வெள்ளி, அக்டோபர் 23, 2015

காலணிகளும் தடங்களும்




தடங்களை விட்டு செல்லச் சொன்னால்,
நீங்கள்
காலணிகளை விட்டுச் செல்கிறீர்கள்.

காலணிகள் உங்களுக்கானவை.
தடங்களோ தொடர்ந்து வருபவர்களுக்கு.

காலணிகளை விட்டுவிட்டு
நீங்கள்
சென்ற சுவடே தெரியவில்லை.

பாதை காட்ட தயக்கமா?
விருப்பமில்லையா?
அன்றி,
இவற்றை வழிபடுவோம் என நினைத்தீர்களா?

உங்களைத் தொடர்ந்தினி ஆவதொன்றில்லை.

உங்கள் இருப்பை,
இந்தக் காலணிகள் உணர்த்தும் என எப்படி நம்பினீர்கள்?
இவை காலவாக்கில் நிறமிழந்து உருவழிந்து விடும்.

இனி பயணத்தின் திசையை நாங்களே வகுப்போம்.
புதிய தடங்கள் உருவாகும்.
சுவடுகளில் காலணிகளின் கர்வம் எஞ்சாது.

கொண்டு செல்லுங்கள் உங்கள் காலணிகளை.

அவை  
உங்களுக்கேயானவை.


புகைப்படம்: ஹரிஹரன் சங்கர்


16 comments:

sury siva சொன்னது…

//கொண்டு செல்லுங்கள் உங்கள் காலணிகளை.//

காலணிகள்
"காலடி" ஆகாத வரை
கால் காசு பிரயோசனம் இல்லை.

//இனி பயணத்தின் திசையை நாங்களே வகுப்போம்.
புதிய தடங்கள் உருவாகும்.
சுவடுகளில் காலணிகளின் கர்வம் எஞ்சாது.//

பருவம் தொலையின் உருவம் தொலைய
கருவம் மட்டும் தொலையா நிற்பது
விந்தையாகத்தான் இருக்கிறது.
சுருங்கச் சொல்லினும்
விளங்கச் சொல்லிவிட்டீர்.

எனக்குப் புரிகிறது.

சு மூ தா. .

G.M Balasubramaniam சொன்னது…


காலணிகளே காணாமல் போகும் வாய்ப்பும் அதிகம் பிறகு சுவடே இருக்காது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தடங்களை விட்டு செல்லச் சொன்னால்,
நீங்கள்
காலணிகளை விட்டுச் செல்கிறீர்கள்//


காலங்கள் யாருக்காவும் காத்திருப்பதில்லை..

காலடிச்சுவடுகள் கூடவே வருவதில்லை..

காலணிகள் மட்டும்...!!??

மோகன்ஜி சொன்னது…

சு.தா!

படிமங்களில் வாழ்வது கவிதை.

பாராட்டுக்கு நன்றி சு தா!

மோகன்ஜி சொன்னது…

நன்றி GMB சார்!

மோகன்ஜி சொன்னது…


இராஜேஸ்வரி மேடம் !

நீங்கள் வருகை தந்து எவ்வளவு நாளாயிற்று ? நலம் தானே?

இது பின் தொடர்ந்தவனின் பார்வை மேடம்.

'படம் பார்த்து பாடல் சொல்' என்று விதித்துக்கொண்டு சிலவற்றை எழுதிவருகிறேன் .

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனி பயணத்தின் திசையை நாங்களே வகுப்போம்.
புதிய தடங்கள் உருவாகும்.

அருமை
புதிய தடங்கள் உருவாகட்டும்
நன்றி ஐயா

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஜெயக்குமார் !

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

முதன்முதலாக உங்கள் தளம் வருகிறேன். கவிதையை ரசித்தேன். தொடர்வோம். வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாருங்கள் ஜம்புலிங்கம் சார் ! ரசித்ததிற்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எங்கள் பாதையை நாங்களே வகுத்துக் கொள்வோம்.....

என் வழி தனி வழி!

படம் அருமை.

மோகன்ஜி சொன்னது…

தன்றி வெங்கட் !

Geetha Sambasivam சொன்னது…

பாதையும் புதிய பாதை! தடங்களும் புதியவை! பழையன கழிதல், புதியன புகுதல்! வெளுத்துக்கட்டுங்க! :)

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இனி பயணத்தின் திசையை நாங்களே வகுப்போம்.
புதிய தடங்கள் உருவாகும்.
சுவடுகளில் காலணிகளின் கர்வம் எஞ்சாது.

கொண்டு செல்லுங்கள் உங்கள் காலணிகளை.

அவை
உங்களுக்கேயானவை.// அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதா மேடம். அந்த புகைப்படத்தில் அழுத்தமான தடங்களின்றி வெறும் காலணிகள் தந்த கவிதையிது.
சிலரது மகத்தான தியாகங்களும் தனிப்பட்ட இழப்புகளின்மீதும் தான் ஒவ்வொரு புதியபாதையும் உருவாகும்.
தன்னலமில்லாதவர் வகுத்தபாதை விட்டு செல்லும் தடங்கள் வருங்காலத்தின் நம்பிக்கை .

மோகன்ஜி சொன்னது…

வாருங்கள் சுரேஷ் ! உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கின்றன. நன்றி !