ஞாயிறு, ஏப்ரல் 19, 2015

அங்கிங்கெனாதபடி....

'இந்த கெடிலநதி மேம்பாலத்தின் மீதுதானே வெய்யிலில் நடந்து போனாள் ஜெயகாந்தன் கதையில் ஒரு பாட்டி' மனோகர் தன்னையே வினவிக் கொண்டான். 'ஐய்யமாரு வீட்டுப்பாட்டி.. வேகாத வெய்யிலில் நடந்து போகும், புள்ளை வீட்டுக்கு.. '

ஜட்காவண்டியின் பக்கப்பலகைக்கு தோதாக முதுகை சரி செய்து கொண்டான். குதிரை வண்டிக்காரன்பின் மனோகரும், அவனையடுத்து அவன் தாயார் துளசியம்மாவும் அமர்ந்திருந்தார்கள். வேறு சந்தர்ப்பமாயிருந்தால் 'ரெண்டுமூணு மைல்தூரத்துக்கு ஜட்கா கேக்குதா?' என்றுதான் அம்மா திட்டியிருப்பாள். ஆனால் இன்று ஏதும் சொல்லாமல் ஏறிக் கொண்டாள்.

அம்மா அப்படி தன் பேச்சை அங்கீகரித்து அமர்ந்தது மனோவுக்கு சந்தோஷமாய் இருந்தது. வெயிலால் இருக்கலாம், நாலுமாதமாய் சிமிட்டி பேக்டரியில் வேலை பார்க்கிறானே... அதற்கு அவள் தரும் கௌரவமாய் இருக்கலாம்.. எதோ ஒன்று. டவுன் ஹால் தாண்டி ஜட்கா சிறு ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தது. கிழட்டுக்குதிரையும் கிழட்டு வண்டிக்காரனுமாய் நல்ல ஜோடிதான். 

'தேருபாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே.. உன்னைத் திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிக் பெண்ணே !' என்று லவுட்ஸ்பீகரில் புதுப்பிளேட்டு ஒன்று எங்கோ அலறிக் கொண்டிருந்தது.

'திரும்பும்போது என்னுடன் ஒரு பொக்கிஷமும் அல்லவா உடன் வரப்போகிறது ? எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன் ? ' மனோவின் மனசு பரபரவென்று அல்லாடியது.

ஒருவேளை 'போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே'ன்னு திரும்ப வேண்டியிருக்குமோ என்ற நினைவும் வந்தது.. அந்த எண்ணம்தந்த சின்ன திகிலில் மனோவுக்கு வயிறு குழைந்தது. 

"அம்மா! கொடுத்திடுவாங்க இல்லே?"

பின்னோடும் சாலையை வைத்தகண் வாங்காமல் வெறித்திருந்த துளசியம்மாளை மனோவின் கேள்வி கலைத்தது.

'என்ன கேட்டே?' என்றவளின் குரல் வழக்கத்தைமீறிய கத்தலாய் வெளிப்பட்டது. அதிகநேரம் பேசாதிருந்து உள்வாங்கின குரல், சட்டென பதில்சொல்ல விழைந்ததின் சமனின்மை அது.. ஒருமுறை செருமிக் கொண்டாள்.

'இல்லம்மா... சாமியையெல்லாம் தந்திடுவாங்க தானே'ன்னு....

"தராம போயிடமாட்டாங்க... தருமஞாயத்துக்கு பயந்தவங்க தாம்ப்பா.."

"எப்படிம்மா கேட்கப் போறே ? அதுவும் இவ்வளவு காலம் சென்னு?"

"அதத்தான் ரோசனை பண்ணிகிட்டு வரேன்... பார்ப்போம் கவலப்படாத மனோ"

கவலையில்லை தான்..அம்மா இருக்கும்போது கவலையில்லை தான். லேசுபட்டவளா? எல்லோருக்கும் எவ்வளவு செய்திருப்பாள்? மறுவார்த்தை அவளிடம் சொல்லமுடியுமா? ஒரு பார்வையில்,ஒரு ஹூங்காரத்தின் கார்வையில் அம்மா தன் கொடியை நாட்டி விடுவாள். 


தனக்கென்று எதுவும் வைத்துக்கொண்டவளுமில்லை.ஒன்று வேண்டுமென்று ஆசைப்பட்டவளுமில்லை.அதனால்தானோ என்னவோ  அவளுக்கு மரியாதை.  'மஹாராணி' என்று விளிக்கும் அப்பாவின் நையாண்டி நிஜம் தான். அவள் மஹாராணிதான். அந்தப் பாவிமனுசன் போனதிலிருந்துதான் கிரீடத்தை கழற்றிவிட்டு நடமாடுகிறாள். அப்பா போனபின்பு இந்த இரண்டு வருஷத்தில், இப்போதுதான் முதல்முறையாக திருச்சியைவிட்டு வெளியூர் வருகிறாள் ... அதுவும் மனோ கரையாய்க்கரைத்து அரித்ததினால் தானே?

மனோவுக்கு தன் பல்லுபோன ஆயாவின் குரல் நினைவுக்கு வந்தது. அவள் சொல்லித்தான் பத்துவயசு மனோவுக்குள் வந்துபுகுந்தது இந்த 'வீட்டுத் தெய்வம்' சங்கதி.

'எத்தன வருசத்து சாமிங்கடா பேராண்டி ! ஒரு முழத்துக்கு கொஞ்சம் மட்டம் ராஜேஸ்வரி தாயாரு. என்ன கண்ணு..என்ன மூக்கு... மூக்குத்தி வளையம்,தண்டை கொலுசு முத்துபதக்கமின்னு பொளிச்ச தாயாரு... தட்டுநிரம்ப சக்கரப் பொங்கல படையலாப் போட்டுட்டு,'சிரிக்கிறாடி.. சிரிக்கிறாடி'ன்னு பொங்கி அழுவாரு உன் தாத்தா.. அம்மனுக்கு தொணையா கூடவே மடில அமர்ந்த ஜானகியோடு ராமரு, தனியா லச்சுமணன், மண்டிபோட்டு உக்காந்தமேனிக்கி தனியா அனுமாரு, அஞ்சாரு சாளக்கராம கல்லுவ, மொழையா லிங்கமொண்ணு, குருபாதுகை, வலம்புரி சங்கு, பாதரசத்துல பண்ணுன சுப்ரமண்யரு... அய்யன் பூஜையை முடிச்சாவுட்டு நானு தான் தொடச்சி, வஸ்த்ரம் சாத்தி, பொட்டுவச்சு,புஸ்பம் போட்டு அதுகளை பொட்டியில வைப்பேன். வைக்கசொல்ல சுப்ரமண்யர எடுத்து கண்ணுல வச்சு ஒத்திக்குவேன். தண்ணுன்னு உசுரைத் தொடும் பெருமாளு"

"ஏன் ஆயா கடலூரு வைத்தியராண்டயே விட்டுட்டு வந்துட்டீங்க?"

அவள் சொன்ன சங்கடமும்,பின்னே நடந்த சங்கதியும் இதுதான்:

அப்போது மனோவின் தாத்தாவும் ஆயாவும் கடலூரில் வசித்தனர். உத்யோக நிமித்தம் திருச்சியில் மனோவின் அப்பா வசித்து வந்தபோதுதான், தாத்தாவின் கடலூர்வீடு ஒரு பகலில் தீப்பிடித்து முற்றுமாய் எரிந்து போனது. 
தீக்காயங்களுடன் உயிர்நீத்த தாத்தா, பிள்ளை வீட்டோடு வந்துவிட்ட ஆயா, தாத்தாவீட்டின் அண்டையில் வசித்த தாத்தாவின் சிநேகிதரான வைத்தியரோடே தங்கிப்போன சாமிப்பொட்டி..... 

எரியும்வீட்டில் பாய்ந்து அந்தப்பெட்டியை மீட்டுவந்தபோதுதான் தாத்தா தீக்காயங்கள் பட்டாராம். இந்தக் களேபரத்தில் அந்தப் பெட்டியை மீண்டும் கொண்டுவரும் முயற்சி ஏனோ எடுக்கப்படவில்லை. சாமிக்கு நேரமில்லாத அப்பா, தாத்தாபோய் ஓரிரு வருடங்களே வாழ்ந்த ஆயா..உருண்டோடும் காலம்.

இத்தனைக்கும் ஆயா காரியத்துக்குவந்த வைத்தியர் சாமிப்பெட்டியை ஒருநடை கடலூருக்கு வந்து எடுத்து செல்லுமாறு அப்பாவிடம் சொன்னதும் ,அதுபற்றி அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டதும் மனோவுக்கு நிழலாடும் ஞாபகங்கள். அவ்வப்போது அவன் அம்மாவுக்கு நினைவுறுத்துவதும், அந்த நேரம்மட்டுமே அதுபற்றிப் பேசும் பெற்றோருமாகத் தான் வருடங்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.

அண்ணனுக்கும் அப்பா போன்றே சாமி விஷயத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் மனோ அப்படியா ? நாள் தவறாமல் பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோவில், வெள்ளிக்கிழமை வெக்காளியம்மன் கோவில், ஞாயிறு சமயபுரமென்று பெட்டி சாமிகளை மானசீகமாய்க் கும்பிட்டுக் கொண்டிருந்தான். இருபத்துமூணு வயசு இளைஞன் மனோவுக்கு அவன் பாட்டன் ரத்தம் குங்கும வர்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நாலுமாசமாய் டால்மியாபுரத்தில் வாசம்.... அண்ணன் தான் வந்து வீடுபார்த்து வச்சு,பக்கெட்டு, வாருகோல்லேருந்து முச்சூடும் வாங்கி தந்தார். 

நேற்று மனோ திருச்சி வீட்டிற்கு வந்தபோது, அம்மாவிடம் சாமிபொட்டி பேச்செடுத்தான். அடுத்த இரண்டுநாளும் தனக்கு விடுமுறையாதலால், கடலூருக்கு போய் வந்துவிடலாம் என்றபோது 'சரி 'என்றவளை நம்பமுடியாமல் குதூகுலத்துடன் கட்டிக்கொண்டான். அன்றிரவே ரயில்பிடித்து ஒருவழியாய் கடலூருக்கும் பகலுக்கு வந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நேரம் தான்... 

"இந்த வீடுதாம்பா! நிறுத்து! " என்ற அம்மாவின் குரல் மனோவை உலுக்கியது. வரும்போது வாங்கிவந்த மாம்பழங்களும்,பூவும் இருந்த பையை கையிலெடுத்துக் கொண்டான்.

வாசலிலிருந்து கூப்பிட்டான். ஆளோடியில் நிழலாடியது.. 'யாரு?'
'அம்பிகே! தாயே ! என் குரல் உனக்கு கேட்குதா ?'என்று உள்ளுக்குள் அரற்றிய மனோவுக்கு இருப்புக்கொள்ளவில்லை.


"நான் தான் அத்தே ! பட்டாளத்தார் மருமக.. துளசி.."

"அடடா..வா கண்ணு..எம்மாம் வருஷமாச்சு.சொகமாயிருக்கியாஎன்னாடி இது? நீயும் வாரிக் கொடுத்துட்டையா?" என்று வைத்தியர் சம்சாரம் கண்கலங்கினாள்.

படமாய்த் தொங்கும் வைத்தியரைப் பார்த்தபடி,தலையை மட்டும் ஆட்டினாள்  துளசியம்மா . பழமிருந்த பையை கையில் கொடுத்தாள்.

'காப்பித்தண்ணி வைக்கிறேன் இரு' என எழுந்தவளைக் கையமர்த்தினாள் துளசியம்மா.

"நானு விரதம் அத்தே! பச்சதண்ணி பல்லுலபடாது. எம்மவனுக்கு காபிடீன்னு பழக்கமில்லே"

"சரி... என்ன விஷயமா இம்மாந்தொலவு வந்தே கண்ணு... நீ வாசலையடைச்சு தேராட்டம் கோலம் போடுவையே... இனி எப்படி கண்ணு பார்ப்பேனோ "

"அத்தே ! நேத்திக்கு விடிகாலம்புற சொப்பனம் அத்தே ! எங்கவீட்டுசாமி ராஜேஸ்வரி.... அதான் அத்தே உங்களாண்ட கொடுத்து வச்சிருக்கமே... அது மானத்துக்கும் மண்ணுக்குமா நிக்குது... எனக்கு ஒரு வாய் பானகத்துக்கு வழியுண்டாடி... எவ்வளவு நாளும் நானு பொட்டிக்குள்ளே மக்கி மழுங்குறது? பீடம் வச்சு விளக்கேத்தடி.. நெய்யிலே குளிப்பாட்டி சூடம் காட்டடி... வீட்டு சாமியையா தள்ளி வைக்குறேன்னு சூலத்தை ஆட்டிஆட்டி கலங்கடிச்சுபிட்டா அத்தே... அதான் கொண்டு போயிருவோமின்னு..... வந்தேன் ."

வைத்தியர் சம்சாரம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் . "அம்மாடி! நானு உங்க சாமியை குளிப்பாட்டுறதில்லைன்னாலும், நாளுகிழமை வந்தா பெட்டிமேல பூப்போட்டு கும்பிடுவேன். சாமில்லாம் இன்னிக்கிருக்கட்டும்... நாளை பொங்கல் வச்சு படைச்சி அம்பாள அனுப்பி வைக்கிறேனே தங்கம் உன்னோடே.. இவ்வளவு காலம் இங்க இருந்துட்டா இல்லையா?"

"நீங்க சொல்லுறது சரி அத்தே! ஆனா பாருங்க... நேத்து விடிகாலம்புற அவ அடிச்ச கூத்துக்கப்புறம் பொட்டு தண்ணி குடிக்கல்லே அத்தே ! கிளம்புறேன்.. கொஞ்சம் உங்க கையால சூடம்காட்டிட்டு, எனக்கு ஆசியோட அம்பாளைக் குடுங்க அத்தே!"

அம்மா தட்டிக்கொண்டு எழுந்தாள். அவ்வளவு தீவிரம் அவள் பார்வையில்.. மனோ வாயடைத்து நின்றான்.

அம்மாவும் வைத்தியர் சம்சாரமும் சமையல்கட்டு பக்கம் சென்றார்கள். மணியடிக்கும் ஓசை கேட்டது. சொல்ல இயலாத ஆனந்தமும் அமைதியும் மனோவை சூழ்ந்தது. அந்த அம்மாளை மனோவும் அம்மாவும் விழுந்து நமஸ்கரித்தார்கள். கண்கள்கசிய "ஒரு கொறையில்லாம பெருங்குடியா வாழணும்" என்றாள். அவள் தந்த ஒரு கோணிப்பைக்குள் சாமிபொட்டியை வைத்து சணலால் அதன்வாய் கட்டப்பட்டிருந்தது. 

வாசலில் காத்திருந்த ஜட்காவண்டியில் ஏறிக்கொண்டார்கள். மனோவின் மடியில் கோணிப்பை இருந்தது. அதன்மேல் ஒரு கையும், அம்மாவின் தோள் மேல் ஒரு கையுமாக மனோ மிதந்தான். பஸ்பிடித்து வந்தார்கள். அம்மாவின் கனவைப்பற்றி மனோவும் கேட்கவில்லை.. அவளும் சொல்லவில்லை. 

மறுநாள் காலை அந்த கோணியைக் கண்ட அண்ணி பொறிந்தாள். "இருக்கிற அடைப்பாசாரம் காணாதுன்னு இதையும் வாரிகிட்டு வந்தாச்சா?" என்றாள்.

ஹாலில் ஒருமூலையில் கம்பளம் விரித்து,அந்தப் பெட்டியைத்திறந்து விக்கிரகங்களை வெளியே எடுத்தபோது கரப்பான் பூச்சிகள் நெளிந்து ஓடின. விக்கிரகங்கள் பச்சைப்பூத்து தகரமாய்த் தோன்றியது. அவற்றின் கைகால் இடுக்குகளில் கரப்புமுட்டைகள் பதிந்து கிடந்தன.

' ஐயோ..ஐயோ' என்று அரற்றிய அண்ணியிடம் மெல்லச் சொன்னான் மனோ.. "கவலைப்படாதீங்க அண்ணி! இவற்றை இங்கே அடைக்கமாட்டேன். என்னோடு எடுத்துப் போய் விடுகிறேன். சரியா?"

மனோ கடைத்தெருவுக்குப் போனான். பூஜைதிரவியங்கள், பூ, பழம், வெற்றிலை, வஸ்திரம் சார்ந்த நியூஸ்டைல் டெய்லர்ஸிலிருந்து வெட்டிக் கழித்த புதுத்துணிகளின் மீதங்கள் என வாங்கிவந்தான். ஐயரிடமும் அபிஷேகம், பூஜைக்கு சொல்லி வந்தான்.

அரப்புத்தூள்,புளி,எலுமிச்சை விபூதி கொண்டு விக்ரகங்களை உள்ளங்கைகள் தோலுரியத் தேய்த்தான். பச்சை நெகிழ்ந்து. பளபளப்பேறியது. பஞ்சலோகத்தின் தெய்வீக்க்கலப்பு துலங்கியது. மதியத்தூக்கம் கலைந்து அம்மாவும்அண்ணியும் கிணற்றடிக்கு வந்தபோதும் அவற்றுக்கு மெருகேற்றியபடி இருந்தான். அவனே தாமிரத்தாலும் செம்பினாலும் வார்த்த சிலையைப்போலே துளசியம்மாவுக்குத் தோன்றியது.தோய்க்கும் கல்லின்மீது ஒவ்வொன்றாய் வைத்த விக்கிரகங்கள் தகதகத்தன. 

"ஆ.. ஆ.. கைப்பட்டா கண்ணாடி தான் ! ஒரே முங்கில் அத்தனை மண்ணையும் எடுக்கணுமா ? கொஞ்சம் கொஞ்சமாக செய்யக்கூடாதோ ? "என்றாள். அடைப்பாசாரம் என்று முன்பு சொன்ன அண்ணியோ வைத்தகண் வாங்காது பார்க்க மட்டும் செய்தாள். 

இரவில் அவனுக்கு ஜுரமடித்ததோ இல்லை வேக்காட்டில் அடைந்து கிடந்த தெய்வங்களின் தொந்தமோ... மனோவுக்கு உடம்பு கதகதவென்றிருந்தது. 
'ஊர் திரும்பியவுடன் சாமியைவைக்க நாலுதட்டு வைத்த அலமாரி ஒன்று செய்யவேண்டும். தினம் ரெண்டுமுழம் பூவுக்கு,பூக்காரியிடம் வாடிக்கை சொல்லி வைக்க வேண்டும். அம்மாவும் என்னோடு சிலநாள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவளும் இந்த விக்கிரகங்கள் போல்அடைந்துதான் கிடக்கிறாளோ? அம்மாவை அனுப்ப அண்ணா ஒத்துக் கொள்வாரா?'

இந்த எண்ணவோட்டம் முடியுமுன்னமே ஒரு குவளை பாலுடன் அம்மா அவன் பக்கத்தில்வந்து அமர்ந்தாள். "அம்மா ! ஒண்ணு சொல்லட்டுமா ?"

"சொல்லேன்... இதைக்குடிச்சுகிட்டே..."

"நீயும் என்னோடு வந்து இரேன்... "

அம்மா சிரித்தாள்.... "வந்துட்டா போச்சு. சரி ....படு. காலை வேகமா எழுந்துடணும். அயிரு வந்துடுவாரு. உள்அலமாரிலே புதுவேட்டி இரண்டு ஜதை இருக்கு . அயிருக்கு கொடுக்கணும். ஞாபகப்படுத்து."


"ஒரு ஜதை கொடுத்தா போதாதோ ?"

"ஒண்ணு உங்கள் பாட்டன் நெனவா.... ஒண்ணு கடலூர் வைத்தியர் நெனவா..."

"சரிம்மா..". திரும்பிப் படுத்த மனோவின் கண்களில் நீர் வழிந்தது. 
'என்ன ஒரு மனசு இவளுக்கு?'

பூஜை முடிந்தது. பழங்கள்,தட்சணை ,வேட்டி வைத்த தாம்பாளத்தை அண்ணனிடம் கொடுத்து அய்யரிடம் தரச் சொன்னான் மனோ. அய்யரின் சந்தோஷம் அவர் குரலில் தெரிந்தது.

"என்னவொரு சாட்சாத்காரம்?! இப்படி சைதன்யம் பொங்கும் விக்ரகங்களை ஆராதிக்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கேள். தினமும் அன்னமும் பருப்பும் ஒரு உத்ரணி நெய் விட்டு மஹாநைவேத்தியம் பண்ணுங்கோ.. நிறைய ஸ்வாமி இருக்கோன்னோ..."

அண்ணி இடைப்புகுந்தாள்.

"அய்யிரே ! வழிவழியாய் வர்ற இந்த சுவாமியெல்லாம் வீட்டுமூத்தவர் கிட்டே தானே இருக்கணும்? என்ன நான் சொல்றது?", மேலும் தொடர்ந்தாள்...." எங்களுக்கென்ன தெரியும் ... பௌர்ணமியோ.. அம்மாவாசையோ நீங்களே வந்து அபிசேகம் பண்ணி வச்சுடறது "

மனோவிற்கு அண்ணியின் கேள்விதந்த திகைப்பு அடங்குமுன் அய்யர் அவள் கூற்றை ஆமோதித்தார்.

"நீங்க சொல்றது ரொம்ப சரி! மூத்தவர் ஆராதிக்கறது தான் சம்பிரதாயம்.. அதுக்கென்ன? நானே வந்து பண்ணி வச்சுடறேன்"

"அதை அம்மாகிட்ட சொல்லுங்க" என்று துளசியம்மாவைக் கைகாட்டினாள்.

மீண்டும் 'சம்பிரதாயம் 'என்று ஆரம்பித்த அய்யரை இடைமறித்து ,
"முறையோ எதுவோ, சாமில்லாம் இங்கேயே இருக்கட்டும். என் பிள்ளைகளுக்குள்ளே எந்தபேதமும் கிடையாது அய்யரே. எல்லா ஸ்வாமியும் செட்டா இங்கயே இருக்கும்"

"எனக்குத் தெரியாதா? உங்கள் பிள்ளைகளை எனக்குத் தெரியாதா? உத்தரவு வாங்கிக்கிறேன் அப்போ..."

மனோ விக்கித்து நின்றான். ஏதும் சொல்லத்தோன்றவில்லை... 'அம்மாவுக்கு என்ன ஆச்சு? தன்னுடைய ஒரே ஆசையையும் கூட புரிந்து கொள்ளாதவளா என்ன? இத்தனை வருஷமாய் மனசில்உருப்போட்டதென்ன ?சாமியையெல்லாம் எடுத்துவர தார்க்கோல் போட்டுக் கொண்டேயிருந்ததென்ன?'

'போகட்டும்... இவனுக்கு அம்பாள், உனக்கு ராமாதிகள்,இவனுக்கு பிள்ளையார்,உனக்கு லிங்கம்னு சொல்லிருந்தாளானா கூட அதுல ஒரு நியாயம் உண்டு. இப்படியா ? அண்ணாவுக்குத்தான் பக்தி, பஜனைன்னு உண்டா..'. மனோவுக்கு மனசு ஆறவே இல்லை.

சாப்பிட உட்கார்ந்தபோது கூட பிரமை பிடித்தது போலத்தான் இருந்தான்.


"இலையைப் பார்த்து சாப்புடுறா"

"சரிண்ணா "

துளசியம்மா மனோவுடன் கொஞ்சநாள் இருந்து வருவதாய் சொன்னபோது 'அதுக்கென்னம்மா ..இருந்துட்டுதான் வாயேன் ' என்றான் மூத்தவன்.

காலை முதல்பஸ்ஸுக்கு டால்மியாபுரம் கிளம்பினார்கள் மனோவும் துளசியம்மாவும் .

கிளம்புமுன் ஏதோ பால்கணக்கு விவரத்தை அண்ணியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் துளசியம்மா.

'கிளம்புறோமண்ணே'

"பேங்க் வேலைக்கு, பெரிய கம்பனிக்கெல்லாம் அப்ளிகேஷன் போடு. அந்த எக்ஸாமுக்கெல்லாம் படி. சாமி பூதமுன்னு திரிஞ்சிகிட்டிருக்காதே என்ன?"

"சரிண்ணா! சாமியையும், பூதத்தையும் நீங்களே பார்த்துகிடுங்க. போயி கடுதாசி போடறேனண்ணா."

அண்ணன் ஒருமுறை புருவம் உயர்த்தி பின்பு சிரித்தார். "சரிம்மா.. வாரக்கடைசியிலே நானு ஒருவாட்டி வரேன் "

"சரிப்பா... டேய் மனோ! கட்டி சுமந்துகிட்டு வந்தியே சாமியையெல்லாம் ....உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வா "


ஒரு நொடி தயக்கத்துக்குப்பின் வேகமாக உள்ளே போனான். 

'அம்பிகே! திரிபுரசுந்தரி ! உன்னைப்பார்க்க அப்பப்ப வருவேன். மகாநிவேத்தியம்னு அய்யர் சொன்னாரே.... அது இங்கே கிடைக்குமோ என்னவோ... என் வசம் தினம்தினம் கிடைக்கும் தாயே.. உனக்கும் எனக்கும் உள்ள தூரம் உன் கவனத்துக்கு நாலெட்டு தானே? வந்து ஏத்துக்கோ' என்றுப் பிரார்த்தித்துக் கொண்டான்.

மனோவின் கண்கள் ஒவ்வொரு விக்கிரகமாய் அள்ளி உள்ளே தக்கவைத்துக் கொண்டது. ஸ்வாமிக்கெல்லாம் அய்யர் திருத்தமாய்த்தான் உடுத்தி, அலங்காரம் செய்து வரிசையாய் அடுக்கியிருக்கிறார். பார்த்துக் கொண்டே வந்த மனோவின் கண்கள் ஒருமுறை சலனித்தது.

எல்லா தெய்வமும் நேரே பார்த்திருக்க, லட்சுமணஸ்வாமி மட்டும் லேசாய் ஒரு பக்கமாக திரும்பியிருந்தார்.

127 comments:

கீதமஞ்சரி சொன்னது…


அன்னிக்கு அண்ணிக்கு கோடு போட்டான் அவன். இன்னிக்கு அண்ணி இவனுக்கு கோடு போட்டுவிட்டாள். தாண்டாமல் போகிறானே… தம்பி.. லட்சுமணசாமிக்கு ஏனாம் அத்தனை முகவாட்டம். முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்கிறாரே…

போகிறது… தெய்வங்கள் சிலைகளாய் இங்கேயே இருக்கட்டும்… பெட்டிக்குள் அடைபட்டு கரப்புமுட்டையைக் கக்கத்தில் அடைகாத்தாலும் சாமி சாமிதான்… அது புரியாத ஆசாமிகளைப் பற்றி நமக்கென்ன கவலை…

இதோ நடமாடும் தெய்வமாய் அம்மா வந்துவிட்டாள் ஆதங்கமுற்ற அவள் இரண்டாம்பிள்ளையின் கரம்பற்றிக்கொண்டு. அவளை அடைத்துவைக்க ஆரால் இயலும்?

அன்றொருநாள் வைத்தியர் வீட்டிலிருந்து விக்கிரகங்களைப் பெற்றுத்தர வந்த அதிசயக் கனவைப்போல, இவனிடத்தில் கொண்டுவர இன்னொரு விநோதக்கனவு விரைவில் வாராதா என்ன?

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதமஞ்சரி !

எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,நம்பிக்கைகள் ,.. இம்மூன்றையும் வண்ணக்கலவையாக்கி,விதியின் தூரிகை வனையும் புரியாத ஓவியம் தான் வாழ்க்கை. சில நாள் கழித்து ஒருமுறை எனக்காக மீண்டும் படித்துப் பாருங்கள். சொல்லவந்ததை சரியாகத்தான் சொன்னேனா என்று சொல்லுங்களேன் !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கூடவே தெய்வம் வரும்போது மற்ற தெய்வங்கள் எதற்கு...?

G.M Balasubramaniam சொன்னது…


காத்திருந்தவன் ( சற்று மாற்றிச் சொல்கிறேன்) சாமிகளை முன்பிருந்தவன் எடுத்துக் கொள்ள........ எனக்கு என்னவோ அந்தத் தாயின் எண்ணம்தான் வருகிறது. சிலைகளுக்கு பாத்தியதைகொண்டாடும்போது உரிமை உள்ளவனிடம் இருப்பதுதானே நியாயம்? எனக்கு ஒரு ஹிந்தி சினிமா நினைவுக்கு வருகிறது. மூத்தவான் தன்னிடம் இருப்பதை எல்லாம் பட்டியலிடும் போது இளையவன் “ என்னிடம் அம்மா இருக்கிறாள்” என்பான். தாயிற் சிறந்த தெய்வமேது. ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு.

ப்ரத்யக்ஷ தெய்வம் அம்மாவே இருக்கும் போது என்ன கவலை இளவலுக்கு....

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி டி.டி

மோகன்ஜி சொன்னது…

GMB சார்,

ஒருவருக்கு அது சாமி, ஒருவருக்கு அது உடமை. நடுவிலே உரிமை, அல்லாடும் தாய்மை... உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைக்கூட மட்டுறுத்தும் உறவு...

சிக்கலைச் சொல்ல வந்தேன்.

மோகன்ஜி சொன்னது…

வே.நா !

வருகைக்குப் வாழ்த்துக்கும் நன்றி .

sury siva சொன்னது…

லட்சுமணஸ்வாமி மட்டும் லேசாய் ஒரு பக்கமாக லட்சுமணஸ்வாமி மட்டும் லேசாய் ஒரு பக்கமாக திரும்பியிருந்தார்.///




இப்படியா ?

மிவாஸ்ணமசுட்ல







திருப்பிக்கட்டுமே !! யார் கவலைப்படப் போறாங்க..!!

மூத்தது மோழை இளையது காளை என்று என்னதான் வசனம் இருந்தாலும்,

எங்கேயும்

இளையவனுக்கு

வாய்ஸ் இருந்ததாக

(அது எதுக்கு பன்மை ??!!)

வாய் இருந்ததாகவே தெரியவில்லை.


மனோ !! நீங்க கவலைப் படாதீங்க..


எங்க ஊட்டுக்கு வாங்க.

எல்லா சாமியிலேயும் ஒவ்வொண்ணு தாரேன்.

நானும்,எனக்கப்பரம் யாருடா இதுக்கெல்லாம்

குளிச்சு விடப்போறாக .,

சோறு தண்ணி காட்டப்போறாங்க அப்படின்னு

கவலைப்பட்டுகினே கீறேன்.


சுதா.

மோகன்ஜி சொன்னது…

முதல்ல கைகொடுங்க சுப்பு தாத்தா.... 'சுதா' ன்னு கையெழுத்தது போட்டதிற்கு நன்றி.

லட்சுமணன் லேசாத்தானே திரும்பியிருந்தார் . முழுசா திருப்பிட்டீங்க...

மனோவை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் !

நீங்க விக்ரஹ ஆராதனைப் பற்றி ஏதும் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்..

நிலாமகள் சொன்னது…

உனக்கும் எனக்கும் உள்ள தூரம் உன் கவனத்துக்கு நாலெட்டு தானே? //

ஆதூரம் ஆதங்கமெல்லாம் ஒரு மடக்கு தண்ணியோட விழுங்கியாச்சு.

கடைசி வரி உங்க எழுத்தின் பெருமை!

கீத மஞ்சரியும் ஜி.எம்.பி. சாரும், நம்ம 'சுதா'வும் கதை உணர்வுப் பந்தாய் தொண்டையடைக்க, முதுகு தடவி ஆசுவாசப் படுத்துகிறார்கள்.

//எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,
நம்பிக்கைகள் ,.. இம்மூன்றையும் வண்ணக்கலவையாக்கி,விதியின் தூரிகை வனையும் புரியாத ஓவியம் தான் வாழ்க்கை// அருமை!!

ஈசனோடாயினும் ஆசை அறுமின்... சொல்வது எளிது...


sury siva சொன்னது…

Sollalaam. According to Brihadh Aaranyakam
Maya sahitha Bhrummam Iswaram.
Maya rahitha Iswaram Bhrummam.

Advaithis conceive of The Omniscience as not only eternal (anaadhi) but equally Nirgunam and Niraakaaram.
In our inability to perceive Bhrummam as nirguna niraakara all pervasive ONE without a second we mortals out of maaya give Him a rupam and gunam .
One may recollect that before any vigraha puja we first do aavahanam do praana pradhishtaa .Then start do all the abhishekams naamavali and shodasa upacharam. Then what do we finally ?
We say Yadhasthaanam pradhishtaapayaami. That means
First we position the omniscient in a place ro be seen to be felt by our five senses of ordinary perception. Do all the upasana.
Finally we give Him a good bye till next time when we start our puja again.
This means that Brimmam acqures a rupam for our limited purposes.
He is everywhere and that includes us.our own aatma that is jeevathma.
So a jeevaathma is no different from Paramaathma.
Even when the jeevathma is not realizing the existence of paramathma in him paramaathma is still there.
Realisation results when maya disappears.
So a person on realisation does not as he need not do vigraha aaradhana.

Setha irungo. Moochu vaangarathu. Oru vaay kaappi sakkarai paadhi mattum podunga thango. Kappi kudichapparam thirumbavum vyaakyaanam thodarren

Su tha

மோகன்ஜி சொன்னது…

நிலா!
உங்கள் ரசனைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி !



அண்மையில் அறிமுகமான மும்பை நண்பர் நேற்று நீண்ட நேரம் அலைபேசியில் பேசினார். வானவில் மனிதனில் பல பதிவுகளை படித்திருந்தார். இந்தக் கதையைப் படித்தபின் அவரும் 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்.. 'என்று தான் சொன்னார். " நீங்க எல்லோருக்குமான எழுத்தாளர் இல்லீங்க மோகன்ஜி" என்றது தான் ரொம்பக் கலவரமாயிருக்கு !

மோகன்ஜி சொன்னது…

உங்களை 'சுதா' என்பதா? 'சுதா செல்லம்' என்பதா? இல்லை 'சுதாக்குட்டி' என்பதா??

இன்னமும் உருவ வழிபாட்டைப் பற்றி எழுதறதா சொல்லியிருக்கீங்க.. விரிவாக விவாதிப்போம். தமிழ்ல டைப்புங்க தலைவரே! தொடர்வோம்..

sury siva சொன்னது…

சொல்லலாமே.
பிருஹத் ஆரண்யக உபனிஷத் பிரஹாரம்,
மாயா சஹித பிரும்மம் ஈச்வரன்.
மாயா ரஹித ஈஸ்வரன் பிரும்மம்.

அண்டத்திலும் அடஙகா என நாம் நினைத்துக்கொண்டு இருக்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் பிரும்மம். அந்த பிரும்மம்
நிர்குணம். நிராகாரம். உருவம், குணங்கள் எதுவுமே இல்லாத மட்டும் இன்றி, இரண்டாவது அது போன்றது என்றுஅத்வைதம் ஒன்று இல்லை என்பதும் ஆகும்.

நிராகாரம், நிர்குணம், அத்விதீயம்.

.







இந்த பிரும்மத்திற்கு துவக்கம் என்றோ முடிவு என்றோ ஒன்றும் இல்லை. அநாதி என்றும் அனந்தம் என்றும் சொல்லலாம்.




இந்த நிர்குண பிரும்மனை உபாசிப்பதற்கு ஒரு வசதியாக வைதீக தர்மம் எனப் பெயரிடப்பட்ட அத்வைதம் அந்த பிரும்மம் ஒன்றே இரண்டல்ல, என்று சொல்கிறது.

இந்த பிரும்மமோ அதில்உருவமற்றது, குணங்கள் என்று சொல்லிவிட்டால், அதை ஆராதிப்பது எங்கனம்?

அதற்காக,

அந்த பிரும்மனை, ஒரு சகுண சாகார வடிவமாக நாம் பிரதிஷ்டை செய்கிறோம். வீடுகளில். உதாரணமாக, மஞ்சள் பொடியை நீரில் குழைத்து உருண்டை செய்து எடுத்து,பிள்ளையாரை ஆவாஹனம் செய்கிறோம். ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, வருணனை ஆவாஹனம் செய்கிறோம். ஒரு தேங்காய் எடுத்து, மாவிலை சொருகி, அம்பாள் விக்ரஹம் ஒன்று வைத்து, அதில் வரலக்ஷ்மி யை ஆவாஹனம் செய்கிறோம்.




செய்தபின்னே, அதற்கான, அலங்காரம், அபிஷேகம், சோடச உபசாரம், நெய்வேத்தியம் எல்லாம் செய்துவிட்டு, கற்பூரமும் காட்டி விட்டு என்ன பிரார்த்திக்கிறோம். ?


என்ன சொல்கிறோம் ?

யதாஷ்டானம் பிரதிஷ்டாபயாமி.

இந்த
எது பகவானுடைய வழக்கமான இடம்?

எல்லா இடத்திலும் பரவி இருப்பது. நிர்குணம். நிராகார
பிரும்மம்,

ஆக, நிர்குண நிராகார பிரும்மனை, ஆராதிப்பதர்காக, சகுணமாகவும் சாகாரமாகவும் ஒரு படமாகவோ அல்லது ஒரு விக்ரஹ மாகவோ, நமது வசதிக்குத் தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றிக்கொள்கிறோம்.

அவனோ அவனாகவே இருக்கிறான். அதில் எதுவும் மாற்றம் இல்லை.






பிரும்மம் ஈஸ்வரனாக மாறுவது ஒரு புரிதல் குறித்தே. தோற்றத்தில், அதாவது நமக்கு எளிதாகப் புரிபடும் தோற்றத்தில். பிரும்மனை நாம் செய்யும் முயற்சி.

பிரும்மம் என்பது பரமாத்மா. அது எல்லாவிடத்திலும் நீக்கம் அற நிறைந்து உள்ளான் என்று கொண்டபின், அவன் நம்மிடத்திலும் இருக்கிறான் என்பது புரிகிறது.

அடுத்து, நம்மிடம் உள்ள ஆத்மா, அதை ஒரு புரிதலுக்காக, ஜீவாத்மா என்று பெயரிட்டால், அந்த ஜீவாத்மாவும் பரமாத்மாவே.

இந்த அறிதல் ஏற்படுகையில், தெளிவு பிறக்கும் நிலையில்,

விக்ரஹ ஆராதனை என்பது தேவை இல்லை தான்.

ஆனால், அந்தத் தெளிவு எப்போ, யாருக்கு கிடைக்கும் என்று தெரியாத நிலையில்,

விக்ரஹ ஆராதனை மனசை ஒருநிலைப்படுத்த,
சித்தத்தை சிவன் பால் செலுத்த,
தேவை தான் சந்தேகம் வேண்டாம்.


மூச்சு முட்டுகிறது.
ஒரு ஸ்ட்ராங் காபி குடித்து விட்டு,
மேலே
ஆடியன்ஸ் இன்னமும் இருந்தா,
பேசுவோம்.

சுப்பு தாத்தா.
நோ. நோ.
சுதா.







.

நிலாமகள் சொன்னது…

பேசுங்க சுதா. சேமித்துக் கொள்கிறோம் மன ஏட்டிலும்.

//நீங்க எல்லோருக்குமான எழுத்தாளர் இல்லீங்க மோகன்ஜி" என்றது தான் ரொம்பக் கலவரமாயிருக்கு !//
:))
அப்பாஜி போல பதிவும் படைப்புகளும் தேர்ந்த வாசகர்களுக்கு என்று நீங்களும் சொல்லலாம் இனி.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சுதா ! அப்படி ஆரம்பிங்க...

From known to the unknown...விவாதிப்போம். பேசபேசத்தான் தெளிவு...

மோகன்ஜி சொன்னது…

நிலா!
அப்பாஜி போல பதிவும் படைப்புகளும் தேர்ந்த வாசகர்களுக்கு என்று நீங்களும் சொல்லலாம் இனி.//

என் தளம் வேற ஆளுங்களுக்குங்க....'எனக்கு நேர்ந்த வாசகர்களுக்கும், மனம் சோர்ந்த வாசகர்களுக்கும்' 🔔😰

கீதமஞ்சரி சொன்னது…

முந்திரிக்கொட்டை மாதிரி முதல் ஆளா வந்து கருத்து சொல்லிட்டு இப்போ பேந்த பேந்த முழிச்சிட்டிருக்கேன். எவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தியெல்லாம் பேசறீங்க...

முதல்முறை வாசித்தபோதே ஒரு விஷயம் கவனத்துக்கு வந்தது. அதாவது விக்கிரகங்கள் அழுக்கும் பிசுக்குமா இருக்கையில் தொடவே அருவருக்கும் மனங்கள் விளக்கித் துடைத்து பளிச்சென ஆனதும் தன்னுடையதென உரிமை கொண்டாட விழைவதைப் போலத்தானோ அம்மாவும்...

மூன்று மைல் தொலைவுக்கு ஜட்காவா என்று திட்டுபவள் இன்று பிள்ளை சொன்னதும் தட்டாமல் வருகிறாள்.. அவனுடைய பேச்சை ஆசையை செயலை அனைத்தையும் அங்கீகரிக்கிறாள்... அவனுக்காக கனவில் காளியை வரவழைக்கிறாள்... எல்லாவற்றுக்கும் மேல் அவள் வீடுதேடிவந்த வீட்டுத்தெய்வங்களை நித்தமும் பூஜிக்கும் கொடுப்பினையைத் துறந்து அவனுடனே செல்கிறாள்...

விளக்கித் துடைத்த விக்கிரகமாய் இப்போது இவனுடைய வாழ்க்கையும் பளிச்சிட ஆரம்பித்திருக்கிறதே... அதுதான் காரணமா? இப்படியெல்லாம் எழுந்தன பல எண்ணங்கள். இறுதியாய் காண்பித்த லட்சுமணசாமியின் கோணல் பார்வையின் கோணத்தை திசைதிருப்பிவிட்டது.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

இல்லை கீதமஞ்சரி ! ஒரு நல்ல புரிதலோடுதான் உங்கள் முதற்கருத்து விவாதத்தை ஆரம்பித்தது.
"அழகான பதிவு, ரைட்டு, அதானே" போன்ற ஆரம்பங்கள்,பலதடவை நான் நல்லதென்று நினைத்த பதிவுகளின் பின்னூட்டங்களின் போக்கையே கவிழ்த்திருக்கின்றன. எனவே உங்கள் முதல் கருத்து உவகை முகிழ்த்த கருத்து. மீண்டும் நன்றி கீதா !

மிக நுணுக்கமாகவே கதையைப் படித்திருக்கிறீர்கள். கதையின் கட்டுமானம்- சில உறவுகள், தனித்தனியாய் அவரவர் அபிலாக்ஷகள், அதையொட்டி எடுக்கும் நிலைகள் என்றவற்றை கொண்டு பின்னியிருக்கிறது. நீங்கள் அம்மாவின் கோணத்தை வாகாக சிக்கலிலிருந்து உருவிவிட்டீர்கள்.. இப்படி மனோவின் கோணத்தைப் பிரித்தீர்கள் எனில் கடைசிவரி காட்சி கொடுக்கும். அண்ணி, வைத்தியர் மனைவி,அந்த அண்ணன் கூட தங்களை இவ்விதம் வெளிப்படுத்தலாம். எல்லா சரடுகளும் இழுக்கப்பட்ட பின், மோவாயைத்தாங்கியவாறு மோகன் எஞ்சி இருப்பான் ஜெயகாந்தனை எண்ணியபடி.....

G.M Balasubramaniam சொன்னது…


AsI as going through the comments I could not help quoting from one of my posts in English which may not be out of place here
/what do you feel about idol worshiping? Particularly no comments! It cannot be discussed.No discussions can be there on subjects where conclusions cannot be reached.But personally even if I do not worship idols I can not take objection to people worshiping. What is worshiping and who is worshiping whom? Simple! The worshiper wants
the liberation of his soul and peace of mind. Who could liberate his soul? Himself he himself. One should worship oneself for salvation.. Absurd it might look but that is how I have understood various teachings.
Every idol in fact is meant to represent oneself and in offering a flower fruit or any form of sacrifice, the symbolism is meant to reveal the fact that the subject and the object are one and the same in the act of worship The idol in reality is to be looked upon as a subtle form of mental equation between the self within and self without.If this worship is understood to be an equation between the two aspects of the self , the seeker and the sought , the subjective and the objective, one can sit in front of the mirror and say ,"thou art that" and ones own image on the mirror can well serve as the necessary idol. But this is too much for us. Let those who worship idols continue and those who do not let them not /BUT alas.! only rituals have taken the roots..!

msuzhi சொன்னது…

பல முறை படித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. சாதாரண டப்பா கதை அசாதாரண அடேங்கப்பா கதையாக மாறி உள்ளேறிய ரகசியம். கடைசி வரியோ? இல்லை அண்ணியா?

மோகன்ஜி சொன்னது…

GMB சார்,
//Let those who worship idols continue and those who do not let them not /BUT alas.! only rituals have taken the roots..!//
உருவ வழிபாடோ, அருவ வழிபாடோ சடங்குகள் இல்லாமல் இருப்பதில்லை அல்லவா?

மோகன்ஜி சொன்னது…

துரை காரு,
// சாதாரண டப்பா கதை அசாதாரண அடேங்கப்பா கதையாக மாறி உள்ளேறிய ரகசியம். கடைசி வரியோ? இல்லை அண்ணியா?//
டப்பா 'டாப்பாகக்' காரணம் உங்களுடைய கலை உள்ளம் தாங்க.
மனசுக்குப் பிடிச்ச மாணவனுடைய பேப்பரைத் திருத்தும் போது, கால் மார்க் அரை மார்க் என்று தேடித்தேடி உயர்த்தும் டீச்சரைப் போல உங்கள் அபிமானம் செய்யும் வேலை அது பாஸ் !

ஸ்ரீராம். சொன்னது…

கெடில நதி, டவுன்ஹால் ரோட், ஜட்கா வண்டி, "தேரு பாக்க வந்திருக்கும்..." புதுப் ப்ளேட்டு! ஊரையும் காலத்தையும் உணர்த்த இந்த வரிகள் போதும்!

மிக அருமை. உணர்வுகளை மிக அருமையாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். பக்திக்கும் பகட்டுக்கும் நடக்கும் போராட்டத்தில் பகட்டு இப்போதைக்கு ஜெயித்திருக்கிறது போல!

ஸ்ரீராம். சொன்னது…

தீவார் என்றொரு ஹிந்திப் படம். வாழ்க்கையில் ரொம்ப அடிபட்ட அம்மாவையும், தம்பியையும் காப்பாற்ற அண்ணன் போகக் கூடாத வழியில் சம்பாதித்து நல்ல நிலைக்குக் கொண்டு வருவான். தம்பி போலிஸ் ஆபீசர் ஆகி விடுவான். அண்ணனை நல்ல வழிக்குத் திரும்ப தம்பியும் அம்மாவும் அறிவுரை சொல்வார்கள். அண்ணன் அம்மாவைத் தன்னுடன் கூப்பிட்டாலும் வரமாட்டாள் அந்தத் தாய். தம்பிக்கும் அண்ணனுக்கும் நடக்கும் வாக்கு வாதத்தில் அண்ணன் "என்னிடம் பங்களா இருக்கு, கார் இருக்கு, ஆள்படை இருக்கு..." என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே வரும்போது தம்பி ஒரு வார்த்தையில் அதற்கு முற்றுப் புள்ளி வைப்பான்.

"என்னிடம் அம்மா இருக்காங்க"

எவ்வளவு நீளமாகச் சொல்ல வேண்டியிருக்கு இல்லை? நீங்கள் சொல்லாமலேயே புரிய வைத்துள்ள காட்சி இது! அருமை.

படைத்தவனேயாயினும் பற்றைத் துற! - நல்ல கருத்து.

ஸ்ரீராம். சொன்னது…

கதையின் நீதியை, அல்லது 'அவனு'க்கான சமாதானத்தை தலைப்பு சொல்லி விடுகிறது இல்லை?

:))))))


தாயின் பேச்சு சாமார்த்தியத்தை ரசிக்கும் மனோவால் அண்ணியின் சாமர்த்தியத்தை சிலாகிக்க முடியவில்லை இல்லை?

அண்ணி பாத்திரம் ஒரு... ஒரு... என்ன சொல்ல!

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்,

நல்லதோர் அலசலுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. அம்மாவும் மனோவுமாய் வீடு நீங்கிய பரிபவம்....

தலைப்பை பற்றிய பார்வை...

அண்ணி,அம்மா... இருவரின் பேச்சு சாதூரியமும் மனோவிடம் ஏற்படுத்தும் உணர்வுகள் பற்றிய உங்கள் கேள்வி...

மும்பை நண்பர் குறிப்பட்ட வாசகரின் அடையாளம் தெரிகிறது..

அப்பாதுரை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அப்பாதுரை சொன்னது…

பக்திக்கும் பகட்டுக்கும் நடக்கும் போராட்டமா? ரெண்டும் ஒண்ணு தானே?

அப்பாதுரை சொன்னது…

//The idol in reality is to be looked upon as a subtle form of mental equation between the self within and self without.

this logic can take us into really deep holes. first the reality in idol, except the material form of stone itself, is non existent. the self or non-self is a figment of imagination or extrapolation of internal fears. even if that is not the case, the earth is filled with idols.. why do we need to find an equation with a specific stone set in a specific dark place? because we cannot seem to find solace in a stone that is a rock, as opposed to a stone that is an idol.

some understand the difference between earth and world.. some don't. depending on where we fit, helps us face the reality. i think.

அப்பாதுரை சொன்னது…

யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமியின் தாத்பர்யம் ஆதியந்தமில்லாததை தற்காலிகமாக நிலைப்படுத்தி விடுதலை செய்வதா அல்லது எதுவும் அதனிடம் என்ற உணர்வை மட்டும் கொள்வதா? சடங்குகளுக்காகத் திரித்த expression?

நானே பிரம்மம் என்ற உணர்வை மட்டுமே உணரப் பழகிக் கொள்ளவேண்டும் என்று சொல்வதாகவே இதைக் கருதுகிறேன். ஸ்தானம் அகத்துள். ஆனால் அதற்காக அண்டங்களைக் காத்து ரட்சிக்கும் பரப்பிரம்ஹம் தனக்குள் என்று உணர்ந்து கொண்டால் அழிவு என்பதும் - there is no பரப்பிரம்ஹம், only இகப் ப்ரம்ஹம், that is self - இதன் தாத்பர்யம்?

அப்பாதுரை சொன்னது…

குட் ஷாட் ஸ்ரீராம்.

கதையை அடேங்கப்பாவாக மாத்துறது அண்ணி தான்.

Geetha Sambasivam சொன்னது…

என்ன சொல்ல? கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டு, மனம் நெகிழ்ந்து கிடக்கிறது. ஆனாலும் என் வரையிலும் லக்ஷ்மணசாமி லேசாய்த் திரும்பி இருந்ததைத் தான் ஏத்துக்க முடியலை. அவர் குனிந்த தலை நிமிராமல் அண்ணன் காட்டிய வழியிலே இல்லையோ செல்வார். அண்ணன் உன்னைத் துறந்தேன் என்றதுமே சரி என சரயூ நதிக்குப் போய் மூழ்கினவராச்சே! இங்கே அண்ணனை மீற எண்ணுவாரா? நிச்சயமா இருக்காது.

Geetha Sambasivam சொன்னது…

பளிச்சிட்ட விக்ரஹங்களைப் பார்த்து மனம் மாறி உரிமை கொண்டாடும் அண்ணி! கடவுளையே நம்பாத அண்ணா! இவர்களிடம் இருக்க அனுமதித்த தாய்! ஏன் அபப்டிச் செய்தாள்? இளைய மகனுக்குத் தான் இருக்கிறோமே, தாய்க்குத் தாயாய், தெய்வத்துக்கு தெய்வமாய் என்பதாலோ?

Geetha Sambasivam சொன்னது…

//பக்திக்கும் பகட்டுக்கும் நடக்கும் போராட்டமா? ரெண்டும் ஒண்ணு தானே?//

இல்லை அப்பாதுரை, நீங்க இப்போது நடக்கும் பக்திக்கூத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறீர்கள் உண்மையான பக்தி இந்தக் கதையின் இரண்டாம் மகனைப் போல எந்நேரமும் வேறு நினைப்பின்றி இறை சிந்தனையிலேயே இருக்கும். ஒரு தவமாக, ஒரு யோகமாக விக்ரஹங்களைத் தங்களிடம் மீட்பது ஒன்றே வாழ்க்கை லட்சியமாகச் செயல்பட்ட இரண்டாம் மகன் கடைசியில் அதை வைத்துப் பராமரிக்கக் கொடுத்து வைக்காமல் போனாலும் எங்கே இருந்தாலும் அவற்றையே நினைச்சுக்கிறானே! அது தான் உண்மையான பக்தி.

Geetha Sambasivam சொன்னது…

இங்கே என்னதான் ஐயர் வந்து பூஜை போட்டு நெய்யிலே செய்த பால் பொங்கல் நிவேதனம் பண்ணினாலும் இரண்டாம் மகனின் மானசிக வழிபாட்டுக்கு ஈடு ஆகுமா? நிச்சயமா இல்லை! அந்த வகையில் விக்ரஹங்களைத் தன்னுடன் இருத்திக் கொண்டதில் அண்ணி தான் ஜெயித்ததாக நினைத்தாலும் உண்மையில் வென்றது தம்பி தான்.

Geetha Sambasivam சொன்னது…

அது சரி, இன்னமுமா கடலூரில் ஜட்கா வண்டி இருக்கு? :))))) இது விஷயத்தின் தீவிரத்தைக் குறைக்க வேண்டிச் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! வம்புக்கு! :)))

Geetha Sambasivam சொன்னது…

கதையின் தலைப்பையே பின்னூட்டங்கள் படிச்சப்புறமாத் தான் பார்த்தேன். அருமையான பொருத்தமான தலைப்பு. உங்கள் ரசிகர் சொல்லி இருப்பது உண்மை தான். என் போன்ற சராசரி வாசகருக்கான எழுத்து இல்லை உங்களுடையது.

sury siva சொன்னது…

i am surprised as why this character should be viewed as a villi yearning fpr riches here the gold silver idols.
Why not we think for a moment that the arrival of the idols and her first instinct to possess them could even be a triggering turning point in her life?
God's ways of showering mercy are bountiful.
He came all the way from p........hi and visited the house of a non believer
Everyone of us when in distress curse Him and shout O God ! Nee enge pone?
But He chooses where He is to be present.
The great poet Kannadasan was an atheist. There came a turning point for him and that moment of truth triggered him to pen Daivathin Kural.
Possibly this anni has a wonderful moment in her life. It starts with a desire to possess this idol
And that desire need not have sprung from a materialistic urge.
Mano amma and all the others could as well be catalysts.
We never know God's ways of doing things.
Su tha

sury siva சொன்னது…

i am surprised as why this character should be viewed as a villi yearning fpr riches here the gold silver idols.
Why not we think for a moment that the arrival of the idols and her first instinct to possess them could even be a triggering turning point in her life?
God's ways of showering mercy are bountiful.
He came all the way from p........hi and visited the house of a non believer
Everyone of us when in distress curse Him and shout O God ! Nee enge pone?
But He chooses where He is to be present.
The great poet Kannadasan was an atheist. There came a turning point for him and that moment of truth triggered him to pen Daivathin Kural.
Possibly this anni has a wonderful moment in her life. It starts with a desire to possess this idol
And that desire need not have sprung from a materialistic urge.
Mano amma and all the others could as well be catalysts.
We never know God's ways of doing things.
Su tha

Geetha Sambasivam சொன்னது…

அண்ணியை நான் வில்லியாகக் கருதவில்லை. முதலில் விக்ரஹங்களைப் பார்த்து அருவருத்தவள் பின்னர் ஏற்றுக் கொண்டாளே என்னும் ஆச்சரியம் மட்டுமே! என்ன தான் சொல்லவேண்டாம் என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த விக்ரஹங்கள் போல் எங்கள் வீட்டிலும் விக்ரஹங்கள். ஆனால் கதை வேறே மாதிரி!

Geetha Sambasivam சொன்னது…

அது சரி, ஜெயகாந்தன் படிக்கும் கதாநாயகனா?

Geetha Sambasivam சொன்னது…

வானவில்லே எப்போதாவது தான் வரும். அதிலே கூடு கட்டிக் கூவித் திரியும் குயில்? குயில் எப்போதும் கூவுவதும் இல்லையே! அதான் அபூர்வமான பதிவுகள். இங்கே இன்னமும் குயில் கூவ ஆரம்பிக்கவில்லை. கொஞ்ச நாட்களாய்ச் செம்போத்தின் கத்தல் கூடக் காணோம்.

msuzhi சொன்னது…

உண்மை சூரி சார். அண்ணி வில்லி இல்லை. Relevant and practical character. செயற்கை கலவாத பாத்திரம். அதனால் தான் சோபிக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்,

//பக்திக்கும் பகட்டுக்கும் நடக்கும் போராட்டமா? ரெண்டும் ஒண்ணு தானே?//

எங்குமே தற்பெருமையும், டாம்பீகமும் நிறைந்து காணப்படும் இவ்வுலகில், பக்தி செலுத்துதலிலும் அதன் தாக்கம் நிறையவே இருக்கிறது தான். ஆனாலும் இரண்டும் ஒன்று தானே என்பது சரியல்ல..

உண்மையில் நிஸ்சலனமான தளரா நம்பிக்கையே பக்தியாகும். தன்னை உணர்ந்து, தன் அஹங்காரத்தை அகற்றி தான்வேறில்லை தன்பரமன்வேறில்லை என தன்னை இழப்பதை பக்தி.

பக்தியின் பரவசத்தில் வெளிப்படுத்தப்படும் வார்த்தைகளையும், நம்பிக்கைகளையும் மமதையின் பேச்சையும் கொள்ளலாகாது.

கண்ணபுரமாலே கடவுளரின் நீஅதிகம்
உன்னிலுமோ நானதிகம்-ஒன்றுகேள். என்றான் பக்தியில் முதிர்ந்த பாவலர் ஒருவன்.
சொன்னது செருக்கினாலா என்ன? தந்தையின் தோள்மேல் அமர்ந்து உன்னைவிட நான் உயரம் எனும் குழந்தையின் மொழியல்லவா?

மாறாக,நல்ல பக்தி பகட்டை ஒழித்து எளிமையை ஏற்படுத்தும். ஆயிரமாய் சான்றுகள் உள்ளனவே!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,

//The idol in reality is to be looked upon as a subtle form of mental equation between the self within and self without.//

இங்கு நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி, மேற்கண்ட GMB அவர்களின் கருத்தை சார்ந்து. இதற்கு அவர் பதிலளிப்பது முறை. அவர் பதிலுக்குப்பின்னர் விவாதிக்கலாம்

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,
//யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி//
உள்ளத்திலும் இருக்கும் இறைவனே அண்டசராசரமெங்கும் பரந்து நிற்கிறார்.
விக்கிரஹ பூஜை தொடங்குமுன் ஆத்மபூஜை என்று தனக்குத்தானே, அதாவது தன்னுள் உறையும் ஸர்வாத்மனுக்கு உபசாரம் செய்வது சம்பிரதாயம்.

பின்னர் மந்திரபூர்வமாய் அந்த தெய்வத்தை விக்கிரஹத்தில் ஆவாஹனம் செய்து, ப்ராணப்பிரதிஷ்டையென்று அந்த விக்கிரகத்திற்கு அங்கங்களையும் ஜீவனையும் தருவித்து,ஷோடசோபசாரம் மற்றும் அபிஷேகங்கள் செய்து,தூபதீபம் காட்டி, நைவேத்தியம் மற்றும் உபசாரங்களால் ஆராதித்து, பிரார்த்தனைகளுக்குப்பின் அதனுடைய இடத்திலேயே மீண்டும் சேர்த்து விடுவது... அதாவது இறைவனை உறைவிடமான உள்ளத்திலேயே மீண்டும் சேர்ப்பது.

இதில் இறைவனின் இருப்பை நினைவுறுத்திக் கொள்ளும் ஒரு பயன்உண்டு. முனைப்புடன் செய்யப்படும் பூஜையில் மனம் ஒன்றி, தியானத்தில் நோயும் நிலை உருவாகிறது. நாட்பட நாட்பட விக்கிரகமாய் ஆராதனைக்கான அவசியம் இல்லாது போகிறது. விக்கிரகத்தைத்தாண்டி அவன் ஆன்மீகம் தொடரும்.

எல்லாம் வாழ்வில் ஒரு பாவனையே! அவ்வளவு ஏன்? இந்த வாழ்க்கை கூட பாவனைதானே?
இலக்கியத்தில் 'சிற்றில் சிதையேல்' என்று மணல்வீடு கட்டிவிளையாடும் சிறுமிகள் கூற்றாய் ஒரு படைப்புமுறை உண்டு.

சிறுமிகள் கட்டும் மணல்வீட்டின் பேரில் உயிரையே வைத்திருப்பார்கள். அதை அழித்து விடுவார்களோ எனும் கலவரத்தின் கூற்றாக அமையும் பாடல்கள். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் ஒன்பது பாடல்கள் இந்தவகைமையில் பாடப்பெற்றன.

இன்று முற்றும் முதுகு நோவ

இருந்திழைத்த இச்சிற்றிலை*

நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும்

ஆர்வந் தன்னைத் தணிகிடாய்*

அன்றுபாலக னாகி ஆலிலை

மேல்துயின்ற வெம் ஆதியாய்*

என்று முன்றனக் கெங்கள்மேல்

இரக்கம் எழாததெம் பாவமே.

கண்ணா! முதுகு நோவெடுக்க உழைத்து கட்டியிருக்கிறோம் இந்தச் சிறுமணல்வீட்டை.
தேவையென்றால் நன்றாகப் பார்த்துக் கொள். நீ பார்த்தால்தான் எங்கள் ஆர்வம் தணியுமல்லவா! நாங்கள் புரிந்துவிட்ட பாவம்... என்ன செய்வது? உனக்கு இரக்ம் என்பது சிறிதேனும் உண்டா? உலகங்களை அள்ளி உண்டபின்னர், ஏதும் அறியாத பாலகன் போலே ஆலிலை மேல் கண்வளர்ந்தவன் அல்லவா நீ?!


பெய்யு மாமுகில் போல்வண்ணா! உன்றன்

பேச்சும் செய்கையும் எங்களை

மைய லேற்றி மயக்க வுன்முகம்

மாயமந்திரந் தான்கொலோ*

நொய்யர் பிள்ளைக ளென்பதற் குன்னை

நோவநாங்கள் உரைக்கிலோம்*

செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள்

சிற்றில் வந்து சிதையேலே.

மழைமேகமொத்த நிறத்தினனே!உன் மயக்கு மொழியும், செயல்களும் எங்களைத் பித்தேற்றி இருக்கின்றன. உன் அழகு மதிவதனம் மாயமந்திரம் அல்லவா செய்கிறது.? சிவந்த தாமரை போலும் கண்கள் உடையவனே! வலிமையற்ற நாங்களோ நீ நோகும்படியாக ஏதும் சொல்ல மாட்டோம்.. நீ மட்டும் வந்து எங்கள் சிறிய மணல்வீட்டை சிதைத்து விடாதே!

இந்த மனித வாழ்க்கை ஒரு மணல்வீடு போன்றது. சாஸ்வதமாய் இருக்கப்போகிறது என்றெண்ணி ஆடுகிறோம். மணல்வீட்டின்மீது பற்று இறுகியபடியே இருக்கிறது. இறைவனின் கருணை கூட இந்தக் கூட்டை கலைத்து விடுமோ என்ற மனித அச்சத்தை பார்த்து சிரிக்கும் இப்பாடல்கள்.

விரிவாய் பிரிதொரு சமயம் நாச்சியார் திருமொழி பற்றி விவாதிப்போம். உங்கள் கேள்விவியிலிருந்து விலகி வந்து விட்டேனோ?!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்,

//கதையை அடேங்கப்பாவாக மாத்துறது அண்ணி தான்//

ஶ்ரீராம் சொன்ன 'ஒரு.. ஒரு...' வுக்கான விளக்கம் சொல்லுவீங்கன்னு பார்த்தேன் ..

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,

உங்களை இந்தக் கதை கவர்ந்திருப்பது மகிழ்ச்சி.

திரும்பியிருப்பவன் மனோவல்லவா?

மனோவின் சுணக்கம் சம்பவத்தின் உடனடி ரியாக்‌ஷன் என்றும்,நாளானால் சரியாகும் என்று நம்புவோம்.

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,

//தாய் ஏன் அப்படிச் செய்தாள்?//

மனித மனங்கள் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் அந்தந்த நேரத்து தேவைகள்,நியாயங்கள் பொறுத்தல்லவா? தத்தம் வாழ்க்கையில் மேற்கொள்ளும்

அறக்கூறுகளே செலுத்துகின்றன.

////பக்திக்கும் பகட்டுக்கும் நடக்கும் போராட்டமா? ரெண்டும் ஒண்ணு தானே?//

அப்பாதுரைக்கான உங்கள் பதில் பொறுப்பானது. வழிமொழிகிறேன்.



//அண்ணி தான் ஜெயித்ததாக நினைத்தாலும் உண்மையில் வென்றது தம்பி தான்.// அவரவர் வெற்றி அவரவர் நோக்கில் தானே?

மோகன்ஜி சொன்னது…

//அது சரி, இன்னமுமா கடலூரில் ஜட்கா வண்டி இருக்கு? :)))))//

"தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே! உன்னைத்திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே" எனும் புதுப்பிளேட்டு எங்கோ அலறுகிறது அவர்கள் ஜட்காவில் வரும்போது. அந்த புதுப் பிளேட் 'இருதுருவம்' எனும் சிவாஜி படம்.. வந்த ஆண்டு 1971.கடலூரில் அப்போது ஜட்கா இருந்தது. புல் வாசனையுடன் சண்டையின் சப்தஸ்ருதியோடு அதில் போவது ஒரு சுகம். நான் எப்போதும் முன்னே வண்டிக்காரன் அருகிலேதான் அமர்வேன். ஹும்... ஒரு நல்ல ஜட்காவண்டி ஓட்டுபவராக வந்திருக்க வேண்டியவன். பிளாக் எழுதிக் கொண்டு இருக்கிறேன்!

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,

//உங்கள் ரசிகர் சொல்லி இருப்பது உண்மை தான். என் போன்ற சராசரி வாசகருக்கான எழுத்து இல்லை உங்களுடையது//

தன்னடக்கம் ரொம்பத்தான்... எவ்வளவு வலைப்பூக்களில் எழுதுகிறீர்கள்? நான் எளிய கதைசொல்லி. அவ்வளவு தான்

மோகன்ஜி சொன்னது…

எங்கள் ப்ரிய சுதா,

உங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம். அண்ணியை ஆஆட்கொள்ளவேண்டி இறைவனின் லீலை இது என்ற கோணம் நான் யோசியாதது... அருமை. மிக்க நன்றி சார் !

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்,

நான் கூட அண்ணி குறித்து சுதா நோக்கில் யோசிக்கவில்லை.. நல்ல கோணமது.



//வானவில்லே எப்போதாவது தான் வரும். அதிலே கூடு கட்டிக் கூவித் திரியும் குயில்? குயில் எப்போதும் கூவுவதும் இல்லையே! அதான் அபூர்வமான பதிவுகள்//

தோன்றும் ஒவ்வொருமுறையும் வண்ணவில்லாய் கண்நிறைந்து மகிழ்ச்சி தர வேண்டுமென்றே ஆசை.. கூவுந்தொறும் யார் கண்ணீரையாவது நிறுத்தி புன்னகை தருவிப்பதே இந்தக் குயிலின் அவா...

மோகன்ஜி சொன்னது…

துரை சார்,

// அண்ணி வில்லி இல்லை. Relevant and practical character. செயற்கை கலவாத பாத்திரம். அதனால் தான் சோபிக்கிறது. //

அழகாகச்சொன்னீர்கள். அண்ணியை இப்போது எனக்கும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.. நன்றிங்க..

மோகன்ஜி சொன்னது…

அன்பின் சு.தா,

நீங்கள் குறிப்பிட்டதில் ஒரு சின்ன விவரத் திருத்தல்.......

கண்ணதாசன் எழுதியது 'அர்த்தமுள்ள இந்துமதம்'.

'தெய்வத்தின் குரலை'த் தொகுத்தவர் ரா.கணபதி..

sury siva சொன்னது…

Amnesia at 10 in the scale of 1 is to 10.
I had only in my mind arthamulla indhu matham written by Kannadasan and Daivathin Kural edited by Ganapathy sir.
I have read both in detail and in depth.Every single page deserves a Bookers prize.
Athu irukkattum.
Nischalam paththi neenga ezhuthiyathai padichen.
Adutha janmam appadinnu onnu irundha
Mohanji gurukulathile
Muppathu varusham
Sishyana irukka
Bhagawan anugraham pannanum.
Aathule kalambare
Coffee undo nnu ninaikkiren.
S tha

msuzhi சொன்னது…

அதனால் என்ன மோகன்ஜி. பதிலுக்கு தோதா கேள்வியை நானே மாத்திப் படிச்சுக்குறேன். ஒண்ணு, உங்க பதில் சுவாரசியமா இருக்கு. ரெண்டு,பாண்டே பதில்கள் எனக்குப் பழகிப் போன விஷயம்.

Geetha Sambasivam சொன்னது…

//அந்த புதுப் பிளேட் 'இருதுருவம்' எனும் சிவாஜி படம்.. வந்த ஆண்டு 1971.கடலூரில் அப்போது ஜட்கா இருந்தது. புல் வாசனையுடன் சண்டையின் சப்தஸ்ருதியோடு அதில் போவது ஒரு சுகம். //

ஹிஹிஹி, சினிமா விஷயத்திலேயே நான் ரொம்ப வீக். என்னுடைய பலவீனம் அதான். அதிலும் ஜிவாஜி படம்? வாய்ப்பே இல்லை! :)

1971 ஆம் ஆண்டு சென்னையிலும் ஜட்கா வண்டி இருந்திருக்கு. ஆகையால் நீங்க சொல்லி இருப்பது சரியே! :)))

Geetha Sambasivam சொன்னது…

//பாண்டே பதில்கள் எனக்குப் பழகிப் போன விஷயம்.//

அப்பாதுரை! கலக்கல்! ரசிச்சேன். :))))))

sury siva சொன்னது…

நீங்கள் சுட்டிக்காட்டியபின்பு தான் தவறு பளிச் ...பளிச்.
என்ன அவ்வளவு அவசரம் !! டைப் அடித்தபின் ஒரு தரம் படித்துப் பார்க்கவேண்டாமோ என்று சத்தமாக சொன்னேன்.

யாரை திட்டுகிறீர்கள் என்றாள் இல்லத்தரசி.
என்னைத் தான் என்றேன்.

தகவலை முழுமையாகச் சொன்னபின்,
எதையுமே ஒரு தடவைக்கு இரண்டு தடவையாவது பார்க்கணும் அப்படின்னு
எத்தனை தரம் சொல்லி இருக்கேன். என்றாள்.

அந்த அண்ணி ஒண்ணும் எனக்குக் கெட்டவளா தோணல்ல.. என்றாள் தொடர்ந்து...

ஏன் அப்படி சொல்றே என்று கேட்டேன்.

"ஆத்துக்கு ஒரு விக்ரஹம் வரது. அதுவும் தான் கேட்காமலே அதுக்கு அபிஷேகம் எல்லாம் நடக்கிறது.
பூஜை புனஸ்காரம் எல்லாம் நடக்கிறது என்றால்,
அந்த வீட்டு எஜமானிக்கு ஒரு கொடுப்பினை என்று தானே அர்த்தம்.

இத்தனை வருசமா, இப்பைக்குன்னு ஏன் அந்த மனோ அம்மாவைக்கூட்டிக்கிட்டு
பஸ்ஸுலேயும், ஜட்காவிலேயும் போகணும் !!

அத எடுத்துண்டு எதுக்கு அண்ணன் வீட்டுக்கு போவணும்.? அவருக்குத்தான் பூஜை செய்யணும்
அப்படின்னு கொடுப்பினை இருந்தால், அவரு தன்னோட வீட்டுக்குத்தானே நேரே போயிருக்கணும்...

அவரு அண்ணா மனோ கிட்டே அந்த விக்ரஹம் எல்லாம் தன் கிட்டே கொண்டுவந்து கொடுத்துடு அப்படின்னா சொன்னாக...
இல்லயே....

அதுனாலே,,,, இவங்க எல்லாமே ஒரு நாடகத்துலே பாத்திரங்கள் அவ்வ்வளவு தான்.

அண்ணாமலையான் நினைச்சான்.
அண்ணி கிட்டே வந்து நின்னான்.
உண்ணாமுலையோட..."

வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டே நின்றேன்.

சு தா
meenaachchi paatti
solpadi.

அப்பாதுரை சொன்னது…

டைப் அடிச்சதும் எதுக்கு ஒரு தரம் படிச்சுப் பார்க்கணும்? படிக்கிறவங்க தலைவிதினு விட்டுட்டுப் போக வேண்டாமோ? என்னையே எடுத்துக்குங்க..

மோகன்ஜி சொன்னது…

சு.தா,
என் குருகுலத்தில் 30 வருஷமா? குருகுலத்துல ஆச்சார்யாரா வேணும்னா இருங்க.. காபி என்ன...ப்ரேக் பாஸ்ட் கூட ரெடியா இருக்கும்.

மோகன்ஜி சொன்னது…

சாரிங்க அப்பாதுரை,

ஒரு வேகத்துல எழுதிட்டோமேன்னு கடைசில யோசிச்சேன். அதான் ஒத்துகிட்டேன்ல... பாண்டேன்னுட்டீங்களே? நீங்க அர்னாப் கோஸ்வாமி மாதிரி இல்லே.. எத்தன பாண்டேவைப் பாத்திருப்பீங்க?

உங்க காமெண்டை மிக ரசித்தேன்

மோகன்ஜி சொன்னது…

கீதா சந்தானம் மேடம்,

இரு துருவம் சினிமா ஒரு இந்தி படத்தை தமிழில் எடுத்தது. ஹோலி விளையாடுவாங்க... பத்மினி,சிவாஜி நடித்தது. படம் சுமாராத்தான் போச்சு. 'தேருபாக்க' பாட்டு நல்லா இருக்கும். பத்மினி கல்யாணத்துக்கப்புறம் நடிச்ச சினிமான்னு நினைவு. சினிமால நீங்க வீக்கா? ' சீரியல்'ல மட்டும் தான் ஸ்ட்ராங்காக்கும்....

மோகன்ஜி சொன்னது…

மேடம்,

பாண்டே மேட்டர் அப்பாதுரை பிராண்ட் நக்கல்.... இனிமே அந்தஆளைப் பார்த்தா துரை சாரை நினைச்சத சிரிச்சுக்குவேன்

மோகன்ஜி சொன்னது…

சு.தா,
கற்பூரக் கட்டி மாதிரி மாமி... வெட்டும்புலி தீப்பெட்டி நீங்க... அதான் ஜெகஜ்ஜோதியா இருக்கு உங்க எழுத்து. நீங்க எழுதிட்டு திரும்ப அதைப் படிச்சாலென்ன, நாங்க படிச்சுட்டு சொன்னாலென்ன... நாமெல்லாம் ஒரே குடும்பம் தானே?

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்,

//படிக்கிறவங்க தலைவிதினு விட்டுட்டுப் போக வேண்டாமோ? என்னையே எடுத்துக்குங்க.. //

இன்று நான் எழுதியவற்றை பார்த்ததாய் நினைத்துதான் பதிவிட்டேன்.. ஐபாடில் தமிழுரு முந்திரிக்காய் கொட்டைபோல் தரும் சஜஷன்கள் சில வந்துவிட்டன.. நீங்க என்னைய சொல்றாமாதிரியே ஒரு பீலிங்கு....

Geetha Sambasivam சொன்னது…

//கீதா சந்தானம் மேடம்,//

இதுக்குப் பின்னூட்டம் கொடுத்திருந்தேனே, போனதாய்த் தெரியலை! :( நான் கீதா சாம்பசிவம். கீதா சந்தானம் இல்லை. அவங்க வேறே நான் வேறே. கீதா சுதர்சனம்னு கூட இருக்காங்க. ஒரே பெயரா குழப்பம் வருது போலிருக்கு! :))))

Geetha Sambasivam சொன்னது…

அப்புறமா சு.தா.வின் மாமிக்குத் தோன்றியது எனக்கும் தோன்றியது. ஹிஹிஹி க்ரேட் விமென் திங்க் அலைக்! மனோ ஏன் அவன் வீட்டுக்குப் போகாமல் அண்ணன் வீட்டுக்கு வரணும்? இது கடவுளின் விருப்பம் என்றே எடுத்துக்கலாம்னு நினைச்சேன். அதான் போல அண்ணியை என்னால் வில்லியாகவே பார்க்க முடியலை. யார் கண்டது? இந்த விக்ரஹங்கள் வந்த நேரம் நாத்திகவாதியான அண்ணன் கூட ஆன்மிகவாதியாக மாறலாம். அதற்கான ஆரம்பமாகக் கூட இந்த விக்ரஹங்கள் வருகை அமையலாம். :)))

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,

ஸாரி ! இதுக்கு முன்னாடியே உங்களை கீதா சந்தானம்னு கூப்பிட்டு பல்பு வாங்கியிருக்கேன். முந்தில்லாம் அவங்க அடிக்கடி வானவில்லுக்கு வருவாங்க போல..


நாட்டில இந்த 'கீதா'ங்க தொல்லை தாங்கலப்பா.. கீதா சந்தானம்,கீதா சாம்பசிவம்,கீதா சுதர்சனம், கீத மஞ்சரின்னு எவ்ளோ கீதா? உங்களை வேணும்னா " திரிபுரசுந்தரி 'ன்னு கூப்டுக்கவா?!?

sury siva சொன்னது…

//இந்த விக்ரஹங்கள் வந்த நேரம் நாத்திகவாதியான அண்ணன் கூட ஆன்மிகவாதியாக மாறலாம்//

பலே !!
எது எப்ப அப்படி டர்ன் ஆகும் அப்படின்னு
யாருமே சொல்ல முடியாது இல்லையா..மாமி..


முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ

அப்படின்னு யார் சொன்னாக...
தேவாரமா !! திருவாசகமா...

எதுலே ....ஞாபகம் வல்லையே..

ஆனா, இங்கன பாருங்க..
அண்ணாமலையான் நினைச்சான்.
அண்ணி வூட்டுக்கு வந்துட்டான்.

ஆனாலும் இது லோகல்.
பாரினுக்கு அமெரிக்காவுக்கு எல்லாம்
லுப்தான்சா எமிரேட்ஸ் ப்ளைட் புடிச்சு
போவானா அப்படின்னு தெரியல்லையே...

சர்வத்ரம் ஈஸ்வர சங்கல்பம்.

சு தா.

மோகன்ஜி சொன்னது…

மீனாட்சி சுதா மாமி கருத்து நல்லாருக்கு.

//ஆனா மனோ நேரா ஏன் தன்வீட்டுக்கு போகல்லை??//

இப்ப நாலு மாசமாத்தானே மனோ வேலைக்குப் போய்கிட்டு வேற ஊரில் இருக்கான்?
அம்மா எதிர்பாராமத் தானே கடலூர் டிரிப்புக்கு ஒத்துக்கறாங்க?
அம்மா தன்வீட்டுக்குத் தானே திரும்ப வருவாங்க?
திரும்ப வந்தப்புறம் தானே என்கூட வறியாம்மான்னு மனோ கேட்குறான் ?
ஹய்யோ... ஹய்ய்யோ...

மோகன்ஜி சொன்னது…

சு்தா !

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்லெல்லாம் புகுந்து விளையாடுறீங்க சார்..

அந்நிலையே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத்தனிக் கன்றும் மந்திரியும் உடன்எழலும்
இன்னபரி சானான்என் றறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்நின்றால் முடியாத பொருளுளதோ?

கலக்குங்க...

அப்பாதுரை சொன்னது…

////இந்த விக்ரஹங்கள் வந்த நேரம் நாத்திகவாதியான அண்ணன் கூட ஆன்மிகவாதியாக மாறலாம்

இந்த ஆத்திகர்கள் தொல்லை தாங்கமுடியலப்பா. ஆன்மிகமும் ஆத்திகமும் ஒண்ணுனு நைசா புகுந்து squat பண்றாங்களே? நாத்திகத்தில் தான் தெளிவான ஆன்மீகம் உண்டுனு சொன்னா கேட்கவா போறாங்க?

அப்பாதுரை சொன்னது…

//புடிச்சு
போவானா அப்படின்னு தெரியல்லையே...

ஹிஹி..சூரி சார்.

அப்பாதுரை சொன்னது…

அவுரு ஏன் ப்ளைட் புடிச்சு போவணும்? ஈஸ்வர சங்கல்பம்னுறப்ப?

Geetha Sambasivam சொன்னது…

//இந்த ஆத்திகர்கள் தொல்லை தாங்கமுடியலப்பா. //
ஆத்திகம் கூட இல்லை வெறும் ஆரம்பக் கட்ட பக்தி தான் அப்பாதுரை! :)

//ஆன்மிகமும் ஆத்திகமும் ஒண்ணுனு நைசா புகுந்து squat பண்றாங்களே?//

இதை நான் சொன்னதுக்கு பதில் கீழே நீங்களே சொல்லி இருக்கீங்களே!


// நாத்திகத்தில் தான் தெளிவான ஆன்மீகம் உண்டுனு சொன்னா கேட்கவா போறாங்க?//

இதான் உண்மை அதான் அண்ணன்காரர் ஆன்மிகவாதியாகலாம்னு சொன்னேன் கவனிக்கவும் ஆத்திகவாதி இல்லை. :)

அப்பாதுரை சொன்னது…

பாண்டே குழப்பமோ?

கோஸ்வாமி யாரு? டிவியிலே காட்டுக்கூச்சல் போடும் காட்டுமிராண்டி கசினா? என்னை அப்படியா நினைக்கத் தோணுது? மே மாசம் ஹைதரா வந்து ஒரு கோஸ்வாமி பண்றேனா இல்லையா பாருங்க.

நீங்க நினைச்ச பாண்டே யாருனு தெரியலியே?

என்னடா இது, ஒரே பாண்டேவா போயிடுச்சே?

அப்பாதுரை சொன்னது…

பாண்டே பதில்கள் என்பது சர்தார்ஜி ஜோக்ஸ் மாதிரி. நிரந்தரம்.
இப்பல்லாம் கமல் பதில்கள்னும் அவதாரம் எடுத்துட்டு வருது.

உதாரணமாக:

கே: இன்னிக்கு என்ன கிழமை பாண்டே?
பா ப: நேத்து ஞாயித்துக்கிழமை, முந்தா நாள் சனிக்கிழமை..

--------------

கே: உங்களுக்கு என்ன வயசு ஆவுது பாண்டே?
பா ப: நான் பிறந்தது ஒரு புதன் கிழமைனு சொல்வாங்க அம்மா. என்னைப் பெத்தப்ப எங்கம்மாவுக்கு பதினேழு வயசு தான் தெரியுமோ? என் பெண்ணுக்குப் பாருங்க இருபத்தொன்பது ஆகுது, இன்னும் கல்யாணம் செஞ்சுக்க மாட்றா.

--------------

கே: வெங்காயம் சாப்பிடுவீங்களா பாண்டே?

பா ப: எனக்கு வெள்ளரிக்காய் சாலட் தான் பிடிக்கும்.

----------------

பதிலுலகில் பாண்டேயின் வழி தனி வழி.

sury siva சொன்னது…

Ivaraiye may maasam varappannitta enna appadinnu avar ninaichu iruppaaro?!!!

Su tha

அப்பாதுரை சொன்னது…

அப்படிப் போடுங்க சூரி சார். நினைச்சேன். இந்த வகை தர்க்கத்துக்கு ஒரு பெயர் உண்டு.. சட்னு ஞாபகம் வரமாட்டேங்குது.

மோகன்ஜி சொன்னது…

"ஆத்திகம்/ ஆன்மீகம்" கீதா சாம்பசிவம் தான் பவுண்டரியா அடிக்கிறங்களே.. ஒண்ணு செய்வோம்.... மே மாசம் அப்பாஜி ஹைதராபாத் வரும்போது, கீதா மேடம் தம்பதிகள் மற்றும் சுதா பேமிலியும் என் விருந்தினர்களாய் வாங்க!

விவாதித்து விவாதித்து, நடுநடுவே காபி,டீ, பலகாரம்,சாப்பாடு ஏன ஜமாய்க்கலாம். ஒரு நாலுநாள் விவாதமுடிவில் அப்பாதுரை ஜெயித்தால் வாழ்நாள் முழுதும் திருமண் அங்கமெங்கும் இட்டுக் கொள்வாரென்றும், தோற்றால் விபூதிப் பட்டை இட்டுக்கொண்டு முப்பொழுதும் காட்சிதர வேண்டும் என்றும் பந்தயம் கட்டலாம். என்ன சொல்றீங்க??

பி.கு.:
( பந்தயம் விளையாட்டாக சொன்னேன் என்றாலும், என் அழைப்பு நிஜம்)

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,

மே மாசம் வர்றதா நெசமாத்தான் சொல்லுறீங்களா ராசா ?
ரொம்ப சந்தோஷம்... வாங்க... வாங்க...

நான் இந்த வாரம் தாய்லாந்து ஐந்துநாள் பயணமாய் செல்கிறேன். திரும்பும் போது மும்பையில் மே 10 தேதி வரை இருந்துவிட்டு ஹைதர் வருகிறேன். உங்கள் பயணத்திட்டத்தை ஏற்றாற்போல் அமைத்தும் கொள்ளவும்.

மீண்டும் வருக வருக என இரு கரம் நீட்டி வரவேற்கும் ...

மோகன்ஜி

மோகன்ஜி சொன்னது…

சாரி !

பாண்டே பெயர் குழப்பமே...

நான் நினைத்தது தந்தி டி.வியில் கலக்கின்றன கொண்டிருக்கும் நேர்முகங்கள் காண்பவர் பற்றி..

உங்கள் பாண்டே நகைச்சுவை சூப்பர். ( கொஞ்சம் என்னை மாதிரித்தான் பேசறாரோ?)

sury siva சொன்னது…

//அப்பாதுரை ஜெயித்தால் வாழ்நாள் முழுதும் திருமண் அங்கமெங்கும் இட்டுக் கொள்வாரென்றும், தோற்றால் விபூதிப் பட்டை இட்டுக்கொண்டு முப்பொழுதும் காட்சிதர வேண்டும் என்றும் பந்தயம் கட்டலாம். என்ன சொல்றீங்க??//




நல்ல வேளையா போச்சு.

ஒரு வேளை சார் தோத்துட்டா கட்டை விரல் வேணும்னு நீங்க கேட்பீங்களோ அப்படின்னு பயந்தே போயிட்டேன்.

அது சரி.

திருமண் இட்டுக்கணும் அப்படின்னா,
வடகலை திருமண்ணா ,
தென்கலையா ?

சாருக்கு தென்கலை நாமம் தான் ஸ்வாபிகம் ஆக இருக்கும்.
anyway,
பெருமாளை ஏளப்பண்ணீட்டேள்.

ஜமாய்ங்கோ.

சு தா.

அப்பாதுரை சொன்னது…

ஜெயிச்சாலும் தோற்றாலும் பட்டை அடடிக்கிற பந்தயம்னா சொல்லுங்க.

அப்பாதுரை சொன்னது…

ஒண்ணு செய்யுங்க.. மும்பையிலந்து அப்டியே நேரா சென்னை வந்து அங்கந்து ஹைதரா போயிருங்க.. சென்னைல பலரை சந்திச்சாப்புலயும் இருக்கும்.. சிவகுமாரன் ஊர்ல இருந்தா அவரையும் இஸ்துக்கலாம்.

மோகன்ஜி சொன்னது…

சுதா,
நீங்க அப்பாதுரை சாரைப் பார்த்ததில்லையே?
அவருக்கு எந்த அலங்காரமும் பொருத்தமாயிருக்கும் .
சுந்தர புருஷனாக்கும்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி,
பட்டை.. யூ மீன் 'கடா மார்க்'?

மோகன்ஜி சொன்னது…

மும்பைல இருந்து சென்னை நான் வரவா ??
நீங்க சென்னைக்கு வர்றீங்களா ?
அருட்கவியையும் இழுத்துக்கலாம்கிறீங்க...
'உம்மாச்சி' டீமை ஒருங்கிணைக்கிறீர்களோ?

சொல்லுங்க முதலாளி சொல்லுங்க....

sury siva சொன்னது…

//'உம்மாச்சி' டீமை ஒருங்கிணைக்கிறீர்களோ?//
ஆஹா!!
அந்த த்வாபர யுகத்துலே கோவர்த்தன கிரிதாரியாகப்பட்ட
கிருஷ்ணன், எல்லா கோப கோபிகையருடன் அந்த மலையைத்
தூக்கிட்டு எல்லரோரையும் மழைலேந்து காப்பாத்தினாரே !!

அது போல, இன்னிக்கு,அப்பாதுரை சார் அதே பரமாத்மா அவதாரமா
இங்கன சென்னைக்கு வந்து ;ஆத்திக, ஆன்மீக, நாத்திக, மக்களை எல்லாம் தன்னோட குடைக்கும் கொற்றத்துக்கும் கீழ் கொண்டு வந்து
பட்டையை கிளப்போறாரா !!

பலே !!

என்னிக்கு அப்படின்னு தெரிஞ்சா,
ஸ்ரீரங்கத்துலேந்து வேத வித்துக்கள் பலரை கூட்டி வந்து
\சாஸ்திர சம்பிரதாயமா,
பிரபந்தம் பாடி, வேத ஸ்ருதிகளுடன்
பூர்ண கும்ப மரியாதை செய்யறதுக்கு ஹேதுவா இருக்கும்.

ஆப்பிள் பச்சடி, பருப்பு கோசுமல்லி, அக்கார வடிசல், க்ஷீரான்னம், புளியோதரை, காரட் பீன்ஸ் போரியல், ஆம வடை
, ஜாங்கிரி, , பொங்கல்,பொங்கல்,அவியல், ததியோன்னம், ஒரு ஐஸ் கிரீம்,
மெனு சூட் ஆகுமோ / வுட் லேன்ட் லே பண்ணலாம்.

இல்ல, பார்க்டன் இல்ல தாஜ் கொரமாண்டல் லே ஒரு சிம்பிளா
கட் டு கதர் போதுமா /

இரண்டுக்கும் ரெடி.
பில் சார் தானே செட்டில் பண்ணப்போறார் .

நம்ம வெறும் இவென்ட் மேனேஜர் தானே...
ஐ வாண்ட் டு பி ஷ்யூர்
பீயிங் எ பென்சனர்.

சுதா.

ஆமாம். இந்த பிரும்மத்தைப் பத்திய சர்ச்சை எல்லாம்
தேவை தானா இந்த கலியுகத்திலே !!

பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

அப்படின்னு கீத்தாச்சர்யன் சொல்லியிருக்கச்சே,
அவர் பாத்துப்பார்,மேலும்,அவர் செய்யவேண்டிய கார்யத்தை
நாம் செய்யலாமா/
நமக்கு எதுக்கு இந்த வம்பு வேண்டாத சர்ச்சை எல்லாம்.!!

கண்டத்துக் கீழே கண்டதை போட்டு விடாம
காணாத கனிகளைக்
கிடைக்கச் செய், கண்ணா..

சுதா

msuzhi சொன்னது…

ஆமாமா.. நமக்கெதுக்கு அதெல்லாம். பச்சடி பருப்புக் கோசுமல்லி இருக்க பிரம்மவிசாரம் ஏதுக்கடினு இருக்கறதை விட்டுப்புட்டு.. சரியாத்தான் சொன்னீங்க.

Geetha Sambasivam சொன்னது…

வரணும் ஹைதராபாதுக்கு. இரண்டு வருடங்களாகவே ஒரு திட்டம் இருக்கு. ஆனால் எப்போ நிறைவேறும்னு சொல்ல முடியலை! :) அண்ணா பையர் அங்கே தான் இருக்கார். கூப்பிட்டுக் கொண்டே இருக்கார். ஆகவே

//இல்ல, பார்க்டன் இல்ல தாஜ் கொரமாண்டல் லே ஒரு சிம்பிளா
கட் டு கதர் போதுமா / //

இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நாங்க அங்கேயே தங்கிக்கலாம். சிம்பிளா ஒரு முறை பார்க்க முடியுமா? அதுவே போதும்! பார்க்கலாம். நாங்க அங்கே வந்தால் சொல்லிட்டு வரோம்.

Geetha Sambasivam சொன்னது…

பிரம்மவிசாரம் நீங்கல்லாம் பேசும்போது கவனிச்சுக்கறேன். நாங்க ரெண்டு பேருமே இதிலே ரொம்ப வீக்!

msuzhi சொன்னது…

பிரம்மவிசாரம்னு தொடங்கினா பிரம்மனே இல்லையோனு தோணலாம். great books of the eastங்க்ற தொகுப்புக்குள்ள google playல (நல்லா இருக்கணும்) இலவசமா நிறைய புத்தகங்கள் வெளியிட்டிருக்காங்க. அதுல மேக்ஸ் முல்லர், டேவிட் வைடவுஸ் போல சிலர் எழுதியிருக்கறதைப் படிச்சதும் எல்லாமே அத்திப்பழமோனு நினைக்க வச்சுது. சமீபத்துல இணையம் இல்லாம இருந்த நாட்கள்ல புத்தகம் நல்ல பொழுதுபோக்காவும் இருந்தது. அதாகப்பட்டது.. பிரம்மன் என்பதே ப்ருடா. எல்லாமே அதிதி என்கிற தேவமாதா தான் என்கிற ரீதியில போகுது விளக்கம். இதற்கு ரிக்வேதத்துல ஆதாரங்கள் இருக்குனு நிறைய எடுத்துச் சொல்லியிருக்காங்க. எங்க.. நம்ம வேதத்தை நம்ம ஆட்களே சொல்லிப் புரிஞ்சுக்கிட்டாப்புல தான், இதுல இன்னொரு மொழிக்காரங்க புரிஞ்சுகிட்டு நமக்கு எடுத்துச் சொல்லி.. எதுக்குங்க வம்பு. இன்னொரு விஷயம் கண்ணுல சுவாரசியமா பட்டது. இந்து மிதாலஜில அதிதி, கிரேக்க மிதாலஜில கேய, அப்புறம் எகிப்து மிதாலஜில பேர் மறந்து போச்சே கேயாஸ்?.. இப்படி எல்லாத்தையும் ஒப்பிட்டு ஆக மொத்தம் படைப்பு என்பதே ஒரு பெண்மைக்குட்பட்ட இலக்கணம்.. creator of creativity (எத்தனை அற்புதமான பிரயோகம்!) என்று பெண்களையும் ஏறக்குறைய திருட்டுப் பசங்க என்கிற மாதிரி ஆண்களையும் சொல்லியிருக்காங்க. பிரம்ம ஞானம் உண்டாச்சு. அஹம் பிரம்மாஸ்மி என்று என் அம்மாவிடம் மட்டும் இனிமேல் சொல்லக்கூடாதுனு வச்சிருக்கேன். so much for பிரம்ம விசாரம்.

msuzhi சொன்னது…

//அன்னிக்கு அண்ணிக்கு கோடு போட்டான்..

இப்பத்தான் கவனிச்சேன். பின்றாங்களே கீதமஞ்சரி?! சபாஷ்.

மோகன்ஜி சொன்னது…

சுதா !
//ஆப்பிள் பச்சடி, பருப்பு கோசுமல்லி, அக்கார வடிசல், க்ஷீரான்னம், புளியோதரை, காரட் பீன்ஸ் போரியல், ஆம வடை, ஜாங்கிரி, , பொங்கல்,பொங்கல்,அவியல், ததியோன்னம், ஒரு ஐஸ் கிரீம்,//

நானும் ஏதாவது சீரியஸா எழுதலாம்னு பார்த்தா, இப்படி ஒரு லிஸ்ட் போட்டு நாக்கு மனசு எல்லாத்தையும் கட்டிப் போட்டுட்டீங்களே....

சும்மாவா சொன்னாங்க ' சோறே சொர்க்கம், கட்டிலே கைலாசம்' னு....

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்,
//ஆமாமா.. நமக்கெதுக்கு அதெல்லாம். //

செவிக்குணவிலாத போது, நிறைய வயிற்றுக்கும் ஈயப்படும்

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்,

நீங்க கண்டிப்பாக வாங்க! தங்குவதற்குத் தடையில்லை.. வருக வருக....

மோகன்ஜி சொன்னது…

துரை சார் !

பிரம்ம விசாரம் பற்றிதொகுத்துக் கொள்ளவும், விவாதிக்க வும் கொஞ்சம் அவகாசம் தேவை.

உங்கள் மூன்றாம் சுழியிலேயே ஒரு பதிவு எழுதுங்களேன்... விவாதிக்கலாம்...

மோகன்ஜி சொன்னது…

துரை சார்,

////அன்னிக்கு அண்ணிக்கு கோடு போட்டான்..//

கீதமஞ்சரியின் கருத்துக்கள் செறிவானவை. உங்கள் சபாஷில் நானும் கலந்து கொண்டு கைதட்டுகிறேன்..

sury siva சொன்னது…

//பிரம்ம விசாரம் பற்றிதொகுத்துக் கொள்ளவும், விவாதிக்க வும் கொஞ்சம் அவகாசம் தேவை.//


ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்களின் உபநிஷத் உரைகளை கேட்டு கொண்டு இருந்தபோது,

பிரும்ம விசாரம் என்பது ஒரு மனுஷ்யனின் ஒரு ஜன்மத்தில் துவங்கி முடிந்து விடக்கூடிய விஷயம் அல்ல என்பது புரிந்தது.

லோகத்தில் பிறக்கும் எந்த நபரும், பல பிறவிகள் எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் முன் ஜன்மத்தில் சங்க்ரஹம் செய்யப்பட ஞான அறிவிலிருந்து துவங்கி மேற்கொண்டு ஞான அறிவினை பெருகச் செய்வது தான் . இந்த பயணத்தில் முடிவு என்பதே பிரம்மத்தை அறிவது தான்.

ஒருவன் பிரும்மத்தை அறியும்போது அவன்
யுரேகா, யுரேகா என்று கத்துவான் என்று தோன்றவில்லை. அஹம் பிரும்மாச்மி என்ற நிலை உணரப்படுகையில், ஒரு ஞானி , நான் என்று எதை நாம் எல்லோரும் நினைக்கிறோமோ அதில் இருந்து, முற்றிலும் விடை பெற்று விடுகிறான் . அது உடல் அல்ல, மனசு அல்ல , புத்தி அல்ல,


நிற்குனோ நிஷ்க்ரியோ, நித்யோ நிர்விகல்போ நிரஞ்சனஹ
நிர்விகாரோ நிராகாரோ நித்யமுக்தோஸ்மி நிர்மலஹ .

...34..ஆத்ம போதம்.

சூக்ஷுமத்திலும் சூட்சுமமான நுட்பமான பொருள் இந்த தேடப்படும் பொருள் என்பதால்,

ஒரு அறிந்தோன் ,

தான் எப்படி அறிந்தானோ, அதே போல், மற்றவர்களும் அறியட்டும், அறியவேண்டும் என்ற தருணம் வருகையில், அது தேடுபவனுக்கு கண்டிப்பாக சம்பவிக்கும் என்று தெரிந்ததால்.

இருப்பினும் தேடுதல் என்பது எப்ப துவங்கும் என்று தேடத் துவங்குபவனுக்கே தெரியாத விஷயம்.

தான் தேடுகிறோம் என்பதே தெரியாமல், பிரும்ம விசார பாதையில் செல்வதும் சாத்தியமே.

அடுத்தது,
பிரும்ம சத் தர்சனம், ஆத்திகனுக்குத் தான், கடவுள் பால் நம்பிக்கை உள்ளவனுக்குத்தான் கிடைக்கும் என்று கொள்வதில் பொருள் இருப்பதாக் தெரியவில்லை.

ஆத்மார்த்தமா சொல்லணும் அப்படின்னு சொன்னா,

நாம் எல்லோருமே,

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி .

வந்த கண்ணு குட்டிக்கு தண்ணி யும் கிடைக்கலாம்.

தேடுவதே ஸ்ரத்தையாக செய்கையில்,
தாய்ப் பசுவின் மடிப் பாலும் கிடைக்கலாம்.

அவரவர் பாக்கியம். வினைப்பயன்.

இன்னும் பேசலாம்.

ஆனா, இதெல்லாம் ஒரு மணி நேரத்திலே பேசி முடிக்கிற சமாசாரம் யில்லை.

ததாஸ்து.

சுதா.
www.pureaanmkeeam.blogspot.com

Geetha Sambasivam சொன்னது…

அண்ணிக்கு இளவல் கோடு போட்டதாகச் செய்தி வால்மீகி, கம்பன் எதிலும் இல்லை. வாய்வழிச் செய்தி மட்டுமே! :)))) உண்மையில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை.

sury siva சொன்னது…

//அண்ணிக்கு இளவல் கோடு போட்டதாகச் செய்தி வால்மீகி, கம்பன் எதிலும் இல்லை. வாய்வழிச் செய்தி மட்டுமே! :)))) உண்மையில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை. //


இராமாயணம் வால்மீகி, கம்பன் படைத்த காவியங்களில் லக்ஷ்மண ரேகா பற்றி குறிப்பிடப்பட வில்லை என்பது உண்மையே.

ராம சரித மானஸ் துளசிதாசரால்அவதி என்னும் பிற்கால வடமொழியில் எழுதப்பட்ட இராம கதை ஆகும்.

இந்த ராம சரித மானஸ் லங்கா காண்டத்தில் 35.1 சர்க்கத்தில், லக்ஷ்மணன் இட்ட வரம்புக் கோட்டைப் பற்றிய குறிப்பு வருகிறது.

இது ஒரு புறம் இருக்கட்டும்.
மாரீசி ஒரு மானாக இராமன், சீதை முன் தோன்றி, சீதா பிராட்டியை அந்த மானைப் பிடித்து வரும்படிதனது கணவனை வேண்ட, இராமன் தான் திரும்பி வரும் வரை, லக்ஷ்மணனை அவ்விடத்தில், தன மனைவிக்குப் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்கிறார். இல்லையா...

இந்தக்கால நடைமுறை படி, லக்ஷ்மணன் ஒரு செக்யூரிட்டி ஆபீசர்.
லக்ஷ்மணன் ஆக ஒரு வரம்பு, எல்லை. அவர் அந்த கொடுக்கப்பட்ட வேலைக்கான விதி முறைகளை மீறுதல் சரியல்ல.

அவர் தனது கொடுக்கப்பட்ட விதி முறைகளை மீறி செயல்பட, சீதா அவரை உந்துகிறாள் . ஏசவும் செய்கிறாள். ஒரு கட்டத்தில், லக்ஷ்மணன் சீதை பேசும் வார்த்தைகளை கேட்க முடியாமல், கண் கலங்குகிறார்.

லக்ஷ்மணன் எவ்வளவு சொல்லியும் சீதை கேட்கவில்லை. இராமன் அங்கு இல்லை. அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற இயலாத தருணம். அங்கு அடுத்த தலைவர் லக்ஷ்மணனுக்கு சீதை தான். அவள் சொல்படித் தான் கேட்டாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம்.



கடைசியில் கைகளை கூப்பிட்டு சீதையை தொழுது விட்டு இராமனைக் காப்பாற்ற வேண்டும் செல், எனும் சீதையின் கட்டளை யை நிறைவேற்ற செல்கிறார்.

ஆக, லக்ஷ்மண ரேகை என்பதை லிடறல் ஆக பொருள் கொள்ளாது , லக்ஷ்மணனுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையை மீறி அவரை தன வரம்பு எல்லைக்கு, கோட்டை மீறி நடக்கச் செய்தது சீதையின் செயலே என்ற பொருள் கொண்டால், நல்லது.

//உண்மையில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை //

கிட்டத்தட்ட 300 இராமாயணம் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தோனேஷியாவில் கூட இராமனைப் பற்றிய கதை இருக்கிறது. அவற்றிலே காணப்படும் நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதாக இருக்கிறதா என்ன ?

லக்ஷ்மண ரேகா என்பது லக்ஷ்மணன் போட்ட கோடு அல்ல. லக்ஷ்மணன் தான் அந்த கோடு . வரம்பு . அவன் தான் பாதுகாப்பு எல்லை. என்ற பொருள் கொண்டு பார்க்கவும்.

//நடக்கவே இல்லை //

அப்பாதுரை சார் வாய்க்கு சரியான நொறுக்குத் தீனி..!!

இராமாயணம் அப்படின்னு ஒன்றே நடந்ததா என்று ஒரு குண்டக்க மண்டக்க வாதம் பண்ணுவார் . அந்த தர்க்கத்து என்ன பெயர் என்று சட்டுன்னு ஞாபகம் வல்லை.

சுதா.

msuzhi சொன்னது…

குண்டக்க மண்டக்கனு பேரு?

நிச்சயமா நடந்ததுனு நம்பறேன் சார். பத்து தலை வச்சுகிட்டு ஒரு வில்லன் கதானாயகியைக் கிளப்பிக்கிட்டு ஆகாசத்துல போறப்ப பறந்து வந்த கழுகோட அப்படியே ஒரு பைட்டிங்.. கடல் தாவிப் பறந்து வந்து மேட்டர் தெரிந்து கொள்ளும் குரங்கு சீன்.. அதுக்குப் பிறகு கரடி குரங்கு ஒரு அணிலையும் சேர்த்துக்குவோம் சென்டிமென்டுக்கு.. எல்லாம் சேர்ந்து லலாலானு பாடிக்கிட்டோ பாடாமலோ பாலம் கட்டுறது.. அப்புறம் குரங்கு தோள்ல உக்காந்தபடி ஹீரோ பைட்டிங்.. வில்லனோட மகன் போடும் மாயாஜால பைட்.. பத்து தலை வில்லனோட யுத்தம் செஞ்சு வதம்.. அவ்வளவு செஞ்சப்புறம் தொட்டு கல்யாணம் செஞுகிட்ட கதானாயகியை இன்னொருத்தன் கை பட்டதாக பப்லிக்கா அவமானப்படுத்த அந்தம்மா பூமியப் பிளந்து தீயில குதிச்சு.. ஓ.. கதானாயகனோட அப்பா தன் மனைவிங்களுக்கு ஒரு குடம் பாயசம் கொடுத்த்தும் கதானாயகன் பிறவி எடுக்குறது மறந்துடுச்சே.. அந்தப் பாயசமும் யாகம் செய்யுறப்ப... இதுல நம்ப முடியாம எதுவுமே இல்லையே? எல்லாம் கண்டிப்பா நடந்தது. நிச்சயமா நடந்ததுனு கற்பூரம் அடிச்சு கூட சொல்லலாமே.

sury siva சொன்னது…

Superu appadurai saare!
Itha itha ithaithan naan ethirpaarthen.
incidentally
I hope u wd have already read Rt.Honble.Srinivasa Sastry's lectures on The Epic Valmiki Ramayana.
If not pl go thro
Why i say this u will know as u read
S.t

அப்பாதுரை சொன்னது…

படிச்சிருக்கேன் சார். ஸ்ரீஸா எழுதினதைப் பத்தி ஒரு பதிவுல எழுந்தினதுக்கு என்னவோ அவரைப் பத்தி எழுதினாப்புல செமத்தியா வாங்கிக் கட்டிட்டும் இருக்கேன் :-).

ராமாயண core is not a fictionம் நம்பறேன். மத்த எல்லாமே வால்மீகி என்கிறவரின் அற்புதமான கற்பனைனு நினைக்கிறேன். that is why it has lasted so long, and probably will continue to last as long (hopefully public recognition changing towards lore :-)

அயோத்தி/மஸ்ஜித் போனப்ப என்னைப் பார்த்து சலித்த அன்பரின் comments நினைவுக்கு வருது.

அப்பாதுரை சொன்னது…

//pureaanmkeeam.blogspot.com

ப்லாக் கணப்படலேதுனுதே கூகில்?

sury siva சொன்னது…

//ப்லாக் கணப்படலேதுனுதே கூகில்?//

இராம சரித்திரத்தைப் பற்றி நீங்கள் எழுதியது
கூகிளுக்கே பிடிக்கவில்லையோ என்னவோ ??

//த கோர் ஆப் இராமாயண ....//

நீங்க சொல்லியது போல, நடந்து இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ஆனால், இந்த இருநூறுக்கும் மேற்பட்ட இராமாயணங்களில் பல நிகழ்வுகள் முரண்பாடானவை போன்று தோற்றம் அளிப்பது என்னவோ உண்மை தான்.

உதாரணம்:

இராமன் அயோத்திக்கு செல்ல முடிவெடுத்து புறப்பட்ட பொழுது எல்லா ஆபரணங்களையும் களைந்து மரவுரி தரித்தான் என்று வால்மீகி யும் சொல்றார். கம்பனும் அதே அதே தான் சொல்கிறார்.
சீதையும் அதே போல் தான் எல்லா நகைகளையும்( தன மாமியாரிடம்) தந்துவிட்டு புறப்படுகிறாள்.

அப்படி இருக்கும்போது,
அசோகவனத்தில், சீதையிடம் அனுமன் தான் இராமனின் தூதன் தான் என நம்பிக்கை ஏற்படும் வகையில், இராமன் தந்ததாக சொல்லி, ஒரு கணையாழி சீதையிடம் தருகிறார்.
அந்த கணையாழி எப்படி ராமனுக்கு கிடைத்தது ?

இந்த சந்தேகத்தை பலரிடம் கேட்ட பொழுது, ஒரு உபன்யாச கர்த்தா மட்டும் சொன்னார்:

வால்மீகி எழுதிய கிட்டத்தட்ட 35 ஆயிரம் ஸ்லோகங்களும் இப்போது எழுத்தில் இல்லை. பலவை அதில் இருந்து காலப்போக்கில் மறைந்து விட்டன. மறைந்ததில் இதற்கான பதில் இருக்கலாம். என்றார்.

மேடம் கீதா சாம்பசிவம் எழுப்பிய லக்ஷ்மணன் ரேகாவும் இது போன்று இருக்கலாம்.

என்னவோ:
நீங்கள் இராமாயணத்தை வர்ணித்தது, ஒரு வரியில் !!
ஒரு ஸ்லோகத்தில் இராமாயணம் படித்து இருக்கிறேன். பாராயணம் பலர் செய்கின்றனர்.

ஒரே வரியில் அதை உங்கள் பாணியில் எழுதியதை ரசிக்காமல் ஒருவன் இருந்தால் அவனுக்கு நகைச் சுவை உணர்வே இல்லை என்று தான் .....

நான் சொல்லவேண்டாம். கீதா சாம்பசிவம் அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

அது இருக்கட்டும் ஒரு பக்கத்தில்.

பிரும்ம விசாரம் நீங்கள் புரிந்ததற்கு ஆதாரமாக சில ரப்ரன்ஸ் தந்தீர்கள் . இல்லையா ?

நீங்கள் எழுதிய நசிகேத புராணத்திற்கும் அடிப்படை நூல்கள் என்னவா இருக்கும் என்று என்னால் ஊஹிக்க முடிந்தாலும், நீங்களே சொன்னால் தான் என்னைப்போன்ற ட்யூப் லைட் களுக்கு புரியும்.

பிளைட் புக் பண்ணியாச்சா ? ஒரு சமாசாரம். என்னிக்கு சீப்பா டிக்கட் கிடைக்கும் என்று பார்த்து வாங்கும்போது ஒரு விஷயம். கவனத்திலே இருக்கட்டும்.
லுப்தான்ச,ஜெட் போன்ற எல்லா த்துலேயுமே
அந்த நாட்கள் எல்லாமே பொதுவா அஷ்டமி,நவமி, இல்லை என்றால் செவ்வாய்கிழமை,

நீங்கள் பஞ்சாங்கம் எல்லாம் பார்க்க மாட்டீர்கள் என்று தெரியும்.
அதனால், எதற்கும், மனசுக்குள்ளே
ராம ராம என்று சொல்லிக்கொண்டு
ஆன் லைனில்ticket book செய்யவும்.

சுதா.

அப்பாதுரை சொன்னது…

கடோபனிஷதைப் புரிந்து கொள்ள, நான் படித்தாலோசித்தப் புத்தகங்கள்:
• ஸ்ரீ சந்திரவசு எழுதிய 'யஜூர்வேதீய கடோபனிஷத ப்ராரம்ப:' எனும் வடமொழி நூல் (1900 காலப் பதிப்பு, சிகாகோ பொது நூலகம்)
• சந்திரவசுவின் புத்தகத்தைப் பற்றி சிகாகோ மாணவர்கள் எழுதியப் பழைய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் (சிகாகோ பொது நூலகம்)
• 'ஆதிசங்கரர் எழுதிய கடோபனிஷத பாஷ்யம்' பற்றிய ஆங்கில விளக்கக் கட்டுரைகள் (உலக வேதாந்தக் கல்வி, சிகாகோ பொது நூலகம்)
• திரு.ராஜாஜி எழுதிய கடோபனிஷத நூல் சுருக்கம் (வானதி பதிப்பகம்)
• சுவாமி சின்மயானந்தாவின் கடோபனிஷத விளக்கம் (சின்மயா மிஷன்).

மேல் விவரங்கள் என்னுரையில்.

நான் படித்த/ஆலோசித்த புத்தகங்களிலிருந்து பல இடங்களில் விலகியிருக்கிறேன் (குறிப்பாக நசிகேதன்-எமன் உரையாடல்களில்) என்பது கடோ படித்தவர்களுக்கு தெரியும். என் deviation? கடோபனிஷது எழுதியவர்கள் பற்றிய என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவும், அரைகுறை சம்ஸ்க்ருத படிப்பின் காரணமாகவும்.

Geetha Sambasivam சொன்னது…

கணையாழி குறித்துத் தனிக்கதையேஇருக்கு.ஜனகரால் ஶ்ரீராமனுக்கு அளிக்கப்பட்டதென்றும் சொல்வார்கள். விவரிக்க இப்போ நேரம் இல்லை. அதே போல் சீதையிடம் நகைகள் இருந்ததன் காரணமும் ஏற்கெனவே எழுதி இருக்கேன். இருவரிடமும் காட்டு வாசத்தின் போது குறிப்பிடத் தக்க நகைகள் இருந்தன.

Geetha Sambasivam சொன்னது…

அதே போல் லக்ஷ்மண் ரேகாவும், லவ, குசர்கள் பற்றின விவரணைகளும் துளசியின் ராம்சரித மானஸிலேயே பார்க்க முடியும்.

sury siva சொன்னது…

//கணையாழி குறித்துத் தனிக்கதையேஇருக்கு.ஜனகரால் ஶ்ரீராமனுக்கு அளிக்கப்பட்டதென்றும் சொல்வார்கள்//

மேடம்,
கணையாழி யார் கொடுத்தார் என்பது பிரச்னை இல்லை.

கேள்வி இதுவே;

இராமன் காட்டுக்குக் கிளம்பியபோது அவரிடம் எந்த ஆபரணங்களும் இல்லை. சீதையும் எல்லா ஆபரணங்களையும் துறந்துவிட்டாள் .
இவர்கள் இருவருமே மரவுரி தரித்து கிளம்பி விட்டார்கள்.



அப்போது,
ஹனுமான் சீதையை தேட கிளம்பிய பொழுது, காட்டிலே ஸ்ரீராமனுக்கு அந்த கணையாழி எப்படி கை வசம் இருந்தது ?


இதற்கான குறிப்பு, பல தடவைகள் நானும் வால்மீகியின் ஸ்லோகங்களை பல தடவை, முக்கியமாக ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், படித்து விட்டேன். எங்கும் இல்லை.

வால்மீகி இராமாயண அதாரிட்டி என்று சொல்லும் நபர்களிடம் கேட்டு விட்டேன். எனது நண்பர் ஒருவர், வால்மீகி எழுதிய 25000 ஸ்லோகங்களையும் மனப்பாடமாக சொல்லுகிறார்.
அவரும் சொல்கிறார்:
இதற்கான குறிப்பு இல்லை எந்த ஸ்லோகத்திலும் என்று.

அதனால் தான் சொன்னேன் வால்மீகி எழுதியாதாகக் கூறப்படும் மொத்தம் 35 ஆயிரம் ஸ்லோகங்களில் 25 ஆயிரம் மட்டுமே இருக்கிறது எனவும் மிச்சமெல்லாம் காலப்போக்கில் ( இந்த காவியங்கள், எல்லாம், வேதங்கள் மாதிரி ச்ரவணம் ஸ்ருதி மூலமாக வழி வழி வந்ததன் காரணமாக) மறைந்து போனதில் இருக்கலாம் .

இராமன் ஒரு தெய்வப்பிறவி. அவதாரம். அவர் நினைத்த மாத்திரத்தில் அந்த கணையாழி யைக் கைக்குள் கொண்டு வந்து இருக்கலாம் என்று சொல்வதையும் நான் சரி இல்லை என்று சொல்லவில்லை. அது "நம்பிக்கை" சமாசாரம்.

இராமாயணத்தை ஒரு காவியமாக எடுத்து அதை அலசுகையில்
சில முரண்பாடுகள் காணப்படுவது மறுப்பதற்கு இல்லை.

இன்னமும் ஒன்று. இராமன் எந்த கால கட்டத்திலும் தான் ஒரு அவதாரம் என்று சொன்னதும் இல்லை. காட்டிக்கொண்டதும் இல்லை. மானுடனாகப் பிறந்த அவர், மானிடன் ஒருவனுடைய எல்லா குண விசேஷங்களையும் பிரதிபலிக்கிறார்.

அதே சமயம், மானிடன் ஒருவன் கொள்ளவேண்டிய உயர் லட்சியங்களையும் எடுத்துச்சொல்லும் வகையில் வாழ்கிறார்.

தன் மனைவியை பற்றி அவதூறு ஆக தனது ராஜ்ஜியத்திலே இருந்தே ஒருவன் பேசுகையில்,

அவளை தீக்குளித்துத் தனது தூய்மையை எடுத்துக் காட்டச் சொல்வது ,

ஒரு அரசன் நியாய வழி, தர்ம வழிதான் மட்டும் செல்வது போதாது, தனது குடும்பத்தினரும் செல்லவேண்டும் என்ற அரசு நியதியைப் பொறுத்தது.

(Ref the dictum: Not only Caesar, Caesar's wife must also be above suspicion. .
Caesar divorced his wife.)
Caesar's wife must be above suspicion.
Prov. The associates of public figures must not even be suspected of wrongdoing. (The ancient Roman Julius Caesar is supposed to have said this when asked why he divorced his wife, Pompeia. Because she was suspected of some wrongdoing, he could not associate with her anymore.) Jill: I don't think the mayor is trustworthy; his brother was charged with embezzlement. Jane: But the charges were never proved. Jill: That doesn't matter. Caesar's wife must be above suspicion. When the newspapers reported the rumor that the lieutenant governor had failed to pay his taxes, the governor forced him to resign, saying, "Caesar's wife must be above suspicion.")
இன்னும் ஒரு வார்த்தை.
அப்பாதுரை சாரின் கிண்டல், நக்கல் ( ஒரு பின்னூட்டத்தில் )ஒரு குடி மகனுக்குப் பொருந்துமே தவிர, ஒரு ராஜாவிடம் எதிர்பார்க்கப்படும் ராஜ தர்மத்துக்கு பொருந்தாது. மக்கள் முன்னே சட்ட ரீதியாக மட்டும் அன்றி, அவர்களுடைய பர்செப்ஷனும் முக்கியம்.
ராஜ தர்மம் என்றால் என்ன என்று ஒரு கேள்வி அவர் வலைப்பதிவு ஒன்றிலே வந்து இருந்தது. அதற்கான பதிலை நான் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று பதில் சொல்லி இருந்தேன்.
மோகன்ஜி சார் என்ன மூட் லே இருக்கிறார் என்று தெரியவில்லை.
அவருடைய கதை லேந்து ரூட் ரொம்ப விலகிப்பொயிட்டோம் என்று நினைப்பாரோ என்னவோ /
சாரி மோகன்ஜி சார். .
ரொம்ப பேசிட்டேன் அப்படிங்கற காரணத்துக்காக,வீட்டுக்கு வரும்போது காப்பி தர மறந்து விடாதீர்கள்.
சுதா.

அப்பாதுரை சொன்னது…

சீதையை ராமன் நடத்திய விதம் எந்த தர்மத்திலும் அடங்காதது. ஒரு வேளை ராமன் அப்படி நடக்கவில்லை, வால்மீகி போன்றவர்கள் கிளப்பிவிட்டது என்று சொன்னால் சப்பை கட்டென்றாலும் ஏற்கமுடியும், மற்றபடி அது இல்லையெனில், ராமன் நடந்து கொண்டது அநாகரீகமும் அதர்மமும் கலந்தது. ராஜா என்ற பார்வையில் சீதையும் ஒரு பிரஜை தான். அதை சில சமயம் மறந்துவிடுகிறோம்.

அப்பாதுரை சொன்னது…

ராமன் மானுட தர்மங்களை உயர் லட்சியங்களைக் காட்டி நடந்தான் என்பதும் கேள்விக்குறி தான். ராமாயணம் முழுக்க உதாரணங்கள். வாலிவதம் முகத்தில் அடிக்கிறது. சூர்ப்பனகை அவமானம் அதன் பின்னலேயே. சீதையை நடத்திய விதம் அதைத் தொடர்ந்து. லவகுச உதாசீனம் அதைத் தொடர்ந்து. ஒரு வேளை இது எதுவும் ராமன் செய்யாதிருந்திருக்கலாம். அல்லது வாலி வதம் பற்றிய சப்பை கட்டுகளையும் ஏற்று ஆகா ராமன் உன்னத பிறவி எனலாம்.. அல்லது மனுஷ்ய அல்பத்தனத்தோடு நடந்து கொண்டான் ராமன் என்று மானுடனாகவும் ஏற்கலாம். லவகுச ராமாயணத்திலேயே இல்லை என்றும் சொல்லலாம்.
ராமாயணம் வெறும் கதை - சாத்திய உண்மைச் சம்பவங்களைக் கொண்டு திறமையாக எடுத்தாளப்பட்ட கதை. இதில் மானுடருக்கெல்லாம் எந்த உயர் லட்சியத்தையும் ராமன் சொல்லவில்லை; நடந்துகொள்ளவுமில்லை. அப்படி யாராவது நடந்து கொண்டதாகச் சொல்வதானால் குகன், பரதன், லட்சுமணனைச் சொல்லலாம்.

Geetha Sambasivam சொன்னது…

//தன் மனைவியை பற்றி அவதூறு ஆக தனது ராஜ்ஜியத்திலே இருந்தே ஒருவன் பேசுகையில்,//

இது ஶ்ரீராம பட்டாபிஷேஹத்தின் பின்னர் சீதை கர்ப்பமாக இருக்கையில் நடைபெற்றது.


//அவளை தீக்குளித்துத் தனது தூய்மையை எடுத்துக் காட்டச் சொல்வது ,//

ராவணனிடமிருந்து சீதையை மீட்டவுடனேயே இது நடந்தது. ஆனால் வால்மீகியில் எங்கேயுமே நானும் பார்த்தவரைக்கும் ஶ்ரீராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொல்லவே இல்லை அவளாகவே தான் தீக்குளிக்க முடிவு செய்கிறாள். வேண்டுமானால் சோதித்துக் கொள்ளலாம்.

ராமன் வரை சீதையிடம் சந்தேகமே கொள்ளவில்லை. வாலி வதத்துக்கும் தர்க்கரீதியான வாதங்கள் இருக்கின்றன. அது சரி, சீசர் மனைவி என்றால் மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதை ஏற்போம். அதுவே ராமன் மனைவி சீதை என்றால் அதே கொள்கையை ஏற்க மாட்டேன் என்று சொல்கிறோமே! என்ன சார் இது! மத்ததுக்கும் அப்பாதுரைக்கும் சேர்த்து ஒரு பதிவாவே போட்டுடலாம்னு. நீங்க சொல்றாப்போல் மோகன் ஜியின் கதையிலிருந்து வெகுதூரம் விலகி வந்தாச்சு! அவர் வந்து என்ன இதுனு கேட்பதற்குள் நான் ஜூட்! :)

sury siva சொன்னது…

/மோகன் ஜியின் கதையிலிருந்து வெகுதூரம் விலகி வந்தாச்சு!//

நான் அப்படி நினைக்கவில்லை. அது ஒரு வெளித் தோற்றமே.

எல்லா நடப்புகளுக்கும் ஒரு துவக்கம் என்றும் முடிவு என்றும் இருக்கும்.

இருப்பினும் சிலவை சிந்தைக்கும் சிந்தனைக்கும் பொருட்களுக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.

அசிந்த்யா; கலு யே பாவா ந தாம்ச்தர்கெண யோஜயேத்
பிரக்ருதிர்ப்ய:பரம் யச்ச தத சித்தயஸ்ய லக்ஷணம்

சிந்தனைக்கும் சிந்திக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் பல உள . அவற்றினை நாம் ஒருவருக்கு ஒருவர் செய்யும் தர்க்கத்தால் தீர்க்கலாகாது. ( அதனால் பலன் ஒன்றும் இலாது என்ற கருத்தினாலும் )

அவ்வாறான விஷயங்கள் வசிக்கும் இடங்களுக்கு,

ந தத்ர வாக்கச்சதி நோ மன:
(மனமோ வாக்கோ அங்கு செல்வதில்லை)

சரி, புலன்களுக்கு அப்பாற்பட்டத்தாக ஒரு பொருள் இருப்பின் அதை அடைவது எங்கனம்?

என்ற கேள்வி வரும்போது,

தத் விக்க்ஞானார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்

அதை (அந்த பரம்பொருள் என்ன என்று தெரிந்து அதை) அடைய ஒருவன் குருவை அணுகவேண்டும்.

மனோவுக்கு
அந்த நுட்பமான பொருளை ஒரு உருவமாய் ஆராதிக்க இயலவில்லையே தவிர,
அந்த ஆத்யந்த சக்தியின் லீலையை உணர முடிந்திருக்கும்.
ஆகவே, மேற்கொண்டு தொடர,
குருவை அணுகவேண்டும்.
அன்னை தானே முதல் ஆசான்.
அவளை அழைத்துச் செல்கிறான்.

சுதா.

மோகன்ஜி சார் ! சோடா ...சோடா...

அடுத்த பதிவைப் போடுங்க...

msuzhi சொன்னது…

எப்படியோ எல்லாத்தையும் இழுத்து முடிச்சு போட்டுட்ட சாமர்த்தியத்துக்கு சபாஷ் சூரி சார். இந்தாங்க ஜோடா.

ஜூட்டுக்கான நேரம்னு உங்க கடைசி வரியும் சொல்லுதோ? இருந்தாலும் 25000 பாட்டுக்களை மனனமாக அறியும் உங்கள் நண்பருக்கு என் பெருமதிப்புக்குரிய ப்ரணாம்னு சொல்லிக்கிட்டு... அண்ணாச்சி, இங்கயும் சூடா ஒரு ஜூட் பார்சேல்.

yathavan64@gmail.com சொன்னது…



உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

G.M Balasubramaniam சொன்னது…

அண்மையில் திருமதி கீதா சாம்பசிவத்தின் ஒரு பதிவைப் படித்தபோதுதான் மோகன்ஜியின் சிறுகதைக்கான பின்னூட்டங்களில் ஜுகல் பந்தி தொடர்வது தெரிந்தது. நானும் ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தேன் கதை சிலைகளைப் பற்றியதாக இருந்ததால் சிலைகளை வணங்கும் தாத்பரியம் குறித்துக் கருத்து எழுதி இருந்தேன் அப்பாதுரை அதை வித்தியாசமாக வியாக்கியானம் செய்ய முயன்றார். அதற்கான பதிலைநானே சொல்வதுதான் முறை என்று மோகன் ஜி கருத்திட்டிருந்தார்( ஒருவரது கருத்துக்கு மற்றவர் ஏதும் சொல்லாதது போல்)என் வியாக்கியானத்தைத் தொடர்கிறேன் சிலைகளை வணங்கும் காராணம் எனக்குப் புரிந்த வரை.
ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும் கற்பிதம் செய்து அவர்களின் சக்திகளில் நம்பிக்கை வைத்து அவர்களை வழிபாடு செய்தால் நலம் பெறுவோம் எனும் நம்பிக்கை சிறு வயது முதலே வளர்க்கப்படுகிறது. தாயே மனிதனின் முதல் தெய்வம் என்று கருதப்படும் நம் நாட்டில், கடவுளை அன்னையின் வடிவத்திலும் வழிபடுகிறோம். சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு சக்தியின் பிரதிபலிப்பாக வணங்க வளர்க்கப்படுகிறோம்.
ஆனால் விக்கிரக ஆராதனைஎன்பதே நாம் நம்பும் ஜீவாத்மா பரமாத்மாவுக்கான தொடர்பினை வெளிப்படுத்தும் விதமென்பதே ஆகும் ஆனால் புற வழிபாடுகளில் கவனம் அதிகம் செலுத்துகிறோம் என்பதையேBUT alas.! only rituals have taken the roots என்று எழுதி இருந்தேன்

yathavan64@gmail.com சொன்னது…

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (09/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

அன்புள்ள ‘வானவில் மனிதன்’ மோகன்ஜிஅவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (09.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/9.html

சிவகுமாரன் சொன்னது…

என்னை அறியாமல் கண்கள் கசிந்தது அண்ணா. என் தந்தையார் வழிபட்ட சிறிய சிவலிங்கம் ஒன்று, எனக்கு அதன் மேல் ஒருகண். அவர் மறைவுக்குப் பின் ஒரு நாள் என் தம்பி மனைவி சிவலிங்கம் வீட்டுக்கு ஆகாது என்று எடுத்து எங்கோ கோயில் குளத்தில் வீசி விட்டாள். அறிந்த பின் நான் அழுத அழுகை இன்னும் நின்ற பாடில்லை .
கையெடுத்து உங்களைக் கும்பிடத் தோன்றுகிறது அண்ணா.