வியாழன், ஆகஸ்ட் 04, 2016

எப்படி மனம் துணிந்தீரோ?

            
‘உனக்கு நினைவிருக்கா? எனக்காக ஏதோ ஒரு அபிநயம் பிடின்னு உன்னைக் கேட்டேன்... எப்படி மனம் துணிந்தீரோ?’ ன்னு, அது அருணாசல கவியோட சாகித்தியம் தானே? அப்படித்தான் இருக்கணும்.. அதுக்கு நீ ஆடினே... 
தான் மட்டும் காட்டுக்கு போறதா ஸ்ரீராமசந்த்ர பிரபு சீதாதேவிக்கு சொல்ற கட்டம். தான்மட்டும் சொகுசா அரண்மனையிலே இருக்க, தன் பர்த்தா  தனியா காட்டுக்குப் போறதாங்கிற தவிப்பு சீதைக்கு. ராமர் தனியா காட்டுக்குப் போய் பலகஷ்டமும் பட்டு, அவர் மட்டும் நல்ல பேரு வாங்கிக்கவானுல்லாம் ஏதேதோ கேக்கிறா... ராமனோட நிழலா கூடவே போயிடணும்னு அவளுக்கு தவிப்பு. என்னென்னவோ உணர்ச்சிகள்....

என்னமாடி அபிநயிச்சே என் செல்வமே? திரும்பத் திரும்ப பாடின ஒரே வரிக்கு ஒவ்வொரு முறையும் எத்தனை தினுசா உன் கண்ணும் புருவமும்,கைகளும் விரல்களும் பேசினது? உன் உடம்பை இயக்குவதெல்லாம் நரம்புகளா இல்லை மின்னல்கொடிகளா? என்ன சுருக்கு, என்ன லாவகம்? கண்முன்னே காட்டையும், பட்சிகளையும், மிருகங்களையும் கொண்டு நிறுத்தினே!’.

சரி ! கூட வான்னு ராமன் ஒத்துகிட்டவுடன் அத்தனை ஆவேச அலம்பலையெல்லாம் விட்டு பூரிப்பும் நிறைவுமா நீ நகைகளை,மகுடத்தை, பட்டாடைகளை களைந்த வேகமென்ன? மரவுரி தரித்து நாணத்துடன் ஸ்ரீராமன் சுண்டுவிரலை உன் சுண்டு விரலால் பற்றின பாந்தமென்ன? நிமிஷமா அயோத்திக்கு என்னையும் கொண்டு சேர்த்தே. அந்த பத்து பதினைந்து நிமிஷத்துக்குள்ளே எனக்குள் என்னென்னவோ ஆனதே... நீ சீதையா பட்ட அவஸ்தையெல்லாம் என் அடிவயித்தைக் கலக்கிப் போட்டதே.... சீதையைப் பெத்த ஜனகனா தவிச்சேனே. ஜனகனுக்கு எது தவிப்பு? உணர்ச்சிகளையெல்லாம் கடந்த ஆத்ம ஞானி அல்லவா அவர்...

யாருக்கு வேணும் ஞானமும் ஆத்மனும்.  அந்தக் கலக்கமும் தவிப்பும் தானேடி எனக்கு நீ காட்டின ஞானம்.. என் கண்ணே.. என் கண்ணே...

“சார்! சார்! சார் !! “

தோளை உலுக்கியபின் தான் ஹரிஹரன் சுயநினைவுக்கு வந்தார்.

“பயமுறுத்திட்டீங்களே சார்!” என்றபடி நின்றிருந்தான் காலையில் அந்த மருத்துவமனை அக்கௌவுன்ட்சில் பார்த்த வாலிபன்.

அவனை வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றார். இன்னமும் ‘எப்படி மனம் துணிந்தீரோ’ கண்களுக்குள் சலனித்தபடி இருந்தது.

மூன்றுநாட்கள் தூங்காத கண்கள். உகுக்க மறந்த கண்ணீர் உறைந்து கிடந்த கண்கள். ’’ம்’’....

"சார்! இன்னைக்கு பதினோரு மணிக்கு மும்பை ஸ்பெஷலிஸ்ட் லேண்ட் ஆயிடுவார். ராசியான கை சார் அவருது. எப்படியும் சரியாக்கிடுவார் சார்”

“ம்”

“அவருக்கு பேமென்ட் கேஷா குடுக்கணும்னு பெரிய டாக்டர் சொல்லிகிட்டிருந்தார் சார். கொஞ்சம் ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா தேவலை”

“ஓ... எப்போதைக்குள்ள வேணும்?”

“சாயங்காலம் ஆறு மணிக்குள்ளே சார். பேங்கு நாலுமணி வரை தான் சார்.”

“சரிப்பா ! போய் டிரா பண்ணிக்கிட்டு வரேன்.”

“தேங்க்ஸ் சார்... ஏதும் சாப்பிட்டீங்களா?”

சின்னதொரு தலையாட்டல்.... ஆயிற்று என்றோ இல்லை என்றோ,கேட்டதற்கு நன்றி என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ள இயலாத தலையாட்டல். மெல்ல ஐ.சி.யூ அறையின் சிறு கண்ணாடி வட்டத்தின் வழியே பார்த்தார். பாதங்கள் அசைவுகளின்றி வாடித் தெரிந்தன. வரும் டாக்டர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளக்கூட பயமாய் இருந்தது. பேங்குக்கு போக திரும்பினார்.
எதிரே ஜூனியர் டாக்டரும் மூன்று போலீஸ் அதிகாரிகளும் வந்துகொண்டிருந்தார்கள்.

“சார்! போலீஸ் வாண்ட்ஸ் டு டாக் டு யூ”

“ம்”

“சார்! இந்த அறையில்  உட்கார்ந்து பேசுங்கள்.! மைண்ட் சம் டீ?”

போலீஸ் அதிகாரி அவரை புன்னகையுடன் மறுத்தார்.

“வெரி சாரி மிஸ்டர் ஹரிஹரன். பெரிய அதிர்ச்சி தான் இது.”
ஹரிஹரன் கண்களை மூடி ஆழமான பெருமூச்சு விட்டார்.

“சார்! என் பெயர் சார்லஸ். இந்த வழக்கைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை எல்லாமும் சொல்லுங்கள்.”

“ முந்தா நாளே கேட்டாங்களே...”

“ இதுவும் தேவை கருதி தான். ப்ளீஸ் கோஆப்பரேட்”

“ஷ்யூர்...கேளுங்க சார்... சார்லஸ்....”

“ இந்தப் பெண் உங்கள் சொந்த மகளில்லை என்று சொன்னார்கள்.”

“ ஆமாம். திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் எனக்கு குழந்தைப் பிறக்கவில்லை. என் தொழிற்சாலை போர்மேனும் அவன் மனைவியும் ஒரு சாலை விபத்தில் உயிரிழக்க, அவர்கள் இரண்டு வயது மகளை நானே.. நாங்களே வளர்க்க ஆரம்பித்தோம்.”

“இந்தப் பெண் மஹிமாவுக்கு இது தெரியுமா?”

“பத்து வயது ஆகும்போது தெரிவிக்க வேண்டி வந்தது. என் சொத்துக்களை உயில் எழுதிய தருணத்தில்”

“அதற்கென்ன அவசியம் அப்போது நேர்ந்தது சார்?”

“காட்! அந்த சமயத்தில் என் மனைவிக்கும் எனக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. அவளுடைய சுற்றம் சரியில்லை. என் பணத்தை எனக்கு சொல்லாமலே அவர்களுக்காக செலவு செய்ய ஆரம்பித்தாள். கேட்டபோது சண்டை. அழுகை.. அவள் அண்ணன் தம்பிகளால் எனக்கும், இந்தக் குழந்தைக்கும் ஏதும் ஆகிவிடுமோ என நினைத்தேன். மனைவியோடு விலகல் முற்றியது. என் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தாள். எங்கள் விவாகரத்தும் நடந்தது. அதற்குப் பிறகுதான்
உயில் எழுதினேன். இதையெல்லாம் அன்றே விவரமாகக் கேட்டார்களே மிஸ்டர் சார்லஸ். “
ஹரிஹரன் குரலில் அலுப்பு தெரிந்தது.

“சாரி சார்! நான் நேற்றுதான் மாற்றலாகி இங்கு வந்தேன். என்னை இந்த வழக்கிற்கு அதிகாரியாகப் போட்டிருக்கிறார்கள். நேர்பேச்சில் புதுத் தகவல்கள் கிடைக்குமா என்றுதான் உங்களை மீண்டும் தொந்தரவு செய்கிறேன். ப்ளீஸ் டோன்ட் மைண்ட்”

“உங்கள் மனைவி... முன்னாள் மனைவி மேல் ஏதும் சந்கேகம் இருக்கிறதா?”

“இவ்வளவு நாட்கள் கழித்து அவள் ஏன் ஏதும் செய்ய வேண்டும்? அவளுக்கு மஹிமா மேல் அன்பிருந்தது. எனது ஆன்மீக நாட்டங்கள்தான் அவளை விவாகரத்து கேட்கும் அளவுக்கு கொண்டுசென்று விட்டது.. கடைசிவரை என்னிடம் மன்றாடிக்கொண்டே தானே இருந்தாள்?”

“ஓ! அவர்களுக்கு கடவுள் நம்பிக்கைக் கிடையாதா?”

“அவள் முருக பக்தை. விரதங்கள் கூட இருப்பாள். நான் ஒரு குருவை நாடிச் சென்றதும், அவளையும் அவர் சத்சங்கங்களில் கலந்து கொள்ள வற்புறுத்தியதும் தான் தவறாகப் போய்விட்டது.
ஒரு முறை குருவை சந்திக்க அவளை நிர்பந்தித்து கூப்பிட்டு சென்றேன். அவர் ஏதோ ஆசிபோல் சொல்லப்போக, இவள் கடுப்பாகி அவரை மிகவும் ஏசிவிட்டாள். அன்றுதான் முதல்முதலாய்  அவளை கைநீட்டி அடித்தும் விட்டேன். அதுவே பிரிவுக்கு காரணமாகிப் போனது”

ஹரிஹரன் தன் வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டார்.
அடித்த கை... அணைக்க முடியாத கை போலும்.

“ஸோ... அவர்கள் மீது சந்தேகமில்லை?”...

“ஆமாம் சார்! அவளுக்கு தொடர்பிருக்க முடியாது. நேற்று பேப்பரில் படித்துவிட்டு, விசாரித்துக்கொண்டு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். அவளை நான் இழந்திருக்கக் கூடாது. இவளையும் எப்போதைக்குமாக இழந்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது சார்லஸ் சார்!”

சப்தமில்லாமல் வாய்திறந்து அழுதார். கண்கள் பிரவாகமாயிற்று. ஒரு கேவல் வந்து அழுகை நின்றது.” சாரி! சாரி!”

சார்லஸ் அவர் கைகளை அழுந்தப் பற்றியது ஆறுதலாக இருந்தது.

“மஹிமாவின் உடம்பில் மொத்தம் பதினொரு கத்திக் குத்துகள். பதற்றத்துடன் குத்தப்பட்டவை. அவற்றில் சில உடம்பில் அதிகம் ஊடுருவாமல் கிழித்திருக்கிறது. நான்கு இடத்தில் ஆழமான குத்துக்கள். அவள் சாகவேண்டும் என்ற அவசரத்துடன் செய்யப்பட்டிருக்கும் அன்ப்ரொஃபஷனல் அட்டெம்ப்ட்.”

“சொல்லாதீர்கள் சார். ப்ளீஸ்!” ஹரிஹரன் பதறினார்.

“மஹிமாவுக்கு ஏதும் காதல் இல்லை என்றும், உங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஆமாம். சார்! குருவருளால் அந்தப்பிரச்னைகள் ஏதும் எனக்கும் மஹிமாவுக்கும் இல்லை.. குருநாதர் சொன்னதுபோல், இது பூர்வ ஜென்ம பாபம் தான்.”

சார்லஸ் அவரைக் கூர்ந்து நோக்கினார். மஹிமாவுக்கு உங்கள் குருநாதர் பற்றி சொல்லியிருக்கிறீர்களா?”

“இல்லை சார் .அவள் குழந்தை தானே? மேலும் அவளுக்கும் அமுதா போல் அவரை பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அவர்பற்றி சொல்லவில்லை. மேலும் குருநாதர் பதிமூன்று ஆண்டுகாலம் இங்கில்லையே.”

ராமன் பதினான்காண்டுகள் காட்டுக்குப் போனார். என் குரு பதிமூன்றாண்டுகள்.. அவர் விருப்பமில்லாமல் அப்படி சிறைக்கு போயிருப்பாரா? குருநாதா... எப்படி மனம் துணிந்தீரோ என் சுவாமி?... ஹரிஹரன் மனதுக்குள் அரற்றினார்..

“யார் அமுதா?”

சட்டென்று கவனம்திரும்பி, “என் மனைவி சார். முன்னாள் மனைவி.”என்றார் ஹரிஹரன்.

“ஓ..சரி”

“உங்கள் குரு இங்கில்லை என்றீர்கள். அவ்வளவு நாளும் எங்கிருந்தார்.?”

“பக்தர்களின் பாவங்களை சுமந்து கொள்ளும் குருநாதர் அதை அனுபவித்துத் தானே ஆகவேண்டும்? எங்கள் குரு ஒரு வட மாநிலத்திலும் பிரபலமாகி வந்த நாட்கள்... அமைச்சர்களும் தனவந்தர்களுமாய் அவரை எப்போதும் சுற்றி நின்றிருப்பார்கள். பெரும்பழிக்கு ஆளாகி, யாருடைய கொலையிலோ சம்பந்தப்படுத்தப்பட்டு அவரை அங்கே சிறையில் அடைத்து விட்டார்கள். அவருடைய சொத்துக்களை எல்லாமும் பறிமுதல் விட்டார்கள். நானும் இன்னுமிரு பக்தர்களும் ஆறுமாதத்துக்கொருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தபடி இருந்தோம்.
போன மாதம்தான் விடுதலையாகி, பஞ்சைப் பராரியாய் வந்து நின்றார். பளபள என ஜொலித்த என் ஸ்வாமி, வாடி வதங்கி வந்தார். அந்த நிலையில்கூட என் மனைவி பற்றியும், மஹிமா பற்றியும் கேட்டார் அவர்.!”

“பாவம். அவர் இப்போது எங்கேயோ?”

“என் வீட்டின் அவுட்ஹவுசிலேயே தங்கச் சொல்லிவிட்டேன். அதுவும் வசதியான இடம்தான். பாக்யமில்லையோ?! சரி...
எனக்கு வேலையிருக்கிறது சார்லஸ் சார்! பணமெடுக்கப் போக வேண்டும்.”

“கடைசியாக இரு கேள்வி. உங்கள் உயில் என்று சொன்னீர்களே... அது விவரம் சொல்ல முடியுமா?”

ஹரிஹரன் சொல்லத் தயங்கினார். “நான் என் வக்கீலைக் கேட்டுக் கொண்டுதான் சொல்ல முடியும். தப்பா நினைக்காதீங்க”

“சார்! உங்கள் நல்லதுக்குத் தான் கேட்கிறேன். இதை எங்கும் ரெகார்ட் செய்யவில்லை. ஏதும் க்ளூ கிடைக்குமா என்றுதான் கேட்கிறேன். உங்கள் முன்னாள் மனைவிக்கு உயில் விவரம் தெரியுமா?”

தயக்கத்துடன் உடனிருந்த இரு போலீசாரையும் பார்த்தார். அவர்கள் பக்கம் சார்லஸ் திரும்ப, குறிப்பறிந்து ‘வெளியே இருக்கிறோம் சார் ‘ என்று நீங்கினார்கள்.

“இப்போது சொல்லுங்கள் சார். நாமிருவர் மட்டுமே இருக்கிறோம்.”

“என் உயில் விவரம் எனது வக்கீலுக்கும் எனக்கும், மஹிமாவுக்கும்  மட்டுமே தெரியும். அண்மையில்தான் குருநாதர் காதிலும் போட்டு வைத்தேன்.”

“என்னவாறு அந்த உயிலை எழுதியிருந்தீர்கள்.?

“என் சொத்துக்கள் நானே சம்பாதித்தவை. எனக்குப் பின்னால் அவை என் மகளுக்கு போய் சேர வேண்டும் என்றும், அவள் மேஜராகும் வரை குருநாதர் தான் அவளுக்கு கார்டியனாக இருக்க நியமித்தும், ஒருவேளை எனக்கும் மஹிமாவுக்கும் ஏதும் ஆகிவிட்டால், சொத்துக்களுக்கு குருநாதரே பாத்தியதை என்றும் உயில் எழுதியிருந்தேன்.
குருநாதர் வந்த பிறகே விவரத்தை அவருக்கும் சொல்லி ஆசி பெற்றேன். அடுத்த வாரம் மஹிமாவுக்கு பதினெட்டு முடிந்து பத்தொன்பது தொடங்குகிறது. குருநாதர் ஒரு ஹோமத்துக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார்.”

“நல்லது சார்! நல்லதே நடக்கட்டும். தேவைப்பட்டால் மீண்டும் வருவேன். போலீசுக்கு தெரிவிக்காமல் வெளியூர் எங்கும் போகவேண்டாம் ” என்று சார்லஸ் விடைபெற்றார்.

ஹரிஹரன் வங்கிக்கு சென்றார்....

சார்லஸ் ஹரிஹரன் வீடு நோக்கி சென்றார்.

ஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு, சார்லசை எதிர்பார்க்கவில்லை.      



(பின் குறிப்பு: இந்த கதையோட்டத்தில் ஒரு வித்தியாசம் அல்லது மாற்றம் ஒன்று இருக்கிறது. என்னவென்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு உண்டு.)

37 comments:

ஜீவி சொன்னது…

ஹ..ஹ.. ஹா. 'குமுதம்' பாணியில் பின்குறிப்பா?.. வாசிப்பவர் ஒரு எழுத்து விடாமல் வாசிக்க ஏற்பாடா?..

கதையோட்டத்தில் வித்தியாசம், மாற்றம்?..

சின்ன எழுத்துப்பிழை எல்லாம் கணக்கில் வராது, தானே?.

கீழிருந்து மேலெ 51-வது வரி. ஒரு சின்ன எழுத்து பிழை. தேவையில்லாமல் ஒரு 'ன்' டைப்பாகி இருக்கிறது. அதெல்லாம் வித்தியாசம், மாற்றம் இல்லை. பின்னே?..

ஆங்!.. அதுவா?..

முன்னாள் மனைவி?.. ஹரிஹரனே சொல்லிட்டார். நோ சான்ஸ்?]!

ஹரிஹரன் குத்துக் கல்லாட்டம் இருக்கறச்சே, மஹிமா தீர்த்துக் கட்டி குருவுக்கு என்ன லாபம்?..

குருவின் மீது பழி போட ஹரிஹரன் ஏற்பாடோன்னோ நினைக்க முடிலே..
ஹரிஹரன் மஹிமாக்கு சொத்து வந்து சேர்ற மாதிரி உயில் எழுதினார்?..

சே! இதெல்லாம் என்ன தத்துபித்துன்னு?.. மஹிமா தான் உயிரோட இருக்காளே!

இல்லே, உயிரோட இருக்கற மாதிரி காட்டினது தான்-- வித்தியாசம், மாற்றமா?

ஆக, கீழே காணும் வரிகளும், பின்னால் ஹரிஹரன் கேஷ் டிரா பண்ண பேங்குக்குப் போவதாகச் சொன்னதும் தான் கதையில் நுழைத்த மாற்றம், அல்லது கதைக்கு வித்தியாசப்பட்டு இருப்பது.
=======================================================================================
"சார்! இன்னைக்கு பதினோரு மணிக்கு மும்பை ஸ்பெஷலிஸ்ட் லேண்ட் ஆயிடுவார். ராசியான கை சார் அவருது. எப்படியும் சரியாக்கிடுவார் சார்”

“ம்”

“அவருக்கு பேமென்ட் கேஷா குடுக்கணும்னு பெரிய டாக்டர் சொல்லிகிட்டிருந்தார் சார். கொஞ்சம் ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா தேவலை”
=========================================================================================

சரி, அப்போ கடைசி வரி?..
=========================================================================================
ஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு, சார்லசை எதிர்பார்க்கவில்லை.
========================================================================================

அந்த கடைசி வரி தான் மஹிமா உயிரோடு இல்லை என்று காட்டிக் கொடுத்த வரி..
இல்லையா, மோகன்ஜி?

Geetha Sambasivam சொன்னது…

ம்ம்ம்ம்ம், மஹிமாவை டாக்டர் வந்து பார்த்தாரா? பிழைச்சாளா என்பதைச் சொல்லாமல் கடைசி வரியில் சொல்லி இருப்பது தான் மாற்றம் அல்லது வித்தியாசம். குருவைக் குற்றவாளி என்று சரியாக சார்லஸ் கண்டு பிடித்திருப்பது. செரியா? :)

Geetha Sambasivam சொன்னது…

வேறே ஏதேனும் தோணினா மறுபடி வரேன்.

Geetha Sambasivam சொன்னது…

குரு சிறைக்குச் சென்றதாக போலீஸ் விசாரணையின் நடுவில் ஹரிஹரன் நினைக்கிறார். அப்போவே குரு தான் குற்றவாளி என்பது உறுதியாகத் தெரிகிறது.

ஸ்ரீராம். சொன்னது…

//நீ நகைகளை,மகுடத்தை, பட்டாடைகளை களைந்த வேகமென்ன? மரவுரி தரித்து நாணத்துடன் ஸ்ரீராமன் சுண்டுவிரலை//

இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். வால்மீகி ராமாயணத்தில் சீதை மரவுரி தரித்து எல்லாம் செல்லவில்லை, பதினான்கு வருடங்களுக்கும் சேர்த்து ஏகப்பட்ட பட்டாடை, நகைகளுடன்தான் சென்றாள் என்று சமீபத்தில் ஒரு உபன்யாசகர் சொன்னார்.


//தையைப் பெத்த ஜனகனா தவிச்சேனே.//

சீதை ஜனகன் பெற்ற மகளா?

சரி, மெயின் கதைக்கு இதெல்லாம் வேண்டாத விவரங்கள். ஒரு சிக்கலில்லாத குற்றக் கதை. உயில் விஷயங்கள் குருவுக்குச் சொல்லப்பட்டதும் குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிந்ததுமே ஒரு சாதாரண போலீஸ்காரர் கூட இதை யூகிப்பார். ஆனால் குருவைக் குற்றவாளியாக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குருவின் மேல் மதிப்பு என்று இல்லை, ட்விஸ்ட்டுக்காய்!

G.M Balasubramaniam சொன்னது…

கதையைப் படித்துக் கொண்டு வரும்போது மஹிமா இறந்தோ கொல்லப்பட்டொஇருப்பாள் என்று தெரிகிறது ஆனால் இறந்த மஹிமாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டருக்கு காஷாகக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது வித்தியாசமாய்த் தோன்றியது. நானும் முன்பு ஒரு கதை எழுதி கதாபாத்திரத்தின் பெயரை ஓரிரு இடத்தில் வேண்டுமென்றே மாற்றி எழுதி வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தேன்

நிலாமகள் சொன்னது…

கதை படித்தால்/கண்டு பிடித்தால் பரிசு என்ற அறிவிப்புதான் புதுசு.

Geetha Sambasivam சொன்னது…

//இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். வால்மீகி ராமாயணத்தில் சீதை மரவுரி தரித்து எல்லாம் செல்லவில்லை, பதினான்கு வருடங்களுக்கும் சேர்த்து ஏகப்பட்ட பட்டாடை, நகைகளுடன்தான் சென்றாள் என்று சமீபத்தில் ஒரு உபன்யாசகர் சொன்னார்.//

ஆதாரம்?? எந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கிறது? வால்மீகியிலா? துளசி? கம்பன்? மற்ற எந்த ராமாயணம்? ஜைன ராமாயணம்? எனக்குத் தெரிந்து சீதை மரவுரி தரித்தே செல்கிறாள். காட்டில் தான் அத்ரி முனிவரின் ஆசிரமத்தில் அநசூயா தேவியால் ஆடை, ஆபரணங்களால் அலங்கரிக்கப் படுகிறாள். அநசூயா பின்னர் அவற்றை அவளுக்கே கொடுத்து விடுகிறாள். உபன்யாசகர் யார்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கதை அண்ணா...

மனைவி... முன்னால் மனைவி என்று சொன்ன ஹரிஹரன்....
அமுதா என்று சொல்கிறார்...
அவளுக்குப் பிடிக்காதது போல் மஹிமாவுக்கும் குருவைப் பிடிக்காமல் போகலாம் என்கிறார்....
மனைவி... முன்னால் மனைவி... என்றவர் அமுதா என்று சொல்கிறாரே அதுவா...

மோகன்ஜி சொன்னது…

சொந்தங்களே!
ஒரு சிறுகதையை எழுதும் போது, முதல் டிராப்ட்டில் தங்கு தடையின்றி மையக்கருத்தை ஒட்டி தோன்றியதை மளமளவென எழுதிவிடுவதும், அதன்பின்னர் செதுக்கி செதுக்கி அதை மாற்றி முடிப்பதும் என் வழக்கம்.

முன்பு எப்போதோ இந்த மஹிமா கொலைமுயற்சியை கதையாக எழுதினேன்.எழுதிய முதல்டிராப்ட்டுடன் அப்படியே விட்டுவிட்டேன்.

போனமாதம் ஒரு புதுக்கதை எழுதத் தொடங்கினேன். ஒரு டான்ஸர் பெண்ணுக்கும் அவள் தகப்பனுக்கும்ஏற்படும் உறவுவிரிசல் பற்றிய கதை. ஒருபக்கம் தட்டச்சு செய்திருப்பேன்,. அதோடு விட்டுவிட்டேன். மீண்டும் தொடர எண்ணித் தேடியபோது அடித்து வைத்த பக்கத்தை லேப்டாப்பில் காணவில்லை.

எதையோ பிராய்ந்து கொண்டிருந்தபோது, மஹிமா கதைடிராப்ட்டின் முதல் பக்கமாக,நான் தேடிக் கொண்டிருந்த டான்ஸர் கதையின்பக்கம் இருந்தது.
அதையே முதல்பக்கம என வைத்து, மஹிமா கதை துவக்கத்தை அகற்றி, நடுவில் டச்அப்செய்து பதிவேற்றிவிட்டேன். கவனித்தால் கதையின் தொடக்கத்து நடையும், பிறகு தொடர்ந்த நடையிலும் வித்தியாசம் தெரியும்.

நான் எண்ணியிருந்தது குருவை அதிகம் வெளிப்படுத்தாமல் அவர் குற்றவாளி என காட்டுவதே. ஆனாலும் கதைபோக்கில் open clue வாக குருவின் விவரம் அதிகமாகி இருந்தது. கொஞ்சம் பட்டி பார்த்திருக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியின் கவனச்சிதறலுக்காக,அப்படியே விட்டு வைத்தேன்.

ஆக, மாற்றம் துவக்கத்து நடையிலும், தொடர்ந்தகதையின் நடையிலும் இருக்கும் வேறுபாடே!






மோகன்ஜி சொன்னது…

@ஜீவி சார்,
@கீதாக்கா,
@ஶ்ரீராம்ஜி,
@ GMB சார்,
@நிலா,
@ குமார்,
முயற்சிகளுக்கு நன்றி !

ஏனோ பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. 'போட்டி' என்றதால் இருக்குமோ?
நேர்ந்த ஒரு பிழையை விளையாட்டாக்கிப் பார்த்தேன். அவ்வளவே.
கதையென்ற அளவில், இதை வெளியிட்டிருக்க மாட்டேன். நான் தரமுயலும் தரம் வேறு.
அனைவருக்குமான பரிசு, சில நாட்களில் தேடிவரும்.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்,

//சீதா, ஜனகன் பெற்ற மகளா?// சரியான கேள்வி தான்.
எனினும் வளர்த்தவர் என்ற வகையில் மகளென்ற பந்தம் உண்டு தானே?
பெற்ற எனும் வார்த்தை நீக்கிவிடுகிறேன். சுட்டியதற்கு நன்றி!

இந்த மரவுரி மேட்டர் நிறையமுறை விவாதங்களில் பார்த்திருக்கிறேன்.
மரவுரி தரித்தாள் சீதை என்றால், ராவணன் அவளை கவர்ந்து சென்றபோது போன வழித்தடத்தின்
அடையாளமாக, எப்படி நகைகளை வீசியபடி சீதை சென்றிருக்கமுடியும் எனும் கேள்வி எழும்.
கீதா அக்கா சொல்லியிருக்கும் கருத்தே சரி.

கம்பராமாயணத்தில், சீதை மரவுரி தரித்தாள் என்பது, கீழ்வரும் பாடலிரண்டில் விளங்கும்:

அனைய வேலை, அகல்மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள். 224


சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 230

(சீரம்- மரவுரி)

ஸ்ரீராம். சொன்னது…

மரவுரி - இந்தத் தகவல்களை இப்பவும் சாமவேத சண்முகநாத சர்மா என்னும் உபந்யாசகர் பக்தி டீவியில் வால்மீகி ராமாயணம் என்னும் தலைப்பில் தெலுங்கில் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார். தினமும் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை. அகலிகை சாபம் பெறவில்லை ஒரு வகையில் அவள் கௌதம முனிவரிடம் பெற்றது வரம் வேண்டும் அந்தப் பாடல்களை சொல்லி விளக்கம் சொல்லியிருப்பதாக சுகுமார் ஒரு மாதத்துக்கு முன்தான் கொண்டிருந்தார்.

ஜீவி சொன்னது…

போட்டி என்றாலே இயல்பாகவே ஒரு தேடல் வந்து விடும். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்கிற தேடல்.

சரியானவற்றை தப்போ என்றும், தப்பானவற்றை சரியோ என்றும் மனம் சந்தேகிக்கும். அந்த தடுமாற்றம் நன்றாக உபயோகமாகியிருக்கிறது.

நடையை யார் சீந்துகிறார்கள்?... என்னதான் கரடியாகக் கத்தினாலும் பதிவுலகில் யாருமே அதற்காக அலட்டிக் கொள்வதில்லை.

ஆரம்பமும் தொடர்ந்த கதையும் இரண்டுமே வேறுபட்ட சமாச்சாரங்கள். ஆனால் அவை வேறுபட்டவை என்று புரியாதபடி சாமர்த்தியமாக இரண்டிற்கும் ஒரு பாலம் போட்டு இணைத்திருக்கிறீர்கள். அதற்காக வலிக்கும் வரை கை தட்டலாம்.

இப்பொழுது பாலத்தைத் தகர்த்ததால் தான் வேறுபட்டுத் தெரிகிறது. தகர்க்காமலேயே இப்பொழுதும் இதை ஒரு முழுக்கதை என்று தாராளமாகச் சொல்லலாம். மஹிமா வரும் இரண்டாவது பகுதியை மட்டும் கொஞ்சம் செப்பனிட வேண்டும். உங்கள் பாஷையில் பட்டி பார்க்க வேண்டும். 'அந்த கேஷாகவே கொடுக்க வேண்டும்' சமாச்சாரத்தில் ஏதோ குழறுபடி இருக்கிறதை கவனிக்க வேண்டும். அவ்வளவு தான். 'ஏ ஒன்' கதை ரெடியாகி விடும்.

விஷயம் தெரிந்தவர். சுதாஜி வரவேயில்லை. கவனித்தீர்களா?.. இத்தனைக்கும் கதையின் தலைப்பும், அருணாசல கவிராயரும், சாஹித்திய விவரணைகளும், அந்த ஆரம்ப வேகமூம் அவர் ஏரியா. இருந்தும் வரவில்லை. பார்க்கவில்லையோ?..

ஸ்ரீராம். சொன்னது…

காட்டுக்குக் கிளம்பும் நேரம்.

ராமன் தனக்கு வேறு எதுவும் வேண்டாம், ஆயுதங்களை மட்டும் தரச்சொல்லி கேட்கிறான். வசிஷ்டர் ஆயுதங்களையும், மரவுரியையும் எடுத்துவரும்போது சீதைக்கும் சேர்த்தே மரவுரி எடுத்து வருகிறார். சீதை அதை அணிய முற்படுகையில் சரியாக வராமல் 'இந்த ரிஷி பத்தினிகள் எல்லாம் எப்படித்தான் இதை அணிகிறார்களோ' என்று நினைத்துக்கொண்டே தடுமாறுவதை பார்த்த தரசாதன் கண்களில் கண்ணீர்.

வசிஷ்டர்தான் முதல் குரல் கொடுக்கிறாராம். "ராமா.. இந்த வனவாசம் என்பது உனக்கு மட்டுமே விதிக்கப் பட்டிருக்கிறது. நீ மரவுரி தரிக்கலாம். சீதை தரிக்க வேண்டிய கடமை இல்லை. " என்று சொல்கிறார். நல்ல உடைகளையும் சில நகைகளையும் எடுத்துத் தருகிறார்.

அந்த நகைகளையும், அத்திரி முனிவர் மனைவி அனுசுயா தரும் நகைகளையும்தான் சீதை ராவணனால் கடத்தப்படும்போது வழிகளில் போட்டுக் கொண்டே செல்கிறாளாம்.

மோகன்ஜி சொன்னது…

வால்மீகி ராமாயணத்தில் கைகேயி தானே மரவுரிகளை எடுத்து வந்து,ராமர்,லட்சுமணன், சீதை மூவருக்கும் தருகிறாள். அதை அணிந்து கொள்ள தடுமாறும் சீதைக்கு , ராமரே அவள் பட்டு வஸ்திரத்தின் மேல் உடுத்தி விடுகிறார் என்று தான் வரும்

மொல்லு ராமாயணமு, ஶ்ரீரங்கநாத ராமாயணமு என்று இரு ராமாயணங்கள் தெலுங்கில் எழுதப்பட்டவை. சமீப காலத்தில், வால்மீகி ராமாயணத்தை தழுவியே 'ஶ்ரீமத் ராமாயண கல்பவ்ருக்ஷம்' என்று தெலுங்கு கவிசாம்ராட் விஸ்வநாத சத்யநாராயணா எழுதி முதல் ஞானபீடமும் பெற்றார். தெலுங்கு மொழியின் செறிவையும் இசைமிளிறும் வரிகளையும் சொல்லக்கேட்டு அனுபவித்திருக்கிறேன். சீதை மரவுரி அணியவில்லை என எந்த ராமாயணத்தில் உள்ளது என
கேட்டுத்தான் அறியவேண்டும். செய்கிறேன் ஶ்ரீராம்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆம் கைகேயிதான் எடுத்து வருகிறாள். மன்னிக்கவும் கேட்டு எழுதியதில் குழ(ம்)(ப்)பி விட்டேன். ராமர் அப்படி உடுத்தி விடும்போதுதான் வசிஷ்டர் குறுக்கிடுகிறார்.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார் ! பாராட்டுக்கு நன்றி ஜி! முன்பே சொன்னபடி, அந்தக் குழப்படியை படிப்பவர்களிடம் விட்டு வேடிக்கை பார்க்கவே இதைப் போட்டேன். ஶ்ரீராம் சொல்வது போல் இரண்டுமூன்று ட்விஸ்ட் வைத்தால் கதை கச்சிதமாகிவிடும் தான்.செய்கிறேன் ஜி!

சுதாவைக் காணவில்லை. குருவைப் பிடிக்கப் போய்விட்டாரோ என்னவோ?!
சிறிது நேரத்திற்கு முன் தான், உங்கள் சிலம்பு எப்படி ஜதிகூட்டப் போகிறது என்று யோசித்தபடி இருந்தேன். நல்லிரவு சார்!

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்,
ஆந்திரத்திலும், தெலுங்கானாவிலும் பலகாலம் வசித்து வருகிறேன்.மேலும்'மனவாடு' வேறு.
இங்கு நான் கண்டது என்னவெனில், சராசரி படிப்பறிவுள்ளவர்களும் கிராமவாசிகளும்கூட , நம் இதிகாசங்களில் நல்ல ஞானம் உள்ளவர்கள். குறிப்பாக, மஹாபாரத்த்தின் சிடுக்கான உட்கதைகளைக் கூட விவாதித்தபடி இருப்பார்கள். இந்த இரு இதிகாசங்களையும்வைத்தே நிறையவே திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஓடாதது என எதுவுமே இல்லை. இந்தக் கலாச்சாரத்தின் அடிநாதம் இதிகாசங்கள். ஒப்பீட்டளவில் நம்மைவிட தெலுங்கர்கள் இதிகாசங்களில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர்கள் என சொல்ல இயலும்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இறந்த மஹிமாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டருக்கு காஷாகக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது வித்தியாசமாய்த் தோன்றியது

sury siva சொன்னது…

இந்தப் போட்டிக்கு தரும் பரிசை
காஷாக தருவதாக சொல்லுங்கள்.
பிறகு
நான் கருத்து சொல்ல வர முடியுமா'
என்று
யோசித்து
முடிவு
சொல்கிறேன்.

சுதா.

பின் குத்தாத பின் குறிப்பு.

காட்டுக்கு சென்றபோது ராமன், சீதை எல்லா ஆபரணங்களையும் துறந்தே தான் சென்றார்கள்.

அப்படி இருக்கும்போது, ராமன் அடையாளத்துக்காக தன்னிடம் தந்தார் என்று அனுமன் சீதையிடம் அசோக வனத்தில் கொடுத்த அங்கூடி எங்கிருந்து வந்தது ?

ஜீவி சொன்னது…

'எப்போ வருவாரோ' என்று காத்திருந்தவர் வந்தாரய்யா!

அருணாசல கவிராயர், 'எப்படித் துணிந்தீரோ'-- பக்கம் அவர் கவனம் படிந்து
ககமான அனுபவங்களைப் பெறலாம் என்றால், இந்த ராமன்--சீதை லாவண்ய கச்ச்சேரியில் இறங்கி விட்டாரே!

Geetha Sambasivam சொன்னது…

//http://sivamgss.blogspot.in/2013/01/blog-post_9.html//

//காட்டுக்கு சென்றபோது ராமன், சீதை எல்லா ஆபரணங்களையும் துறந்தே தான் சென்றார்கள்.

அப்படி இருக்கும்போது, ராமன் அடையாளத்துக்காக தன்னிடம் தந்தார் என்று அனுமன் சீதையிடம் அசோக வனத்தில் கொடுத்த அங்கூடி எங்கிருந்து வந்தது ?//

சு.தா. நீங்க ஏற்கெனவே இந்தக் கேள்வியைக் கேட்டு நான் பதிலும் சொல்லி இருக்கேன் மேற்கண்ட சுட்டியில். கெக்கேபிக்குணி கூட ஒரு சில சுட்டிகளின் மூலம் ஆதாரங்கள் கொடுத்திருக்கார். மேற்கண்ட சுட்டியில் பாருங்க! :)

sury siva சொன்னது…

கீதா மேடம் பார்வைக்கு இது அனுப்பப்படுகிறது.

நீங்கள் சொல்லும் தொடர்பு ஒன்றும் அது போல் இல்லை என்று கூகில் ஆங்கிலத்தில் சொல்கிறது.

இருக்கட்டும். அதை நான் அப்போதே படித்துவிட்டேன்.

கேள்வி: அனுமனிடம் மோதிரம் எப்படி வந்தது? ராமன் தந்தது என்று சொல்கிறார்.

வாலமீகி யிலோ கம்பனிலோ , ராமனுக்காக சீதையைத் தேட, அனுமன் புறப்பட்டுப்போகும்போது ராமன் அனுமனிடம் மோதிரம் கொடுத்த தாக எந்த பாடலும் இல்லை.

அவர்கள் மரவுரி அணிந்து மட்டுமே கானகம் நோக்கி சென்றார்கள் என்று தான் வா, க, சொல்கிறது.

நீங்கள் குறிப்பு கொடுத்தது எல்லாம் சால்ஜாப்புகள். இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்றெல்லாம்.

வானவில்லார் கிட்ட எதுனாச்சும் பதில் இருந்தா போட்டு உடைத்து விடுவார். பார்க்கலாம்.

சுப்பு தாத்தா.

Geetha Sambasivam சொன்னது…

http://sivamgss.blogspot.in/2013/01/blog-post_9.html

இப்போப் பாருங்க, அந்தச் சுட்டிக்குப் போக முடியும், முன்னும் பின்னும் போட்ட // // எடுத்துவிட்டுச் சுட்டியைக் காப்பி, பேஸ்ட் செய்திருந்தால் நேரே அந்தப் பக்கம் போகுமே! :) எனக்குச் சரியாகத் திறக்கிறது!

ராமனுக்கு ஏது மோதிரம்? சீதைக்கு ஏது சூடாமணி? இதான் தலைப்பு!

Geetha Sambasivam சொன்னது…

http://sivamgss.blogspot.in/2008/05/39.html

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஸ்வாரஸ்யம்....

மோகன்ஜி சொன்னது…

வாங்க கரந்தையாரே!
முன்பே சொன்னதுபோல் திசைதிருப்பவே நீங்கள் குறிப்பிட்டதை சொல்லிவைத்தேன்!

நிலாமகள் சொன்னது…

அனைவருக்குமான பரிசு//

கலந்து கிட்டாவே பரிசா... ஹைய்யா!
கியர் மாத்தி வேற ஸ்பீட்ல வண்டி ஓடறது புரியாம நிக்கற சின்னப்பிள்ளை நானாக்கும்.

சிவகுமாரன் சொன்னது…

கதை படு வேகத்தில் சென்றது. குரு மீது ஆரம்பத்திலேயே சந்தேகம் வந்து விட்டது.

Unknown சொன்னது…

ஆன்லைன் DATA ENTRY செய்து சம்பாதிக்க வேண்டுமா ?
ஆன்லைன் வேலை தேடி தேடி சலித்து ஏமாந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும்.அதிகப்படியான ஆசையே உங்கள் துன்பத்திற்கு காரணம் இங்கு நாங்கள் சொல்வதும் பார்த்ததும் அனுபவித்தும் இருக்கிறோம் .இப்பொழுது நாங்கள் ஏமாற்றம் என்ற நிலை இல்லாமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறோம். போதும் என்ற மனம் உள்ளவர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக தினமும் ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். கண்டிப்பாக உங்கள் உழைப்பு முக்கியம் மேற்குறித்த தகுதிகள் உள்ள நபர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .நன்றி .
ஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்க வேண்டுமா ?
தேவையான தகுதிகள் :
1.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்.
2.டைப்பிங் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
3.பொறுமையாக கற்று கொள்ளும் குணம் .

வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

மேலும் விவரங்களுக்கு
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping

கோமதி அரசு சொன்னது…

//அவளை நான் இழந்திருக்கக் கூடாது. இவளையும் எப்போதைக்குமாக இழந்துன் விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது சார்லஸ் சார்!//

இவர் மேல் சந்தேகம் வருகிறது.

மனைவியும் பிரிந்து போய் விட்டாள், இப்போது மகளும் பிரிந்து போய் விடுவாளோ என்ற தவிப்பும்
அதிகபடியான பாசம் மகள் மேல் வைத்ததால் மகளின் காதல் தன்னையும், மகளையும் பிரித்து விடுமோ என்று நினைத்து இருக்கலாம் அதனல் ஏற்பட்ட அப்பா, மகள் மோதலில் வளர்ப்பு அப்பாவே அவளை வெட்டி இருப்பாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

அது குருவின் காதல் கடிதம் ஏற்படுத்திய விளைவோ என்ற சந்தேகம் வருகிறது.


//ஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு,//

இதை படிக்கும் போது முன்பும் இது போல் தந்தை, மகளை பிரிக்க இது போல் காதல் கடிதங்கள் போட்டு அதனால் அப்பா, மகளுக்கு இடையில் தகராறு வந்து இருக்குமோ? என்ற நினைப்பு வருகிறது..



கோமதி அரசு சொன்னது…

“மஹிமாவுக்கு ஏதும் காதல் இல்லை என்றும், உங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஆமாம். சார்! குருவருளால் அந்தப்பிரச்னைகள் ஏதும் எனக்கும் மஹிமாவுக்கும் இல்லை.. குருநாதர் சொன்னதுபோல், இது பூர்வ ஜென்ம பாபம் தான்.”//

இந்த அறிக்கையைப் படிக்கும் போது பூர்வ ஜென்ம பாபம் என்று குருவால் மூளை சலவை செய்யபட்டவரோ என்ற குழப்பாய் இருக்கிறது.

கோமதி அரசு சொன்னது…

குருவின் நோக்கம் இல்லாத காதலனை உருவகபடுத்தி அதனால் அப்பாவிற்கும்,மகளுக்கும்
சண்டை ஏற்படுத்தி அப்பா மகளை கொன்று விட்டாள் சொத்துக்கள் தனக்கு வந்து விடும் என்ற நினைப்பா என்று எண்ணம் வருகிறது.

//யாருடைய கொலையிலோ சம்பந்தப் படுத்தப்பட்டு அவரை அங்கே சிறையில் அடைத்து விட்டார்கள். அவருடைய சொத்துக்களை எல்லாமும் பறிமுதல் விட்டார்கள்//

இது இன்னும் குரு மேல் சந்தேகம் வலுக்கிறது.

பார்ப்போம் நீங்கள் என்ன முடிவு வைத்து இருக்கிறீர்கள் என்று.

கோமதி அரசு சொன்னது…

“ஆமாம் சார்! அவளுக்கு தொடர்பிருக்க முடியாது. நேற்று பேப்பரில் படித்துவிட்டு, விசாரித்துக்கொண்டு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள்.///
கொஞ்சம் அமுதா மேலும் சந்தேகம் வருகிறது.

தருமி மாதிரி எது சரியாக இருக்கோ அதை எடுத்து கொண்டு பரிசை கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

hehehehe one doubt , Hope the Doctor changed the cash given to him! :)))))))))))