சனி, அக்டோபர் 24, 2015

குழந்தை வளர்ப்பு


சிறுவனாயிருந்த தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியிலிருந்து வீடுவந்ததும், அவருடைய பள்ளிஆசிரியை கொடுத்துவிட்ட கடிதத்தை அம்மாவிடம் நீட்டினார். 

‘டீச்சர் என்னம்மா எழுதியிருக்காங்க?’ அன்று ஆவல்மேலிடக் கேட்ட எடிசனை கண்ணில் நீர் மல்க கட்டித்தழுவியபடி அந்தத் தாய் சொன்னாள்:
“கண்ணே! நீ ரொம்பவே பெரிய மேதையாம் ! உனக்குப் பாடம் எடுக்கத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உங்கள் பள்ளியில் யாரும் இல்லையாம். எனவே உன்னை நம்வீட்டிலேயே வைத்து நன்கு கற்றுக் கொடுக்கவேண்டுமாம்!” என்றாள்.

வருடங்கள் உருண்டோடின. எடிசனின் தாயும் மறைந்தார். உலகின் மிகப் பெரிய சாதனையாளராய், புகழ்வாய்ந்த கண்டுபிடுப்புகளின் நாயகனாய் எடிசன் மாறியிருந்தார்.

ஒருநாள், பழையபொருட்கள் கிடந்த வீட்டுமூலையில் எதையோ அவர் தேடிக் கொண்டிருந்தபோது’ மடிந்துகிடந்த  கடிதமொன்றை கண்ணுற்றார். அது அவர் பள்ளிஆசிரியை எழுதியிருந்த கடிதம். அதை ஆவலுடன் பிரித்து படித்தபோது அதில் எழுதியிருந்தது என்ன தெரியுமா?
“உங்கள் குழந்தை சித்தஸ்வாதீனம் குறைவாக உள்ள குழந்தையெனத் தோன்றுகிறது. இனிமேல் அவனை மீண்டும் எங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்.”

பலமணி நேரம் அந்த தூசுபடிந்த மூலையிலே முடங்கி அழுதபடி இருந்த எடிசன், அன்றைய தினம் தனது நாட்குறிப்பில் இவ்வாறு எழுதினர்.
“தாமஸ் ஆல்வா எடிசன் எனும் மூளைவளர்ச்சி குன்றிய மகனை, இந்த நூற்றாண்டின் மேதையாய் மாற்றினாள் ஒரு வீரத்தாய்”

இதல்லவா நேர்மறை சிந்தனை !!


 மேன்மையான குழந்தை வளர்ப்பைப் பற்றி அந்தத் தாய் நமக்கெல்லாம் தந்த செய்தி இது அல்லவா?  

படம்: நன்றி கூகிள்

20 comments:

sury siva சொன்னது…

அகிலமே செய்ய இயலாத ஒன்றை
அன்னை செய்ய முடியும்.


அன்னை இதயத்தில்
அந்த நாலு அறைகள்.

பொறுமை.
நம்பிக்கை
துணிவு
விடா முயற்சி


சுப்பு தாத்தா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஆஹா! அருமை. பெரும்பாலான விஞ்ஞானிகளின் வரலற்றைப் பார்க்கும்போது பள்ளிகளால் விஞ்ஞானிகளை உருவாக்க முடிவதில்லை என்பது மட்டும் புலனாகிறது.
பொதுவாக பல குட்டிக்கதைகள் விஞ்ஞானிகளை உயர் பண்புள்ளவர்களாக காட்டுகிறது. ஆனால் உண்மை அதற்கு மாறாக இருக்கிறது.

பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள் என்ற தொடரில் நியூட்டனைப் பற்றி எழுதி இருந்தேன். தொடர்ந்து எடிசன் பற்றியும் எழுத இருந்தேன். ஏனோ தொடரவில்லை.டெல்சா என்ற விஞ்ஞானியை எடிசன் படுத்திய பாடு பிரசித்தமானது.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அந்த தாயின் பாதங்களில் தலைவணங்குவோம்! இதுவே உண்மையான குழந்தைவளர்ப்பு!

மோகன்ஜி சொன்னது…

அன்பின். சு.தா!
//அகிலமே செய்ய இயலாத ஒன்றை
அன்னை செய்ய முடியும்.//
உண்மை. ஒரு பெண் தன் மனதைக் கழற்றிக்கூட தன் அன்பான கணவனுக்கு தந்து விடுவாள்.
ஆனால் தான் பெற்ற பிள்ளைக்காக, தன் ஆன்மாவையே அல்லவா உருக்கி அர்ப்பணித்து விடுகிறாள்?
எங்குமே தாய் தாய் தான். மொழியென்ன,தேசமென்ன,மானுடமென்ன, மற்ற உயிரினங்களென்ன....
தாய்மை ஒன்று போலத்தான்.


மோகன்ஜி சொன்னது…

முரளிதரன்ஜி !
நலம் தானே? நீங்கள் குறிப்பிடும் விஞ்ஞானிகளின் பண்பில்லாத செயல்கள் வரலாற்றில் பதிவானவையே.
அவர்களின் துர்க்குணங்களையும் மீறி, அவர்களின் கண்டுபிடிப்புகள் மனிதகுலத்திற்கு பெரும் நன்மை
செய்தவை.
இது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, பெரும் கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் கூட பொதுவாயுள்ள அம்சம்.
பல ஒவ்வாத பழக்கங்களும், உறவுப் பிறழ்வுகளும், சிக்கலான வாழ்க்கைமுறைகளும் இவர்களுக்கு ஏனோ அமைந்து விடுகிறது.
ஆனாலும்கூட,சமகால விமரிசனங்களையும் மீறி இவை பெரிதாக பொருட்படுத்தப்படுவதில்லை. அது கலையின் மகத்துவம்,இலக்கியத்தின் மகத்துவம், மேம்படுத்தும் விஞ்ஞானத்தில். மகத்துவம் என்பதன்றி,வேறு என்னவாக இருக்கமுடியும்?

மோகன்ஜி சொன்னது…

சுரேஷ்.! நன்றாகச்சொன்னீர்கள். அவள் போற்றுதலுக்குரிய தாய் தான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரிய தாய்...
பகிர்வுக்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்ஜி !

ஸ்ரீராம். சொன்னது…

படித்திருக்கிறேன். எடிசனைப் பற்றிப் படித்தால் டேஸ்லாவும் நினைவுக்கு வருகிறார்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

முன்னரே அறிந்த செய்தி. இருந்தாலும் தங்கள் பதிவின்மூலம் மறுபடியும் படித்தபோது இன்னும் மனதில் பதிந்தது. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அறியாத செய்தி ஐயா
நன்றி
திரு முரளிதரன் ஐயா அவர்கள் சொல்வதைப் போல
பள்ளிகளால் மேதைகளை உருவாக்க முடியவதில்லை
என்பது வேதனைக்கு உரிய செய்தி

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம் !
எம்.ஜி.ஆர்னா நம்பியாரும், கவுண்டமணின்னா செந்திலும், சரத்குமார்னா விஷாலும், மோகன்ஜின்னா அப்பாதுரையும் நினைவுக்கு வருவது போல...

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஜம்புலிங்கம் சார் !

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஜெயக்குமார் சார் ! முரளிதரன் சொன்னது முக்கியமான விஷயம் . பள்ளிகள் கோவில்களாய் இருந்தது ஒருகாலம். இன்று கல்வி ஒரு வியாபாரம். ஆசிரியர் பெருமக்கள் மெழுகுவர்த்திகளாய் இருந்தது ஒருகாலம். இன்று அவர்கள் பெரும்பாலானோருக்கு அது சலிப்பூட்டும் தொழில்.. மாற்றுவழிகளில் வளம்பெருக்க ஒரு ஊடுதொழில். மாணவன் அன்று கனவோடு இருந்தான். இன்று பல திசைத்திருப்பல்களில் சிக்கி போலியான கேளிக்கைகள் மிக்கவன் . அவர்களில் கெட்டிக்கார மாணவனோ அதிக சம்பாத்தியம் தருவதை இலக்காய்க் கொண்டு முன்னேறி வருபவன்.

இவற்றையெல்லாம் நின்று யோசிக்கக்கூட யாருக்கும் நேரமில்லை. இதையும் மீறி மேதைகள் சுயம்புவாய் எழுபவர்களே !

Aathira mullai சொன்னது…

“தாமஸ் ஆல்வா எடிசன் எனும் மூளைவளர்ச்சி குன்றிய மகனை, இந்த நூற்றாண்டின் மேதையாய் மாற்றினாள் ஒரு வீரத்தாய்”

டிஸ்லெக்சியா என்னும் குறைபாடு உள்ளவர்கள் பலர் வெற்றி வீரர்களாக வலம் வந்துள்ளனர்.
தாய்மை போற்றுக!

மோகன்ஜி சொன்னது…

வாங்க வாங்க ஆதிரா! நலம் தானே?
உண்மை தான். டிஸ்லெக்ஸியா பற்றி ஒரு பதிவு போட்டுடுவோம்... அது படிப்பதிலும் எழுதுவதிலோ உச்சரிப்பதிலோ அல்லது எண்கள் தொடர்பானதாகவோ இருந்தாலும் , பாதிக்கப்பட்ட பலருக்கும் அது அறிவின் குறைபாடல்ல. இது ஆண்களையே அதிகம் பாதிக்கிறதாக புள்ளிவிவரம் உண்டு.

எனக்கிருப்பது டிஸ்லெக்ஸியாவா எனத் தெரியாது. மனைவி அருகில் இருந்தால் சரியாக பேசவராது. வாய் திக்கும்... கொஞ்சம் உளறக் கூட செய்வேன். ஒருவேளை மேதையாயிடுவேனோ என்னவோ ??

sury siva சொன்னது…

// மனைவி அருகில் இருந்தால் சரியாக பேசவராது. வாய் திக்கும்... கொஞ்சம் உளறக் கூட செய்வேன்//

வானவில்லாய் இந்த மனுஷன் ஏன்யா அங்கன போய் உட்கார்ந்திருக்காரு அப்படின்னு இப்பல்ல புரியுது...

சு தா.

சென்னை பித்தன் சொன்னது…

குழந்தையையின் தன்னம்பிக்கையைச் சிறு வயதிலேயே நசுக்கி விடாமல்,உற்சாகம் ஊட்டும் விதத்தில் பேசிய ஆதர்சத் தாய்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Be positive ”mother.....”

ஒவ்வொரு தாயும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

அப்பாதுரை சொன்னது…

எதையாவது கிளப்பிவிட்டால் வருடக்கணக்கில் நம்பித் தலையாட்ட எத்தனையோ பேர் இருப்பது தான்...