வியாழன், ஜூலை 01, 2010

மின் விசிறி

நீ
விட்டத்தில் பூத்த இரும்புப் பூ.
செயற்கையின் சிசுவே !
நீ வந்த பின்னர்
நாங்கள் வேப்பங்காற்றை மறந்து விட்டோம்


ஓய்ந்திருக்கும் போது தென்படும்
உன் இறக்கைகளின் அழுக்கை
சுழலும் போது சாதூரியமாய்
மறைத்து விடுகிறாய்..
இதயத்தை மறைத்து கண்களை சுழற்றும்
கயமையைப் போல...

நீ புழுக்கத்தில் அமர்ந்து
தென்றலைப் பாடும் கவிஞன்.

இரண்டுக்கு மூன்றாய் சிறகுகள் இருந்தும்,
நீ பறக்கத் தெரியாத இரும்புப் பறவை.

பலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.

உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கேட்ட சாட்சி !

(ஜூலை 1984)