ஞாயிறு, மார்ச் 27, 2011

பச்ச மொழகா

ரசத்துக்கு ருசியே அதுல நாலு பச்ச மொழகா கிள்ளிப் போட்டாத்தான் சார்’’
ராஜாமணியின் வாய், புகையிலை அதக்கலில் குழைந்து, பச்சை மிளகாய்பச்சமொழகாஆகிவிட்டது எனத்தான் முதலில் நினைத்தான் மதுசூதனன். ஆனாலும்,இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ராஜாமணி அதேவிதமாய் அவருடைய மெஸ்ஸில் உச்சரித்தார். அந்தமொழகாய்ப் போல அவர் வாழ்க்கையும் நடைமுறையில் இல்லாத தினுசாகத்தானே இருந்தது?
ராஜாமணியை மதுசூதனனுக்கு பத்து நாளாய்த்தான் பழக்கம். முதன்முதலாய் அவரை சந்தித்தபோது வெங்கடேஸ்வரா ஹோட்டலில் எதிரில் அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிநேகமான புன்னகையுடன் கேட்டார்
நீங்க இந்த ஹோட்டலுக்கு ரொம்பநாள் வாடிக்கைப் போலிருக்கே
ரொம்ப நாளில்லீங்க.. ஒரு மூணுமாசமாத்தான்.”
சாருக்கு எந்த ஊரு? ஏதும் காலேஜ்ல படிக்கிறீங்களா?”
வலங்கிமான்ங்க..அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்து மூணுமாசம்தான் ஆச்சு.”
அப்படிப் போடுங்க! எனக்கு திருவிடைமருதூர்.” காபியை முடித்த கையோடு, நிமிஷமாய் நான்கு வெற்றிலையோடு புகையிலையையும் போட்டுக் கொண்டார்.
மது அவரை தீர்க்கமாய்ப் பார்த்தான். சற்று குட்டையான கச்சலான உருவம். சச்சதுரமான முகம்..
மோவாய் மட்டும் கூம்பாய் இறங்கியிருந்தது. சற்றே ஒட்டிய கன்னங்கள். வெற்றிலை புகையிலைக் குதப்பலின் தளும்பல் உதட்டோரத்தில் கசிந்து நின்றது. நெற்றியில் தீற்றலாய் இட்ட குங்குமம்..  சட்டைக் காலருக்கு கைகுட்டையால் உறை. மடித்துக் கட்டிய நாலுமுழ வேட்டி. முன்வழுக்கையில் எண்ணை பளபளப்பு.. பேச்சில் பரபரப்பு.
சார். ஒரு வேண்டுகோள். இதே ரோட்ல பிள்ளையார் கோவில் தாண்டி, புதுசா ஒரு சாப்பாட்டுக் கடை துவக்கறேன். காலமே இட்லி, பொங்கல், வடை,தோசை, பூரிக்கிழங்கு போடறேன் சார். மதியம் சாப்பாடு. ராத்திரில மீண்டும் தோசை, சப்பாத்தி, இட்லி கிடைக்கும் சார். உங்களையெல்லாம் தான் நம்பி இஞ்ச வந்திருக்கேன். கைத்தூக்கி விடணும் சார். உங்க சிநேகிதர்களையெல்லாம் கூட கூப்பிட்டுகிட்டு வரணும் சார்.”
அவசியம் வரேங்க. என்னைக்கு ஆரம்பிக்கிறீங்க?”
நாளைக்கு நாள் நல்லா இருக்கு சார். காலமே வாங்களேன். உங்களுக்காய்  காத்திருப்பேன்
வரேங்க” 
மது தன் அறைநோக்கி நடந்தான். மணி இப்போ ஒன்பது இருக்குமா.. சாலை வெறிச்சோடி இருந்தது. அந்த எழுபதுகளின் அம்பத்தூர் சென்னையின் தாக்கம் அதிகமில்லாது, ஆனாலும் அதோடு ஒட்டியே இயங்கிக் கொண்டிருந்த காலம். சேட்டு வீட்டுக் கல்யாணத்தில் தனித்து தெரியும் ஒரு மடிசார் சுமங்கலியைப் போல ....
 மறுநாள் காலை ராஜாமணியின் அழைப்பு ஞாபகம் வந்தது.
ராஜாமணியின் சாப்பாட்டுக் கடையை மெஸ் என்றோ ஹோட்டல் என்றோ அழைக்க முடியாதுதான்... கிழக்கு பார்த்த அந்தப் பழைய வீட்டின், ரோட்டிலிருந்து ஒரு அடி உயரமே இருந்த அகலமான திண்ணை தான் மெஸ். திண்ணையின் மூன்று பக்கத்திலும் தென்னங்கீற்றால் இரண்டடி உயரத்துக்கு தடுப்பும் மேலே கூரையும் வேய்ந்திருந்தது. ஏககாலத்தில் பதினைந்து முதல் இருபது பேர் அங்கு சாப்பிட இடமிருந்தது.
பலகைகளையே சாப்பாட்டு மேஜையாயும், அமர்வதற்கு பெஞ்ச்சாயும் அமைத்து இந்த்ரஜாலம் புரிந்திருந்தான் மகாதேவ ஆசாரி. இந்த மெஸ்ஸில்... போகட்டும் அப்படியேதான் அதை அழைப்போமே... துவங்கிய இந்த பத்துநாட்களாக  மது அங்குதான் சாப்பிடுகிறான். டிபனும் சாப்பாடும் பரவாயில்லை. காப்பி தான் கொஞ்சம் சுமார் ரகம். பில் கூட ஹோட்டலை விடக் கம்மிதான். ராஜாமணியின் உபச்சாரம் சற்று தூக்கலாயும் சமயத்தில் கொஞ்சம் எரிச்சலாகவும்கூட இருந்தது.. மதுவோடு சேர்ந்து இன்னும் பத்து பதினைந்து பேர் வாடிக்கையாகி இருந்தனர். மகாதேவ ஆசாரியையும் காலை டிபன் நேரத்திலும், இரவு சாப்பாட்டின் போதும் அங்கே சாப்பிடுவதைப் பார்க்கிறான். சாப்பிட்டுவிட்டு போகும் போது ஏதும் காசும் கொடுப்பதில்லை ஆசாரி. ராஜமணியும் கேட்பதில்லை. இந்தப் பந்தல் அமைப்புக்கு ராஜாமணி பணம் தராமல் இருந்திருக்க வேண்டும். சாப்பிட்டுத்தானே அதை வசூலிக்க முடியும்.? மதுவுக்கு பாவமாய் இருந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஒன்பது மணிக்கு மது மெஸ்ஸில் நுழைந்தான்.
வாங்க சார்!’ ராஜாமணி வரவேற்று முடிக்கும் முன்பே ஆசாரியின் ரம்பக் குரல் கரகரத்தது. “என்ன ராஜாமணி.. வடைக்கு சவுரி வச்சிருக்கே’’ நீளமாய் ஒரு தலைமுடியை வடையிலிருந்து ராட்டை நூற்பதுபோல் சாய்வாக இழுத்தபடி குரல் உயர்த்தினார்.
ஐயய்யோமன்னிக்கணும். அதை களைஞ்சிடுங்கோன்னா. வேற போடறேன்டீ பத்மா! செக்கொலக்கே! இஞ்ச வாகாட்டுக் கத்தலாய் ராஜாமணி அலறினார். இடுப்பில் குழந்தையுடன்  அவர் சம்சாரம் உள்ளிருந்து வந்தாள்.
ஜடமே! வடைக்கு அரைக்கறச்சே தலையை விரிச்சிப் போட்டுண்டு நர்த்தனம் பண்ணினியா? தலைய செரைக்க...ஜடமே  ஜடமே!” சட்டென்று அருகிருந்த சட்டுவத்தால், சப்பென்று அவள் கன்னத்தில் அடித்தார்.
ஒரு முக்கலில்லை முணகலில்லை.. இன்னும் ஏதும் உண்டா என்பதுபோல் நின்றுவிட்டு வந்தவாகிலேயே திரும்பினாள். ஒரு அமைதி அங்கு பரவியது.. சகிக்கவியலாத அமைதி.
என்ன ராஜாமணி இப்படி பண்ணிட்டே?’ அமுங்கிய குரலில் ஆசாரி கேட்டார். ‘சரி கொஞ்சம் சாம்பார் ஊற்று.’.
மதுவுக்குத் தாளவில்லை. கோபத்திலும் அதிர்ச்சியிலும் அவன் கைகள் நடுங்கின. ராஜாமணியை ஒரு புழுவைப் போல் வெறித்து விட்டு ஏதும் பேசாமல் வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.
சார்.. சார்..  அவன் பின்னே ராஜாமணியின் குரல் தேய்ந்தது.”
இரவு எட்டுமணிக்கு வாயிற்கதவை மெல்ல தட்டும் சத்தம்..
வாசலில் ராஜாமணி..
என்ன?’ மதுவின் குரல் வறட்சியாய்  ஒலித்தது.
ஒரு ஆத்திரத்தில் பத்மாவை அடிச்சிபிட்டேன் சார். உங்களுக்கு பூ மாதிரி மனசு. தாங்காம கிளம்பிட்டீங்க. என்ன செய்யிறது? இல்லாமையும் இயலாமையும் கூடப் பிறந்துடிச்சிபாழாப்போன கோபத்தால பலதை இழந்துட்டு இப்படி அலையிறேன் சார். அதைப் பங்குபோட்டுக்க வந்தவகிட்டத்தானே காமிக்க வேண்டியிருக்கு.”
ஒரு பொம்பளையை கை நீட்டி அடிக்கிற நீரெல்லாம் எதிலே சேர்த்தி? வயசுல பெரியவர்னு பாக்கிறேன். உம்ம சங்காத்தமே வேண்டாம். இடத்தைக் காலி பண்ணும்.”
அடிபட்டவளே சமாதானமாயிட்டா.. நீங்க இன்னமும் அதையே நினைச்சுகிட்டு..... வாங்க சார்! இன்னிமே நான் கைநீட்டினேன்னு காதில் விழுந்தா, காலில் இருக்கிறதைக் கழட்டி என்னை அடிங்க.. கிளம்புங்க இன்னிக்கு பத்மா அடைக்கு அரைச்சிருக்கா. சூடா வார்த்துப் போடறேன் வாங்க சார்.”
போறும்.போறும். கைப்புள்ளைக்காரியை சட்டுவத்தால் அடிக்கிற ராக்ஷசன் நீர். உம்மை பார்த்தாலே பாவம்.. கிளம்பும்...”
சார்! அப்படி ஒதுக்கிடாதீங்க சார்! உங்களைப் பார்த்ததிலிருந்து என் கூடப்பிறந்த பிறப்பாதான் நினைக்கிறேன். செய்யிறத் தொழிலை குலசாமியாய் பாக்குறேன் சார். சாம்பார்ல தண்ணி விளாவி இருப்பேனா? புண்ணாக்கை சட்னியில் கலந்து அரைச்சிருப்பேனா? அன்னம் கொஞ்சம் கூட கேட்டா முகம் சுணங்கியிருப்பேனா? நீங்க வர்றதாலத் தான் நாலுபேர் கடைக்கு வராங்க.. ரெண்டு நாளாத்தான் போட்டகாசு கையைக் கடிக்காம எடுக்குறேன் சார்!’ ராஜாமணியின் குரல் தழுதழுத்து கண்கள் குளம் கட்டின.
ராஜாமணி விடுவதாய் தோன்றவில்லை.
சரி இப்போ சாப்பிடத் தோணலே.. காலைல பார்க்கலாம். போயிட்டு வாங்க.”
ஸாரி சார்! அவசியம் வாங்க. எனக்கு மனசுக்குக் கலக்கமா இருக்கு”.
சரி! போயிட்டு வாங்க!’
சற்று நேரத்திற்குள், அப்பாவுக்கு மாரடைப்பு என்று வந்த செய்தியில் மது ஊருக்கு விரைய நேர்ந்தது. அவன் ஊர்போய் சேர்வதற்குள் அப்பா காலமாகி, காரியம் முடித்து சொத்து பத்து விவகாரமெல்லாம் கையாண்டு மீண்டும் அம்பத்தூர் வருவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது.
மதுவின் மனதில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த ராஜாமணியின் நினைப்பு சட்டென்று மேலெழுந்தது. போகும்போது அவரிடம் கொஞ்சம் வேகமாய்த்தான் நடந்து கொண்டு விட்டோமோ?
மெஸ் நோக்கி விரைந்தான் மது.
அந்தக் கொட்டகைப் பிரிக்கப்பட்டு, அது இருந்த சுவடே தெரியாமல் துடைத்துவிடப் பட்டிருந்தது கண்டு துணுக்குற்றான்.
மாமி!” ராஜாமணி இருந்த வீட்டின் சொந்தக்கார அம்மாளை கதவைத்தட்டி அழைத்தான்.
யாரப்பா அதுஎன்றபடி கதவைத் திறந்தவளிடம் மது கேட்டான்.
இங்கே கடை வைத்திருந்த ராஜாமணி எங்கே மாமி?”
அந்தக் கூத்தை ஏன் கேக்குறப்பா? ஜாகை வாடகைக்குக் கொடுன்னு பல்லெல்லாம் கெஞ்சினவனை, அவன் பொண்டாட்டியையும் குழந்தையையும் பார்த்துத்தான் வாடகைக்கு விட்டேன். அவனும் அவன் கோவமும்..... கொஞ்சம் கிறுக்கனப்பா. போனமாசம் ஒரு நாள்  ராத்திரி வந்து, தன் கையை எரியிற விறகால தீச்சிகிட்டு, என்னை மன்னிச்சுக்கோ மன்னிச்சிக்கோன்னு அவளாண்டை அவன் கத்த, பதிலுக்கு அவள் தலையை சுவற்றில் முட்டிக்கொண்டு அழ, குழந்தை அலற...  போறும்டாப்பா இந்தமாசக் கொடக்கூலியை குடுத்துட்டு கிளம்புன்னு  சொல்லிட்டேன். என்னண்ட பணமில்லை இந்த பாத்திரங்களை இங்க வச்சுட்டுப் போறேன். காசைக் கொடுத்துட்டு திரும்ப எடுத்துக்கிறேன்னு குடும்பத்தோட போனவன்தான். இன்னும் வல்லே. இன்னம் நாலு நாள் பார்த்துட்டு இதையெல்லாம் கடையில போட்டுறப் போறேன்.”
அந்த ரேழியின் மூலையில் பாணலி, குடம், தூக்குகள், டம்ளர்கள், கூடை, தாம்பாளம், எவர்சில்வர் வாளிகள் என குமித்திருந்தது.
உனக்கு ஏதும் அவன் பணம் தரணுமாப்பா?”
இல்லை மாமி .நான் வாடிக்கையா அங்க சாப்பிட்டுகிட்டு இருந்தேன். வரேன்
சரிடாப்பா
திரும்ப எத்தனிக்கையில், தன்னிச்சையாய் மதுவின் கண்கள் பாத்திரங்கள் கிடந்த மூலையைத் திலாவின.
நிமிர்ந்து தனித்து நின்ற சட்டுவம், நூறு கண்களுடன் மதுவைப் பார்த்து விழித்தது.



புதன், மார்ச் 02, 2011

பெயர் பிறந்த கதை




(தீராத விளையாட்டுப் பிள்ளை ஆர்.வீ.எஸ் என் பெயர் பிறந்த கதைபற்றி தொடர்பதிவாய் எழுத அழைத்தார். இதைப் படித்து
கோபம் கொள்வோர், யாரைத் திட்ட வேண்டும் என்று இப்போது புரிந்திருக்கும். இனி உங்கள் பாடு... ஆர்.வீ.எஸ் பாடு )


அது ஒரு செவ்வாய்க்கிழமை. மாலை நான்குமணி. மேல்வானில் ஒரு வானவில் தோன்றியது. பறவைகள் எக்காளக்கூச்சல் போட்டன. பசுக்களெல்லாம் தாமாய் பால் சொரிந்தன. மூட்டமிட்ட மேகங்கள் இரண்டுநிமிடம் பூத்தூறலாய் தூவி ஓய்ந்தன.

கடலூர் செய்த பாக்கியம்தான் என்னே?........

இப்படியெல்லாம் என்றோ ஒருநாள் சக்திவிகடனிலோ, குமுதம் பக்தி ஸ்பெஷலிலோ, உய்விக்க வந்த மகான்கள் என்ற ஒரு பக்திகட்டுரையில் என் அவதாரமகிமையை யாரும் எழுதுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

பள்ளிக்கூடம் போன பிள்ளைகள் எப்படா வீட்டுக்குப்போக மணி அடிக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கும் ஒரு சாதாரண மாலை நேரத்தில் தான் நான் பிறந்தேனாம்.

அடடா! பெயர்க் காரணம் பற்றியல்லவா இந்தப் பதிவு?
நான் பிறந்தநாளின் ஒரே விசேஷம் அது சர்வோதய நாளான ஜனவரி 30 ஆம் தேதி என்பதுதான். மகாத்மா காந்தியின் நினைவு நாள் மௌன அஞ்சலிக்கான சங்கு அன்றுகாலை பதினொரு மணிக்குத்தான் ஒலித்திருந்தது..

பின்னே ! ஒரு மகாத்மா போனா இன்னொரு மகாத்மா வரவேண்டாமா? அதான் வந்தேன்..

என் அப்பா, காந்தியின் நினைவாய் அவரின் முதற்பெயரான மோகன் என்று பெயர்வைக்கலாம் என்று சொல்ல, அந்நாளில் மோகன் எனும் பெயர் புதுமோஸ்தராய் இருந்ததாலும், அப்போது வெளியான ஒரு சினிமாவில் சிவாஜியின் பெயர் மோகன் என்று இருந்ததாலும். சித்தி, அக்கா எல்லோரும் மோகனுக்கே பேராதரவு தந்தார்கள்.

தாத்தா பாட்டி ஒத்துக் கொள்ளாமல் சுவாமிநாதன் என்று பெயர் வைத்தார்கள். என் அக்காவோ மோகன் தான் பெயர் என்று ஆகாத்தியம் செய்து போராடினாளாம்.
கடைசியில் செல்லமாய் அழைக்கும் பெயராய்மட்டும் மோகன்  ஒத்துக் கொள்ளப்பட்டு மோகன் நிலைபெற்றது.

மோஹி என்று கொஞ்சல் பேராய் அது உலாவந்தது.

நான் பள்ளியில் சேர்ந்த வைபவம் நினைவிருக்கிறது.
கோட்டுசூட்டுமாய் கோச்சுவண்டியில் பள்ளிக்கு அழைத்து சென்று சேர்த்தார் என் தாத்தா. அத்தனை வகுப்புக்களுக்கும் சாக்லேட் விநியோகம் நடந்தது. தலைமைஆசிரியர் சேர்ப்புபடிவத்தில் எழுத இவன் பேர் என்ன?  என்று கேட்க, என் தாத்தா சுவாமிநாதன் என்று வாய் திறப்பதற்குமுன் என்அக்கா அவசரஅவசரமாய் மோகன் என்று சொல்லிவிட்டாள். தலைமைஆசிரியரும் படிவத்தில் மோகன் என எழுத ஆரம்பித்து விட்டாராம். ஆரம்பத்திலேயே அதை அடித்து எழுத வேண்டாம் என்று தாத்தாவும் விட்டுவிட்டாராம். இதற்காய் என் அக்கா வாங்கிய திட்டு கணக்கில் அடங்காது. ஒருவாறு மோகன் என் வழங்கு பெயரானது. சுவாமிநாதன் வைதீகதருணங்களின் பெயராய் இன்னமும் ஒட்டிக கொண்டிருக்கிறது.

என் எட்டுவயதில், வந்தேமாதரம் என் பட்டப்பெயராய்  ஆயிற்று. ஆண்டுவிழாவில் இறைநம்பிக்கைப்பற்றி ஞானம் டீச்சர் எழுதித்தந்து , பலமுறை ரிஹர்சல் செய்தும்  மேடைஏறியவுடன் பயத்தில் பேச்சு வராமல் நின்றுவிட்டேன். கீழிருந்து பேசுடாபேசுடா என்று டீச்சர் உறும, வந்தேமாதரம்,வந்தேமாதரம் என்று முஷ்டி உயர்த்தி கூவிவிட்டு இறங்கிவிட்டேன். அது முதல் சிலகாலம் வந்தேமாதரம் என்றே  அழைக்கப்பட்டேன். பின்னாளில்,உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரிநாட்களிலும் மேடைப்பேச்சு எனக்கு உவப்பானதாய் மாறிப்போய்,மைக் மோகனாயும் வலம் வந்தேன்.

எங்கள் அடுத்த வீட்டில் ஒரு மாமா,மாமி இருந்தனர். மாமாவின் பெயர் புருஷோத்தமன். ஒரு கம்யூனிஸ்ட். அவர்களுக்கு பிள்ளை இல்லை. அந்த தம்பதியருக்கு நான் செல்லப்பிள்ளை. என் பத்துவயதில் அவரே எனக்கு ஆதர்சமாய் இருந்தார். எனக்கு பாரதியார்ப் பாடல்களை மனனம் செய்யவைத்தார். அவர் வீட்டில் நடக்கும் கம்யூனிசக் கூட்டங்கள் என் பாரதி பாட்டுடன் துவங்கும். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மனைவியும் அந்த கம்யூனிஸ்ட் மாமியும் அக்கா தங்கை என்று ஞாபகம். என் தீவிர வாசிக்கும் பழக்கத்துக்கும்,பொதுவுடைமை மனப்பாங்குக்கும் பின்னாளில் என் தொழிற்சங்க ஈடுபாட்டுக்கும் அவர்களே காரணம்..

ஓ! ஏதோ சொல்லவந்து எங்கோ போய்விட்டேன்.
அவர்கள் என்னை வாயார மோகனம் என்று அழைப்பதை மீண்டும் கேட்க மனம் ஏங்குகிறது.

   கல்லூரி நாட்களில் மோனிகா,அன்பெழிலன் என்ற புனைப்பெயர்களில் வலம் வந்ததுண்டு.


இளமையில் சபரிமலை செல்ல ஆரம்பித்தேன்.. காவடியாட்டம் முறையாய் ஆடிய நாட்கள். என் குருசாமி என் ஆட்டம் பார்த்து மயிலு என்று கூப்பிடுவார். பலருக்கு இன்னமும் நான் மயில்சாமிதான்.. குருசாமி என்றும் அன்பர்களால் அழைக்கப் படும் போதும்.. மயிலுஎனக்கு பிடித்த பெயர்.

ஒருமுறை ஒரு கவியரங்கில் இன்னொரு மோகனும் கவிதை வாசிக்க வர, என் தமிழ்ப்பேராசிரியர் ஜி.மோகன் ஆன என்னை மோகன்ஜி ஆக்கினார். அந்த டீலிங் எனக்கும் பிடிச்சது ! மோகன்ஜியாய் செட்டில் ஆகிட்டேன்.

என் பிள்ளைகள் டாட்,அப்போய்,நைனா என்றெல்லாம்  அழைக்கும்போது களிகொள்ளும்  மனம், வயசுபெண்கள் அங்கிள் என்றழைக்கும் போது ஏனோ கஷ்டப்படுகிறது.!

வருங்காலத்தில் பேரப்பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் தாத்தா  என்று கூப்பிட்டால் எப்படி தாங்குவது என்பதே இப்போது என் யோசனை.. ஆரம்பமுதலே அவர்களை மோஹி,மயிலு என்று கூப்பிட பழக்க வேண்டியதுதான் என்ன  சொல்றீங்க? 

புதன், பிப்ரவரி 23, 2011

கொன்டே புடுவேன் !



சம்பேஸ்த்தா! என்ற கடுமையான குரல் கேட்டு நின்றுவிட்டேன்.

இரவு எட்டரை மணி இருக்கும். மனைவியுடன் காலாற நடக்கலாமென்று என் வீட்டிலிருந்து அமீர்பெட் மார்க்கெட் போய்க்கொண்டிருந்த போதுதான் இந்த சம்பேஸ்த்தா!

நான் ஒருத்தன்...... மொட்டையா சொன்னா உங்களுக்கு எப்படி புரியும்?

நான்  ஹைதராபாதில் தானே குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன்? என் இல்லம் இருக்கும் ஏரியா சென்னையின் தி.நகர் போன்று நகரின் மையப்பகுதி. இங்கே பலவீடுகளில் பத்துபதினைந்து பெண்களுக்கான லேடீஸ்ஹாஸ்டல் ஏற்பாடுகள். இந்நகரத்தில் தனியாகத் தங்கி சிறிதும் பெரிதுமாய் வேலைகளைப் பார்க்கும் இளம் பெண்களுக்காய்..

கரெக்டு! நீங்க நினைச்சது தான்!. இரவு ஏழுமணிக்குமேல் இந்தக் குமரிகளில் சிலர்..ஏன்... பலர்... தத்தம் மனங்கவர்ந்த தொத்தல்,வத்தல்,குண்டு,குட்டை வாலிபர்களுடன்
தெருவோரங்களில்,நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் இடுக்கில், இருட்டில் நின்றபடி தன்னை மறந்து சுந்தரத் தெலுங்கினில் வேர்சனிகாய்(அதாங்க .. தெலுங்கில் கடலை)போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

என் சகதர்மினியுடன் சேர்ந்து போகும் போதெல்லாம் இந்த ஜோடிகளைக் கண்டு எரிச்சலை நான் வெளிபடுத்துவதும், அவங்களை நீங்க ஏன் பாக்குறீங்க? என்று என்னையவள்  மட்டுறுத்துவதும் அவ்வப்போது நடக்கும் விஷயம் தான்.

இன்று அந்த சம்பேஸ்த்தாவை உதிர்த்தவன் ஒரு உதிரிஜோடியின் ஒற்றைநாடிக் காதலன்.

சம்பேஸ்த்தா, என்றால் கொன்னுடுவேன்.. கொன்டே புடுவேன்னு அர்த்தம்.

அந்தக் குரலில் இருந்த கடுமை என்னை கட்டிநிறுத்தியது .அந்த மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பெண் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.

நான் நின்றுவிட்டதை உணராமல், தான் விவரித்துக் கொண்டு வந்த தெலுங்கானா பந்த பற்றிய அப்டேட்டை சொல்லிய வண்ணம் கடந்த என் மனைவி திரும்பி வந்தாள் .

வாங்க! அழுத்தமானக் கீழ்த்தொண்டைக் கட்டளையில் இழுத்தபடி முன்னேறினாள்.

அக்கிரமம் பாரு. அந்தப் பொண்ணை தொரத்தி தொரத்தி காதலித்து விட்டு இப்போ கைவிடரதுக்கு மிரட்டுறான்.

”ஆமாம். அவங்க விவகாரம் உங்களுக்கு ரொம்பத் தெரியும், உங்க வேலையைப் பார்க்காமல் எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்குறதை எப்பத்தான் நிறுத்தப் போறீங்களோ?

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேணுமா? அந்தப் பொண்ணைப் பாரு. எப்படி அழுறா?.. கம்மனாட்டி! ஜோலியயெல்லாம் முடிச்சிட்டு வெட்டிவிடறான் பாரு.

வில் யூ மைன்ட் யுவர் லாங்குவேஜ்? என்மனைவி ஆங்கிலத்துக்கு மாறினால், என்னை ரெண்டில் ஒன்று பார்க்க தயாராகிட்டாள்னு அர்த்தம்.

இந்த சின்னப்பெண்கள் தான் யோசிக்கிறாங்களா? எத்தையாவது சினிமா பாக்க வேண்டியது.. தான் தமன்னா... தனக்கு ஜோடியா ஒரு அஜித் வேணும்.. ரொம்ப முடையா..

இவ்வளவு இலக்கியம் பேசுறீங்க.. அலமாரி.. பொட்டி...எதைத்  தொட்டாலும் கவிதை கொட்டுது. நீங்க இதே வேலையாத்தானே அந்த நாள்ல...

கொச்சைப்படுத்தாதே.. நானெல்லாம் இப்படியா இருந்தேன்? இப்படியா நடுரோட்டுல..

உங்களுக்கு திருவாங்கூர் மகாராஜா பார்க் இருந்தது.. சாதாரணமாய் சொல்வதுபோல் எப்படி பெண்களால் ஊசியேற்ற முடிகிறது ?

பாரீஸ்கார்னரின் அண்ணாமலை மன்றத்துக்கு எதிரே இருந்த பார்க்.. பத்தே நிமிஷம்... இவளுடன் மகாராஜா சிலையின் கீழே அமர்ந்து பேசிவிட்டு, போர்ட்ஸ்டேஷனில் இவளை விட்டுவிட்டு கவிதை யோசித்தபடி நடந்தக் காதல் மோகன் ..

இப்போ இதுவா முக்கியம். அந்தப் பரிதாபத்துக்குரிய பொண்ணை பத்தியில்ல சொல்லிகிட்டிருந்தேன்?


என் பேச்சு இப்ப எதுக்கு? நம்மக் காதல் முடிஞ்சதும்தான் மகாராஜா மனசொடிஞ்சுபோய் பார்க்கை காலி  பண்ணிட்டு எங்கயோ இல்லை போயிட்டாரு.(அந்த பூங்கா இப்போது அங்கில்லை)

இப்படி ஒரு ஜோடியப்பார்த்த கண்ணால வேற காதலர்களைக்  பார்க்கவேணாம்னுதான் போய்ட்டாரோ என்னமோ?

ரொம்பதான் நீ புத்திசாலி..போ! இப்போஎன்ன அவங்க பண்றது தப்பிலைன்னு சொல்ல வரியா?

இல்லீங்க.. அது தப்பு ரைட்டுன்னு சொல்ல நம்ம யாருங்க..

என்னத்த சொல்றே? பல நாட்கள் லோவ்வோ லவ்வுன்னு சுத்திட்டு அந்த ராஸ்கல் இப்படி அவளை பிழியப்பிழிய இல்லே அழவிடுறான். நீ வேணா நாளைக்குப் பாரு. காதல் தோல்வியினால் பெண் அமீர்பெட்டில் தற்கொலை.கைவிட்ட வாலிபன் தலைமறைவுன்னு பேப்பர்ல வரப் போகுது பாரு..

”அந்த திருவாங்கூர் ராஜா பார்க் அங்கிருந்தா யாருக்கு அசௌகரியம்? அதப் போய் மூடிட்டாங்களே?

உம்....நாளைக்கு கலைஞரைக் கேட்டு சொல்றேன்.
அந்தப் பையனை நாலு மொத்துமொத்தணும் போல இருக்கு. அயோக்கியன்.. அந்தப் பொண்ணு இனிமே அவ்ளோ தான்!

குமைந்து கொண்டே நடந்தேன்.

போனவழியே திரும்பி வந்தோம். அந்த ஜோடி நின்றிருந்த இடத்தைப் பார்த்தேன்..அவர்கள் இல்லை. பக்கென்றிருந்தது.

அவங்களைக் காணோம் என்றேன் ஈனஸ்வரமாய்.

இன்னும் அவங்களை விடல்லையா?

மௌனமானேன். யார் பெற்ற பெண்ணோ?

அட என்ன அது?

இடப்பக்கம் இருந்த ஐஸ் கிரீம் பார்லரில் அதே ஜோடி.
ரோடு பார்த்தக் கண்ணாடிசுவர் அருகே நெருக்கமாய் அமர்ந்த படி.. அந்த தெலுங்கு தனுஷுக்கு அவள் ஐஸ்கிரீம் ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வாயெல்லாம் பல்லாக இளித்தபடி...

இவளிடம் அந்தக் காட்சியை காட்டவேண்டி திரும்பினேன்.
தனக்குள் சிரித்தபடி பின்னால் வந்து கொண்டிருந்தாள் . திருவாங்கூர் மகாராஜா மேட்டராய்த்தான்  இருக்க வேண்டும். அவளைக் கலைக்க மனசில்லை.

வேண்டாம். என்னை முட்டாளாய் அடித்த இவர்களை அவள் பார்க்க வேண்டாம்.

இத்தனை நேரம் நான் செய்த அமளிதுமளிக்கு, இந்த சல்லாபத்தை மட்டும் இவள் பார்த்தால்,என்னைக் கொன்டேயில்லே போட்டுடுவா ?    

    



வியாழன், பிப்ரவரி 17, 2011

ஞாபகங்கள்




ததிக்ராவிண்ணோ அகாரிஷம்.....

கூடமெங்கும்  தெளிக்கப்பட்ட நீர்த்துளிகள் சின்னச்சின்னதாய்க் குளம்கட்டியிருந்தது.

தட்டப்பட்ட வாயிற் கதவை நோக்கி விரைந்தாள் அகிலாண்டம்.

வாங்கோண்ணா" புடவைத்தலைப்பை இழுத்து போர்த்தியபடி கதவைத் திறந்தாள்.

என்ன சொல்றான்?"

உங்க சினேகிதர் அடிக்கிற கூத்தை நீங்களே பாருங்க. சொன்ன மந்திரத்தையே திரும்பதிரும்ப சொல்லினபடி சந்தி பண்ணிண்டு வீடுமுழுக்க தீர்த்தவாரி.. இது வரைக்கும் ரெண்டு சொம்பு ஜலம் தெளிச்சாச்சு.. அம்பிகே!
சலிப்பும் திகிலுமாய் அவள் கண்களில் ஈரம் பளபளத்தது.

ஏய்! சாம்பா! சகாயம் வந்திருக்கேன் பாரு

"கோணிய மோவாயுடன் வெறித்துப் பார்த்தார் சாம்பா என்கிற சாம்பசிவன்.
.பத்துநாள் தாடி.. .காதெல்லாம் அப்பிய விபூதிக் குழைசல்..

இன்னும் ஜலம் அகிலாண்டத்தை நோக்கி சொம்பை நீட்டினார்

போறும்.. கெணறு வத்திடுத்து.. வெடுக்கென சொம்பைப் அவள் பிடுங்கியதில்அலங்கோலமாய் கூடத்தில் சரிந்த சாம்பனை தூக்கி மணையில் அமர்த்தினார்  சகாயம் என்கிற சகாயராஜ்.

சாம்பனின் உடல் கனத்தில் அவருக்கும் மூச்சிறைத்தது. ஆச்சே.. அவருக்கும் இந்த கிறிஸ்மஸ்ஸுக்கு அறுபத்தெட்டு தொடங்கிடுமே....

என்னடா சாம்பா இது? பண்ணின சந்தியெல்லாம் போதாதா?

படவா.. நித்திய கர்மா நித்திய கர்மா...

சரி மெல்ல எழுந்திரு

இவனுடன் லோல்பட ஒரு பத்து நிமிஷம் என்னாலயே முடியலயே.. இந்த அகிலாண்டம் என்ன பண்ணும். சகாயம் கவலைப் பட்டார்..

நண்பனை அணைத்தபடி வாயிற்திண்ணைக்கு வந்தார்.

மெல்ல உட்காரு..

சாப்டியா?

மீண்டும் வெறித்தப் பார்வை

நாளைக்கு ஜிப்மர் போறோம்

ம்ம்..

என்கிட்டயாவது பேசேண்டா.. என்னைகூட மறந்துட்டியா?

தமிழரசிக்கிட்டே கடுதாசி குடுத்தியே...” சாம்பன் கண்ணில் பழைய குறும்பு சின்னதாய் எட்டி பார்த்தது.

சகாயராஜுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

என் கல்லூரி நாட்களின் கதை அல்லவா அது? எல்லாவற்றையும் மறந்து போனாலும் என் சிநேகிதன் என்னை மறக்கவில்லை. என் வாழ்வின் சம்பவங்கள் இன்னும் சாம்பனின் மனத்தின் ஓரத்தில். அந்த ஞாபகங்கள் கூட அவ்வப்போது மட்டும்.....

சகாயராஜின் கண்கள் கசிந்தன.

சாம்பா! நான் அத்தனை முக்கியமா உனக்கு? மனைவியின் பெயர் மறந்து விட்டது. பேரனைத் தெரியவில்லை. உடன்பிறந்த தம்பியை செருப்புக்கடை பாலு தானே என்கிறான்.. என்னை மட்டும்... என்னை மட்டும்.

கொஞ்சம் காபி குடிங்கோண்ணா.. பித்தளை தம்ளர் பொன்னாய்  மின்னியது..
 இந்த சிதம்பரத்தில் தான் இன்னும் பித்தளை டம்ளர்ல காப்பி.. எல்லா எடத்துலயும் காது மொளச்ச பீங்கான் கப்பு.

அண்ணா! பாண்டிச்சேரி ஆஸ்பத்திரிலயாவது சொஸ்தமாயிடுமா?

எதுக்கும்மா இவ்வளவு கவலை? கர்த்தர் மகிமை.. நல்லது தான் அகிலாண்டம் நடக்கும்

எங்க நடராஜருக்கு காலை மாத்திகிட்டு ஆடக்கூட ஒழியல்லே.. உங்க சாமியாவது உதவட்டும் அண்ணா.

பைத்தியம்... எல்லா சாமியும் ஒண்ணு தாம்மா! நம்பிக்கைதாம்மா சாமி!

என்ன பாக்கிறேள்? வெறிக்கும் கணவனைக் கேட்டாள்.

கமலம் அத்தை தானே நீ?

ஈஸ்வரா! முந்தி பேசாம கழுத்தறுத்தார். இப்போ ஏதேதோ.... மேற்கொண்டு பேசமுடியாமல் அகிலாண்டம் விம்மினாள்.

சரியாயிடும்மா. நான் காலை ஆறு மணிக்குல்லாம் வந்துடறேன். எதுக்கும் மூணு நாலு நாளைக்கு துணிமணி எடுத்துக்கம்மா.டாக்டர் கடுதாசிஎல்லாம் எடுத்து வச்சிக்கோ. நான் பாங்குக்கு போய் பணம் எடுத்துகிட்டு வந்திடுறேன். கவலைப்படாதே. டேய் சாம்பா! வர்றேன்.

சாம்பன் குரல் எழுந்தது
தெய்வச் சிதம்பர தேவா! உன் சித்தம் திரும்பிவிட்டால்
 பொய்வித்த சொப்பன மாமன்னர் வாழ்வும்புவியுமிங்கே
மெய்வைத்த ... உம்ம்ம்... அவர்  கண்கள் அலைந்தன...

இது ஒண்ணு தான் குறைச்சல். என்ன பாவம் நான் பண்ணினேன்

அகிலாண்டம். அவன் மனசுல ஏதேதோ ஞாபகம் அலைமோதுது. ஏதோ ஒரு நேரம் எல்லாமே நேராயுடும் பாரேன்.

பாங்கு நோக்கி நடந்தார் சகாயம்.. எப்படி இருந்தவன்? எத்தனைக் கால நட்பு.
சாம்பனின் நிர்தாட்சண்யமான குணத்தால் எத்தனை இழந்தான்?.. நான் ஒருவன் மட்டும் தான் இன்றுவரை அவனுடன்.. நல்லதோ கெட்டதோ. எனக்குத் தெரியாத ரகசியம் சாம்பன் வாழ்வில் ஏது?

வேண்டாம் என்று ஆகிவிட்டால் திரும்பிக்கூட பார்க்காத பிடிவாதம்...
சாம்பனின் தங்கைக் கல்யாணத்தில் அவமானப் படுத்திய தன் தந்தையை இறுதிவரை பார்க்காதவன்.

சாம்பனின் ஒரே மகன் பிறந்த புதிது. வாலிபத்தின் உந்துதலில் மனைவியை நெருங்க, எப்போதும் இதே நினைப்புத்தானா?’ என்றவளை உதறி ஒரேயடியாய் அந்த நினைப்பை ஒழித்தவன். இதைக்கூட என் கையைப் பிடித்துக் கொண்டு முறுக்காய்ச் சொன்னவன்.


பிள்ளை வெளிநாட்டில் வேலைக்குப் போய் ஒரு குஜராத்திப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சிதம்பரம் வர, அவன் முகம் பார்க்காமல், பிள்ளை ஊர் திரும்பும் வரை சீர்காழி, வைதீஸ்வரன் கோவில் என்று திரிந்தவன்..

எதனாலோ இப்போது தன் ஞாபகங்களையும் தன்னிலையையும் 
ஒழித்து விட்டு நிற்கிறான்.


சகாயராஜின் மனம் கனத்தது.

மறுநாள் சகாயம், சாம்பனின் கையைப் பிடித்துக் கொண்டு,அகிலாண்டம் பின்தொடர பஸ் நிலையத்தை அடைந்தார்.

சகாயம் சார்! எங்க பிரயாணம்? சிவகுரு தான். சாம்பனின் சகோதரன்.

'ஆஸ்பத்திரிக்கு'.

கடலூர் பெரியாஸ்பத்திரியா?

கோரிமேட்டுக்கு

அவ்வளவு முத்திடுச்சா? எள்ளல் தெறித்தது.
அவனைப் புழுப்போல பார்த்தபடி மேற்கொண்டு நடந்தார் சகாயம்.

பஸ் விரைந்து கொண்டிருந்தது. சூனியத்தில் வெறித்தபடி சாம்பன்..

இவன் வாழ்க்கைக்கு ஏதும் அர்த்தம் இருக்கிறதா?
சுற்றங்களை ஒழித்துவிட்டு, வாழ்க்கையை ஒழித்துவிட்டு,அது கிளர்த்திய நினைவுகளைக் கூட ஒழித்துவிட்டு, மனதின் ஓரத்தில் நூலாம்படைபோல் ஒட்டிக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு நினைவுகள் மட்டும் கண்ணாமூச்சு ஆட...

சாம்பனுக்கு நினைவு முழுதாய்த் திரும்பி என்ன சாதிக்கப் போகிறான்?
வேலையிலும், வாழ்க்கையிலும் பட்ட அவமானங்களையும் தோல்விகளையும் மீண்டும் மீண்டும் அசைபோட்டு மனசை ரணகளமாக்கிக் கொள்ளவா? பேரனைக் கூட ஒட்டவிடாமல்  முறுக்கிக் கொண்டு நிற்கும் மகனை எண்ணிக் குமையவா?
கொஞ்ச நேரம் முன்னர் கெக்கலி கொட்டி விட்டுப் போனானே இவன் தம்பி சிவகுரு ...அந்தப் பேச்சுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து கொண்டு வேதனைப்படவா?
எதற்கு.. எதற்காக  இவனுக்கு நினைவு திரும்ப வேண்டும்?..

இல்லை இல்லை.. இன்பமோ துன்பமோ.. வாழ்வின் முழுமை அவற்றை இறுதிவரை எண்ணி எண்ணி சுகிக்கவோ, துக்கிக்கவோ செய்வதில் தானே இருக்கிறது.. சாம்பனுடன் நினைவுபடுத்தி அசைபோட எங்கள் நட்பொன்று போதாதா?

சகாயம் குமைந்தார்.. கர்த்தரே? இது  என்ன சோதனை.?. என் நண்பனுக்கு வழிகாட்டுதல் புரியும்.. அவனுக்கு சாந்தி அருளும்..

கண்மூடி பிரார்த்தித்தார்.

ஜிப்மர் எறங்கு....

அண்ணே! அண்ணே! இவரைப் பாருங்களேன்.....

சாம்பனின் கையைப் பிடித்த சகாயம் குழறினார்.. சாம்பா...”

பதினைந்து நிமிட பரபரப்புக்குப் பின், பஸ் இருவரோடு சாம்பனின் உடலையும் இறக்கிவிட்டுவிட்டு... அவரின்  சொச்ச நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நகரத் தொடங்கியது.