிக்கும் சமானமாக நானெல்லாம் கனவில் கூட வர முடியாது. உங்கள் தோளில் ஏறியிருப்பதால் உங்களை விட உயரமாகி விட்டதாகிவிடுமா?!

நிலாமகள் சொன்னது…

பதிவிடும் வேகம் மந்தித்து விட்டதே...

கதம்ப உணர்வுகள் சொன்னது…

ரசனைகளின் உச்சம் சார் நீங்க. இல்லன்னா இப்படி ஒரு சிந்தனை வந்திருக்குமா? தலைப்பே அசத்துகிறதே... அற்புதம் மோகன் ஜீ..


தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

சமுத்ரா சொன்னது…

அவன் உண்டால் நஞ்சும் அமுதாகும்.!
நன்றி

நிலாமகள் சொன்னது…

இனிதான தமிழர் திருநாள் வாழ்த்துகள் சார்.

நிலாமகள் சொன்னது…

இனிதான தமிழர் திருநாள் வாழ்த்துகள் சார்.

Geetha Sambasivam சொன்னது…

கவிதை அற்புதம் என்றால் அனைவரின் கருத்துக்களும் ஓர் அமுதசுரபி! எடுக்க எடுக்கக் குறையாத ரசனை அனைவருக்கும். எல்லோரின் ரசனையும் அவரவர் கருத்துக்களில் வெளிப்படுகிறது.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்... நீங்கள் சொல்வது போல் அனைவரின் ரசனையும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது