சனி, ஏப்ரல் 23, 2016

தி ஜானகிராமனின் செம்பருத்தி

அண்மையில் தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம்  தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும் நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம் விமரிசிக்கப்பட்டவை   அம்மா வந்தாள், மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில், அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம். 

நிகழ்வுகளைக் கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல் போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்....இவை 
தி ஜாவின் தனிமுத்திரை.

கண்களைக் கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும் பரிவையும்அவருடைய முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல் பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்......எவ்வளவு பெரிய படைப்பாளி  தி ஜா?!

செம்பருத்தியின் நாயகன் சட்டநாதன். அறத்தின் மாண்பை இயல்பாகக் கொண்டு, அதை வாழ்க்கையின் பிரவாகம் அடித்துச் சென்றுவிடாமல் பற்றிக் கொண்டிருக்கும் இயல்பான மனிதன்.

சட்டநாதனின் இளமைக் காலம், சட்டநாதனின் நடுவயது, முதுமையின் வாசலில் சட்டநாதன் என்று மூன்று நிலைகளையும் தொட்டுச் செல்கிறது கதை. சட்டநாதனின் வாழ்க்கையில் மோதுகின்றார்கள்  மூன்று பெண்கள். பெரிய அண்ணி, சின்னஅண்ணி குஞ்சம்மாள் , மனைவி புவனா என்ற மூவரும் அவன்பால் கொள்ளும் ஈர்ப்பு, அவனை அலைக்கழிக்கும் அவர்களின் குணமாறுபாடுகள், அவற்றினூடே தன் சீர்மையை விட்டு அகலாது சட்டநாதன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் விவரிப்பே கதை.தஞ்சையின் ஒரு சிறு கிராமத்துச் சூழலில் வளரும் கதையின் துணை மாந்தர்களும் தன் இருப்பை நம் மனத்தில் ஆழப் பதிக்கிறார்கள் .

இளம்பிராயத்தில் சட்டநாதன் காதல்வயப்பட்ட குஞ்சம்மாளை அவனுடைய சின்ன அண்ணன் மணக்க நேர்கிறது. சட்டநாதனும் அவன் அம்மாவும் அந்த சின்ன அண்ணன் ஆதரவில்தான் வாழ்கிறார்கள். சட்டநாதனின் கண்டிப்புமிக்கஅதேசமயம் பேரன்பை மனதில் பூட்டிவைத்திருந்த சின்னஅண்ணன் முத்துசாமி சடுதியில் இறந்துபோகிறான். இளம்விதவையான குஞ்சம்மாள் தன் கைக்குழந்தையுடன் புகுந்த வீட்டிலேயே வாழத் துணிகிறாள்.

இந்த கட்டத்தில் பஞ்சாய் சட்டநாதனும், நெருப்பாக குஞ்சம்மாளும் அருகருகே இருக்க, சட்டநாதனோ சின்ன அண்ணன் மேல்கொண்ட நன்றியில் ‘நனைந்த பஞ்சாகவே’ காலம் கடத்துகிறான். சட்டநாதன்மேல் தனக்கான பிரியத்தை வெளிப்படுத்தும் குஞ்சம்மாளின் வேட்கையை சட்டநாதன் மறுதலிக்கிறான். பலவந்தமாய் அவனை ஒருமுறை இறுக அணைத்துவிட்டு, ‘வாழ்நாளுக்கு  இதுவே போதும்’ என்பதாய் குஞ்சம்மாள் ஒதுங்குகிறாள். 

சின்னஅண்ணன் தன் மரணத்தருவாயிலும் சட்டநாதனுக்கு சிவநெறிச் செல்வரான சண்பகவனம் பிள்ளையின் மகள் புவனாவை நிச்சயித்து விட்டே இறக்கிறான். செம்பருத்தி மலரைக் கூந்தலில் எப்போதும் சூடும் புவனா அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு பொறுமைசாலியாய், ஒரு ஆதர்ச மனைவியாகவே வருகிறாள். சட்டநாதன் ஒளிவுமறைவின்றி அத்தனை நடப்புகளையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்கிறான், சின்ன அண்ணியோடு தனக்கிருந்த காதல் உட்பட. சின்னசின்ன சம்பவங்களினூடே அந்த தம்பதிகளின் அன்னியோன்னியதிற்கு வண்ணம் சேர்க்கிறார் தி.ஜா.

இதுவரை சட்டநாதன்குடும்பத்தில் ஒட்டாது, வசதியான வணிகராய் சட்ட நாதனின் பெரியண்ணன் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். பெரும் வாழ்வு வாழ்ந்து ஓரிரவில் அத்தனையும் இழந்து, சட்டநாதனின்  ஆதரவில் அண்டிவாழும் நிலைமைக்கு ஆளாகிறார். பெரிய அண்ணனின் மனைவி தான்  கதையின் சிக்கலான வார்ப்பான ‘பெரிய அண்ணி’. தி. ஜாவின் விவரிப்பில் பெரிய அண்ணியின் மேல் கோபமும், அசூசையும், அனுதாபமும் மாறிமாறி நம்மை ஆட்கொள்கின்றன. படாடோபமும், எடுத்தெறிந்து பேசுவதும், மாளா காம இச்சையும், குயுக்தியும், குதர்க்கமும் கலந்த ஒரு பாத்திரமாய் இருப்பவள் பெரிய அண்ணி. வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடிக்கொள்ளும் பெரியண்ணனின் தொடுப்பாய் ஆண்டாள் எனும் ஒரு தாசி. தாசியேயானாலும் அவரை உளமார நேசிக்கும் குணவதி.

பெரியண்ணன் குடும்பமும் கிராமத்திற்கு வந்து சேர, சச்சரவுகள் மிகுந்து இருப்பை நரகமாக்குகின்றன. துர்க்குணமே உருவாக பெரிய அண்ணியும் குஞ்சம்மாளையும் சட்டநாதனையும் தொடர்பு படுத்தி புரணி பேசுகிறாள்.
காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. சட்டநாதன் பொருளாதார மேம்பாடும் மன முதிர்ச்சியும் அடைகிறார். பிள்ளைகள் பெரியவர்களாகிறார்கள். சின்ன அண்ணனின் மகளுக்கும்,மற்றும்  பெரியண்ணன் வாரிசுகளுக்கும் திருமணம் செய்விக்கிறார் சட்டநாதன். முன்பு பெரியண்ணன் பட்டகடனை அடைக்க விற்ற நிலத்தில் கிடைத்த புதையல் மூலமான பணம், வாங்கியவரின் மகன் மூலம் கிடைக்கிறது. அதில் சின்ன அண்ணன் பங்கு என சின்ன அண்ணிக்கு சட்டநாதன் கொடுக்க எத்தனிக்க, சின்ன அண்ணிக்கு அவர்பேரில் பெரும் கசப்பு மூள்கிறது.

தன்னுடனான உறவையும்கூட புவனாவுக்கு சட்டநாதன் தெரிவித்து இருந்ததை அவன் மூலமே அறிந்து வெறுப்புற்று தன் மகள்வீட்டோடு  போகிறாள் குஞ்சம்மாள். மனதுக்குள் சட்டநாதன் மேல் நேசம்வளர்த்து, அதை  போஷித்து ஆராதித்து வந்தவளின் அன்பே துவேஷமாக மாறி நிரந்தரமாய்ப் பிரிகிறாள். பெண்ணோடு வாழ சென்னைக்கு போய்விடுகிறாள்.

கடைசிவரை தேளாய் கொட்டிக்கொண்டிருந்த பெரிய அண்ணி, தன் மேல் தானே கொண்ட வெறுப்பில் உணவையும் மறுத்து ஆரோக்கியம் கெட்டு காலமாகிறாள். பெரிய அண்ணனுக்கும் மரணம் நேர்கிறது. சட்டநாதனின் பிள்ளைகளும் பணி நிமித்தம் வெளியூர்களுக்கு சென்று விடுகிறார்கள்.

இதுகாறும் சட்டநாதன் வாழ்வில் பூவாய் வாசம் வீசிய புவனா, ஒரு கேள்விக்குறியாய் மாறிப்போகிறாள். சட்டநாதனை சந்தேகத்தாலும் நம்பிக்கையின்மையாலும் வாட்டி எடுக்கிறாள். சின்ன அண்ணியுடனான சட்டநாதனின் உறவை மீண்டும் தோண்டியெடுத்து சந்தேகச்சாட்டை வீசுகிறாள்.

தான் ஏமாற்றப் பட்டதாயும் இடையூறாய் இருந்து விட்டதாயும் சிடுசிடுத்தபடி சட்டநாதன் வாழ்க்கையை நரகமாக்குகிறாள். புவனாவின் இந்த குணபேதத்தை சட்டநாதன் பொறுமையாகக் கையாள்கிறார். PMT( Pre Menstural Tension) எனும் மெனோபாஸ் பருவத்து உளச்சிக்கலை புவனாவின் இந்த பிறழ்நிலைக்கு காரணமாக்கி புவனாவுக்கு தி ஜா வக்காலத்தும் வாங்குகிறார்.

மீண்டும் புவனா ஆச்சர்யக் குறியாய் மீள்கிறாள். பழைய புவனாவாகி அன்பு செலுத்துகிறாள். கதையும் முடிகிறது.

ஆணும் பெண்ணும் ஈருடல் ஒருயிராய் எக்காலமும் மாற இயலாது என்று முத்தாய்ப்பு வைக்கிறாரோ தி ஜா? முடிவில் சட்டநாதன் புவனாவை அணைத்துக் கொள்கிறார். அவளும் அவருக்குள் புகுந்து கொள்வதுபோல் தான் ஒட்டிக் கொள்கிறாள்.
‘ஒன்றாக முடியவில்லை போல் தான் இருந்தது.அவருக்கு.அணைப்பு விட்டதும் மீண்டும் தனியாகத்தான் இருந்தது.
ஈஸ்வரனால் தான் முடியும் போலிருக்கிறது என்று அவருக்குத் தோன்றிற்று. ஈஸ்வரனுக்கும் முடியாது.ஒரு முலையும் ஒரு மூக்குத்தியும் ஒரு கொலுசும் நசுங்கிவிடவில்லை.மறைந்துவிடவில்லை.’
ஒரு சாதாரண கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் தி ஜா.

தி ஜா வின் படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின் சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக  காட்டியிருப்பதாய்ப் படுகிறது.

இளம்விதவையான சின்ன அண்ணி தன்பால் கொண்டுள்ள ஈர்ப்பை அறிந்தும், தன்னை பார்த்துக் கொண்டாவது இருப்பதே போதும் எனும் அவளின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்டும் கூடபுது தம்பதிகளாய் அவளையும் உடன்வைத்துக் கொண்டு வாழ்வது சரியா சட்டநாதன்? என்று கேட்கத் தோன்றுகிறது. கதையின் விவரிப்பில் குஞ்சம்மாள் விரகத்தில் எரிந்து கொண்டிருப்பதை உள்ளூர வெறித்துக் கொண்டிருக்கும் ‘ஆண்மை’ மிக்கவனோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு புத்திசாலியாக வாழும் புவனா கூட இந்த சேர்ந்து வாழ்தலை யோசிக்கவில்லையோ? அதுவும் புருஷன்-ஓரகத்தி பூர்வோத்திரம் அறிந்த பின்புமா? இளம்விதவைகளை வதைப்பதே வேலையாய் போய் விட்டது தி ஜாவுக்கு!
அப்போ அம்மா வந்தாள் இந்து.... இப்போ குஞ்சம்மாள்....

‘பெரியண்ணி’யை புளியமரம் என்று உருவகிக்கிறார். அடுத்தவர் சுவாசக் காற்றை மாசேற்றும் புளியமரம்.. பேய் வாழும் புளியமரம்... அவளுடைய காமத்தை வெளிச்சம் போடும் படைப்பாளி, கைப்பிடித்தவன் தொடுப்பை நியாயம் செய்வது போன்று மெழுகுவதும், தாசி ஆண்டாளம்மாவை அம்பிகையாக தோற்றுவிப்பதும் ஒருவேளை பெரியண்ணி பாத்திர வார்ப்பை மேலும் குரூரமாகத் தோன்றச் செய்யத்தானோ?

புவனாவுக்கு வருவோம். மாதர்குல மாணிக்கமாய் நிறுத்தப்படும் புவனா, சட்டநாதனிடம் கொடூரமாய் நடந்து கொள்வது எதிர்பாராதது. புவனாவின் இந்த சறுக்கல்,சின்ன அதிர்ச்சி மதிப்பையன்றி கதைக்கு எந்த பரிமாணமும் ஏற்படுத்தாத திணிப்பாகத் தோன்றுகிறது. மாறாக, ‘ச்சே! பொம்பளைங்களே இப்படித்தான்’ எனும் நினைப்பை வரவழைக்கிறதோ? இந்த ‘திருப்பத்தேவை’  வாராந்திர தொடர்கதைக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.   

இடையிடையே சுதந்திரப் போராட்ட செய்திகள் கதையின் காலத்தை நினைவுறுத்துகின்றன. ஆனாலும் இது பழைய கதை என்று ஒதுக்கவியலாமல் நம்மையும் எல்லா கதாபாத்திரங்களும் ஆகர்ஷித்துக் கொள்கின்றன.

வரப்பில் முளைத்த குறும்பூக்கள், வீடுதோறும் மாக்கோலம் துலங்கும்  தெருவின் காட்சிகள், வயல்,வரப்பு, கடை,மூங்கில் மரக்கூட்டம், பட்சிஜாலம், என அனைத்தையும் விவரிக்கும் அழகு.. இயல்பான உரையாடல்களில் தெறிக்கும் கூர்மையும், தஞ்சை வழக்கும்... அடடா!

கதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.

தி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு  தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும்வாசிப்பின் போதுஇரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.

அந்த பதில்....
‘அது அப்படித் தான்!’


                                                                                   பிரசுரம் :ஐந்திணைப்பதிப்பகம்
                                                                                                              செம்பதிப்பு 2003

176 comments:

நிலாமகள் சொன்னது…

தி.ஜா.வின் செம்பருத்தியை நூலகத்தில் தேடிப் படிக்க உந்துதல் தருகிறது பதிவு.

அவரைப் பற்றியும் அவரது படைப்பாற்றல் பற்றியும் துல்லியமான கணிப்பு தான்.

வாழ்க்கையின் பிரவாகம், நனைந்த பஞ்சு இதெல்லாம் தங்கள் புத்தி கூர்மைக்கு சான்றாகிறது.

சின்ன வயசில் அடுக்கு செம்பருத்தியை தலையில் சூடி வரும் சக மாணவிகளை கண்டிருக்கிறேன். எம்மலரையும் ஏற்று மிளிர்கிறது கருங் கூந்தல்! மலர்களின் மணமும் குணமும் நிறமும் மாறுபடுவது போலவே மனிதர்களும்!

//ஆணும் பெண்ணும் ஈருடல் ஒருயிராய் எக்காலமும் மாற இயலாது //
நெத்தியடி!

பாலகுமாரன் தன் நாவலொன்றில் சொல்வார்... "ஒவ்வொரு உயிரும் தனித்தனி. அதன் சிரிப்பு தனி. வேதனை தனி. எல்லாம் தனித்தனி என்கிறச்சே காதல், திருமணமெல்லாம் அபத்தம்."

//நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள//

ஒவ்வொரு வாசிப்பும் வாசகனை செதுக்கும் சிற்றுளியாய்!

//கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான்.//

உங்க நேர்மை எனக்கும் பிடிச்சிருக்கு ஜி.

பதிவின் கடைசிப் பத்தி... கடைசி வாக்கியம்... தேர்ந்த சிற்பியின் கண் திறப்பு!!



வல்லிசிம்ஹன் சொன்னது…

நானும் மூன்றாவது தடவையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். புவனாவுக்காக.
சட்ட நாதனுக்காக. தி ஜாவுக்காக என்று சொல்லிக் கொண்டாலும்
தமிழுக்காக என்பதுதான் நிஜம்.
உங்கள் அளவு இத்தனை ஆழமாக நான் யோசிக்கவில்லை.
பெரிய அண்ணிக்கு சட்ட நாதன் மேல் அசூயை என்று நினைத்தேன்.

அப்பா ..........என்ன எழுத்து.
நல்லதொரு ஆராய்ச்சி.மீண்டும் ஒரு தடவை படித்த திருப்தி. ஜி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இதுவரை படித்ததில்லை
அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
நன்றி

S.P.SENTHIL KUMAR சொன்னது…

//தி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.

அந்த பதில்....
‘அது அப்படித் தான்!’//
மொத்த நாவலின் தாக்கத்தையும் இந்த கடைசி பத்தி சொல்லி விடுகிறது. அற்புதமான விமர்சனம். படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

மோகன்ஜி சொன்னது…

முதல் கருத்தே நிலாவின் கருத்தாய் வாய்ப்பது தி ஜா பற்றிய பதிவுக்கு ஒரு மங்கல வாழ்த்து.உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி! தமிழ் இலக்கிய உலகில் தான் எத்தனை பெரும் படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள்? காமத்தின் பளபளப்பை கதையாக்கி சொல்பவர் எனும் குற்றச்சாட்டு தி ஜா மேல் எப்போதும் உண்டு. அவருடைய 'அம்மா வந்தாளு'க்காக அவருடைய ஊரே அவரை தள்ளி வைத்தது. பெரிய பத்திரிகைகளில் அந்த சமயம் அவரைகிழித்து தொங்க விட்டார்கள். ஆசாரம் தவறிய எழுத்தாக பார்க்கப் பட்டது. ஒரு மெல்லிய சிரிப்போடு தான் அத்தனையையும் கடந்திருக்கிறார். அவருடைய கதைகளை கூர்ந்து நோக்கும்போது அவர் காமம் ஒன்றைமட்டுமே பேசவில்லை. இசை, அறம், மனித நேயம் அனைத்தும் அவருடைய எழுதுகோலில் மசியாய் நிறைந்திருந்தது.

எந்த உணர்வையும் அவர் எடுத்தாளும் போது அதற்கு ஒரு இலக்கிய அடர்த்தியை சேர்த்த எழுத்து அவருடையது.

//எம்மலரையும் ஏற்று மிளிர்கிறது கருங் கூந்தல்! மலர்களின் மணமும் குணமும் நிறமும் மாறுபடுவது போலவே மனிதர்களும்! //
மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். செம்பருத்தி பொதுவாக ஆண்டவனுக்கு சூடும் மலராகவே இருக்கிறது. புவனாவின் குணத்திற்கான ஒரு குறியீடாக தி ஜா செம்பருத்தியை கையாள்கிறார். யாரும் கவனிக்காத வரப்பின் குறும்பூக்கள் கூட அவர் எழுத்தில் சாபல்யம் பெறுகின்றன.

கோமதி அரசு சொன்னது…

செம்பருத்தி படிக்கவில்லை.
நீங்களே ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லி விட்டீர்கள்.

//வரப்பில் முளைத்த குறும்பூக்கள், வீடுதோறும் மாக்கோலம் துலங்கும் தெருவின் காட்சிகள், வயல்,வரப்பு, கடை,மூங்கில் மரக்கூட்டம், பட்சிஜாலம், என அனைத்தையும் விவரிக்கும் அழகு.. இயல்பான உரையாடல்களில் தெறிக்கும் கூர்மையும், தஞ்சை வழக்கும்... அடடா!//
இதற்காக படிக்கலாம்.

கோமதி அரசு சொன்னது…

எங்கள் வீட்டில் அடுக்கு செம்பருத்தி கலர் கலராக இருக்கும் என் பெண் தினம் பள்ளி, கல்லூரிக்கு தலையில் சூடி செல்வாள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாசித்ததில்லை அண்ணா... இந்தப் புத்தகம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

வாசிக்கும் ஆவலைத் தூண்டும் பகிர்வு.... கண்டிப்பாக வாசிக்கணும்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி வல்லிசிம்ஹன் மேடம்!

தமிழுக்காக வாசிக்கிறேன் என்பது உயரிய சிந்தனை. தமிழில் தான் எத்தனை சாத்தியங்கள்?!

மோகன்ஜி சொன்னது…

வாரும் கரந்தையாரே ! தி ஜா உங்கள் வட்டாரத்தின் பெருமை அல்லவா? அவசியம் நாவலைப் படியுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க செந்தில்! ஒரு இலக்கிய வாசகன் தவறவிடக் கூடாத படைப்பாளி தி ஜா! அவசியம் படியுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

வருக கோமதி அரசு மேடம்!

என் கதை சுருக்கம் ஒரு அறிமுகமாகத்தான். கதையை தேடித் படியுங்கள். அடுத்த முறை பார்க்கும் போது உங்களை நாவலில் சில வினாக்கள் கேட்டு பரிட்சை வைப்பேன்!

மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம்!
செம்பருத்தியில் தான் எத்தனை வகைகள். என் அப்பாவுக்கு பிடித்த பூ. எங்கள் வீட்டிலும் பல தினுசாய் செடிகள் இருந்தன. ஒவ்வொரு சுவாமிக்கும் ஒவ்வொருவகை செம்பருத்தி மலர் வைப்பார். நினைவுகளை மீட்டிவிட்டீர்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சிலருடைய பெயரைச் சொன்னாலே மனதில் நம்மையறியாமல் ஒரு புத்துணர்ச்சி வரும். அவ்வரிசையில் தி.ஜா. பகிர்வுக்கு நன்றி.

சாரதா சமையல் சொன்னது…

நான் இந்த நாவலை அவசியம் படிக்க முயற்சி செய்கிறேன். எனது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி சார். தொடர்ந்து வருகை தாருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

என்ன?? குமார் கூட இந்த நாவலைப் படிக்கவில்லையா? படியுங்கள் குமார்.
'மோகமுள்' அக்கார வடிசல் என்றால்,செம்பருத்தி எள் உருண்டை. இரண்டும் இனிப்புத் தானே?

மோகன்ஜி சொன்னது…

முனைவர் ஜம்புலிங்கம் சார்!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தி ஜா படிப்பது ஒரு சுகம் தான்!

மோகன்ஜி சொன்னது…

சாரதா மேடம்! எனக்கு உங்கள் கத்திரிக்காய் வறுவல் நினைப்பாகவே இருக்கிறது!

அப்பாதுரை சொன்னது…

சினிமாவாக வந்திருக்கிறதா?

தி.ஜா நிறைய ஆச்சரியங்களை விட்டுப் போயிருக்கிறார் என்பது புரிகிறது.

அதை விடுங்க - கத்தரிக்காய் வறுவலா? கேள்விப்பட்டதே இல்லையே?

ஜீவி சொன்னது…

///அதை விடுங்க - கத்தரிக்காய் வறுவலா? கேள்விப்பட்டதே இல்லையே?

அதை விடுங்க..

ஒரு அசாதரணாத்திலிருந்து சட்டென்று சாதாரணத்திற்குப் போவது தான் அப்பாதுரையார் ஸ்டைல்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,

செம்பருத்தி சினிமாவாக வரவில்லை.எடுத்தாலும் ஓடுமா என்று தெரியாது.
தி ஜா வின் மோகமுள் சினிமாக வந்தது. யூ டியூபில் காணக் கிடைக்கிறது. முடிந்தவரை செம்மையாக எடுக்கப்பட்ட படம். ஆனால் வாசிப்பனுபவத்தின் சுகத்தை எட்ட இயலாது நிற்பதாய் தோன்றுகிறது.

அவருடைய நாடகம் 'நாலுவேலி நிலம்' சினிமாவாக வந்தது.தோல்வியைத் தழுவிய படம். அதன் ஒரு பாடலை யூ டுயூபில் தேடித் பிடித்தேன். சுட்டி இதோ:https://www.youtube.com/watch?v=MaaAQTkhEj8

அவருடைய அம்மா வந்தாளை சினிமாவாக்க முயற்சி நடந்தது. ஈடேறவில்லை
அவருடைய பல சிறுகதைகளை நல்ல குறும்படங்களாய் எடுக்கலாம்.

சாரதாம்மாவை அகஸ்மாத்தாகப் படித்தேன். http://saratharecipe.blogspot.in/2016/04/brinjal-fry.html நான் கத்திரிக்காய்க்காக காதை அறுத்துக் கொள்ளும் ரசிகன். நீங்களும் அறுத்துக்குங்க துரை !

மோகன்ஜி சொன்னது…

ஜி.வீ சார்!
//ஒரு அசாதரணாத்திலிருந்து சட்டென்று சாதாரணத்திற்குப் போவது தான் அப்பாதுரையார் ஸ்டைல்!//

சாதாரணம் அசாதாரணம் எல்லாம் கடந்த சித்தன் நோக்கு அப்பாதுரையுடையது. தி ஜாவில் கத்திரிக்காய் சுவையையும், கத்திரிக்காய் கறியில் தி ஜாவின் பக்குவத்தையும் காணமுடிந்த ரசனாகாரத்துக்கு மேல் வேறென்ன வேண்டும்!

'இதுக்குத்தானா?'வோடு நிறுத்திக் கொண்ட தி ஜாவின் நீட்சியாய் முதலாளி அப்பாதுரையை நான் போற்றுவதை நீங்கள் அறிவீர்களா ஜி.வீ?

உங்கள் புத்தகம் எனக்கு கிடைக்கவில்லை. கடனாய்க் கொடுத்தீர்கள் என்றால் காவிய விமரிசனம் பண்ணிவிடக் காத்திருக்கிறேன். இந்த செம்பருத்தி விமரிசனத்தைப் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல் ஜி.வீ சார்.

sury siva சொன்னது…

68 ல் படித்த நாவலை
48 வருடங்கள் சென்றபின்
விமர்சனம் செய்து இருப்பது ,
நாவலாசிரியர் இடம் தங்களுக்கு இருக்கும்
நல் மதிப்பு முதற்கண் தோன்றுகிறது.

இந்த நாவலை நீங்கள் 1968 லேயே விமர்சி த்திருந்தால்
உங்கள் சொல்லலை இன்றைய சொல்வலைக்குள்
இருந்திருக்குமா ?

குஞ்சம்மாளுக்குக் கொஞ்சம் தஞ்சம் கொடுத்து இருப்பீரோ ?
சற்று பரிவு காட்டி இருப்பீரோ ?

அன்றைய சமூக அமைப்பில் குஞ்சம்மா செய்ததை கிராமீய சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய கால குஞ்சம்மா , சட்டநாதன் எப்படி நடப்பர் ?

உங்களை சற்று கிண்டிப் பார்க்கிறேன்.

இன்னும் சொல்லுவேன்.

சு தா.

Geetha Sambasivam சொன்னது…

செம்பருத்தி விகடனில் வெளிவந்தபோது படித்தது தான். அப்புறமாப் படிக்கலை! வாய்ப்புக் கிடைக்கலை! புவனா தலையில் செம்பருத்தியை வைத்துக் கொண்டு "ஓம் நமசிவாய" எழுதும் கோலத்தில் கோபுலு வரைந்த படம் இன்னமும் மனதில் நிற்கிறது. மற்றபடி எனக்குள்ளும் குஞ்சம்மாவை மறுத்த சட்டநாதன் மேல் கோபம் உண்டு. தமிழ்நாட்டிலும் சிற்சில பகுதிகளில் அண்ணன் இறந்துவிட்டால் உறவு விட்டுப் போகக் கூடாது என அண்ணன் மனைவியைத் தம்பி கட்டுவது உண்டு! அப்படிக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்திருக்கலாமோ என்று தோன்றும். எனக்குத் தெரிந்த சில குடும்பங்கள் இப்படி நடந்தது உண்டு. ம்ம்ம்ம்ம், பஞ்சாபில் கூட இப்படி உண்டுனு நினைக்கிறேன். ஹேமமாலினி, ரிஷி கபூருடன் ஜோடியாக "நடிச்ச" ஒரே படம், பத்மினி கோலாபுரி அதில் ஹேமமாலினியின் மகளாக வருவார்! அந்தப் படமும் கிட்டத்தட்ட இப்போ நான் சொன்ன கருத்தைக் கொண்டது தான்.

Geetha Sambasivam சொன்னது…

புவனாவும், சட்டநாதனும் தனிக் குடித்தனமாகப் போயிருக்கணும். என்னதான் பெருந்தன்மைனு இருந்தாலும் ஒரு சமயமாவது மனம் இடறத்தானே செய்யும் என்பது தான் புவனாவின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருக்க முடியும். பொதுவாக தி.ஜா.வே பெண்களின் அளப்பரிய ஆசையைத் தான் அவர் கதைகளில் முக்கியக் கருவாகக் கொண்டிருந்தாரோ என்று தோன்றும். அம்மா வந்தாளை முதல் முதல் சித்தப்பா அதை இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்காக மொழி பெயர்ப்புச் செய்யும்போது படித்தேன். அதிர்ச்சி தாங்கலை! அதற்கு முன்னால் நான் படித்தது தி.ஜா.வி. அன்பே, ஆரமுதே தான்! என்னைப் பொறுத்தவரை அது தான் அவருடைய மாஸ்டர் பீஸ் என்பேன்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சு.தா!
தி ஜா தன் படைப்புகளில் இந்த விதமான உணர்ச்சிப் போராட்டங்களை கோடிகாட்டி பற்பல கேள்விகளை நமக்குள் விதைத்து வந்திருக்கிறார்.
காலம் எதுவானாலும் காதலும் காமமும் இருந்தபடி தான் இருக்கிறது. அவை மானுடத்தை அலைகழித்தபடியே தான் காலகாலமாய்த் தொடர்கிறது.
வேறுபாடு, காலமாற்றம் தந்துவிடும் கண்ணோட்டத்தில் தான் இருக்கமுடியும்.
இந்த நாவலை எழுபதுகளின் தொடக்கத்தில் முதன்முறை படித்தபோது நானொரு முதிரா வாலிபன். லட்சியவாதக் கனவுகளுடன் இருந்தவன். அப்போது சட்டநாதனை ஒரு லட்சியபுருஷனாகவே என் மனம் பாவித்தது. அவன் மேற்கொள்ளும் தியாகங்கள் பெரிதாகப்பட்டது. வலியவந்து தன்னையே ஒப்புக் கொடுக்கும் குஞ்சம்மாளை புறம்தள்ளியது ஆண்மையாகப்பட்டது.
குஞ்சம்மாளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அனுதாபம் கொண்டேன். கதை நிகழும் நாற்பதுகளில் தவிக்கும் அவள், அந்த எழுபதுகளில் இருந்திருந்தால் மறுமணம் நடந்திருக்கக் கூடுமே என்றும் யோசித்ததுண்டு. அண்ணன் போனவுடன், சட்டநாதனே கூட அவளுக்கு வாழ்வு கொடுத்திருக்க முடிந்திருக்குமே என்றும் நினைதேன்.

இன்றைய வாசிப்பிலோ, என் கருத்துக்கள் பெரிதும் மாறிவிடவில்லை. ஆனாலும் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா எனும் விசாரம் அதிகம் எழுகிறது. தான் சரியாக இருப்பது மட்டும்தான் லட்சிய புருஷனுக்கு அழகா? எனும் உறுத்தலும் கூடவே எழுகிறது.
கதைநடந்த காலகட்டத்து சமூகம், தனிமனித உறவுகளிலும் தன் கெடுபிடியை செலுத்தியது போன்று இன்றும் இருக்கிறதா? அதிகபட்சமாக, சிறிய ஊர்களில் அது
ஒரு வாரத்துக்கு வம்பாகவும் கேலியாகவும் பேசப்படலாம். நகர்புறத்தில் செய்தியாகக் கூட மதிக்கப்படாது.

ஆனாலும் இன்றைய சமூகம் மேன்மையடைந்துவிட்டதாய் நினைக்கவேண்டாம். சமூகக் கண்காணிப்பு வேறுரூபத்தில் இருக்கிறது. அது சாதிமாறி நடைபெறும் திருமணங்களை ஆணவக்கொலை என்று ரத்தம் சொரிந்து நிராகிக்கிறது.
இன்றைய சட்டநாதனும் குஞ்சம்மாளும் அண்ணன் போனபோதே தனியாக போயிருப்பார்கள். அவர்கள் வேண்டாம் என்று நினைத்திருந்தாலும் செம்பருத்திப் பூக்காரி புவனா புகுந்தவீடு வந்தவுடன், குஞ்சம்மாளுக்கு கட்டுசாதக் கூடையிலிருந்து ‘மிளகாய்பொடி தடவிய இட்லி’ ரெண்டு பாக்கெட் கையில் கொடுத்து அனுப்பி வைத்திருப்பாள் !

மோகன்ஜி சொன்னது…

வாங்க அக்கா!

உங்கள் நினைவாற்றல் அதிகம் தான். புவனா ஓம் நமச்சிவாய எழுதுவது கூட விலாவாரியாய் வரும்.அவள் கடைசியில் ஒரு பக்கம் சட்டநாதன் பெயரைக் கூட எழுதுவாள்.

நான் டைப்ரைட்டிங் கிளாஸ் போனபோது என் பெயரை ஒரு பக்கம் முழுதும் டைப் அடித்து
ஒருத்தி தந்ததால்,நாடு நல்ல டைப்பிஸ்டை இழந்தது. அவளுக்கு புவனா என்று பேர்கூட வைத்திருந்தேன்!

என் நெருங்கிய நண்பரொருவர் இளவயதிலேயே இறந்தபோது,அவன் மனைவியை அவன் தம்பிக்கே நீங்கள் சொன்னதுபோல் மறுமணம் முடித்தார்கள். அந்த மறுமணங்களில் பெண்ணுடைய வாழ்க்கை சீரழிந்து விடலாகாது எனும் சமூகபொறுப்பு தான் இந்த ஏற்பாட்டை வழக்கத்தில் கொண்டுவந்திருக்க வேண்டும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிக அருமையாக நாவலை வாசிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது நாவல் விமர்சனம். தி.ஜா.வின் சில சிறுகதைகள் வாசித்துள்ளேன். இந்த நாவலையும் வாசிக்க வேண்டும். நன்றி!

மோகன்ஜி சொன்னது…

அக்கா!
இல்லச்டிரேட்ட வீக்லியின் மொழிபெயர்ப்பை எப்படி மறக்கமுடியும்? நானும் அம்மா வந்தாள் பற்றியும் நளபாகம் பற்றியும் விமரிசனம் எழுதியிருந்தேன். தேட வேண்டும். செம்பருத்தி பற்றி அதிகம் விவாதிக்கப்படவில்லை என்றதால் தான் இப்போது ஒரு மூச்சில் படித்து எழுதினேன். தி ஜா ஒரு சௌந்தர்ய உபாசகர். பெண்களை அழகை தெய்வீக ஆராதனையாகவே செய்தவர். அவர்கள்பால் கொண்ட பேரன்பினால் தானோ அவர்களுடைய சொல்லப்படாத பிரச்னைகளை பேசத் துணிந்தார் என்று தோன்றுகிறது. பெண்களுடையது என்பதாலேயே குறுகுறுப்பான ஆர்வம் வாசகர்களை ஈர்த்தது என்றும் சொல்வதற்கில்லை. வரம்பை மீறிய பாலியல் எழுத்தல்ல அது. கோவில்சிற்பியின் கலை உளி அவர் பேனா.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் சுரேஷ்!

நன்றி! அவசியம் வாசியுங்கள். அவருடைய நாவல்களைக் காட்டிலும் அவருடைய சிறுகதைகளுக்கு இலக்கிய மதிப்பு அதிகம். ஒருமுறை விவாதிக்கலாம்.

அப்பாதுரை சொன்னது…

கீதா சாம்பசிவம் அசத்துகிறார். வழக்கம் போல்.

அப்பாதுரை சொன்னது…

அசாவிலிருந்து சாவுக்குத் தாவுவது ரொம்ப சுலபம் ஜீவி சார். உல்ட்டா தான் தகராறு கைவராத கலை :-).

sury siva சொன்னது…

முதற்கண்
நான் சொல்ல எண்ணியதை அப்படியே திருமதி கீதா சாம்பசிவம் சொல்லி இருக்கிறார்கள் .

இருக்கட்டும்.
நான் இன்னமும் சொல்வேன் என்று சொல்லி இருந்தேன் இல்லையா?
சுப்பு தாத்தா சும்மா இருக்கமுடியாத தாத்தா.
சப்ஜெக்டுக்கு வருவோம்.
கதை ஒன்று தான். அது 1968 லே இருந்தபடி தான் இன்னமும் இருக்கிறது.

ஆயினும், அதை படிப்பவனின் மன நிலையும் மன வளமும் அவன் அறியாதபடியே மாறிக்கொண்டே மெருகு ஏறிக்கொண்டே பக்குவப்பட்டுக்கொன்டே வருகிறது. புதுப் புது புரிதல்கள் ! இது ஒரு எவலூஷனரி ஃபினாமினன் . கதையைப் பற்றிய புரிதல் கூடக் கூட, கதாசிரியனைப் பற்றிய புரிதலும் கூடுகிறது.
சிலர் மயக்குகிறார்கள்.சிலரோ மங்குகிரார்கள்.

பல உதாரணங்கள் இருந்த போதிலும்,ஒன்றிரண்டை சொல்ல லாமா?
சாண்டில்யன் தொடர்கதைகள்:
"யவன ராணி" யின் மத்தியப் பிரதேச வர்ணனைகள் அன்று பித்தனாக்கியது.உண்மை என்றால்,
இன்றோ அவை படிக்கும்போது எல்லாம் பேத்தல் என்று தோன்றுகிறது.

கிங் லியர் சேக்ஷிபியர் ஒரு வாக்கியம்:

No, do thy worst, blind Cupid, I'll not love."

1957ல் கல்லூரியில் பாடமாக படித்தபோது எனக்கு என்ன புரிந்தது ?
அதையே இப்பொழுது நான் படிக்கும்போது என்ன புரிகிறது ?

ஓமர் கய்யாம் எழுதிய ஒரு பாடலில் இருந்து:

Drink! for you know not whence you came nor why:
drink! for you know not why you go, nor where.
(உஷ்! அந்த துரை படிக்காதபடி பார்த்துக்கோங்க.)

அதே வரிதான் .
என்னுடைய புரிதல் தெளிகிறது.

இந்தியில் ஒரு கவிதை. மகாதேவி வர்மா வா?
तुम विमल प्रेम उच्वास
मै कान्त कामिनि कविता

பல குறட்பாக்கள் மேலோட்டமாக படித்த தெல்லாம்,
இன்றைய மன நிலை புதிய பொருட்களைத் தருகிறது.


இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தான்
நான் அந்த கேள்வியைத் தங்கள் முன் வைத்தேன்.

நிற்க.
செம்பருத்தி கதையில் நடக்கும் நிகழ்வு எதுவும்
தற்கால சூழலில் நடப்பது சாத்தியமா ! கீதா அம்மா பளிச் என்று கன்னத்தில் அறைவது போல் பதில் சொல்லி இருக்கிறார்கள்..

எந்த ஒரு இலக்கியமும் நடை, சொல் அலை இவைகளினால் மட்டும் நிலைத்து நிற்க இயலாது.
ஒரு மண் துளி தான் கண் முன்னே இருக்கிறது.
கைகளில் உரசுகிறது. இந்த மண்ணே இப்படித்தான்
என்று சொல்லலாம் என்றால்.

நீங்கள் விமர்சனம் செய்த கதை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால், தி.ஜ. ஒரு கன்சர்வேடிவ் பழமையாளர் .எனத்தான் தோன்றுகிறது.

காலப்போக்கில், கடலில் கரைந்து விடுவாரோ !!

சு தா.













Geetha Sambasivam சொன்னது…

சு.தா. இந்த விஷயத்தில் நான் ஓர் புரட்சிக்காரி என்றே சொல்லலாம். :) சின்ன வயசிலே என்னோட புதுமையான எண்ணங்கள் அப்பாவையும், அம்மாவையும் பயமுறுத்தியது உண்டு. இந்தப் பெண் எப்படி இன்னோர் வீட்டில் போய்க் குப்பை கொட்டப் போகிறாள் என்று கவலைப்படுவார்கள். நல்லவேளையாக எனக்கு வாய்த்தவர் என்னைப் புரிந்து கொண்டிருக்கிறார். அப்பா, அம்மா, அண்ணன், தம்பியை விட அவர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். சில, பல உரசல்கள் இருந்தாலும் மனோநிலையில் பாதிப்பெல்லாம் ஏற்பட்டதில்லை! :)

இன்னொரு விஷயம் ரகசியமாகச் சொல்லிடறேன், என்னோட பெரியப்பா ஒருத்தர், அதாவது என் அப்பாவுக்கு நேர் மூத்தவர் ஆயிரத்துத்தொளாயிரத்து நாற்பதுகளிலேயே (அதாவது இந்தக் கதை நடந்த காலகட்டத்தில்) காந்தியின் சொல்படி பால்ய விதவையைத் திருமணம் செய்து கொண்டவர். அந்தப் பெண்மணியோடு சதாபிஷேஹம் வரை வாழ்ந்தவர். பெரியம்மா இப்போ தான் 2010 ஆம் ஆண்டு இறந்தார்! :) இது நடந்தது மதுரை மேலாவணி மூலவீதியில்! :) ஆகவே எங்கள் குடும்பத்திலும் இப்படிப்பட்ட சில, பல புரட்சிகள் நடந்திருக்கு! :)

sury siva சொன்னது…

//சில பல உரசல்கள் இருந்தாலும்//

ஒவ்வொரு உரசலுக்குப் பின்னே:

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

ஆஹா:

சு தா

sury siva சொன்னது…

//தான்நோக்கி மெல்ல நகும்.//

"நகும்" என்ற சொல்லுக்கு அன்று முதல் எனக்கு மட்டும் அன்றி,
பலருக்கும் புரிந்ததெல்லாம் " நகர்ந்து போகும்" என்பதே.

ஒரு பதினைந்து ஆண்டுகட்கு முன்னே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க என் நண்பருடன் உரையாடிய போது, எனக்குத் தோன்றியது,

"லேசா மனசுக்குள்ளே சிரித்துக்கொள்ளும்"

நகுதல்.= சிரித்தல் என்றும் பொருள்.

இப்ப குறளையும் அதற்கான சூழ்நிலையையும்
பாருங்க.

ஒரு ஊடலுக்கு பின்னாடி . நடக்கும்? நடக்கிறது ?
அடடா ! இந்த மேனகை மனசை எப்படி உராசிட்டேன் அப்படின்னு
வருத்தப்பட்டு (அதுவும் மனசுக்குள்ளே. வெளிப்படையா சொல்ல, "ஆண்மை " இடங்கோடுக்கல்ல.) அவ மூஞ்சிய பார்க்கிறது ஆம்பள.

அவன் பார்ப்பதை பார்க்காதது போல் இருந்து விட்டு, அவன் அந்தப் பக்கம் திரும்பின போது அவனைப் பார்த்து, லேசா மனசுக்குள்ளே
சிரித்துக்கொள்ளுதல் . நகுதல்.
"இப்படி பத்து நாளைக்கு ஒரு தரம் போட்டு வச்சாத்தான் நீ சரியாவே"
மனசுக்குள்ளே மத்தாப்பு

சுதா.
சப்ஜெக்ட்டுக்கு வந்தாச்சு.

Geetha Sambasivam சொன்னது…

ஐயா, (சு.தா.) நாங்கள் படிக்கையில் "நகும்" என்ற சொல்லுக்கு உள்ளுக்குள் சிரித்துக் கொள்வதைத் தான் கற்பித்திருக்கிறார்கள். எனக்குத் தமிழ் ஆசிரியர் ஒரு பெண்மணி தான். அவர் கற்பித்தது "நகும்" என்றால் உள்ளுக்குள் சிரிப்பது என்றே. :)

மோகன்ஜி சொன்னது…

Qதுரைகாரு,
கீதா சாம்பசிவம் மேடத்தை 'அசத்தலணங்கு' என்றழைத்தால் என்ன?

//அசாவிலிருந்து சா //
இவ்வளவு அடக்கம் தேவையா ப்ரோ?!

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
அப்படி வாங்க !!

காலம் மாற மாறும் கண்ணோட்டமும் என்று தான் முன்னமேயே முன்ஜாமீன் வாங்கிட்டேனில்லையா?

பெரும்பாலும் ஒரு புனைவை,ஒரு காலசட்டகத்துள் பொருத்தி கதை பின்னப்படுகிறது. காலமாற்றத்தில் கதையில் பல விவரணங்கள்,பல நுண்மைகள் வழக்கொழிந்து போகின்றன. கதையின் காலகட்டத்தை உணர்ந்த பல முதிர்ந்த வாசகர்கள், மீண்டும் அதைப் படிக்கும் போது, அந்த நுண்மைகள் அன்னாளில் எழுப்பிய தாக்கத்தை மீட்டெடுக்க முடியும். புதிய தலைமுறை வாசகனுக்கு அதில் என்ன பொருள் இருக்கமுடியும்?

உதாரணமாக எண்பதுகளின் வரையில்கூட தலைமுடிமழித்த விதவைகள், நார்மடிக்குள் முடங்கின உணர்வுகள் பற்றி கதைகள் எழுதப்பட்டன. இன்று வழக்கொழிந்த அந்த பிம்பங்கள் என்னவாயின?

அதற்காக 'ஆறினகஞ்சி பழங்கஞ்சி' என்று அந்நாள் படைப்பாளிகளை பரணேற்றி விடலாகுமா என்ன? ஒரு தரமான இலக்கிய வாசகனுக்கு சூழல் ஆளப்பட்ட விதம், படைப்பாளி உணர்வுகளை எப்படி சித்தரிக்கிறான், கையாண்ட வார்த்தைகளின் பங்கு என்ன? என்பவை என்றும் தேவையான கச்சாப் பொருள்.

யவனராணி பற்றி சொன்னீர்கள். ரொம்ப முதிர்ந்து போய் எல்லா நேரமும் எல்லாவற்றையும் தேறாது என்று வாழ்வதில்கூட பொருளில்லை சு.தா! அந்தப்புதினம் காட்டும் ' எழில்உச்சிகளையும் பின்னழகுகளும்' நீங்கள் அந்நாளில் படித்து சொக்கினவர் தானே?இன்றும் படித்து சொக்கவேண்டாம் என்று தடுப்பது எது? ரொம்பக் கிழவனாக ஆகின பின் சாண்டில்யன் அதை எழுதியது கிழவர்கள்... இல்லையில்லை... கிழடுதட்டிப்போன மனங்களுக்கா என்ன ? மீண்டும் படிக்க விரும்பினால், அனுபவம்,வயசு எல்லாவற்றையும் லாக்கரில் வைத்துவிட்டு, பழைய ஜீன்ஸைப் போட்டுக் கொண்டு படியுங்கள். பழைய மனசை கிளறி எடுத்து பொருத்திப் கொண்டு படியும். டிங்குன்னு பழைய கிறக்கம் வருதா இல்லையா என்று பாரும் !

நீங்கள் குறிப்பிட்ட அமரவரிகளை ரசித்தேன் . அவை அதேவரிகளாய்த்தானே காலம்காலமாய் ரசிப்பதற்காக படைக்கப் பட்டிருக்கின்றன? சொன்னவிதத்தில் தானே அவை காலம் தாண்டி நிற்கின்றன? சுக்குலே இருக்குதண்ணே சூட்சம்ம் !

திஜா வின் படைப்புகள் பெரும்பாலானவை, குறிப்பாக அவரின் சிறு கதைகள்...... காலம் கடந்து நிற்கும்... அவை சொன்னவித்த்தில் ...
அவரும் சூட்சமத்தை சுக்கிலே தான் வைத்தார் சு.தா!

மோகன்ஜி சொன்னது…

என் வோட்டு புரட்சி(க்காரி)தலைவி கீதா அக்காவுக்கே !

sury siva சொன்னது…

//அசாவிலிருந்து சா //

அசாவேரி லேந்து சாவேரிக்கு போக முடியாது.

அசாவேரி ஹனுமத் தோடி ஜன்யம்.
சாவேரி மாயா மாளவ கௌள ஜன்யம்.

அசாவேரி லே ஆரொகனத்திலே காந்தாரம் கிடையாது.

காந்தாரத்தை, கந்தர்வம் அ ப்படின்னு நினைச்சுண்டு, தேவரீர் சாவேரிக்குப் போகலாம் அப்படின்னு பார்க்கலார் போல.

காந்தர்வம் கர்ப்ப நிஸ்சிதம் என்பது வாக்கியம்.

நோ. நோ.

இம்பாசிபிள்.

சு தா

மோகன்ஜி சொன்னது…

சு.தா !
//
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.//

அழகான குறள். நன்றி சு.தா! 'நகும்' எப்படி 'நகரும்' போன்ற பொருளில் கொண்டீர்கள் ? நகும் சிரித்தலே.
மெல்லநகும் எனும் போது 'புன்முறுவல்' என்று கொண்டால் அந்நபர் பெண்மையின் அடக்கமும் மடமும் இன்னமும் அழகு பெறும்.
(மடம் எனில் -அறிந்ததையும் உணர்ந்ததையும் தெரியாத்தாய்ச் செய்யும் பாவனை)

நிஜம்மா உரசலுக்கப்புறம் இப்படித்தான் பண்ணுவாங்களா அக்கா??

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம் !
இப்படியெல்லாம் ஆகுமின்னு தான் அதையே கவியரசர் பாடினார்:

' உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே !
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே !
நேரிலே பார்த்தால் என்ன? நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகை புரிந்தால் என்ன? பூமுகம் சிவந்தா போகும்?'

நேற்று வரை நீ கோட்டான் நான் குரங்கு
இன்று முதல் நான் பூனை நீ யானை !

Geetha Sambasivam சொன்னது…

//நிஜம்மா உரசலுக்கப்புறம் இப்படித்தான் பண்ணுவாங்களா அக்கா??//

ஹிஹிஹி, தம்பிக்கு அனுபவம் இல்லையா என்ன? :P :P :P :P

மோகன்ஜி சொன்னது…

சு.தா சூப்பர் தலைவரே !
குறளாலே வீடு கட்டுறீங்க.
ராகத்தாலே வீடு கட்டுறீங்க !!

என் வரிசைக் கும்பிடு தனை ஏத்தக்குங்க வாத்யாரே !

ரொம்ப காஞ்சி கிடக்கிறோமே....இன்னும் நாலுவரி மகாதேவி வர்மாவை இங்கே வாசிக்கப் படாதோ??

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்,

அனுபவமா? எனக்கா? நிஜம்மா இல்லைக்கா !
வெக்கம் வர்றப்போ தலையை குனிந்த மாதிரி தான் இருப்பேன். ஆனால் புன்னகை,'மெல்ல நகும்'லாம் பண்ணமாட்டேன்.
பின்னே ! அவளுக்கு கோபம் வந்து விஜயகாந்தா மாறிட்டா?!

sury siva சொன்னது…


//நகும்' எப்படி 'நகரும்' போன்ற பொருளில் கொண்டீர்கள் ? //


நான் நோக்கும்போது அவள் பார்வை என்னை விட்டு அகன்று நிலத்தில் விழுகிறது .
விழி நகராது எப்படி பார்வை மட்டும் என்னை விட்டு நிலத்தில் பாயும் ?
"நோக்காக்கால் தான் நோக்கி "

நான் நோக்கவில்லை என்பதை எப்படி உணர்கிறாள்?
என்னைப் பார்க்கிறாள். அவள் விழி நகராது இருந்தால் எப்படி சாத்தியம்?

தான் நோக்கி, ===== நிலத்தில் வீழ்ந்த பார்வை மேலே எழுகிறது.
விழி கீழ் பார்வை மேல் பார்வை ஆகிறது. நகர்தல் இங்கும்.

மெல்ல நகும்: === சட்டென அதுவும் அந்த விழிகளும் கீழ் இருந்து மேல் புருவம் நோக்கிச் செல்லவில்லை.

மெல்ல மெல்ல ...
மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல ....

கொஞ்சம் கொஞ்சமா
கீழ் முகம் நோக்கிய
பார்வை,
என் முகம் திரும்புகிறது.
விழி ஒரே இடத்தில் இருந்தால்
(நகராது இருப்பது) எவ்வாறு சாத்தியம்?

ஹி ..ஹி ..

சு.தா.

அப்பாதுரை சொன்னது…

ஹிஹி தான்.

அப்பாதுரை சொன்னது…

//அவளுக்கு கோபம் வந்து விஜயகாந்தா மாறிட்டா?!

பேய்க்கதை எழுதுறப்ப உதவும். நன்றி.

அப்பாதுரை சொன்னது…

அசாவேரி சாவேரி.. பிச்சு உதர்றீங்க சூரி சார்.

அசாவேரின்னு ஒரு ராகம் இருக்கா என்ன? (எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. நீங்க தாராளமா அடிச்சு விடலாம்)

அப்பாதுரை சொன்னது…

ஆறின கஞ்சி பழங்கஞ்சி எல்லாம் சும்மா. இன்னிக்கும் புதுமைப் பித்தனை அடிச்சுக்க ஆளில்லை. பாக்கியம் ராமசாமி போல் எழுத இன்னும் யாராலும் முடியவில்லை. ஷேக்ஸ்பியர் - வேணாம்.

அப்பாதுரை சொன்னது…

//எந்த ஒரு இலக்கியமும் நடை, சொல் அலை இவைகளினால் மட்டும் நிலைத்து நிற்க இயலாது

சிந்திக்க வைக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

கண்ணதாசன் சொன்னா நல்லாத்தான் இருக்கு.
நேரிலே பார்த்தாலென்ன நிலவென்ன தேய்ந்தா போகும்? - இந்த வரிலே நிலவு உருவகம் நினைத்து நினைத்து உருகிப் போன பிரயோகம்.

அப்பாதுரை சொன்னது…

கீதா சாம்பசிவம் பெரியப்பாவுக்கு ஒரு சலாம்.

sury siva சொன்னது…

//அசாவேரின்னு ஒரு ராகம் இருக்கா என்ன? (எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. நீங்க தாராளமா அடிச்சு விடலாம்) //

ஐ டேக் ஸ்ட்ராங் அப்ஜக்ஷன் யுவர் லார்ட்.!

அடிச்சு விடுங்க.!! அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி,
இந்த லிஸ்டைப் படிங்க.
8 hanumatODi janya
A: S R1 M1 P D1 S
Av: S N2 S P D1 M1 P R1 G2 R1 S
Songs:
aruvaippOlum - SNB
candram bhaja
dasharatha nandana - also sAvEri - T
8 hanumatODi janya
A: S R1 M1 P D1 S
Av: S N2 S P D1 M1 P R1 G2 R1 S
Songs:
aruvaippOlum - SNB
candram bhaja
dasharatha nandana - also sAvEri - T
E panikO - T
janakajA samEta - asAvEri - T
kAkutstha tilakuDu - asAvEri - BR
lEkanA ninnu
mApAla velasi ika -

இந்த லிஸ்ட் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

சுப்பு தாத்தா.

sury siva சொன்னது…

அசாவேரி ராகக்த்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடும்
சரணம் சரணம் ரகு ராமா ....என்று துவங்கும் கீர்த்தனை.

www.youtube.com/watch?v=mUYpXdlYTVk

இத கேட்டப்பரமாவது .....

வேண்டாம். அவராவே ராமா ராமா அப்படின்னு சொல்ற காலம் வரும்.


சு தா.
www.movieraghas.blogspot.com

kashyapan சொன்னது…

தி ஜ வின் நாவல்களை படித்திருக்கிறேன். கதிரில் வந்த செம்பருத்தி யும் படித்தேன். இவர்களெல்லாம் தொடர் கதை எழுதியதால் வந்த வினை. "கல்கி" யில் கூட ஒரு தொடர்கதை எழுதியதாக நினவு உள்ளது. நடிகர் சிவாஜி,அவருடைய குணசாயல்கள் கொண்ட பாத்திரப்படைபு வரும். வர்த்தக நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கு எழுதுவது கூட ஒரு திறமைதான். அது தி ஜ வுக்கு இல்லை . பத்திரிகைகளில் கதை எழுதுவத்ற்கும் இலக்கியம் படைப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தி.ச. ராசு என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். ஹைதிராபாத்தில் நான் இருந்தபோது ராணுவத்தில் பணீயாற்றியவர். பத்திரிகை,இலக்கியதரமான கதை பற்றி எனக்கு கற்றுக்கொடுதவர்.ஒய்வு பெற்றதும் 'தீல்லைஸ்தன"த்தில் வசித்துவந்தார். திஜ பற்றி நானும் திச ராசுவும் நிறைய விவாதிப்போம். எழுத்தை மதிப்பீடு செய்யும் போது எழுத்தாளன் மனதில் வரவேண்டிய தில்லை.இளம் வயதில் "அம்மா வந்தாள் " "மரப்பசு' ஆகியவற்றை கொஞ்சி மகிழ்ந்தவன் தான் .இன்று அது புனைந்து செய்யப்பட்டாதாக நினைக்கிறேன் .என்ன செய்ய ---காஸ்யபன்.

மோகன்ஜி சொன்னது…


துரை காரு,
1. உண்மை.. பேயாய் வந்து உன் பவளவாய் காண்பேனே !
2. அசாவேரி- ஞானக்கண் ஒன்று எம்.கே.டி http://youtu.be/giGNnFWdXjc
3. புதுமைப்பித்தன் இன்னும் புதியவர் தான். மனுஷன் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம்
4. நிலவு உருவகம். அடடா ! ஸைட் பீலிங் !
5. கீதா மேடத்தின் பெரியப்பாவின் '18 ஆம் அட்சக்கோடு' நாவலுக்கான விமரிசனம் 4 பக்கம் எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால் நேற்று ஜெயமோகனின் வலையிலும் அதற்கு விமரிசனம் மீள்பதிவேற்றம் செய்திருக்கிறார். நானும் போடவேண்டும் எனும் சின்ன சம்சயம் கேட்டோ ?
6. அசாவேரி பஜனை விருத்தங்களில் பாடுவார்கள்.
7. சுப்புத்தாத்தா ஒரு ராக ஸ்பெஷலிஸ்ட். அடுக்குறார் பார்த்தீங்களோ?

மோகன்ஜி சொன்னது…

சு.தா !
சுவையான அசாவேரி குறிப்புகள். மிக்க நன்றி.
என் மருமகளிடம் அதில் சிலபாடல்கள் பாடச்சொல்லி கேட்கப் போகிறேன்.
பாம்பே ஜெயஶ்ரீ பாடலுக்கும் ஒரு ஜே !

sury siva சொன்னது…

மகாதேவி வர்மா பாடல் ஒன்றை கேட்டு இருந்தீர்கள்.

இருந்தாலும், நீங்கள் வர்ணித்த குஞ்சம்மா வின் அவல நிலை போலும்
ஒரு பெண்ணின் நிலை தனை சமூகத்தின் கொடிய நியதிகளால், புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் நிலை இது.

இன்னொரு இந்தி கவிஞர் ஜெயசங்கர் பிரசாத் வர்ணிக்கிறார்.

கோன் கோன் தும் பரிஹத வசனா
ம்லான மனா பூ பதிதா சி
வாத ஹதா விச்சின்ன லதா சி
ரதி ஸ்ரந்தா வ்ரஜ் வனிதா சி.

நியதி வஞ்சிதா ஆஸ்ரய ரஹித
ஜர்ஜரிதா பத தலிதா சி
தூல் தூசரித முக்த குந்தளா
கிஸ்கே சரனோன் கி தாசி.

Who r u bereft of clothes,
dejected, lying prostrate on earth
Like a creeper hit by storm and rudely shaken
Like a Braj woman exhausted over love making
fate forsaken, shelter less, downtrodden and ravaged
Smeared with dust and streaming hair,
Who are you? Whose feet enslaved You ?

எல்லா வார்த்தைகளிலும் ஒரு இமேஜரி இருக்கிறது.

குஞ்சம்மா வின் மன நிலையும் இது போலத்தானே இருக்கும்?
Is there none to show empathy ?

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார் !
நீங்கள் களத்தில் புகுந்தாலே தகவல் மழை தான்!

அந்த நடிகர் கதாபாத்திரம் ' அன்பே ஆரமுதே ' நாவலில் வரும் நடிகர் அருண் என்ற கதாபாத்திரத்தை குறிப்பிடுகிறீர்களோ? சிவாஜி சாயல் அந்தப் பாத்திரத்துக்கு இருப்பதாக நினைவில்லை. ஆனால் திரையுலக பகட்டை விவரித்திருந்தார்.

பத்திரிகை தொடர்கதை எழுத்துக்கும் இலக்கிய ஆக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் . பத்திரிகைக்கான சமரசங்கள், வாரவாரம் தொடரை ஒரு டெம்போவுடன் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவை இலக்கியப்படைப்பாகும் கூர்மைக்கு தடைகள் தான். ஜெயகாந்தன் ஒரு விதிவிலக்கு. அவர் கதைகளில் எடிட்டர்கள் கைவைக்க அனுமதித்ததில்லை.

தி சா ராஜு தெலுங்கு பேசும் பிராம்மணரா? அப்படி ஒருவரைப் பற்றி கேள்விப் பட்ட நினைவு.ஒரு தகவல் ஒப்பீட்டுக்குத்தான் கேட்டேன்.

மோகன்ஜி சொன்னது…

சுதா !

அருமையான கவிதை. நன்றி ! நன்றி !!

குஞ்சம்மாளின் நிலைமை வேறு ரகம். சட்ட நாதன் அவளையும்,அவள் குழந்தையையும் உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்.
அவள் பிரச்னை என்னவென்றால் அவளுக்கும் அவர் உள்ளங்கைக்கும் இடையே கனமான உலோகத்தட்டை வைத்திருக்கிறார்.
தீண்டல் அங்கே விவகாரமாய் இருக்கிறது. நோ டச்சிங் ப்ளீஸ் என்கிறார்.

கவிதை அற்புதம் சுதா !

அப்பாதுரை சொன்னது…

அய்யயோ.. அப்படிச் சொல்லலே சார்.. அடிச்சுவிட்டாலும் தெரியாத ஞாசூ.. அவ்ளோதான்.

அதுசாவேரி..இத்தனை இருக்கா!

அப்பாதுரை சொன்னது…

//புனைந்து செய்யப்பட்டாதாக நினைக்கிறேன்

காஸ்யபன் அவர்களின் கருத்து சுவாரசியமானது. கலைஞனின் முதிர்ச்சியை விட ரசிகனின் முதிர்ச்சி வேகமானது என்பார்கள்.

மோகன்ஜி சொன்னது…

துரை காரு,
//கலைஞனின் முதிர்ச்சியை விட ரசிகனின் முதிர்ச்சி வேகமானது என்பார்கள்.//

கலைஞன் முதிர்ச்சி ஆழம் நோக்கி, ரசிகனின் வேகமோ வாசிப்பின் அகலம் நோக்கி எனலாமோ?

sury siva சொன்னது…

//கலைஞன் முதிர்ச்சி ஆழம் நோக்கி, ரசிகனின் வேகமோ வாசிப்பின் அகலம் நோக்கி எனலாமோ? //

கலைஞன் முதிர்ச்சி , அவன் சொல்லும் அழகினை நோக்கி,
ரசிகனின் முதிர்ச்சி அந்த அழகினுள்ளே அமிழ்ந்த அறிவினை நோக்கி.

சுப்பு தாத்தா.

ஜீவி சொன்னது…

//ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. //

//மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு. அது அப்படித்தான்..//

இந்த மாதிரியான இடங்களில் நீங்களும் தி.ஜா.வை அனுபவித்த வாக்கிலேயே மனசார நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்!

தி.ஜா.வை நினைத்தாலே உங்கள் மனசில் வியாபிக்கும் எண்ண ரீங்காரம் வாசிக்கப் பிரமாதமாக இருக்கிறது!

1962-ல் சென்னையில் எழுத்தாளர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் 'எதற்காக எழுதுகிறேன்?' என்று தி.ஜா. அழகாகச் சொன்னது இது:

"எழுதுவதில் மூன்று தினுசு உண்டாம். எனக்கே எனக்கு; உனக்கே உனக்க; எனக்கும் உனக்கும் என்று மூன்று நிலைகள்." என்று அவர் சொன்னதில்-- அவர் எந்த தினுசு என்று கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றுமில்லை.

தி. ஜானகிராமன் நினைவாக: இதை வாசித்துப் பாருங்கள், ஜி!

http://jeeveesblog.blogspot.in/2009/07/blog-post_27.html


sury siva சொன்னது…


//தி. ஜானகிராமன் நினைவாக: இதை வாசித்துப் பாருங்கள்//

பார்த்தேன். படித்தேன்.

/பெரிய கோவில் நிலா முற்றத்தில் காலத்தை வென்றக் காற்றை அண்ணாந்து வியப்பார். சந்தனாதித் தைலம் மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகளிடையே நின்று தெலுங்கு சுலோகத்தை என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். //

காலத்தை வென்ற காற்று !!

சந்தன ...மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகள் !!

பழைய தஞ்சை நினைவுகள்
எனக்கும்

2001 என நினைக்கிறேன்.

அந்த சரஸ்வதி மஹால் நடுவே ஒரு நாள் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய ஒரு புத்தகம் (என் தங்கை பெண் பி.ஹெச்.டி.க்காக ஆய்வு செய்ய அதன் நகல் கேட்டு இருந்தாள் ) .
அந்த புத்தகம் நான் கையில் எடுத்த போது துண்டு துண்டாகும் நிலை. அதை
நான் எடுத்துச் செல்ல இயலாது. அங்கேயே உட்கார்ந்து அதை காபி செய்து கொண்டு இருந்தேன்.

சற்று நேரத்தில் நான் பார்த்தேன்.
ஒரு கிழவர் நான் செய்வதை உற்று நோக்கிக் கொண்டு இருந்தார்.
நான் அவரைப் பார்த்ததும்,
உங்களுக்கு கிரந்தம் தெரியுமா ? என்றார்.
ம்.....என இழுத்தேன்.

அவர் ஒரு திசையில் தன ஆட்காட்டி விரலைக் காண்பித்து: பாருங்கள் , நூற்றுக்கணக்கில் இன்னமும் சுவடிகளாக வே இருக்கின்றன. என்கிறார்.

அவர் மேலும் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரியாமல் இல்லை.

அந்த புத்தக ஆலயத்திலேயே உட்கார்ந்து சுவடிகளை காகித உருவில் எழுதிட ...

ஆவல் தான்.
சூழ்நிலை இடம் தராது.

நான் பதில் சொல்ல வில்லை. வாளா இருந்தார் அவர். சற்று நேரம் கழித்து திரும்பிச் சென்றார்.

ஜீவி சார் ! உங்கள் பதிவு அன்று அந்த மஹாலில் நடந்ததை நினைவு படுத்துகிறது.


//எழுதுவதில் மூன்று தினுசு உண்டாம். எனக்கே எனக்கு; உனக்கே உனக்க; எனக்கும் உனக்கும் என்று மூன்று நிலைகள்." என்று அவர் சொன்னதில்-- அவர் எந்த தினுசு என்று கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றுமில்லை. //

இன்னும் சுவடிகளாகவெ இருக்கும் அவை என்ன வகை?

சுப்பு தாத்தா.

ஜீவி சொன்னது…

//இன்னும் சுவடிகளாகவெ இருக்கும் அவை என்ன வகை?//

இன்னொரு தமிழ்த்தாத்தாவுக்கான ஏக்கம் தான் வருகிறது.

கண்ணதாசனின் 'பசுமை நிறைந்த நினைவுகளே..' பாடலில் ஒரு வரி வரும்.

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ... என்று.

தாத்தா எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு இன்று இருக்கிறாரோ தெரியவில்லை.

தாத்தாவே வந்து விட்டது மாதிரியான ஓர் ஆறுதல் செய்தியை ஏதோ வார இதழில் படித்த நினைவு இருக்கிறது.

அதற்கான கெமிக்கல் சமாசாரமெல்லாம் உபயோகித்து சரஸ்வதி மஹால் சுவடிகள் பாதுக்காக்கப் படுவதாகவும், கணினி அச்சேற்றம் காண்பதாகவும்.

கீழ்க்கண்ட சுட்டிகள் தங்கள் பார்வைக்காக:

http://www.dinamalar.com/news_detail.asp?id=921857

http://tamil.oneindia.com/news/2002/05/22/books.html

அடுத்து,

தி.ஜா. சொன்ன அந்த மூன்று தினுசுகளில், திஜா என்ன தினுசு என்று மோகன்ஜி
சொல்லப் போகிறார் பாருங்கள்.

வருண் சொன்னது…

செம்பருத்தி, நான் படிக்கும் முன்பே நளபாகம், அம்மா வந்தாள், மரப்பசு மூன்றும் படித்துவிட்டேன். அதனால் செம்பருத்தி கொஞ்சம் உயர்தரமாகத் தெரிந்தது. சட்டநாதன், புவனா, பெரியண்ணன், பெரியண்ணி, சின்ன அண்ணனின் வித்வை மனைவினு நல்ல ஃபேமிலி ட்ராமானு சொல்லலாம்.

இன்னைக்கு வெள்ளிக்கிழ்மை, வெள்ளிக்கிழமைனு பெரியண்ணி பலமமுறை சொல்லுவார். சரி சரி, உள்ள வந்து படுக்கிறேன் னு அண்ணன் சொல்லுவதைக் கேட்டு சின்ன அண்ணி நகைப்பதுபோல் எழுதி இருப்பார். உடனே பெரியண்ணி, கோயிலுக்குப் போகணும்னு சொன்னேன் என்று சொல்லி சமாளிப்பார்..

வயதானதும் புவனாவுக்கு ஏதோ சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் வந்துவிடுவது போலும் எதற்கெடுத்தாலும் சந்தேகப் படுகிறாள் என்று புத்திசாலி புவனாவை பைத்தியக்காரியாக ஆக்கிவிடுவர்ர்.

சுத்தி சுத்திப் பார்த்தால், தி ஜா, ஆண்கள் மனத்தை பிரதிபளித்தார் ஆனால் பெண்கள் மனதைப் புரிந்துகொள்ளவில்லை, இல்லைனா தவறான யோகத்திலேயே ஓட்டினார்னுதான் நான் சொல்லுவேன். :)

I dont think he ever understood women and their real feelings. He always "guessed" like most of the men who lived and die not knowing what women are till they die ! :)

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்! உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்! உங்கள் பதிவு அற்புதமாய் இருக்கிறது. தி ஜா பற்றிய குறிப்புகள் அங்கும் இங்குமாய் தேடிப்படித்தது தான். அவருடைய இரங்கல் நினைவேந்தல்கள் அவருடைய ஆளுமையை மேலும் வெளிச்சம் போடுகிறது. அந்த ஆளுமை வெளிப்படுவது கையில் பேனா பிடிக்கும்போது தான். கடைசிவரை தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளாத எளிமையான மனிதராகவே இருந்திருக்கின்றார். யாத்ரா கட்டுரைகள் அவருக்கு ஒரு உண்மையான அஞ்சலி.

//எழுதுவதில் மூன்று தினுசு உண்டாம். எனக்கே எனக்கு; உனக்கே உனக்க; எனக்கும் உனக்கும் என்று மூன்று நிலைகள்." என்று அவர் சொன்னதில்-- அவர் எந்த தினுசு என்று கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றுமில்லை//

முக்கியமான ஒரு பார்வையை சுட்டிய உங்களுக்கொரு நமஸ்காரம்...

அவர் 'எழுதியது' அவருக்கே அவருக்காய் இருக்கலாம். .. 'அவரோ' நமக்கே நமக்கு!

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
முந்தைய ஜீவி சாரின் கருத்துக்கு உங்கள் எதிர்வினையான இந்தக் கருத்தையும் படித்துவிட்டே அவருக்கு பதிலளித்ததால், என் பதிலில் அவர் பதிவை அதிகம் பேசவில்லை. உங்களைவிட எப்படி நான் அழகாய் சொல்லிவிடமுடியும் என்ற எண்ணத்தால் தான். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் சரஸ்வதி மஹால் அனுபவம் படித்து நெகிழ்ந்தேன்.

//இன்னும் சுவடிகளாகவெ இருக்கும் அவை என்ன வகை?//

யாருக்கு அதைப் பற்றிக் கவலை?. முன்தோன்றி மூத்த தமிழ் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுவோமா?

நேற்று தொலைக்காட்சியில் யாரோ சொல்லக் கேட்டேன். இன்னமும் 5௦ ஆண்டுகளில் பேச்சுவழக்கு மறைந்து போகும் சில மொழிகளில் தமிழும் ஒன்று என்று நெருப்பை அள்ளிக் கொட்டினார்கள்.UNESCO ரிபோர்ட்டில் அருகிவரும் மொழியில் ஒன்றாய் கண்டறிந்திருக்கிறார்களாம்.
இங்கு மட்டும்தான் எல்கேஜி யூகேஜி இலிருந்து பட்டப் படிப்பு வரை தமிழைக் கற்காமலே காலம் தள்ளிவிட முடியும்? நிலைமைமாற அரசியல் உறுதிப்பாடு தேவை.

நம்ப சாம்பல் வரைக்கும்தான் தமிழ் மணம் கமழும் எனும் திகில் படர்கிறது.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!

தமிழ்த்தாத்தா ஒரு தெய்வப் பிறவி.

"தமிழ்க் கடவுள் முருகன் எப்படி குமரிலபட்டராக வந்தாரோ, அப்படிதான் சுவாமிநாதைய்யர் ஆகவும் பிறப்பெடுத்து வந்து தமிழ் இலக்கியம் சேகரித்துக் கொடுத்துவிட்டு போனார்." என்று அவர்பற்றி என் தமிழாசான் சொல்லுவார். அப்படி இல்லையென்று சொன்னாலும் உ.வெ.சாவை தமிழ் மீட்ட தெய்வப்பிறவி என்று கும்பிடத்தான் வேண்டும்.

உங்கள் சுட்டிகள் ஆனந்தம் தருகின்றன. நல்ல செய்தி.

தி ஜா வின் எந்த தினுசு என்று அடியவன் என்ன சொல்வது. அதுதான் அவரே நம் தலைமுடியைப் பிடித்து உலுப்பி சொல்லிவிட்டல்லவா போயிருக்கிறார்?!

'' எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது.எழுதுகிறேன்.அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது.காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது.காதல் செய்கிற இன்பம்,எதிர்பார்ப்பு,ஒன்றிப்போதல்,வேதனை-எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம் ,ஏக்கம்,நிறைவு எல்லாம் அதில் இருக்கின்றன.கண்ணிய நஷ்டம்,பாபம் பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி ,சந்திசிரிப்பு,சந்தேகக் கண்கள் இத்தனையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி,அதாவது ஆனந்தம் எல்லாம் அதில் இருக்கின்றன.உங்களுக்காக எழுதும் போதோ,உங்களுக்கும் எனக்குமாய் எழுதும் போதோ மனைவியைக் காதலிக்கிற நல்லபிள்ளைத்தனமும் நிர்பந்தமும் தான் கண்ணுக்கு தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது.மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்து விடுகின்றன.இந்த நிர்பந்தத்துக்கு பணியாதவர்களைக் கண்டும், நிர்பந்தம் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப் படுகிறேன்."

தி...ஜா...!

மோகன்ஜி சொன்னது…

வாங்க வருண்!

செம்பருத்தியை நன்கு உள்வாங்கியிருக்கிறீர்கள்.
//I dont think he ever understood women and their real feelings. He always "guessed" like most of the men who lived and die not knowing what women are till they die ! :)//

மானுடன் பெண்மையைப் புரிந்துகொள்ள முதல் முயற்சி எடுத்த நாளிலேயே தான் இலக்கியமும் தோன்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அந்தப் புதிரை விடுவிக்கும் சூத்திரங்களைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணித்தான் பெரும்பாலான காவியங்களையும் இலக்கிய ஆக்கங்களையும் படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். சக்தி என்றார்கள் சகதி என்றார்கள்... அமுதென்றார்கள்,நஞ்சென்றார்கள் ,நரகமென்றார்கள்...
மீண்டும் பெண் வயிற்றிலே பிறந்துகொண்டேயிருக்கிறார்கள்.

தி ஜா போன்ற இலக்கிய மேதைகள் பெண்மையை புரியாத புதிர் என்று உணர்ந்தவர்கள், பதில்காணும் தேடலையே படைப்பாக்கி இலக்கிய தளத்துக்கு உயர்த்தினார்கள்.

எழுத்தால் சுற்றிசுற்றி முயன்றார்கள்... ஒரு உபாசகனைப் போல!

கூர்மையான கேள்வி உங்களுடையது வருண்.

ஸ்ரீராம். சொன்னது…

படிக்க வேண்டும். இதுவரைப் படித்ததில்லை. தி ஜா படைப்புகளை மொத்தமாக வாங்கி வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும். சில சிறுகதைகள் படித்தேன். உங்கள் விமர்சனம் - கதைச் சுருக்கம் - அருமை. எந்த ஒரு பாத்திரத்தின் தன்மையையும் தி ஜா சொல்ல மாட்டார். நம் முடிவுக்கு விட்டு விடுவார் என்று ஜீவி ஸார் எழுதி இருப்பது போல.

கீதா சாம்பசிவம் மேடம்... ரிஷியும் ஹேமாவும் ஜோடியாக நடித்த அந்த ஒரே படம் என்ன என்பதை அறிய ஆவல்.

அசாவேரி ராகம் கேட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்களா சுப்பு தாத்தா? அது வேறு ராகமோ!

Geetha Sambasivam சொன்னது…

ஶ்ரீராம், எனக்குப்படம் பெயர் நினைவில் இல்லை. ரிஷிகபூரின் அண்ணன் மனைவி ஹேமமாலினி. அண்ணன் ஓர் ஜட்கா ஓட்டி. தம்பியான ரிஷிகபூர் காதலிச்சது கழைக்கூத்தாடிப் பெண்ணான பூனம்தில்லானை(?). ஆனால் அண்ணன் திடீரென இறந்து போகத் தம்பிக்கும் அண்ணன் மனைவிக்கும் அவங்க குல வழக்கப்படி சத்தர்(dhdh) போட்டுடுவாங்க. இதிலே அண்ணன் மகளாக வரும் பத்மினி கோலாபுரிக்குத் தாய் மேல் கோபம் வரும். பின்னாடி எப்படி எல்லாம் சரியாகுதுனு கதை! :) எனக்குத் தெரிஞ்சு ஹேமமாலினி இந்த ஒரு படத்தில் தான் நடிச்சிருந்தார். மத்ததெல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! :)

sury siva சொன்னது…

//அசாவேரி ராகம் கேட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்களா சுப்பு தாத்தா? அது வேறு ராகமோ! //

அது அசாவேரி இல்லை. ஆஹிரி.

www.youtube.com/watch?v=1oMH8bjG4aQ

எம்.எஸ்.அம்மா வின் மாயம்மா என்னும் ஷ்யாமா சாஸ்திரி கீர்த்தனை ஒன்றைக் கேளுங்கள்.

ஆஹிரியில் உயிர் (மனம் ) லயித்தால்,
ஆகாரம் கேட்காது வயிறு.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

அல்லவா!

தமிழ்த் தாத்தா பற்றி சொல்லி இருந்தது எனக்கு மகிழ்ச்சி ஆக இருக்கிறது.

என் அம்மா தாத்தா வீட்டு திண்ணையில் உட்கார்ந்து அவரிடம் பாடம் கேட்ட மாணவி.

தன் 12 வது வயதிலேயே திருமணம் ஆகி, படிப்பைத் தொடரவில்லை. 1933 ல்.

நிற்க.

தமிழ் தாய் மொழியாக இருந்தும் பலர் எழுதக் கூடத் தெரியாத அவல நிலை உங்கள் கவலை ..... !! பேச நிறைய இருக்கிறது. காரணங்கள் பல.

எனக்கே எனக்கு" என எழுதுபவர் எண்ணத்தில்
எனது, யான் எனும் இறுமாப்பு தான் உளதோ ?

பலருக்கு நான் பகர்வது புரியவில்லை.
பலர் என் அலை வரிசையில் வருவதும் இல்லை.
நான் எழுதாது இருக்கலாமோ ?

இராமனைத் தொடர்ந்து இலக்குவனும் செல்கின்றான் கானகம்.
கட்டிய மனைவி அவனுக்கு பொருட்டாகத் தெரியவில்லை.
ஊர்மிளா வின் மனம் யார் அறிவார் ?
பதினான்கு வருடம் அவள் அழுதது யார் கேட்டார் ?

மைதிலி சரண் குப்த் என்னும் மகா கவி,
ஊர்மிளா கா விரஹ கான் எனும்
காவியம் எழுதினார் .

என் விறஹத்தை என் கை பிடித்தவனே உணரவில்லை.
நான் ஊர் அறியக் கதறி என்ன பயன் ?

என்று இல்லாமல்,
தனக்குள்ளே குமறுகிராள்.

யாருக்காக ? என்று அவள் தோழி கேட்கிறாள்.
உன் கதறலை யார் கேட்பார்கள் ?
அதுவும் எனக்கே எனக்கு தான்.
ஊர்மிளா சொல்வதைப் படித்த
என் மனம் அன்று முழுவதும்
ஆஹிரி ராகம்.

சு தா.


sury siva சொன்னது…

SriRam Sir !
நான் முன்னம் எழுதிய பின்னூட்டத்தின் பிற்பகுதி
மோகன்ஜி அவர்களுக்கு பதிலாக.

சு தா.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஶ்ரீராம் !
ரசித்ததிற்கு நன்றி.
அக்கா சொன்னபடம் 'ஏக் சத்தர் மைலி சி'
அதுல குடிகார குல்பூஷன் கர்பந்தாவோட மனைவி சு.தா வோட கனவுக்கன்னி.
கதை சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல். நல்லாத்தூர் தான் எடுத்திருந்தாங்க.
இப்போ மீண்டும் பார்க்கிற தைரியமில்லை எனக்கு.
பேரை யோசிச்சு மாளலை! என்னை சுத்த விட்ட அக்காவை என்ன பண்ணலாம்?

மோகன்ஜி சொன்னது…

நல்லாத்தூர் இல்லை... அது 'நல்லாத் தான்'

சுத்திக்கு காட்டும் ஐபேடை என்ன செய்யலாம்?
சு.தாவுக்கு என் பதில் யூகே எம்பஸி போய்ட்டு வந்தப்புறம் தான்.

Geetha Sambasivam சொன்னது…

//குடிகார குல்பூஷன் கர்பந்தாவோட மனைவி சு.தா வோட கனவுக்கன்னி.//

அது குல்பூஷன் கார்பந்தாவா? கபீர் பேடினு நினைச்சிருந்தேன். :))) குழப்பம் தான். கபீர் பேடி ரேகாவோட நடிச்சிருந்தார் இல்லை! ம்ம்ம்ம்ம், அந்தப் படம் பேரும் நினைவில் வரலை. ரேகா அவரைப் பழி வாங்குவார். தமிழிலே ராதிகா நடிச்சு வந்தது! :) ம்ம்ம்ம்ம் ட்ராக் மாறி எழுதிட்டு இருக்கேன்னு அடிக்க வரதுக்குள்ளே ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்! :)

sury siva சொன்னது…

//என்னை சுத்த விட்ட அக்காவை என்ன பண்ணலாம்? //

//என்னை சுத்த விட்ட அக்காவை என்ன பண்ணலாம்?//



நானும் நீங்களும் திடுதிடுப்புன்னு
ஒரு நாள் காலைலே அவுங்க ஊட்டுக்குப் போயி,
நீங்க சொன்ன கத்திரிக்காய் சாதம் தான் வேணும் அத
சாப்பிட்டா தான் இந்த ஆத்மா சாந்தி அடையும்
என்று அடம் பிடிக்கலாம்.

ஹி ...ஹி ...
http://cookingforyoungsters.blogspot.in/
அதப் படிச்சுகிட்டே தான் நான் இன்னிக்கு கக்த்திரி காய் சாதம்
செய்கிறேன்.

ஆனா சொல்லாம போனா இருக்கிற துலே ஒரு ரிஸ்க் இருக்கு.
அது சரி.
சத்தர் இல்ல சாதர் .
சு தா.

Geetha Sambasivam சொன்னது…

//http://sivamgss.blogspot.in/2006/12/blog-post_11.html//

@மோகன் ஜி, தம்பிக்காக ஊர்மிளையின் விரகம் பத்தின என்னோட கர்த்தூ இங்கே!

சு.தா. நானும் நாலு நாளாக் கத்திரிக்காய் சாதம் பண்ணணும்னு நினைச்சால், நம்ம ரங்க்ஸ் சமையல் திட்டத்தையே மாத்திடறார். இன்னிக்கு மோர்க்குழம்பு! என்ன போங்க! :)

Geetha Sambasivam சொன்னது…

அது சரி, அந்த வலைப்பக்கத்தை எப்படித் தோண்டி எடுத்தீங்க? அது தமிழே தெரியாத என்னருமைக் கண்மணிகளுக்கான பதிவுப் பக்கங்கள். நிறைய ஏத்தணும். முடியலை. பாதி சோம்பல்! :(

sury siva சொன்னது…

கனவாவது ? கன்னியாவது ??
கண்ணை மூடினால் இப்ப எல்லாம் வூட்டுக்
கண்ணகி தான் கண் முன்னே நிற்கிறாள்.
அதுவும் நேத்து ராத்திரி கனவுலே
அவ வந்து பேசறப்போ
ஒவ்வொரு பல்லா என் மேல வந்து
கொட்டறது ?

சு தா.

ஜீவி சொன்னது…

//அவர் 'எழுதியது' அவருக்கே அவருக்காய் இருக்கலாம். .. 'அவரோ' நமக்கே நமக்கு!//

கரெக்ட்! உங்கள் பதிலின் முதல் பகுதி உணர்வு தான் எனக்கும். இருந்தும் தி.ஜா. போன்ற எழுத்து உபாசகர்கள் அவர்கள் கற்பனைப் பூச்சை நாம் நம்பும் படியாக காட்சிபடுத்தும் பொழுது அந்த ரசவாத வித்தையில் எது உண்மை எது கற்பனை என்று பிரித்துப் பார்த்து உணர முடியாமல் போய்விடுகிறது.. அந்த அளவுக்கு அவர்கள் எழுத்து தத்ரூபமாக இருப்பதினால் விளையும் அனர்த்தங்கல் இவை. இதெல்லாம் சம்பந்தப்பட்டோருக்கு எவ்வளவு வேதனியாகிப் போகும் என்பதை அவற்றோடு நேரடியாக சம்பந்தம் கொள்ளாவிட்டாலும் அந்த வேதனையை உணர முடிகிறது.

ஒரு டைரி மாதிரி எனக்கே எனக்கு என்பது எனக்கு மட்டும் தெரிந்திருப்பதினால் எந்த உற்பாதமும் விளையப் போவதில்லை. எனக்கே எனக்கு பொதுவெளிக்கு வரும் பொழுது எனக்கே எனக்கில் எவ்வளவு ஆத்மார்த்த புனிதம் இருப்பினும் அது என்னைத் தாண்டி இன்னொருவரால் புரிந்து கொள்ளப்படாமல் மட்டுமில்லை, அந்த ஆத்மார்த்த பனிதம் அது பற்றி கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாதவர்களால் நார் நாராகக் கிழிக்கப்படுகிறது.

'அந்தரங்கம் புனிதமானது' என்று ஜேகே ஒரு சிறுகதை எழுதியிருப்பதாக தேசலான நினைவு.

அந்தரங்கம் புனிதமானதா?.. ஆம்! சந்தேகமில்லாமல். புனிதமானது மட்டுமில்லை, அந்தப் புனிதத்தைக் காப்பாற்ற சில புனிதங்களை பகிரங்கப்படுத்தக் கூடாததாகவும் தெரிகிறது.

நம் சம்பந்தப்பட்டவைகளிலேயே இவ்வளவு காபாந்து என்றால் இன்னொருவர் சம்பந்தப்பட்டவைகளில் இன்னும் பொத்திக் காப்பது அவசியமாகிப் போகிறது.
புரிதலில்லாதவர்களின் நாக்கு பட்டு புனிதங்கள் கொச்சையாகி விடக்கூடாது. கிசுகிசுவாய் சந்தி சிரிக்கக் கூடாது. எழுதுபவனுக்கு இந்த அக்கறை கூடுதலாகத் தேவை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

'என் நெஞ்சே நீயறிவாய்!' என்று நம் நெஞ்சிடம் கூட புலம்ப வேண்டியிருக்கிறது. நமக்கும் நம் நெஞ்சுக்கும் கூட இடைவெளி ஏற்பட்டுப் போகிற சாத்திய கூறுகள் இருப்பதால் தான் இதெயெல்லாம் அழுத்திச் சொல்ல நேரிடுகிறது.

'அவரோ நமக்கே நமக்கு' என்ற பாத்யதை உன்னதமானது. பிறரின் உணர்வுகள் நம் உணர்வுகளாகிப் போகும் பொழுது சரியாகச் சொல்ல வேண்டுமானால் பிறரின் உணர்வுகளில் நம் உணர்வுகளைப் பார்க்கும் பொழுது அந்த பாத்யதை நிகழ்கிறது.

'அவரோ நமக்கே நமக்கு' என்பதில் நாமே அவராகிப் போகிற நிலை.

'அவரோ எனக்கே எனக்கு' என்பது அவரைப் பிறரிடம் கூட பங்கு போட விரும்பாத நிலை.

sury siva சொன்னது…

அந்தரங்கம் புனிதமானது' /// ????? !!!!!!

எந்த ஒரு மனிதனின் எண்ணங்கள் ,சொற்கள், செயல்கள் நிறைந்த ஒரு வாழ்வினை ஒரு சதுரத்தில் அமைப்போம் என்றால்,

அதற்குள்ளே நாலு சிறிய சதுரங்கள் வெவ்வேறு வடிவில் இருக்குமாம்.

அதில் ஒன்று, எனக்கே தெரியும், மற்றவர்களுக்குத் தெரியாது, தெரிய வாய்ப்பில்லை என்பது ஒன்று. நீங்கள் சொல்லுமந்தரங்க டையரி அதிலடங்கும்.

பிற்காலத்தில் அது பொது சொத்தாகையில் அதில் இருப்பன குறித்து நமது வாரிசுகள் பெருமைப்படவும் இருக்கும். சிறுமைப் பாடவும் இருக்கலாம். ( காந்தி ஆடோ பயக்றாபி கதை போல - பெரிசா சொன்னாரே தவிர தான் செய்யல்ல என்ற குற்றச்சாட்டு வரும்)

கூடியவரை நாம் திறந்த புத்தகமாக இருப்பதே மேல்.

நான் கல்லூரியில் பேசிய ஓபன் புக் க்லோச்டு புக் தியரி
தாமஸ் ஹாரிஸ் டிரான்செக்ஷன் அனலிசிஸ்.
இப்போதெல்லாம் சீரியஸ் ஆக எதுவும் எழுதுவது இல்லை.
நேரம் இருந்தால் நீங்கள் படிக்க .

http://subbuthatha.blogspot.in/2013/05/when-all-doors-are-open-i-close-mine-so.html

இந்தப் பதிவில் கருத்துக்கள் சொன்னவர் (மேடம் கீதா சாம்பசிவம் உட்பட) அனைவர் கருத்துக்களும் நான் கூகிள் இருந்து கூகிள் ப்ளஸ் க்கு போன பொது மறைந்து விட்டது.

கீதா மேடம் ! மோர்க்குழம்பு இப்ப கிராண்டு ஸ்வீட்ஸ் கடை லே கிடைக்கிறது. உரப்பு .அதிகம். டேஸ்டும் அதிகம்.

சரிதான்.

சு தா.

ஸ்ரீராம். சொன்னது…

சுப்பு தாத்தாவோட கனவுக் கன்னி என்றால் மும்தாஜ்? அல்லது ஹேமா மாலினியேவா? எனக்கும் ஹிந்தித் திரையுலகில் மும்தாஜ், ஹேமா, மற்றும் மாதுரி திக்ஷித் பிடிக்கும்!

சுப்பு தாத்தா என்னை ஸார் போட்டுக் கூப்பிட வேண்டாம். ஸ்ரீராம் என்று அழைத்தால் போதும். நான் ரொம்ப சின்னப் பையன். ஆ... ஆ... ஆஹிரி!

//கபீர் பேடி ரேகாவோட நடிச்சிருந்தார் இல்லை! ம்ம்ம்ம்ம், அந்தப் படம் பேரும் நினைவில் வரலை. ரேகா அவரைப் பழி வாங்குவார். தமிழிலே ராதிகா நடிச்சு வந்தது! ://

இப்போ அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கணுமா! நான் கபீர் பேடி படமே பார்த்ததில்லை.

//ராதிகா "நடிச்சு" வந்தது//

ராதிகா "நடிச்சு" வந்த எல்லாப் படமுமே பழி வாங்கும் படம்தானோ! ரசிகர்களை!

கடைசியில் பாருங்கள் நான் தி.ஜா பற்றி அதிகம் கதைக்கவில்லை!!

ஜீவி சொன்னது…

சுதா சார்! திஜாவைப் பற்றிய உரையாடலில் உங்கள் உதாரணங்கள் எல்லாம் அன்னியப்பட்டே போகும்.

தனிப்பட்ட முறையில் நிறைய காயங்களைச் சுமந்தவர் அவர். அவர் காலத்தில் சக எழுத்தாளர்களினாலேயே திகஸ்காரம் பண்ணப்பட்டவர். ஒரு குழுவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். கல்கியே, 'மனித வாழ்க்கையில் மிகவும் ஒளிவு மறைவு சங்கதிகளான ஆண்-பெண் உறவு சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுதுவது பெரிய இலக்கியமாகி விடுமோ?' என்று தி.ஜா.வைக் குறித்துக் கேட்டவர் தான்.

வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களில் பிடிப்பும் கொண்ட குடும்பப் பின்னணியில் தான் அவர் கதைகள் உருவாகியிருக்கின்றன எனப்து ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. தன்வயப்பட்ட தன் எழுத்தின் மீதான மோகம் முள்ளாக என்றாவது அவரைக் குத்தியிருக்கலாம். ஆனால் எதையும் அவர வெளிக்குக் காட்டிக் கொண்டதில்லை.

ஜீவி சொன்னது…

திரஸ்காரம், திகஸ்காரமாகி விட்டது. திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

sury siva சொன்னது…

அன்னியப்பட்டே போகும்.////

அந்நியப்பட்டே என்றால் ??

கிளாசிகல் ம்யூசிக் லே அந்நிய ஸ்வரம் என்று வரும்.

ஒரு ராகத்திலே ஆரோஹண அவரொஹனத்திலே இல்லாத இன்னொரு ஸ்வரத்தை இன்னொரு ராகத்தில் இருந்து ஒரு க்ஷணத்துக்கு வந்துட்டு போகும்.
வெஸ்டர்ன் கிளாசிகல் லே அதை ஆக்சிடெண்டல் நோட் என்பார்கள்.

நீங்கள் எந்த அர்த்தத்தில் ?

இர்ரெலவண்ட் என்றா ?
ஸ்ரார்த்த சமையில் லே சாம்பார் போடி மாதிரி.!!!

பரவாயில்லை. குட்டு பட்டாலும் மோதிரக்கைப்பட்டேன் என்று சொல்லிக்கலாம்.

இருந்தாலும், சமூக பரிணாம வளர்ச்சி வேகங்களில் நிற்க முடியாம, இன்றைய பெண்ணீய கருத்துக்கள் பொங்கி வரும் சுனாமியினால் அடிச்சுண்டு போகும்போது,

எதிர் நிற்க வொண்ணா இலக்கியத்தை
வரலாற்றின் ஒரு பக்கமாக நோக்கலாம்.
வழிகாட்டி ஆக முடியுமோ ?


சு தா.

Nithya சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Nithya சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Geetha Sambasivam சொன்னது…

நித்தியா தங்கச்சி/தம்பியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்ற வந்தால் இங்கே கர்த்தே காணோமே! :)

போகட்டும், தம்பி/தங்கச்சி, தாராளமா நடிகைகள் குறித்து எழுதுங்க. ராதிகா வேணா பானகத்துரும்பா இருந்திருக்கலாம். ஆனால் ஏக் சத்தர் மைலி சி படமும் மனப்போராட்டங்களைத் தான் உள்ளடக்கியது அல்லவோ! அவ்வளவு நாட்கள் சிறு பையனாகத் தான் கிட்டத்தட்டப் பிள்ளையைப் போல் வளர்த்த மைத்துனனைக் கல்யாணம் செய்துக்கணும்னா! செம்பருத்தி நாவலிலாவது குஞ்சம்மாவும் சட்டநாதனும் காதலர்கள்! அது ஒண்ணு போதுமே அவங்க மீண்டும் சேருவதற்கு. ஒரு உதாரணத்துக்குத் தான் மேற்சொன்ன படத்தைச் சொன்னேன்.

பார்க்கப் போனால் குஞ்சம்மாவை உள்ளங்கையில் உலோகத்தட்டை வைத்துக் குத்திக்கொண்டே தாங்காமல் வெளிப்படையாகவே சட்டநாதன் தாங்கி இருக்கலாம். தப்பே இல்லை! :( கதையின் இந்த இடத்தில் தி.ஜா. பிறழ்ந்து விட்டாரோனு இப்போத் தோணுது. ஆனால் இந்த முடிவு கதை படித்த அந்தக்காலத்திலே தோன்றி அதை வீட்டிலும் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கேன். துர் புத்தி என்ற பெயர் கிடைத்தது. :))))

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
ஆஹிரியில் ‘சல்லரே ராம சந்த்ருனி’ மனம் மயக்கும் கீர்த்தனம்.
ஆஹிரி- உங்கள் விளக்கம் அருமை.
//எனக்கே எனக்கு எனும் எழுத்து பற்றி //
அதில் ஒரு ஒப்பனையில்லாத உண்மையின் தகிப்பு இருக்கும். ஜாக்கிரதை உணர்வும்,ஊருக்கேற்ற மொழியும் இருக்காது. தான், தானாக இருக்கும் இருப்பை தன் வாசிப்புக்கும் எதிர்கால நினைவோட்டத்துக்குமாய் ஆவணப்படுத்தும் முயற்சி. கலப்பில்லாத உணர்வுகள். கட்டுப்பாடுகள் அற்ற வெளிப்பாடுகள். பிறர் கருத்தோ ஆமோதிப்போ எதிர்நோக்காத ஒடுக்கம்.
எந்நாளோ அவ்வாறான எழுத்து பொதுவில் வெளிப்படும் போது படிப்பவரின் மனநிலைக்கும், தரப்புக்கும் ஏற்றவாறு எதிர்கொள்ளப்படும்.
உங்கள் ஊர்மிளை குறித்த கருத்துக்கள் நல்ல விவாதத்திற்குரியவை.
இன்று இரவு கேட்கப் போகும் ராகம் ஆஹிரி.

மோகன்ஜி சொன்னது…

அக்கா!
தி ஜா பதிவிலே கபீர்பேடி,ரேகான்னு கூட்டி வந்தது கூட பரவாயில்லே. ராதிகா?! பானகத் துரும்பு!

நடிகைகளைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதினா ரசிப்பீங்களா? வானவில்லில் கூடவா என்று முறைப்பீர்களா?

சொன்னீங்கன்னா எழுதுவேன்

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
//நானும் நீங்களும் திடுதிடுப்புன்னு
ஒரு நாள் காலைலே அவுங்க ஊட்டுக்குப் போயி//

சரியான யோசனை! கூடவே அப்பாதுரையையும் ,ஜீவி சாரையும் கூட கூட்டிகிட்டு போகலாம்.ஜீவி சார் புத்தகத்தை, அப்பாதுரையின் அழகான வாய்ஸில் படிக்கவைத்து கேட்டுக்கொண்டே, அக்காவோட நளபாகத்தை ஒரு பிடிபிடிக்கலாம். நாம சாப்பிட்டு ஏதும் மிஞ்சினா நமக்காக படிச்ச அப்பாதுரையும், படைப்பாளியின் கருத்தை இடையிடையே சொல்லிவந்த ஜீவி சாரும் சாப்பிடட்டும். (என்னா வில்லத்தனம்?)
அக்கா அடுத்த டூர் போகறதுக்குள்ளே இதை ஏற்பாடு பண்ணுங்க !

மோகன்ஜி சொன்னது…

அக்கா!
உங்கள் ‘ஊர்மிளையின் விரகம்’ படித்தேன். மிக நல்ல எழுத்து. ஒரு தனிப்பதிவாய் ஊர்மிளை பற்றி பதிகிறேன். எப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் இராமாயணத்தில்?! சொல்லில் அடக்க முடியுமோ ஒரு இளம் மனைவியின் பிரிவும்,தனிமையும்.?

மோகன்ஜி சொன்னது…

சுதா !
//கனவில் வந்து வூட்டுக் கண்ணகி பேசும்போது//
உங்களுக்குமா பல் கொட்டும் பாதிப்பு.... நான் படிக்க பயந்து கொண்டிருக்கிறேன். படிக்காமல் டபாய்க்க முடியுமா? பூசாரி ரொம்ப வேண்டப்பட்டவராச்சே! அவர் வேப்பிலை வீச்சில் வேதாளங்களே அலறும்போது, அப்பாவி நான் எம்மாத்திரம்.?

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
‘அவருக்கே அவருக்கு’ உங்களில் எழுப்பியிருக்கும் அலைகள் ஆர்ப்பரித்தபடி இருக்கின்றன.
அந்தரங்கம் அரங்கத்துக்கு வரும்வரை புனிதமானது தான்! நான் சில வருடங்களுக்கு முன் ஒரு நாவல் ஏறத்தாழ முடிவு வரை எழுதினேன்.
என் எழுத்தில் அவர் சொந்தக் கதையைப் பார்க்க வேண்டி,நண்பரொருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட அந்தரங்கம். அதில் வரும் கதைமாந்தர்கள் பலரின் அடையாளமே தெரியாதடித்து, சிலரை புனிதமாக்கி, சிலரை பகடையாக்கி வேறேதோ ஒன்றாய் ஆக்கிவைத்தேன். மீண்டும் மனம் ஒப்பாமல் அதை முடிக்காமல் தள்ளிவைத்தேன். இடையில் நண்பரின் உறவுநிலைகளில் பற்பல திருப்பங்கள். பழைய கசப்புகள் மறந்து இழையவும், என்னை மேலும் அவர் வற்புறுத்தவில்லை. அந்த நாவல்முயற்சியில் மேலும் செதுக்கினால் அதில் பொதிந்த அந்த அந்தரங்கம் துப்புரவாக மறையலாம். தொடாதவரை நீடிக்கும் புனிதங்கள்.!
// 'அவரோ நமக்கே நமக்கு' என்பதில் நாமே அவராகிப் போகிற நிலை.

'அவரோ எனக்கே எனக்கு' என்பது அவரைப் பிறரிடம் கூட பங்கு போட விரும்பாத நிலை.//
அழகாக சொன்னீர்கள். இரண்டாவது நிலையிலிருந்த நான் இறங்கி வந்து சொல்லலுற்றேன் அவர் படைப்புகளைப் பற்றி !

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
பல வருடங்கள் TRANSACTION ANALYSIS திகட்டதிகட்ட வகுப்பு எடுத்தேன்.
அதன் பல கூறுகளை, அனாசயமாய் தங்கள் படைப்புகளில் எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.
இதோ... காபியைக் குடித்துவிட்டு நேரே நான் போகப்போவது உங்கள் பதிவிற்கு தான் அஷ்டாவதானியே!

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்!
// சுப்பு தாத்தாவோட கனவுக் கன்னி என்றால் மும்தாஜ்? அல்லது ஹேமா மாலினியேவா?//
இரவில் வரும் கனவுக்கு மும்மு மாமி, பகற்கனவுக்கோ ஹேமு மாமி. இப்போ தீர்ந்ததா சந்தேகம்?
எனக்கு சின்ன வயசுன்னு சொல்லிக்கிட்டு ‘மும்தாஜ், ஹேமா, மற்றும் மாதுரி திக்ஷித் பிடிக்கும்!’ னு போட்டிக்கு வருவது சரிதானா?
பெரியவா பெருந்தலைன்னு ஒரு பயம் வேண்டாம்??!!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
நீங்கள் சொல்வது போல் பல கண்டனங்களுக்கு உள்ளானவர்தான் தி ஜா! கல்கியோடு அவர் மோதல் அவரே ஆரம்பித்து வைத்தது தான். கல்கி தலைமையில் உள்ள இலக்கியக் கூட்டத்தில் ‘சொந்தமாக சிந்தித்து’ படைக்கப் போகிறேன் என்று சீண்டியவர் தானே?
ஆனாலும் ஒன்று... தொட தயக்கம் கொள்ளவேண்டிய வாழ்க்கைநிலைகளை கையாண்ட அவர் எழுத்தின் அடிநாதமாய் இருப்பது, பாரம்பரியமும் பழைமைமாண்புகளில் பற்றும் தான் என்று தோன்றுகிறது

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
அன்னியப்பட்டு போகும் என்று ஜீவி சொன்னது திஜா அவர்களின் எழுத்து முன்வைக்கும் அவர் ஆளுமைப் பற்றியது.
இங்கே ‘நிரந்தர வழிகாட்டுதல்’ என்று உண்டா என்ன? புதியன புகும் போது, கழியக் காத்திருக்கும் பழையனவற்றின் கைகளிலிருந்து பெற வேண்டிய ஞானம் உண்டு.பழையவர்கள் ஆக்கி வைத்த உலகத்தின் ஓரத்தில் நின்றபடிதான் புதியதோர் உலகம் செய்வோம் என்று அறைகூவல் விட வேண்டியிருக்கிறது. முன்னோடிகளுக்கான இடம் நிராகரிக்க இயலாதது. யார் யார் அந்த முன்னோடி என்பது தானே கேள்வி?

மோகன்ஜி சொன்னது…

அக்கா !,
நீங்கள் சொன்ன சாதர் கி மைலி’ நல்லதோர் உதாரணமே. நான் படம் பார்த்து விவாதித்திருக்கிறேன் கூட. உங்களுக்கு ஒன்ன பதிலில் கூட பெண் பாதுகாப்புக்கென சில சமூகங்கள் செய்து வாய்த்த ஏற்பாடு என்று சொல்லியிருக்கிறேனே.
நானும் பல வருடங்களுக்குமுன் ஒரு சிறுகதையை இதே சங்கடத்தை வைத்து, அதனால் அடுத்த தலைமுறையில் விளையும் ஒரு சச்சரவை வைத்து எழுதியிருக்கிறேன். தட்டச்சு செய்யாமல் கிடக்கிறது.
உங்களுக்காக நடிகையர் பதிவை எழுதுகிறேன். உங்கள் களம்!

sury siva சொன்னது…

http://subbuthatha.blogspot.in/2013/04/1-1-15.html

first please read this.Then if u still have patience ! u may continue the link i gave ere this.

su tha

Geetha Sambasivam சொன்னது…

//உங்களுக்காக நடிகையர் பதிவை எழுதுகிறேன். உங்கள் களம்!//

எழுதுங்க தம்பி, படிக்கிறேன். ஆனால் என்னோட களமெல்லாம் இல்லை. சினிமா விஷயத்தில் நான் மற்றவற்றை விட மோசமான அறிவுள்ளவள். ஶ்ரீராமைக் கேட்டுப் பாருங்கள்! அவர் அளவுக்கெல்லாம் எனக்குத் தெரியாது! ஜிவாஜியோட பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும் போன்ற படங்களை நான் இன்னமும் பார்த்ததே இல்லைனா நம்புவீங்களா? ஆனால் அதான் உண்மை! ஹிஹிஹி, சிப்புச் சிப்பா வரும்னு தான் பார்க்கிறதில்லை! :))))

ஜீவி சொன்னது…

மோகன்ஜி!

ஒரு பக்கம் சுதா அந்த அந்நியப்பாட்டை இர்ரெலவண்ட் என்கிறீர்களா, என்று கேட்கிறார். திஜாவின் எழுத்து விளைவிக்கும் அவர் ஆளூமை பற்றி என்று நுணுக்கமாகப் பார்த்துச் சொல்லியிருக்கிறீர்கள். கரெக்ட்! அவர் எழுத்தை இழுத்து வந்துப் பொருத்தி எனக்கு விளக்கிச் சொல்லத் தெரிந்தாலும் திஜாவின் எழுத்து அனுபவங்களை மட்டுமே அடிநாதமாகக் கொண்டு எப்படி அதை பொதுவெளியில் விவரிப்பது என்பதும் தயக்கமாகத் தான் இருக்கிறது.

அவரது எழுத்தால் விளைந்த நாம் பெற்ற அனுபவங்களை அவரது சொந்த அனுபவங்களாக நாம் கொள்வதே அதீத கற்பனையாய் இருக்க வேண்டும் என்றே அவருக்கும் அவர் எழுத்து விளைவித்த அனுபவங்களுக்கும் தஞ்சாவூர் கோட்டை அகழி மாதிரி மனவெளியில் ஒரு அகழியை நிறுவி அதில் ஒரு இடைவெளியைக் காண என் மனம் விரும்புகிறது. இந்த விருப்பத்திற்கு அடிப்படைக் காரணம் அவர் நம்மிடையே இல்லாதது தான். எவ்வலவு தான் நம் அசட்டுக் கற்பனைப்பூச்சுகளை அவர பிம்பத்தின் மேல் பூசுவது?.. அதற்கும் ஓர் எல்லை வேணும் இல்லையா?..

ஒண்ணே ஒண்ணு சொல்லணும். திஜா 70% உண்மை; 30% கற்பனை என்கிற கலப்பில் கலந்து எழுதினாரா தெரியவில்லை. அது 30% உண்மை, 70# கற்பனை என்றும் இருந்திருக்கலாம். ஒரேயடியாக 100% கற்பனையாக இருந்திருக்கலாம். இரண்டாவது சொன்ன மாதிரி கலப்பின் விகிதாச்சாரம் இருப்பின், திஜா நாவலின் (குறிப்பாக அம்மா வந்தாள்) நிலைக்களனை அவ்வலவு தீர்க்கமாக அவர் தன் படைப்பில் கொண்டு வந்திருக்காமல் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது
கடைசியில் சொன்ன 100% முற்றும் முழுசாக அவர் கற்பனை எனில், எழுதியவரின் எழுத்தின் நம்மை நம்ப வைத்த திறமைக்கு ஈடு இணையே இல்லை. பகவானே! நூறு பர்சண்ட்டும் கற்பனையாகவே இருந்திருந்திருக்க வேண்டும் என்று ஒரு பக்கம் மனசும் அவாவுகிறது! ஏன் என்று தெரியவில்லை. உணமையை தரிசிக்க திராணி இல்லாமலலா?.. இல்லை, அப்புறம் நிகழ்ந்த மன உளச்சல்களுக்கு அர்த்தமில்லாது போகவேண்டும் என்று உளமார விரும்புவதால்.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
தெளிவான பதிவு. ரசித்தேன். கைதட்டுவது காதில் விழுகிறதா?

மோகன்ஜி சொன்னது…

அக்கா!
ஒரு காலகட்டத்தின் மகோன்னதம் வேறொரு நாளில் சாதாரணமாய்ப் போய்விடுகிறது. இது நேர்வது கலைஞர்களுக்கு மட்டுமல்ல... காலமாற்றம் எல்லாவற்றையும் இப்படித்தானே புரட்டிப் போட்டபடி செல்கிறது.
சிவாஜி சிம்பு ஆக முடியாது தான்!

மோகன்ஜி சொன்னது…


ஜீவி சார் !
உங்கள் எண்ணவோட்டம் என்னுள் புதிய சிந்தனைகளைப் புகுந்துகிறது. அதற்கு முதலில் என் நன்றி !

படைப்பாளி தன் புனைவுக்கான சரடை, தன் வாழ்க்கையிலிருந்தும், தன்னை சுற்றியுள்ளவர்கள் அனுபவத்திலிருந்தும் காற்றில் மிதந்து வந்த செய்திகளிலிருந்தும் தான் எடுத்துக் கொள்கிறான். தனக்கே கைவந்த கற்பனையால், அவற்றின் தோற்றமே தெரியாத வண்ணம் நெய்கிறான். தேர்ந்த வார்த்தைச்சாயம் தோய்த்து, தனது பாணியெனும் பளபளக்கும் ஜரிகை சேர்த்து படைப்பென்னும் பட்டாடை உருவாக்கி காலத்தின் தோள்களில் சார்த்திவிட்டுப் போகிறான். அது அவன் சொந்தக்கதையாய் இருக்க வேண்டியதில்லை. அவன் எழுத்தும் அவனும் வேறுவேறு தான்.


நம் வாழ்வின் சில தருணங்களோ அல்லது நம் நம்பிக்கைகளோ கதையின் ஓட்டத்தில் பிரதிபலிக்கலாம். சொல்லும் வித்த்தின் புதுமையும் வசீகரமும் நம்மை வெகுவாக ஈர்க்கலாம். அது நிகழும்போது படைப்பாளி நம்மை நெருங்கிவிடுகிறான். அடிக்கடி அப்படி நெருங்குவது தொடர்கையில் ஏதோ ஒரு சமயம் நெஞ்சின் மையத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறான். பெரும்பாலும் அந்த சிம்மாசனம் காலியாவதில்லை. வாசகனின் ரசனையின் வளர்ச்சிகூட அந்த சிம்மாசனத்தை அகற்றுவதில்லை. ஆராதனை குறைந்து போனாலும் அது பரண் ஏறுவதில்லை. இதுவே என் எளிமையான கருத்து சார் !

ஜீவி சொன்னது…

//அவன் எழுத்தும் அவனும் வேறுவேறு தான். //

அவன் எழுத்தும் அவனும் வேறு தான் என்று காட்டிக் கொள்கிற மாதிரி எழுத வேண்டிய நிர்பந்தம் திஜாவுக்கு ஏற்படாதது தான் விஷயமாகிப் போகிறது. சொல்லப் போனால் மனிதர் தானும் தன் எழுத்தும் ஒன்றே என்று தான் எழுதுவதில் தன்னைக் கரைத்துக் கொள்கிற தீவிரம் கூடிப்போனவர்.

திஜாவும் அவர் எழுத்தும் வேறே வேறே என்று சொன்னால் அது அபவாதமாகிப் போகும். தனக்காக ஒன்று, எழுத்துக்காக இன்னொன்று என்று பாத்திக்கட்டி தன்னிலிருந்து விலகி அவர் எழுதியதாக ஆகிப்போகும். அது இதையும், அதையும் எதையும் எழுதுவார் என்று எழுதுவோரோடு திஜாவை வரிசையில் நிறுத்திய பாவமாகிப் போகும். தன்னிலிருந்து தன் எழுத்தை விலக்கிய அந்த அறியாமையை
என்றுமே செய்ததில்லை அவர். அதனால் தான் திஜா இன்றும் நிற்கிறார். அவர் தஞ்சாவூர்தனத்தைத் தாண்டி இந்த நிஜம் அவரில் புதைந்திருக்கிறது.

இதுக்கு ஸ்ரீவேணுகோபாலன், அதுக்கு புஷ்பா தங்கத்துரை என்று ஒரே ஆளே இரட்டை புனைபெயர் பூண்டு ரெண்டாகிப் போன ஆள்மாறாட்ட அவலங்களை மனசில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத மஹானுபாவன் இவர்.

நான் சொல்ல வந்தது வேறே. காவேரிக் கரை, அந்த மணல் வெளி, தோப்பு, துரவு. பச்சை பசேல் எல்லாம் சரி. யதார்த்தத்தை குழைத்து வார்த்தெடுக்கிறோம் என்கிற நேர்த்தியில் கதை நிகழ்விடத்தை மட்டும் அச்சு அசலாய் நிஜத்தில் இருக்கும் இடத்தில் நடப்பதாகக் காட்டக் கூடாது.

'பார்வை' என்றொரு நாவல் எழுதினேன் நான். அச்சு அசலாக நிஜமாக நடந்தது போன்ற யதார்த்த உணர்வை ஏற்படுத்த மேற்கு மாம்பலத்தில் நிஜத்தில் இருக்கும் ஒரு தெருவின் பெயரை குறிப்பிட வேண்டியிருந்தது. அப்படியே ஒரு தெருவின் பெயரைக் குறிப்பிட்டேன். அந்தத் தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் அந்த நிகழ்வு நடப்பதாகச் சொல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் யதார்த்த உண்மையை மாற்ற வேண்டியதாயிற்று.

அந்தத் தெருவில் ஒன்றிலிருந்து நாற்பது எண் (Door Nos.) உள்ள வீடுகள் நிஜத்தில் இருப்பதாக இருந்தால், அதை மட்டும் கொஞ்சம் மாற்றி, கதை நிகழுமிடம் 50-ம் எண் கொண்ட வீட்டில் நடப்பதாகச் சொல்ல வேண்டும்.

நிஜத்தில் இருக்கும் அந்த 40 எண்ணுக்குள்ளேயே ஒரு எண்ணில் கதை நிகழ்வு நடப்பதாய் காட்டினால் யாரையோ சீண்டிய வம்பாகிப் போகும்.

இப்படியாக நான் மேலே குறிப்பிடிருக்கும் ஒரு நாவலில் யாதார்த்த உணர்வைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியத்தில் 'அந்த' ஒரு சின்ன பிசகை மட்டும் அவர் செய்யாமலிருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ஜீவி சொன்னது…

நாம் கதையில் குறிப்பிடுபவர் உயிரோடு இல்லை என்றால் இதற்கும் மேலான ஜாக்கிரதை உணர்வு தேவை.

ஜெயமோகன் 'அறம்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். உண்மையில் அது எம்.வி.வி.யை கதையின் நாயகனாகக் கொண்ட கதை. வாழ்க்கையில் எம்.வி.வி.க்கு நேர்ந்த ஒரு அநீதியைச் சாடி கதை நகர்கிறது.

கதையில் எம்.வி.வி. சொல்வதாக ஒரு கெட்ட வார்த்தை வரும்.

எம்.வி.வி. முருக பக்தர். என் மனசில் மிக உயர்ந்த இடம் அவருக்குண்டு. இப்படியான வார்த்தைகளை அவர் உபயோகப்படுதத முடியும் என்று கற்பனையிலும் நான் நினைத்ததில்லை. கெட்ட வார்த்தையை உபயோகப்படுத்துவதிநால் உயர்ந்த இடமோ பீடமோ சரியும் என்றில்லை. என் மனசில் படிந்திருக்கும் எம்.வி.வி. நிச்சயம் அந்த அளவுக்குக் கீழிறங்கி வரமாட்டார் என்று மனம் வெந்தது. அதனால் தான் எனது பதட்டம். ஆகவே அந்த கெட்ட வார்த்தையை அங்கு உபயோகப்படுத்துவது அவசியம் தானா?.. அது எம்.வி.வி.யின் தனிப்பட்ட குணாம்சத்திற்கு இழைத்த அநீதி இல்லையா' என்று குறிப்பிட்டு ஜெமோவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

அடுத்த நாளே, கதைகளில் இப்படியான கெட்ட வார்தைகள் உபயோகப்படுத்துவதெல்லாம் இப்பொழுது சகஜமாகிப் போயிருக்கிற விஷயம்' என்று அர்த்தம் கொடுக்கிற மாதிரியான பதிலை ஜெமோ எனக்கு அனுப்பியிருந்தார்.

'அறம்' என்பதன் அர்த்தமும் ரொம்பவும் சகஜமாகிப் போய் நபருக்கு நபர் மாறுபடலாம் என்று தெரிந்து போயிற்று. இத்தனைக்கும் நடுவே தன் நிலையை விளக்கி அடுத்த நாளே பதில் கடிதம் அனுப்பிய ஜெமோ என் மனசில் உயர்ந்தார் என்பது இந்த விஷயத்தின் இன்னொரு பரிமாணம்.

அடிப்படையில் எல்லோரும் நல்லவரே. அவரவர் ஒவ்வொன்றிற்கும் கொண்டிருக்கும் அளவுகோல்கள் தாம் வித்யாசப்படுகின்றன என்ற ஞானம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இந்த ஞானம் பி.பி.யை எகிற விடாமலும் பார்த்துக் கொள்கிறது.

அப்பாதுரை சொன்னது…

ஜீவியின் கருத்துக்கள் சுவாரசியம். திஜாவின் எழுத்துப் போக்கு அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்றாலும் இப்படி அசைபோட வைத்திருப்பதே வெற்றியாகும்.

//திரஸ்காரம், திகஸ்காரமாகி விட்டது.

ஆகட்டுமே அதனால் என்ன சார். திரஸ்காரம் தெரியாது. திகஸ்காரம் தெரியாது. நமஸ்காரம்.

ஜீவி சொன்னது…

//ஆகட்டுமே அதனால் என்ன சார். திரஸ்காரம் தெரியாது. திகஸ்காரம் தெரியாது. நமஸ்காரம்.//

ஹஹ்ஹஹ்ஹா.. நமஸ்காரத்தை மிகப் பொருத்தமான அந்த இடத்தில்.. மிகவும் ரசித்தேன், துரை சார்.

//என்றாலும் இப்படி அசைபோட வைத்திருப்பதே வெற்றியாகும்.//

'திரஸ்காரம்' ஜெயகாந்தனிடமிருந்து தெரிந்து கொண்ட வார்த்தை. அதோடு இப்படியும் அப்படியும் புரட்டிப் போட்டு, மேட்டைப் பள்ளமாகவும், பள்ளத்தை மேடாகவும் ஆக்கும் விவாத வித்தையையும்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய ஜீவி சார் !
கனமான கருத்துகள். இரண்டு பின்னூட்டங்களுக்குமான என் கருத்து.
கதைக்கரு எங்கிருந்து வந்தாலும், கதைமாந்தர் யார் ஜாடை எனினும் தி ஜா அவற்றை தனதாக்கிக்கொண்டு அவர் உணர்வைப் பிழிந்து படைப்புகள் உருவாக்கினார் .
தீயில் எது இடைப்பட்டாலும் அதுவும் தீயாகி எரிவதான வேள்வித்தீ அவருடைய படைப்பூக்கம்.
தன்னையும் ஊடே எரித்துச் கொள்ளாமல் உயரிலக்கியம்,உயிரிலக்கியம் வருவது எங்ஙனம் ?

ஒரு வாசகன் என்ற வகையில், எரியின் கதகதப்பில் குளிர்காயலாம். கூடவே எரிந்த படைப்பாளியை போற்றலாம். கொண்டாடலாம்;
எதனால் அவனும் எரிந்தான்,எதை எரித்தான் எனும் ஆராய்ச்சியோ ஆர்வமோ அவசியம் இல்லை.
திஜா மேல் வைக்கப்பட்ட பல வினாக்களும் விமரிசனங்களும் படைப்பை முன்வைத்ததைவிட, அதிகம் படைப்பாளியை இலக்காய் கொண்டவையே .

தி ஜா இருப்பார்.

ஜெயமோகனின் அறம் வரிசையில் எம்விவி பற்றிய சித்தரிப்பில் ஜெயமோகனுடனான உங்கள் பரிமாற்றங்கள் உங்கள் இருவரின் 'அறம்'பால் கொண்ட பிடிப்பையும் காட்டுகிறது. அதே வரிசையில்,ஜெயமோகனின் 'மயில் கழுத்து' படித்தீர்களா? 'திஜா' வே அதன் முக்கிய பாத்திரம். மிக நுணுக்கமாக எழுதப்பட்ட கதை. படைப்பின் சாத்தியங்களை எண்ணிஎண்ணி என்னை அசரவைத்த ஆக்கம். ஜெயமோகன் சாருடன் என்றாவது அதைப் பற்றி அலச ஆவல்.
ஜீவி சார் ! இருவருமே சொல்லவேண்டியதை சொல்லாமல்,சொல்லிவிட்டாற் போன்ற பாவனையில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
இந்தப் பதிவின் கடைசிவரிகளாக நான் எழுதியிருப்பதே இதற்கான பதில் எனக் கொள்ளலாம்.'அது அப்படித்தான்'
ஒரு தரப்பை தீர்மானமாக ஊசலாட்டமில்லாமல் எடுத்துக் கொண்டு விடுவதுதான் எவ்வளவு சௌகர்யமான இருக்கிறது !!

மோகன்ஜி சொன்னது…

துரை சார் !

//ஆகட்டுமே அதனால் என்ன சார். திரஸ்காரம் தெரியாது. திகஸ்காரம் தெரியாது. நமஸ்காரம்.//

அடக்கமே உன் சிங்காரம்.
அஹங்காரம் இல்லாது, பணிவை ஸ்வீகாரம் எடுத்த துரையை,
எத்தனை ஆஹாகாரம், ஊஹாகாரம் போட்டு வாழ்த்தினாலும்
அது வெறும் ரீங்காரம் மட்டுமே ஆகும்.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார் !

//அதோடு இப்படியும் அப்படியும் புரட்டிப் போட்டு, மேட்டைப் பள்ளமாகவும், பள்ளத்தை மேடாகவும் ஆக்கும் விவாத வித்தையையும்.//

என்னாது ?? அட ! அங்கயுமா ?!

ஜீவி சொன்னது…

ரொம்ப சரி.
ஃபைலை க்ளோஸ் பண்ணலாம் என்றால் நம்ம அப்பாதுரை சார் வந்தால், மறுபடியும் திறந்து பார்க்கத் தோன்றும். பார்க்கலாம்.

அப்பாதுரை சொன்னது…

அறம் நானும் படித்தேன். (சுமார் ரகம் என்பது வேறு விஷயம் - அதை இலக்கியக் காவலர்கள் விவாதித்துக் கொள்ளட்டும்.)

எனக்கென்னவோ அந்த வார்த்தையில் அப்படி ஒன்றும் குறையிருப்பதாகத் தோன்றவில்லை. நிஜ வாழ்வில் - அதுவும் தஞ்சாவூர் திருநெல்வேலி வட்டார பிராமண சமூகத்தில் - மிகச் சகஜமாக புழங்கும் சொல். இதை எம்விவி சொல்லியிருந்தால் அவர் எழுத்தின் மீதோ மனிதப் பண்பின் மீதோ குறையா? அல்லது சொல்லவே மாட்டார் என்பதால் அவர் எழுத்து/பண்பின் நிறை இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டபடவுமில்லை.

மொழியின் வலிமை - வக்கிரமானாலும் - வலிமை அதன் சொற்கள் தான். அந்தக் கதையில் அந்த இடத்தில் அந்தச் சொல் வலிமையாகவே இருந்தது.

உண்மையியே அப்படிச் சொல்லியிருந்தால் மனிதர் என்ற உணர்வே மேலோங்குகிறது. இலக்கியத்தின் அண்மையிலும் வருகிறது.

அப்பாதுரை சொன்னது…

சும்மா.. இந்தக் கனியிருப்பக் காய் கவருவது எல்லாம் படிக்க லாயக்கு.. ஹிஹி.. நிஜத்துல வரப்ப மனுஷ நாக்கு கலரே வேறே.

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜீவி சொன்னது…

துரை சார்! எம்.வி.வி.யின் குணாதிசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அவர் எழுத்துக்களிலேயே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
அவரது 'காதுகள்' நாவலை நீங்கள் படித்திருக்க வேண்டும். அவர் தான் பட்ட அவஸ்தைகளைப் பற்றி வெளிப்படையாக எழுதிய சுயதரிசனம் அந்த நாவல்.
அந்த அவஸ்தைகளில் பாலுறவு அவஸ்தைகள் முக்கியமானது. அப்படியான வார்த்தைப் பிரயோகங்களை அவர் உபயோகித்திருக்க மாட்டார் என்பதற்காக நான் சொல்ல வரவில்லை. ( தஞ்சாவூர், கும்பகோணப் பக்க கெட்ட வார்த்தையும் அது அல்ல. அது 'தா'வில் ஆரம்பிக்கும்.)

பரம ஏழை ஒருவன். ஆனால் தன்மானம், தன் கெளரவம் இதெல்லாம் கட்டிக் காப்பவன். எந்த நிலையிலும் அதற்கு தாழ்வு என்றால் சகித்துக் கொள்ளாதவன். ஒரு காலத்தில் செல்வ வளம் மிகுந்து பணக்காரனாய் இருந்தவனும் கூட இவன். இந்த வறிய நிலையில் பணத்திற்காக அல்லாடுகிறான். அதற்காக 'மலத்தில் காசு கிடந்தால் கூட அலம்பி எடுத்துக் கொள்வேன்' என்று சொல்ல மாட்டான். அந்த நேரத்தில் எம்.வி.வி.யின் நிலையும் அதுவே. அவன் வறிய நிலையை படம் பிடித்துக் காட்ட மலம்-காசு உதாரணம் பிரமாதம் இல்லையா' பரவசப்படுவதில் குறைபாடு உண்டு.

அந்த வார்த்தைப் பிரயோகத்தின் வலிமையை நான் உணர்கிறேன். வறுமையை வலுப்படுத்த உபயோகப்படுத்திய ஒரு வார்த்தை அந்த மனிதனின் சுயத்தை பலஹீனப்படுத்தி விடக்கூடாது. வாழ்ந்த மனிதன் முக்கியமா அந்த மனிதனின் நிலையை நான் படம் பிடித்துக் காட்டுவது முக்கியமா என்பதல்ல இங்கே நிலை.

'வறுமை தான். ஆனால் அதற்குக் கூட நான் தயார்' என்று எம்.வி.வி. . கீழிறங்குவதான படப்பிடிப்பு தான் தவறு ஏற்படுகிறது.

(அதெல்லாம் சரி.. இன்னும் இரண்டு பின்னூட்டங்கள் இப்படிப் போனால் உங்கள் பக்க கருத்தைச் சொல்லச் சொல்ல ஜெமோ பக்கம் சாய்ந்து விடுவீர்கள் போலிருக்கே. ஜெமோவை நிறைய படியுங்கள். நிறைய நிறைய விஷயங்களில் கருத்து பகிர்ந்தலுக்கு நம்மை அறிந்தே நாம் உந்தப்படுவோம். அவரைப் படிப்பதினால் ஆய உன்னதமான பலன் இது.)

ஜீவி சொன்னது…

//வாழ்ந்த மனிதன் முக்கியமா அந்த மனிதனின் நிலையை நான் படம் பிடித்துக் காட்டுவது முக்கியமா என்பதல்ல இங்கே நிலை.//

வாழ்ந்த மனிதன் முக்கியமா அந்த மனிதனின் நிலையை எழுத்தில் நான் படம் பிடித்து
காட்டுவது முக்கியமா என்பதில் எது முக்கியம் என்பதே இங்கே நிலை

என்று இருந்திருக்க வேண்டும். திருத்திப் படித்துக் கொள்ளூங்கள்.

மோகன்ஜி சொன்னது…

துரை சார்!

அறம் கதைகள் அண்மைக்கால படைப்புகளில் ஒரு புதிய வெளிச்சம் என்று சொல்லுவேன்.

காரணம், தற்கால வாழ்க்கைமுறையில்,,கொஞ்சம்கொஞ்சமாய் மனித மனங்களில் இருந்து அறவுணர்ச்சி நழுவிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்தவேனும் அறத்தை உட்பொதித்த கதைகள் தேவை.
ஜெயகாந்தன் கதைகளில் எளிய மனிதர்களிடையே இந்த அறம் சார்ந்த வெளிப்பாடுகள் மிக்கு இருக்கும். இத்தகு கதைகளை, நீதிபோதிக்கும் பத்தாம்பசலித்தனமாய் ஒதுக்கி, அழகியலுமற்று சவசவ என கிறுக்கப்படும் போக்கே தற்கால படைப்புகளில் அதிகம்.

கற்பனையை உண்மைபோல் சொல்ல எழுத்தாளர்கள் மெனக்கெடுவாரகள். அறம் சிறுகதையிலோ, ஒரு உண்மைச் சம்பவத்தை கதையாக்க, ஜெயமோகன் தன்னையும் ஒரு பாத்திரமாக்கி படரவிட்டு எழுத்தாளனின் சாபமான, உரியதைப் பறிக்கும் சுரண்டலை படம்போட்டு காட்டியிருந்தார். எது உங்களுக்கு அதில் சுமாராகப் பட்டதோ தெரியவில்லை.

கதையின் ஓட்டத்தை இன்னமும் யதார்த்தப்படுத்தும் வண்ணம் அந்த வசவுகளை ஜெ. பயன்படுத்தியிருப்பதை நீங்கள் ஆமோதிப்பது எனக்கு ஒரு ஆச்சர்யமுமல்ல. ஜீவி சார் எம்வீவீ யை ஒரு சீரிய படைப்பாளனாக அறிந்திருந்ததினால் தான், அவர்பற்றி எழுப்பப்பட்டுவிட்ட ஒரு கீழான பிம்பமாக இதைக் கண்டு பதற்றம் கொண்டார்.

ஜெ அந்த வசவுகளைத் தவிர்த்திருந்தாலும், அவரின் சிறுகதைக்கு எந்த குந்தகமும் வந்திருக்காது என்பதே என் கருத்தும் கூட.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!

எனக்கு ஒரு அவசரமுமில்லை. நல்ல சிந்தனையுள்ள அன்பர்களின் ஆரோக்கியமான விவாததை விடவும் என் பதிவுகள் அவசரமோ அவசியமானதோ அல்ல.

பொருத்தமான குறள்கள்.

நீங்கள் அந்த அறம் சிறுகதையைப் படித்துப் பாருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!

எம்விவியின் பிம்பத்திற்கென நீங்கள் முன்வைத்திருக்கும் கருத்துகளால் அவருடைய ஆத்மா உங்களுக்கு கண்ணீர்மல்க நன்றி சொல்லும்.

//தஞ்சாவூர், கும்பகோணப் பக்க கெட்ட வார்த்தையும் அது அல்ல. அது 'தா'வில் ஆரம்பிக்கும்//

தஞ்சாவூர் கும்பகோணத்து வசவுகளை ஆராயப் புகுந்தால் நாலுநாள் சோறுதண்ணி வேண்டியிருக்காது. அதை விளக்க தி ஜா வைத்தான் தேட வேண்டியிருக்கிறது. அந்த வசவுகளைப் பரிமாறிக் கொள்பவர்களின் இடையே,'ஒரு புழுத்த நாய்கூட போய்விட முடியாது' என்பார் !
அவசியமின்றி, அதிர்ச்சி மதிப்பு வேண்டி திணிக்கப்படும் மலினம் விரும்பத் தக்கதல்ல.

இலக்கியம் முற்றினகட்டைகளுக்காக மட்டும் எழுதப் படுவதில்லை. வாசிப்புலகில் காலடி எடுத்துவைக்கும் சிறார்கள்,இளைஞர்கள்,யுவதிகள் குடும்பப் பெண்கள் யாவருக்குமானது.

// ஜெமோவை நிறைய படியுங்கள். நிறைய நிறைய விஷயங்களில் கருத்து பகிர்ந்தலுக்கு நம்மை அறிந்தே நாம் உந்தப்படுவோம். அவரைப் படிப்பதினால் ஆய உன்னதமான பலன் இது.// என்று அப்பாதுரைக்கு உங்களின் வேண்டுகோளுக்கு என் ஆதரவும் பாராட்டும்.


ஜீவி சொன்னது…

//எம்விவியின் பிம்பத்திற்கென நீங்கள் முன்வைத்திருக்கும் கருத்துகளால் அவருடைய ஆத்மா உங்களுக்கு கண்ணீர்மல்க நன்றி சொல்லும். //

சிலிர்த்தேன்.

நானும் எம்.வி.வி.யை நினைவு கொள்கிற மாதிரி ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறேன். அதைப் புத்தகமாக பிரசுரம் பண்ண வேண்டி என் பதிவு தளத்திலிருந்து நீக்கீயிருக்கிறென்.

அன்பின் மோகன்ஜி,

உங்களுக்கு கலைவிமரிசகர் தேனுகாவைத் தெரிந்திருக்கும். கும்பகோணம் சென்ற காலங்களில் இவரைச் சந்தித்த போதெல்லாம் எம்.வி.வெங்கட்ராம் தவறாமல் எங்கள் உரையாடலில் தலைகாட்டாமல் இருக்க மாட்டார்.
எழுத்தின் மூலமாக அறிமுகம் தாண்டி எம்.வி.வி.யின் தனிப்பட்ட குணாம்சங்களைத் தெரிந்து கொள்வதற்கு தேனுகா பெரும் கார்ணமாக இருந்தார். தேனுகாவும் இப்போது இல்லை. இப்பொழுதும் கும்பகோணம் செல்லுக்னால் அவர் நினைவுகள் மனசில் மண்டும்.

தேனுகா தனக்கென்று இணையதள பதிவுதளம் ஒன்று கொண்டிருந்தார். அதிலும் எம்.வி.வி. பற்றி தி.ஜா. பற்றியெல்லாம் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பற்றித் தெரிந்து கொள்ள தற்போது காணக்கிடைக்கிற இணையப் பக்கம் இது.

http://dhenuka.blogspot.in/

ஜெமோவின் 'அறம்' சுதா சாரும் படிக்க வேண்டிய கதை. அந்தக் கதையின் சுட்டியை அவருக்குக் கொடுங்கள்.

அப்பாதுரை சொன்னது…

//தஞ்சாவூர், கும்பகோணப் பக்க கெட்ட வார்த்தையும் அது அல்ல. அது 'தா'வில் ஆரம்பிக்கும்

பெரியவாளுக்குத் தெரியாதது இல்லே. :-)

தாவுல ஆரம்பிக்கிறது கெட்ட வார்த்தனு இப்பத்தான் தெரியும்.. ஏன்னா அது குசலம் விசாரிக்கிற மாதிரின்னு நினைச்சுட்டிருந்தேன்.

:என்னடா தா.. காலங்காத்தாலே??

:இருக்கேண்டா.. ஆமாம் சின்னம்பியைப் பாத்தியோ? தா எங்கே போனான்னே தெரியல.. அவன் அண்ணன் கம்.. இதோட நாலு வாட்டி கூட்டு கேட்டுட்டான்

:சின்னம்பி தானே? அவன் அந்த மேட்டுத் தெரு சுப்பினித் தா..யோட கோவிலுக்குப் போனதைப் பாத்தனே?

:தா.. ரெண்டு கம்...ம் கோவிலுக்குப் போயாச்சா??

ஹிஹி.

அப்பாதுரை சொன்னது…

//நானும் எம்.வி.வி.யை நினைவு கொள்கிற மாதிரி ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறேன்.

தாமதம் ஏனோ?

அப்பாதுரை சொன்னது…

//சிந்தனையுள்ள அன்பர்களின் ஆரோக்கியமான விவாததை விடவும்
பெரிமன்சன் ஜீவி எதுனா சொல்றாருனா அவரு பெரிமன்சன்.. அல்லாரும் அப்படினு சொம்மா நெனச்சு எதுனா பில்டப்பு குடுத்தினா பேஜார் நைனா.

// என் பதிவுகள் அவசரமோ அவசியமானதோ அல்ல.

அ..இன்னாமா ஜகா வாங்குறே நைனா.. சோம்பேறியா குந்தினுகிராம எத்தனா எய்து தெர்தா?

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜீவி சொன்னது…

ரொம்ப சரி, சுதா சார்.

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Geetha Sambasivam சொன்னது…

சு.தா.வைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். பொதுவாக யாரையுமே, எழுத்தாளர்களோ அல்லது நடிகர்களோ ஆராதிக்கும் குணம் என்னிடம் இல்லை. என்றாலும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவராக ஜெ.மோ. இருந்தார். அதுவும் நாளாவட்டத்தில் அவர் எழுதுவதைப் படிக்கப் படிக்க மாறி விட்டது! :)

kashyapan சொன்னது…

எம்.வி.வி சவுராஷ்ட்ற பிராமணர் என்று நினைவு ! அவர் அந்த வார்த்தையை உபயோகித்திருப்பாறோ 1 யொசிக தோன்ருகிறது ?---காஸ்யபன்.

ஜீவி சொன்னது…

சுதா சார்,

இப்பொழுதிய தமிழின் பிரபல எழுத்தாளர்கள் பொதுவில் வைக்க யோசிக்கிற சில வார்த்தைகளை ரொம்ப சகஜமாக உபயோகப்படுததுகிறார்கள். அப்படி எழுதுவது அவர்களுக்குப் பழகிப் போய் விட்டது என்பதால் அதைப் பற்றி நம்க்கு எந்த அதிர்ச்சியோ ஆசேட்பணையோ இல்லை. இது நவீன எழுத்தின் ஒரு ஸ்டைலாகப் போய்விட்டது. அவ்வளவு தான்.

ஆனால் நம்மிடையே வாழ்ந்த வெளிப்படையாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட காலஞ்சென்ற ஒரு தமிழ் எழுத்தாளர் இந்த மாதிரி ஒரு வார்த்தையை தன் இயலாமையை வெளிப்படுத்த உபயோகித்தார் எனகிற மாதிரி எழுதும் போது (அது கற்பனையான உரையாடல் தான் எனினும்) அந்தப் பாத்திரப்படைப்பில் கோணல் ஏற்படுகிறது என்பது ஒன்றே என் வாதம். எம்விவியை நெருங்கித் தெரிந்த ஒருத்தரே ஒருத்தர் அவர் சகஜமாய் உபயோகப்படுத்தும் வார்த்தை தான் இது என்று சொன்னாலும் மனச்சாந்தி ஏற்பட்டு விடும்.

கீதா சாம்பசிவம் கன்னாப்பின்னாவென்று உங்களை ஆதரிப்பதற்கும் இதற்கும்
வித்தியாசம் உண்டு. காஸ்யபன் சார் சொல்வது இன்னும் வேடிக்கை. எம்விவி ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அந்த வார்த்தையை உபயோகித்திருப்பாரோ என்று யோசிக்க வேண்டியிருக்காம் அவருக்கு. :)) என்ன லாஜிக் பாருங்கள்!

'கல்கி' தன் இயலாமையை வெளிப்படுத்த இப்படிச் சொன்னார் என்று 'கல்கி'யை கதாபாத்திரமாகக் கொண்டு ஒருவர் எழுதும் கதையில் எழுதினார் என்றால் உங்களுக்கெல்லாம் எப்படி ஒரு முகச்சுணுக்கல் ஏற்படுமோ அப்படி எனக்கேற்பட்டதால் அதைப் பற்றிக் குறிப்பிட்டேன். ஜெமோவே தான் எழுதியதற்கு ஒரு நியாயம் கற்பித்துச் சொன்னவுடன் அவர் மேல் ஏற்பட்ட மரியாதையில் அவருக்காச்சு, காலஞ்சென்ற எம்விவிக்கு ஆச்சு என்று இந்த விஷயத்தை மறந்தே போய் விட்டேன்! இப்பொழுது ஏதோ ஒரு தொடர்ப்பில் அந்த விஷயம் கிளறப்படவே சொன்னனே தவிர ஜெமோவின் மீதான எந்த மரியாதைக் குறைச்சலாலும் இல்லை! அவருக்கு நியாயம் என்று தோன்றுவதை நாம் மறுப்பானேன் என்கிற பரந்துபட்ட எண்ணம் கொண்டவர்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

எழுத்து என்பது முகந்தெரியாத நபரின் வாசகர்களுடனான உரையாடல் மாதிரி என்று எண்ணிக் கொள்வதால் விளையும் வினை இது. இதுவே ஒரு மேடைப்பேச்சாக இருந்தால் -- அது முகத்திற்கு முகம் நேரிடையாக வாசகர்களைச் சந்திப்பதாய் இருப்பதால்-- இந்த மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்கும் உணர்வு சம்பந்தப்பட்டவர்களுக்கே ஏற்படும். அதனால் யதார்த்த இயலாமையின் வேகமான வெளிப்பாட்டின் குறியீடு இந்த வார்த்தை என்ற நொண்டிச் சாக்கும் முனை மழுங்கிப் போகும்.

போகட்டும். 'அறம்' சிறுகதையில் அற்புதமான எழுத்தாற்றல் வெளிப்படுகிறது. நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி தான் கதையாகி இருக்கிறது என்றாலும் அதை எழுத்தில் வடித்த ஜெமோ போற்றப்பட வேண்டியவர். தனிப்பட உணர்வில் விளைந்த ஒரு சின்ன சிணுங்கல் அந்த சிறுகதையின் நேர்த்தியில் குறையாகத் தென்படக்கூடாது. அந்த அர்த்தத்தில் எல்லாமே சரிதான்.

இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக் கொள்ளலாம். சரி தானே?..

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார் !
உங்கள் எம்விவி பற்றிய குறுநாவல் படிக்க ஆவல். சீக்கிரம் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்.
கலை விமரிசகர் தேனுகா போன்றவர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்குண்டு.
நாதஸ்வரம் பற்றிய அவருடைய பதிவில் தான் எவ்வளவு தகவல்கள்.
அவர் மறைந்ததும் கூட நீங்கள் சொல்லியே அறிகிறேன்.

மோகன்ஜி சொன்னது…

துரை சாரு,

வசவுகள் ஜில்லாவுக்கு ஜில்லா பேட்டைக்கு பேட்டை மாறுபடும்.
கும்பகோணத்தில் 'தா' வில் ஆரம்பிப்பது சிங்கார சென்னையில் 'தா' வி முடியும் .

சாதாரண தாரண பேச்சுவழக்கில் இந்த வார்த்தைகள் ஒரு filler மட்டுமே. அதற்கு பொருளேற்றி சொல்லப்படுவதில்லை.
என் நல்ல நண்பர் ஒருவருக்கு ஸ்வாமி அலங்காரத்தை சிலாகிக்க வேண்டுமென்றாலும் ..தா' வைப் போடாது சொல்ல இயலாது.

ஒரு கதையின் ஒரு பாத்திரச்சித்தரிப்பில் இதை இயல்பாக சேர்த்த படைப்புகள் உண்டு. தேர்ந்த எழுத்தாளர்கள் பலரும் இதை ஒரு
கலை அனுமதியாக பாவித்து எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல படைப்புகள், மிக ஆச்சாரமாக எழுதப்பட்ட தட்டையான படைப்புகளைத் தாண்டி இலக்கிய அந்தஸ்து பெற்றதையும் கண்டிருக்கிறோம்.

ஜீவியின் ஆதங்கமெல்லாம் ஒரு மேன்மையான படைப்பாளியின் கூற்றாக, அவரையொட்டின புனைவில், இந்த தரமிழந்த வார்த்தைகளை வேறோரு படைப்பாளி ஏற்ற முடியுமா என்பதே. அதை ஜெயமோகன் தவிர்த்திருக்லாம் என்பதுதான் என் கருத்தும்கூட.

மோகன்ஜி சொன்னது…

துரை காரு,
//அ..இன்னாமா ஜகா வாங்குறே நைனா.. சோம்பேறியா குந்தினுகிராம எத்தனா எய்து தெர்தா?//

இதைச் சொல்லும் போது மனசுக்குள்ள எவ்ளோ '..தா' போட்டுக்குனே வாத்யாரே?

எய்தறேன் நைனா .. மெய்யாலும் எய்தறேன் !

மோகன்ஜி சொன்னது…

சுதா !

அறம் கதையின் உள்ளீடு,எம்விவி சொல்வதாக வரும் சித்தரிப்பு நீங்கலாக, மேன்மையாகத் தானே இருக்கிறது.
அந்த சித்தரிப்பில், அந்த கதாபாத்திரத்தின் ஆற்றாமையையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தும் ஒரு உத்தியாக
கைக்கொள்ளப்பட்டதாக இருக்கிறதே அன்றி, அதில் என்ன வணிக லாபம் இருக்கமுடியும். அந்த உத்தியை பிழையானது என்பதற்கு
நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதைக்கொண்டே ஒரு பெரும் படைப்பாளியை எடைபோடுவது முறைதானா என்பதை முன்வைக்கிறேன்

மனச்சாய்வு

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,
//
சு.தா.வைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். பொதுவாக யாரையுமே, எழுத்தாளர்களோ அல்லது நடிகர்களோ ஆராதிக்கும் குணம் என்னிடம் இல்லை//
அக்கா ! அது அவ்வளவு தப்பான குணமா என்ன? ஆராதனை என்பது மிக உயர்வான இடத்தில் ஒரு ஆளுமையை நிறுத்தி போற்றுவது ஒருபுறம்; பல்கிய ரசனையின் உயர்வில், எதன்மேலும் எவர்மேலும் தன் ரசனையை மேவ விட்டு,' மிகைநோக்கி மிக்க கொளல்'என்பது மறுபுறம்.

தன்வயமான மனப்பாங்கு உள்ளவர்கள் நான் குறிப்பிட்ட இரண்டாவது தன்மையை எட்ட இயலாது.

லாசிப்பிலோ கலைநுகர்ச்சியிலோ கரைந்துபோதலும், தென்படும் கசடுகளைக் கடந்துபோதலும் மிக உயர்ந்த ரசனைநிலை. எல்லாமும் ஆராதனைக்குறியவையே.
ஆராதனை வேறு சொம்புதூக்குதல் வேறு.

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார் !
வசவில் பிராமண சமூகமும் சற்றும் சளைத்ததல்ல.
திஜா கதையில் அவர்காட்டும் வசவுகள் காவிரி பிராம்மணர்களின் கலைவசவு !

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்,

பொதுவில் யோசிக்க வைக்கிற எழுத்துக்கள் எல்லா காலத்திலும் இருந்தன.
அவை,தான் பயணிக்க வேண்டிய பாதாளசாக்கடைக்குள் ஐக்கியமாகி மறைந்துபோகும்.
அந்த எழுத்துமுறையை என்ன பெயரிட்டு அழைத்தாலும் அதன் நாற்றம் தன் இருப்பை உணர்த்தும்.
பொருட்படுத்த தக்கவையல்ல அவை.

ஜெயமோகனின் காடு பற்றியும் என் விமரிசனம் ஒன்றுண்டு. அதை அடுத்த வாரம் பதிகிறேன். இந்த விவாத்த்தினும் கூரிய எதிர்வினைகள் அதில் இருக்கலாம். அறம் கதைகள் கூறாதொழிந்த பல தருணங்களின் படபிடிப்பு. பல சிந்தனைகளைக் தூண்டியவை. ஜெயமோகனின் சிறந்த படைப்புகள் அவை.

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சுதா,
மனதுக்கியைந்த கதாசிரியர் எழுதுவதால் மட்டுமே அவர் சொல்வதெல்லாம் சரி என்ற நிலைப்பாடு எடுக்கப் படுகிறது என்கிறீர்கள்.
ஜெயமோகன் நான் மிக விரும்பும் சில படைப்பாளிகளில் ஒருவர். அவர் எழுதியிருப்பதாலேயே ஏற்றுக்கொள்வது இல்லை. அவர் எழுதிய சில கருத்துக்களில் எனக்கு முரண்பாடுண்டு. சிலவற்றில் அவர் பக்கம் நியாயம் இருப்பதை அவர் விவாத்த்தில் உணர்ந்தாலும், பலகாலம் மனது தாங்கிப்பிடித்த உணர்வை விடாமல் என் கருத்துக்களை எழுதியுமிருக்கிறேன். பாரதி மகாகவியா? எனும் அவர்விவாதம் ஒரு உதாரணம்.

எனினும் அவர் எழுத்தும் தர்க்கமும் எனக்கு மிக நெருக்கமானவை. அவர் சொன்னதைப் புரிந்து கொள்வதேகூட, அவரை வாதில் வென்ற சுகம் தரும் என ஒரு புன்னகையோடே சொல்கிறேன் சுதா!

இணையத்தில் பெரும்பாலும் மேலோட்டமாகவே எழுதப்படுகிறது. விவாதங்கள் அறவே இல்லை.இருந்தாலும்,சற்றே அறிந்தவர்களும்கூட ஒதுங்கியே செல்கிறார்கள். எழுதுவது மட்டுமே ஒருவரை படைப்பாளி ஆக்குவதில்லை. அதற்கு பல தியாகங்கள் தேவை. பரந்த வாசிப்பு தேவை. குறைகள் என சுட்டப்படுவதையும் சுயமதிப்பீட்டில் உணர்ந்ததையும் சீர்தூக்கி நோக்கும் நெஞ்சுரம் தேவை. வாசிப்பு கேளிக்கையான ஒன்றாக இருக்கலாம். எழுதுவது கேளிக்கையல்ல. அது ஒரு தவம். ஓடுமீன் ஓட உறுமீனுக்கு காத்திருக்கும் தவம்.

நல்லதை எழுதுவோம். மிக நல்லதைப்படிப்போம்.ஆரோக்கியமான விவாதங்கள் செய்வோம்.

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

புரிஞ்சது.... You don't know me என்கிறதும் புரிஞ்சது சுதா!

ஜீவி சொன்னது…

ஒரு பட்டிமன்ற நடுவர் மாதிரி எல்லாவற்றையும் சீர்தூக்கி முடித்து வைத்திருக்கிறீர்கள். உள்ளது உள்ளது படியே இரண்டு பக்கமும் ஏற்றுக் கொள்கிற முடிப்பு. அதில் உங்க்ள் வாசிப்பு அனுபவம் மிளிர்கிறது.
சில விஷயங்களை நுணுக்கிப் பார்த்த மேதைமை பளிச்சிடுகிறது. உணர்விலிருந்து வெளிப்பட்ட சில வார்த்தைப் பிரயோகங்களை ரொம்பவே ரசித்தேன்.

வாசகர்களில் பலர் ஒரு கதையைப் படிக்கிறோம் என்கிற எண்ணத்தில் கதைகளைப் படிக்கிறார்கள். வாசித்து முடித்ததும் அந்த கதை மட்டுமே அவர்கள் மனசில் தேங்கி இருக்கிறது. 'என்ன வாசித்தீர்கள்?' என்றால் நினைவிலிருக்கும் அந்தக் கதையை மட்டுமே சொல்வார்கள். அவர்களைப் பொருத்த மட்ட்டில் அந்தக் கதை மட்டுமே பிரதானமாகிப் போய் அதைப் பற்றிச் சொல்வதற்கு கதை மட்டுமே நினைவில் இருக்கும்.

வாசகர்களில் வேறு சிலர் எந்தக் கதையாக இருக்கட்டுமே, எழுதியவன் அந்தக் கதையை எப்படி எழுத்தில் வடித்திருக்கிறான என்று பார்ப்பார்கள். எங்கு ஆரம்பம், எங்கு முடிவு அந்த ஆரம்பத்திலிருந்து முடிவு வரும் வரை வரி வரியாய் கதையை எப்படி நகர்த்தியிருக்கிறான் என்று பார்ப்பார்கள். கதையின் ஜீவனைத் தன்னுள் கொண்டு எந்த வார்த்தைகள் உயிர்ப்புடன் உலா வருகின்றன என்று பார்ப்பார்கள். 'வாசித்தீர்களே, எப்படி கதை?' என்று கேட்டால், 'கதையை விட்டுத் தள்ளுங்கள்.. ஒண்ணுமில்லாத இந்தக் கதையை நாலு பக்கத்துக்கு வேறு நினைவு இல்லாமல் ரசிக்கற மாதிரி எழுதியிருக்கிறானே, எப்படி இது இவனால் முடிந்தது?' என்பார்கள். எப்படி முடிந்தது என்று யோசிப்பார்கள்.

முதல் வகை கதையை மட்டுமே வாசிக்கும் வாசகர்கள்.

இரண்டாவது வகை வாசகர்களுக்கு 'தானும் அப்படியான ஒரு கதை எழுத வேண்டும்' என்று தோன்றும். எழுதவும் செய்வார்கள். தான் எழுதியதைத் தனக்குத் தானே படித்துப் பார்த்து 'எப்படி இப்படி என்னால் எழுத முடிந்தது' என்று ஆச்சரியப்பட்டுப் போவார்கள். இன்னொருத்தரிடம் படிக்கக் கொடுத்து 'பிரமாதம்' என்று அவர் பாராட்டி விட்டால் போதும் கிறங்கிப் போய் விடுவார்கள்.பத்திரிகைக்கு அனுப்புவார்கள். இப்படியாகத் தான் எழுத்தாளர்கள் பிறக்கிறார்கள்.

கதைகள் எழுத ஆசைப்படும் பதிவர்கள் இரண்டாவது வகை ஆசாமிகளாய் உருவாக வேண்டும். வாசிக்கும் எதையும் அவர்களால் வெகு சுலபத்தில் இன்னொருவர் எழுதுவதின் குறை--நிறைகளை அவதானித்து அலச முடியும். நல்ல எழுத்தின் கைக்கொள்ளல் வெகு சுலபத்தில் வசப்படும்.

மொத்தத்தில் எதை வாசித்தாலும் வாசிப்பவனின் மனசு எழுதியவனின் மனசில் படிவது தான் வாசிப்பின் உச்ச கட்ட ரசனையாகிப் போகிறது.

இப்படிப்பட்டவர்களிடமிருந்து எழுதியவன் தப்பவே முடியாது.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார் !

வாசகத்தன்மை பற்றிய உங்கள் கருத்துகளும் மிக அழகானவை. ஒரு நீண்ட விவாதத்தில், ஒரு முரண்பாட்டை பற்றிய விவாதம் மிக கண்ணியமாகவும் அழுத்தமாகவும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக உங்களுக்கும், சு.தா அவர்களுக்கும், அப்பாதுரை அவர்களுக்கும், கீதா மேடம் அவர்களுக்கும் என் நன்றி!

எதனாலோ சு.தா அவர்கள் தன்னுடைய கருத்துக்களை நீக்கியிருக்கிறார். அவருடைய கருத்துக்களை சொல்லவோ நீக்கவோ அவருக்கு உரிமை உண்டெனினும், அவர் அனுபவ முதிர்ச்சியில் எழுந்த கருத்துக்கள் அவை. மிக அழுத்தமாக தன் நிலையை பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அவை இல்லாமல் போவது எனக்கு வருத்தமே. என் பதில்களில் எங்கோ அவரை புண்படுத்தியிருப்பின் அதற்கு என் மன்னிப்பையும் கோருகிறேன். we all love you SU.THA !

சிவகுமாரன் சொன்னது…

தி.ஜா.ராவின் மோகமுள் படித்த இளம்பருவத்தில் வியந்திருக்கிறேன். எப்படி இவ்வளவு துணிச்சலோடு இவரால் எழுதமுடிகிறது என்று.
செம்பருத்தியை படிக்கும் ஆவலைத் தூண்டியது தங்கள் விமர்சனம், நன்றி அண்ணா.

அப்பாதுரை சொன்னது…

//தரமிழந்த வார்த்தைகளை

தரமிழந்தவில் இருக்கிறது தகராறு.

வார்த்தை வார்த்தை தான். வார்த்தை சொல்லும் கருத்தில் தான் தரமோ தரமின்மையோ வருகிறது. கருத்தை விட்டு வார்த்தையை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு நாட்டாமை சொல்வது இடிக்கிறது. கருத்தை மட்டும் வைத்து கருத்தைச் சொன்னவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை தீர்மானம் செய்வது கலாசாரப் போலி.

ஆளைவிடுங்க.

Geetha Sambasivam சொன்னது…

அருமையான கருத்துகளைப் பகிர்ந்து சிந்திக்க வைத்த சு.தா. கருத்துகளை நீக்கியது மன வருத்தம் அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ஜெ.மோ. அவருடைய சொந்தக்கருத்துக்களையும் கதைகளில் கதை மாந்தரின் கருத்தாக வலிந்து திணிப்பதாகவே தோன்றும்; தோன்றுகிறது. மேலும் தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டி விட வேண்டும் என்று வலிந்து வலிந்து எழுதுவதாகவும் தோன்றுகிறது. அதனாலேயே ஓர் அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு ஜெ.மோ.வைப் படிப்பதையே நிறுத்திட்டேன்! இதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை! :) மற்றபடி இங்கே நடந்தது ஆரோக்கியமான வாதம். சு.தா. நீக்கவில்லை எனில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். :(

sury siva சொன்னது…

/சு.தா அவர்கள் தன்னுடைய கருத்துக்களை நீக்கியிருக்கிறார்.//

ஆம்.ஆம். 'அறம் " பற்றிய பதிந்த எனது கருத்துக்களை மட்டுமே களைந்து விட்டேன்.

காரணங்கள்:

1. விவாதம் திசை மாறிச் செல்வதால். (செல்வதாக எனக்குத் தோன்றியதால்) .
2.
எந்த ஒரு படைப்பும் தான் சொல்ல வந்த மையக்கருத்தை நோக்கி வாசகரை ஈர்க்கவேண்டும்.

The best of a book is not the thought which it contains, but the thought which it suggests; just as the charm of music dwells not in the tones but in the echoes of our hearts.

3. "அறம் " என்ற படைப்பு இலக்கிய தர்மங்களுக்குப் புறம்பானது என்பது எனது தெளிவு. இன்று இல்லாத ஒரு நபரின் சொல்லாத /(அவையில் சொல்ல இயலாத) அசிங்கமான சொற்களால் அவர் இன்னார் எனச் சித்தரிப்பது அல்லது கோடிட்டு காட்டுவதோ
அரசியலின் அடித்தளமாக இருக்கலாம். இலக்கியம் அவ்வகையைனை ஒத்ததாக அமைவதோ அல்லது அவ்வாறு அமைந்த ஒன்றை இலக்கியம் எனச் சொல்வதோ சரி எனத் தோன்றவில்லை.

(முதற்கண் அந்த எழுத்தாளர் கற்பனையில் தோன்றியவர் எனத்தான் நினைத்திருந்தேன். விவாதத்தில் பங்கு எடுத்தேன். அவர் வாழ்ந்து நலிந்து போனவர் என அறிந்த பொழுது
நான் துயருற்றேன்.)

4. கதையின் நாயகன் சந்ததிகள் பெருமைப் படத்தக்க ஒரு இலக்கியம் இருப்பின் அது போற்றப்படும். சிறுமைப்பட த்தக்க காரணங்களுடன் ஒரு படைப்பு சமைக்கப்படுமாயின் அவர் உயிரோடு இருந்தபோதே அதற்கான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.

5. ஒரு மனிதனைப் போற்றும் இலக்கியம் வாழும். தூற்றும் படைப்பு நாறும்.
அந்த நாற்றமும் சிலருக்கு நல் மணமாகத் தோன்றலாம். அந்த நாற்றத்தை நுகர்வதர்காகவே மீண்டும் மீண்டும் அந்த படைப்பை படிக்கலாம்.
அந்தக் கதையின் நாயகன் மட்டும் அல்ல, அவன் சமூகத்தைச் சார்ந்த அனைவருமே இப்படித்தான் என்றும் வாதிக்கலாம்.
அது போன்ற திசையில் திருப்புவது நல்லிலக்கியமாகா என்பது என் தெளிவு.

கடமையை நிறைவேற்றும் வழியிலே அந்த எழுத்தாளர் கண்ணியத்தை இழந்து விட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அந்த படைப்பாளி.

6. ஒரு எழுத்தாளரை சந்தித்து அவருடன் அளவளாவ வந்தவர் (அவரும் ஒரு எழுத்தாளர்) அவருடைய படைப்புகளை அதன் சிறப்புகளைப் பற்றி விவாதிக்காது அவர் தம் வாழ்வின் ஏற்பட்ட சில சறுக்கல்களை பற்றி கேட்பதில் ருசி கொண்டார் என்பது மட்டுமன்றி, அவை என்ன என வெளிப்படுத்தி அதைத்தமது வெளிச்சத்திற்கு உதவச் செய்தாரோ என ஐயப்படத் தோன்றுகிறது.

(இந்தக் கதைக்கு ஒரு பாராட்டும் பரிசுத் தொகையும் சன்மானமும் கிடைத்திருந்தால், அவருக்கு அவர் குடும்பத்திற்கு ஒரு பகுதியாவது அதில் இருந்து ஈந்தாரா ?)

(அவரின் அனுமதியுடன் தான் இந்தக் கதை எழுதப்பட்டு இருந்தால் அது வேறு கதை. )

7. அந்த புத்தகசாலையின் முதலாளியின் மனைவி மட்டுமே அறவழி நடந்து இருக்கிறார். துன்பம் நேர்கையில் இழி வார்த்தைகளைச் சொல்லத் தயங்காத எழுத்தாளரைப் பற்றித்தான் வாதங்கள் இருக்கின்றனவே அன்றி,அறவழி என்ன எனக் காட்டியவர் தனது கணவனை அறவழி நடக்க நிர்ப்பந்தப்ப்டுத்தியவர் பற்றி வாதங்கள் இல்லை. ஏன் ?
கதை படிப்போர் இந்த அவல அசிங்க வார்த்தைகளில் அமிழ்ந்து விட்டனர். அவர்களை அவ்வாறு மூழ்கடிக்கும் திறன் படைத்த படைப்பு இது.

சொல்ல வந்தது அறம் .
நாமோ அந்த சமூகம் எப்படிப் பேசுகிறது என்று வாதிக்கிறோம் .
இது புறம்.
இதைச் சொல்லத்தான் அவரது படைப்போ !!

//இந்த பதிவில் அவை இல்லாமல் போவது எனக்கு வருத்தமே. என் பதில்களில் எங்கோ அவரை புண்படுத்தியிருப்பின் அதற்கு என் மன்னிப்பையும் கோருகிறேன். //

எனக்கும் வருத்தம் தான். இருப்பினும் ,
எனது நிலைப்பாடுக்கும் தெளிவிலும் முடிவிலும் எந்த இடத்திலும் நீங்கள் இல்லை.

புண்படுத்தியது எது எனச் சொல்லிவிட்டேன்.
அவர்களை நான் என்ன ?
நல்ல உள்ளம் கொண்ட எவருமே மன்னிக்க மாட்டார்கள்.

நிற்க.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.

எச்சம் என்பது நாம் விட்டுச் செல்லும் சந்ததிகள், படைப்புகள் யாவையுமே

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சிவா !
நலம் தானே ! ஏனோ பல எழுத்தாளர்கள் செம்பருத்தியை மோகமுள்ளைவிட ரசித்திருக்கிறார்கள், அசோகமித்திரன் உட்பட.
மோகமுள் தமிழ்நாவல் உலகில் அமோகமுள் தான்! வாய்பிருந்தால் செம்பருத்தியை படியுங்கள் சிவா.

மோகன்ஜி சொன்னது…

துரை,
//
வார்த்தை வார்த்தை தான். வார்த்தை சொல்லும் கருத்தில் தான் தரமோ தரமின்மையோ வருகிறது. கருத்தை விட்டு வார்த்தையை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு.....//
இலக்கிய மதிப்பீடுகளின் ஆதாரமான கோட்பாடு ...

இங்கு சுதா எழுப்பிய வினா ஒரு ethical issue மட்டுமே . ஒரு தனிமனிதன் குறிப்பிடப்படும் போது, எந்த அளவுக்கு எழுத்தாளன் அந்த பாத்திரத்தின் விவரணையில் வார்த்தை/ கருத்து பிரயோகம் செய்யமுடியும் எனும் அறச்சிக்கல் தான் சுதாவும் ஜீவியும் எழுப்பியது. எதற்கு அதை நாட்டாமைத்தனமாய் கொள்ளவேண்டும்.

உங்கள் கருத்து மற்றபடி ஏற்புடையதே துரை சார்!

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்சிவம் மேடம்,

//அவருடைய சொந்தக்கருத்துக்களையும் கதைகளில் கதை மாந்தரின் கருத்தாக வலிந்து திணிப்பதாகவே தோன்றும்; தோன்றுகிறது. மேலும் தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டி விட வேண்டும் என்று வலிந்து வலிந்து எழுதுவதாகவும் தோன்றுகிறது//

சொந்தக் கருத்துக்கள் கதைகளில் வரக்கூடாதா? வருவதை தவிர்க்க இயலுமா ? அது திணிப்பாகுமா??
தனக்கு தெரிந்ததைக் கொட்டத்தானே எழுத்தாளக் கொம்புமுளைத்து வலம் வருகிறோம்?

எனக்கு உங்க பார்வை புரியலேக்கா.

ஜெயமோகனை வாசிப்பதில்லை என்ற உங்கள் நிலைப்பாட்டுக்கான நியாயம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மேற்படி கருத்தை பொத்தாம்பொதுவாக போகிறபோக்கில் சொல்கிறீர்கள் எனது தோன்றுகிறது. பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய ஒரு எழுத்தாளுமையாக இருப்பவர் எழுத்தில் தென்படும் ஓரிரு கோணல்களை விவாதிக்கலாம். மாறுபடலாம்.. ஏன்.. கண்டனம் கூடத் தெரிவிக்கலாம். அதைக் கொண்டு, அவரை வாசிக்காமல் முற்றுமாக நிராகரிப்பதும், முத்திரை குத்துவதும் சரி என்று நினைக்கிறீர்களா?

சபரி பழம் கடித்து, ருசியைத் தேர்ந்து ராமனுக்கு வைத்தது போல... வாசகனுக்கு நல்ல பல எழுத்துக்களையும் இலக்கிய கோட்பாடுகளையும் தேர்ந்து சொல்லி, ரசனையின் தளத்தை ஜெயமோகன் மேம்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய அத்தனை கருத்துக்களையும் ஏற்கவேண்டும் என்பதில்லை. எனினும் அந்தக் கோணம் சீர்தூக்கி பார்க்க அவசியம்.

காலம் கடந்து நிற்கும் பல படைப்புகள் அவருடையவை. மோகனோ,ஜீவியோ சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லாத ஒரு மறுக்கமுடியாத இடம் இலக்கியத்தில் உண்டு. கொஞ்சம் தமிழை திவீரமாக தேடித்தேடி படித்த சாம்பிராணி நான் எனும் ஹோதாவில் உங்கள் கருத்தை கேள்வி கேட்கப் துணிந்தேன். எனக்கு உங்களிடமில்லாத உரிமையா? ஏனெனில் சிவாஜியை, ஜெயமோகனை எனக்கு பிடிப்பதுபோல் உங்களையும் பிடிக்கும் அக்கா!

மோகன்ஜி சொன்னது…

சுதா !
உங்கள் விரிவான விளக்கத்தை புரிந்து கொள்கிறேன்.
கருத்து நீக்ங்களுக்கு நான் காரணமில்லை என்பது ஆறுதல்.

உங்கள் கருத்துக்கள் பதிவுகளுக்கு பலம் சேர்ப்பவை.
தொடர்ந்து வானவில்மனிதனுக்கு மதிப்பைப் கூட்டுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

Geetha Sambasivam சொன்னது…

//கீதா சாம்சிவம் மேடம்,//
//எனக்கு உங்க பார்வை புரியலேக்கா.//

ஹாஹாஹா, தம்பி, ஒரு சமயம் மேடம், ஒரு சமயம் அக்கா என்று அழைத்தாலும் என்னைப் பொறுத்தவரை நீங்க தம்பி தான்! செரியா? :)

இப்போ உங்க புரிதலுக்கு வருவோம். இங்கே பேசுவதே, அதாவது இன்னமும் பேசிக் கொண்டிருப்பதே ஜெ.மோ.வின் வலிந்து திணித்தல் பற்றித்தானே தம்பி! எம்விவி பற்றிய குறிப்பிட்ட வார்த்தைகளை "அறம்" கதை/கட்டுரையில் திணித்தது குறித்துத் தானே! அதே தான் தம்பி நானும் சொல்கிறேன்.

சொற்கள் என்னுடைய சொந்தக் கருத்தானாலும் சரி பிறருடையதாக இருந்தாலும் சரி, இயல்பாக வரணும். இந்தக் கருத்தை நான் பொத்தாம்பொதுவாகப்போகிற போக்கில் எல்லாம் சொல்லலை. பல ஜெ.மோ. படைப்புக்களைப் படித்த பின்னரே சொல்கிறேன். வெண் முரசுவிலும் இப்படித் தான் பல பிற்சேர்க்கைகள், வர்ணனைகள், சொல்லாடல்கள்! அவருடைய திறமை வெளிப்பட வேண்டும் என்னும் எண்ணம் அவரை ஆட்டி வைக்கிறதோ என்று தோன்றும் வண்ணம் எழுதி வருகிறார். போகட்டும் தம்பி, நான் ஒருத்தி படிக்காததால் அவருக்கு ரசிகர்கள் குறையப் போவதில்லை.

உங்களுடைய பலம், பலவீனம் இரண்டுமே நீங்க வானவில் மனிதர் என்பது தான். வானவில்லை விட்டுக் கீழே இறங்கிப் பாருங்க தம்பி. உங்க உயரத்துக்கு என்னால் எல்லாம் வர முடியுமா? சந்தேகமே இல்லாமல் முடியாது என்பதே என் பதில்! அந்த உயர்ந்த நிலையிலிருந்து நீங்கள் பார்ப்பதால் குறைபாடுகளே தெரியாமல் நிறைகளை மட்டுமே பார்க்கிறீர்கள் எல்லோரிடமும்.(என்னையும் சேர்த்துத் தான்) மத்தபடி உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே வந்ததில்லை; வரவும் வராது! :)

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள அக்கோவ்,
கீதா மேடம் என விளிப்பது யாருக்கு என் பதில் என மற்றவர்களுக்குப் புரிவதற்காக....
அக்கா என்றழைப்பது உங்களுக்குப் புரிவதற்கு... என்ன ? புரிஞ்சுதா??

எனக்கு புரிய வருவது என்னவென்றால், ஜெயமோகன் உங்களுக்கான எழுத்தாளர் இல்லை என்பது தான். தவிருங்கள். தப்பொன்றுமில்லை.

நான் வானவில் மனிதனாக இருப்பது பற்றி ஆத்மார்த்தமான கருத்து உங்களுடையது. உண்மை தான் அக்கா! உயரம் தான்... இது சௌகரியமாகக் கூட இருக்கிறது. மேலிருந்து பார்க்கும் போது, பார்வை கழுகுபோல் தீட்சண்யமாய் இருந்தாலும்கூட பார்க்கிற மனசு குயில் போல் மானுடகீதத்தில் அமிழ்ந்து கிடப்பதால் புரிதல் புடம் போட்டபடி நிகழ்கிறது.
இப்படியும் ஒருவன் இருந்துவிட்டுப் போகிறேனே! உங்கள் வாத்ஸல்யம் ததும்பும் அன்புக்கு நன்றி அக்கா !

சிவகுமாரன் சொன்னது…

கீதா மேடத்துக்கான உங்கள் பதில் அருமை அண்ணா.வானவி மனிதனாகவே இருங்கள் எல்லோரிடமும் நிறைகளையே பார்த்துக்கொண்டு. ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

sury siva சொன்னது…

//சொற்கள் என்னுடைய சொந்தக் கருத்தானாலும் சரி பிறருடையதாக இருந்தாலும் சரி, இயல்பாக வரணும். //

// இயல்பாக வரணும்.//

இப்படியா ??

//மேலிருந்து பார்க்கும் போது, பார்வை கழுகுபோல் தீட்சண்யமாய் இருந்தாலும்கூட பார்க்கிற மனசு குயில் போல் மானுடகீதத்தில் அமிழ்ந்து கிடப்பதால் புரிதல் புடம் போட்டபடி நிகழ்கிறது.//

என்ன சொல்றார் ? எனக்குப் புரியும்படி , நீங்க கீதா மேடம் சொல்லுங்க...அதுக்கப்பறம் வானவில் சார் சரி தானா என்று சொல்லட்டும்.

சு தா.

Geetha Sambasivam சொன்னது…

சு.தா. தம்பி ரொம்ப ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருக்கார். அதான் குயிலின் கீதத்தை மானுடர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்குப் பதிலா குயில் மானுட கீதத்தில் அமிழ்ந்து கிடக்குனு சொல்றார்னு நினைக்கிறேன். ஆகவே இங்கே புரிதல் புடம் போட்டாலும் ம்ஹூம், ஒண்ணும் பிரியலை தான்! :))))

தம்பி அடிக்க வரதுக்குள்ளே ஜூட்! :) நிச்சயமாச் சரினு சொல்ல மாட்டார்.

கழுகைப் போன்ற தீட்சண்ணியமான பார்வை மட்டும் தான் இருக்கு. மற்றபடி கழுகின் கொத்தும் குணம், பிறாண்டும் குணம் இல்லை. ஆகையால் மனம் இயல்பாகத் தானாகவே நெகிழ்ந்து கொடுக்கும். குயிலின் குரலில் மயங்கும் மனிதர்களைப் போல என்கிறார்னு நினைக்கிறேன். இனிமை ஒன்றே தெரிகிறது! தர்மபுத்திரனின் பார்வை! எனக்கு துரியோதனன் பார்வையோ? :))))

ஜீவி சொன்னது…

கழுகின் பார்வை, குயிலின் குரல் என்ல்லாம் பற்றி சொல்கிறீர்கள்.

எங்கேயோ ஆரபித்த விவாதம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நீண்டாலும் ஒன்றும் கெட்டுப் போகப் போவதில்லை.

ஜெமோவின் எழுத்தின் வீச்சு அலாதியானது. தொடர்ந்து அவரை வாசித்து வந்தால் உங்களை அறியாமலேயே ஒரு பஞ்சுப் பொதிக்குள் புதைவுண்ட நேரத்தில் மூச்சு முட்டினால் தான் தூசு தட்டி சிரமப்பட்டு வெளியே வர சாத்தியப்படும். இந்தப் பஞ்சு பொதி அமிழ்தல் சாத்தியப்பட்டால் தான் அவரது நிறை--குறைகள் உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.

அப்படி சாத்தியப்பட்ட ஒரு நேரத்தில் தான் அந்த 'அறம்' கதையை வாசித்து வரும் பொழுதே அந்த நெருடலான வார்த்தை என்னை நெருடியது. நான் அந்தக் கதையை வாசித்தது, அந்தக் கதையை அவர் தன் இணையதளத்தில் வெளியிட்ட காலத்திலேயே. அந்த நெருடலை வாசித்த கணத்திலேயே என் உள்ள உணர்வை அவருக்கு மெயில் மூலம் தெரியப்படுத்தினேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த வார்த்தையை அவர் மாற்றவில்லை. சொல்லப்போனால் என் ஆட்சேபணையை அவர் பொருட்படுத்தவே இல்லை. அதெல்லாம் வேறு விஷயம். எனக்கு அநியாயமாகப் பட்டது அவருக்கு நியாயமாகப் பட்டிருக்கு. இல்லை, என்னளவுக்கு எம்.வி.வி.யுடனான பஞ்சுப் பொதியல் அனுபவம் அவருக்குக் கிட்டாமலிருக்கலாம். இல்லை, வலிமைமிக்க குறியீடாகப் போயிருக்கும் அந்த வார்த்க்தையை எடுக்க மனமில்லாமல் போயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயம். ஆனால் எனக்கு தன் நிலையை ஓரிரண்டு வரிகளிலாவது சொல்லி பதிலளித்தாரே அது பெரிய விஷயம். வலர்ந்த எழுத்தாளர்களை விட்டு விடுங்கள், ஓரிரண்டு கதைகள் பிரசுரமான குட்டி எழுத்தாளர்களே தன் நிலையை பிறரிடம் விளக்க இப்பொழுதெல்லாம் அக்கறை கொள்வதே இல்லை.

அதெல்லாம் போகட்டும்.

பின் அந்த 'அறம்' தொடரே புத்தகமாக வெளிவந்தது. கமலஹாசன் வெளியிட்டார் என்று நினைவு.

எத்தனை பேர் அந்த 'அறம்' நூலைப் படித்திருப்பார்கள்?.. ஒருத்தருக்காவது அந்த உறுத்தல் மனசை நெருடவில்லையே, ஏன்?..
ஏனென்றால் இப்பொழுதிய தமிழ் எழுத்துக் கலாச்சாரம் இப்படியாக 'அத்ரிச்சி' தந்து எழுதுவதே என்று ஆகிப் போயிருப்பதால்.
சுதா சார்! இதான் விஷயம். உங்கள் தலைமுறை தாண்டிய விஷயமாய் தமிழ் எழுத்துக்கள் ஆகிவிட்டன.

அதான் விஷயம்.


ஜீவி சொன்னது…

தமிழின் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் ஜெமோவுக்கு என்று ஒரு குறிப்பு உண்டு.

ஜெமோவின் எழுத்து அழகியல் சார்ந்ததல்ல. அதனாலேயே பி.எம்.கண்ணன், எல்லார்வி, ஹேமா ஆனந்ததீர்த்தன், பிவிஆர், ஆர்வி என்று ஒரு லிஸ்ட் அவர் வைத்திருப்பார். உரையாடலில் கதையை நகர்த்தும் விதம், சொல்லாமல் சொல்லும் வார்த்தை ஜாலங்கள், தெளிவான கதையம்சம், எளிமையான எழுத்து என்று அழகியல் சார்ந்த எல்லாமே ஜெமோக்கு சாத்தியப்படாமல் போனதாலேயே அந்த எழுத்தாளர்கள் எல்லோருமே விமரிசனத்திற்குள்ளானார்கள்.

ஜெமோ தெளீவாகச் சொல்வார்: எல்லோரையும் வாசியுங்கள். ஆனால் அவர்களில் அமிழ்ந்து விடாதீர்கள். எல்லோரிடமிருந்து கிரகித்துக் கொள்ள வேண்டியவற்றை கிரகித்துக் கொண்டு அவ்ர்களைத் தாண்டி வாருங்கள் அப்படித் தாண்டி வரத்தெரிந்தால் தான் நீங்கள் நீங்களாவீர்கள். இலக்கிய வாசிப்பில் இந்த க்டத்தல்-- கடந்து வருதல்-- தான் முக்கியம் என்பார்.

ஒருவகையில் இந்தக் கடந்து வருதல் தான் ஜெமோவின் இலட்சியமும், அவரத் இன்றைய எழுத்தும் என்று ஆகியிருப்பது புரியும்.

இன்றைக்கு அசோகமித்திரன் தான் கடந்து வர முடியாதபடிக்கு ஜெமோவின் ஆதர்ச எழுத்தாளர்.

ஜெமோவை மற்றவர்கள் கடக்கும் முன் அவர் அ.மி.யைக் கடக்க வேண்டும்.

அசோகமித்திரனை ரொம்பச் சுலபமாகக் கடந்து வர முடிந்தவர்களுக்கு ஜெமோவின் அ.மி.யைக் கடக்க முடியாமை ஆச்சரியம்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா! என்னை புரிந்து கொண்டதற்கு. வானவில் மனிதனாகவே இருந்துவிட உன் அன்பு ஊக்கம் தருகிறது.

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம் ஆகிய அக்காவே!!

சுதா எப்படி புரிந்து கொண்டாரோ என்பது தெரியாமல் உங்களுக்கு என்ன பதில் சொல்வது.

வானவில் மேல இருக்கு... குயிலு அதுக்கும் மேல குந்திகினு இருக்குது.
இந்த மனுசப் பய இல்லே... மனுசப் பய... அவன் கீழே கீறான்.
அவன் வாழ்ற வாழ்க்கை கீதில்லே? அத குயிலு மாஞ்சிமாஞ்சி பாடுது.
அதான் அந்த கீதம்.
அப்புறம் அந்த குயிலு கீதில்லே? அது வந்து...

சே! பேசாம ஜெயமோகன்' பேடு பாய்'ன்னு சொல்ட்டு நடையக் கட்டிட்ருக்கலாம்....

ஆண்டவரே! இந்தப் பாவப்பட்ட ஜனங்கள் மேல்.......

sury siva சொன்னது…

பஞ்சுப் பொதிக்குள் புதைவுண்ட நேரத்தில் மூச்சு முட்டினால் தான் தூசு தட்டி சிரமப்பட்டு வெளியே வர சாத்தியப்படும். இந்தப் பஞ்சு பொதி அமிழ்தல் சாத்தியப்பட்டால் தான் அவரது நிறை--குறைகள் உள்ளங்கை நெல்லிக் கனியாகு//

ஒரு குறிப்பிட்ட கதையின் அடிப்படையிலே அதன் ஆசிரியரை எடை போடக்கூடாது. உண்மை தான்.

பஞ்சுப் பொதிக்குள் புகுந்து மூச்சு முட்டி வெளிவந்து தான் நிறை குறைகளை அறைய வேண்டும் எனின் ஆயுட்காலம் போதுமோ ? ஒரு ஹோட்டலில் கிடைக்கும் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டா/குடித்து விட்டா அந்த ஹோட்டல் நல்ல ஹோட்டலா இல்லையா என்கிறோம் ?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் போதும் என்பதே வழக்கு அல்லவா? நாம் கொண்டு செல்லும் நகையை ஒரு உரசு உரசியே தங்கம் காரட் எத்தனை ? எத்தனை செம்பு எத்தனை தங்கம் என தட்டான் தட்டாமல் சொல்கிறாரே !! முழு நகையையா உருக்கிப் பார்க்கிறார்?

இருப்பினும், தங்கள் வாதத்தில் உண்மை நிறையவே இருக்கிறது.
எவ்விலக்கியத்தையும் இரு விதமாக நோக்கலாம்.
ஒன்று சிம்ஹாவலோகன். இரண்டாவது விஹங்காவலோகன்.
முதலாவது சிங்கத்தின் பார்வை. (அகலப் பார்வை, ஆழ்ந்த பார்வை)
இரண்டாவது பறவையின் பார்வை. (மேலோட்டமாகப் பார்ப்பது)

தமிழ் இலக்கியம், குறிப்பாக கதை, நாவல் சார்ந்த இலக்கியத்தில் கடந்த 40 ,50 ஆண்டுகட்கு மேலாக இருக்கும் உங்கள் தொடர்பு வியக்கத்தக்கதே. உங்கள் பார்வை சிங்கப் பார்வை. சந்தேகம் இல்லை.

உங்கள் முன்னே , நான் ஒன்று மில்லை.
எனது அறியாமையை ஒத்துக்கொள்ள எனக்கு தயக்கம் ஏதும் இல்லை.

இருப்பினும், எனக்குத் தெரிந்ததெல்லாம்,

நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மான் புனைபாவை யற்று. 407

A good novel tells us the truth about it's hero; but a bad novel tells us the truth about its author.
(Gilbert Keith Chesterton)



சு தா.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்,

ஜெயமோகன் அறம் கதை பேசப் படாத்திற்குக் காரணம் அந்த கதாபாத்திரம் எம்விவி எனும் எழுத்தாளன் என்பதும், அப்படி ஒரு எழுத்தாளர் இருந்ததும் பலருக்கு தெரியாததினால் தான்.

அசோகமித்திரன் அவரால் மிகவும் மதிக்கப்படுவதற்குக் காரணம் பலமுறை எழுதியிருக்கிறார். மிகவும் எளிமையாக, எவ்விதமான அவங்காரமான நடையும் இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொல்லிச்செல்லும் நடை.

மிக அண்மையில் அ.மி யின் 18ஆம் அட்சக்கோடு மீள்வாசிப்பு செய்தேன். ஒரு காலகட்டத்தில் நடந்த திவீரமான சரித்திர நிகழ்வை, ஆர்பாட்டமில்லாமல் சொன்னவிதம் ... அது அ.மி. ஒருவருக்கே சாத்தியம்.

ஜெயமோகன் எழுத்தோ கனவுகளின் தீற்றலோடு மொழிச்செறிவை பின்னிவளர்வது. முல்லைப்பூவுக்கும் மனோரஞ்சிதத்தற்கும் உள்ள வித்தியாசம் தான் இருவர் எழுத்துக்கும்.

sury siva சொன்னது…

//வானவில் மேல இருக்கு... குயிலு அதுக்கும் மேல குந்திகினு இருக்குது.
இந்த மனுசப் பய இல்லே... மனுசப் பய... அவன் கீழே கீறான்.
அவன் வாழ்ற வாழ்க்கை கீதில்லே? அத குயிலு மாஞ்சிமாஞ்சி பாடுது.
அதான் அந்த கீதம்.
அப்புறம் அந்த குயிலு கீதில்லே? அது வந்து...////

இதுக்கு அதுவே பெட்டர் .
யாராவது ஒரு பாஷ்யம் எழுதுங்களேன்.
துரை சார் கிட்டே ரிக்வெஸ்ட் பண்ணலாம் அப்படின்னா
அவரோ பல்கொட்டி பேயோட சம்சாரிச்சுண்டு இருக்கார்.

சு தா.

மோகன்ஜி சொன்னது…

சு.தா !
//
A good novel tells us the truth about it's hero; but a bad novel tells us the truth about its author.
(Gilbert Keith Chesterton)//

சபாஷ் ! சபாஷ்!!

மோகன்ஜி சொன்னது…

பல்கொட்டி பேய்க்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லவே நாம் !

ஜீவி சொன்னது…

//உங்கள் பார்வை சிங்கப் பார்வை. சந்தேகம் இல்லை. //

பெரியவர் மனசிலிருந்து புறப்பட்டு எழுத்தில் படிந்த பாராட்டுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தன்யனானேன். நன்றி, சுதா சார்!

ஜீவி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Geetha Sambasivam சொன்னது…

தம்பி முகநூல் பக்கத்தில் கொடுத்திருந்த சுட்டி மூலம் இங்கே வந்து எல்லாப் பின்னூட்டங்களையும் (அப்பாடா!) மறுபடி வாசிச்சேன். இதில் ஜெயமோகன் குறித்த என் கருத்து இப்போது மேலும் வலுப்பெற்றிருக்கிறது. அவர் இப்படித் தான் ஒருவர் இறந்த பின்னர் அவர்களைப் பற்றிய தன்னுடைய பார்வையில் விமரிசிக்கிறார். எம்.எஸ். அம்மா(இதற்கு நான் அவருக்கு நேரடியாகவே கண்டனம் தெரிவித்திருந்தேன்) பின்னர் "அறம்" மூலமாகப் பெரியவர் எம்விவி அவர்கள், கடைசியாக அங்கே சுத்தி இங்கே சுத்திச் சித்தப்பா! ஹூம்! :( இருக்கும்போது இதை எல்லாம் சொல்லி இருக்கிறதுக்கு என்ன? அவர் பெரிய எழுத்தாளர் என்பதாலும் எல்லோரையும் தெரியும் என்பதாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம்னு நினைக்கிறார் போல! சித்தப்பா பற்றி அவர் எழுதியவற்றின் ரணம் இன்னமும் ஆறவில்லை! :(